Saturday, December 20, 2025

1986 டிசம்பர், EPRLF தடை செய்யப்பட்ட அ‌ந்த 7 நாட்கள்...


1986, டிசம்பர், TELO, PLOTE இந்த வரிசையில் இறுதியாக EPRLF இயக்கமும் புலிகளால் தடை செய்யப்பட்ட காலத்தில் நடந்த சம்பவங்களின் தொகுப்பு:

புலிகள் TELO வை அழித்த பின்னர் EPRLF மீது கைவைக்க மாட்டார்கள் என்று அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் நம்பினார்கள். அதற்கு காரணம் அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏனைய இயக்கங்களை விட பல மடங்கு அதிகமாக இருந்தது. (ஆனால் அந்தளவுக்கு ஆயுத பலம் இருக்கவில்லை.)

குறிப்பாக, 1986 ம் ஆண்டு TELO அழிக்கப்பட்ட பின்னரான காலங்களில், டிசம்பர் மாதம் தடை செய்யப்படும் வரையில் EPRLF புலிகளை விமர்சிக்கும் பொது கூட்டங்களை நடத்தி இருந்தது. இருப்பினும் அந்த எதிர்ப்பு அஹிம்சா வழியில் இருந்ததே தவிர, எந்தக் கட்டத்திலும் வன்முறை பிரயோகிக்கப் படவில்லை. அதை விட EPRLF க்கு கீழே பல வெகுஜன அமைப்புகள் இயங்கின. இது போன்ற காரணங்களினால் புலிகளால் தம்மை அழிக்க முடியாது என்று EPRLF காரர்கள் நினைத்து இருக்கலாம்.

திடீரென ஒரு நாள் EPRLF தடை செய்யப்பட்டுள்ளது என புலிகள் அறிவித்தனர். அப்போது கூட எந்த இடத்திலும் ஆயுதமேந்திய எதிர்ப்பு இருக்கவில்லை. அதற்கு காரணம் EPRLF ஒரு சகோதர யுத்தத்திற்கு தயாராக இருக்கவில்லை. ஒருவேளை இப்படி நடக்கும் என்று முன்கூட்டியே அறிந்த படியால், ஏற்கனவே EPRLF மேல் மட்ட தலைவர்கள் இந்தியாவுக்கு சென்று விட்டனர். ஒன்றுமறியாத இடை மட்ட தலைவர்களும் சாதாரண உறுப்பினர்களும் அகப்பட்டுக் கொண்டனர்.

இராணுவ சுற்றிவளைப்பு மாதிரி புலிகள் ஒவ்வொரு வீடு வீடாக சென்று EPRLF உறுப்பினர்கள், ஆதரவாளர்களை கைது செய்து சிறைப் பிடித்துச் சென்றனர். பெற்றோர் தமது பிள்ளைகளை கையளிக்க வேண்டுமென நிர்ப்பந்திக்க பட்டனர். "சிங்கள இராணுவத்திடமிருந்து கூட தப்பலாம். ஆனால் புலிகளிடமிருந்து தப்ப முடியாது. முன்பு இராணுவத்துக்கு பயந்து ஒளிந்த மாதிரி புலிகளுக்கு பயந்து எங்கேயும் ஒளிய முடியாது..." என்று மக்கள் பேசிக் கொண்டனர்.

உண்மையில், இராணுவ சுற்றிவளைப்புகளில் இளைஞர்களை கைது செய்து முகாம்களில் தடுத்து வைத்திருப்பது மாதிரி தான், மாற்று இயக்கங்களை சேர்ந்த தமிழ் இளைஞர்கள் புலிகளின் இராணுவ முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். EPRLF உறுப்பினர்களில் முக்கியமானவர்கள், அதாவது தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களை மாத்திரம் தெரிந்தெடுத்து தனியாக கொண்டு சென்றனர். அவர்களை விடுவிக்கவில்லை. ஏனையவர்கள், அதாவது சாதாரண உறுப்பினர்களை, பச்சை மட்டை அடி போட்டு இனிமேல் EPRLF உடன் சேரக் கூடாது என்று எச்சரிக்கை செய்யப்பட்ட பின்னர் விடுவிக்க பட்டனர்.

ஈழப் போராட்ட வரலாற்றில் முதல் தடவையாக "பச்சை மட்டை அடி" என்ற சொல் வழக்கு அப்போது தான் நடைமுறைக்கு வந்தது. ஆனால் அந்தக் காலத்தில் அதன் அர்த்தம் வேறு. பொதுவாக இராணுவம் சாதாரண இளைஞர்களை பிடித்து சில நாட்கள் தடுத்து வைத்திருந்து (பச்சை மட்டை) அடி போட்ட பின்னர் விடுதலை செய்யும். தமிழ் மக்களின் பார்வையில், அன்று புலிகளின் நடவடிக்கையும் அவ்வாறு தான் அமைந்திருந்தது. 

மேலதிக தகவல்: புலிகள் EPRLF இயக்கத்தை தடை செய்த அதே காலகட்டத்தில் சிங்கள இராணுவம் முகாம்களை விட்டு வெளியேறவில்லை. இத்தனைக்கும் இராணுவ முகாம்களை சுற்றி இருந்த இடங்களில் காவலரண்கள் வெறுமையாக இருந்தன. காரணம் அங்கு காவல் கடமையில் இருந்த EPRLF உறுப்பினர்களும் புலிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர். அதே நேரம் EPRLF எதிர் தாக்குதல் நடத்தலாம் என அஞ்சி காவல் கடமையில் இருந்த LTTE உறுப்பினர்களும் விலக்கப்பட்டு இருந்தனர். 

உண்மையில் சிங்கள இராணுவம் நினைத்திருந்தால் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இராணுவ நடவடிக்கை எடுத்து முன்னேறி இருக்கலாம். ஆனால் செய்யவில்லை. ஒருவேளை இந்த தமிழ் ஆயுதபாணி இயக்கங்கள் தமக்குள் சண்டையிட்டு அழிந்து போவார்கள், அதனால் தமக்கு வேலை மிச்சம் என்றெண்ணி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்திருப்பார்கள்.

Saturday, December 13, 2025

"மா(வெள்ளாள)மனிதர்" குமார் பொன்னம்பலத்தின் சாதிவெறி சிந்தனை!

 


ஆதிக்க சாதி வெள்ளாள மேலாதிக்க மனப்பான்மையுடன் ஒடுக்கப்பட்ட மக்களின் சுயநிர்ணய உரிமையை கோரிக்கையை மறுத்த குமார் பொன்னம்பலம் என்ற ஒரு கபட வேடதாரியை "மாமனிதர்" என்று கொண்டாட வெட்கமாக இல்லையா? 

"சாதி என்ற சிந்தனை இருக்க கூடாது..." என்று யாரை நோக்கி அறிவுரை கூறுகிறார்? 

அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்ட, மனித உரிமைகள் மறுக்கப்பட்ட சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் தமது உரிமைகளை மீட்டெடுக்க "சிறுபான்மை தமிழர் மகாசபை" மற்றும் "தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்" ஆகிய சமநீதி அமைப்புகளில் அணிதிரண்டு, விகிதாசார அடிப்படையில் அரசியல் பிரதிநிதித்துவம் கோரி போராட்டம் நடத்திய சிறுபான்மை சமூகங்களை (ஒடுக்கப்பட்ட பஞ்சம சாதியினர்) பார்த்து "சாதி அடிப்படையில் சிந்திக்காதீர்கள்!" என்று அந்த மக்களின் உரிமைப் போரா‌ட்ட‌த்தை கொச்சைப் படுத்துகிறார். 

ஒடுக்கப்பட்ட சாதிகளை சேர்ந்த மக்கள் அன்று "சிறுபான்மைத் தமிழர்" அடையாளத்துடன் தான் அரசியலில் ஈடுபட்டனர்.  ஏனென்றால் தமிழ்த் தேசியம் பேசிய வெள்ளாள கட்சிகளில் அவர்களுக்கு இடமில்லை. ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் உரிமைகளை பற்றி அந்த கட்சிகளின் அரசியல் தலைவர்கள் பேசியதே இல்லை. அத்தகைய சூழ்நிலையில் தமது உரிமைகளை வென்றெடுக்க ஒரு அரசியல் இயக்கமாக அணி திரள்வது  தானே முறை? 

அதை இந்த "மா(ங்காய்) மனிதர்" குமார் பொன்னம்பலம்  எப்படி திரிக்கிறார் என்று பாருங்கள்: "சாதி அடிப்படையில் கூட்டம் நடத்த கூடாது!" அந்தக் காலகட்டத்தில் குமாரின் தமிழ்க் காங்கிரஸ் முழுக்க முழுக்க வெள்ளாள சாதிக் கட்சியாக தான் இயங்கியது. அந்தக் கட்சியின் உறுப்பினர்கள், தேர்தல்  வேட்பாளர்கள் மட்டுமல்ல, வாக்காளர்கள் கூட வெள்ளாள சாதியை சேர்ந்தவர்கள் தான். அத்தகைய பின்னணியில் இருந்து கொண்டு "சாதி அடிப்படையில் கூட்டம் நடத்தக் கூடாது..." என்று அறிவுரை கூறுவது முரண்நகை இல்லையா? ஊருக்கு தான் உபதேசம். 

தொடர்ந்து அந்த மாமனிதர், மன்னிக்கவும் மண்ணாங்கட்டி மனிதர், இவ்வாறு சாதிய வன்மம் கக்கி இருக்கிறார்: "சாதி என்றால் என்னவென்று தெரியாத குழந்தைகள் மனதில் சாதிப் பாகுபாட்டை புகு‌த்துகிறார்களாம்!" 

இதை எந்தக் காலகட்டத்தில் சொல்கிறார்? எழுபதுகளில் யாழ்ப்பாணத்தில் தீண்டாமை ஒழிப்பு போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலத்தில் இந்த அறிவுரையை கூறுகிறார்.  வெள்ளாள சாதிவெறி காடையர்கள் உரிமைப் போராட்டம் நடத்திய இளைஞர்களை வெட்டிக் கொலை செய்தது மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட மக்களின் குடிசை வீடுகளுக்கு நெருப்பு வைத்து வெறியாட்டம் ஆடிய காலத்தில்  குமார் பொன்னம்பலம் பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி இந்த அறிவுரையை கூறி இருக்கிறார்.அத்தகைய மனிதன் எப்பேர்ப்பட்ட அயோக்கியனாக இருப்பான்? 

இவர்கள் தான், குமார் பொன்னம்பலத்தின் பாணியில் சொன்னால், "இன அடிப்படையில் கூட்டங்கள் நடத்தி, குழந்தைகள் உள்ளத்தில் இனப் பாகுபாட்டை புகுத்தியவர்கள்." 

தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு என்று அடிக்குமாம். வெள்ளாளர் தமிழர்களுக்கு அடித்தால் நல்லிணக்கம் பேசுவார்கள். ஆனால் சிங்களவர் வெள்ளாளருக்கு அடித்தால் தனி ஈழம் கேட்பார்கள். இது தான் இவர்களது கபட நாடகம். 

Saturday, August 16, 2025

அநுர குமார திசாநாயக்க: கதாநாயகனா, வில்லனா?

அநுர குமார திசாநாயக்க: கதாநாயகனா, வில்லனா? 

எழுதியவர்: MLM Mansoor 


கடந்த வெள்ளிக்கிழமை 'சிரச' தொலைக்காட்சியின் 'சட்டன' அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கிட்டத்தட்ட மூன்றரை மணித்தியாலங்கள் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு மிகுந்த பொறுமையுடனும், பொறுப்புணர்ச்சியுடனும் பதிலளித்தார். இலங்கையின் 47 வருட கால நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி வரலாற்றின் முன்னுதாரணங்களற்ற ஒரு நிகழ்வு அது.

எவ்விதமான பதற்றமோ சங்கட உணர்வுகளோ இல்லாமல் உச்ச மட்ட தன்னம்பிக்கையுடன் அவர் கேள்விகளை எதிர்கொண்ட லாகவம், வலிந்து வரவழைத்துக் கொள்ளாத இயல்பான நிதானம், எவரையும் ஆகர்ஷிக்கக் கூடிய மெல்லிய சந்தோசத்தை வெளிப்படுத்தும் உடல்மொழி ஆகிய அனைத்தும் அவருக்கேயுரிய தனித்துவமான பண்புகள்.

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரப் போக்குகள் (Macro Economy) குறித்து புள்ளி விபரங்களுடன் கூடிய தெளிவான ஒரு சித்திரத்தை முன்வைத்த அவர், அதனுடன் நின்றுவிடவில்லை. வெவ்வேறு துறைகளுக்கும் பொறுப்பான அமைச்சர்கள் மற்றும் துறைசார் வல்லுனர்கள் ஆகியோர் வழங்க வேண்டிய விரிவான தகவல்களை (துல்லியமான தரவுகளுடனும், பொருத்தமான உதாரணங்களுடனும்) முன்வைத்தார். மூன்றரை மணி நேரம் நெடுகிலும் எவ்வித தொய்வோ, தடுமாற்றங்களோ சொற்களைத் தேடுவதற்கான கால தாமதங்களோ எவையுமில்லாமல் ஒரே சீராக ஒலித்தது அவருடைய குரல்.

1978 - 2024 காலப் பிரிவில் ஜனாதிபதி பதவியை வகித்த எண்மரில் எவரும் இந்த அளவுக்கு ' Homework' உடன் வந்து ஊடகவியலாளர்களை சந்தித்த வரலாறு கிடையாது. அதேபோல தனது அரசாங்கம் முன்னெடுக்கப் போகும் ஒட்டுமொத்த சீர்த்திருத்த நிகழ்ச்சிநிரலை (Comprehensive Reform Agenda) இவ்வளவு தெளிவாக, ஆணித்தரமாக எடுத்து விளக்கும் திறனையோ அல்லது தமது சிந்தனைகளை கோர்வையாக தொகுத்து சரளமான மொழியில் வெளிப்படுத்தும் ஆற்றலையோ அந்த முன்னைய எண்மரில் எவரும் கொண்டிருக்கவில்லை என்பதும் உண்மை.

அந்த வகையில், அநுர குமாரவின் வசீகர ஆளுமைக்கும் (Charismatic Personality), தனித்துவமான தலைமைத்துவப் பண்புகளுக்கும், தொடர்பாடல் திறனுக்கும் சவால் விடுப்பதற்கு இன்று எதிர்க்கட்சியிலோ அல்லது ஆளும் கட்சியிலோ எவரும் இருந்து வரவில்லை என்பது நிதர்சனம். 

ஜனாதிபதியை நோக்கி 'அண்டப் புளுகன்' மற்றும் 'அந்தரே' (அரசவை கோமாளி) போன்ற வசைச் சொற்களை வீசுவதைத் தவிர, ஆக்கபூர்வமான திட்டங்கள் எவற்றையும் முன்வைக்கும் திராணியை இன்றைய எதிர்க்கட்சிகள் கொண்டிருக்கவில்லை. கடந்த 50 ஆண்டு கால வரலாற்றில் இந்த அளவுக்குப் பலவீனமான, மக்களிடமிருந்து வெகு தூரம் விலகிப்போயிருக்கும் ஓர் எதிர்க்கட்சி இருந்து வரவில்லை என்றே சொல்ல வேண்டும். இவ்வருடம் மே தினக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விதம் ஓர் அரசியல் சக்தியாக NPP விசுவரூபமெடுத்து வருவதையும், SJB, SLFP மற்றும் SLPP போன்ற கட்சிகள் வீழ்ச்சியையும், சீரழிவையும் நோக்கி வேகமாக சென்றுக் கொண்டிருப்பதையும் தெளிவாக எடுத்துக் காட்டியது.

ஜனாதிபதி கனவில் நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கும் சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ச, சம்பிக்க ரணவக்க மற்றும் திலித் ஜயவீர போன்றவர்கள், முன்னர் எடுத்து விளக்கப்பட்ட அநுர குமாரவின் சிறப்புத் தகுதிகளை எட்டும் விடயத்தில் இன்னமும் வெகு தூரம் பின்தங்கியவர்களாகவே இருந்து வருகிறார்கள்.

