Showing posts with label ட்ராஸ்கிசம். Show all posts
Showing posts with label ட்ராஸ்கிசம். Show all posts

Friday, December 08, 2017

ஜனநாயகம் என்பது ஒரு பெரும்பான்மையின் சர்வாதிகாரமே!


(புரட்சியைக் காட்டிக் கொடுக்கும் ட்ராஸ்கிசவாதிகள்) 
(பகுதி - நான்கு)

ஸ்டாலின் ஆரம்பத்தில் இருந்தே ட்ராஸ்கி மீது காழ்ப்புணர்வு கொண்டிருந்ததாகவும், தனிப்பட்ட குரோதம் காரணமாகவே ட்ராஸ்கியை நாடுகடத்தி, பின்னர் கொலை செய்து விட்டதாகவும் ட்ராஸ்கிஸ்டுகள் கற்பனைக் கதை புனைந்து பரப்பி வருகின்றனர். அதில் எள்ளளவு உண்மையும் கிடையாது. தற்பெருமை கொண்ட ட்ராஸ்கி அவமானம் தாங்காமல் ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு பிரச்சாரங்களை முன்னெடுத்து வந்துள்ளார். அதையே இன்று ட்ராஸ்கி ஆதரவாளர்களும் காவித் திரிகின்றனர்.

அக்டோபர் புரட்சி நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் போல்ஷெவிக் கட்சி புனரமைக்கப் பட்டது. அப்போது லெனின் சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்தார். அவருக்கு பதிலாக, ரஷ்யாவில் இருந்த ஸ்டாலின் தான் கட்சியை பொறுப்பேற்று நிர்வகித்து வந்தார். அப்போது ட்ராஸ்கி ஸ்டாலினுடன் சேர்ந்து வேலை செய்து வந்தார். அன்று பல போல்ஷெவிக் தலைவர்கள் கைது செய்யப் பட்டிருந்த நிலையில் ஸ்டாலின் தலையில் பொறுப்புகள் குவிந்தமை ஏற்கத்தக்கதே. இந்த உண்மையை ட்ராஸ்கி கூட மறுக்கவில்லை.

அக்டோபர் புரட்சியின் முதலாம் ஆண்டு நினைவுகூரல் தொடர்பாக பிராவ்டா பத்திரிகையில் ஸ்டாலின் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதில் புரட்சியில் ட்ராஸ்கியின் பங்களிப்பு பற்றியும் குறிப்பிடத் தயங்கவில்லை.
//"மக்கள் எழுச்சிக்கான நடைமுறை வேலைகள் தோழர் ட்ராஸ்கி தலைமையில் நடந்துள்ளன. பெத்ரோகிராட் நகர இராணுவ முகாம்களில் இருந்த போர்வீர்கள் மத்தியில் புரட்சிகர கமிட்டி அமைத்து அவர்களை சோவியத் ஆதரவாளர்களாக வென்றெடுத்த ட்ராஸ்கிக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம்."// (Source: Histoire du phénoméne Stalinien/Geschiedenis van het Stalinisme, Jean Elleinstein, பக்கம் 39)

அக்டோபர் புரட்சியை நேரில் கண்ட அமெரிக்கப் பத்திரிகையாளர் ஜோன் ரீட் எழுதிய "உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்" நூலை, ஸ்டாலின் தடை செய்ததாக ட்ராஸ்கிஸ்டுகள் அவதூறு பரப்பி வருகின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம் அந்த நூலில் புரட்சியில் ட்ராஸ்கியின் பங்களிப்பு குறித்து எழுதப் பட்டிருந்த படியால் காழ்ப்புணர்வு கொண்ட ஸ்டாலின் தடை செய்தார் என்பது தான். இது எந்த உண்மையும் இல்லாத வெறும் வதந்தி. பிராவ்டா பத்திரிகையில் ஸ்டாலின் எழுதிய கட்டுரையை மேற்கோள் காட்டி இருக்கிறேன். அதில் எந்தக் காழ்ப்புணர்வும் இன்றி ஸ்டாலின் ட்ராஸ்கியை புகழ்ந்து எழுதி இருப்பதைக் காணலாம்.

தமது வதந்தியை நிரூபிக்க முடியாத ட்ராஸ்கிசவாதிகள், ஸ்டாலினின் பேச்சு ஒன்றை ஆதாரமாக காட்டுகின்றனர். "ட்ராஸ்கிசமா அல்லது லெனினிசமா" என்ற தலைப்பின் கீழ் November 19, 1924 அன்று ஸ்டாலின் பேசிய உரையில் "ஜோன் ரீட் தனது நூலில் ட்ராஸ்கி பற்றி எழுதிய ஒரு பகுதியை பிரதியெடுத்து ட்ராஸ்கிச ஆதரவாளர்கள் துண்டுப்பிரசுரம் வெளியிட்டனர்" என்று தான் சொல்லப் பட்டுள்ளது.

அன்று கட்சிக்குள் நடந்த நீண்டதொரு விவாதத்தில் தோல்வியுற்ற ட்ராஸ்கியின் தத்துவார்த்த குறைகளை சுட்டிக் காட்டும் விதமாகத் தான், ஸ்டாலினின் மேற்படி உரை அமைந்திருந்தது.சிலநேரம், குறிப்பிட்ட அந்த துண்டுப் பிரசுரம் தடை செய்யப் பட்டிருக்கலாம். அதற்குக் காரணம், அன்று நாட்டுக்குள் குறிப்பிட்ட அளவு ட்ராஸ்கி ஆதரவாளர்கள் இருந்தனர். அவர்களது அரச விரோத செயற்பாடுகள் தடுக்கப் பட்டன. அதைத் தான் ஸ்டாலின் "ஜோன் ரீட் நூலைத் தடைசெய்தார்" என்று திரித்து ட்ராஸ்கிசவாதிகள் விஷமத்தனமான பிரச்சாரம் செய்கின்றனர்.

"ஒரே நாட்டில் சோஷலிசம் கட்டுவதுவது" தொடர்பான விவாதங்கள் ஆண்டுக் கணக்காக நடந்து முடிவில் ட்ராஸ்கி தோற்கடிக்கப் பட்டார். இது பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். 1923 ம் ஆண்டு, ஸ்டாலினுக்கு எதிரான மத்தியகுழு உறுப்பினர்கள் இரகசியமான ஒரு இடத்தில் கூடி போட்டிக் குழு அமைக்க முடிவெடுத்தனர். அந்தக் குழுவில் சினோவியேவ், ட்ராஸ்கி ஆகியோரும் இருந்தனர். அதில் பங்கெடுத்த ஒருவர் ஸ்டாலினுக்கு தகவல் கொடுத்த படியால், அவர்களது திட்டம் நிறைவேறவில்லை.

இதற்கிடையே, கட்சியின் பதினான்காவது வருடாந்த மகாநாட்டின் முடிவில் கட்சி மறுசீரமைக்கப் பட்டது. இதனால் ட்ராஸ்கி போன்ற எதிராளிகளின் ஆதரவுத் தளம் சுருங்கியது. 1925 ம் ஆண்டு, ட்ராஸ்கியின் "யுத்தத்திற்கான மக்கள் அதிகாரி" பதவி பறிக்கப் பட்டது. இருப்பினும் அவர் தொடர்ந்தும் கட்சி உறுப்பினராக இருக்க அனுமதிக்கப் பட்டார். கமனேவ், சினோவியேவ் ஆகியோர் முன்னர் ட்ராஸ்கியை விமர்சித்து வந்தாலும், பதினான்காம் கட்சி மகாநாட்டில் அவர்களும் ஸ்டாலினை எதிர்த்தனர்.

அந்தக் காலத்தில் கட்சிக்குள் குழுவாத அரசியல் மேலோங்கிக் காணப்பட்டது. பல்வேறு குழுக்களின் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டவுடன், அவர்களது ஆதரவாளர்களும் களையெடுக்கப் பட்டனர். குறிப்பாக, அறிவுஜீவிகளை உருவாக்கும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலும் குழுவாத அரசியல் நிலவியது. அதாவது ஆசிரியர்களும், மாணவர்களும் ஸ்டாலினிச குழு, ட்ராஸ்கிச குழு எனப் பிரிந்து கருத்து மோதல்களில் ஈடுபட்டு வந்தனர்.

இங்கே முக்கியமாக கவனிக்கப் பட வேண்டிய விடயம் ஒன்றுள்ளது. பொதுவான ஜனநாயகம் என்ற ஒன்று உலகில் கிடையாது. மேற்கத்திய பாராளுமன்ற - பல கட்சி முறையானது இன்னொரு வகையான ஜனநாயகம் மட்டுமே. சோஷலிச நாடுகளில் இருப்பதை "ஜனநாயக மையவாதம்" என்று குறிப்பிடுவார்கள். அதாவது, "வேற்றுமையில் ஒற்றுமை காண்பது". எந்தப் பிரச்சினை பற்றியும் கட்சிக்குள் விவாதம் நடத்தலாம். ஒரு கோரிக்கை, அல்லது திருத்தம் கூட விவாதிக்கப் படலாம்.

ஒரு குறிப்பிட்ட விடயம் நாட்கணக்காக விவாதிக்கப் பட்ட பின்னர், முடிவில் அது வாக்கெடுப்புக்கு விடப் படும். பெரும்பான்மையாக எத்தனை பேர் கையை உயர்த்துகிறார்கள் என்று பார்த்து அது ஏற்றுக் கொள்ளப் படும். அதை எதிர்த்த சிறுபான்மை வாக்காளர்கள் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும். பெரும்பான்மை வாக்குகளால் ஏற்றுக்கொள்ளப் பட்ட கோரிக்கையானது கட்சியின் முடிவாக வெளியுலகிற்கு அறிவிக்கப்படும். இது ஜனநாயகம் அல்லாமல் வேறென்ன?

பிரச்சினை எங்கே இருக்கிறது என்றால், எதிர்த்து தோற்கடிக்கப் பட்ட சிறுபான்மையினர் அதற்குப் பிறகு எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. "உண்மையில் ஜனநாயகம் என்பது பெரும்பான்மையின் சர்வாதிகாரம்" என்று இன்றும் பலர் சொல்லக் கேட்டிருக்கலாம். அன்று ட்ராஸ்கி பெரும்பான்மை ஜனநாயகத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து, குழுவாதமே ஜனநாயகம் என்று வாதாடிக் கொண்டிருந்தார். அவர் தனது ஆதரவாளர்களுடன், கட்சிக்குள் தனிக் குழுவாக இயங்க விரும்பினார். ட்ராஸ்கி மட்டுமல்ல, புகாரின், கமனேவ், சினோவியேவ் என்று பலரும் தமக்கான குழுக்களை வைத்திருந்தனர்.

பாராளுமன்றத்தில் அல்லது கட்சிக்குள், ட்ராஸ்கி குழு போன்ற பல குழுக்களை இயங்க அனுமதித்திருந்தால், ட்ராஸ்கி ஸ்டாலினின் தலைமைக்கு கட்டுப்படத் தயாராக இருந்தார். ஆனால், அதை ஸ்டாலின் விரும்பவில்லை. கட்சிக்குள் குழுவாதத்தை ஏற்றுக் கொள்வதானது, பிசாசை கூப்பிட்டு பக்கத்தில் வைத்திருப்பதற்கு சமமானது. எந்த நேரம் எப்படிக் கவிழ்ப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இது தான் ஸ்டாலின் - ட்ராஸ்கி முரண்பாட்டின் ஆரம்பப் புள்ளி.

1927 ம் ஆண்டு, அக்டோபர் புரட்சியின் பத்தாம் ஆண்டு நினைவு தினம் வந்தது. அப்போது ஸ்டாலின் எதிர்ப்பாளர்களான ட்ராஸ்கி, கமேநேவ், சிமில்கா, ராடெக், பியத்தகோவ், ராகொவ்ஸ்கி ஆகியோர் கூட்டுச் சேர்ந்து தனியான ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்த திட்டமிட்டனர். அதனால் அவர்கள் கட்சியை விட்டு வெளியேற்றப் பட்டனர். அதில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

1924 ம் ஆண்டு, சோவியத் நிறைவேற்றுக் கமிட்டியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டத்தின் படி, அரச எதிரிகள், வர்க்க எதிரிகள் ஆகியோர் நாடுகடத்தப் படலாம் என்ற சட்டம் அமுலுக்கு வந்தது. அந்த வகையில் நாடு கடத்தப் பட்டவர் ட்ராஸ்கி மட்டுமல்ல. 1927 வரையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் நாடுகடத்தப் பட்டுள்ளனர். அதே சட்டம் பலரைக் கைது செய்யவும் உதவியுள்ளது. அப்போது, ஆரம்ப கால கட்சி உறுப்பினர்களும் களையெடுக்கப் பட்டதை மறுக்க முடியாது.

இந்த இடத்தில், ஒரு முக்கியமான விடயத்தை கவனத்தில் எடுக்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியானது ஒரு பாட்டாளி வர்க்க கட்சி என்று சொல்லிக் கொண்டாலும், அதில் மத்தியதர வர்க்க பின்னணி கொண்டவர்கள் அதிகளவில் இருக்க வாய்ப்புண்டு. ஏனென்றால் அவர்கள் தான் பெருமளவில் அரசியல் உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். அது மட்டுமல்லாது, சுயநலக் காரணங்களுக்காக, குறிப்பாக பதவிக்காக வந்து சேர்வோரும் இருப்பார்கள்.

1927 ம் ஆண்டு, கட்சிக்குள் நடந்த மறுசீரமைப்பில் பலர் வெளியேற்றப் பட்டனர். அதில் பலர் மத்தியதர வர்க்க மனப்பான்மை கொண்டவர்கள், அல்லது பதவிக்காக கட்சியில் ஒட்டிக் கொண்டவர்கள். அந்த இடத்திற்கு புதிய உறுப்பினர்கள் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். அவர்கள் ஒன்றில் தொழிலாளர்களாக இருந்தனர், அல்லது அவ்வாறான குடும்பப் பின்னணியை கொண்டிருந்தனர். இவ்வாறு தான் வர்க்கப் போராட்டம் ஆரம்பமாகியது.

(முற்றும்)

Thursday, December 07, 2017

ஒரே நாட்டிற்குள் சோஷலிசம் சாத்தியமா?

(புரட்சியைக் காட்டிக் கொடுக்கும் ட்ராஸ்கிசவாதிகள்) 
(பகுதி - மூன்று)

ட்ராஸ்கி, ஸ்டாலினுக்கு இடையிலான கொள்கை முரண்பாடு, ஒரே நாட்டிற்குள் சோஷலிசம் கட்டி எழுப்புவது பற்றியது என்று பலர் கேள்விப் பட்டிருப்பார்கள். அதை விரிவாக ஆய்வு செய்தால் தான், பிற்காலத்தில் ட்ராஸ்கி சொல்லித் திரிந்த பொய்கள் வெளிச்சத்திற்கு வரும். அன்று ட்ராஸ்கி கூறிய பொய்களை, இன்றும் பல ட்ராஸ்கிசவாதிகள் கண்ணை மூடிக் கொண்டு நம்புகிறார்கள்.

பலர் தவறாக நினைப்பதற்கு மாறாக, ரஷ்யப் புரட்சி தான் உலகின் முதலாவது பாட்டாளிவர்க்கப் புரட்சி அல்ல. இதற்கு முன்னரும் பல புரட்சிகள் நடந்து தோல்வியடைந்துள்ளன. ஒரு புரட்சியை நடத்துவதை விட அதை தக்க வைத்துக் கொள்வது தான் பெரிய விடயம். அந்த வகையில், தொழிலாளர், விவசாயிகளின் செம்படை ஒன்றை உருவாக்கி, பலமுனைத் தாக்குதல் தொடுத்த எதிரிகளுடன் போரிட்டு வெல்ல வேண்டி இருந்தது.

உள்நாட்டு யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில் சோஷலிச மாற்றங்களை கொண்டு வர முடியவில்லை. அதற்குப் பல தடைகள் இருந்தன. ஆகவே, லெனினால் புதிய பொருளாதாரக் கொள்கை (NEP) அறிமுகப் படுத்தப் பட்டது. அது சந்தைப் பொருளாதாரத்தை உள்ளடக்கி இருந்தது. அரசு மேற்பார்வையின் கீழான முதலாளித்துவம் ஏற்றுக்கொள்ளப் பட்டது. அந்தக் காலகட்டத்தில் புதிய முதலாளிகள், புதிய பணக்காரர்கள் தோன்றி இருந்தனர். மக்கள் அவர்களை "NEP காரர்" என்று அழைத்தனர். ஊடகங்களில் NEP காரருக்கு எதிரான கட்டுரைகளும், கார்ட்டூன்களும் வெளியாகின. அதில் அவர்கள் செல்வத்தில் மிதப்பதை வர்ணனை செய்திருந்தார்கள்.

லெனின் காலமாகி, ஸ்டாலின் அதிகாரத்திற்கு வந்த பின்னரும், சோவியத் நாட்டில் சந்தைப் பொருளாதாரம் நிலவியது. அப்போது உள்நாட்டுப் போர் முடிந்து அமைதியான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. ஆகவே, இனிமேலும் சந்தைப் பொருளாதாரத்தை தொடர்வதா, அல்லது சோஷலிச கட்டுமானப் பணிகளை தொடங்குவதா என்ற கேள்வி எழுந்தது. உலகம் அன்றிருந்த நிலையில் சோஷலிசம் இறுதி வெற்றி பெறும் என்று யாரும் நம்பி இருக்க மாட்டார்கள். அதற்குக் காரணம், உலக வரலாற்றில் இதற்கு முன்னர் எந்த நாட்டிலும் சோஷலிசம் கட்டப் படவில்லை. அது எப்படி இருக்கும் என்பதும் யாருக்கும் தெரியாது.

1925 ம் ஆண்டு, ஸ்டாலின் "ஒரே நாட்டிற்குள் சோஷலிசம் கட்டப் பட வேண்டும்" என்று தனது திட்டத்தை தெளிவாக முன்வைத்தார். ட்ராஸ்கி, கமனேவ், சினோவியேவ் போன்றவர்கள் அந்த யோசனையை எதிர்த்தனர். உடனடியாக சோஷலிசத்தை கட்டுவது சாத்தியமில்லை என்றும், அதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்றும் நம்பினார்கள். அதற்கு மார்க்ஸ், லெனின் எழுதிய நூல்களையும் எடுத்துக் காட்டினார்கள். ஆனால், அவர்களது வாதமானது வெறும் "புத்தக அறிவு" என்பதற்கப்பால் எதுவுமில்லை. அதாவது, "புனித நூலில் எழுதியுள்ள படி தான் நடக்க வேண்டும்" என்பது மாதிரியான மனப்பான்மை கொண்டிருந்தனர்.

ஸ்டாலினின் நிலைப்பாட்டை ஆதரித்தவர்களும், ட்ராஸ்கியின் நிலைப்பாட்டை ஆதரித்தவர்களும் இது தொடர்பான வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டனர். இந்த விவாதம் வருடக் கணக்காக நடந்தது! அதுவும் தொடர்ச்சியாக நான்கு வருடங்கள்!! கட்சிக் கூட்டங்களில் மட்டுமல்லாது, காணுமிடமெங்கும், இரவு பகலாக, மூலை முடுக்கெல்லாம் பலர் கூடி விவாதித்துக் கொண்டிருந்தனர். சுருக்கமாக சொன்னால், ஒரே நாட்டில் சோஷலிசம் கட்டுவது தொடர்பான விவாதங்கள் முழுக்க முழுக்க ஜனநாயகபூர்வமாக நடந்து கொண்டிருந்தன.

இரண்டு தரப்பினரதும் வாதங்கள் துண்டுப் பிரசுரங்களாக அல்லது நூல்களாக அச்சிடப் பட்டு, கட்சியின் மேல்மட்ட, அடிமட்ட உறுப்பினர்கள் எல்லோருக்கும் விநியோகிக்கப் பட்டன. பத்திரிகைகளிலும் வாதங்கள் தொடர்ந்தன. அன்றைய காலத்தில் பேஸ்புக் போன்ற இணைய வழி சமூக வலைத்தளங்கள் இருக்கவில்லை. அந்த இடத்தை பத்திரிகைகளே நிரப்பின. 

நான்கு வருடங்களாக, நாடு முழுவதும் நடந்த அந்த முக்கியமான விவாதங்களின் முடிவில் தான் ட்ராஸ்கி தோல்வியைத் தழுவினார். இறுதியில், தனது தோல்வியை ஒப்புக் கொள்ள விரும்பாத, திமிர் பிடித்த ட்ராஸ்கி, நாடுகடத்தப் பட்ட பின்னர் "புரட்சி காட்டிக் கொடுக்கப் பட்டது" என்று புலம்பித் திரிந்தார். அந்த நாடுகடத்தல் விவகாரம் கூட சோவியத் சட்ட விதிகளுக்கு அமையவே நடந்ததே அன்றி, ஸ்டாலினின் சுய விருப்பின் பேரில் எடுக்கப் பட்ட முடிவல்ல.

நிச்சயமாக, சோவியத் அரசு பிற உலக நாடுகளில் போராடும் பாட்டாளிவர்க்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டிய கடமையை மறந்து விட முடியாது. அதே நேரம், ஒரே நாட்டிற்குள் சோஷலிசத்தை கட்டுவதும் முக்கியம் தான். வேறு வழி கிடையாது. ட்ராஸ்கி முன்மொழிந்த யோசனைகளின் படி ஒரு "சோஷலிச சோவியத் யூனியன்" நடைமுறைக்கு வந்திருந்தால், அது இன்றுள்ள சீனா மாதிரி இருந்திருக்கும். 

அதாவது, விசேட வரிகள் விதிப்பதன் மூலம் சந்தைப் பொருளாதாரத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் மூலதனத்தை குவிப்பதை நோக்கமாக கொண்டிருந்தது. (அதையே தான் இன்று மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த அரசுக்களுக்கு சில இடதுசாரி பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர்.)

"சோஷலிச மூலதன திரட்டல் என்றால் என்ன?" ட்ராஸ்கி சார்ந்திருந்த குழுவை சேர்ந்த பிரயோபிராஜென்ஸ்கி அது குறித்து விரிவாக பல கட்டுரைகள் எழுதினார். "நோவயா எகொனோமிக்கா" (புதிய பொருளாதாரம்) இதழில் பிரசுரமான கட்டுரைகளின் சாராம்சத்தை இங்கே தருகிறேன்.
//முதலாளித்துவ மூலதனக் குவிப்புடன் அவர் இதனை ஒப்பிடுகிறார். அதாவது, மேற்குலகில் உள்ள முதலாளித்துவ மூலதனமானது காலனிகளை சுரண்டியதன் மூலம் குவிக்கப் பட்டது. அத்துடன் கைத்தொழில் புரட்சியால் உருவான நிறுவனங்களின் உபரி மதிப்பும், அரசு வரிகளும், அரசு கடன்களும் சேர்ந்து மூலதனத்தை திரட்டியுள்ளன. ஆனால், சோவியத் யூனியன் எந்தக் காலனியையும் சுரண்ட முடியாது. அது சாத்தியமில்லை. ஆகவே, எஞ்சி இருக்கும் நடைமுறைகளை பிரயோகிக்கலாம். குட்டி பூர்ஷுவா வர்க்கம் இல்லாத விவசாயப் பொருளாதாரத்தை கட்ட முடியும் என நினைப்பது நடைமுறைச்சாத்தியமில்லாத கனவு.// ட்ராஸ்கி மேற்படி ஆலோசனைகளை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டிருந்தார் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை.

