Wednesday, March 11, 2020

Crash Landing on You: ஒரு வட கொரிய - தென் கொரிய காதல் கதை

Crash Landing on You - அவசியம் பார்க்க வேண்டிய Netflix தொலைக்காட்சித் தொடர். வட கொரியாவில் சாதாரண மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இந்தப் படத்தில் கண்டு களிக்கலாம். அண்மைக் காலத்தில் ஏற்பட்ட சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்களையும் பின்னணியாகக் கொண்டு கதை புனையப் பட்டுள்ளது.

இது ஒரு தென் கொரிய தொலைக்காட்சித் தொடர். கதையின் பெரும் பகுதி வட கொரியாவில் நடப்பதைப் போன்று ஸ்டூடியோவில் படமாக்கப் பட்டது. இதற்காகவே வட கொரிய மாதிரிக் கிராமம் ஒன்றை அமைத்திருந்தனர். தென் கொரியாவில் வாழும் வட கொரிய அகதிகளும் தமது தாயகத்திற்கு சென்று வந்த உணர்வு ஏற்பட்டதாக பாராட்டி உள்ளனர்.

இந்தத் தொடரின் கதையும், அதில் வரும் பாத்திரங்களும் கற்பனை தான். சுருக்கமாக ஒரு வழமையான காதல் கதை. மென்மையான காதல் உணர்வுகள், நகைச்சுவைக் காட்சிகள், வில்லனின் சூழ்ச்சிகள், மர்ம முடிச்சுகள், எதிர்பாராத திருப்பங்கள் எல்லாம் அடங்கிய ஒரு சாதாரண தொலைக்காட்சித் தொடர். சிலநேரம் ஒரு தமிழ்த் திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

தென் கொரியாவில் ஒரு பெரிய குடும்ப வணிக நிறுவனத்தை நடத்தும் தொழிலதிபரின் மகளான கதாநாயகியை சுற்றி கதை நகர்கிறது. அவள் ஒரு தடவை பொழுதுபோக்காக பாரசூட்டில் பறக்கும் போது அடித்த சூறாவளிக்குள் மாட்டிக் கொண்டதால் வாழ்க்கை திசை மாறுகிறது. தற்செயலாக வட கொரியாவுக்குள் வந்து இறங்கி விடுகிறாள். அங்கு எல்லைக் காவல் பணியில் இருக்கும் கதாநாயகனான வட கொரிய இராணுவ கேப்டன் மேல் வந்து விழுகிறாள்.

அங்கிருந்து தப்பி தென் கொரியாவுக்கு சென்று விட வேண்டும் என்பதற்காக நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப் பட்ட சூனியப் பிரதேசத்தின் ஊடாக ஓடுகிறாள். இருப்பினும் வழி தவறி திரும்பவும் வட கொரியாவுக்குள் வந்து விடுகிறாள். அதுவும் கதாநாயகன் குடியிருக்கும் கிராமத்திற்கே நேரே வந்து விடுகிறாள்! கதாநாயகன் அவளைத் தனது வீட்டில் மறைத்து வைத்திருக்க உடன்படுகிறான். அவனது படைப்பிரிவில் பணியில் உள்ள வீரர்களும் அந்த இரகசியத்தை பாதுகாக்கிறார்கள்.

காதாநாயகன் ஒரு சாதாரணமான கடைநிலை இராணுவ கேப்டன் போன்று காட்டப் பட்டாலும், அவனும் அரசியல் செல்வாக்கு மிக்க ஒரு வட கொரிய தலைவரின் மகன் தான். முன்பொரு தடவை எல்லைப்புற பகுதியில் நடந்த தனது சகோதரனின் மர்ம மரணத்திற்கு காரணம் யார் என்று துப்புத் துலக்குவதற்காக எல்லைப் படையில் சேர்ந்திருக்கிறான். சகோதரனின் கொலைக்குக் காரணமான இராணுவ அதிகாரி தான் வில்லன். மாபியாக் கும்பலுடன் தொடர்பு வைத்திருக்கிறான்.

ஒரு தடவை எல்லைப் பகுதி கிராமத்தில் நடக்கும் வழமையான தேடுதலின் பொழுது வீட்டிற்குள் மறைந்திருந்த கதாநாயகி கண்டுபிடிக்கப் படுகிறாள். அந்நேரம் தலைநகர் பியாங்கியாங் சென்றிருந்த கதாநாயகன் விடயத்தை கேள்விப் பட்டு உடனே அங்கே வருகிறான். கதாநாயகி தென் கொரியாவில் இரகசிய உளவு வேளைகளில் ஈடுபட்டு நாடு திரும்பி இருப்பதாகவும், அவள் தனக்கு நிச்சயிக்கப் பட்ட பெண் என்றும் பொய் சொல்லி காப்பாற்றுகிறான். இருப்பினும் வில்லனான இராணுவ அதிகாரிக்கு சந்தேகம் தீரவில்லை. தொடர்ந்து ஆராய்கிறான். இதற்கிடையில் பியாங்கியாங் நகரில் இருந்து கதாநாயகனுக்கு பெற்றோரால் நிச்சயிக்கப் பட்ட முறைப்பெண் அவனைத் தேடி வருகிறாள்.

கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கும் இடையிலான காதல் நிறைவேறியதா? கதாநாயகி தென் கொரியாவுக்கு திரும்பிச் சென்றாளா? மிகுதியை தொலைக்காட்சி தொடர் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இது போன்ற கதை வேறொரு இடத்திலும் நடக்கலாம். தற்செயலாக வழிதவறிச் செல்லும் ஒரு பணக்கார வீட்டுப் பெண், திக்குத் தெரியாத கிராமத்தில் மாட்டிக் கொள்வதும், மாளிகை போன்ற வீட்டில் ஆடம்பரமாக வாழ்ந்தவள் ஏழையின் குடிசையில் எளிமையாக வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதும், ஏற்கனவே பல தமிழ்த் திரைப்படங்களில் வந்த கதை. அதே தான் இந்த தென் கொரிய படத்தின் கதையும்! வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையிலான கலாச்சார வேறுபாடுகள் மட்டும் இதில் உள்ள சிறப்பம்சம் எனலாம்.

வட கொரிய கிராமத்தில் வந்து சேரும் முதல் நாளில் இருந்து, கதாநாயகி கலாச்சார அதிர்ச்சிக்கு பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அடிக்கடி மின்சாரத் தடை ஏற்படுகிறது. அங்கு யாரிடமும் மொபைல் போன் கிடையாது. (ஆனால் தலைநகர் பியாங்கியாங்கில் வசிப்பவர்கள் மொபைல் போன் பாவிக்கிறார்கள்.) வீட்டில் குளிர் சாதனப் பெட்டி கிடையாது. அதற்குப் பதிலாக, காய்கறிகளை ஒரு கிடங்கிற்குள் போட்டு மூடும் (kimchi) பாரம்பரிய குளிரூட்டும் முறையை பயன்படுத்துகிறார்கள். (கதாநாயகி அதை இயற்கை வழியிலான "Organic" முறை என்று புரிந்து கொள்கிறாள்.) அத்துடன் குளிப்பதற்கு சுடு நீர் கிடையாது. தண்ணீரை கொதிக்க வைத்து ஒரு தொட்டிக்குள் ஊற்றி விட்டு, நீராவி வெளியேற விடாமல் சுற்றிவர பொலிதீன் திரையால் மூடிக் கொண்டு குளிக்க வேண்டும்.

கொரிய மொழி ஒன்று தான் என்றாலும், வடக்கிலும் தெற்கிலும் பேசப்படும் மொழயில் வேறுபாடு இருக்கிறது. அது பிராந்திய பேச்சு மொழி வேறுபாடு என்பதற்கும் அப்பால், சில சொற்களின் பயன்பாடும் மாறுபடுகின்றது.(படத்தில் தென் கொரிய நடிகர்கள் வட கொரிய வட்டார மொழி பேசுகின்றனர்.) அதனால் கதாநாயகி தென் கொரியாவில் இருந்து வந்தவள் என்பதை அனைவரும் எடுத்த உடனே புரிந்து கொண்டு விடுவார்கள். அவளும் தான் "தென் கொரியாவில் வசிக்கும் இரகசிய உளவாளி" என்று சொல்லித் தான் ஊர் மக்களுடன் பழகுகிறாள். அதை அவர்களும் நம்புகிறார்கள். வட கொரிய பெண்களுக்கு இடையில் நடக்கும் உரையாடல் இந்தப் படத்தில் மிகவும் இயல்பாகக் காட்டப் படுகின்றது. பெண்கள் ஊர் வம்பளப்பது எங்கும் உள்ள வழக்கம் தான். தமிழ்நாட்டுப் பெண்கள் எப்படியோ, அப்படித் தான் வட கொரியப் பெண்களும் இருக்கிறார்கள்.

கிராமிய மக்களின் கள்ளங்கபடம் அற்ற மனப்பான்மையும், நகரத்து மனிதர்களின் சூது வாது கொண்ட மனமும் தொடரில் சிறப்பாகக் காட்டப் படுகின்றது. உதாரணத்திற்கு, தென் கொரியாவில் கதாநாயகி காணாமல்போன நாள் முதல் அவளது சகோதரர்கள் நீலிக்கண்ணீர் வடிப்பதும், நிறுவனத்தில் அவளின் பெயரில் உள்ள பங்குகள் தமக்குச் சேர வேண்டும் என்று சண்டை பிடிப்பதும் தத்ரூபமாக காட்டப் படுகின்றது. வட கொரிய கிராமத்தில் வசிப்பவர்களுக்கு பங்கு என்றால் என்னவென்று தெரியாது. அதைப் பற்றி அவர்களுக்கு கவலையும் இல்லை. இருப்பதை வைத்துக் கொண்டு எளிமையாக வாழ்கிறார்கள்.

இன்றைய வட கொரியா சோஷலிச நாடும் அல்ல, அதே நேரம் முதலாளித்துவ நாடும் அல்ல. அது இரண்டும் கலந்த சமூக பொருளாதார அமைப்பைக் கொண்டுள்ளது. பியாங்கியாங் நகரில் தனியார் நிறுவனங்களை நிர்வகிக்கும் வட கொரிய தொழிலதிபர்கள் வசதியாக வாழ்கிறார்கள். அவர்களது நுகர்வுக்கு தேவையான நவீன பாவனைப் பொருட்கள் அனைத்தும் அங்கு கிடைக்கின்றன. கடத்தல் மூலம் கொண்டுவரப்படும் தென் கொரிய பாவனைப் பொருட்கள் கிராமிய சந்தைகளிலும் விற்கப் படுகின்றன. அது எல்லோருக்கும் தெரிந்த "இரகசியம்"! அத்துடன் தென் கொரிய தொலைக்காட்சி டிராமா சீரியல்களும் வட கொரியர்களால் விரும்பிப் பார்க்கப் படுகின்றன. அரசாங்கம் இவற்றை எல்லாம் கண்டும் காணாதது போல நடந்து கொள்கிறது.

நீங்கள் இதுவரை காலமும் வட கொரியா பற்றி கேள்விப் பட்ட கட்டுக்கதைகள் எல்லாம் இந்தத் தொடரை பார்த்த பின்னர் விலகி விடும். வேண்டுமென்றே வட கொரியா பற்றிய பொய்ச் செய்திகளை பரப்பி வரும் விஷமிகள் இதைப் பார்த்தாலும் திருந்தப் போவதில்லை. தென் கொரியாவில் இந்த தொலைக்காட்சித் தொடர் வெளியானதும், வலதுசாரி கிறிஸ்தவ லிபரல் கட்சி அதற்கு எதிராக வழக்குப் போட்டது. அதாவது, வட கொரியா பற்றி நல்லபடியாக பேசுவது தென் கொரியாவில் ஒரு குற்றமாம்! அந்நாட்டில் அப்படியும் ஒரு சட்டம் உள்ளது!! அதனால் தான் பலர் வட கொரியா பற்றி இல்லாத பொல்லாத கதைகளை எல்லாம் மனம்போன போக்கில் அடித்து விடுகிறார்கள். 


No comments: