Showing posts with label இனக்கலவரம். Show all posts
Showing posts with label இனக்கலவரம். Show all posts

Saturday, April 12, 2025

மலேசியாவின் "ஈழப் பிரச்சனை"! பலர் அறியாத மலே பேரினவாத ஒடுக்குமுறை!!

 
இனப்பிரச்சினை விடயத்தில் இலங்கைக்கும், மலேசியாவுக்கும் இடையில் சில அதிசயப் படத் தக்க ஒற்றுமைகள் உள்ளன. இரண்டு நாடுகளிலும் இனப்பிரச்சனைக்கான மூல காரணம், தேர்தலில் பெரும்பான்மை இனத்தை பிரதிநிதித்துவ படுத்திய ஆட்சியாளர்களின் பேரினவாத கொள்கை, சிறுபான்மை இனத்தவர்கள் மீதான ஒடுக்குமுறைகள் எல்லாமே ஒரே மாதிரி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

👇👇👇


1. தேசிய இனங்கள்:

இலங்கை/மலேசியா

72% பௌத்த சிங்களவர்/ இஸ்லாமிய மலேயர்.

12% இந்து தமிழர்/ பௌத்த சீனர் 

7% முஸ்லிம்கள்/ இந்துக்கள் (தமிழர்கள்). 

இரண்டு நாடுகளிலும் இரண்டாவது பெரும்பான்மை இனம் தான் பெரும்பான்மை இனத்தின் பேரினவாத அடக்குமுறையால் பாதிக்கப் பட்டது. அதாவது இலங்கையில் தமிழர்கள் மாதிரி மலேசியாவில் சீனர்கள். பெரும் நகரங்களில் அரசுத் துறைகளில், வணிகத்தில் சிறந்து விளங்கியதால் நாட்டுப் புறங்களில் வாழ்ந்த பெரும்பான்மை இனத்தவரின் பொறாமைக்கும், வெறுப்புக்கும் ஆளாகினர். எங்கேயும் இனப் பிரச்சினைக்கு பின்னால் இருப்பது பொருளாதார பிரச்சினை தான்.

2. ஆட்சி மொழி:

இலங்கையிலும்,  மலேசியாவிலும் ஆரம்பத்தில் ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருந்தது. 

இலங்கையில் 1956 தேர்தலில் பெருமளவு சிங்கள வாக்குகளை வென்ற SLFP சிங்களத்தை ஆட்சி மொழி ஆக்கியது. அதே மாதிரி மலேசியாவில் 1967 தேர்தலில் பெருமளவு மலேயா வாக்குகளைப் வென்ற Pan- Malayan Islamic Party மலே மொழியை ஆட்சி மொழி ஆக்கியது. 

3. இனக் கலவரம்:

இலங்கையில் 1956 தேர்தலுக்கு பின்னரான ஆட்சி மாற்றத்தின் விளைவாக கொழும்பு நகரில் தமிழர்களுக்கு எதிரான இனக் கலவரம் நடந்தது. அதே மாதிரி மலேசியாவில் 1967 தேர்தலுக்கு  பின்னரான ஆட்சி மாற்றத்தின் விளைவாக கோலாலம்பூர் நகரில் சீனர்களுக்கு எதிரான இனக் கலவரம் நடந்தது. நூற்றுக்கணக்கான சீனர்கள் கொல்லப்பட்டனர். அது மலே- சீன இனங்களுக்கு இடையில் மிகப்பெரிய விரிசலை உண்டாக்கியது. 

உண்மையில் இலங்கையை விட மலேசியாவில் தான் சிறுபான்மை இனத்தவர் மீதான ஒடுக்குமுறை மிகக் கடுமையாக உள்ளது. 

குறிப்பாக, மலேசிய பிரஜைகள் அனைவரும் அரசமைப்பு சட்டத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும். (பெரும்பான்மை இனத்தவருக்கு சிறப்புரிமை வழங்குகிறது என்றெல்லாம் விமர்சிக்க முடியாது.) பிற மதத்தவர்களும் 

இஸ்லாமிய மதத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டும். (முன்னுரிமை அல்ல, அதற்கும் மேலே!) 

அதை விட, "சர்ச்சைக்குரிய" விஷயங்களை பற்றி பேசுவதும், எழுதுவதும் தடைசெய்யப் பட்டுள்ளது. அதாவது மலே இனத்தவரின் உரிமைகள் தொடர்பாக யாரும் கேள்வி எழுப்ப முடியாது. மொழிப் பிரச்சினை பற்றி பேச முடியாது. 


பிற்குறிப்பு:

இவ்வளவு அடக்குமுறை இருந்திருந்தால் ஏன் மலேசியாவில் சீனர்கள் தனி நாடு கேட்டு ஆயுத போராட்டம் நடத்தவில்லை என்று யாராவது கேட்கலாம். 2 ம் உலகப் போர் காலத்தில் இருந்து ஒரு தசாப்த காலமாக கம்யூனிஸ்டுகளின் ஆயுத போராட்டம் நடந்தது. கம்யூனிஸ்ட் கட்சியில் பெரும்பான்மையாக இருந்தவர்கள் சீனர்கள். கணிசமான அளவில் மலேயர், தமிழர்களும் உறுப்பினர்களாக இருந்தனர். இன வேற்றுமை கடந்த வர்க்க ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டும் என்பதில் மலேசிய அரசும், முன்னாள் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களும் உறுதியாக இருந்தனர். அயல் நாடுகளான வியட்நாம், லாவோஸ், கம்போடியாவில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வந்த மாதிரி மலேசியாவில் நடக்கலாம் என்ற அச்சம் நிலவியது. 

சீனர்களை பெரும்பான்மையாக கொண்ட சிங்கப்பூரில் நடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெறும் வாய்ப்பு காணப் பட்டதால் தான் சிங்கப்பூரை தனி நாடாக பிரித்து கம்யூனிச எதிர்ப்பாளர் லீ குவான் யூவிடம் கொடுத்தனர். மலேசிய அரசும் அதை தனக்கு சாதகமான விஷயமாக பார்த்தது. அப்போது தானே இஸ்லாமிய- மலே பேரினவாத கொள்கையை முழு வீச்சில் செயற்படுத்த முடியும்?

Thursday, July 22, 2021

1977 இனக்கலவரம்: இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கை

//வகுப்புவாதம் தலைதூக்கும் போதெல்லாம் முதல் முதல் பாதிக்கப் படுவது புரட்சிகர இயக்கமாகும். ஆகவே தொழிலாளி வர்க்கமும் புரட்சிகர இயக்கமும் தங்களது முழுப்பலத்தையும் திரட்டி, இனவெறியை தூண்டுவோருக்கு எதிராக விட்டுக்கொடுக்காத புனிதப் போராட்டத்தை நடத்தி, தங்களிடையே வாழ்ந்து வரும் சிறுபான்மையின மக்களை பாதுகாத்து, அதன் மூலம் இன்று சிதைந்துள்ள தேசிய ஐக்கியத்தை மீண்டும் படிப்படியாக கட்டியெழுப்ப வேண்டும்.// - தோழர் சண்முகதாசன்


1977 இனக்கலவரத்தில், இலங்கை அரசுக்கு மட்டுமல்லாது, தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் பங்கிருந்தது. இனவாதப் பேச்சுகள் மூலம் தமிழ் இளைஞர்களை உசுப்பேற்றி யாழ்ப்பாணத்தில் இருந்த சிங்களக் கடைகள் தாக்க வைத்திருக்கிறார்கள். "திருப்பி அடித்தல்" என்பது சாதாரண அப்பாவி மக்களை அடிப்பதென்று பொருள் அல்ல. எதிரி யார், நண்பன் யார் என்ற புரிதல் இல்லாத படியால் தான் தமிழ்த்தேசிய போராட்டம் பின்னடைவுக்கு உள்ளானது.


தோழர் சண்முகதாசன் தலைமையிலான இலங்கை மாவோவாத கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட தொழிலாளி பத்திரிகையில் இருந்து ஒரு பகுதி:
//ஒரு நாட்டில் இனக்கலவரங்களை மூட்டுவோர் சம்பந்தப்பட்ட இனங்களின் மத்தியில் உள்ள இனவெறி சக்திகளாகும். இவ் இனவெறி சக்திகளுக்கு அரசியல் ரீதியில் இனவெறி ஊட்டி வளர்ப்பவர்கள் சம்பந்தப்பட்ட இனங்களின் மத்தியில் உள்ள முதலாளித்துவ பிற்போக்கு சக்திகள் ஆவர். இத்தகையவர்களால் உருவாக்கப்படும் இனக்கலவரம் எந்தவொரு நாட்டிலும் கற்பனை செய்யப்படாத கொடூரத்தன்மை வாய்ந்ததாகவே இருக்கும். 

ஒரு இனக்கலவரத்தை தடுப்பதற்குரிய ஒரே வழி சிறுபான்மை இனங்களின் உரிமைகளை உத்தரவாதப் படுத்துவதும் வழங்குவதுமேயாகும். ஆனால் முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயகத்தின் கீழ் சிறுபான்மை இனங்களின் உரிமைகளை நசுக்கி இன அடக்குமுறையை செய்வதிலும் முதலாளித்துவ சமூக அமைப்பு எப்போதும் முன் நின்று வருவதைக் காண முடியும். 

எனவே இனங்களின் மத்தியில் உள்ள பிணக்குகளையும், ஒரு பெரும் இனம் சிறுபான்மை இனத்தை அடக்கும் நிலையை இல்லாமல் செய்வதற்குரிய ஒரே மார்க்கம் இனங்களின் மத்தியில் உள்ள தொழிலாளி வர்க்கமும் ஏனைய உழைக்கும் வர்க்கங்களும் தத்தம் இனங்களின் மத்தியில் உள்ள முதலாளித்துவ அரசியல் கட்சிகளை நிராகரித்து உழைக்கும் வர்க்கம் என்ற ரீதியில் ஐக்கியப் பட்டு தமது வர்க்க எதிராளிகளுக்கு எதிராக போரிடுவதே ஆகும்.//



Wednesday, April 29, 2015

அமெரிக்க இனக் கலவரங்கள் : வர்க்கப் புரட்சிக்கான ஒத்திகை


இது தாண்டா அமெரிக்க பொலிஸ்! பால்டிமோர் நகரில், போலீஸ்காரர்களே முதலில் மக்கள் மேல் கல்லெறிந்து தாக்கினார்கள். பதிலுக்கு மக்களும் கற்களால் தாக்கத்தொடங்கியதும், புறமுதுகிட்டு ஓடுகின்றனர்.
(கீழேயுள்ள வீடியோவை பார்க்கவும்)


இது தான் அமெரிக்கா! இந்தப் படங்களை உங்களுக்கு எந்த ஊடகமும் காட்டப் போவதில்லை! அமெரிக்காவில் பால்டிமோர் நகரில், மீண்டும் ஒரு கருப்பின இளைஞன் பொலிசாரால் சுடப்பட்டு மரணமடைந்தான். கொடுமை கண்டு பொங்கி எழுந்த ஆயிரக்கணக்கான மக்கள், இனவெறிப் பொலிஸின் அட்டூழியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். அமைதியாக ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் பெரும் கலவரத்தில் முடிந்துள்ளது. பொலிஸ் வாகனங்கள் தாக்கப் பட்டன.

25 வயதான Freddie Gray என்ற கருப்பின இளைஞனை கைது செய்ய முயன்ற பொலிசார், அவனை சுட்டுக் காயப் படுத்தி இருந்தனர். சம்பவம் நடந்த அன்று முதலுதவி சிகிச்சை அளிக்காத படியால், மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சில நாட்களின் பின்னர் மரணமடைந்தான். முதலுதவி சிகிச்சை அளிக்காதது தங்களது தவறு தான் என்று, பால்டிமோர் பொலிஸ் அதிகாரி தெரிவித்திருந்தார்.

August 9, 2014 பெர்குசன் நகரில் நடந்த கலவரத்தின் தொடர்ச்சியாகவே, பால்டிமோர் கலவரமும் நடந்துள்ளது. இரண்டிலும் இன அடிப்படையிலான பாகுபாடு மாத்திரமல்லாது, வர்க்க வேறுபாடும் கலவரங்களுக்கு காரணமாக இருந்துள்ளது. பெர்குசன் கலவரம் நடந்த போது, நான் எழுதிய குறிப்புக்கள் இவை. அமெரிக்காவில் ஒடுக்கப்பட்ட கருப்பின மக்களின் எழுச்சிக்கான காரணங்களை புரிந்து கொள்ள அவை உதவும்.


பெர்குசன் நகர கலவரம்

அமெரிக்காவில் பெர்குசன் நகரில், காவல்துறையினர் ஒரு கருப்பினச் சிறுவனை சுட்டுக் கொன்றதன் பின்னர் ஏற்பட்ட மக்கள் எழுச்சி ஒரு புரட்சிக்கான ஆரம்பம் ஆகும். பெர்குசன் நகரில் வடக்குப் பகுதியில் கருப்பின மக்கள் செறிவாக வாழ்கின்றனர். அங்கே தான் ஏழைகள் அதிகம்.

தெற்குப் பகுதியில் வெள்ளையின மக்கள் செறிவாக வாழ்கின்றனர். அங்கே தான் பணக்காரர்கள் அதிகம். ஏழைகளின் பகுதியில் மருத்துவ வசதி இல்லை, கல்வி கற்பதற்கு பல மைல் தூரம் செல்ல வேண்டும். பணக்கார குடியிருப்புகளில் எல்லாம் கைக்கு எட்டிய தூரத்தில் உள்ளன. கருப்பு - வெள்ளை எனும் இனப் பாகுபாடு மட்டுமல்லாது, வர்க்க வேறுபாடும் அண்மைய கலவரங்களுக்கு வித்திட்டுள்ளன.

பெர்குசன் நகரில் பலர் வெளி மாநிலங்களில் இருந்து வந்து கலவரத்தில் ஈடுபடுவதாக பொலிஸ் குற்றஞ் சாட்டியது. அதற்குக் காரணம், அங்கு நடந்த சம்பவங்களை, வெறும் கலவரம் என்று சொல்ல முடியாது. எகிப்தில், துனீசியாவில் நடந்தது போன்ற மக்கள் எழுச்சி. இரவு நேரங்களில், பொலிசாருடன் மோதல்கள் நடந்தன. அதே இடங்கள், பகல் நேரங்களில் அரசியல் விவாதங்கள் நடக்கும்.

எகிப்து, துனீசியாவில் நடந்ததைப் போன்று, சமூக வலையமைப்புகள் மக்களை ஒன்று திரட்ட பயன்பட்டன. எல்லோரும் கைத் தொலைபேசி கொண்டு திரிந்து, படம் எடுத்து தகவல்களை இணையம் ஊடாக பரப்பிக் கொண்டிருந்தார்கள். காப்பரேட் ஊடகங்கள், அங்கு நடந்த கடைகளை சூறையாடிய சம்பவங்களை பற்றி மட்டும் சொல்லிக் கொண்டிருந்தன. மக்கள் எழுச்சி பற்றி அவை எதுவும் கூறாமல் மௌனம் சாதித்தன.

பெர்குசன் நகரின் மத்தியில் உள்ள மக்டொனால்ட்ஸ் உணவகத்தில் ஆர்வலர்கள் ஒன்று கூடுவார்கள். எந்த வகையான போராட்டம் நடத்துவது என்பது குறித்து விவாதிப்பார்கள். போராட்டத் தலைவர்கள் யாரும் அரசியல்வாதிகள் அல்ல. சாமானியர்களின் பிரதிநிதிகள். மக்கள் மத்தியில் இருந்து தெரிவு செய்யப் பட்ட குழுவினர் முடிவுகளை எடுக்கின்றது.

பெர்குசன் நகரில் இன்னொரு அதிசயத்தையும் பார்க்கலாம். கிறிஸ்தவ மதகுருக்களும், தீவிர இடதுசாரிகளும் தோளோடு தோள் சேர்ந்து, போராடும் மக்களை வழிநடத்தினார்கள். சில திபெத்திய பௌத்த பிக்குகளும் சேர்ந்து கொண்டார்கள். புதிதாக நிறுவன மயப் பட்ட கருப்பின மக்களின் விடுதலைக்கான கருஞ் சிறுத்தைகள் இயக்க உறுப்பினர்கள் முன்னரங்கில் நின்றார்கள்.

பெர்குசன் கருப்பின சமூகத்தை சேர்ந்த பிரபலமான ராப் பாடகர் ஒருவர், பணம் நிறைய வந்ததும், வெள்ளையின மக்கள் வாழும் பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்று வசித்து வந்தார். அவர் தனது சமூக மக்களை கண்டு பேசுவதற்கு வந்த நேரம், மக்கள் அவரை கூச்சலிட்டு விரட்டி விட்டார்கள்.

கலவரத்திற்கு முன்பு, கருப்பின மக்களின் பிரதேசத்திற்கு சாதாரண வெள்ளையின மக்கள் செல்ல மாட்டார்கள். "குற்றச் செயல்கள் அதிகமாக நடப்பதாக" ஒரு காரணம் சொல்வார்கள். அண்மைய மக்கள் எழுச்சியில் நிறைய வெள்ளையின ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். கம்யூனிஸ்டுகள், அனார்க்கிஸ்டுகளுக்கு பெரும் வரவேற்புக் கிடைத்தது.

பெர்குசன் நகரில் குவிந்திருந்த கலவரத் தடுப்பு பொலிஸ் படையினர், ஓர் இராணுவம் போன்று நடந்து கொண்டனர். அந்தப் பிரதேசம் ஒரு போர்க்களம் போன்று காட்சியளித்தது. எகிப்தில் நடந்தது போல, அமெரிக்கப் பொலிஸ் படையும் அளவுக்கு அதிகமான கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியது.

பெர்குசனில் பொலிசை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த மக்களுக்கு, பல உலக நாடுகளில் இருந்தும் ஆதரவாளர்கள் சமூக வலையமைப்புகள் மூலமாக ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக சில பாலஸ்தீன ஆர்வலர்கள், கண்ணீர்ப் புகைக் குண்டுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று சொல்லிக் கொடுத்தார்கள்.

பெர்குசனில் நடந்தது ஒரு முழுமையான அமெரிக்கப் புரட்சி அல்ல. ஆனால், அதற்கான முன்னோட்டம். வருங்காலப் புரட்சியாளர்களின் பயிற்சிக் களம்.



இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Monday, June 16, 2014

அளுத்கம இனக் கலவரம் : பாசிஸ அரசு இயந்திரம் ஓய்வதில்லை


இலங்கையில், அளுத்கம எனும் இடத்தில், முஸ்லிம்களுக்கு எதிராக மிக மோசமான இனக் கலவரம் நடந்துள்ளது.  முஸ்லிம்களின் வீடுகளும், கடைகளும், பொதுபலசேனா குண்டர்களினால் எரிக்கப் பட்டுள்ளன. 1983 க்கு பிறகு நடந்த முதலாவது இனக் கலவரம் இதுவாகும்.

அளுத்கமவில் இன்று நடந்த பொதுக் கூட்டமொன்றில் பேசிய பொதுபல சேனா தலைவர் கலகொட ஞானசேகர தேரோ, "ஒரு சிங்களவன் மேல் கை வைத்தால், இந்த நாட்டில் முஸ்லிம்களின் கதையை முடித்து விடுவோம்." என்று இனவெறி கக்கும் உரையாற்றி உள்ளார். (https://www.colombotelegraph.com/index.php/video-this-will-be-the-end-of-all-muslims-gnanasara-says-prior-to-riots/ ) அதற்குப் பிறகே, மாலையில் கலவரம் நடந்துள்ளது. 1977, 1983 ளில் நடந்த தமிழர்களுக்கு எதிரான இனக் கலவரங்களுக்கு முன்னரும், பலர் இதே மாதிரியான இனவெறியை கக்கினார்கள். (https://www.youtube.com/watch?v=qipU2Qf746c&list=UUJt2pSAQ9hF3cvq6slyLo5g )

சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர், இதே அளுத்கம நகரில், முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக ஸ்தாபனம் தீ வைத்துக் கொளுத்தப் பட்டது. வர்த்தகப் போட்டி, பொறாமை காரணமாக, அந்த நகரில் உள்ள சிங்கள வர்த்தகர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை தூண்டி விடுவதாக, எரிக்கப் பட்ட வர்த்தக நிலையத்தின் சொந்தக்காரர் தெரிவித்தார். (

1983 ம் ஆண்டு கலவரத்தின் போதும், தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் இலக்கு வைத்து தாக்கப் பட்டமை இங்கே நினைவுகூரத் தக்கது. இனக் கலவரங்களின் போது தான், முதலாளித்துவ பொருளாதாரமும், இனவாத பாசிசமும் ஒன்றுடன் ஒன்று கை கோர்த்துக் கொள்கின்றன.

இதே நேரம், "83 இனக் கலவரத்திற்குப் பின்னர், அரசாங்கம் இன்னும் பாடம் படிக்கவில்லையா?" என்று சில அறிவுஜீவிகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அன்றும், இன்றும் அரசாங்கம் தான் படித்த பாடத்தை சரியாகத் தான் நடைமுறைப் படுத்தி வந்துள்ளது. மக்கள் தான் அரசின் நோக்கங்களை புரிந்து கொள்ளாமல், இனவாத, மதவாத சக்திகள் சொல்வதை நம்பி ஏமாந்து போகிறார்கள். 

குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை தூண்டி விட்ட நரேந்திர மோடி, பத்து வருடங்களுக்குப் பின்னர் இந்தியாவின் பிரதமராகலாம் என்றால், உண்மையில் பாடம் படிக்க வேண்டியவர்கள் யார்?

//தமிழ்ப் பேசும் முஸ்லீம் அப்பாவி மக்கள் மீதான பேரினவாதிகளின் தாக்குதல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, புலம்பெயர் தமிழ்த் தேசிய பிழைப்புவாத அமைப்புக்கள், தமிழ்த் தேசிய தாதாக்கள் உட்பட ஏனையோர் எந்தக் கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.// - இவ்வாறு இணையத் தளமொன்றில், ஒரு நண்பர் தனது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தி உள்ளார். 

எல்லா தமிழ் தேசியவாதிகளும் ஒரே கொள்கை கொண்டவர்கள் அல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பும், சுமேந்திரனும், கலவரத்தை கண்டித்துள்ளமை வரவேற்கத் தக்கது. பாதிக்கப் பட்ட முஸ்லிம் மக்களுக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த தகவல் ஆங்கிலத்தில், டிவிட்டர் செய்தியாக இருந்தது. தமிழிலும் தமது கண்டனத்தை பதிவு செய்துள்ளனரா என்பது தெரியவில்லை.

மேலும் இலங்கையில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் "தமிழ் தேசியவாதிகள்" அல்லர். இருந்திருந்தால், அளுத்கம கலவரத்தை, அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் எதிரான கலவரமாக கருதி இருப்பார்கள். சர்வதேச மட்டத்தில் கலவரத்தை தூண்டி விட்ட சிறிலங்கா அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்திருப்பார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

உதட்டளவில் தம்மைத் தாமே தமிழ் தேசியவாதிகள் என்று அழைத்துக் கொள்ளும் பலர், மனதளவில் இந்துத்துவா வாதிகள் என்பது இரகசியமல்ல. அவர்களது உண்மையான அரசியல் நிலைப்பாடு, இப்படியான தருணங்களில் வெளிப்படுகின்றது. 

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்து உள்ளூர மகிழ்ச்சி அடைவதும், பழிவாங்கும் உணர்வை வெளிப் படுத்துவதுமாக, சிறுபான்மை இனங்களுக்கு எதிரான அரசின் வன்முறைகளை நியாயப் படுத்துகின்றனர். சிறிலங்கா அரசின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு மிக இலகுவாக பலியாகின்றனர்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயம், முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள- பௌத்த பேரினவாதிகளின் வெறியாட்டத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. நவநீதம் பிள்ளை, பிரான்சிஸ் ஹாரிசன், எரிக் சொல்ஹைம் ஆகியோர், அளுத்கம கலவரம் பற்றிய தகவல்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக உடனுக்குடன் பகிர்ந்து கொள்வதுடன், அரசுக்கு எதிரான கண்டனங்களையும் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலே குறிப்பிட்ட அரசியல் சக்திகள் யாவும் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்த காலத்தில் இருந்து, பாதிக்கப் பட்ட ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்த சர்வதேச ஆதரவு சக்திகள். குறிப்பாக வலதுசாரி தமிழ் தேசியவாதிகளால் பெரிதும் மதிக்கப் பட்டவர்கள். அவர்களது நாயகர்களாக போற்றப் பட்டவர்கள்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான குரல்கள் ஒலித்த போதெல்லாம், அதனை நன்றியோடு பகிர்ந்து கொண்டவர்கள், இன்று தடம் மாறி, பொதுபல சேனாவின் முஸ்லிம் விரோத கலவரத்தை மௌனமாக அங்கீகரிப்பது ஏனோ? ஈழத் தமிழ் சமூகத்தில் இருந்து எழும் ஒரு சில கண்டனக் குரல்களையும் அடக்க முனைவது ஏனோ? முரண்பாடுகளின் மொத்த உருவமே குறுந் தேசியவாதம் தானோ?

Sunday, October 23, 2011

1958 இனக்கலவரம் - இனப் பிரிவினையின் ஆரம்பம்

[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]
(பகுதி : பன்னிரண்டு )


இலங்கையின் முதலாவது இனக்கலவரம் குறித்து நாம் அறிந்து கொண்டது என்ன?
1958 ம் ஆண்டு, தமிழரசுக் கட்சியினர் அஹிம்சா வழியில் சிறி எதிர்ப்பு போராட்டம் நடத்தினார்கள். அதற்கு எதிர்வினையாக சிங்கள காடையரினால் தமிழர்கள் தாக்கப் பட்டனர்.

இதனை தமிழர்கள் எவ்வாறு புரிந்து கொள்கின்றனர்? "நியாயமான கோரிக்கைகளை முன்வைத்த தமிழர்களின் அஹிம்சை வழிப் போராட்டத்தைக் குழப்பிய சிங்கள இனவெறியர்கள், தமிழர்களை படுகொலை செய்தனர்." இதனை சிங்களவர்கள் எவ்வாறு புரிந்து கொள்கின்றனர்? "சிங்கள எழுத்துகளை தார் பூசி அழித்த செயலானது, சிங்கள மொழியையும், சிங்கள இனத்தையும் பூண்டோடு அழிப்பதற்கான தமிழரின் சதி." அன்று நடந்த சம்பவங்களை உன்னிப்பாக கவனித்துப் பார்த்தால், இனவாத சாயம் பூசப்பட்ட வாதங்களுக்குப் பின்னால், வேறொரு உண்மை மறைந்திருப்பது புலனாகும். சிங்கள தேசியவாதிகளும், தமிழ் தேசியவாதிகளும், நாம் அந்த உண்மையை அறிந்து கொள்வதை விரும்புவதில்லை.

அந்தக் காலகட்டத்தில் சிறி எதிர்ப்பு போராட்டம் இரண்டு தடவைகள் இடம்பெற்றன. இரண்டுக்கும் இடையில் குறைந்தது ஆறு மாத கால இடைவெளி இருந்தது. இரண்டாவது சிறி எதிர்ப்பு போராட்டம் தான், தமிழர் விரோத இனக்கலவரத்தில் போய் முடிந்தது. இனக்கலவரமானது, வெறுமனே "தமிழரின் அரசியல் அபிலாஷைகளுக்கு எதிரான இனவெறி சிங்களவர்களின் தன்னியல்பான நடவடிக்கை அல்ல." யாராலோ நன்கு திட்டமிடப் பட்டிருந்தது. அந்த தீய சக்திகள் எவை? கலவரத்திற்கு முன்னர், முதலாளிகள், நிலப்பிரபுக்கள், மேட்டுக்குடி அரசியல் தலைவர்கள், இவர்கள் அனைவரதும் பொருளாதார நலன்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இந்த "பாதிக்கப்பட்ட வர்க்கம்" சிங்களவர், தமிழர் ஆகிய இரண்டு இனங்களிலும் இருந்துள்ளன. நில உச்சவரம்புச் சட்டம், தனியார் நிறுவனங்களை தேசியமயமாக்கல், போன்ற அரச கொள்கைகளால் அதிருப்தியுற்ற பூர்ஷுவா வர்க்கத்தினர், வன்மத்துடன் காத்திருந்தனர். அவர்களது கோபத்தை மேலும் கிளறுவதாக, 1958 மே மாதம் இடம்பெற்ற சம்பவங்கள் அமைந்து விட்டன. இடதுசாரிக் கட்சிகள் அறிவித்த வேலை நிறுத்தப் போராட்டமே, இனக்கலவரத்தை தூண்டி விட ஏதுவாக அமைந்தது.

