Friday, March 20, 2020

கொரோனாவிடம் இருந்து பாதுகாக்க பங்கருக்குள் பதுங்கும் பணக்காரர்கள்


அமெரிக்கா, பிரிட்டனில் வாழும் அதி பணக்காரர்கள் கொரோனா தொற்று நோயில் இருந்து பாதுகாப்பதற்காக பங்கருக்குள் பதுங்க தயாராகிறார்கள். இதற்காக முன்பு இராணுவம் பயன்படுத்தி கைவிட்ட பங்கர்களை வாடகைக்கு எடுக்கிறார்கள். சில பணக்காரர்கள் தமது குடும்பத்தினர் தங்குவதற்கு அனைத்து வசதிகளையும் கொண்ட பங்கர்களை புதிதாக கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் உலக நாடுகளில் எங்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பதை தேடிக் கண்டுபிடித்து அந்த நாட்டில், அல்லது பிரதேசத்தில் பங்கர் கட்டுகிறார்கள். அந்த இடங்களுக்கு செல்வதற்கு தனியார் ஜெட் விமானங்களை தயாராக வைத்திருக்கிறார்கள்.


மேலும் தற்போது மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிவதால், பணக்காரர்கள் அங்கு செல்வதில்லை. அதற்குப் பதிலாக மருத்துவர்கள், தாதியருக்கு நிறையப் பணம் கொடுத்து தம்மோடு வைத்துக் கொள்கிறார்கள். அவர்களை பங்கர்களுக்கும் கூட்டிச் செல்ல தயாராக இருக்கிறார்கள். இந்தத் தகவல்கள் யாவும் CNN, Guardian போன்ற அமெரிக்க, பிரிட்டிஷ் ஊடகங்களில் வந்துள்ளன.

பணக்கார்கள் ஓர் ஊழிக்காலத்திற்கு தயாராகும் அதே நேரத்தில் ஏழைகள் கொரோனா வந்து சாகட்டும் என்று கைவிடப் படுகின்றனர். இன்று பல நாடுகளில் இலவச மருத்துவ வசதி கிடைப்பதில்லை. அதனால் பண வசதியில்லாத ஏழைகள் தான் பாதிக்கப் படுகின்றனர். எத்தனை ஆயிரம் ஏழைகள் இறந்தாலும் பரவாயில்லை. ஒரு சில பணக்கார்கள் மட்டும் உயிர்பிழைக்க வேண்டும் என்பது தான் முதலாளித்துவம்.

மறு பக்கம் இந்த பேரிடர் காலத்தில் சோஷலிசம் என்ன செய்கிறது?
ஸ்பெயின் நாட்டில், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக அரசு அத்தனை மருத்துவமனைகளையும் தேசியமயமாக்கியுள்ளது.(BBC) ஏழைகளுக்கும் இலவசமாக மருத்துவ உதவிகள் கிடைப்பதற்காக மருத்துவத்துறையை தேசியமயமாக்க வேண்டும் என்பது சோஷலிசத்தின் கோரிக்கைகளில் ஒன்று. அப்போதெல்லாம் அதனை சுதந்திர சந்தையின் பெயரால் நிராகரித்து வந்த முதலாளித்துவவாதிகள் (இங்கு ஸ்பானிஷ் அரசு), இன்று தாமே முன்வந்து மருத்துவமனைகளை தேசியமயமாக்கியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினரான இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். அது முன்பு சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கையை மிஞ்சி விட்டது. அப்படி இருந்தும் இதுவரை எந்தவொரு ஐரோப்பிய நாடும் இத்தாலிக்கு உதவ முன்வரவில்லை! எல்லா நாடுகளிலும் தத்தமது தேச எல்லைகளை மூடுவதில் மட்டுமே கவனமாக இருக்கின்றன.

ஏற்கனவே கொரோனா தொற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு மீண்டெழுந்த சீனா, இத்தாலிக்கு உதவுவதற்கு மருத்துவக் குழுவொன்றை அனுப்பியது. அத்துடன் மருந்துகள், பாதுகாப்புக் கவசங்கள், பரிசோதனைக் கருவிகளையும் அனுப்பி உதவியது.

அதே நேரம் கியூபாவும் மருத்துவர்களின் குழுவொன்றை இத்தாலிக்கு அனுப்பியது. ஏற்கனவே பேரிடரால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கெல்லாம் கியூப மருத்துவர்கள் அனுப்பப் படுவது தெரிந்த விடயம். அவை பெரும்பாலும் மூன்றமுலக நாடுகள். ஆனால், ஒரு மேற்கு ஐரோப்பிய நாட்டுக்கு கியூப மருத்துவர்கள் வந்துள்ளமை இதுவே முதல் தடவை. இத்தனைக்கும் இத்தாலி, மற்றும் பல மேற்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவுடன் சேர்ந்து கியூபா மீது பொருளாதாரத் தடை விதித்திருந்தன.

கொரோனாவை குணப்படுத்துவதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை என்ற போதிலும், கியூபா சில மருந்துகளை தயாரித்துள்ளது. பல லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அந்த மருந்துகள் இலவசமாக வழங்கப் பட்டுள்ளன. பிரேசிலை ஆளும் தீவிர வலதுசாரி ஜனாதிபதி போல்சனாரோ முன்பொரு தடவை கியூபாவுடன் முரண்பட்டு தன்நாட்டில் சேவையில் ஈடுபட்டிருந்த கியூப மருத்துவர்களை வெளியேற்றி இருந்தார். தற்போது அவரே மண்டியிட்டு கியூப மருத்துவர்கள் மீண்டும் தன் நாட்டிற்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.

இதற்கிடையே இன்னொரு சம்பவமும் கியூபாவின் மனிதாபிமானத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. கரீபியன் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த, கொரோனா பாதித்த சுமார் 600 பிரிட்டீஷ் பயணிகளை ஏற்றி வந்த கப்பலை, அனைத்து நாடுகளும் திருப்பி திருப்பி அனுப்பின. பிரிட்டிஷாரின் "தொப்புள்கொடி உறவுகளான" அமெரிக்கர்கள் கூட அந்தக் கப்பலை உள்ளே விட மறுத்து விட்டனர். இறுதியில் கியூபா மட்டும் கப்பலில் இருந்தவர்கள் தரையிறங்க அனுமதித்தது. கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளித்தது. கியூபாவின் சோஷலிசம் தான் மனிதாபிமானம் என்றால் என்னவென்று உலகிற்கு புரிய வைத்தது என்றால் அது மிகையாகாது.

4 comments:

Pathman said...

எல்லோரும் பகிர வேண்டிய கட்டுரை

Unknown said...

Nilamani kattukku vantha udan meendun Cubavai thittuvaargal

Murali said...

சிறப்பான கட்டுரை பொதுவாக இந்திய ஊடகங்களில் வெளிவராத வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விசயங்களை பதிவு செய்வதற்கு வாழ்த்துக்கள் 🍟 நன்றி 🙏

Kasthuri Rengan said...

பங்கர்கள் காப்பாற்றாது