பிரித்தானியாவில் இருந்த ஆரம்பகால முதலாளித்துவம், குறைந்தது நூறாண்டுகளுக்குப் பிறகு தான் தொழிற்புரட்சியை நடத்தும் அளவிற்கு வளர்ந்திருந்தது. சோவியத் யூனியனில், ஸ்டாலின் அடுத்து வந்த பத்து வருடங்களுக்குள் தொழிற்புரட்சியை நடத்த திட்டமிட்டார். அதுவும் முதலாளித்துவம் இல்லாமல், சோஷலிச மூலதனத்தை திரட்ட வேண்டி இருந்தது. சோவியத் யூனியன் அன்றிருந்த நிலைமையில், அதாவது பொருளாதார வளர்ச்சியில் மேற்குலகை விட பல வருடங்கள் பின்தங்கி இருந்த ஒரு நாட்டில் இது சாத்தியப் படுமா? நிச்சயமாக, அன்று பலரது கேள்வியும் அதுவாகத் தான் இருந்திருக்கும்.

சோஷலிச மூலதனத்தை திரட்டுவதற்காக, நாடு முழுவதும் கூட்டு விவசாயப் பண்ணைகள் அமைப்பதற்கு திட்டமிடப் பட்டது. இதில் விவசாயிகளை சுய விருப்பின் பேரில் சேர்க்க வேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டது. இருப்பினும், சில இடங்களில் கட்டாயப் படுத்தி சேர்த்த சம்பவங்களும் நடந்துள்ளன. அது பெரும் போராட்டமாக நடந்தது. நாட்டுப்புறங்களில் கூட்டுப் பண்ணைத் திட்டத்தை எதிர்த்து நின்ற பணக்கார விவசாயிகள் கைது செய்யப் பட்டனர். அதே நேரம், கட்சிக்குள் இருந்த அதிருப்தியாளர்களை எதிர்த்தும் போராட வேண்டி இருந்தது.

இங்கே ஓர் உண்மையை நாங்கள் மறந்து விடக் கூடாது. பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற மேற்கத்திய நாடுகளில் "ஸ்டாலினிச அடக்குமுறை" தேவைப் பட்டிருக்கவில்லை. அவர்களுக்கு தேவையான மூலதனத்தை ஈவிரக்கமின்றி காலனிகளை சுரண்டுவதன் மூலம் திரட்டிக் கொண்டனர். அதாவது, ஸ்டாலின் காலத்தில் நடந்ததை விட பத்து மடங்கு அதிகமான கைதுகள், படுகொலைகள் ஐரோப்பிய காலனிகளில் நடந்துள்ளன.

ஆகையினால், குலாக் என்ற பணக்கார விவசாயிகளுக்கு எதிரான அடக்குமுறையையும், அங்கு நடந்த தொழிற்புரட்சியுடன் சேர்த்துப் பார்க்கப் பட வேண்டும். அது நடந்திருக்கா விட்டால், தொழிற்துறை வளர்ச்சி கண்டிருக்க முடியாது. உண்மையில் கட்சிக்குள் யாருமே அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால், எப்படி நடைமுறைப் படுத்துவது என்பதில் கருத்து முரண்பாடு இருந்தது. ட்ராஸ்கி, புகாரின் ஆகிய எதிர்தரப்பினர் குலாக் மீது கடும் வரி விதிக்கலாம் என்று பிரேரித்தனர். குறைந்தது ஒரு வருட காலம் அது பற்றி விவாதிக்கப் பட்டது. இறுதியில் பெரும்பான்மை கட்சி உறுப்பினர்கள் அந்த யோசனையை நிராகரித்தனர்.

"ஸ்டாலினின் கொடுங்கோன்மை" பற்றி பக்கம் பக்கமாக எழுதுவதும், "கம்யூனிசம் என்றால் இப்படித் தான் கொலைகள் நடக்கும்" என்று பயமுறுத்துவதும் சிறுபிள்ளைத்தனமான செயல். அது அன்றைய வரலாற்றுக் காலகட்டத்தின் அவசியம். அதுவே எல்லா நாடுகளிலும், எல்லாக் காலத்திலும் நடக்கும் என்று நினைப்பது சுத்த அபத்தம். "ஸ்டாலினிச கொடுங்கோன்மை" கொண்டு வந்த தொழிற்புரட்சியின் விளைவாக கிடைத்த பயன்பாடுகளைத் தான் இன்றைய ரஷ்யர்கள் அறுவடை செய்கின்றனர். தொழிற்துறை வளர்ச்சி கண்ட ஒவ்வொரு நாட்டிலும் ஒரு காலத்தில் "ஸ்டாலினிச காலகட்டம்" இருந்திருக்கும்.

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பகுதிகள்:

Wednesday, December 06, 2017

ட்ராஸ்கியின் கரங்களிலும் இரத்தக் கறை படிந்திருந்தது!


(புரட்சியைக் காட்டிக் கொடுக்கும் ட்ராஸ்கிசவாதிகள்) 
(பகுதி - இரண்டு)

"ட்ராஸ்கி எந்தக் கொலை பாதகச் செயலையும் செய்திராத, எப்போதும் எழுதிக் கொண்டிருந்த அப்பாவி" என்பது போன்றதொரு மாயையை ட்ராஸ்கிசவாதிகளும், மேற்குலகமும் சேர்ந்து உண்டாக்கி வைத்துள்ளன. அதில் எந்த உண்மையும் இல்லை. இன்னொரு விதமாக சொன்னால், ட்ராஸ்கியின் கையில் அதிகாரம் இருந்த காலத்தில் அவர் "இன்னொரு ஸ்டாலினாக" இருந்தார். அக்டோபர் புரட்சியின் பின்னர் இடம்பெற்ற முதலாவது அரசியல் கைது ட்ராஸ்கியின் உத்தரவின் பேரில் நடந்தது.

ரஷ்யாவில் விளாடிமிர் பூர்த்சாவ் (Vladimir Burtsav) என்ற பிரபலமான இடதுசாரி எழுத்தாளர் இருந்தார். சார் மன்னன் காலத்தில் ஊடுருவலாளர்கள், உளவாளிகள், போன்றவர்களை அம்பலப் படுத்தி எழுதி வந்தார். இதனால் ஒரு தடவை நாடுகடத்தப் பட்டு திரும்பி வந்திருந்தார். சிறிது காலம் போல்ஷெவிக் கட்சியை ஆதரிப்பதாக போக்குக் காட்டி விட்டு, பின்னர் தீவிரமாக எதிர்த்து வந்தார். அவர்களை ஜெர்மன் கைக்கூலிகள் என்று தூற்றி வந்தார். அத்துடன், யூதர்களுக்கு எதிரான "சியோன் ஞானிகளின் அறிக்கை" நூல் வெளியிடவும் காரணமாக இருந்தவர்.

அக்டோபர் புரட்சிக்கு முன்னர், போல்ஷெவிக் ஆட்சியைக் கைப்பற்றுவார்கள் என்று நினைத்து அதில் சேர்ந்து கொண்ட மாற்று இயக்கத்தவர் பலர் இருந்தனர். பூர்த்சாவ் அப்படியான கட்சி மாறிகளை தோலுரித்துக் கொண்டிருந்தார். ட்ராஸ்கியும் அப்படியானவர் தானே? அதனால் தானோ என்னவோ புரட்சி நடந்த அன்றிரவே பூர்த்சாவை கைது செய்து சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார். ஒரு வருட சிறைவாசத்தின் பின்னர், எழுத்தாளர் மார்க்சிம் கோர்க்கி போட்ட கருணை மனுவிக்கிணங்க விடுதலை செய்யப் பட்டு நாடுகடத்தப் பட்டார்.

1917 ம் ஆண்டு புரட்சி நடந்திருந்தாலும், அதற்குப் பிறகு நடந்த உள்நாட்டுப் போர் தான் முக்கியமானது. அந்த யுத்தத்தில் நடந்த பேரழிவுகள், மனிதப் படுகொலைகள் ஏராளம். மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள் "வெண் படைப் பயங்கரத்திற்கு எதிரான செம்படைப் பயங்கரம்" பற்றியும் விவரித்து எழுதி இருக்கிறார்கள்.

இதை நாம் "புரட்சிகர வன்முறை" என்று அழைப்பதே பொருத்தமானது. பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் பிரான்ஸில் இரத்த ஆறு ஓடியது. அப்போது நடந்த படுகொலைகள், சொத்தழிவுகள், தேவாலய இடிப்புகள் எண்ணிலடங்காதவை. அதே மாதிரியான நிலைமை தான் ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் ரஷ்யாவில் ஏற்பட்டிருந்தது.

அப்போது போல்ஷெவிக்குகள் அதை "போர்க்கால கம்யூனிசம்" என்று அழைத்தனர். அதாவது, புரட்சியின் குறிக்கோளான சோஷலிச சமுதாய மாற்றத்தை உடனடியாக கொண்டு வர முடியாத நிலைமை. ஏனெனில், நாலாபுறமும் எதிரிகளால் சூழப்பட்ட நேரத்தில் போரை நடத்துவதே முதன்மையானது. இருப்பினும், செம்படை கைப்பற்றும் பகுதிகளில் தற்காலிக ஏற்பாடாக சில மாற்றங்களை நடைமுறைப் படுத்தலாம். அதற்கு வன்முறை பாவிக்கலாம்.

ட்ராஸ்கி தலைமை தாங்கிய செம்படை, தான் கைப்பற்றிய இடங்களில் "போர்க்கால கம்யூனிச அதிகாரத்தை" நிலைநாட்டியது. அதன் அர்த்தம், நிலவுடமையாளர்கள், பணக்கார விவசாயிகள், உள்ளூர் முதலாளிகள் போன்றவர்கள், எந்த வித விசாரணையும் இன்றி சுட்டுக் கொல்லப் பட்டனர். கூட்டுப் பண்ணைத் திட்டம் அமுல் படுத்தப் பட்டது. தேவாலயங்கள் இடிக்கப் பட்டன.

செம்படைக்கு எதிரானவர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட கொல்லப் பட்டனர். அதாவது பிற்காலத்தில் ட்ராஸ்கி எதையெல்லாம் "ஸ்டாலினிச கொடுங்கோன்மை" என்று சொல்லித் திரிந்தாரோ, அவை எல்லாம் அன்றே ட்ராஸ்கியால் நடைமுறைப் படுத்தப் பட்டன! அதாவது மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்.

அன்று ரஷ்யாவில் யார் யாரை எதிர்த்துப் போரிடுகிறார்கள் என்று தெரியாத குழப்ப நிலை. செம்படைக்கும், வெண்படைக்கும் இடையில் போர் நடந்தது என்பது மிகவும் இலகுபடுத்தப் பட்ட பதில். சார் மன்னனுக்கு விசுவாசமான வெண் படை மட்டுமல்லாது, சோஷலிச புரட்சியாளர்கள் கட்சி என்ற போல்ஷெவிக்குகளுக்கு எதிரான இன்னொரு இடதுசாரி கட்சியும் தனியே ஆயுதக்குழு அமைத்து செம்படையை போரிட்டது. குறிப்பாக சைபீரியா பகுதிகளில் இருந்த விவசாயிகள் மத்தியில் அவர்களுக்கு செல்வாக்கு இருந்தது. இறுதிப் போரில் அவர்கள் தோற்கடிக்கப் பட்டனர்.

புரட்சியின் ஆரம்ப காலத்தில், சோஷலிச புரட்சியாளர்கள் கட்சி போல்ஷெவிக் கட்சியுடன் சேர்ந்து அரசமைத்தது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப் பட்டநேரம், போல்ஷெவிக் கட்சியினர் மட்டுமல்லாது, சிறிய அளவில் சோஷலிச புரட்சியாளர் கட்சியினரும், பெருமளவில் அனார்க்கிஸ்டுகளும் (நிர்ப்பந்தத்தின் பேரில்) சேர்க்கப் பட்டிருந்தனர். ஆனால், அவர்கள் எல்லோரும் லெனினின் போல்ஷெவிக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு ஒன்று கலந்தவர்கள். (இதுபற்றி உத்தியோகபூர்வ வரலாற்று நூல்களில் எழுதப் படவில்லை. இருப்பினும் அவ்வாறு தான் நடந்தது என்பது மக்களில் பலருக்கும் தெரிந்திருந்தது.)

அதே நேரம் சோஷலிச புரட்சியாளர்கள் கட்சி தனியாக இயங்கி வந்தது. முதலாம் போரை நிறுத்துவதற்காக, லெனின் ஜெர்மனியுடன் சமாதான ஒப்பந்தம் போட்டதை காரணமாகக் காட்டி சோஷலிச புரட்சியாளர்கள் கட்சி போல்ஷெவிக் அரசைக் கவிழ்க்கும் கிளர்ச்சியில் ஈடுபட்டது. அப்போது தான் அவர்களது ஆயுதக் குழுவும், வெண் படையுடன் கூட்டுச் சேர்ந்து போரிட்டது.

இதே நேரம், தலைநகரில் லெனினைக் கொலை செய்ய முயற்சி நடந்தது. அவரை துப்பாக்கியால் சுட்டுக் காயப் படுத்தியவர் சோஷலிச புரட்சியாளர்கள் கட்சியை சேர்ந்த ஒரு பெண் உறுப்பினர். லெனின் கொலை முயற்சியின் எதிரொலியாக, சோஷலிச புரட்சியாளர்கள் கட்சியை சேர்ந்த அனைவரும் வேட்டையாடப் பட்டனர். அதன் தலைவர்கள், தொண்டர்கள் எல்லோரும் ஒன்றில் சிறையில் அடைக்கப் பட்டனர், அல்லது கொல்லப் பட்டனர்.

சோஷலிச புரட்சியாளர்கள் கட்சிக்கு எதிரான அழித்தொழிப்பு நடவடிக்கை நடந்து கொண்டிருந்த நேரம், ட்ராஸ்கி அதிகாரத்தில் இருந்தார். அன்று அவர் இதையெல்லாம் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்து விட்டு, ஸ்டாலினின் சர்வாதிகாரம் பற்றிப் பேசுவது உள்நோக்கம் கொண்டது. இது ட்ராஸ்கியின் இரட்டை வேடத்தை எடுத்துக் காட்டுகின்றது. "லெனின் மீதான கொலை முயற்சிக்கு பின்னர் யாரும் கைது செய்யப் படவில்லை" என்று, இன்றைய ட்ராஸ்கிஸ்டுகள் பரப்பும் கதைகளில் உண்மை இல்லை. அது வழமையாக ட்ராஸ்கியின் குற்றங்களை மறைப்பதற்காக சொல்லப்படும் பொய்களில் ஒன்று.

"வெண் படைக்கு சற்றும் குறையாத வகையில் செம்படையினரும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர்" என்று மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள் எழுதுவார்கள். அதில் உண்மை இல்லாமலில்லை. எதிரிக்கு அடைக்கலம் கொடுத்தவர்களை சுட்டுக் கொன்றமை, கட்டாய ஆட்சேர்ப்புகள், தானியங்களை பறிமுதல் செய்தல், என்று பல போர்க்குற்றங்கள் இரண்டு தரப்பிலும் நடந்துள்ளன.

சில இடங்களில் போர் வன்முறைகளால் வெறுப்படைந்த விவசாயிகள் கலகம் செய்த சம்பவங்களும் நடந்துள்ளது. நகரங்களுக்கு உணவு கொண்டு செல்லும் வழிகளை விவசாயிகள் தடுத்தனர். போரினால் ஏற்பட்ட பேரழிவின் காரணமாக பல இடங்களில் பட்டினிச் சாவுகளும் நடந்துள்ளன. இவை எல்லாம் ட்ராஸ்கி செம்படைக்கு தலைமை தாங்கிய காலத்தில் நடந்தவை! ஆனால், மேற்கத்திய அல்லது ட்ராஸ்கிச பரப்புரையாளர்கள் அதை எல்லாம் தந்திரமாக ஸ்டாலினின் கணக்கில் போட்டு விட்டனர். எல்லாப் பழியும் ஸ்டாலினுக்கே!

ட்ராஸ்கி செய்த படுகொலைகளின் உச்சகட்டம் குரோன்ஸ்டாட் தீவில் இடம்பெற்றது. குரோன்ஸ்டாட் (Kronstadt: ஒரு ஜெர்மன் பெயர்) என்பது பின்லாந்துக்கு கீழே, சென் பீட்டர்ஸ்பெர்க் அருகில் அமைந்துள்ள ஒரு தீவு. அங்கு ஒரு கடற்படைத் தளம் இருந்தது. (இப்போதும் இருக்கிறது) குரோன்ஸ்டாட் கடற்படையினர், அக்டோபர் புரட்சியில் முக்கிய பங்காற்றினார்கள். அதைப் பற்றி ட்ராஸ்கியும் "புரட்சியின் மகிழ்ச்சியும், பெருமையும்" என்று புகழ்ந்து பேசி இருந்தார். அப்பேர்ப்பட்ட பெருமைக்குரிய குரோன்ஸ்டாட் கடற்படையினர், அதே ட்ராஸ்கியால் படுகொலை செய்யப் படுவோம் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.

உண்மையில், உள்நாட்டுப் போர்க் காலத்தில் நடந்த அளவுகடந்த வன்முறைகள், அதனால் ஏற்பட்ட பஞ்சத்திற்கு ட்ராஸ்கியும் பொறுப்பேற்க வேண்டும். அன்று நடந்த போரின் விளைவாக, நாடு முழுவதும் உணவுத் தட்டுப்பாடும், பஞ்சமும் நிலவியது. அதனால், குரோன்ஸ்டாட் தீவுக்கு உணவு விநியோகம் நடக்கவில்லை. இதனால் கொதிப்படைந்த கடற்படையினரும் மக்களும் போல்ஷெவிக் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். அங்கு அனார்க்கிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்தினர். அவர்களது சோவியத் அமைப்பு போல்ஷெவிக் அதிகாரத்திற்கு கட்டுப்படாமல் தனித்து இயங்கியது.

பிற்காலத்தில் "ஸ்டாலின் மாற்றுக் கருத்தாளர்களை ஒடுக்கினார்" என்று புலம்பித் திரிந்த ட்ராஸ்கி 1921 ம் ஆண்டு செய்தது என்ன? போல்ஷெவிக் அதிகாரத்திற்கு அடிபணிய மறுத்து கலகம் செய்த குரோன்ஸ்டாட் சோவியத் மீது குண்டு போட உத்தரவிட்டார். ஏற்கனவே பஞ்சத்தால் பாதிக்கப் பட்டிருந்த குரோன்ஸ்டாட் கடற்படையினர் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

ட்ராஸ்கி தலைமையிலான செம்படை வீரர்கள் குரோன்ஸ்டாட் சோவியத்தை கலைத்ததுடன், கிளர்ச்சியில் சம்பந்தப் பட்டவர்களைப் பிடித்து சுட்டுக் கொன்றனர். எஞ்சியவர்களை சிறைப் பிடித்தனர். குறிப்பிட அளவினர் பின்லாந்திற்கு தப்பியோடி விட்டனர். அன்று நடந்த படுகொலைகளில் குறைந்தது பத்தாயிரம் பேர் பலியாகி இருப்பார்கள். ஆம், அவை ட்ராஸ்கி செய்த படுகொலைகள்!

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:

Monday, December 04, 2017

புரட்சியைக் காட்டிக் கொடுக்கும் ட்ராஸ்கிசவாதிகள்


யார் இந்த ட்ராஸ்கி?

 இன்று மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள சமூக ஜனநாயகக் கட்சி போன்றதொரு கட்சி தான், ஆரம்பத்தில் ரஷ்யாவிலும் இருந்தது. 1903 ம் ஆண்டளவில் கட்சிக்குள் நிலவிய கொள்கை முரண்பாடுகளின் விளைவாக போல்ஷெவிக், மென்ஷெவிக் என இரண்டு பிரிவுகள் உருவாகின. மென்ஷெவிக் பிரிவு தொடர்ந்தும் சமூக ஜனநாயக அரசியலை முன்னெடுத்து வந்தது.

1917 ம் ஆண்டு வரையில், ட்ராஸ்கி மென்ஷெவிக் பிரிவில் தான் இருந்தார். ஆகையினால், அவர் பின்னர் கட்சி மாறி போல்ஷெவிக் பிரிவில் இணைந்து கொண்ட போதிலும், சமூக ஜனநாயகக் கருத்துக்கள் அவரது ஆழ்மனதில் பதிந்திருக்கும். ட்ராஸ்கி சொல்லிக் கொண்டு திரிந்த நிரந்தரப் புரட்சிக் கோட்பாடு அடிப்படையில் ஒரு சமூக ஜனநாயகவாத அரசியல் தான். புதிய மொந்தையில் பழைய கள் என்று சொல்லலாம்.

அன்றைய ஐரோப்பாவிலும், ரஷ்யாவிலும், முதலாம் உலகப்போர் ஒரு திருப்புமுனையாக அமைந்திருந்தது. அந்தக் காலகட்டத்தில் மென்ஷெவிக் - போல்ஷெவிக் பிளவு ஒரு கொதி நிலைக்கு வந்தது. அன்று ஐரோப்பாவில் இருந்த பிற சமூக ஜனநாயக கட்சிகள் போன்று, மென்ஷெவிக் பிரிவினரும் முதலாளிய வர்க்கத்துடன் கூட்டுச் சேர்ந்து முதலாம் உலகப்போரை ஆதரித்தனர். அதை நாட்டுப் பற்று என்ற தேசியவாத கருத்தியலால் நியாயப் படுத்தினார்கள். அன்று ட்ராஸ்கியும் அதைப் பிரதிபலித்து வந்தார்.

ஆனால், போல்ஷெவிக் கட்சியினர் உலகப் போருக்கு எதிரான நிலைப்பாட்டில் தீவிரமாக இருந்தனர். "ஏகாதிபத்திய போரை உள்நாட்டுப் போராக மாற்றி, முதலாளிய வர்க்கத்திற்கு எதிரான புரட்சியில் ஈடுபட வேண்டும்" என்ற லெனினின் அறைகூவல், ட்ராஸ்கி அங்கம் வகித்த மென்ஷெவிக் பிரினரால் கடுமையாக எதிர்க்கப் பட்டது.

ஆகவே, ட்ராஸ்கி ஒரு காலத்தில் "போல்ஷெவிக் எதிர்ப்பாளராக" இருந்தவர். அப்படியானவரது நம்பகத்தன்மை, பின்னாளில் போல்ஷெவிக் உறுப்பினரான காலத்தில் சந்தேகிக்கப் பட்டதில் தவறில்லை. 1923 ம் ஆண்டு, ட்ராஸ்கி மீண்டும் தூசு தட்டி எடுத்த நிரந்தரப் புரட்சிக் கோட்பாடு அந்த சந்தேகத்தை மேலும் உறுதிப் படுத்தியது.

1917 பெப்ரவரி புரட்சிக்குப் பின்னர், ட்ராஸ்கி மென்ஷெவிக் கட்சியில் இருந்து விலகி, நடுநிலைமை வகித்த குழுவொன்றில் சேர்ந்து கொண்டார். அப்போது அவர் முதலாம் உலகப்போருக்கு எதிரான கருத்தைக் கொண்டிருந்ததுடன், மெல்ல மெல்ல போல்ஷெவிக் கொள்கைகளால் ஈர்க்கப் பட்டார். அதே வருடம் கோடை காலத்தில் (அதாவது அக்டோபர் புரட்சிக்கு சில மாதங்களுக்கு முன்னர்), அன்று நடுநிலை வகித்த குழுவில் இருந்த அனைவரும் போல்ஷெவிக் கட்சியில் சேர்ந்து கொண்டனர்.

ட்ராஸ்கியின் மென்ஷெவிக் கடந்த காலம் தொடர்பான எச்சரிக்கை உணர்வு லெனினிடம் எப்போதும் இருந்து வந்துள்ளது. அவர் இதைப் பல தடவைகள் வெளிப்படுத்தி உள்ளார். "குட்டி பூர்ஷுவா ட்ராஸ்கியின் ஊசலாட்டம்" பற்றி லெனின் தனது எழுத்துகளில் குறிப்பிட மறக்கவில்லை. இருப்பினும் படித்த மத்தியதர வர்க்கத்தினர் மத்தியில் ட்ராஸ்கிக்கு இருந்த செல்வாக்கு காரணமாக கட்சிக்குள் பொறுப்பான பதவி கொடுக்கப் பட்டிருக்கலாம்.

ட்ராஸ்கி செம்படையை உருவாக்கி இருந்தாலும், உண்மையில் அவர் இராணுவத்துறை சார்ந்த அனுபவம் கொண்டவர் அல்ல. செம்படை என்பது அடிப்படையில் "தொழிலாளர், விவசாயிகளின் படை". ஆனால், போரியல் அனுபவம் இல்லாத தொழிலாளர், விவசாயிகளுக்கு இராணுவ பயிற்சி கொடுக்க வேண்டியிருந்தது.

அன்று உண்மையில் உள்நாட்டுப் போரை நடத்தியவர்கள், போரியல் அனுபவம் வாய்ந்த இராணுவ அதிகாரிகள் தான். முன்னர் சார் மன்னனின் படையில் இருந்த, ஆனால் அரசியல் ஈடுபாடில்லாத அதிகாரிகள் பலர், தாமாகவே விரும்பி வந்து சேர்ந்து கொண்டனர். அவர்களுடன், அக்டோபர் புரட்சியில் பங்கெடுத்த படைவீரர்களும் இருந்தனர்.

சிறந்த பேச்சாற்றல், எழுத்தாற்றல் திறமை படைத்த ட்ராஸ்கி, எப்போதும் தன்னை ஒரு மத்தியதர வர்க்க அறிவுஜீவி போன்றே காட்டிக் கொண்டவர். அவருக்கும் பாட்டாளிவர்க்க அரசியலுக்கும் வெகுதூரம். அதன் தொடர்ச்சியை இன்றைக்கும் சர்வதேச ட்ராஸ்கியவாதிகள் மத்தியில் காணலாம்.

பணக்கார மேற்கத்திய நாடுகளில் தான் பெருமளவு ட்ராஸ்கிஸ்டுகள் உள்ளனர். குறிப்பாக படித்த மத்தியதர வர்க்க (குட்டி பூர்ஷுவா) இளைஞர்கள் மத்தியில் ட்ராஸ்கிச செல்வாக்கு அதிகமாக இருப்பதைக் காணலாம். அவர்களது ஸ்டாலினிச எதிர்ப்புப் பிரச்சாரங்களிலும் "ஸ்டாலின் அறிவுஜீவிகளை கொன்றொழித்தார்" என்று புலம்புவதைக் காணலாம்.

ட்ராஸ்கிசவாதிகள் வரலாற்றை திரித்து கற்பனைக் கதைகளை எழுதி விட்டு, எல்லோரும் அதையே உண்மையென நம்ப வேண்டும் என அடம் பிடிக்கிறார்கள். அது மட்டுமல்லாது, ஸ்டாலின் தொடர்பாக மேற்குலக முதலாளிய எதிரிகள் பரப்பிய பொய்ப் பிரச்சாரங்களை, இவர்களும் காவித் திரிகிறார்கள். பொதுவாக எதிரிகளிடம் இருந்து விஷமத்தனமான பரப்புரைகள் வருவது எதிர்பார்க்கத் தக்கதே. ஆனால், தம்மை மார்க்சிய - லெனினிசவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் ட்ராஸ்கிஸ்டுகளும் அப்படியே நம்பலாமா?

ட்ராஸ்கிசவாதிகள் லெனினை அப்பழுக்கற்றவர் என்று புகழ்வதும் ஒரு காரணத்தோடு தான். அது லெனின் மீதான பற்றின் வெளிப்பாடு அல்ல. ட்ராஸ்கியின் பெருமையை பேசுவதற்கு லெனினை பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவ்வளவு தான். அவர்களுக்கு எல்லாம் ட்ராஸ்கி தான். லெனின் "தொட்டுக் கொள்ள ஊறுகாய்" போன்று பயன்படுகின்றார்.

லெனினுக்கும், ட்ராஸ்கிக்கும் இடையில் எந்த முரண்பாடும் இருக்கவில்லை என்று, ட்ராஸ்கி லெனினின் நம்பிக்கைக்குரிய சீடராகவும் இருந்தார் என்றும் ட்ராஸ்கிசவாதிகள் செய்யும் பரப்புரையில் எந்த உண்மையும் இல்லை.

1921 ம் ஆண்டு நடந்த பத்தாவது காங்கிரஸில், உழைப்பை இராணுவமயமாக்கும், தொழிற்சங்கத்தை அரசு நிறுவனமாக்கும் ட்ராஸ்கியின் பரிந்துரைகளை லெனின் கடுமையாக எதிர்த்து வாதாடினார். அதே நேரம், ஆலோசனைச் சபையின் உப தலைவராக ட்ராஸ்கியை நியமிப்பதையும் லெனின் எதிர்த்து, ட்ராஸ்கியை கடுமையாக விமர்சித்து வந்தார்.

அதே நேரம், லெனின் எந்த விமர்சனமும் இல்லாமல் ஸ்டாலினை ஏற்றுக் கொண்டார் என்று அர்த்தம் அல்ல. தனிப்பட்ட முறையில், லெனினின் மனைவி குருப்ஸ்கயா ஸ்டாலினுடன் பிரச்சினைப் பட்ட நிகழ்வுகள் அரசியல் மட்டத்திற்கு வரவில்லை. லெனின் வாழ்ந்த காலத்திலேயே, ஸ்டாலினுக்கு அதிகளவு அதிகாரம் கொடுக்கப் பட்டிருப்பதை லெனின் விமர்சித்திருந்தார்.

அவை எல்லாம் லெனினுக்கு முக்கியமான முரண்பாடுகளாக படவில்லை. லெனின் சில பொறுப்புகளை ட்ராஸ்கிக்கு கொடுக்க விரும்பிய காரணம் வேறு. புரட்சி முடிந்தவுடன் ஸ்டாலினுக்கு தேசிய இனங்களின் கமிசார் பதவி அளிக்கப் பட்டிருந்தது.

ஸ்டாலின் பிறப்பால் ஒரு ஜோர்ஜியர். ஆனால், ரஷ்ய பெருந்தேசிய இனத்திற்குள் ஒன்றுகலந்து தலைமைப் பொறுப்புக்கு வந்து விட்டவர். "ரஷ்யர்களை விட மேலான ரஷ்யர்கள்" என்று சொல்வார்கள். உதாரணத்திற்கு நம்மில் சிலர் சரளமாக ஆங்கிலம் பேசி, மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றத் தொடங்கியவுடன், ஐரோப்பியரை விட மேலான ஐரோப்பியராக காட்டிக் கொள்வார்கள்.

அப்படியானவர்கள் நம்பி பொறுப்புக் கொடுத்தால், ஜோர்ஜிய பிரச்சினையை சரியாகக் கையாள மாட்டார்கள் என்ற எண்ணத்தில், லெனின் ட்ராஸ்கியை அணுகி இருக்கிறார். அதாவது, ஸ்டாலினை கீழிறக்கி விட்டு, ட்ராஸ்கியை உயர்த்துவதற்காக லெனின் அதைச் செய்யவில்லை. ட்ராஸ்கியின் இராணுவவாத போக்கு, ஏற்கனவே லெனினால் கண்டிக்கப் பட்டிருந்தது. சுருக்கமாக சொன்னால், ஸ்டாலினுக்கு பதிலாக ட்ராஸ்கி வந்திருந்தால், ஸ்டாலினை விட மோசமானதொரு இராணுவ சர்வாதிகாரியாக இருந்திருப்பார். ட்ராஸ்கி எப்படிப் பட்டவர் என்பது லெனினுக்கும் தெரிந்திருந்தது.

லெனின் வாழ்ந்த காலத்திலேயே, போல்ஷெவிக் கட்சிக்குள் ட்ராஸ்கியை விட ஸ்டாலினுக்கு தான் அதிக ஆதரவு இருந்தது. கட்சிக்குள் ஸ்டாலினுக்கு ஆதரவு பெருகி வருவதையும், இது அளவுகடந்த அதிகாரத்தை வழங்கி விடும் என்ற லெனினின் அச்சத்தை குருப்ஸ்கயா தெரிவித்து இருக்கிறார். இருப்பினும், ட்ராஸ்கியின் மென்ஷெவிக் கடந்த காலம் காரணமாக, கட்சிக்குள் யாரும் அவரை நம்பத் தயாராக இருக்கவில்லை.

1923 ம் ஆண்டு, போல்ஷெவிக் கட்சிக்குள் ட்ராஸ்கிக்கு மிகக் குறைந்த அளவு ஆதரவு தான் இருந்தது. அதனால், தான் ஸ்டாலினின் இடத்தை பிடிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது என்ற உண்மை ட்ராஸ்கிக்கு தெரிந்தே இருந்தது. கட்சிக்குள் பெருமளவு ஆதரவு பெற்றிருந்த ஸ்டாலினை ட்ராஸ்கி குறைத்து மதிப்பிட்டு இருந்தார். அன்று ட்ராஸ்கிக்கு ஒரேயொரு வழி மட்டுமே இருந்தது. செம்படையின் தலைமைத் தளபதியாக இருந்த படியால், இராணுவ சதிப்புரட்சி மூலம் அதிகாரத்தை கைப்பற்றி இருக்கலாம். இருப்பினும், இது கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தும் அபாயத்தையும் ட்ராஸ்கி உணராமல் இல்லை.

(தொடரும்) 


ட்ராஸ்கிசம் தொடர்பான இன்னொரு பதிவு:

Tuesday, February 18, 2014

ட்ராஸ்கிசம் : நிரந்தரப் புரட்சி எனும் ஒரு நிரந்தரக் கனவு

" புரட்சிகர தத்துவம் இன்றி, ஒரு புரட்சிகர இயக்கம் இருக்க முடியாது. புரட்சிக்கான சூழ்நிலை இல்லையென்றால், புரட்சி சாத்தியமில்லை. ஆனால், எல்லா  புரட்சிகரமான  சூழ்நிலையும்  புரட்சியை நோக்கிச் செல்வதில்லை."   - லெனின் 

நான் நெதர்லாந்துக்கு வந்த புதிதில், ட்ராஸ்கிச "சர்வதேச சோஷலிஸ்டுகள்" (IS) (Internationale Socialisten) கட்சியுடன் தொடர்பு ஏற்பட்டது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில், ட்ராஸ்கிச கட்சிகள் தான் பெருமளவு உறுப்பினர்களை கொண்டுள்ள "இடதுசாரி" கட்சிகள். பிரான்சிலும், பிரிட்டனிலும் ட்ராஸ்கிச கட்சிகளின் உறுப்பினர் எண்ணிக்கை அதிகம். குறிப்பாக குட்டி முதலாளிய சிந்தனை கொண்ட மாணவர்கள் மத்தியில் ட்ராஸ்கிச செல்வாக்கு அதிகமாக உள்ளது.

ட்ராஸ்கிஸ்டுகளும் பல கட்சிகளாக பிரிந்திருக்கின்றனர். நான் தொடர்பு கொண்ட Internationale Socialisten (IS) பெருமளவு இளைஞர்களை கொண்டிருப்பதால், நாட்டில் எந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தாலும் முன்னுக்கு நிற்பார்கள். அந்த விஷயத்தில் அவர்களை பாராட்டலாம். ஆனால், சித்தாந்த அடிப்படையில் மேற்கத்திய ஜனநாயக அமைப்பிற்குள் ஒரு தீர்வைத் தேடுவது ஒரு முரண்பாடாகத் தெரிந்தது.

என்றைக்கோ ஒரு நாள், மக்கள் தாமாகவே புரட்சி செய்வார்கள் என்று கூறுகின்றார்கள். சரி, மக்கள் எப்போது புரட்சி செய்வார்கள்? நீங்கள் எப்போது தலைமை தாங்கப் போகிறீர்கள்? தங்களை லெனினிசவாதிகளாக காட்டிக் கொள்ளும் ட்ராஸ்கிஸ்டுகள், பல தடவைகள் லெனினின் கோட்பாடுகளுக்கு மாறாக நடந்து கொள்வதை அவதானித்தேன்.

"உங்களுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் என்ன வித்தியாசம்?" இந்தக் கேள்வியை எந்த ட்ராஸ்கிஸ்டிடம் கேட்டாலும், " ஐயோ! நாங்கள் ஸ்டாலினிஸ்டுகள் இல்லை"  என்று பதில் சொல்வார்கள். ஸ்டாலின் பற்றி மேற்கத்திய நாடுகளில் சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை அப்படியே ஒப்புவிப்பார்கள். அவர்களைப் பொறுத்த வரையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லாமே ஸ்டாலினிச கட்சிகள் தான். பிரான்சிலும், இத்தாலியிலும் "ஐரோப்பிய கம்யூனிசம்" என்றொரு சித்தாந்தம் எழுந்தது. ஐம்பதுகளிலேயே ஸ்டாலினை நிராகரித்த கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தன. இதெல்லாம் ட்ராஸ்கிஸ்டுகள்  தெரிந்து கொள்ள விரும்பாத  உண்மைகள்.

வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளில் வாழும் மக்கள், ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு தயாராக இல்லை. சமாதானமாக வாழும் மக்கள் வன்முறைப் புரட்சியை விரும்பப் போவதில்லை. அதனால் தான், என்றோ ஒரு நாள் மக்கள் புரட்சி செய்வார்கள், நாங்கள் அதற்கு தலைமை தாங்கலாம் என்று ட்ராஸ்கிஸ்டுகள் காத்திருக்கிறார்கள். சுருக்கமாக, இரத்தம் சிந்தாமல் அஹிம்சா வழியில் நடக்கும் புரட்சி ஒன்றுக்காக காத்திருக்கிறார்கள். இது வெறும் குட்டி முதலாளிய மனோபாவம். " அமைதியான வழியில் ஒரு புரட்சி நடந்தால் எமக்கும் சந்தோஷமே. ஆனால், முதலாளிய வர்க்கம் அந்தளவு சுலபமாக தனது அதிகாரத்தை விட்டுக் கொடுக்குமா?" என்று 150 வருடங்களுக்கு முன்னர் கார்ல் மார்க்ஸ் எழுதியிருந்தார்.

அன்றாட வாழ்க்கைக்கு கஷ்டப்படும் மக்கள் வாழும் மூன்றாமுலக நாடுகளில், "ஸ்டாலினிசத்திற்கு" நிறைய ஆதரவு உள்ளது. இதை ட்ராஸ்கிஸ்டுகளே ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால், இலங்கை மட்டும் விதிவிலக்கு. உலகிலேயே, இலங்கையில் மட்டும் தான், முதன்முதலாக ட்ராஸ்கிஸ்டுகள் அரசியல் பலம் பெறத் தொடங்கினார்கள். அதனால், இன்றைக்கு எந்தத் ட்ராஸ்கிஸ்டிடம் கேட்டாலும், இலங்கையை ஒரு உதாரணமாகக் காட்டுவார்கள். அதாவது, இலங்கை தான்  "ட்ராஸ்கிஸ்டுகளின் புண்ணிய பூமி"! 

இலங்கையில் ட்ராஸ்கிஸ்டுகள், சிங்களப் பேரினவாத கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து  ஆட்சி அமைத்திருக்கிறார்கள். அதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? அது ஒன்றும் ட்ராஸ்கிச கொள்கைக்கு முரணானது அல்ல. ஏனென்றால், ட்ராஸ்கிஸ்டுகள் புரட்சிகர கம்யூனிஸ்டுகள் அல்லர். அது ஒரு சமூக ஜனநாயகவாத இயக்கம். அதன் அடிப்படையில், ஒரு ஆளும் கட்சி தங்களையும் சேர்த்துக் கொண்டு ஆட்சியமைக்க விரும்பினால் ஏற்றுக் கொள்வார்கள். ஏனென்றால், அரசாங்கத்தை உள்ளிருந்த படியே மாற்றி விடுவார்களாம். மகிந்த ராஜபக்சவை கூட ஒரு ட்ராஸ்கிஸ்டாக மாற்றி விடலாம் என்று கனவு காண்கிறார்கள்.

ஒரு கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக சேருவது இலகுவான காரியமல்ல. கொஞ்சக் காலம் அந்தக் கட்சிக்காக வேலை செய்ய வேண்டும். ஒருவரது கொள்கைப் பற்று, அர்ப்பணிப்பு, சேவை உணர்வு, இவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் அவதானித்த பின்னர் தான், கட்சியில் உறுப்பினராக சேர்த்துக் கொள்வார்கள். உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், அப்படித் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால், ஒரு ட்ராஸ்கிச கட்சியில் மட்டும், எதுவுமே முக்கியமில்லை. உறுப்பினர்களின் எண்ணிக்கை மட்டுமே அவர்களுக்கு முக்கியம். ஒருவர் இன்றைக்கே அறிமுகமானாலும், அவரை உறுப்பினராக சேர்த்துக் கொள்வார்கள். ட்ராஸ்கிசம் பற்றி எதுவும் தெரியாவிட்டாலும், கட்சிக்காக வேலை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. சந்தா தொகையை ஒழுங்காக செலுத்தி வந்தால் போதும். 

முதன்முதலாக, IS அமைப்பினரின் கலந்துரையாடலுக்கு சென்றிருந்த நேரம், எனக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டது. கட்சியின் உறுப்பினராவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தருமாறு, என்னிடம் படிவத்தை கொண்டு வந்து நீட்டினார்கள். நான் அதற்கு மறுத்து விட்டேன். கட்சியின் அரசியல் கொள்கை பற்றி, ஓரளவேனும் தெரிந்து கொள்ளாமல் அங்கந்தவராக சேர முடியாது என்று மறுத்து விட்டேன். எனது விருப்பத்தை ஏற்றுக் கொண்ட IS அமைப்பாளர்கள், தமது கட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்கள்.

ஆம்ஸ்டர்டாம் பல்கலைக் கழகத்தில் ஓரிடத்தில், IS கட்சிக் கூட்டம் வாரத்திற்கு ஒரு தடவை, வகுப்புகள் இல்லாத மாலைநேரத்தில் நடைபெறும். அதிலே கலந்து கொள்வோர் பெரும்பாலும் பல்கலைக்கழக மாணவர்கள். அதனால், தாம் பயிலும் பல்கலைக்கழகத்தில் இலகுவாக இடம் ஒதுக்கிக் கொள்ள முடிந்தது. இது எனக்கு ஆரம்பத்தில் ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், கம்யூனிஸ்ட் மாணவர்கள் எந்தவொரு நிகழ்வை நடத்த விரும்பினாலும், பல்கலைக்கழக நிர்வாகம் அதற்கு அனுமதிப்பதில்லை. தீவிர இடதுசாரிகளான அனார்க்கிஸ்டுகளையும் அனுமதிப்பதில்லை. ட்ராஸ்கிஸ்டுகளுக்கு மட்டும் விசேட சலுகை கிடைத்தது எப்படி என்று தெரியவில்லை. அது போகட்டும்.

மார்க்சியம் ஒரு பாட்டாளி வர்க்க சித்தாந்தம். ஆனால், கூட்டங்களில் கலந்து கொள்வோர் (குட்டி முதலாளிய) மாணவர்கள். அது சிலநேரம், அவர்கள் மனதிலேயே நெருடலாக இருந்திருக்கும். ஒரு தடவை, துருக்கியை சேர்ந்த புதிய தோழர் ஒருவரை எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்கள். அந்த அறிமுகத்தில் இப்படிச் சொன்னார்கள் : " இன்று எமது கூட்டத்திற்கு ஒரு பாட்டாளி வர்க்க பிரதிநிதி வந்திருக்கிறார்."   அங்கே கூடியிருந்த எல்லோரும் கரகோஷம் செய்து, "அரிதாகக் காணக் கிடைக்கும், பாட்டாளி வர்க்க பிரதிநிதியை" வரவேற்றார்கள். சில நாட்களின் பின்னர், அந்தப் புதிய தோழருடன் உரையாடிய பொழுது தான் உண்மை தெரிய வந்தது. உண்மையில், அவரும் ஒரு மாணவர் தான். ஆனால், தனது வருமானத்திற்காக ஒரு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்கிறார்.

ட்ராஸ்கிஸ்டுகள் பேசும் மார்க்சியம் எனக்குப் புதுமையாக தோன்றியது. அவர்கள் தம்மைத் தாமே மார்க்சிஸ்ட் என்றும், லெனினிஸ்ட் என்றும் கூறிக் கொள்கின்றனர். ஆனால், மார்க்ஸ், லெனின் சொன்னவற்றை திரிபு படுத்தி பேசிக் கொண்டிருந்தார்கள். மார்க்ஸ், லெனின் எழுதிய எந்த நூலில் தேடினாலும், ட்ராஸ்கிஸ்டுகளின் கோட்பாடுகளை கண்டுபிடிக்க முடியாது. அவர்களுக்கென்றே, விசேடமாக ட்ராஸ்கி சில நூல்களை எழுதி இருக்கிறார். ட்ராஸ்கிஸ்டுகள், ட்ராஸ்கியின் எழுத்துக்களை தவிர வேறெதையும் வாசிப்பதாகத் தெரியவில்லை.

" சோஷலிசத்தின் இறுதி இலக்கு கம்யூனிசம்."  என்று லெனின் கூட எழுதி இருக்கிறார். ஆனால், எந்தவொரு ட்ராஸ்கிஸ்டும் தன்னை ஒரு கம்யூனிஸ்டு என்று சொல்லிக் கொள்வதில்லை. தப்பித் தவறி, கம்யூனிசம் என்ற வார்த்தையை கூட பயன்படுத்துவதில்லை. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர் கம்யூனிசம் என்ற சொல்லை பாவித்த இடங்களில் எல்லாம், ட்ராஸ்கிஸ்டுகள் சோஷலிசம் என்ற சொல்லைப் போட்டு நிரப்பிக் கொள்கிறார்கள். 

ட்ராஸ்கிசம் ஒரு சமூக ஜனநாயக சித்தாந்தம். ட்ராஸ்கிஸ்டுகள் தம்மை நேரடியாக சமூக ஜனநாயகவாதிகள் என்று அழைத்துக் கொள்வதில்லை. ஆனால், அவர்களது நடவடிக்கைகள் யாவும் அவ்வாறே அமைந்துள்ளன. சமூக ஜனநாயக் கட்சிகளுடன் தமக்கு நிறைய ஒத்துப் போகும் என்று, தனிப்பட்ட முறையில் என்னுடன் பேசிய ட்ராஸ்கிஸ்ட் ஒருவர் கூறினார். அதனால் தான் போலும், இலங்கையை சேர்ந்த  ட்ராஸ்கிஸ்டுகள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆதரிக்கிறார்கள். (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய இடது கொள்கை கொண்டது. அதனை அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியுடன் ஒப்பிடலாம்.)

கார்ல் மார்க்ஸ் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் பற்றி எழுதியவற்றை ஏற்கனவே வாசித்திருக்கிறேன். உலக வரலாற்றில் எல்லாக் காலங்களிலும் ஏதாவது ஒரு வர்க்கத்தின் சர்வாதிகாரம் நிலவி வந்திருக்கிறது. தற்போதும், ஜனநாயக நாடுகள் என்று சொல்லப்படும் நாடுகளில் கூட, முதலாளித்துவ வர்க்கத்தின் சர்வாதிகாரம் உள்ளது. அதற்குப் பதிலாக, பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை கொண்டு வருவதே சோஷலிசப் புரட்சியின் நோக்கம் என்று மார்க்ஸ் எழுதி இருக்கிறார். மார்க்ஸ் கூறிய "சர்வாதிகாரம்" ஒரு தத்துவார்த்த அடிப்படை கொண்டது. ஆனால், நாம் அன்றாட மொழி நடையில் பயன்படுத்தும் சர்வாதிகாரம் என்ற சொல், கொடுங்கோன்மை என்ற அர்த்தம் கொண்டது. 

குறிப்பாக, ஒவ்வொரு பிரஜைக்கும் ஜனநாயக சுதந்திரம் இருப்பதாக காட்டிக் கொள்ளும் மேற்கத்திய நாடுகளில், சர்வாதிகாரம் என்ற சொல் எதிர்மறையான அர்த்தத்தில் பயன்படுத்தப் படுகின்றது. ஆகவே, மேற்கத்திய சமூகத்தில் பிறந்த குட்டி முதலாளிய மாணவர்களும், சர்வாதிகாரம் என்ற சொல்லை எதிர்மறையாக கருதுவது புரிந்து கொள்ளத் தக்கதே. ஆனால், தம்மை "மார்க்சிஸ்டுகள்" என்று காட்டிக் கொள்ளும் ட்ராஸ்கிஸ்டுகள், மேற்கத்திய சிந்தனை முறையை கொண்டிருப்பது தான், என்னால் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது. மார்க்ஸ் எழுதிய பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற சொற்பதத்தை, "பாட்டாளி வர்க்க ஜனநாயகம்" என்று திரிபுபடுத்துவதே மார்க்சியத்திற்கு முரணானது. ஆனால், ட்ராஸ்கிஸ்டுகள் தம்மை "(மேற்கத்திய) ஜனநாயகவாதிகள்" என்று காட்டிக் கொள்வதற்காக, அந்த திரிபுபடுத்தலை தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதெல்லாவற்றையும் விட மிகப் பெரிய கொடுமை, சோவியத் யூனியனின் வீழ்ச்சியை, "ட்ராஸ்கிசத்தின் எழுச்சியாக" கருதினார்கள். அவர்களைப் பொறுத்தவரையில், தொன்னூறுகள் வரையில், முன்னாள் சோஷலிச நாடுகளில் "ஸ்டாலினிஸ்டுகள்"(?) ஆட்சி செய்தார்கள். குருஷேவ் காலத்திலேயே, ஸ்டாலினிச எதிர்ப்பு அரசியல் ஆதிக்கம் பெறத் தொடங்கி விட்டது. உலகம் முழுவதும், கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டாக பிளவு பட்டன. ஒரு பக்கம், ஸ்டாலினை ஆதரிக்கும், மறுபக்கம் குருஷேவை ஆதரிக்கும் பிரிவுகள் தோன்றின. ஆனால், ட்ராஸ்கிஸ்டுகளின் பார்வையில், அவை எல்லாமே "ஸ்டாலினிச கட்சிகள்" தான்!

ஸ்டாலினை விமர்சிக்கும் குருஷேவின் உரையை, போலந்து தான் முதன்முதலாக உலகிற்கு அறியத் தந்தது. எண்பதுகளில் போலந்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றம், வேறெந்த முன்னாள் சோஷலிச நாட்டிலும் ஏற்படவில்லை. லேக் வலேசா, "சொலிடார்நொஸ்க்" என்ற தொழிற்சங்க அமைப்பை உருவாக்கி, கத்தோலிக்க திருச்சபையின் உதவியுடன், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினார். இதெல்லாம், போலந்தை தவிர, வேறெந்த சோஷலிச நாட்டிலும் சாத்தியப் பட்டிருக்காது. போலந்து பெரும்பான்மை கத்தோலிக்கர்களை கொண்ட நாடென்பதும், அன்று போப்பாண்டவராக தேர்தெடுக்கப் பட்ட ஜான் பால் ஒரு போலிஷ்காரர் என்பதும் குறிப்பிடத் தக்கது. லேக் வலேசாவும் ஒரு மேற்கத்திய ஆதரவாளர் என்பது, உள்ளங்கை நெல்லிக்கனியாக அப்போதே தெரிந்த விடயம்.

லேக் வலேசாவின் தொழிற்சங்க போராட்டத்தை, பிற்போக்கான கத்தோலிக்க மத நிறுவனம் முழு மூச்சுடன்  ஆதரித்தது. அது வெளிப்படையாகவே மேற்குலகிற்கு ஆதரவான தன்மை கொண்டிருந்தது. ஆனால், ட்ராஸ்கிஸ்டுகள் அந்தப் போராட்டத்தை வரவேற்றார்கள். "லேக் வலேசா ஒரு லெனினிஸ்ட்" என்றும், அவரது தலைமையின் கீழ் போராடிய தொழிலாளர்கள், "ட்ராஸ்கி காலத்து சோவியத் அமைப்பை கட்டுவதாகவும்," உண்மைக்கு புறம்பான  தகவல்களை பரப்பிக் கொண்டிருந்தார்கள். போலந்து மட்டுமல்லாது, பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், சோவியத் யூனியனிலும், சோஷலிச அரசுகள் வீழ்ந்தன. அங்கெல்லாம், கட்டுப்பாடற்ற முதலாளித்துவ பொருளாதாரம் நடைமுறைக்கு வந்தது. 

அன்று ட்ராஸ்கிஸ்டுகள் என்ன சொன்னார்கள்? அவர்கள் அதனை "ஸ்டாலினிசத்தின் வீழ்ச்சியாக" கொண்டாடினார்கள். " இதோ பாருங்கள், பாட்டாளி வர்க்க மக்கள் புரட்சி ஏற்படப் போகின்றது"  என்று நம்பிக்கையை விதைத்தார்கள். இவர்களது தத்துவ ஆசிரியர் ட்ராஸ்கி கூட, " இரண்டாம் உலகப் போரில், பாசிசம் ஸ்டாலினிசத்தை தோற்கடிக்கும்" என்று எதிர்வு கூறியவர் ஆயிற்றே. அதுவே அப்போது  அவரது மனதில் இருந்த விருப்பமாகவும் இருந்திருக்கும். (இது குறித்த விவாதம் IS கூட்டங்களில் நடைபெற்றது. போரின் முடிவை ட்ராஸ்கி தவறாகக் கணித்திருந்தார் என்பதை சிலர் ஏற்றுக் கொண்டார்கள்.)

"ஸ்டாலினிசம் வீழ்ந்து" இருபதாண்டுகளுக்கு மேலாகியும், ட்ராஸ்கிஸ்டுகள் எதிர்பார்த்த நிரந்தரப் புரட்சி ஏற்படவில்லை. அப்படி ஒரு புரட்சி எந்தக் காலத்திலும் வராது போலிருக்கிறது. அதனால் தான் ட்ராஸ்கியும் தனது தத்துவத்திற்கு "நிரந்தரப் புரட்சி" என்று பெயரிட்டார் போலும்.


ட்ராஸ்கிசம் தொடர்பான முன்னைய பதிவுகள்:

Tuesday, January 21, 2014

புலிகள் ஒரு "ஸ்டாலினிச" இயக்கம்! - ட்ராஸ்கிஸ்டுகளின் கண்டுபிடிப்பு!!


"இலங்கையில் உங்களுக்குப் பிடித்த சிங்கள இடதுசாரி யார்?" என்று நமது தமிழ் தேசியவாதிகளிடம் கேட்டால், எல்லோரும் ஒரே குரலில் "விக்கிரமபாகு கருணாரத்னா" என்று பதில் சொல்வார்கள்.

தமிழர்களின் பிரச்சனைகளை, அனுதாபத்துடன் ஆதரிக்கும் ஒரேயொரு சிங்கள இடதுசாரி அவர் மட்டுமல்ல. (வேறு சிலரும் உள்ளனர். ஆனால், அவர்கள் புலிகளை ஆதரிக்காத படியால், யாருக்கும் பிடிக்காது.) தென்னிலங்கை இடதுசாரிகளில் விக்கிரமபாகு கருணாரத்னவும், அவரது கட்சியும் விதி விலக்குகள். அவர் மட்டுமே, புலிகளின் அரசியல் நிலைப்பாட்டை பகிரங்கமாக ஆதரித்து வந்துள்ளார். அவரது கட்சி, "தமிழீழம், ஸ்ரீலங்கா என்ற இரண்டு தேசியங்களை ஏற்றுக் கொண்டுள்ளது. (நிச்சயமாக, அந்த இரண்டு தேசியங்களும் சோஷலிசத்தை இறுதி இலக்காக கொண்டிருக்கும் என்பதை குறிப்பிடத் தவறுவதில்லை.)

விக்கிரமபாகு கருணாரத்ன தலைமை தாங்கும், நவ சமசமாஜக் கட்சி (NSSP) ஒரு ட்ராஸ்கிச சோஷலிசக் கட்சி ஆகும். இன்று அரசுடன் கூட்டுச் சேர்ந்திருக்கும், வாசுதேவ நாணயக்காராவின் லங்கா சமசமாஜக் கட்சியில் (LSSP) இருந்து எப்போதோ பிரிந்து வந்து விட்டது. ஆனால், இரண்டுமே நான்காம் அகில கோட்பாடுகளை ஏற்றுக் கொண்ட ட்ராஸ்கிச கட்சிகள் தான். ட்ராஸ்கிஸ்டுகள் கம்யூனிஸ்டுகள் அல்ல. இன்னும் தெளிவாக சொன்னால், "ஸ்டாலினிஸ்டுகள் அல்ல".

காலனிய கால இலங்கையில் தோன்றிய, ஆரம்ப கால சோஷலிச இயக்கம், "ஸ்டாலின் - ட்ராஸ்கி பிரிவினை" க்குப் பிறகு, ட்ராஸ்கியை பின்பற்றியது. ஐரோப்பிய சமூக-ஜனநாயக கட்சிகளின் குறிக்கோள், ட்ராஸ்கிசவாத கட்சிகளுக்கும் பொருந்தும். அதாவது, கத்தியின்றி, இரத்தமின்றி, பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று, சோஷலிசத்தை கொண்டு வருவதே அவர்களது குறிக்கோள். அதனால் தான், வாசுதேவ நாணயக்காராவின் LSSP, மகிந்த ராஜபக்சவின் சுதந்திரக் கட்சி அரசை ஆதரிக்கின்றது. அதாவது, ஒரு மத்திய இடது சார்ந்த அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதன் மூலம், ஒரு முதலாளிய அரசை வழிக்குக் கொண்டு வர முடியுமாம். (இலங்கை சுதந்திரக் கட்சி, அடிப்படையில் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அரசியலை கொண்டுள்ளது.)

விக்கிரமபாகு கருணாரத்னவின் NSSP, நடப்பில் உள்ள மகிந்த அரசுடன் முரண்படுகின்றது. அது ஒரு மிகச் சரியான நிலைப்பாடு தான். ஆனால், சர்வதேச மட்டத்தில், அதைப் போன்ற ட்ராஸ்கிசவாத கட்சிகள், ஒரு ஆயுதப் புரட்சியை நம்பி இருக்கவில்லை. அதன் அர்த்தம், தேர்தல் ஜனநாயக அரசியலில் இருந்து அவர்களால் வெளியே வர முடியாது. அடித்தட்டில் இருக்கும் மக்கள் புரட்சி செய்வார்கள், அப்போது அவர்களை வழிகாட்டலாம் என்று காத்திருக்கிறார்கள்.

விக்கிரமபாகுவின் NSSP கட்சிக்கும், சர்வதேச ட்ராஸ்கிச கட்சிகளுக்கும் இடையிலான தொடர்புகளை நாங்கள் குறைத்து மதிப்பிட முடியாது. ட்ராஸ்கிஸ்டுகள், ஒரே நாட்டில் சோஷலிசத்தை கட்டுவதனை, ஒரு "ஸ்டாலினிச கோட்பாடு" என்று நிராகரிப்பவர்கள். அதற்குப் பதிலாக, "நிரந்தரப் புரட்சி" என்று சர்வதேச மட்டத்தில் சிந்திப்பவர்கள். அதாவது, ஒரு சர்வதேச பாட்டாளிவர்க்கத்தின் "உலகப் புரட்சி" ஏற்பட்டால் மட்டுமே, தமிழீழம், ஸ்ரீலங்கா ஆகிய சோஷலிச நாடுகளும் உருவாகும் என்று நம்புவோர் தான் NSSP யினர்.

NSSP க்கு, நான்காம் அகிலம் போன்ற சர்வதேச ட்ராஸ்கிசவாத அமைப்புகளுடன் தொடர்புண்டு. குறிப்பாக, நெதர்லாந்து நாட்டில் இயங்கும் தீவிர ட்ராஸ்கிச Grenzeloos கட்சியுடன், நெருங்கிய தொடர்புகளை பேணி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் நெதர்லாந்தில் கூட்டப்படும் சர்வதேச கருத்தரங்குகளிலும் கலந்து கொள்கின்றனர். உலகெங்கும் உள்ள ட்ராஸ்கிச கட்சிகளின் பிரதிநிதிகள், அந்தக் கருந்தரங்குகளில் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். ட்ராஸ்கிச இயக்கத்திற்குள் நிறைய பிரிவுகள் உள்ளன. NSSP போன்று, Grenzeloos கட்சியும் அரசை ஆதரிப்பதில்லை. எந்தப் பெரும்பான்மை கட்சி ஆட்சி அமைத்தாலும், அதன் மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து வருகின்றது. NSSP யின் நிலைப்பாடும் அது தான். அந்த விடயத்தில் அவர்களின் நேர்மையை பாராட்டலாம்.

Grenzeloos என்பது, நெதர்லாந்தில் இயங்கும் ஒரு சிறிய மார்க்சிய-ட்ராஸ்கிச கட்சி ஆகும். நெதர்லாந்து ஆளும் கட்சிகளில் ஒன்றான, அடிப்படையில் சமூக ஜனநாயக கட்சியான PvdA (தொழிற்கட்சி, பிரிட்டிஷ் Labour Party போன்றது), பல தசாப்தங்களுக்கு முன்பிருந்தே, வலதுசாரி பாதையில் செல்லத் தொடங்கியது. ஐம்பது வருடங்களுக்கு முன்னர் பேசிய மார்க்சியம், சோஷலிசம் எல்லாவற்றையும் கை விட்டு விட்டு, முதலாளித்துவ ஆதரவு கட்சியாகி விட்டது. கட்சியின் வலதுசாரி நிலைப்பாட்டுடன் முரண்பட்ட இடதுசாரி மார்க்சிய நம்பிக்கையாளர்கள், Grenzeloos (கிரென்செலோஸ்: எல்லையற்றது) என்ற புதிய அமைப்பை உருவாக்கினார்கள்.

அவர்கள் தற்போது, PvdA யுடன் எந்த தொடர்புமற்று, தனியான கட்சியாக இயங்கி வருகின்றனர். அவர்கள் மார்க்சிஸ்டுகள் என்றாலும், ட்ராஸ்கிசத்தை கட்சிக் கொள்கையாக பின்பற்றி வருகின்றனர். தீவிரமான ஸ்டாலினிச எதிர்ப்பாளர்கள். மேற்கு ஐரோப்பிய நாடுகளில், வாழ்க்கைத் தரம் உயர்ந்து வசதியான வாழ்க்கை வாழும் மக்கள் மத்தியில், ட்ராஸ்கிஸம் இலகுவில் எடுபடும்.

ட்ராஸ்கிசவாதிகள், "வன்முறைப் புரட்சி மூலம், முதலாளித்துவ அரசை வீழ்த்தி, பாட்டாளி வர்க்க அரசை நிறுவ விரும்பும் ஸ்டாலினிசத்தை" நிராகரிக்கின்றனர். அதனால், இரத்தம் சிந்திப் போராட விரும்பாத நடுத்தர வர்க்க மனப்பான்மை கொண்ட மக்கள் மட்டுமல்ல, முதலாளிகளும் ட்ராஸ்கிசத்தை ஆதரிப்பார்கள். ஏனென்றால், ட்ராஸ்கிஸ்டுகளால், எதிர்காலத்தில் அவர்களுக்கு எந்த விதமான (உயிர்)ஆபத்தும் ஏற்படாது.

நெதர்லாந்தில் உள்ள பல்வேறு இடதுசாரி கட்சிகளை சேர்ந்தவர்களுடனும் எனக்குப் பழக்கம் உண்டு. Grenzeloos கட்சி உறுப்பினர்களை, பல சந்தர்ப்பங்களில் சந்தித்துப் பேசி இருக்கிறேன். பத்து வருடங்களுக்கு முன்பிருந்தே, பல்வேறு சமூக நிகழ்வுகளில், அரசியல் ஆர்ப்பாட்டங்களில், அவர்களை சந்தித்திருக்கிறேன். நான் இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒரு சமூக ஆர்வலர் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.

அப்போதெல்லாம், எமது உரையாடலில், தவிர்க்கவியலாது இலங்கை நிலவரம் குறித்த கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெறும். அநேகமாக, ஐரோப்பாவில் அரசியல் ஆர்வமுள்ள பலர், இலங்கைப் பிரச்சினை பற்றியும் அறிந்து வைத்திருப்பார்கள். ஈழப்போர், ஈழத்தில் மனிதப் பேரவலம், போரிடும் தரப்பினர், அவர்களது இராணுவ- அரசியல் நிலைப்பாடுகள், இவை குறித்தெல்லாம் ஆர்வத்தோடு தேடிப் படித்திருப்பார்கள்.

ஈழப் போராட்டம், மற்றும் விடுதலைப் புலிகள் குறித்து Grenzeloos உறுப்பினர்களின் கொண்டிருந்த கருத்துக்கள் என்னை வியப்பில் ஆழ்த்தின. "புலிகள் ஒரு (தமிழ்) தேசியவாத இயக்கம், ஒரு தேசியவாத அரசு அமைப்பதே அவர்களது குறிக்கோள்." என்ற கருத்தை நான் முன்வைத்தேன். அதனை மறுத்துரைத்த Grenzeloos கட்சி உறுப்பினர்கள், "விடுதலைப் புலிகள் ஒரு ஸ்டாலினிச இயக்கம். தமிழீழத்தில் ஸ்டாலினிச ஆட்சியை கொண்டுவருவதே அவர்களது குறிக்கோள்" என்று வாதிட்டனர். அது மட்டுமல்ல, கியூபா, வியட்நாமில் ஸ்டாலினிச ஆட்சி நடப்பதாகவும், புலிகளும் அந்தப் பாதையில் செல்வதாகவும் வாதிட்டனர்.

இன்று, ஐரோப்பிய ட்ராஸ்கிச கட்சிகளுடன் தொடர்புடைய தமிழர்கள் சிலர், தம்மை "தீவிரமான புலி ஆதரவாளர்களாக" காட்டி வருகின்றனர். உண்மையில் அது ஒரு இரட்டை வேடம். Grenzeloos மட்டுமல்ல, ஐரோப்பிய ட்ராஸ்கிசவாத கட்சிகள் பலவும் புலிகளை ஒரு ஸ்டாலினிச இயக்கமாகவே கருதுகின்றன. விடுதலைப் புலிகள் ஒரு "ஸ்டாலினிச இயக்கம்" என்பதற்கு, ட்ராஸ்கிசவாதிகள் கூறும் காரணம் முக்கியமானது. முதலில் ஸ்டாலினிசம் என்றால் என்ன? அதற்கு வரைவிலக்கணம் என்ன?

"ஸ்டாலினிசம்" என்ற சொற்பதத்தை, ட்ராஸ்கிசவாதிகள் எவ்வாறு வரையறுக்கிறார்கள் என்பதை, நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். "வன்முறைப் போராட்டத்தில் நாட்டம், கடும்போக்குத் தன்மை, பல கட்சி ஜனநாயகத்தை மறுப்பது, மாற்றுக் கருத்தாளரை அழித்தொழிப்பது, எதேச்சாதிகாரம்..." இது போன்ற பல அம்சங்களை, அவர்கள் ஸ்டாலினிசம் என்று கருதுகின்றனர். 

ட்ராஸ்கிஸ்டுகளை பொறுத்தவரையில், "ஸ்டாலினின் கொள்கைகளை பின்பற்றித் தான், கியூபாவில் காஸ்ட்ரோயிஸ்டுகளும், வியட்நாமில் வியட்- காங் இயக்கமும் ஆயுதப் போராட்டம் நடத்தினார்கள்." அதாவது, "அவர்கள் கம்யூனிஸ்டுகளோ, இடதுசாரிகளோ அல்ல, ஸ்டாலினிஸ்டுகள்." ஏனென்றால், ஆயுத வன்முறை மூலம், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பவர்கள். "விடுதலைப் புலிகளும், அவ்வாறு ஆயுத வன்முறையில் நம்பிக்கை கொண்ட இயக்கம் தான். அதனால் தான், புலிகளும் ஸ்டாலினிஸ்டுகள் ஆவர்." என்பது ட்ராஸ்கிச கட்சிகளின் அரசியல் புரிதல் ஆகும். 

மேற்கு ஐரோப்பாவில் இயங்கும், எந்தவொரு ட்ராஸ்கிச அமைப்பும், முதலில் தன்னை முதலில் "ஸ்டாலினிஸ்ட் இல்லை" என்று நிரூபிப்பதில் குறியாக இருக்கும். அதற்குக் காரணம், ஐரோப்பிய அரசுகள் "ஸ்டாலினிசம் என்பது சர்வாதிகாரம், அல்லது எதேச்சாதிகாரத்தின் மறுபெயர்" என்று பிரச்சாரம் செய்து, தமது மக்களை நம்ப வைத்திருக்கின்றன. அதனால் தான், ஆயுத பலம் மூலம் அதிகாரத்தை நிலை நாட்ட விரும்பும் தேசியவாத இயக்கங்களும், ட்ராஸ்கிசவாதிகளின் கண்களுக்கு "ஸ்டாலினிஸ்டுகளாக" தெரிகின்றன.

ஐரோப்பிய ட்ராஸ்கிச கட்சிகள், புலிகளை "ஸ்டாலினிஸ்டுகள்" என்று கூறி நிராகரிப்பதற்கு, இன்னொரு காரணமும் உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் உள்ள "ஸ்டாலினிச" (கம்யூனிஸ்ட் அல்லது மாவோயிஸ்ட்) கட்சிகள், அமைப்புகள் தான், புலிகளையும், அவர்களது ஈழப் போராட்டத்தையும் வெளிப்படையாக ஆதரித்து வருகின்றனர். புலிகளின் போராட்டத்தை, ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மை கொண்ட தேசிய விடுதலைப் போராட்டம் என்று கூறி வருகின்றனர். அது ஒரு வகையில் "ஸ்டாலினின் கோட்பாடு". (இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தேசிய இனப் பிரச்சினை குறித்த ஆய்வுகளை செய்தவர்களில் ஸ்டாலின் முக்கியமானவர்.) அத்தகைய கொள்கை வேறுபாடும், ட்ராஸ்கிச கட்சிகள் தேசியவாதிகளான புலிகளை நிராகரிக்க காரணமாக உள்ளது.