Sunday, March 29, 2020

இத்தாலியை கைவிட்ட ஐரோப்பா; சீனா, கியூபா,ரஷ்யா மட்டுமே உதவுகின்றன!


இதோ இத்தாலி அரசின் வாக்குமூலம்: "கியூபா, சீனா, ரஷ்யாவில் இருந்து நிறைய உதவிகள் கிடைத்துள்ளன. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் எமக்கு எதுவுமே செய்யவில்லை!"


எற்கனவே நான் இது பற்றி குறிப்பிட்ட நேரம், "சித்தாந்த அரசியல் பிரச்சாரம் செய்வதாக" உதாசீனப் படுத்தினார்கள். ஐரோப்பாவில் வாழும் சிலர் "இதோ பாருங்கள். ஜெர்மனி கொரோனா நோயாளிகளை அழைத்து வந்து சிகிச்சை அளிக்கிறது." என்று காட்டினார்கள். அது ஒரு கண்துடைப்பு நாடகம். கொரோனா தொற்றுக்கு ஆயிரக் கணக்கானவர்கள் பலியான நாட்டில் இருந்து, வெறும் பத்துப் பதினைந்து பேரை அழைத்து சிகிச்சை அளிப்பது என்ன வகையான உதவி? ஜெர்மனி மட்டுமல்ல ஆஸ்திரியாவில் உள்ள மருத்துவமனைகளிலும் இத்தாலி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். ஆனால் மிக மிகக் குறைந்த அளவினர் தான் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இது தொடர்பாக இத்தாலி ஊடகங்களில் நிறைய பேசப் படுகின்றது. அவர்கள் சீன, கியூபா, ரஷ்ய நாடுகளில் இருந்து என்னென்ன உதவிகள் கிடைத்துள்ளன என்பதை விபரமாகக் காட்டுகிறார்கள். ஆனால் ஐரோப்பிய நாடுகளின் உதவி பற்றி சொல்லிக் கொள்ள அப்படி என்ன இருக்கிறது? ஆபத்துக் காலத்தில் தான் உண்மையான நண்பர்களை அறியலாம் என்று இத்தாலியர்கள் பேசிக் கொள்கின்றனர்.

மேலதிக தகவல்களுக்கு, டச்சு பத்திரிகையில் வந்த முழுமையான கட்டுரை: Italië: wel steun van Russen, China en Cuba, nauwelijks van Europa

*****


உங்களிடம் ஒரேயொரு வேண்டுகோள்! 
மருத்துவத்தில் தனியார்மயத்தை ஆதரிக்காதீர்கள்!!

ஓர் ஐரோப்பிய ஒன்றிய நாடான இத்தாலியில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமான போதிலும், எந்தவொரு ஐரோப்பிய நாடும் இத்தாலிக்கு உதவ முன்வரவில்லை. இந்த நிலையில் கியூப மருத்துவர்கள் வந்ததை உலகமே பாராட்டிக் கொண்டிருக்கும் பொழுது மேற்குலக- முதலாளித்துவ விசுவாசிகளுக்கு மனம் பொறுக்கவில்லை. அவர்கள் தமது எஜமான விசுவாசத்தை காட்டுவதற்காக கியூப எதிர்ப்புப் பதிவுகளை வெளியிட்டு தம்மைப் போன்ற பிற விசுவாசிகளின் மனங்களை குளிர வைக்கின்றனர்.

அந்த வகையில் ஜெர்மனியில் வாழும் Raj Siva என்ற எழுத்தாளர் (https://www.facebook.com/rajsivalingam) பேஸ்புக்கில் எழுதிய ஒரு பதிவு பல உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது.

அவரது பதிவில் இருந்து: 
//உங்களிடம் ஒரேயொரு வேண்டுகோள்! கியூபா, சீனா போன்ற நாடுகள் இத்தாலிக்கும் ஏன் ஏனைய நாடுகளுக்கும் கூட முடிந்தளவுக்கு உதவுகின்றனதான். மனிதாபிமானம் என்பது உலகப் பொது மறை. அதை யாரும் இன்னும் மறக்கவில்லை.//

ஐரோப்பாவில், குறிப்பாக இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதும் முதலில் காணாமல்போனது மனிதாபிமானம் தான். இத்தாலி, கியூபா போன்றதொரு மூன்றாமுலக ஏழை நாடு அல்ல. பணக்கார முதலாமுலகத்தை சேர்ந்த, அதிகளவு தொழிற்துறை வளர்ச்சி அடைந்த நாடு. அத்தகைய நாட்டில், கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் மரணமடைய வேண்டிய காரணம் என்ன?

முதலில் இந்நாடுகளில் மருத்துவ வசதி தனியார்துறையிடம் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. அதன் அர்த்தம் காசு கொடுத்தால் தான் மருத்துவம் கிடைக்கும். இல்லையென்றால் கிடந்தது சாக வேண்டியது தான். ஏராளமான கொரொனோ நோயாளிகள் அம்புலன்ஸ் வராமலே வீடுகளில் கிடந்து வருந்தி இறந்திருக்கிறார்கள். தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததும் தேசத்தின் மருத்துவக் கட்டுமானம் முழுவதும் வீழ்ச்சி அடைந்தது. அத்தகைய நிலைமையில் தான் கியூப மருத்துவர் குழு வருகை தந்தது.

இந்த நேரத்தில் கியூபாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளையும் நினைவுகூர வேண்டும். முன்பு அமெரிக்கா கொண்டு வந்த பொருளாதாரத் தடைகளை இத்தாலியும் ஆதரித்தது. இன்று வரையில் அந்தத் தடைகள் நீக்கப்படவில்லை. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்பது திருக்குறள். ஓர் ஏழை நாடான கியூபா பணக்கார நாடான இத்தாலி தனக்கு செய்த துரோகத்தை மன்னித்து ஆபத்துக் காலத்தில் உதவ வந்தது மெச்சத் தக்கது. அதுவும் வேறெந்த ஐரோப்பிய நாடும் உதவாத நிலையில் தான் வந்துள்ளது.

முகநூலில் இந்தப் பதிவை இட்டவரிடம் ஐரோப்பிய நாடுகள் ஏன் உதவவில்லை என்ற கேள்வி எழுப்பியதும், ஜெர்மனி சில நோயாளிகளை அழைத்து வந்து சிகிச்சை அளிப்பதாக ஓர் ஆதாரத்தை காட்டினார். இத்தாலி சென்று கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடுவதும், ஒரு சில நோயாளிகளை அழைத்து சிகிச்சை அளிப்பதும் ஒரே விடயம் அல்ல. இத்தாலியிலும் முன்னர் குறிப்பிட்ட ஓர் இடத்தில் (வடக்கு இத்தாலி) தான் தொற்று காணப்பட்டது. அங்குள்ள மருத்துவ மனைகளின் வேலைப்பளு அதிகரித்ததும், நோயாளிகள் இத்தாலியின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லப் பட்டனர். அதே மாதிரி தான் ஜெர்மனிக்கும் அனுப்பப் பட்டனர்.

இதை சுட்டிக் காட்டியதும், தற்போது எல்லா ஐரோப்பிய நாடுகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளதாகவும், "அவர்களது அவஸ்தையை புரிந்து கொள்ளுமாறும்" கெஞ்சினார். சரி, அப்படிப் பார்த்தால் கியூபாவில் யாருக்கும் இந்த நோய் தொற்றவிலையா? (தகவலுக்காக: கியூபாவில் இதுவரை எண்பது பேருக்கு நோய் தொற்றி உள்ளது. அதில் இரண்டு பேர் மரணம்.)

இது ஒரு உலகளாவிய தொற்று நோய் என்று WHO கூட அறிவித்திருந்ததே? மேற்கு ஐரோப்பிய பணக்கார நாடுகள் தம்மிடம் நிறையப் பணம் இருந்தும் உதவ முன்வரவில்லை. அதே நேரம் ஓர் ஏழை நாடான கியூபா உதவ முன்வந்தது. எது ஞாலத்தில் பெரிது? பொதுவாக பணக்காரர்கள் தம்மிடம் உள்ள செல்வத்தை பகிர்ந்து கொள்ள முன்வர மாட்டார்கள். ஏழைகள் தம்மிடம் இருப்பதை பங்கிட்டு வாழ்வார்கள்.

//ஐரோப்பிய நாடுகள் ஒன்று சேர்ந்து, தங்கள் ஒனறியத்திலுள்ள ஒவ்வொரு நாட்டுக்கும், ஒன்றிய உள் கட்டமைப்பின் மூலம் உதவிகளைச் செய்ய ஆயத்தமாகிறார்கள். சில உதவிகளைச் செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள். ட்ரில்லியன் யூரோக்களில் பொருளாதார உதவிப் பொதிகளை ஆயத்தம் செய்துவிட்டன.//

இது முற்றிலும் தவறான தகவல். பெருமளவில் கொரோனா தொற்றுதலால் பாதிக்கப்பட்ட தெற்கு ஐரோப்பிய நாடுகள், இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் அமெரிக்கா கொண்டு வந்த மார்ஷல் உதவி போன்றதொரு திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருமாறு கோரின. அதற்காக அவசரகால நிதியத்தில் உள்ள பணத்தை செலவிடுமாறு கோரின. ஆனால், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகள் அதற்கு மறுத்து விட்டன. இது தொடர்பான சர்ச்சை இன்னமும் நீடிக்கிறது.

மேலும் "ட்ரில்லியன் யூரோக்கள் தொகை"(?) ஒதுக்குவது கூட கொரோனாவால் பாதிக்கப் பட்ட மக்களுக்கான உதவி அல்ல. அது இந்த நெருக்கடியால் வருமானம் இழந்த வணிக நிறுவனங்களுக்கான மீட்பு நிதி. இதை ஏற்கனவே ஒவ்வொரு நாடும் அறிவித்து விட்டன. ஆனால் ஒன்றிணைந்த ஐரோப்பிய ஒன்றிய உதவி பற்றி இன்னமும் எந்தக் கதையும் இல்லை. ஆகவே "பொருளாதார உதவிப் பொதிகளை ஆயத்தம் செய்துவிட்டன" என்பது இதைப் பதிவிட்டவரின் எதிர்பார்ப்பு மட்டுமே. உண்மை அல்ல.

//அது தவிர்ந்து, G20 நாடுகள் ஒன்றிணைந்து 5 பில்லியன் டாலர்களை உடனடிக் கொரோணா உதவிக்கும், இனி வரப்போகும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடுகளை மீட்பதற்கு, 5 முதல் 8 ட்ரில்லியன் டாலர் வரை ஒதுக்குவதெனவும் தீர்மானித்துள்ளன.//

உண்மையில் இது பற்றி G20 நாடுகள் எதையும் அறிவிக்கவில்லை. இது முழுக்க முழுக்க பொய்யான தகவல். G20 நாடுகளில் இந்தியா, பிரேசில் போன்ற வளர்ந்து வரும் நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்தியா தனது நாட்டையே மீட்க முடியாத ஏழை நாடு. இதற்குள் ஐரோப்பாவுக்கு நிதி வழங்கும் என எதிர்பார்ப்பது மடமைத்தனம். இப்படி ஒரு செய்தியை கேள்விப்பட்டாலே இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் துள்ளிக் குதிக்கும். முதலில் பணக்கார நாடுகள் உதவட்டும், அதற்குப் பிறகு பார்க்கலாம் என்று தான் கூறுவார்கள்.

//சீனாவில் மட்டும் கொரோணா இருந்தபோது, எத்தனையோ நாடுகள் அவர்களுக்கு மருத்துவ சாதனங்களை அனுப்பியுள்ளனர். கிருமி நீக்கிப் பொருட்களில் கொடுத்து உதவினர். இதுவெல்லாம் நாடுகளுக்கிடையில் நடக்கும் சாதாரண செயல்கள்தான்.//

உண்மையில் சீனாவில் மட்டும் கொரோனா இருந்த நேரம் பிற நாடுகள் அது தமது பிரச்சினை அல்ல என்று ஒதுங்கி இருந்தன. அமெரிக்கா ஒரு சில மருத்துவ சாதனங்களை அனுப்பியது உண்மை தான். ஆனால் அந்த உதவி மிக மிக சொற்பமானது. மேலும் எந்தவொரு நாடும் மருத்துவர் குழுவை அனுப்பவில்லை.

கியூப விஞ்ஞானிகள் சீனாவுக்கு சென்று கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் பங்குபற்றினார்கள். அந்த ஆய்வின் விளைவாக கியூபாவில் தயாரிக்கப் பட்ட தடுப்பு மருந்தினை கியூப மருத்துவர்கள் பல நாடுகளுக்கும் கொண்டு சென்றுள்ளனர். அதுவும் இலவசமாக கொடுக்கப் படுகிறது. பணக்கார நாடுகள் உதவ முன்வராமல் பின்னடிப்பதற்கு இதுவும் ஒரு காரணம். அதாவது, அவர்களிடம் தடுப்பு மருந்து இருந்தாலும் சந்தைக்கு கொண்டு வந்து அதிக விலைக்கு விற்கப் பார்ப்பார்களே தவிர, ஒரு நாளும் இலவசமாக கொடுக்க மாட்டார்கள்.

//இது இப்படியிருக்க, “கியூபா, சீனா போன்ற கம்யூனிச நாடுகள் மட்டும்தான் கடவுளாக உதவிக்கு வந்தன. முதலாளித்துவ நாடுகள் உதவி செய்யாமல் தங்கள் புத்தியைக் காட்டிவிட்டன. ஜனநாயக நாடுகளுக்கு மனிதாபிமானமே செத்துப் போய்விட்டது. கியூபாதான் அனைவரையும் காப்பாற்றுகிறது” என்று சிலர் கிளப்பியிருக்கிறார்கள்.//

இது ஒன்றும் இப்போது தான் "கிளம்பிய" கதை அல்ல. கடந்த நூறு வருடங்களாக உலகில் அனைவருக்கும் தெரிந்த விடயம். கியூப மருத்துவர் குழு வேறொரு நாட்டுக்கு செல்வது இதுவே முதல் தடவை அல்ல. ஏற்கனவே பல்வேறு ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் பணி புரிகிறார்கள். எதற்காக அந்த நாடுகளில் கியூப மருத்துவர்களின் உதவி தேவைப் படுகிறது என்ற கேள்வி இங்கே கேட்கப் பட வேண்டும்.

இன்று எல்லா நாடுகளிலும் மருத்துவம் தனியார் துறையிடம் உள்ளது. அதன் அர்த்தம் பண வசதி உள்ளவர்கள் மாத்திரம் மருத்துவம் பார்க்கலாம். அதனால் ஏழைகளுக்கு மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை. அந்தக் குறையை போக்குவதற்கு தான் கியூப மருத்துவர்களை தருவிக்கிறார்கள். தென் ஆப்பிரிக்கா, அங்கோலா, பிரேசில், கயானா போன்ற பல நாடுகளில் கியூப மருத்துவர்கள் கடமையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

முதலாளித்துவ நாடுகள் இலாபம் கருதாமல் எதையும் செய்வதில்லை. இலங்கை, இந்தியாவுக்கு அபிவிருத்திக்கான கடன் கொடுப்பது கூட அதனால் கிடைக்கும் வட்டித் தொகை காரணமாகத் தான். இந்த இடத்தில் சீனா கூட ஒரு முதலாளித்துவ நாடு, கம்யூனிச நாடு அல்ல என்பது இந்த பதிவருக்கு தெரியாதது வருத்தத்திற்கு உரியது.

இருப்பினும் சீன அரசியல் அமைப்பு வித்தியாசமானது. கிட்டத்தட்ட ஸ்கண்டிநேவிய நாடுகளைப் போன்று மக்கள் நலன் காக்கும் அமைப்பைக் கொண்டுள்ளது. மிக அத்தியாவசியமான மருத்துவத் துறையை அரசே கட்டுப்படுத்துகிறது.

அதனால் தான் வூஹானில் கொரோனா தொற்று ஏற்பட்ட நேரம் பதினைந்து நாட்களில் ஒரு தற்காலிக மருத்துவமனை அமைக்கப் பட்டது. மேலும் இன்றைக்கு ஐரோப்பிய நாடுகள் கூட சீனாவின் தடுப்பு முறையை தான் பின்பற்றுகின்றன. அதை அவர்கள் வெளிப்படையாகவே சொல்லிக் கொள்கிறார்கள்.

//இது பிரிவினையை இப்போது விளைவிக்கும் ஒன்று. இந்தச் செயல் மனவருத்தத்தைத் தருகிறது. ஏதோ இன்று உலகத்தையே இரட்சிக்க வந்திருக்கும் தேவதைகள் சீனாவும், கியூபாவும்தான் என்னும் போக்கில் புளகாங்கிதம் அடைகிறார்கள்.//

இதிலே என்ன "பிரிவினை" வந்து விட்டது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்! இவரது பிரச்சினை முழுக்க முழுக்க மருத்துவம் தனியார்துறையின் கைகளை விட்டுப் போய்விடும் என்பது தான். ஏற்கனவே ஸ்பெயின் அனைத்து மருத்துவமனைகளையும் தேசியமயமாக்கி விட்டது. அது பிற நாடுகளிலும் நடந்து விடுமோ என்பது தான் இவரது அச்சம்.

அத்தியாவசிய சேவைகளில் ஒன்றான மருத்துவம் அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகின்றது. அப்படி நடந்தால் மருத்துவமனைகளை நடத்தும் மாபியாக்களின் வருமானம் நின்று விடுமே என்பது தான் இவரது கவலை போலிருக்கிறது. அதைத் தான் "பிரிவினை" என்கிறார். அதாவது முதலாளிகள் நலன் சார்ந்த அரசியலுக்கும், மக்கள் நலன் சார்ந்த அரசியலுக்கும் இடையிலான வர்க்கப் பிரிவினை பற்றிப் பேசுகிறார்.

//இங்கே நான் சீனாவையும், கியூபாவையும் குறைத்துக் கூறவேயில்லை. அவர்களே நினைக்காததை நாம் பிரிவினையாக உருவாக்குகிறோம்.//

அது தானே? அவர் எப்படிக் குறைத்துக் கூறுவார்? சீனாவிலும், கியூபாவிலும் மருத்துவம் தனியார் துறைக்கு திறந்து விடப் பட வேண்டும் என்பது தானே இவர் போன்றவர்களின் பேரவா? உலக நாடுகள் முழுவதும் மருத்துவத்தை தேசியமயமாக்க வேண்டும் என்று கூற முன்வருவாரா? மருத்துவம் மக்களுக்கானதா? அல்லது முதலாளிகளின் இலாப நோக்கிற்கானதா? அது தான் நாம் உருவாக்கும் "பிரிவினை".

இவர் மாதிரி பணக் கொழுப்பெடுத்த நடுத்தர வர்க்கத்தினருக்கு இலவச மருத்துவம் தேவையற்ற ஆணி தான். ஆனால் வசதியற்ற ஏழை மக்களுக்கு அது அத்தியாவசியம். நீங்கள் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள மறுத்தால், உங்களால் வெறுக்கப்படும் வர்க்கப் பிரிவினையை பற்றிப் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது.

//இப்போது உலகின் அனைத்து நாடுகளும், தங்கள் எல்லைகளைப் பூட்டியபடி, ஏனைய நாடுகளிலிருந்து தனியாகப் பிரிந்திருந்தாலும், தமக்குள்ளே ஒற்றுமையாக இந்தப் பொது எதிரியை விரட்டிதடிக்கவே முயன்று கொண்டிருக்கின்றன என்பதே மறுக்க முடியாத உண்மை.//

இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நடக்கும் சர்ச்சை குறித்தும், அவர்களுக்குள்ளே நிலவும் ஒற்றுமையின்மை குறித்தும் நான் கேள்வி எழுப்பியவுடன் "அவர்கள் படும் அவஸ்தையை புரிந்து கொள்ள வேண்டும்" என்று கெஞ்சினார். இதே பணக்கார நாடுகள் தானே தானே Red Cross, Medicin Sans Frontier போன்ற மருத்துவ தொண்டு நிறுவனங்களை வைத்திருக்கின்றன? அவற்றிற்கு பெருமளவு நிதி கொடுத்து ஆதரித்தன? இலங்கை போன்ற நாடுகளில் யுத்தம் நடந்த நேரம் கேட்காமலே வந்து உதவிய தொண்டு நிறுவனங்கள் இப்போது எங்கே போய் பதுங்கிக் கொண்டன?

//இதற்குள், அரசியல் இலாபம் கருதி இப்படிப் பேசுவது கடைந்தெடுத்த சுயநலமே!//

சுயநலம் என்பது முதலாளித்துவத்துடன் கூடிப் பிறந்த குணம். ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அவசர கால நிதியம் குறித்து சர்ச்சை எழுந்த நேரம் ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகள் சம்மதிக்க மறுத்தது ஏனோ? அவை தமது நலன் மட்டுமே பெரிதென நினைத்தன. நெதர்லாந்து தனது நாட்டை சேர்ந்த மீனவர்கள், விவசாயிகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய நிதி வழங்கி உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டது. இது சுயநலம் இல்லையா? பிற நாடுகள் அதை இரட்டை வேடம் என்று குற்றம் சாட்டின.

அது போகட்டும். இந்தப் பதிவை எழுதியவருக்கு எந்த அரசியல் இலாபமும், சுயநலமும் இல்லையா? அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்குவதை விட, மருத்துவத்துறையில் ஆதிக்கம் செலுத்தும் மாபியாக்களின் இலாபம் முக்கியம் என்று கருதினால் அது தான் கடைந்தெடுத்த சுயநலம்.

No comments: