Monday, March 30, 2020

சீனாவில் கொரோனா இறப்புகள் பற்றி மிகைப்படுத்திய பிரச்சாரம்


இது செய்தி அல்ல வதந்தி:

சீனாவில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 40000 க்கும் அதிகம் என்று குறிப்பிடும் சில ஆதாரமற்ற தகவல்களை பலர் பகிர்ந்து கொள்வதை காணக் கூடியதாக உள்ளது. இதில் பயன்படுத்தப் பட்டுள்ள சொற்களை பார்த்தாலே இது ஆதாரமற்ற வதந்தி என்று தெரிந்து விடும். 
- அத்தனை பேர் இறந்திருக்கலாம் என "மதிப்பிடப் படுகிறது." அதாவது ஒருவரது ஊகம். 
- இதற்கான ஆதாரம் தேடினால், தனிநபர்கள் சமூகவலைத் தளங்களில் பகிரும் பதிவுகளை காட்டுகிறார்கள்.

அதாவது நம்மூரில் பரப்பப் படும் வாட்சப் வதந்திகள் மாதிரி சீனாவிலும் பரப்பும் ஆட்கள் இருக்கிறார்கள். அங்கேயும் அவற்றை உண்மையென்று நம்ப ஒரு கூட்டம் இருக்கிறது. அதையெல்லாம் ஒரு ஊடகம் எடுத்து வெளியிடுகிறது. நாங்களும் அதை கேள்வி கேட்காமல் நம்பி விடுகிறோம்.

இந்த டிவிட்டர் தகவல் RFA இணையத் தளத்தை ஆதாரம் காட்டுகிறது. யார் இந்த RFA? Radio Free Asia. முன்பு பனிப்போர் காலத்தில் Radio Free Europe என்ற வானொலி இயங்கியதை அறிந்திருப்பீர்கள். அன்று CIA நிதியில் இயங்கிய RFE இன் ஆசிய சேவை தான் RFA. இரண்டும் ஒன்று தான். அன்றும் இன்றும் அமெரிக்காவின் எதிரி நாடுகள் பற்றி வதந்திகளையும், பொய்யான செய்திகளையும் பரப்பி குழப்பத்தை உண்டு பண்ணுவது தான் இந்த பிரச்சார வானொலியின் நோக்கம்.

சீனாவில் வூஹான் நகரம் 2 மாத Lockdown இல் இருந்த காலத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை உத்தியோகபூர்வ கணக்கை விட அதிகமாக இருக்கலாம். அதை மறுப்பதற்கு இல்லை. மருத்துவ வசதி கிட்டாமல் வீடுகளில் இறந்தவர்கள், வேறு நோய்கள் காரணமாக இறந்தவர்கள் கணக்கெடுக்கப் படாமல் இருந்திருக்கலாம். அதையெல்லாம் சேர்த்தாலும் கூட கண்ணை மூடிக் கொண்டு "ஒரு மில்லியன் சாவுகள்" என்று சும்மா அடித்து விட முடியாது.

இந்தத் தவறு தற்போது ஐரோப்பாவிலும் நடக்கிறது. இங்கேயும் உண்மையான இறந்தவர்களின் தொகை உத்தியோகபூர்வ எண்ணிக்கையை விட அதிகம். ஸ்பெயின், மாட்ரிட் நகரில் ஒரு கைவிடப் பட்ட கொரோனா மருத்துவமனையை இராணுவம் பொறுப்பெடுத்த நேரம், அங்கு பல நோயாளிகள் உயிரோடு இருந்தனர். அதாவது, மருத்துவப் பணியாளர்கள் அவர்களை அப்படியே கிடந்து சாகட்டும் என்று விட்டு விட்டு வெளியேறி விட்டனர். இத்தாலியில் அம்புலன்ஸ் வருவதற்கு மணித்தியாலக் கணக்கில் தாமதித்த படியால் பலர் உயிரிழந்தனர்.

அதை விட பல ஐரோப்பிய நாடுகளில் முன்பு மருத்துவ மனையில் கிடந்த "சாதாரண" நோயாளிகள் (புற்று நோயாளிகள் போன்றவர்கள்) வெளியேற்றப் பட்டனர். அவர்களில் பலரும் மருத்துவ வசதி இன்றி வீடுகளில் கிடந்து இறந்துள்ளனர். அதெல்லாம் கொரோனா மரண எண்ணிக்கையில் வருவதில்லை. அதற்காக "இத்தாலியில் ஒரு மில்லியன் பேர் கொரோனாவால் மரணம். ஆதாரம் சமூகவலைத்தளங்கள்." என்று பொறுப்பற்ற முறையில் வதந்தி பரப்ப முடியாது.

இன்று ஐரோப்பாவில் உள்ள நிலைமை தான் அன்று சீனாவிலும் இருந்திருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது. அதற்காக அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியன் என்று சொல்வதெல்லாம் மிகைப் படுத்தல். (சீனா என்றால் யாரும் கேட்க மாட்டார்கள் என்ற தைரியம் வேறு.) நாம் விரும்பிய படி ஒரு தொகையை கற்பனை பண்ணலாம். அதை சமூகவலைத்தளங்களிலும் பரப்பலாம். ஆனால், அவையெல்லாம் உண்மை என்று அர்த்தம் அல்ல.

*****



நெதர்லாந்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப் படுவதை விட அதிகம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் மரணமுற்றவர்கள் அரச புள்ளிவிபரத்தில் சேர்க்கப் படுவதில்லை. ஒரு நோயாளி இறந்த பிறகு Covid- 19 இருக்கிறதா என்று பரிசோதிக்கப் படுவதில்லை. ஆனால் அவர்களைப் பற்றிய தகவல்கள் சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு மட்டுமே தெரியும். அவை அரச பதிவில் உள்ளடக்கப் படுவதில்லை.

இதனால் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை குறைத்துக் காண்பிக்கப் படுகின்றது. கொரோனா தொற்றுகுள்ளான நோயாளிகளை பதிவு செய்து வரும் அரச மருத்துவ ஆய்வு மையமான RIVM இது குறித்து அலட்சியமாக நடந்து கொள்கிறது.

அதாவது கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டால் மட்டுமே கணக்கிடுகிறது. அதற்கு மாறாக வீடுகளில் இருந்து மரணமடையும் நோயாளிகளை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறது. இதனால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப் படும் எண்ணிக்கை குறைவாக உள்ளது. உண்மையான எண்ணிக்கை அதை விட அதிகம்.

தகவலுக்கு நன்றி: Zembla)
Huisartsen: ‘Niet geteste patiënten die overlijden aan corona ontbreken in sterftecijfer RIVM’
 

No comments: