Friday, December 08, 2017

ஜனநாயகம் என்பது ஒரு பெரும்பான்மையின் சர்வாதிகாரமே!


(புரட்சியைக் காட்டிக் கொடுக்கும் ட்ராஸ்கிசவாதிகள்) 
(பகுதி - நான்கு)

ஸ்டாலின் ஆரம்பத்தில் இருந்தே ட்ராஸ்கி மீது காழ்ப்புணர்வு கொண்டிருந்ததாகவும், தனிப்பட்ட குரோதம் காரணமாகவே ட்ராஸ்கியை நாடுகடத்தி, பின்னர் கொலை செய்து விட்டதாகவும் ட்ராஸ்கிஸ்டுகள் கற்பனைக் கதை புனைந்து பரப்பி வருகின்றனர். அதில் எள்ளளவு உண்மையும் கிடையாது. தற்பெருமை கொண்ட ட்ராஸ்கி அவமானம் தாங்காமல் ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு பிரச்சாரங்களை முன்னெடுத்து வந்துள்ளார். அதையே இன்று ட்ராஸ்கி ஆதரவாளர்களும் காவித் திரிகின்றனர்.

அக்டோபர் புரட்சி நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் போல்ஷெவிக் கட்சி புனரமைக்கப் பட்டது. அப்போது லெனின் சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்தார். அவருக்கு பதிலாக, ரஷ்யாவில் இருந்த ஸ்டாலின் தான் கட்சியை பொறுப்பேற்று நிர்வகித்து வந்தார். அப்போது ட்ராஸ்கி ஸ்டாலினுடன் சேர்ந்து வேலை செய்து வந்தார். அன்று பல போல்ஷெவிக் தலைவர்கள் கைது செய்யப் பட்டிருந்த நிலையில் ஸ்டாலின் தலையில் பொறுப்புகள் குவிந்தமை ஏற்கத்தக்கதே. இந்த உண்மையை ட்ராஸ்கி கூட மறுக்கவில்லை.

அக்டோபர் புரட்சியின் முதலாம் ஆண்டு நினைவுகூரல் தொடர்பாக பிராவ்டா பத்திரிகையில் ஸ்டாலின் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதில் புரட்சியில் ட்ராஸ்கியின் பங்களிப்பு பற்றியும் குறிப்பிடத் தயங்கவில்லை.
//"மக்கள் எழுச்சிக்கான நடைமுறை வேலைகள் தோழர் ட்ராஸ்கி தலைமையில் நடந்துள்ளன. பெத்ரோகிராட் நகர இராணுவ முகாம்களில் இருந்த போர்வீர்கள் மத்தியில் புரட்சிகர கமிட்டி அமைத்து அவர்களை சோவியத் ஆதரவாளர்களாக வென்றெடுத்த ட்ராஸ்கிக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம்."// (Source: Histoire du phénoméne Stalinien/Geschiedenis van het Stalinisme, Jean Elleinstein, பக்கம் 39)

அக்டோபர் புரட்சியை நேரில் கண்ட அமெரிக்கப் பத்திரிகையாளர் ஜோன் ரீட் எழுதிய "உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்" நூலை, ஸ்டாலின் தடை செய்ததாக ட்ராஸ்கிஸ்டுகள் அவதூறு பரப்பி வருகின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம் அந்த நூலில் புரட்சியில் ட்ராஸ்கியின் பங்களிப்பு குறித்து எழுதப் பட்டிருந்த படியால் காழ்ப்புணர்வு கொண்ட ஸ்டாலின் தடை செய்தார் என்பது தான். இது எந்த உண்மையும் இல்லாத வெறும் வதந்தி. பிராவ்டா பத்திரிகையில் ஸ்டாலின் எழுதிய கட்டுரையை மேற்கோள் காட்டி இருக்கிறேன். அதில் எந்தக் காழ்ப்புணர்வும் இன்றி ஸ்டாலின் ட்ராஸ்கியை புகழ்ந்து எழுதி இருப்பதைக் காணலாம்.

தமது வதந்தியை நிரூபிக்க முடியாத ட்ராஸ்கிசவாதிகள், ஸ்டாலினின் பேச்சு ஒன்றை ஆதாரமாக காட்டுகின்றனர். "ட்ராஸ்கிசமா அல்லது லெனினிசமா" என்ற தலைப்பின் கீழ் November 19, 1924 அன்று ஸ்டாலின் பேசிய உரையில் "ஜோன் ரீட் தனது நூலில் ட்ராஸ்கி பற்றி எழுதிய ஒரு பகுதியை பிரதியெடுத்து ட்ராஸ்கிச ஆதரவாளர்கள் துண்டுப்பிரசுரம் வெளியிட்டனர்" என்று தான் சொல்லப் பட்டுள்ளது.

அன்று கட்சிக்குள் நடந்த நீண்டதொரு விவாதத்தில் தோல்வியுற்ற ட்ராஸ்கியின் தத்துவார்த்த குறைகளை சுட்டிக் காட்டும் விதமாகத் தான், ஸ்டாலினின் மேற்படி உரை அமைந்திருந்தது.சிலநேரம், குறிப்பிட்ட அந்த துண்டுப் பிரசுரம் தடை செய்யப் பட்டிருக்கலாம். அதற்குக் காரணம், அன்று நாட்டுக்குள் குறிப்பிட்ட அளவு ட்ராஸ்கி ஆதரவாளர்கள் இருந்தனர். அவர்களது அரச விரோத செயற்பாடுகள் தடுக்கப் பட்டன. அதைத் தான் ஸ்டாலின் "ஜோன் ரீட் நூலைத் தடைசெய்தார்" என்று திரித்து ட்ராஸ்கிசவாதிகள் விஷமத்தனமான பிரச்சாரம் செய்கின்றனர்.

"ஒரே நாட்டில் சோஷலிசம் கட்டுவதுவது" தொடர்பான விவாதங்கள் ஆண்டுக் கணக்காக நடந்து முடிவில் ட்ராஸ்கி தோற்கடிக்கப் பட்டார். இது பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். 1923 ம் ஆண்டு, ஸ்டாலினுக்கு எதிரான மத்தியகுழு உறுப்பினர்கள் இரகசியமான ஒரு இடத்தில் கூடி போட்டிக் குழு அமைக்க முடிவெடுத்தனர். அந்தக் குழுவில் சினோவியேவ், ட்ராஸ்கி ஆகியோரும் இருந்தனர். அதில் பங்கெடுத்த ஒருவர் ஸ்டாலினுக்கு தகவல் கொடுத்த படியால், அவர்களது திட்டம் நிறைவேறவில்லை.

இதற்கிடையே, கட்சியின் பதினான்காவது வருடாந்த மகாநாட்டின் முடிவில் கட்சி மறுசீரமைக்கப் பட்டது. இதனால் ட்ராஸ்கி போன்ற எதிராளிகளின் ஆதரவுத் தளம் சுருங்கியது. 1925 ம் ஆண்டு, ட்ராஸ்கியின் "யுத்தத்திற்கான மக்கள் அதிகாரி" பதவி பறிக்கப் பட்டது. இருப்பினும் அவர் தொடர்ந்தும் கட்சி உறுப்பினராக இருக்க அனுமதிக்கப் பட்டார். கமனேவ், சினோவியேவ் ஆகியோர் முன்னர் ட்ராஸ்கியை விமர்சித்து வந்தாலும், பதினான்காம் கட்சி மகாநாட்டில் அவர்களும் ஸ்டாலினை எதிர்த்தனர்.

அந்தக் காலத்தில் கட்சிக்குள் குழுவாத அரசியல் மேலோங்கிக் காணப்பட்டது. பல்வேறு குழுக்களின் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டவுடன், அவர்களது ஆதரவாளர்களும் களையெடுக்கப் பட்டனர். குறிப்பாக, அறிவுஜீவிகளை உருவாக்கும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலும் குழுவாத அரசியல் நிலவியது. அதாவது ஆசிரியர்களும், மாணவர்களும் ஸ்டாலினிச குழு, ட்ராஸ்கிச குழு எனப் பிரிந்து கருத்து மோதல்களில் ஈடுபட்டு வந்தனர்.

இங்கே முக்கியமாக கவனிக்கப் பட வேண்டிய விடயம் ஒன்றுள்ளது. பொதுவான ஜனநாயகம் என்ற ஒன்று உலகில் கிடையாது. மேற்கத்திய பாராளுமன்ற - பல கட்சி முறையானது இன்னொரு வகையான ஜனநாயகம் மட்டுமே. சோஷலிச நாடுகளில் இருப்பதை "ஜனநாயக மையவாதம்" என்று குறிப்பிடுவார்கள். அதாவது, "வேற்றுமையில் ஒற்றுமை காண்பது". எந்தப் பிரச்சினை பற்றியும் கட்சிக்குள் விவாதம் நடத்தலாம். ஒரு கோரிக்கை, அல்லது திருத்தம் கூட விவாதிக்கப் படலாம்.

ஒரு குறிப்பிட்ட விடயம் நாட்கணக்காக விவாதிக்கப் பட்ட பின்னர், முடிவில் அது வாக்கெடுப்புக்கு விடப் படும். பெரும்பான்மையாக எத்தனை பேர் கையை உயர்த்துகிறார்கள் என்று பார்த்து அது ஏற்றுக் கொள்ளப் படும். அதை எதிர்த்த சிறுபான்மை வாக்காளர்கள் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும். பெரும்பான்மை வாக்குகளால் ஏற்றுக்கொள்ளப் பட்ட கோரிக்கையானது கட்சியின் முடிவாக வெளியுலகிற்கு அறிவிக்கப்படும். இது ஜனநாயகம் அல்லாமல் வேறென்ன?

பிரச்சினை எங்கே இருக்கிறது என்றால், எதிர்த்து தோற்கடிக்கப் பட்ட சிறுபான்மையினர் அதற்குப் பிறகு எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. "உண்மையில் ஜனநாயகம் என்பது பெரும்பான்மையின் சர்வாதிகாரம்" என்று இன்றும் பலர் சொல்லக் கேட்டிருக்கலாம். அன்று ட்ராஸ்கி பெரும்பான்மை ஜனநாயகத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து, குழுவாதமே ஜனநாயகம் என்று வாதாடிக் கொண்டிருந்தார். அவர் தனது ஆதரவாளர்களுடன், கட்சிக்குள் தனிக் குழுவாக இயங்க விரும்பினார். ட்ராஸ்கி மட்டுமல்ல, புகாரின், கமனேவ், சினோவியேவ் என்று பலரும் தமக்கான குழுக்களை வைத்திருந்தனர்.

பாராளுமன்றத்தில் அல்லது கட்சிக்குள், ட்ராஸ்கி குழு போன்ற பல குழுக்களை இயங்க அனுமதித்திருந்தால், ட்ராஸ்கி ஸ்டாலினின் தலைமைக்கு கட்டுப்படத் தயாராக இருந்தார். ஆனால், அதை ஸ்டாலின் விரும்பவில்லை. கட்சிக்குள் குழுவாதத்தை ஏற்றுக் கொள்வதானது, பிசாசை கூப்பிட்டு பக்கத்தில் வைத்திருப்பதற்கு சமமானது. எந்த நேரம் எப்படிக் கவிழ்ப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இது தான் ஸ்டாலின் - ட்ராஸ்கி முரண்பாட்டின் ஆரம்பப் புள்ளி.

1927 ம் ஆண்டு, அக்டோபர் புரட்சியின் பத்தாம் ஆண்டு நினைவு தினம் வந்தது. அப்போது ஸ்டாலின் எதிர்ப்பாளர்களான ட்ராஸ்கி, கமேநேவ், சிமில்கா, ராடெக், பியத்தகோவ், ராகொவ்ஸ்கி ஆகியோர் கூட்டுச் சேர்ந்து தனியான ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்த திட்டமிட்டனர். அதனால் அவர்கள் கட்சியை விட்டு வெளியேற்றப் பட்டனர். அதில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

1924 ம் ஆண்டு, சோவியத் நிறைவேற்றுக் கமிட்டியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டத்தின் படி, அரச எதிரிகள், வர்க்க எதிரிகள் ஆகியோர் நாடுகடத்தப் படலாம் என்ற சட்டம் அமுலுக்கு வந்தது. அந்த வகையில் நாடு கடத்தப் பட்டவர் ட்ராஸ்கி மட்டுமல்ல. 1927 வரையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் நாடுகடத்தப் பட்டுள்ளனர். அதே சட்டம் பலரைக் கைது செய்யவும் உதவியுள்ளது. அப்போது, ஆரம்ப கால கட்சி உறுப்பினர்களும் களையெடுக்கப் பட்டதை மறுக்க முடியாது.

இந்த இடத்தில், ஒரு முக்கியமான விடயத்தை கவனத்தில் எடுக்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியானது ஒரு பாட்டாளி வர்க்க கட்சி என்று சொல்லிக் கொண்டாலும், அதில் மத்தியதர வர்க்க பின்னணி கொண்டவர்கள் அதிகளவில் இருக்க வாய்ப்புண்டு. ஏனென்றால் அவர்கள் தான் பெருமளவில் அரசியல் உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். அது மட்டுமல்லாது, சுயநலக் காரணங்களுக்காக, குறிப்பாக பதவிக்காக வந்து சேர்வோரும் இருப்பார்கள்.

1927 ம் ஆண்டு, கட்சிக்குள் நடந்த மறுசீரமைப்பில் பலர் வெளியேற்றப் பட்டனர். அதில் பலர் மத்தியதர வர்க்க மனப்பான்மை கொண்டவர்கள், அல்லது பதவிக்காக கட்சியில் ஒட்டிக் கொண்டவர்கள். அந்த இடத்திற்கு புதிய உறுப்பினர்கள் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். அவர்கள் ஒன்றில் தொழிலாளர்களாக இருந்தனர், அல்லது அவ்வாறான குடும்பப் பின்னணியை கொண்டிருந்தனர். இவ்வாறு தான் வர்க்கப் போராட்டம் ஆரம்பமாகியது.

(முற்றும்)

No comments: