Showing posts with label வைரஸ். Show all posts
Showing posts with label வைரஸ். Show all posts

Wednesday, April 01, 2020

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றியது எப்படி?


சீனாவில் இருந்து பல்லாயிரக் கணக்கான தூரத்தில் உள்ள இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று பரவியது எப்படி என்பது பலருக்கும் புரியாத புதிராக உள்ளது. இதனால் சிலர் தமது மனம்போன போக்கில் புனைந்த கட்டுக்கதைகளும், வதந்திகளும் சமூகவலைத்தளைங்களில் பரவுகின்றன. இந்த வீடியோவில், இத்தாலியில் கொரோனா தொற்று தொடங்கிய காலத்தில் நடந்தது என்ன? எந்த இடத்தில் தவறு செய்தார்கள்? என்பதைப் பற்றி ஆய்வு செய்திருக்கிறேன். நாம் மற்றவர்களை குற்றம் சாட்டிக் கொண்டிருக்காமல், அவர்களது அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்வோம்.

இனவாத முட்டாள்கள் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். இந்த கொரோனா தொற்று நோய் "சீனர்களால் வேண்டுமென்றே பரப்பப் படுகின்றது" என்று பலரும் வெகுளித்தனமாக நினைப்பது போன்று தான், இத்தாலியரும் ஆரம்பத்தில் நினைத்தார்கள். அது தான் அவர்கள் செய்த முட்டாள்தனம் என்பதை உணர்வதற்குள் காலம் கடந்து விட்டது. ஒரு மாதத்திற்குள் இத்தாலி முழுவதும் இலட்சக் கணக்கானோருக்கு நோய் தொற்றி விட்டது. இன்று வரை பத்தாயிரம் பேருக்கு மேல் இறந்துள்ளனர். ஆரம்பத்தில் இது குறித்த அறிகுறிகள் தென்பட்ட போதெல்லாம் மருத்துவர்கள் அதை சாதாரண சளிக்காய்ச்சல் என நினைத்து அலட்சியப் படுத்தினார்கள். அப்போதே கோவிட் டெஸ்ட் எடுத்திருந்தால் விழிப்படைந்து இழப்புகளை குறைத்திருக்கலாம்.

ஜனவரி மாத தொடக்கத்தில் சீனர்களை மட்டும் தனிமைப் படுத்தினால் போதும் நோய் பரவ விடாமல் தடுத்து விடலாம் என்று தான் இத்தாலியர்கள் நினைத்தார்கள். அரச மட்டத்திலும் இந்த மூட நம்பிக்கை காணப்பட்டது. ஐரோப்பாவில் முதல் தடவையாக இத்தாலி தான் சீனாவுடனான விமான சேவைகளை முற்றாகத் துண்டித்தது. வழமையாக வந்து கொண்டிருந்த சீன சுற்றுலாப் பயணிகளையும் விரட்டியடித்து விட்டனர். சீனர்களை மட்டும் தேடிக் கண்டுபிடித்து தனிமைப் படுத்தினார்கள். பொது மக்கள் சீன ரெஸ்டாரன்ட் செல்வதையும், சீனக் கடைகளில் பொருட்களை வாங்குவதையும் தவிர்த்துக் கொண்டனர்.

பொதுவாகவே இத்தாலியர்கள் தமது உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவர்கள். அங்கு ஏராளமான மருந்துக் கடைகள் உள்ளன. பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் சுகாதாரமாக வாழ்வது எப்படி என்று ஆலோசனைகள் வழங்கிக் கொண்டிருப்பார்கள். பெரும்பாலான இத்தாலியர்களை பொறுத்தவரையில் ஆசியர்கள், ஆப்பிரிக்கர்கள் தான் தொற்று நோய்க் காவிகள் என்ற இனவாத மனப்பான்மை உள்ளது. அது இந்த கொரோனா நெருக்கடியில் சீனர்களுக்கு எதிரான இனவாதமாக மாறியது.

இந்த குறுகிய இனவாத மனப்பான்மை தான் இத்தாலியர்கள் விட்ட மாபெரும் தவறு. வடக்கு இத்தாலியில், எங்கோ ஒரு மூலையில் உள்ள பிரதேசத்தில் தான் முதன்முதலாக கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்டது. அந்த இடங்களுக்கு எந்தவொரு சீனரும் சென்றிருக்க மாட்டார். முதன்முதலாக தொற்றுதலுக்குள்ளான ஒரு சாதாரண தொழிலாளியான 38 வயது இளைஞன், வாழ்க்கையில் ஒரு நாளும் சீனாவுக்கு சென்றிருக்கவில்லை. ஆரம்பத்தில் நோய் அறிகுறி காணப்பட்டாலும், அவரைப் பரிசோதித்த மருத்துவர் சாதாரண சளிக்காய்ச்சல் என்று அலட்சியப் படுத்தி இருந்தார். அதனால் அந்த இளைஞனும் எந்தக் கவலையும் இல்லாமல் மாரத்தன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டான். அத்துடன் உதைபந்தாட்டப் போட்டி ஒன்றையும் பார்வையிட சென்றிருக்கிறான். அப்போதே கொரோனா வைரஸ் பலருக்கு தொற்றி விட்டது.

பெப்ரவரி கடைசியில் விழித்தெழுந்த அரசு இயந்திரம் பலரை பரிசோதித்துப் பார்த்ததில் மூவாயிரம் பேருக்கு வைரஸ் தொற்றி இருந்தமை கண்டுபிடிக்கப் பட்டது. உடனே தொற்று காணப்பட்ட பிரதேசத்தை வெளியுலகில் இருந்து தனிமைப் படுத்தினார்கள். ஆனால் அதற்குள் நிலைமை கை மீறி விட்டது. ஏற்கனவே பிற பிரதேசங்களுக்கும் வைரஸ் தொற்றி விட்டிருந்தது. இந்த அச்சம் காரணமாக மிலான் பங்குச் சந்தை வர்த்தகம் சரிந்தது. அதைத் தொடர்ந்து பிற ஐரோப்பிய நாடுகளும் இத்தாலியுடனான தொடர்புகளை துண்டித்துக் கொண்டன.

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல். இறுதியில் எந்தவொரு ஐரோப்பிய நாடும் இத்தாலிக்கு உதவ முன்வராத நிலையில், சீனா தனது மருத்துவக் குழுவொன்றை பெருமளவு உபகரணங்களுடன் அனுப்பி வைத்தது. இந்த உதவிகள் யாவும் இத்தாலி தொலைக்காட்சியில் காட்டப்பட்டன. அதே நேரம் ஆபத்துக் காலத்தில் கைவிட்டு விட்ட ஐரோப்பிய நாடுகள் இத்தாலியரின் கண்டனத்திற்கு ஆளாகின. ஒரு கட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய கொடியை அகற்றி விட்டு சீனக் கொடியை பறக்க விடுமளவிற்கு வெறுப்புக் காணப்படுகின்றது. உண்மையான நண்பனை ஆபத்துக் காலத்தில் அறியலாம் என்பது ஓர் உலகப் பழமொழி.

Friday, March 20, 2020

கொரோனாவிடம் இருந்து பாதுகாக்க பங்கருக்குள் பதுங்கும் பணக்காரர்கள்


அமெரிக்கா, பிரிட்டனில் வாழும் அதி பணக்காரர்கள் கொரோனா தொற்று நோயில் இருந்து பாதுகாப்பதற்காக பங்கருக்குள் பதுங்க தயாராகிறார்கள். இதற்காக முன்பு இராணுவம் பயன்படுத்தி கைவிட்ட பங்கர்களை வாடகைக்கு எடுக்கிறார்கள். சில பணக்காரர்கள் தமது குடும்பத்தினர் தங்குவதற்கு அனைத்து வசதிகளையும் கொண்ட பங்கர்களை புதிதாக கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் உலக நாடுகளில் எங்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பதை தேடிக் கண்டுபிடித்து அந்த நாட்டில், அல்லது பிரதேசத்தில் பங்கர் கட்டுகிறார்கள். அந்த இடங்களுக்கு செல்வதற்கு தனியார் ஜெட் விமானங்களை தயாராக வைத்திருக்கிறார்கள்.


மேலும் தற்போது மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிவதால், பணக்காரர்கள் அங்கு செல்வதில்லை. அதற்குப் பதிலாக மருத்துவர்கள், தாதியருக்கு நிறையப் பணம் கொடுத்து தம்மோடு வைத்துக் கொள்கிறார்கள். அவர்களை பங்கர்களுக்கும் கூட்டிச் செல்ல தயாராக இருக்கிறார்கள். இந்தத் தகவல்கள் யாவும் CNN, Guardian போன்ற அமெரிக்க, பிரிட்டிஷ் ஊடகங்களில் வந்துள்ளன.

பணக்கார்கள் ஓர் ஊழிக்காலத்திற்கு தயாராகும் அதே நேரத்தில் ஏழைகள் கொரோனா வந்து சாகட்டும் என்று கைவிடப் படுகின்றனர். இன்று பல நாடுகளில் இலவச மருத்துவ வசதி கிடைப்பதில்லை. அதனால் பண வசதியில்லாத ஏழைகள் தான் பாதிக்கப் படுகின்றனர். எத்தனை ஆயிரம் ஏழைகள் இறந்தாலும் பரவாயில்லை. ஒரு சில பணக்கார்கள் மட்டும் உயிர்பிழைக்க வேண்டும் என்பது தான் முதலாளித்துவம்.

மறு பக்கம் இந்த பேரிடர் காலத்தில் சோஷலிசம் என்ன செய்கிறது?
ஸ்பெயின் நாட்டில், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக அரசு அத்தனை மருத்துவமனைகளையும் தேசியமயமாக்கியுள்ளது.(BBC) ஏழைகளுக்கும் இலவசமாக மருத்துவ உதவிகள் கிடைப்பதற்காக மருத்துவத்துறையை தேசியமயமாக்க வேண்டும் என்பது சோஷலிசத்தின் கோரிக்கைகளில் ஒன்று. அப்போதெல்லாம் அதனை சுதந்திர சந்தையின் பெயரால் நிராகரித்து வந்த முதலாளித்துவவாதிகள் (இங்கு ஸ்பானிஷ் அரசு), இன்று தாமே முன்வந்து மருத்துவமனைகளை தேசியமயமாக்கியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினரான இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். அது முன்பு சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கையை மிஞ்சி விட்டது. அப்படி இருந்தும் இதுவரை எந்தவொரு ஐரோப்பிய நாடும் இத்தாலிக்கு உதவ முன்வரவில்லை! எல்லா நாடுகளிலும் தத்தமது தேச எல்லைகளை மூடுவதில் மட்டுமே கவனமாக இருக்கின்றன.

ஏற்கனவே கொரோனா தொற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு மீண்டெழுந்த சீனா, இத்தாலிக்கு உதவுவதற்கு மருத்துவக் குழுவொன்றை அனுப்பியது. அத்துடன் மருந்துகள், பாதுகாப்புக் கவசங்கள், பரிசோதனைக் கருவிகளையும் அனுப்பி உதவியது.

அதே நேரம் கியூபாவும் மருத்துவர்களின் குழுவொன்றை இத்தாலிக்கு அனுப்பியது. ஏற்கனவே பேரிடரால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கெல்லாம் கியூப மருத்துவர்கள் அனுப்பப் படுவது தெரிந்த விடயம். அவை பெரும்பாலும் மூன்றமுலக நாடுகள். ஆனால், ஒரு மேற்கு ஐரோப்பிய நாட்டுக்கு கியூப மருத்துவர்கள் வந்துள்ளமை இதுவே முதல் தடவை. இத்தனைக்கும் இத்தாலி, மற்றும் பல மேற்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவுடன் சேர்ந்து கியூபா மீது பொருளாதாரத் தடை விதித்திருந்தன.

கொரோனாவை குணப்படுத்துவதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை என்ற போதிலும், கியூபா சில மருந்துகளை தயாரித்துள்ளது. பல லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அந்த மருந்துகள் இலவசமாக வழங்கப் பட்டுள்ளன. பிரேசிலை ஆளும் தீவிர வலதுசாரி ஜனாதிபதி போல்சனாரோ முன்பொரு தடவை கியூபாவுடன் முரண்பட்டு தன்நாட்டில் சேவையில் ஈடுபட்டிருந்த கியூப மருத்துவர்களை வெளியேற்றி இருந்தார். தற்போது அவரே மண்டியிட்டு கியூப மருத்துவர்கள் மீண்டும் தன் நாட்டிற்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.

இதற்கிடையே இன்னொரு சம்பவமும் கியூபாவின் மனிதாபிமானத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. கரீபியன் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த, கொரோனா பாதித்த சுமார் 600 பிரிட்டீஷ் பயணிகளை ஏற்றி வந்த கப்பலை, அனைத்து நாடுகளும் திருப்பி திருப்பி அனுப்பின. பிரிட்டிஷாரின் "தொப்புள்கொடி உறவுகளான" அமெரிக்கர்கள் கூட அந்தக் கப்பலை உள்ளே விட மறுத்து விட்டனர். இறுதியில் கியூபா மட்டும் கப்பலில் இருந்தவர்கள் தரையிறங்க அனுமதித்தது. கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளித்தது. கியூபாவின் சோஷலிசம் தான் மனிதாபிமானம் என்றால் என்னவென்று உலகிற்கு புரிய வைத்தது என்றால் அது மிகையாகாது.