போராட்டத்தை தொடர்ந்து நடத்தி, தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு, இடதுசாரிக் கட்சிகளின் தலைமை தவறி விட்டது. இதனால் ஏமாற்றமடைந்த சிங்கள தொழிலாளர்களுக்கு வடிகால் தேடிக் கொடுப்பதற்காக, சிங்கள இனவாதிகள் தமிழர்களை தாக்குவதற்கு ஏவி விட்டனர். அன்றைய காலங்களில், சிங்களவர்கள் மத்தியில் தமிழர்கள் பற்றிய தவறான கருத்துக்கள் பரப்பப் பட்டிருந்தன. அவை, ஐரோப்பாவில் நிலவிய யூதர்களுக்கு எதிரான இனவாதக் கருத்துகளுடன் ஒப்பிடத் தக்கன. அதாவது, "தமிழர்கள் எல்லோரும் படித்த மேட்டுக்குடி வர்க்கத்தினர். நிறுவனங்களை நடத்துவதிலும், அரச பதவிகளிலும் அவர்களது ஆதிக்கம் தான் நிலவுகின்றது. சிங்களவர்களை சுரண்டிப் பிழைக்கும் தமிழர்கள் மிகவும் தந்திரசாலிகள்." இதிலே வேடிக்கை என்னவென்றால், இது போன்ற கருத்துகளை, சிங்கள இனவாதிகள், சிங்கள மக்கள் மனதில் இனவெறியை தூண்டுவதற்காக வேண்டுமென்றே பரப்பி வந்தனர். மறுபக்கத்தில், தமிழினவாதிகள், இதே கருத்துகளை தமக்கு சாதகமானதாக பார்த்தார்கள். தம்மை யூதர்களுடன் ஒப்பிட்டு சிந்திக்கப் பழகினார்கள்.

கொழும்பு நகரில், இனக்கலவரத்தின் போது, பெரும்பாலும் வசதி படைத்த தமிழர்களின் வீடுகள் இலக்கு வைத்து தாக்கப் பட்டன. கொழும்பு நகரில் தமிழர்கள் கொலை செய்யப் படுமளவிற்கு, கலவரம் தீவிரமடைந்ததற்கு சில வதந்திகள், அல்லது தவறான தகவல்கள் காரணமாக அமைந்தன. அதற்கு முன்னால் கலவரம் எவ்வாறு ஆரம்பமாகியது என்று பார்ப்போம். சிங்கள முதலாளிகள், மே மாதம் இடம்பெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை, எப்பாடு பட்டாவது குழப்ப வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு நின்றனர். அமைச்சர்களான விமலா விஜெவர்த்தனவும், தஹாநாயக்கவும், "வேலைநிறுத்தப் போராட்டம், தமிழரின் சதி" என அறிவித்தனர். மே 22 தொடக்கம் 25 வரையிலான நாட்களில், சிங்களப் பெரும்பான்மைப் பிரதேசமான, அனுராதபுரம், பொலநறுவையில் வாழ்ந்த தமிழர்கள் தாக்கப் பட்டனர். இன்று அங்கே ஒரு தமிழர் கூட வாழ முடியாதவாறு, இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டனர். மே 26 தொடக்கம் ஜூன் 3 வரையில், தமிழ்ப் பெரும்பான்மை பிரதேசமான வடக்கு, கிழக்கிற்கு கலவரம் பரவியது. அரச அலுவலகங்கள் இலக்கு வைத்து தாக்கப் பட்டன. குறிப்பாக வடக்கில், சிங்களவர்கள் அடித்து விரட்டப் பட்டனர். இதுவும், ஏறாவூரில் நடந்த பெருந்தோட்ட முதலாளியின் கொலையும், கொழும்பில் கலவரம் பரவ காரணமாக அமைந்தன.

கிழக்கு மாகாணத்தில், ஏற்கனவே சிங்களக் குடியேற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் போர்க்குணாம்சம் கொண்டவர்கள். ஏறாவூர் பகுதியில் மட்டுமே குறிப்பிடத் தக்க அசம்பாவிதங்கள் இடம்பெற்றன. தண்டவாளம் கழற்றப் பட்டதால், பொலநறுவையில் இருந்து கிழக்கு நோக்கி வந்த ரயில் வண்டி தடம் புரண்டது. வாகனமொன்று டைனமைட் குண்டு வெடிப்புக்கு இலக்கானதால், ஒரு போலீஸ்காரர் மரணமடைந்தார். அதை விட, சிங்கள பெருந்தோட்ட முதலாளி செனவிரத்ன ஏறாவூரில் வைத்து சுட்டுக் கொல்லப் பட்ட செய்தி, நாடு முழுவதும் கொந்தளிப்பை உருவாக்கியது. முதலாளியின் தனிப்பட்ட விரோதிகளே அவரை சுட்டுக் கொன்றிருந்த போதிலும், அன்றைய குழப்பகரமான சூழ்நிலையில், தமிழர்களின் செயலாக கருதப் பட்டது. அடுத்த நாள் வானொலியில் உரையாற்றிய பிரதமர் பண்டாரநாயக்க, "செனவிரத்ன கொலையை தமிழர்களே செய்ததாக" பழி சுமத்தினார். பிரதமரின் தொலைநோக்கற்ற உரையானது, "தமிழர்களே முதலில் சிங்களவர்களை தாக்கினார்கள்." என்ற தவறான நிலைப்பாட்டை உருவாக்க வழிவகுத்து விட்டது.

கொழும்பு நகரில் தமிழர்களின் கடைகள் கொள்ளையடிக்கப் பட்டன. கண்ணில் பட்ட தமிழர்கள் கொலை செய்யப் பட்டனர். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளானார்கள். பல இடங்களில், "இது செனவிரத்ன கொலைக்கு பழிவாங்கல்" என்று நியாயம் கற்பிக்கப் பட்டது. தமிழர் மீதான தாக்குதல்கள் கொழும்பில் இருந்து ஆரம்பித்து, கரையோரமாக காலி வரை பரவியது. யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த சிங்களக் குடும்பங்களின் வருகை, கொழும்பு நகர கலவரத்தை தூண்டி விடுவதற்கு காரணமாக அமைந்தது. யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்களக் குடும்பங்கள், தமிழர்களால் தாக்கப்பட்டதால், அல்லது தாக்குதல் அச்சம் காரணமாக தெற்கிற்கு இடம்பெயர்ந்தனர். விமானம் மூலமாக இரத்மலானை விமான நிலையத்திலும், ரயில் மூலம் கோட்டை புகையிரத நிலையத்திலும் வந்திறங்கிய அகதிகள், தமக்கு நேர்ந்த அவலத்தை சற்று மிகைப் படுத்தியே கூறியிருந்தனர். இருப்பினும், தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு, "வடக்கில் இருந்து வெளியேறிய சிங்கள அகதிகளையும்" காரணமாக காட்டி நியாயம் தேடிக் கொண்டனர். ("கொழும்பில் தமிழர்கள் வாழ்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் ஒரு சிங்களவன் வாழமுடியாது." என்ற விடயம் இன்றும் கூட, சாதாரண சிங்கள மக்களை தமிழர்களுக்கு எதிராக திருப்பி விட பயன்படுத்தப் படுகின்றது.)

இதே நேரம் பொலநறுவை மாவட்டத்தில், திட்டமிட்ட படுகொலைகள் அரங்கேறின. தமிழ்த் தொழிலாளர்களின் குடியிருப்பினுள் புகுந்த சிங்களக் காடையர்கள், எழுபது தமிழர்களை வாள்களால் வெட்டிக் கொன்றனர். விவசாய அலுவலர்களாக கடமையாற்றிய அதிகாரிகளின் பங்களாக்களும் எரிக்கப் பட்டன. அன்று பல சிங்களக் குடியேற்றக் கிராமங்களுக்கு தமிழ் அதிகாரிகள் நியமிக்கப் பட்டிருந்தனர்! ஆரம்பத்தில் அவை யாவும் அரசினால் முன்னெடுக்கப் பட்ட, விவசாய அபிவிருத்திக் கிராமங்களாக இருந்தன. பின்னர் தான், சிங்களவர்களை திட்டமிட்டு குடியேற்றும் அரசின் திட்டம் தெரிய வந்தது. அன்றிருந்த சூழலில், சிங்கள பேரினவாதக் கருத்துக்கள் பரவிய காலத்தில், ஒரு தமிழ் அதிகாரி குடியேற்றக் கிராமங்களுக்கு பொறுப்பாக இருப்பதை சிங்களவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குடியேற்றங்களில் ஆரம்பித்த வன்முறை, முழுக்க முழுக்க இனவெறியைக் கொண்டிருந்தது. இருப்பினும், அயலில் இருந்த தமிழ்க் கிராமங்கள் மீதான வன்செயல்கள் யாவும், நில ஆக்கிரமிப்பு நோக்கத்தைக் கொண்டிருந்தன. அதாவது, சிங்களப் பகுதிகளில் நிலமற்ற விவசாயிகள், தமிழ்ப் பகுதிகளில் விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பதற்கு, அரசே உறுதுணையாக இருந்தது. இலங்கையில் பொருளாதார வளங்கள் மீதான மனித சமூகத்தின் போட்டியானது, இனத்துவ முறையில் தீர்க்கப் பட்டது. தாம் பெரும்பான்மை சமூகமாக இருப்பதால், இலங்கையில் பொருளாதார வளங்கள் யாவும் தமக்கு உரிமையாக வேண்டும் என்று சிங்களவர்கள் கருதிக் கொண்டனர்.

கொழும்புக்கு அருகில் உள்ள இந்துக் கோயில் ஒன்றினுள் வைத்து, இரண்டு பூசாரிகள் கொலை செய்யப் பட்ட செய்தியானது, தமிழ்ப் பகுதிகளில் காட்டுத்தீயாக பரவியது. யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும், செய்தியைக் கேள்விப்பட்ட தமிழர்கள் சிங்கள விரோத வன்முறையில் இறங்கினார்கள். கிழக்கு மாகாணத்தில், பருவ காலத்திற்கு வந்து மீன்பிடிக்கும் சிங்கள மீனவர்கள் தாக்கப் பட்டனர். யாழ் நகரில் இருந்த பௌத்த விகாரை, நூற்றுக் கணக்கான இளைஞர்களால் தாக்கப் பட்டது. அங்கிருந்த பிக்கு ஒருவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். வல்வெட்டித்துறையில் தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் நிலையங்கள் காலி செய்யப் பட்டு, போலீசார் பெரிய முகாம்களுக்கு மாற்றப் பட்டனர். வல்வெட்டித்துறையிலும், காரைநகரிலும் சுங்க வரித் திணைக்களங்கள் தாக்கப் பட்டன. அங்கிருந்த ஆவணங்கள் யாவும் எரிக்கப் பட்டன. அன்று, இந்தியாவுடனான வர்த்தக படகுச் சேவை, காரைநகர் ஊடாக நடந்து கொண்டிருந்தது. அதனால், வடக்கில் பிரதானமான சுங்கவரி அலுவலகம் காரைநகரில் அமைந்திருந்தது. இந்த சம்பவத்தை மேலெழுந்தவாரியாக பார்க்கும் பொழுது, அரச எதிர்ப்பு நடவடிக்கையாக தோன்றும். ஆனால், இந்தியாவில் இருந்து, சட்டவிரோதமாக பொருட்களைக் கடத்திக் கொண்டிருந்த கடத்தல்காரர்களின் செயல் என்று பின்னர் தெரிய வந்தது. சுங்க வரி அலுவலக ஆவணங்களை எரிப்பதால், கடத்தல்காரருக்கே நன்மையாக அமையும்.

மே மாதம், 30 ம் திகதி, நயினாதீவில் உள்ள சரித்திரப் பிரசித்தி பெற்ற பௌத்த விகாரை, டைனமைட் குண்டு வைத்து தகர்க்கப் பட்டது. யாழ் குடாநாட்டில் இருந்து படகுகளில் வந்த குழுவினராலேயே விகாரை தாக்கப் பட்டது. அநேகமாக, கடத்தல்காரர்களே இந்த செயலுக்கு காரணம் என சந்தேகிக்கப் பட்டது. நயினாதீவு விகாரை தகர்ப்பினால், தெற்கில் தமிழர்கள் மீதான படுகொலைகள் மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவியது. அரசும், ஊடகங்களும் செய்தியை வெளியிடாமல் மூடி மறைத்து விட்டன. இருப்பினும் யாழ் குடாநாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள், இலங்கையின் இனப்பிரச்சினை வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்து விட்டது. யாழ் நகரில், தமிழரசுக் கட்சியின் அரசியலால் கவரப்பட்ட தமிழ் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். ஆயினும், பொலிஸ் நிலையங்களை, சுங்க வரி அலுவலகங்களை தாக்கியதன் மூலம், எதிர்கால ஆயுதப் போராட்டத்திற்கு பிள்ளையார் சுழி இடப்பட்டது. எழுபதுகளில், ஈழத்திற்கான ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்த, "தமிழீழ விடுதலை இயக்கம்", "தமிழீழ விடுதலைப் புலிகள்" போன்ற இயக்கங்களின் ஸ்தாபகர்கள் பெரும்பாலும் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள். "இந்தியாவுடனான சட்டவிரோத படகுப் போக்குவரத்து, தமிழக அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பு", என்பன ஈழப் போராட்ட வளர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ளன.

(தொடரும்)


(1958 இனக்கலவரத்தில் நடந்த சம்பவங்கள் யாவும் "Emergency '58" நூலில் விவரமாக தொகுக்கப் பட்டுள்ளன.)
1.Emergency '58 – The Story of the Ceylon Race Riots
2.Tarzie Vittachi’s “Emergency ’58” Re-Visited

****************************
இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
11. "ஸ்ரீ" : இன முரண்பாட்டுக்கு காரணமான ஓர் எழுத்து!
10. இலங்கையின் "இனப் பிரபுத்துவ" சமுதாயக் கட்டமைப்பு
9. "சிங்கள-தமிழ் தேசியவாதம்" அல்லது "பண்டா-செல்வா சித்தாந்தம்"
8. கம்யூனிசத்தை கருவறுத்த சிங்கள மறுமலர்ச்சி
7. அரிசி வேண்டுமா? அல்லது "சிங்களம் மட்டும்" வேண்டுமா?
6. ஆங்கிலேய அடிவருடிகளின் அற்புதத் தீவு
5. ஆங்கிலேயர் புறக்கணித்த "சிங்கள-தமிழ் மொழிப்பிரச்சினை"
4. மார்க்ஸியம்: சிங்கள-தமிழ் தேசியவாதிகளின் பொது எதிரி
3. உலகப் பொருளாதார நெருக்கடி, இலங்கைத் தமிழருக்கு பேரிடி
2. பண்டாரநாயக்க, பொன்னம்பலம் : இரு நண்பர்களின் இன அரசியல்
1. சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்

Saturday, October 15, 2011

"ஸ்ரீ" : இன முரண்பாட்டுக்கு காரணமான ஓர் எழுத்து!


[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]
(பகுதி : பதினொன்று )


1958 ம் ஆண்டு, இலங்கையில் இடம்பெற்ற முதலாவது இனக்கலவரம் பற்றிய பக்கச்சார்பற்ற ஆய்வுகள் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன. சிங்கள பேரினவாதிகளும், தமிழ் குறுந் தேசியவாதிகளும் தமது நலன்களை பாதுகாக்கும் பொழிப்புரை வழங்குகின்றனர். தமிழ் தேசிய பார்வையில்: "இந்தக் கலவரமானது, தமிழர்களை இனச் சுத்திகரிப்பு செய்யும் நோக்குடன், சிங்களவர்கள் நடத்திய இனப் படுகொலையின் ஆரம்பம்." சிங்கள தேசிய பார்வையில்: "வட-கிழக்கில் வாழும் சிங்கள சகோதரர்கள் தாக்கப் பட்டதற்கு பதிலடி".

Tarzie Vittachi எழுதிய “Emergency ’58" நூல், அன்று நடந்த கலவரம் பற்றிய சிறந்த வரலாற்று ஆவணத் தொகுப்பாக கருதப் படுகின்றது. கலவரத்தின் போது நடந்த அனைத்து சம்பவங்களையும் பதிவு செய்துள்ள அந்த நூலில், தமிழர்களே அதிகமாக பாதிக்கப் பட்டிருப்பது தெளிவாகத் தெரிகின்றது. கிழக்கு மாகாண எல்லையோராமாக உள்ள, பொலநறுவை மாவட்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் அனைவரும் அடித்து விரட்டப் பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில், சிங்களக் குடியேற்றக் கிராமங்களும் தமிழர் விரோத வன்முறைக்கு களமாக விளங்கியுள்ளன. மலையகத்தில் இந்திய வம்சாவழி தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டனர். கொழும்பில் நடுத்தர வர்க்க தமிழர்களின் வீடுகள் இலக்கு வைத்து தாக்கப் பட்டுள்ளன. சில இடங்களில், தமிழர்கள் தற்பாதுகாப்புக்காக பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இருப்பினும், யாழ் மாவட்டத்தில் நடந்த சில அசம்பாவிதங்கள் வித்தியாசமானவை. இவை குறித்து விபரமாக பார்ப்பதற்கு முன்னர், அன்றைய சமூக-அரசியல் பின்னணியை ஆராய வேண்டும். சிங்களவர்களும், தமிழர்களும் ஒருவரை ஒருவர் விரோதிகளாக கருதி கொல்வதற்கு ஏதுவான முரண்பாடுகள், ஏற்கனவே அங்கு இருந்திருக்க வேண்டும்.

1956 வரையிலான இலங்கையர் சமுதாயம் பின்வரும் குணாம்சங்களை கொண்டிருந்தன. அவை, சிங்களவர், தமிழர், இரண்டு இனங்களுக்கும் பொதுவானவை. ஆங்கிலேய காலனிய கால நிர்வாகம், சுதந்திரத்திற்குப் பின்னரும் தொடர்ந்தது. ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியானது, பிரிட்டிஷ் காலனிய எஜமானர்களுக்கு விசுவாசமான சேவகனாக இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியானது, வேறு மாற்று இல்லாத, அனைத்து சமூகங்களுக்கும் பொதுவான கட்சியாக தன்னைக் காட்டிக் கொண்டது. தமிழ்க் காங்கிரஸ், தமிழர்கள் நலன் குறித்து பேசினாலும், மறைமுகமாக ஆளும் கட்சியுடன் ஒத்துழைத்தது. இரண்டு கட்சியினரும் ஒரே மாதிரியான சமூகப் பின்னணி கொண்டவர்களால் பிரதிநிதித்துவப் படுத்தப் பட்டன. ஆங்கில வழிக் கல்வி கற்ற மேட்டுக்குடியினர், கொவிகம-வெள்ளாள சாதியினரின் ஆதிக்கம் அவ்விரண்டு கட்சிகளிலும் அதிகமாக காணப்பட்டது. இன அடையாளத்தை விட, சாதிய அடையாளமே முக்கியமாக கருதப்பட்ட சமுதாயத்தில், பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரின் நலன்கள் புறக்கணிக்கப் பட்டு வந்தன.

"சந்தையில் உள்ள ஓட்டை" என்று வணிகத்தில் கூறுவது போல, "பாராளுமன்ற ஜனநாயக முறையில், இனம் சார்ந்த அரசியல் சித்தாந்தம் அதிக நன்மை பயக்கும்", என்று சில அறிவுஜீவிகள் உணர்ந்து கொண்டனர். சிங்கள இனத்தின் பழம்பெருமை பேசும் சிங்கள தேசியவாதம், அனைத்து சிங்களவர்களையும் சாதிய வேற்றுமை கடந்து ஒன்றிணைத்தது. அதே போன்று, தமிழின பழம் பெருமை பேசும் தமிழ் தேசியம், சாதியால் பிளவுண்ட தமிழர்களை ஒன்று சேர்த்தது. பண்டாரநாயக்கவின் சுதந்திரக் கட்சியும், செல்வநாயகத்தின் தமிழரசுக் கட்சியும், ஒரே வேலையை இரண்டு தளங்களில் செய்து கொண்டிருந்தன. சிங்களவர்கள் பெரும்பான்மையாக இருந்ததால், பௌத்த-சிங்கள மறுமலர்ச்சி பேரினவாதமாக பரிணமித்தது. தனது இனத்தின் மேலாண்மையை மட்டும் சிந்திப்பவர்களுக்கு, பிற இனங்களை ஒடுக்குவது தவறாகத் தெரிவதில்லை. 1956 தேர்தலில், சுதந்திரக் கட்சியின் வெற்றியை, சிங்களத் தேசியவாதத்தின் வெற்றியாக கருதினார்கள். சிங்களவர் கையில் அதிகாரம் வந்து விட்டால், இலங்கை பௌத்த-சிங்கள நாடாக்கலாம் என கடும்போக்காளர்கள் கனவு கண்டார்கள். ஆனால், அமைச்சரவையில் இடதுசாரிகளைக் கொண்டிருந்த பண்டாரநாயக்க அரசு, அவர்களை ஏமாற்றமடைய வைத்தது.

மறு பக்கத்தில், சிங்கள தேசியத்திற்கு போட்டியாக தோன்றிய தமிழ் தேசியவாதம், தமிழ்ப் பிரதேசங்களுக்கு உரிமை கோரியது. "ஆண்ட பரம்பரையான தமிழினம் மீண்டும் ஆள்வதற்கு தனியரசு வேண்டும்" என்ற கோரிக்கையில் உருவானது தான் தமிழரசுக் கட்சி. பிரிட்டிஷாரும், சிங்களவர்களும் தம்மை பிரிவினைவாதக் கட்சியாக கருதி விடக் கூடாது என்பதற்காக, ஆங்கிலத்தில் "சமஷ்டிக் கட்சி" என்று பெயரிட்டுக் கொண்டனர். உண்மையில் அவர்கள் தமது கொள்கைகள் குறித்து தெளிவாக வரையறை செய்யா விட்டாலும், தமிழர்கள் சார்பில் அரசுடன் பேரம் பேசும் சக்தியைக் கொண்டிருந்தனர். யாழ்ப்பாண சமூகத்தில், அனைத்து சாதிகளையும் சேர்ந்த நடுத்தர வர்க்க பிரதிநிதிகளை கொண்டிருந்ததால், அவர்களால் ஒன்று பட்ட தமிழ் இன/மொழி உணர்வை ஏற்படுத்த முடிந்தது. குறிப்பாக "சிங்களம் மட்டும்" சட்டமானது, சிங்கள மொழியில் பாண்டித்தியம் பெறாத, ஆங்கிலத்தில் மட்டுமே பணியாற்றத் தெரிந்த, தமிழ் நடுத்தர வர்க்கத்தை கடுமையாக பாதித்தது. அவர்களில் பலர் வேலை இழந்தனர். தமிழரசுக் கட்சியானது, எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்ட தமிழ் நடுத்தர வர்க்கத்தின் விரக்தியை பயன்படுத்திக் கொண்டது. "தமிழ் மட்டும்" ஆட்சி மொழியான தனியரசில் அவர்களது அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படும் என உறுதியளித்தது.

தமிழரசுக் கட்சியின் சமஷ்டிக் கோரிக்கைக்கு பண்டாரநாயக்க அரசு இணங்கியிருக்கப் போவதில்லை. ஆயினும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழை பிராந்திய மொழியாக்குவதில் பண்டாரநாயக்கவுக்கு ஆட்சேபணை இருக்கவில்லை. பண்டா-செல்வா ஒப்பந்தத்தின் பிரகாரம் பிரதேச சபைகள் அமைப்பதற்கும் ஒப்புக் கொள்ளப் பட்டது. அந்த ஒப்பந்தத்திற்கு, "சிங்களவர்கள் அனைவரும் எதிப்புத் தெரிவித்தாக" கூறுவது தவறு. பண்டாரநாயக்கவே சிங்களப் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து, ஒப்பந்தத்திற்கு மக்களிடம் ஆதரவு திரட்டினார். பண்டாரநாயக்க என்ற ஆளுமை பொருந்திய நபருக்காக என்றாலும், சாதாரண சிங்கள மக்கள் ஒப்பந்தத்தை வரவேற்றனர். நாட்டில் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென நினைப்பதே பாமர மக்களின் மனோபாவமாகும். நிச்சயமாக, அரசாங்கத்தில் இருந்த கடும்போக்காளர்களும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், பௌத்த பிக்குகளும் ஒப்பந்தத்தை எதிர்க்கவே செய்தனர். மொத்த சிங்கள மக்கட்தொகையில், அத்தகைய பிரிவினர் சிறுபான்மையினர் தான். இருப்பினும், உணர்ச்சிகரமான பேச்சுகளால் மக்களை உசுப்பி விடும் வல்லமை பெற்றிருந்தனர். தமிழ்ப் பிரதேசங்களில், தமிழ்க் காங்கிரஸ் "ஒப்பந்த எதிர்ப்பு அரசியலில்" இறங்கியது. "செல்வநாயகம் சிங்களவன் காலில் விழுந்து சரணடைந்து விட்டார்," என்று பிரச்சாரம் செய்தது.

பண்டா-செல்வா ஒப்பந்தத்தின் சாராம்சம் பின்வருமாறு. பிராந்திய சபைகள் கல்வி, விவசாயம் போன்ற துறைகளில் அதிகாரம் பெற்றிருக்கும். சில வரிகளையும் அறவிடலாம். (எனினும் இது குறித்து பாராளுமன்றம் இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டும்.) மாகாண எல்லை கடந்தும், தமிழ்க் கிராமங்களை இணைக்க முடியும். மேலும், சிங்களக் குடியேற்றக் கிராமங்கள் கூட, தமிழ் பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் வரும். கடைசியாகக் கூறப்பட்டது, தமிழர் தரப்பிற்கு கிடைத்த வெற்றியாக கருதலாம். ஏனெனில், சிங்களக் குடியேற்றக் கிராமங்கள் தான், தமிழ்ப் பிரதேசத்தில் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டிருந்தன. சிங்கள கடும்போக்காளர்கள், பண்டா-செல்வா ஒப்பந்தமானது, தமிழருக்கு அதிகளவில் விட்டுக் கொடுத்து விட்டதாக, அல்லது பிரிவினைக்கான முதல் படியாக கருதினார்கள். அந்தக் காலத்தில், எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியானது, ஜெயவர்த்தனவால் தலைமை தாங்கப் பட்டது. ஜெயவர்த்தனாவும், பண்டாரநாயக்க போன்றே, கிறிஸ்தவராக இருந்து பௌத்தராக மதம் மாறி, சிங்கள தேசியக் கொள்கைகளை கடைப்பிடித்து வந்தவர். சிங்களப் பேரினவாதக் கருத்துக்கள், வெகுஜன அரசியலில் இலகுவில் எடுபடுவதை உணர்ந்து கொண்டார். கட்சிக்கு ஆதரவு வாக்குகளை திரட்டுவதற்காகவும், பௌத்த பிக்குகளின் அனுதாபத்தைப் பெறுவதற்காகவும், பண்டா-செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து பாத யாத்திரை நடத்தினார்.

பக்தர்கள் யாத்திரை செல்வதைப் போல, ஐக்கிய தேசியக் கட்சி தொண்டர்கள் கண்டியில் உள்ள தலதா மாளிகைக்கு பாத யாத்திரை சென்றனர். போகும் வழியில், சுதந்திரக் கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இரண்டு கட்சியினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. திட்டமிட்ட படி, நான்காம் நாள் கண்டியை சென்றடைந்த ஜெயவர்த்தன, "தீமை பயக்கும் ஒப்பந்தத்தை அழிக்க வேண்டுமென, கடவுளிடம் ஆசி வாங்கிக் கொண்டு" திரும்பினார். ஆனால், கடவுள் அந்தளவு சக்தி வாய்ந்தவராகத் தெரியவில்லை. ஒக்டோபரில் பாத யாத்திரை நடந்திருந்தாலும், ஆறு மாதங்களுக்குப் பின்னர் தான் ஒப்பந்தம் கிழித்தெறியப் பட்டது. எதிர்க்கட்சியினரின் நெருக்குவாரங்களுக்கு அடிபணிவது இழுக்கு என்று பண்டாரநாயக்க கருதியிருக்கலாம். ஆயினும், ஒப்பந்தத்தில் கூறப்பட்ட வாக்குறுதிகளை அமுல் படுத்துவதற்கு முனையவில்லை. இதனால், தமிழர் தரப்பில் அதிருப்தி உருவானது. 1958 மார்ச் மாதமளவில், நாட்டில் கொந்தளிப்பான சூழ்நிலை தோன்றியது. வாகன இலக்கத் தகடுகளில், ஆங்கில எழுத்துகளுக்கு பதிலாக, சிங்கள "ஸ்ரீ" எழுத்துப் பொறிக்கும் நடைமுறை வந்தது. (சிங்கள ஸ்ரீ எழுத்து (ශ්‍රී ), மலையாள ஸ்ரீ போன்றிருக்கும்.) வட மாகாணத்தில் "ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம்" நடந்தது. ஸ்ரீ இலக்கத்தகடு பொருத்திய வாகனங்கள் கல் வீச்சுக்கு இலக்காகின, அல்லது ஸ்ரீ எழுத்துகள் தார் பூசி அழிக்கப் பட்டன.

"ஸ்ரீ எதிர்ப்பு போராட்டம்" தெற்கில் சிங்கள இனவாதிகளை உசுப்பி விட்டது. கொழும்பு நகரிலும், தென்னிலங்கையின் பல பகுதிகளிலும் தமிழ் எழுத்துகள் தார் பூசி அழிக்கப் பட்டன. தமிழ்ப் பொதுமக்களும், தமிழ்க் கடைகளும் தாக்கப் பட்டன. நிலைமை மோசமடைவதை உணர்ந்த தமிழ் அரசியல் தலைவர்கள், போராட்டத்தை இடை நிறுத்தினார்கள். இருப்பினும், "ஸ்ரீ எதிர்ப்பு போராட்டமானது, சிங்களவர்களை இனவழிப்பு செய்யும் உள்நோக்கம் கொண்டது!" என இனவாதப் பிக்குகள் பிரச்சாரம் செய்தனர். கொழும்பில் பிரதமரின் இல்லம் முன்பு, இனவாதப் பிக்குகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். வீதியை மறித்து போராட்டம் நடந்ததால், பண்டாரநாயக்கவினால் வீட்டிற்கு போக முடியவில்லை. பிக்குகளுடன் எந்தளவு பரிந்து பேசியும், அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. வேறு வழியின்றி, வானொலி நிலையத்திற்கு சென்ற பண்டாரநாயக்க, "பண்டா-செல்வா ஒப்பந்தம் உடனடியாக இரத்து செய்யப் படுவதாக" அறிவித்தார். அப்போதும் திருப்தியடையாத பிக்குகள், "சுதந்திரக் கட்சியை கலைக்க வேண்டும். இந்திய வம்சாவழித் தமிழரை திருப்பி அனுப்ப வேண்டும்." என்று கோரினார்கள். இவை யாவும் நடைமுறைச் சாத்தியமில்லாதவை என்று மறுத்த பண்டாரநாயக்க, அரச முத்திரையில் உள்ள தமிழ் எழுத்துகளை நீக்குவதற்கு மட்டும் சம்மதித்தார்.

பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப் பட்டதை எதிர்த்து, தமிழரசுக் கட்சியினர் வவுனியாவில் கண்டனக் கூட்டம் நடத்தினார்கள். ஆனால், வேறெந்த அரச எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இதே நேரத்தில், ஏப்ரல் மாதம் நாடளாவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. வழக்கம் போல, இடதுசாரிக் கட்சிகளே வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கின. ஆனால், "வேலை நிறுத்தம் தமிழரின் சதி!" என்று, வலதுசாரி சக்திகள் வதந்தியைப் பரப்பி விட்டன. அரசாங்கத்திலும் சில கடும்போக்காளர்கள் அவ்வாறு தெரிவித்ததால், வதந்தியை உண்மை என்றே சிங்கள மக்கள் நம்ப ஆரம்பித்தனர். சுகாதார அமைச்சர் விமலா விஜேவர்த்தன, கல்வி அமைச்சர் தஹாநாயக்க போன்றோர், இவ்வாறு தமிழர் விரோதக் கருத்துகளை பரப்பினார்கள். பிற்காலத்தில், பண்டாரநாயக்க கொலையில் இவர்களின் பங்கிருந்தது கண்டறியப் பட்டது. பண்டாரநாயக்க அரசில் பிலிப் குணவர்த்தன போன்ற இடதுசாரிகளின் செல்வாக்கு உயர்ந்ததால், அதிருப்தியடைந்த வலதுசாரி சக்திகள், தமக்குள் ஒன்றிணைய ஆரம்பித்தன. இந்த சக்திகள், பல தரப்பட்ட பின்னணியை கொண்டவை. நில உச்சவரம்பு சட்டத்தால் பாதிக்கப்பட்ட நிலவுடமையாளர்கள் மற்றும் பௌத்த பிக்குகள். தேசியமயமாக்கல் கொள்கையால் நிறுவனங்களை பறிகொடுத்த முதலாளிகள். இவர்கள் எல்லோரும், எதிர்க் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தனர்.

அநேகமாக, பேரூந்து வண்டி நிறுவன முதலாளிகளே, தேசியமயமாக்கலால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். காலனிய காலத்தில் அறிமுகப் படுத்திய, மக்களின் அத்தியாவசிய போக்குவரத்து சாதனமான பேரூந்து வண்டிகள் யாவும், தனியார் வசம் இருந்தன. தரகு முதலாளிய ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில், பேரூந்து வண்டி உரிமையாளர்கள் பல சலுகைகளை அனுபவித்தனர். அதற்குப் பிரதியுபகாரமாக, தேர்தல் காலத்தில் உழைக்கும் மக்களை இலவசமாக ஏற்றிக் கொண்டு வந்து ஐ.தே.கட்சிக்கு வாக்களிக்க வைப்பார்கள். அந்தக் காலத்தில் அது சட்டவிரோதமாக கருதப் படவில்லை. பண்டாரநாயக்க அரசு, பேரூந்து வண்டிகளை தேசியமயமாக்கியதற்கு, ஐ.தே.கட்சியின் தேர்தல் மோசடி ஒரு காரணமாக இருக்கலாம். ஆயினும், உழைக்கும் மக்களுக்கு அதனால் பலன் கிடைத்தது. அரச மானியம் கொடுத்து, சீட்டுகளின் விலை குறைக்கப் பட்டது. மாணவர்களுக்கு சலுகை விலையில், பருவகால சீட்டுகள் விற்பனை செய்யப் பட்டன.

தனியார் பஸ் வண்டிகள் யாவும், "இலங்கை போக்குவரத்து சபை" (இபோச) என்ற அரச நிறுவனத்தின் கீழ் கொண்டு வரப் பட்டன. இபோச யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிய புதிய பஸ் வண்டிகளில், சிங்கள ஸ்ரீ எழுத்துப் பொறிக்கப் பட்டிருந்தது. அப்போது தான் "ஸ்ரீ எதிர்ப்பு போராட்டம்" நடந்தது. இளைஞர்களின் கல்வீச்சுக்கு ஆளான பஸ் வண்டியை ஓட்டிச் சென்ற சாரதி பொலிஸ் நிலையம் ஒன்றினுள் தஞ்சம் புகுந்தார். அப்போது பொலிஸ் நிலையம் மீதும் கற்கள் வீசப்பட்டதால், போலீசார் சுட்டதில் சிலர் காயமுற்றனர். இந்தச் சம்பவம் யாழ் குடாநாட்டில் பதற்றத்தை தோற்றுவித்திருந்தது. இந்தப் போராட்டம் ஓய்ந்து ஒரு மாதம் முடிவதற்குள், தெற்கில் இடதுசாரிகளின் தொழிற்சங்கப் போராட்டம் நடந்தது.

தேசியமயமாக்கல் கொள்கையால் விழிப்புணர்வு பெற்ற இபோச ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் குதித்தனர். அவர்களின் கோரிக்கைகளான இலவச மருத்துவ காப்புறுதி, ஓய்விடம், ஊதிய உயர்வு போன்றன அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆயினும், வேலைநிறுத்தப் போராட்டத்தால் தோன்றிய குழப்ப நிலையை, முன்னை நாள் முதலாளிகள் பயன்படுத்திக் கொண்டனர். தமது பிழைப்பைக் கெடுத்த அரசை கவிழ்க்க இதுவே தக்க தருணம் எனக் கண்டுகொண்டனர். 1958 இனக்கலவரத்தின் பின்னணியில், முன்னாள் பஸ் வண்டி முதலாளிகளின் கை மறைந்திருந்ததாக சந்தேகிக்கப் படுகின்றது. ஆனால், அதனை நிரூபிக்கும் வலுவான ஆதாரம் கிடைக்கவில்லை. இனவெறியை வளர்த்து, சிங்கள-தமிழ் உழைக்கும் வர்க்க ஒற்றுமையை குலைப்பதற்கு, வலதுசாரி முதலாளிய சக்திகள் திரைமறைவில் முயன்று வருகின்றன. அந்த சக்திகளுக்கு இடையிலான இரகசிய தொடர்பு, இன்று வரை துலங்காத மர்மமாகவே நீடிக்கின்றது.


(தொடரும்)

இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
10. இலங்கையின் "இனப் பிரபுத்துவ" சமுதாயக் கட்டமைப்பு
9. "சிங்கள-தமிழ் தேசியவாதம்" அல்லது "பண்டா-செல்வா சித்தாந்தம்"
8. கம்யூனிசத்தை கருவறுத்த சிங்கள மறுமலர்ச்சி
7. அரிசி வேண்டுமா? அல்லது "சிங்களம் மட்டும்" வேண்டுமா?
6. ஆங்கிலேய அடிவருடிகளின் அற்புதத் தீவு
5. ஆங்கிலேயர் புறக்கணித்த "சிங்கள-தமிழ் மொழிப்பிரச்சினை"
4. மார்க்ஸியம்: சிங்கள-தமிழ் தேசியவாதிகளின் பொது எதிரி
3. உலகப் பொருளாதார நெருக்கடி, இலங்கைத் தமிழருக்கு பேரிடி
2. பண்டாரநாயக்க, பொன்னம்பலம் : இரு நண்பர்களின் இன அரசியல்
1. சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்

Sunday, July 26, 2009

கொழும்பு கலவரத்தின் நீங்காத நினைவுகள்


கொழும்பு மாநகரம் வழக்கத்திற்கு மாறாக சன நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. ஒரு சில நாட்களுக்கு முன்னர், இனக்கலவரம் நடந்து ஓய்ந்திருந்தது. அரச போக்குவரத்து துறைக்கு சொந்தமான பஸ் வண்டியில், எங்களைத் தவிர வேறு தமிழர்கள் இருப்பதாக தெரியவில்லை. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து சிங்களத்திலேயே உரையாடிக் கொண்டோம். 

கொழும்பு இந்துக் கல்லூரியில் அமைந்திருக்கும் அகதி முகாம் நோக்கி பயணம் செய்கிறோம். வழி நெடுகிலும், அரை குறையாக எரிந்து போன தமிழர்களுடைய வீடுகள். அந்த வீடுகளில் வசித்தவர்கள் என்னவானார்கள்? நெருப்பில் கருகி இறந்திருப்பார்களா? அல்லது உடுத்த உடையோடு கிளம்பிப் போய் அகதிமுகாம்களில் அடைக்கலம் புகுந்திருப்பார்களா? நினைக்கவே ஒரு கணம் மெய் சிலிர்த்தது.

அரசாங்க ஊழியர்களின் குடியிருப்பில் எமது வீடு இருந்ததால், கலவரத்திற்குள் அகப்படாமல் தப்பிப் பிழைத்தது. இன வெறியூட்டப்பட்ட காடையர் கூட்டத்தை அப்போது சில அரசியல்வாதிகள் தான் நெறிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். சிங்களக் காடையர்கள் எங்கெங்கே அப்படியெல்லாம் கொலை செய்தார்கள், கொள்ளையடித்தார்கள், பாலியல் பலாத்காரம் செய்தார்கள், போன்ற கதைகளை எமது வீடுகளில் கூடும் நண்பர்கள் பேசிக் கொள்வார்கள். 

வசதி படைத்தோரின் குடியிருப்புகளுக்குப் பக்கத்திலேயே சேரிகளும் இருந்தன. சேரிகளில் இருந்த சிங்களவர்கள், வசதியான தமிழரின் வீடுகளை எரிக்கவும், கொள்ளையடிக்கவும் முன் நின்றதாக கேள்விப்பட்டோம். சில பணக்காரத் தமிழரின் வீடுகளில் வேலை செய்த சிங்கள வேலைக்காரர்கள், கலவரத்தை பயன்படுத்தி தமது எஜமானர்களையே கொலை செய்தனர், அல்லது காட்டிக் கொடுத்தனர். விதி விலக்காக சில கருணையுள்ள சிங்களப் பொது மக்கள் தமிழருக்கு அடைக்கலம் கொடுத்த கதைகளையும் கேள்வியுற்றோம். இத்தகைய சம்பவங்களை அறியும் வேளை, அப்போது சிறுவனான நானும் விரும்பியோ, விரும்பாமலோ அரசியலுக்குள் ஈர்க்கப்பட்டேன்.
தமிழர்கள் அதிகமாக வசித்து வந்த நகர்ப்பகுதியிலேயே, தற்காலிக அகதி முகாமாக மாற்றப்பட்ட அகதி முகாம் இருந்தது. பாடசாலை நுழை வாயிலில் ஆயுதமேந்திய காவல்துறையின் பிரசன்னம். 'சப் மெஷின் கன்' என்ற இயந்திரத் துப்பாக்கி ஏந்திய போலீசாரை அப்போது தான் பார்த்தேன். இந்த ஆயுதங்களால் ஏன் கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை, என்பது எனக்கு அப்போது புரியவில்லை. போலிஸ் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கும். போலீஸ என்பது புனிதமான ஒரு நிறுவனமல்ல என்ற உண்மை எனக்கு அப்போதே புரிந்தது. சாதாரண சிங்கள மக்களைப் போலவே, பொலிஸ் மற்றும் பல அரச துறைகளில் கடமையாற்றிய சிங்களவர்களின் இன உணர்வும் இருந்தது. நான் வசித்த குடியிருப்பில் பல தமிழ் அரச உத்தியோகத்தர்களின் குடும்பங்களும் இருந்தன. தமிழர்கள் என்ற ரீதியில் நாம் கூடிப் பேசுவது வழமை. சக சிங்கள பணியாளர்கள் "தமிழர்களின் கொட்டத்தை அடக்கவேண்டும்" என்று திட்டுவது பற்றிய கதைகள் கலந்துரையாடலில் இடம்பெறும்.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னரும் கொழும்பு மாநகரில் அதிக தமிழர்கள் பெரிய பதவிகளை வகித்து வந்தனர். அரசாங்கம் மற்றும் பல நிறுவனங்களில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் சற்று அதிகமாகவே இருந்தது. இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்கள் மட்டும் மிக மிகக்குறைவு. ஆங்கிலேயர் காலத்தில் இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பில், கலப்பின பரங்கியர்களுக்கு (Burghers) மட்டுமே இடமளித்து வந்தனர். 1961 ம் ஆண்டு, பரங்கி இராணுவ அதிகாரிகள் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு அது தோல்வியுற்றது. அதன் பிறகு, பெருமளவு பரங்கியர்கள் வெளிநாடுகளுக்கு ஓடி விட்டனர். அந்த சம்பவத்திற்குப் பின்னர் இராணுவத்தில் அதிகளவு சிங்கள இனத்தவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். கொழும்பில் வசித்த யாழ்ப்பாண தமிழர்கள் எப்போதும் பதவிகளை எதிர்பார்த்து தம்மை தயார்படுத்திக் கொள்பவர்கள். அதைக்காட்டியே இனவாதத்தை தூண்டி விட்ட சிங்கள அரசியல்வாதிகள், இனக்கலவரங்கள் மூலமும், சிங்கள மொழி மட்டும் சட்டம் மூலமும், தமிழரின் பதவிகளை பறித்துக் கொண்டனர்.

ஒரு காலத்தில் ஆங்கிலத்தில் மட்டும் கடமையாற்றிக் கொண்டிருந்த தமிழ் அரச உத்தியோகத்தர்கள், சிங்களம் சரளமாக தெரிந்திருந்தால் மட்டுமே அரச பதவிகளில் நிலைக்க முடியும் என்ற சட்டம் வந்த போது எதிர்த்தனர். கூடவே சிங்களமயமாக்கல் நாடெங்கும் தொடர்ந்தது. தமிழர்கள் எதிர்ப்பு காட்டிய போது, அதை அகம்பாவம் என்று சிங்களவர்கள் புரிந்து கொண்டனர். அதிலிருந்து ஒவ்வொரு தடவையும் தமிழரின் எதிர்ப்புக்கு பதிலடியாக இனக்கலவரம் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. தற்போது கலவரக் காலத்திற்கு மீண்டும் வருவோம்.

இந்துக் கல்லூரி அகதிமுகாமில், இரண்டு மாடிகளில் இருந்த வகுப்பறைகளில் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அனேகமாக அனைவரும் உடுத்த உடையுடன் வந்திருந்தனர். அவர்களில் பலர் வசதியாக வாழ்ந்தவர்கள். டாக்டர்கள், பொறியியலாளர்கள் என்று கௌரவமான பதவிகளை வகித்தவர்கள். சேர்த்து வைத்திருந்த, நகைகள், பணம் எல்லவாற்றையும் பறி கொடுத்து விட்டு வந்திருந்தனர். முகாமில் நிலவும் வசதிக் குறைபாடுகளை பார்வையிட்டுக் கொண்டிருந்த போது, ஓரிடத்தில் சலசலப்பு காணப்பட்டது. சனங்கள் இரண்டு பகுதியாக பிரிந்து வாக்குவாதப் பட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு விசாலமான மண்டபம். அகதிகள் சுவர்ப்பக்கமாக இரண்டு குழுக்களாக பிரிந்து நின்று வாய்ச் சமரில் ஈடுபட்டனர்.

நடுப்பகுதி மட்டும் வெற்றிடமாக இருந்தது. அங்கே 'சாக்' கட்டியால் கோடு கீறப்பட்டிருந்தது. எனக்கு உடனே அசோகவனத்தில் சீதை கிழித்த கோடு ஞாபகம் வந்தது. கோட்டுக்கு அந்தப்பக்கமும், இந்தப்பக்கமுமாக இரண்டு பிரிவுகளாக இருந்தனர். அவர்களுக்குள் எந்த வித்தியாசத்தையும் காணவில்லை. அங்கே என்ன நடக்கின்றது என்பது, ஒரு சில நிமிடங்களில் புரிந்தது. தம்மை உயர்சாதியாக கருதிக் கொள்ளும் ஒரு பிரிவினர், பிறரை தீண்டத்தகாதவர்களாக கோட்டிற்கு மறுபக்கம் இருத்தி இருந்தனர். சிங்களவனிடம் அடிவாங்கினாலும், அனைத்தையும் இழந்த போதும், யாழ்ப்பாணத் தமிழர்கள் சாதி அடையாளத்தை மட்டும் இழக்க மாட்டார்கள் என்பதை அப்போது புரிந்து கொண்டேன்.

எமது பாடசாலையில் அகதிகள் அதிக காலம் தங்கி இருக்கவில்லை. அரசாங்கம் யாழ்ப்பாணத்திற்கு ஒரு கப்பல், மட்டக்களப்பிற்கு ஒரு கப்பல் என்று ஒழுங்கு செய்து, அகதிகளை அவர்களது பூர்வீக இடங்களுக்கு அனுப்பி வைத்தது. அதுவரை இலங்கை என்பது அனைத்து சமூகத்தினருக்குமான தாயகம் என்று தான் என்னைப் போன்ற பலர் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் வடக்கு, கிழக்கு மட்டுமே எமது இடம் என்பதும், கொழும்பில் தமிழர்கள் "வந்தேறுகுடிகளாகவே" கணிக்கப்படுகின்றனர் என்பதும் அப்போது தெளிவாகியது.

அரசு என்ற அமைப்பு கலவரத்தின் போது தனது தமிழ் பிரசைகளை பாதுகாக்கத் தவறியது. இப்போது அதுவே தமிழருக்கு ஒரு தாயகப் பிரதேசத்தை சுட்டிக் காட்டியது. இனப்பிரச்சினையை இன்று பலர் பல்வேறு விதமாக புரிந்து கொள்கின்றனர். யானையை பார்த்த குருடர்களைப் போல, அவரவர் சொந்த வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்பு மட்டுமே இனப்பிரச்சினைக்கான புரிதலை உருவாக்குகின்றது. தமிழர் என்று தம்மை பகிரங்கமாக அடையாளப்படுத்த முடியாதது ஒரு சிலரின் பிரச்சினை. கலவரத்தில் உறவினர்களை, வீடுகளை இழந்தது இன்னொரு பிரிவினரின் பிரச்சினை. பிற்காலத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்கள், போரில் ஏற்பட்ட இழப்புகளை முன்னிலைப்படுத்தினர். இவ்வளவுக்கும் மத்தியில் சிங்கள பேரினவாத அரசு அமைதியாக தனது திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருந்தது.
...............................................................................................................................
(83 கருப்பு ஜூலையின் 26 வது நினைவுதினத்தையொட்டி பதிவிடுகின்றேன்.)