Showing posts with label கம்யூனிச அகதிகள். Show all posts
Showing posts with label கம்யூனிச அகதிகள். Show all posts

Saturday, May 17, 2014

தமிழரை கியூபாவுக்கு அனுப்பி விடத் துடிக்கும் மேட்டுக்குடி அறிவுஜீவிகள்

"சோஷலிசம் சிறந்தது என்று பேசும் தமிழர் எல்லோரும், கியூபாவுக்கு புலம்பெயர்ந்து சென்று, அங்கே அகதித் தஞ்சம் கோருமாறு.... " ஒரு அறிவுஜீவி நண்பர், ஆலோசனை வழங்கி இருக்கிறார். அவரது ஆலோசனைக்கு முதற்கண் நன்றிகள்.

ஈழத் தமிழர்கள் யாராவது தமிழீழத்திற்கு ஆதரவாக பேசினால், அவர்களை தமிழ்நாட்டுக்கு போகுமாறு சொல்வதைப் போன்றுள்ளது மேற்படி நபரின் கூற்று. சிங்கள இனவாதிகளும், அதைத் தானே காலங்காலமாக ஈழத் தமிழர்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்?

 ஈழத்தில் வாழும் உழைக்கும் வர்க்க தமிழர்கள் கம்யூனிசம், சோஷலிசம் பேசுகிறார்கள் என்பதற்காக, அவர்களை எல்லாம் பிடித்து கியூபாவுக்கு நாடு கடத்தி விட்டால், அப்புறம் அங்குள்ள வேலைகளை யார் செய்வார்களோ தெரியவில்லை. மேட்டுக்குடியினரிடம் பணம் இருப்பதால், பங்களாதேஷ்ஷில் இருந்து தொழிலாளர்களை இறக்குமதி செய்வார்களோ தெரியாது. சரி, அது போகட்டும். அது அவர்களது பிரச்சினை.

தற்போது, என்னிடம் பல அறிவுஜீவிகளும், "கியூபாவுக்கு போ!" என்று சொல்லி இருப்பதால், கியூபாவில் அகதித் தஞ்சம் கேட்பது எப்படி என்று விசாரித்துப் பார்த்தேன். கியூபாவில் எப்படிப்பட்ட அகதிகளை அனுமதிப்பார்கள்? தஞ்சம் கோரும் அகதிகள் என்ன காரணத்தை சொன்னால் அங்கீகரிப்பார்கள்? இது பற்றி எல்லாம் விசாரித்துப் பார்த்தேன்.

கியூபா இன்னமும் ஒரு வறிய நாடு தான். இருப்பினும், பல தசாப்த காலமாக கியூபாவில் பல வெளிநாட்டு அகதிகளுக்கு புகலிடம் வழங்கி இருக்கிறார்கள். ஒரு காலத்தில், சோஷலிசப் புரட்சிக்கான கெரில்லாப் போர் நடக்காத லத்தீன் அமெரிக்க நாடு எதுவும் இருக்கவில்லை. பிற லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஆயுதப் போராட்டம் நடத்திய இயக்கங்களின் தலைவர்கள், போராளிகள், ஆதரவாளர்கள் பலருக்கு கியூபாவில் அரசியல் தஞ்சம் வழங்கப் பட்டுள்ளது.

எல் சல்வடோர், பிரேசில் ஆகிய நாடுகளில் ஏழை மக்களின் விடுதலைக்காக, மார்க்சியத்தையும், கிறிஸ்தவத்தையும் கலந்து போதித்து வந்த கத்தோலிக்க பாதிரியார்கள் இருந்தனர். "விடுதலை இறையியல்" என்ற சித்தாந்தத்தின் கீழ், வர்க்கப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய கிறிஸ்தவ பாதிரியார்கள், அந்த நாடுகளில் இருந்த வலதுசாரி இராணுவ சர்வாதிகாரிகளினால் வேட்டையாடிக் கொல்லப் பட்டனர். அதனால், நிறைய மார்க்சிய- கத்தோலிக்க பாதிரியார்கள் கியூபாவில் புகலிடம் கோரியுள்ளனர்.

சிலியில் சி.ஐ.ஏ. ஆதரவுடன் திடீர் சதிப்புரட்சி நடந்தது. இராணுவ ஆட்சியாளர்கள், வீடு வீடாகச் சென்று, நாட்டில் இருந்த கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகளை எல்லாம் கைது செய்து கொண்டு வந்து சிறையில் அடைத்தார்கள். ஆயிரக் கணக்கானோரை சித்திரவதை செய்து, கொலை செய்தனர். அதனால், சிலியில் இருந்து தனியாகவும், குடும்பமாகவும் தப்பியோடிய, ஆயிரக் கணக்கான இடதுசாரிகளுக்கு, கியூபாவில் அகதித் தஞ்சம் வழங்கப் பட்டது. கியூப அரசு, அவர்களுக்கான புதிய வீடுகளை கட்டிக் கொடுத்து, வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தது. 

லத்தீன் அமெரிக்க நாட்டு அகதிகள் மட்டுமல்ல, கணிசமான அளவு அமெரிக்க அகதிகளும் கியூபாவில் வாழ்கின்றனர். அமெரிக்காவில் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக ஆயுதமேந்தி இருந்த, "கருஞ் சிறுத்தைகள்" அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் பலர், கியூபாவில் அரசியல் தஞ்சம் கோரி, இன்னமும் அங்கே வாழ்கின்றனர்.

எனக்குக் கிடைத்த தகவல்களின் படி, கியூபாவில் பின்வரும் காரணங்களுக்காக ஒருவருக்கு அகதித் தஞ்சம் வழங்கப் படுகின்றது: அகதியாக புலம்பெயர்ந்தவரின் சொந்த நாட்டில், 
  1. வர்க்கப் போர் நடந்து கொண்டிருக்க வேண்டும். 
  2. ஒரு ஆயுதபாணி விடுதலை இயக்கம், அந்த நாட்டில் உள்ள முதலாளித்துவ அரசை கவிழ்த்து அங்கே சோஷலிச அரசை உருவாக்குவதற்காக போராடிக் கொண்டிருக்க வேண்டும். 
  3. ஒரு வலதுசாரி சர்வாதிகார ஆட்சியாளர், கம்யூனிச அல்லது இடதுசாரி சிந்தனையாளர்களை வேட்டையாடி கொன்று, சித்திரவதை செய்திருக்க வேண்டும்.


மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் உள்ள நாடுகளில் இருந்து, புலம்பெயர்ந்து வரும் அகதிகளுக்கு கியூபாவில் அரசியல் தஞ்சம் கொடுப்பார்களாம். 

ஆகவே, அறிவுஜீவி நண்பர்கள் என்னை கியூபாவுக்கு போகுமாறு ஆலோசனை வழங்குவதற்கு முன்னர், கியூபாவில் அகதி தஞ்சம் கோருவதற்கு தேவையான பின்வரும் ஆதாரங்களை திரட்டித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்: 
  •  இலங்கையில் இன முரண்பாடு எதுவும் இல்லை, அங்கே நடந்தது ஒரு வர்க்கப்போர். 
  •  ஆயுதமேந்திப் போராடிய விடுதலைப் புலிகள் ஒரு கம்யூனிசப் புரட்சி இயக்கம். 
  •  அவர்கள் அமைக்க விரும்பிய தமிழீழம் சோஷலிசப் பொருளாதாரத்தை கொண்டிருக்கும். 
  • இலங்கையில் மார்க்சியம், கம்யூனிசம், சோஷலிசம் பேசுவது தடை செய்யப் பட்டுள்ளது. 
  • ஸ்ரீலங்கா இராணுவம், கம்யூனிச, சோஷலிச நம்பிக்கையாளர்களை வேட்டையாடிக் கொன்று குவித்து வருகின்றது.


ஓர் அகதி, உலகில் எந்த நாட்டில் தஞ்சம் கோரினாலும், என்ன பிரச்சினை காரணமாக தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்தார் என்பதற்கான காரணத்தைக் கூற வேண்டுமென்பது, உங்களுக்குத் தெரியாததல்ல. ஆகவே, காலதாமதம் செய்யாமல், மேற்குறிப்பிட்ட ஆதாரங்களை கொண்டு வந்து வந்து சமர்ப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். 


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Monday, May 03, 2010

சர்வதேச கம்யூனிச அகதிகள்

(சதுரங்க அரசியலில் சர்வதேச அகதிகள் - தொடரின் நான்காம் பகுதி)

மேற்குலகில் வாழும் அல்லது மேற்குலக சிந்தனை கொண்டவர்களுக்கு, முன்னாள் கம்யூனிச நாடுகளிலும் அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கப்பட்ட விஷயம் தெரியாது. அவை பெரும்பாலும் கம்யூனிச அரசியல் சார்ந்த அகதிகளையே ஏற்றுக்கொண்டு வந்தன. சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானில் போரினால் பாதிக்கப்பட்ட உஸ்பெக்கிய, தஜிக்கிய அகதிகள் அனைவருக்கும் தற்காலிக தங்குமிட வசதி செய்து கொடுத்திருந்தது. ஆப்கானிஸ்தானும் சோஷலிச நாடாக இருந்த காலத்தில், சோவியத் யூனியனில் உயர் கல்வி கற்கும் வாய்ப்பு தாராளமாக கிடைத்தது. மாணவர்கள் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டனர். இதனால் படித்த நடுத்தர வர்க்க இளைஞர்கள் பலர், சோவியத் யூனியனுக்கு கல்வி கற்க சென்று, பின்னர் உள்நாட்டுப் பெண்களை திருமணம் செய்து அங்கேயே தங்கி விட்டிருந்தனர். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, இவர்களில் பலர் நெதர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரினார்கள்.

சோவியத் யூனியனும், பிற சோஷலிச நாடுகளும் அகதிகளை அங்கீகரிக்கும் ஐ.நா. ஆணையில் கைச்சாத்திட்டிருந்தன. இருப்பினும் கிரீஸ், சிலி போன்ற குறிப்பிட்ட சில நாடுகளை சேர்ந்தவர்களுக்கே தஞ்சம் வழங்கப்பட்டன. கிரீஸ் அகதிகளின் வருகையுடன் கம்யூனிச நாடுகளின் அகதி அரசியல் ஆரம்பமாகியது. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த நேரம், கிரீசின் பெரும்பாலான பகுதிகளை கம்யூனிச போராளிகள் விடுவித்திருந்தனர். அப்போது பிரிட்டனும், சோவியத் யூனியனும் ஒரே அணியில் இருந்ததால். கிரீசை விடுவிக்க பிரிட்டிஷ் படைகள் சென்றன. இருப்பினும் சில வருடங்களுக்குப் பின்னர் கிரேக்க கம்யூனிஸ்ட்களுக்கும், பிரிட்டிஷாருக்குமிடையில் போர் மூண்டது. பிரிட்டனை பகைத்துக் கொள்ள விரும்பாமல், ஸ்டாலின் கம்யூனிஸ்ட் போராளிகளுக்கு உதவி வழங்க மறுத்து விட்டார்.

கம்யூனிஸ்ட்களால் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. போராட்டத்தை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. பிரிட்டிஷ் மற்றும் தேசியவாதிகளின் படையினரால் பழிவாங்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக, நாட்டை விட்டு ஓட வேண்டிய நிலைமை. கம்யூனிஸ்ட் தலைவர்கள், போராளிகள், அவர்களது குடும்பங்கள் அனைவரும் சுற்றி இருந்த சோஷலிச நாடுகளில் அடைக்கலம் கோரினர். கிரேக்க அகதிகள் அனைவரும் அங்கீகரிக்கப்பட்டு, அரசே முன்னின்று வீடுகளையும் வழங்கியது. செக்கொஸ்லோவாகியா போன்ற நாடுகளில் இப்போதும் கணிசமான அளவு முன்னாள் கிரேக்க அகதிகள் வாழ்ந்து வருகின்றனர். அந்த நாடுகளின் சொந்த மக்களை விட, அங்கீகரிக்கப்பட்ட அகதிகள் இன்றும் சோஷலிசத்திற்கு விசுவாசமாக இருப்பதைக் காணலாம். மேற்குலகிலும் இதே போன்ற நிலைமை உள்ளது. அகதிகளாக குடியேறியவர்கள் மேற்கத்திய நாகரீகத்தை அளவுக்கதிகமாகவே பின்பற்றுவதைக் காணலாம்.

ஒரு மூன்றாமுலக வறிய நாடான கியூபா கூட பன்னாட்டு அகதிகளை ஏற்றுக்கொண்டுள்ளது. சிலி போன்ற தென் அமெரிக்கர்களுக்கும், அல்ஜீரியா, அங்கோலா, நமீபியா போன்ற பல ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கும் அடைக்கலம் வழங்கியது. ஒரு முறை கியூபா கப்பல்கள், அல்ஜீரிய தேசிய விடுதலைப் போராளிகளுக்கு ஆயுதங்களை வழங்கி விட்டு, அங்கிருந்து போரினால் பாதிக்கப்பட்ட அனாதைப் பிள்ளைகளை ஏற்றிவந்தன. ஒரு காலத்தில் அமெரிக்காவை சேர்ந்த கறுப்பின மாவோயிச இயக்கமான Black Panthers உறுப்பினர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவருக்கும் வீடு, வேலைவாய்ப்பு, கல்வி போன்ற அடிப்படை வசதிகளை வழங்கி, முழுமையான கியூப பிரசைகளாக உள்வாங்கப்பட்டு விட்டனர். அகதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள், சில நேரம் கியூப மக்களையும் பொறாமை கொள்ள வைத்தன.

(தொடரும்)

3.அங்கீகரிக்கப்பட்ட பனிப்போர் அகதிகள்
2.ஐரோப்பியர் அகதிகளாக அலைந்த காலங்கள்
1.சதுரங்க அரசியலில் சர்வதேச அகதிகள்