பொருளாதாரத்தில் உடனடியாக ஒரு மீட்சி நிலையை எடுத்து வந்து, விலைவாசிக் குறைப்பு மற்றும் புதிய தொழில் வாய்ப்புகள் என்பவற்றின் வடிவில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கக்கூடிய வாய்ப்புகள் இல்லை என்ற யதார்த்தத்தை நன்கு புரிந்து கொண்டிருக்கும் அரசாங்கம் வேறு சில துறைகளில் முழுக்க முழுக்க கவனஞ் செலுத்தும் ஓர் உத்தியை பின்பற்றி வருவதை தெளிவாக அவதானிக்க முடிகிறது. 

அந்தப் பின்புலத்திலயே, 'அரசியலிலும், அரச நிர்வாக யந்திரத்திலும் வேரூன்றியிருக்கும் இலஞ்சம், ஊழல், வீண் விரயம் மற்றும் முறைகேடுகள் என்பவற்றை இல்லாதொழிப்போம்' என்ற சுலோகத்தை ஜனாதிபதி கையில் எடுத்திருக்கிறார். அது மறைமுகமாக பொருளாதார மீட்சிக்கும், வளர்ச்சிக்கும் வழிகோல முடியுமென்பது அரசாங்கத்தின் கணிப்பு.

கூட்டாக கொள்ளையடிக்கும் ஓர் உத்தியாக அரசியல்வாதிகளுக்கும். அரசு அதிகாரிகளுக்குமிடையில் இதுவரையில் நிலவு வந்திருக்கும் கள்ளக் கூட்டை (Politician - Bureaucracy Nexus) முடிவுக்கு கொண்டு வருவது இதற்கான முதற்படி. ஜனாதிபதி சுட்டிக் காட்டியதைப் போல அது இப்பொழுது நிகழ்ந்திருப்பதாகவே தெரிகிறது. ஆனால், அரச அதிகாரிகள் மட்டத்தில் மேலோங்கியிருக்கும் இலஞ்ச / ஊழல் கலாசாரத்தை முற்றாக ஒழிப்பதற்கு இன்னமும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும்.

ராஜபக்ச எதிர்ப்பை மையப் புள்ளியில் வைத்து இனவாத / மதவாத சக்திகளை பலவீனப்படுத்தி, முறியடிப்பதே அரசாங்கத்தின் அடுத்த முன்னுரிமை. ஒரு சில அரச சார்பு சமூக ஊடகச் செயற்பாட்டாளர்கள் இதற்கென இப்பொழுது களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், NPP அரசாங்கத்துக்கும் நிபந்தனையற்ற விதத்தில் ஆதரவளித்து வரும் யூடியூபர்களில் முதன்மையானவரும் முக்கியமானவரும் 'Sudaa' எனப் பிரபல்யமடைந்திருக்கும் சுதத்த திலகசிரி. அரசாங்கத்தின் உயர் மட்டத் தலைவர்களின் மறைமுக ஆசீர்வாதத்துடனும், அனுசரணையுடனும் அவர் செயல்பட்டு வருவதாக பரவலாக நம்பப்படுகிறது. (அரசாங்கத்தினால் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் விசேட பொலீஸ் பாதுகாப்பு தொடர்பாகவும் பலர் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.) 

தனியாகவும், இன்னொருவருடன் இணைந்தும் அவர் ஒவ்வொரு நாளும் குறைந்தது நான்கு காணொளிகளை அவருடைய யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார். 

சிங்கள யூடியூப் உலகில் சுதாவின் எதிர்த்தரப்பை பிரதிநிதித்துவம் செய்யும் முன்னணி நபர் இராஜ் வீரரத்ன; ராஜபக்சகளின் - குறிப்பாக இப்பொழுது நாமல் ராஜபக்சவின் - அடியாள் என்று சொன்னால் தப்பில்லை. இவ்விருவருக்குமிடையில் இடம்பெற்று வரும் உக்கிரமான சண்டைகள் - அவை பொருட்படுத்தக்கூடிய அரசியல் அலசல்களையோ அல்லது தர்க்கரீதியான வாதங்களையோ கொண்டிராவிட்டாலும் கூட - அவற்றின் வசைகள். இரட்டை அர்த்தம் தொனிக்கும் பகடிகள் மற்றும் இதுவரையில் எவரும் பொது வெளியில் பேசத் துணியாத சிங்கள தூஷண வார்த்தைகள் என்பவற்றுக்காக பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து வருகின்றன.

"நாட்டின் பொதுசன அபிப்பிராயத்தின் மீது செல்வாக்குச் செலுத்தும் ஒரு சக்தியாக சுதத்த திலகசிரி போன்றவர்கள் எழுச்சியடைந்திருப்பது பெரும் துரதிர்ஷ்டம். ஆனால், இன்றைய சமூக ஊடக உலகில் அது ஒரு விதத்தில் தவிர்க்க முடியாதது" என்கிறார் மூத்த இடதுசாரி சிந்தனையாளரும், அரசியல் செயற்பாட்டாளருமான தீப்தி குமார குணரத்ன.

NPP அரசாங்கம் குறித்து எதிர்க்கட்சிகளாலும், அரச எதிர்ப்பு யூடியூப் தளங்களாலும் முன்வைக்கப்பட்டு வரும் கடுமையான விமர்சனங்களை அரசாங்க அமைச்சர்களோ அல்லது புதுமுகங்களான நூற்றுக்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களோ தனித்து நின்று எதிர்கொள்ள முடியாது என்பதனை வலியுறுத்த வேண்டிய அவசியமில்லை. காட்சி ஊடகங்களில் தோன்றி, எதிரிகளை வாயடைக்கச் செய்யக்கூடிய அளவுக்கு எதிர்வாதங்களை முன்வைக்கும் திறனோ அல்லது முறையான தொடர்பாடல் பயிற்சியோ அரசாங்கத்திலிருக்கும் பெரும்பாலானவர்களுக்கு இல்லை என்று சொல்லலாம்.

ஒரு விதத்தில் அந்தக் குறையை ஈடு செய்யும் ஒரு பாத்திரத்தையே (அரசாங்கத்தின் சார்பில்) சுதத்த திலகசிரி வகித்து வருகிறார். 

கலரியை இலக்கு வைத்து அவர் வெற்றிகரமாக மேற்கொண்டு வரும் இந்த வேலைக்கு பிறதொரு தளத்தில் நின்று குறைநிரப்புச் செய்கிறார் 'History with Nirmal' என்ற யூடியூப் தளத்தை நடத்தி வரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிரி (அரசு ஆதரவு நிலைப்பாட்டில் நின்று) இலங்கையின் சமகால அரசியல், சமூகப் பிரச்சினைகளை அவர் இந்த யூடியூப் தளத்தில் அலசுகிறார். ஜனாதிபதி அநுர குமாரவின் நகர்வுகளுக்கான கோட்பாட்டு மற்றும் நடைமுறைசார் பின்புலத்தை வழங்குவதற்கும் முயற்சித்து வருகிறார்.

சுதத்த திலகசிரியின் யூடியூப் தளத்தில் தீவிர சிங்கள இனவாத தர்ப்புக்களை இலக்கு வைத்து முன்னெப்பொழுதும் இருந்திராத அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களின் பின்னணியில் அரசாங்கத்தின் தலையசைப்பு இருந்து வருவதாகவே தெரிகிறது. தலதா கண்காட்சியின் போது கண்டி நகரப் பள்ளிவாசல்களை திறந்து வைத்து, முஸ்லிம் சமூகம் காட்டிய சமய நல்லிணக்கத்திற்கான முன்மாதிரியை பெரிதும் சிலாகித்து அவர் கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதனுடன் இணைந்த விதத்தில் கலகொட அத்தே ஞானசார தேரர் மீது முன்வைத்த துணிச்சலான வசைச் சொற்கள்; டாக்டர் ஷாபியின் மகளின் A/L பெறுபேறுகளை குறிப்பிட்டு அத்துரலியே ரதன தேரர், விமல் வீரசன்ச, உதய கம்மன்பில மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோருக்கு சாபமிடும் விதத்தில் வெளியிட்ட காணொளி ஆகிய அனைத்தும் இனவாதிகளின் இருண்ட பக்கங்களை அம்பலப்படுத்தி, அதன் மூலம் அவர்களை பலவீனப்படுத்தும் நோக்குடன் நன்கு திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டு வரும் ஒரு நிகழ்ச்சிநிரலின் அங்கங்களாகவே தென்படுகின்றன.

டாண் பிரியசாத் அஞ்சலி உரையில் பலங்கொட கஸப்ப தேரர் எவ்வித ஆதாரங்களையும் முன்வைக்காமல் ஜிஹாத் தீவிரவாதிகள் டாண் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிவித்த கருத்தும் சிங்கள சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றது.

இவை அனைத்தும் தீவிர சிங்கள பௌத்த நிலைப்பாட்டில் இருந்து செயற்பட்டு வரும் தரப்புக்களுக்கும், NPP அரசாங்கத்துக்குமிடையில் ஒரு மோதல் நிலை (Confrontation) தோன்றியிருப்பதையே காட்டுகின்றன. அவை அடுத்து வரும் மாதங்களில் மேலும் தீவிரமடைய முடியும்.

"திசைகாட்டியின் வெற்றி சிங்கள பௌத்தர்களின் தோல்வி" என்ற தலைப்பில் யூடியூப் தளமொன்றில் பின்வருமாறு கருத்துத் தெரிவித்திருக்கிறார் முன்னணி பிக்கு ஒருவர் - 

''புத்தசாசனம் மற்றும் சமய விவகாரங்கள் என்பவற்றுக்குப் பொறுப்பான அமைச்சராக கிறிஸ்தவர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டிருப்பது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல; திட்டமிட்டே செய்யப்பட்டிருக்கும் காரியம் இவர்கள் 'நிராகமிக' (எந்த மதத்தையும் பின்பற்றாதவர்கள்) அல்ல; இலங்கையிலுள்ள ஏனைய மதங்களை மதிக்கும் அதே வேளையில், பௌத்த மதத்தை மட்டும் இழிவுபடுத்துபவர்கள்."

"கல்துவ ஆரண்ய புண்ணியஸ்தலத்தின் பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பு வேலைகளை தொடர்ந்து கடற்படையினரே செய்து வந்திருக்கிறார்கள். ஆனால், இந்தத் தடவை அதற்கான வேண்டுகோள் விடுக்கப்பட்ட போது 'ஒரு மணித்தியாலத்துக்கு 93,000 ரூபா வீதம் செலுத்தினால் மட்டுமே அந்த வேலைகளை பொறுப்பேற்க முடியும்' என்று ஒரு கடிதத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது."

கடந்த மார்ச் மாதம் இறுதிப் பகுதியில் அமரபுர பீடத்துக்கு சொந்தமானது எனக் கூறப்படும் யாழ் தையிட்டி திஸ்ஸ விகாரை வளாகத்தில் ஒரு புதிய மண்டபம் திறந்து வைக்கப்பட்டது. அதனையொட்டி இடம்பெற்ற சமயக் கிரியைகளின் போது பாதுகாப்புப் பணியிலும், அதேபோல அன்னதானங்களை விநியோகிக்கும் வேலையிலும் பெருந்தொகையான இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். இராணுவ பாண்ட் வாத்தியக் குழுவொன்றும் அங்கு பிரசன்னமாகியிருந்தது. ஆனால். இராணுவத் தளபதியிடமிருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பையடுத்து அங்கிருந்து உடனடியாக இராணுவம் விலக்கிக் கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. .

இதனைக் கண்டித்து விமல் வீரவன்ச கொழும்பில் நடத்திய ஒரு ஊடக மாநாட்டில் ஜனாதிபதி மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அப்பொழுது அவர் சொன்ன ஒரு விடயம் இது:

"அரசாங்கத்தின் முக்கியமான தலைவர் ஒருவர் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை அழைத்து மிகவும் கண்டிப்பான ஒரு பணிப்புரையை வழங்கியிருக்கிறார். 'வடக்கு கிழக்கில் இருக்கும் தொல்லியல் அமைவிடங்களை இனிமேல் பௌத்த தொல்லியல் அமைவிடங்கள் என்றோ அல்லது இந்து தொல்லியல் அமைவிடங்கள் என்றோ அழைக்கக் கூடாது' என்பதே அப்பணிப்புரை. இது பௌத்த தொல்லியல் அமைவிடங்களுக்கு பிற்காலத்தில் இந்துக்கள் உரிமை கோரும் ஒரு நிலைமையை நிச்சயமாக எடுத்து வரும்".

இது தொடர்பாக அமரபுர பீடத்தைச் சேர்ந்த கலாநிதி புஸ்ஸல்லாவே சோமவிசுத்தி மகாநாயக்க தேரர் ஜனாதிபதிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் உள்ள பின்வரும் வ்ரிகளை வீரவன்ச வலியுறுத்திக் கூறி, மேற்கோள் காட்டியிருந்தார்:

''வேற்று மதத்தவரான இராணுவத் தளபதி இதிலும் பார்க்க ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டுமென்பதே எமது கருத்தாகும்."

எளிதில் உணர்வுகளைத் தூண்டக் கூடிய பிரச்சினைகளை (Sensitive Issues) அரசாங்கம் மிகவும் நிதானமாக கையாண்டு வரும் அதே வேளையில், ஏற்கனவே ஸ்தாபிதமாகியிருக்கும் 'தவறான முன்னுதாரணங்களை' படிப்படியாக களைவதற்கு தேவையான நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது என்பதனையும் மேற்படி இரு சம்பவங்களும் காட்டுகின்றன.

'கடந்த காலத்தில் நாங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை, அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் நோக்கியிருக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். சொல்லப்போனால் நாங்கள் அதிகமும் சிங்கள மக்கள் தொடர்பாக தான் கவனம் செலுத்தி வந்திருக்கிறோம்.' என 'சட்டன' நிகழ்ச்சியில் ஜனாதிபதி ஒரு மெல்லிய குற்ற உணர்வுடன் சொன்னதையும் ஜேவிபி தரப்பில் ஏற்பட்டிருக்கும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒரு சிந்தனை மாற்றமாக இருந்து வருகிறது எனக் கருதலாம்.

அது தவிர, தந்ததாது கண்காட்சி தொடர்பாக நேர்ந்த ஒரு சில குளறுபடிகளையடுத்து, தியவடன நிலமே நிலந்த தள பண்டாரவை இலக்கு வைத்து சுதா யூடியூப் தளம் தொடர்ச்சியாக முன்வைத்து வரும் தாக்குதல்கள் இப்பொழுது உச்ச கட்டத்தை எட்டியிருக்கின்றன. தலதா மாளிகை நிதிகளை தியவடன நிலமே துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும், சட்ட விரோதமான பணப் பரிவர்த்தனைகள் இடம்பெற்று வருவதாகவும் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார் சுதா. அதற்கான ஆதாரங்களை அடுத்து வரும் நாட்களில் முன்வைக்கப் போவதாகவும் அவர் தள பண்டாரவுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். 

தியவடன நிலமே தெரிவுக்கான தேர்தல் இன்னும் சில மாதங்களின் இடம்பெறவிருக்கும் சூழ்நிலையில் இவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

இஸ்லாமோபோபியாவை மூலதனமாகக் கொண்டு கடந்த 13 ஆண்டுகளாக அரசியல் செய்து வந்திருக்கும் ஞானசார தேரர் இப்பொழுது முதல் தடவையாக தான் எதிரியாக கருதும் ஓர் அரசாங்கத்தை (Hostile Government) எதிர்கொள்கிறார். அண்மையில் அவர் நடத்திய ஊடகச் சந்திப்புகளில் ஒரு வித பதற்றமும், அச்சமும் சூழ்ந்த உடல்மொழியை அவர் வெளிப்படுத்திக் காட்டியதை உன்னிப்பாக பார்க்கும் பொழுது அவதானிக்க முடிந்தது. 

2010 - 2015 மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்திலும், 2015 - 2019 நல்லாட்சி அரசாங்கத்திலும், அதே போல 2019 கோட்டாபய அரசாங்கத்திலும் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் பலர் இருந்து வந்தார்கள். ஆனால் இப்போழுது நிலைமை மாறியிருக்கிறது. ஞானசார தேரரின் அந்தரங்க வாழ்க்கை தொடர்பான ஒரு சில காணொளிகளை வெளியிட வேண்டி நேரிடலாம் என்ற விதத்தில் சுதா அவருக்கு விடுத்திருக்கும் எச்சரிக்கையும் ஒரு வேளை அவருடைய எதிர்கால செயல்பாடுகள் மீது தாக்கம் செலுத்த முடியும். எத்தகைய ஆதாரங்களையும் முன்வைக்காமல் இஸ்லாமிய தீவிரவாதம் குறித்த கட்டுக் கதைகளை பரப்பி, சிங்கள மக்களுக்கு மத்தியில் ஒரு இனம் புரியாது அச்சத்தையும், மறுபுறம் முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் பதற்ற உணர்வையும் தோற்றுவிக்கும் அவருடைய வழமையான நடைமுறையை இனிமேலும் தொடர முடியுமா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பொருளாதார நெருக்கடி, குமார குணரத்னத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் 'அந்தரே' என்ற அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு செயற்பாடுகள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்டங்கள் என்பவற்றை கையாள்வது அநுர குமார திசாநாயக்க எதிர்கொண்டு வரும் மிக முக்கியமான ஒரு சவாலாக இருந்து வருகின்றது என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், சிறுபான்மை சமூகங்களைப் பொறுத்தவரையில் அவர் ஒரு கதாநாயகனாக பார்க்கப்படுவாரா அல்லது வில்லனாக பார்க்கப்படுவாரா என்பது மீண்டும் நாட்டில் தலைத்தூக்க தொடங்கியிருக்கும் இனவாதிகளையும், மத வெறியர்களையும் அவர் எவ்வாறு கையாளப் போகிறார் என்பதைப் பொறுத்தே அமையும்!


நன்றி:

(பேஸ்புக்கில் MLM Mansoor எழுதிய பதிவு, மே 5, 2025)

Saturday, August 02, 2025

JVP இன் சிங்கப்பூர் பாணி "சகோதரத்துவ தினம்" - கறுப்பு ஜூலைக்கு வெள்ளை அடிக்கிறதா?


ஜூலை 21-23; சிங்கப்பூர், இலங்கையில் நடக்கும் "இன சகோதரத்துவ தினம்" கறுப்பு ஜூலைக்கு வெள்ளையடிக்கும் செயலா?  

இலங்கையில் கறுப்பு ஜூலை படுகொலை நினைவுகூரும் அதே காலகட்டத்தில் ஆளும் NPP(JVP) அரசாங்கம் "சகோதரத்துவ நாள்" என்ற பெயரில் பேரணி நடத்தியதை பலர் கண்டித்தனர் அல்லது கடுமையாக விமர்சித்தனர். இது "ஜூலை படுகொலைக்கு வெள்ளை அடிக்கும் செயல்" என்றும், "ஜேவிபி யின் பேரினவாத மனநிலை" என்றும், தமிழ்த் தேசிய வாதிகள் மட்டுமல்லாமல் சில தமிழ் அறிவுஜீவிகள் கூட குற்றஞ்சாட்டினார்கள். வேறு சிலர் இதன் நோக்கம் நல்லதாக இருந்தாலும், அதை நடத்த தேர்ந்தெடுத்த காலகட்டம் தவறு என்றார்கள். அதை விட "தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டார்கள்" என்பன போன்ற எதிர்ப்புக் குரல்களும் கேட்டன.

உண்மையில் இலங்கையில் சிறுபான்மை இனமான தமிழர்கள் இந்த "இன சகோதரத்துவ பேரணியை" முன்னெடுத்து இருக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் சிங்கப்பூர் உதாரணம் காட்டுவது தமிழ்த் தேசியவாதிகளின் வாடிக்கை. உண்மையில் இவர்கள் சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி குறித்து சிந்திக்கிறார்களே தவிர சிங்கப்பூர் எவ்வாறு இன முரண்பாடுகளை தீர்த்து கொண்டு முன்னேறியது என்பதை கவனிக்க தவறுகிறார்கள். தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த செல்வநாயகம் ஒரு மலேசிய பிரஜை. அவராவது இந்த வரலாற்றை கூறி இருக்கலாம். சரி, அதை விடுவோம். 

ஒரு காலத்தில் சிங்கப்பூர் இனப்பிரச்சினையால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு. 1964 ம் ஆண்டு மிகப்பெரிய இனக் கலவரம் நடந்தது. அது வரை காலமும் நட்புடன் இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த சீனர்களும், மலேயர்களும் ஜென்ம பகைவர்களாக நடந்து கொண்டனர். சீனர்களின் பிரதேசத்தில் மலேயர்களுக்கு பாதுகாப்பு இல்லை. மலே பிரதேசத்தில் சீனர்களுக்கு பாதுகாப்பு இல்லை. அன்றைய கலவரத்தில் நூற்றுக்கணக்கான கொலைகள், சொத்து அழிவுகள் நடந்துள்ளன. 

1964 இனக்கலவரத்தின் பின்னர் சிங்கப்பூர் ஆட்சியில் இருந்த பிரதமர் லீ குவான் யூ பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். ஒவ்வொரு இனமும் தனித் தனியாக தமக்கான பிரதேசங்களில் வாழ்ந்த நிலையை மாற்றியமைக்க புதிய நவீன அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாக்கப் பட்டன. அங்கு எல்லா இன மக்களும் கலந்து வாழும் வகையில் குடியமர்த்த பட்டனர். புதிய அரசமைப்புச் சட்டம் இன அடிப்படையில் அரசியல் கட்சிகள் இருப்பதை தடுக்கிறது. இதன் மூலம் சீன பெரும்பான்மை இன கட்சியாக இருந்தாலும், மலே அல்லது தமிழ் சிறுபான்மை இனங்களை "பிரதிநிதித்துவ படுத்தும்" கட்சிகளாக இருந்தாலும் ஏனைய இனங்களை சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும். 

சிங்கப்பூரில் ஜூலை 21 இன நல்லிணக்க தினம் என அறிவிக்கப் பட்டது. அந்த நாளில் தான் 1964 ம் ஆண்டு இனக் கலவரம் நடந்தது. அதனை "மலே சிறுபான்மையினர் மீது சீன பெரும்பான்மையினர் நடத்திய வன்முறை வெறியாட்டம் அல்லது இனவழிப்பு" என்று தான் மலே தேசியவாதிகள் கூறி வந்தனர். அவர்களைப் பொறுத்த வரையில் "ஜூலை 21 இன நல்லிணக்க நாள்" என்பது "கறுப்பு ஜூலைக்கு வெள்ளை அடிக்கும் செயல்!" தான். ஆனால் காலப் போக்கில் சிங்கப்பூரில் வாழும் மூவின மக்களாலும் இன நல்லிணக்க தினம் ஏற்றுக் கொள்ள பட்டு விட்டது. 

சிங்கப்பூரில் சீனர்களை பெரும்பான்மையாக கொண்ட PAP, இலங்கையில் சிங்களவர்களை பெரும்பான்மையாக கொண்ட JVP ஆகிய இரண்டு கட்சிகளும் சிறுபான்மையின தேசியவாதிகள் பார்வையில் "பேரினவாத கட்சிகள்" என அழைக்கப் படலாம். ஆனால் அது தவறு. சிங்கப்பூர் PAP, இலங்கை JVP இரண்டுமே இடதுசாரிய கண்ணோட்டத்தில் இனங்களுக்கு இடையிலான நல்லுறவை உண்டாக்கும் நோக்கம் கொண்ட கட்சிகள். இன முரண்பாடுகளை கடந்த பொருளாதார முன்னேற்றம் சிங்கப்பூரில் சாத்தியம் என்றால் ஏன் இலங்கையில் சாத்தியம் இல்லை?

Saturday, April 12, 2025

மலேசியாவின் "ஈழப் பிரச்சனை"! பலர் அறியாத மலே பேரினவாத ஒடுக்குமுறை!!

 
இனப்பிரச்சினை விடயத்தில் இலங்கைக்கும், மலேசியாவுக்கும் இடையில் சில அதிசயப் படத் தக்க ஒற்றுமைகள் உள்ளன. இரண்டு நாடுகளிலும் இனப்பிரச்சனைக்கான மூல காரணம், தேர்தலில் பெரும்பான்மை இனத்தை பிரதிநிதித்துவ படுத்திய ஆட்சியாளர்களின் பேரினவாத கொள்கை, சிறுபான்மை இனத்தவர்கள் மீதான ஒடுக்குமுறைகள் எல்லாமே ஒரே மாதிரி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

👇👇👇


1. தேசிய இனங்கள்:

இலங்கை/மலேசியா

72% பௌத்த சிங்களவர்/ இஸ்லாமிய மலேயர்.

12% இந்து தமிழர்/ பௌத்த சீனர் 

7% முஸ்லிம்கள்/ இந்துக்கள் (தமிழர்கள்). 

இரண்டு நாடுகளிலும் இரண்டாவது பெரும்பான்மை இனம் தான் பெரும்பான்மை இனத்தின் பேரினவாத அடக்குமுறையால் பாதிக்கப் பட்டது. அதாவது இலங்கையில் தமிழர்கள் மாதிரி மலேசியாவில் சீனர்கள். பெரும் நகரங்களில் அரசுத் துறைகளில், வணிகத்தில் சிறந்து விளங்கியதால் நாட்டுப் புறங்களில் வாழ்ந்த பெரும்பான்மை இனத்தவரின் பொறாமைக்கும், வெறுப்புக்கும் ஆளாகினர். எங்கேயும் இனப் பிரச்சினைக்கு பின்னால் இருப்பது பொருளாதார பிரச்சினை தான்.

2. ஆட்சி மொழி:

இலங்கையிலும்,  மலேசியாவிலும் ஆரம்பத்தில் ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருந்தது. 

இலங்கையில் 1956 தேர்தலில் பெருமளவு சிங்கள வாக்குகளை வென்ற SLFP சிங்களத்தை ஆட்சி மொழி ஆக்கியது. அதே மாதிரி மலேசியாவில் 1967 தேர்தலில் பெருமளவு மலேயா வாக்குகளைப் வென்ற Pan- Malayan Islamic Party மலே மொழியை ஆட்சி மொழி ஆக்கியது. 

3. இனக் கலவரம்:

இலங்கையில் 1956 தேர்தலுக்கு பின்னரான ஆட்சி மாற்றத்தின் விளைவாக கொழும்பு நகரில் தமிழர்களுக்கு எதிரான இனக் கலவரம் நடந்தது. அதே மாதிரி மலேசியாவில் 1967 தேர்தலுக்கு  பின்னரான ஆட்சி மாற்றத்தின் விளைவாக கோலாலம்பூர் நகரில் சீனர்களுக்கு எதிரான இனக் கலவரம் நடந்தது. நூற்றுக்கணக்கான சீனர்கள் கொல்லப்பட்டனர். அது மலே- சீன இனங்களுக்கு இடையில் மிகப்பெரிய விரிசலை உண்டாக்கியது. 

உண்மையில் இலங்கையை விட மலேசியாவில் தான் சிறுபான்மை இனத்தவர் மீதான ஒடுக்குமுறை மிகக் கடுமையாக உள்ளது. 

குறிப்பாக, மலேசிய பிரஜைகள் அனைவரும் அரசமைப்பு சட்டத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும். (பெரும்பான்மை இனத்தவருக்கு சிறப்புரிமை வழங்குகிறது என்றெல்லாம் விமர்சிக்க முடியாது.) பிற மதத்தவர்களும் 

இஸ்லாமிய மதத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டும். (முன்னுரிமை அல்ல, அதற்கும் மேலே!) 

அதை விட, "சர்ச்சைக்குரிய" விஷயங்களை பற்றி பேசுவதும், எழுதுவதும் தடைசெய்யப் பட்டுள்ளது. அதாவது மலே இனத்தவரின் உரிமைகள் தொடர்பாக யாரும் கேள்வி எழுப்ப முடியாது. மொழிப் பிரச்சினை பற்றி பேச முடியாது. 


பிற்குறிப்பு:

இவ்வளவு அடக்குமுறை இருந்திருந்தால் ஏன் மலேசியாவில் சீனர்கள் தனி நாடு கேட்டு ஆயுத போராட்டம் நடத்தவில்லை என்று யாராவது கேட்கலாம். 2 ம் உலகப் போர் காலத்தில் இருந்து ஒரு தசாப்த காலமாக கம்யூனிஸ்டுகளின் ஆயுத போராட்டம் நடந்தது. கம்யூனிஸ்ட் கட்சியில் பெரும்பான்மையாக இருந்தவர்கள் சீனர்கள். கணிசமான அளவில் மலேயர், தமிழர்களும் உறுப்பினர்களாக இருந்தனர். இன வேற்றுமை கடந்த வர்க்க ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டும் என்பதில் மலேசிய அரசும், முன்னாள் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களும் உறுதியாக இருந்தனர். அயல் நாடுகளான வியட்நாம், லாவோஸ், கம்போடியாவில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வந்த மாதிரி மலேசியாவில் நடக்கலாம் என்ற அச்சம் நிலவியது. 

சீனர்களை பெரும்பான்மையாக கொண்ட சிங்கப்பூரில் நடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெறும் வாய்ப்பு காணப் பட்டதால் தான் சிங்கப்பூரை தனி நாடாக பிரித்து கம்யூனிச எதிர்ப்பாளர் லீ குவான் யூவிடம் கொடுத்தனர். மலேசிய அரசும் அதை தனக்கு சாதகமான விஷயமாக பார்த்தது. அப்போது தானே இஸ்லாமிய- மலே பேரினவாத கொள்கையை முழு வீச்சில் செயற்படுத்த முடியும்?

அனுர தமிழர்களுக்கு எதிரானவரா? விஷமிகளின் இனவாத பிரச்சாரம்!


ஜனாதிபதி அனுர குமார, முன்னொரு காலத்தில், அதாவது அரசும் புலிகளும் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய காலத்தில், "தமிழின படுகொலையை ஆதரித்து", அல்லது "தமிழ் மக்களுக்கு எதிரான" ஆர்ப்பாட்டத்தில் கல‌ந்து கொண்டதாக ஒரு விஷமத்தனமான பிரச்சாரம் செய்யப் படுகிறது.

அதற்கு "ஆதாரமாக" இந்தப் படத்தை பகிர்ந்து உள்ளனர். சரி, இந்தப் படத்தில் ஆர்ப்பாட்டத்தில் இருந்த பதாகைகளில்  என்ன எழுதி இருக்கிறது என்று யாராவது வாசித்து கூற முடியுமா? 

//வன்னிப் புலிகளுக்கு எதிராக சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் சக்தியை கட்டி எழுப்புவோம்.// என்று ஒன்றில் எழுத பட்டுள்ளது. 

கவனிக்கவும்: "தமிழர்களும்"!

//LTTE தலைவர்களை Hague(ICC) இல் விசாரி// என்று இன்னொன்றில் உள்ளது. 

கவனிக்கவும்: "தலைவர்களை"! 

இது எப்படி தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு ஆகும்? கண்ணுக்கு எட்டிய வரையில் "தமிழர்களை அழிக்க வேண்டும்" என்பது மாதிரியான எதையும் காணவில்லை. 

இப்போது எழும் கேள்வி, புலிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தால் அதை எப்படி தமிழர்களுக்கு எதிரானதாக கருத முடியும்? ISIS க்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தால் அதை முஸ்லிம்களுக்கு எதிரானதாக கருத முடியுமா? 

"ஏன் புலிகள் தமிழர்கள் இல்லையா?" என்று யாராவது ஒரு அறிவாளி கேள்வி கேட்க கூடும். அப்படி பார்த்தால் "அரச படையினர் சிங்களவர்கள்...", "ISIS உறுப்பினர்கள் முஸ்லிம்கள்..." இப்படி ஏதாவது சாட்டுபோக்கு சொல்லி தப்பிக்கலாம்.  மேற்குறிப்பிட்ட ஆயுதபாணிகளை எதிர்த்தால் அது ஒட்டு மொத்த இனத்திற்கு எதிரான நடவடிக்கை என்று கருதுவது கூட இனவாதக் கண்ணோட்டம் தான். 

அதை விட ஈழப் போர் (இதையும் "ஈழ போராட்டம்" என்று திரிப்பார்கள். போராட்டம் அல்ல போர்) நடந்த காலத்தில் ஒரு பக்கம் அரச படையினரும் மறுபக்கம் புலிகளும் போரில் ஈடுப்பட்ட இரண்டு தரப்பினர் ஆவர். ஒரு தரப்பான புலிகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தால் அது "தமிழின அழிப்பு ஆதரவு" என்று ஒரு தற்குறி மட்டுமே சொல்ல முடியும். இப்படி பாருங்கள். 

அரச படையினரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தால் அது "சிங்கள இன அழிப்பு ஆதரவு" என்று கூற முடியுமா? எப்போதுமே இனவாதிகள் அவ்வாறு தான் திரிப்பார்கள். 

மக்கள் தான் இனவாதிகள் விரித்த வலையில் விழுந்து விடாமல் கவனமாக இருக்க வேண்டும்.

Saturday, March 29, 2025

ஆனையிறவு தொழிற்சாலை திறப்பு, தமிழ்த்தேசிய தற்குறிகள் கதறல்!

30 வருட கால யுத்தம் முடிந்த பின்னர் வடக்கில் இயங்காமல் இருந்த தொழிற்சாலைகள் மீண்டும் கட்டி எழுப்ப படுகின்றன. முதலாவதாக ஆனையிறவு உப்பு தொழிற்சாலை இன்று திறந்து வைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கில்  நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.  உள்ளூர் உற்பத்தியை பெருக்குவதன் மூலம் இலங்கை முழுவதும் மட்டுமல்லாமல் வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யலாம். சில மாதங்களுக்கு முன்னர் உப்பு இறக்குமதி செய்த நிலைமையை நினைத்து பாருங்கள். 

மூச்சுக்கு முன்னூறு தடவை தமிழ் இன உணர்வு பேசும் தமிழ்த் தேசிய போலிகளுக்கு இதைக் கண்டு பொறுக்க முடியவில்லை. பேஸ்புக்கில் இனமொன்றின் குரல் என்ற பெயரில் இனவாத பரப்புரை செய்யும் ஒரு நபர் மகிந்த, மைத்திரி, ரணில் ஆகியோர் ஏற்கனவே இதை செய்திருந்தனர் என்று செம்பு தூக்கி தனது வலதுசாரிய விசுவாசம் காட்டுகிறார். கூடவே புலிகள் ஆனையிறவை கைப்பற்றிய பின்னர் UNICEF உதவியில் உப்பளத்தை இயக்கினார்கள் என்று புளுகி தள்ளுகிறார். 

அட லூசுப்பயலே! உப்பள தொழில் துறைக்கும் UNICEF க்கும் என்ன சம்பந்தம்? முதலில் UNICEF என்றால் என்னவென்று தெரியுமா? அதை விட, பாதுகாப்பற்ற, கடுமையான யுத்தம் நடக்கும் ஒரு இடத்தில் முதலிட எந்த மடையன் முன்வருவான்? பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும். 

அது போகட்டும். "நானும் ரவுடி தான்" பாணியில், அண்மையில் தான் இடதுசாரியாக ஞானஸ்நானம் பெற்று விட்டதாக கூறும் ஒரு நண்பர், 30 வருடங்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட உப்புத் தொழிற்சாலை பற்றி வாயே திறக்கவில்லை. அங்கு வேலை வாய்ப்பு பெற்றவர்கள் தமிழர்கள் தானே என்று மகிழ்ச்சி அடையவில்லை. அதற்கு மாறாக தொழிற்சாலை தயாரித்த உப்பு பாக்கெட்டில் தமிழ் இல்லை என்று மயிர் பிளக்கும் விவாதம் செய்கிறார். அதாவது ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மூன்று மொழியில் "ரஜ சோல்ட்" (Raja salt) என்ற brand name உள்ளது. அது ஒரு பிரச்சினை? ஒரு பெயரை வைத்தே பிழைப்பு அரசியல் செய்யும் மேதாவிகள் இவர்கள். 

சிலருக்கு தொட்டது எல்லாவற்றுக்கும் இனவாத லேபிள் ஒட்டினால் தான் நிம்மதியான தூக்கம் வரும்.  "உங்களுக்கு தெரியாது தோழர்... இப்படித்தான் சிங்களவன் ஆக்கிரமிக்கிறான்..." என்று வகுப்பு எடுப்பார்கள்.  இவ்வளவு காலமும் தெற்கு பொருளாதாரத்தில் வளர்ந்து கொண்டிருந்தது, வடக்கு பின்னடைவை கண்டு கொண்டிருந்தது. ஏற்கனவே இருந்த ஒன்றிரண்டு தொழிற்சாலைகளையும் யுத்தம் காரணமாக மூடி விட்டார்கள். 

இதனால் வடக்கின் பொருளாதார உற்பத்தி இலங்கையிலேயே மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. ஏதாவது வெளிநாட்டு நிறுவனம் முதலிட வந்தாலும் தமிழ்த் தேசிய கட்சிகள் போராட்டம் நடத்தி விரட்டி அடித்த சம்பவங்கள் நடந்துள்ளன. ஏனென்று கேட்டால், தாயகத்தின் வளங்களை கொள்ளை அடிக்கிறார்கள் என்பார்கள். இவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழர்களுக்கு தானே வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கேட்டால் வெளிநாடுகளுக்கு போகலாம் என்பார்கள். 

அந்நிய கம்பனிகள் முதலிட விடாமல் விரட்டி அடித்த காரணத்தால் தவறவிட்ட பொருளாதார உற்பத்தி துறை குறித்து இந்த அறிவுஜீவிகள் வாய் திறக்க மாட்டார்கள். இப்போது ஆட்சியில் உள்ள NPP அரசு நேரடியாக தலையிட்டு ஆனையிறவு உப்புத் தொழிற்சாலையை இயங்க வைத்துள்ளது. அது குறித்து நல்லது சொல்லா விட்டாலும் குறை கூறாமல் இருக்கலாம் தானே? நீங்கள் இவ்வளவு காலமும் "எமது தாயகம்... எமது தமிழ் இனம்..." என்றெல்லாம் பிதற்றியது பகல் வேஷமா? 

பேஸ்புக்கில் இனவாதத்தின் குரல் Fake ID சொல்கிறது, "தமிழ் முதலீட்டாளர்கள் வந்து கேட்ட நேரம் கொடுக்கவில்லையாம்!" ஒரு முதலீட்டாளர் தமிழனாக இருந்தால் என்ன, சிங்களவனாக இருந்தால் என்ன? எந்த முதலாளியும் இலாபம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டார்கள். தொழிலாளர் உழைப்பை சுரண்டி வருவது தான் இலாபம். ஒரு தனியார் நிறுவன முதலாளி, அவன் தமிழனாக இருந்தாலும் இலாபம் மட்டுமே குறிக்கோள். 

அது போகட்டும். தமிழ் முதலீட்டாளர்கள் மீது இந்தளவு அக்கறை உள்ள தாங்கள் தமிழ் தொழிலாளர்களை கண்டுகொள்ளாத காரணம் என்ன? இது தானா உங்களது வர்க்க பாகுபாடு காட்டும் தமிழ்த் தேசியம்? கங்கையில் குளித்தாலும் காகம் காகம் தான். தமிழ்த் தேசியம் பேசினாலும் வலதுசாரி வலதுசாரி தான்.

Sunday, February 16, 2025

இலங்கையில் இறுதியில் கம்யூனிசம் வென்றது!

 



இலங்கையில் இறுதியில் கம்யூனிசம் வென்றது! 

யாழ்ப்பாணத்திற்கு சென்ற பிரதமர் ஹரிணி, மறைந்த கம்யூனிச தோழர் மணியம் வீட்டுக்கு விஜயம் செய்துள்ளார். தோழர் மணியம், சண்முகதாசன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுபினர். அதே கட்சியில் இருந்து பிரிந்த இளைஞர் அணி தான் பிற்காலத்தில் JVP என்ற பெயரில் இயங்கியது.

இருப்பினும், அன்றைய JVP யினருக்கு, தாய்க் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுடன் நட்பு ரீதியிலான தொடர்புகள் இருந்துள்ளன. யாழ்ப்பாணத்தில், குறிப்பாக சுன்னாகம் பகுதியில் JVP செயற்பட்டு வந்தது. பிற்காலத்தில், JVP யின் ஆயுதமேந்திய கிளர்ச்சியை ஈவிரக்கமின்றி ஒடுக்கிய அரச அடக்குமுறை காரணமாக யாழ்ப்பாண கம்யூனிஸ்ட் தோழர் களுடனான தொடர்புகள் முற்றாக துண்டிக்கப் பட்டு விட்டன. 

அண்மைக்காலமாக JVP பல வெகுஜன அமைப்புகளை இணைத்து NPP என்ற பெயரில் தேர்தலில் போட்டி இட்டதும், பிரதமர் ஹரிணி NPP சார்பில் போட்டியிட்டு அதிகப் படியான மக்களின் விருப்பு வாக்குகளை பெற்றவர் என்பதும் அனைவரும் அறிந்ததே.

தோழர் மணியம் குறித்து பேஸ்புக்கில் விஜய பாஸ்கரன் எழுதிய சுருக்கமான பதிவு:


தோழர் மணியம் மறுபடியும் வந்துவிட்டார்.

//தோழர் கே ஏ சுப்பிரமணியம் வட இலங்கையின் முக்கியமான கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளர். ஒரு முழுமையான கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்து மறைந்தவர். அவருடைய திருமணத்தால் சொந்தங்களை இழந்தார். சொந்த தாயின் மரணத்துக்கும் அழைக்கப்படவில்லை. தெரிவிக்கப்படவும் இல்லை. போராட்டங்களால் இருந்த வேலைகளையும் இழந்தார். வறுமை வரவேற்று இறுக அணைத்தபோதும் கொள்கை மாறாத மனிதராக வாழ்ந்து மறைந்தவர். அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லத்தை பிள்ளைகள் பொதுமக்கள் பாவனைக்கான நூலகமாக மாற்றி பயன்பாட்டுக்கு விட்டுள்ளனர்.

சில தினங்கள் முன்பாக அமிர்தலிங்கம் நினைவாக அவரது பிள்ளைகள் அவர் வாழ்ந்த வீட்டை நினைவு சின்னமாக மாற்றி ஆளுனர் வேதநாயகன் அவர்களால் திறந்து வைத்தனர். இந்த இரண்டு நிலையங்களும் ஒரே பகுதிகளில் அமைந்துள்ளன.

1966 ஒக்டோபர் 21 இல் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் தோழர் மணியம் அவர்களும் முக்கியமானவர். இதற்காக நடந்த ஊர்வலத்தில் மணியம் பொலிசாரால் கடுமையாக தாக்கப்பட்டார். இந்த பொலிஸ் படையை தாக்குதலுக்கு எஸ்.பி. சுந்தரலிங்கம் முக்கிய காரணம். அதன் பின்னணியில் அமிர்தலிங்கம்,  அன்றைய அமைச்சர் எம் திருச்செல்வம்( நீலனின் அப்பா) இருந்தார்கள்.

இந்த போராட்டம் உச்சம் பெற மணியம் போன்ற தோழர்களும் பின்னணியில் நின்றார்கள். இதை அறிந்த அமிர்தலிங்கம் இது கம்யூனிச போராட்டம் என பாராளுமன்றத்தில் கத்தினார்.

சங்கானை சங்காயாக மாறிவிட்டதாக பேசினார்.இந்த சூழ்ச்சிகரமான பேச்சு தோழர் மணியத்தையும் உள்ளடக்கியதாக இருந்தது.1970 தேர்தலில் வட்டுக்கோட்டையில் அமிர்தலிங்கம் தோற்கடிக்கப்பட்டார். அதற்கு தோழர் மணியமும் ஒரு காரண கர்த்தா.

காலம் செல்ல கம்யூனிச அமைப்புகள் உடைந்தபோதும் மணியம் வறுமையோடு அதே பாதையில் பயணித்தார். பல உயிராபத்துகளையும் சந்தித்தார்.

அன்று தோழர்கள் மீது பொலிஸ் ஏவ காரணமாக இருந்த அமிர்தலிங்கம் பின்னாளில் அதே பொலிஸ் அராஜகத்தை எதிர்த்து நிற்கும் நிலைக்கு ஆளானார். இறுதியில் சுட்டுத் தள்ளப்பட்டார். அந்தக் கொலைக்காக பரிதாபம் கொள்ள இன்றுவரை யாருமே இல்லை.

ஆனால் இன்று மணியம் வாழ்ந்த இடத்தைத் தேடி கடற்தொழில் அமைச்சர் நாட்டின் பிரதமர் என தேடி வந்துள்ளனர். மறைந்துபோன தோழர் மணியம் மீண்டும் எழுந்துவிட்டார். மணியம் அவர்களின் வரலாறு மீண்டு வருகிறது. அவரோடு கூடவே பயணித்த அம்மாவுக்கு இறுதிக் காலத்தில் வாழ்ந்த வாழ்வுக்கு அர்த்தம் கொடுத்துள்ளது.//


நன்றி:

- Vijaya Baskaran 


Saturday, February 15, 2025

யாழில் பெரியார் சிலை உடைப்போம்! வெள்ளாள- தாலிபான்கள் மிரட்டல்!!


ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் ஒரு சைவ மத அடிப்படைவாதியும், ஆதிக்க வெள்ளாள சாதிவெறியனுமான  ஆறுமுக நாவலனின் சிலை இருக்கலாம் என்றால், ஏன் சமூக நீதிப் போராளியான பெரியாருக்கு சிலை வைக்க முடியாது?

இவ்வளவு காலமும் தமிழ்த் தேசிய முகமூடிக்கு பின்னால் இருந்த வெள்ளாள ஆதிக்க சாதி வெறியர்கள் தற்போது தமது சுயரூபத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். 

Well done. சாதி வெறி, இனவெறி, மதவெறி பிடித்தலையும் காகிதப் புலிகளின் முகத்திரை கிழிகிறது!

இதற்கு தான் ஈழத்திற்கு பெரியார் அவசியம்.

யாழ் நகரில் பெரியார் சிலை வைக்கப் போவதாக தகவல் வந்தவுடனே, புலித் தோல் போர்த்திய வெள்ளாள சாதிவெறி ஓநாய்கள் ஊளையிட்டுக் கொண்டிருக்கின்றன. 

"சிலை உடைக்கப் படும்!" என்று இந்த சாதி வெறியன் பிரான்சில் இருந்து கொண்டு மிரட்டுகிறான். பிரான்ஸ் போன்ற ஜனநாயக பண்பு கொண்ட நாடுகளில் அகதி தஞ்சம் கோரி விட்டு, தாலிபான், ISIS பாணியில் பெரியார் சிலையை தகர்க்க போவதாக மிரட்டும் அளவுக்கு புலம்பெயர்ந்த பின்னரும் சாதிவெறி தலைவிரித்து ஆடுகிறது. இ‌ந்த சாதி வெறி ஓநாய்களை தான் "தீவிர தமிழ்த் தேசியவாதிகள்" என்று சிலர் இன்னமும் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். 

"பெரியார்களுக்கு எல்லாம் பெரியார்" பிரபாகரன் சமூகநீதி குறித்து எழுதிய ஒரு புத்தகம் வேண்டாம், ஒரு கட்டுரை காட்டட்டும் பார்ப்போம்? சும்மா வாயில் வந்த படி எதையாவது உளற வேண்டியது. 

குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஈழத்தில் பெரியார் இருந்திருந்தால் நிச்சயமாக இனப் படுகொலை நடந்திருக்காது.  40000 மாவீரர்களை பலி கொடுத்து இருக்க மாட்டீர்கள். 

ஏனென்றால் இனப் படுகொலைக்கு பலியான, மாவீரர்களான மக்கள் 90% ஒடுக்கப்பட்ட சாதிகளை சேர்ந்தவர்கள் அல்லது வறுமையில் வாடிய குடும்பங்களில் இருந்து வந்தவர்கள்.

 சாதியின் பெயரில் வர்க்க ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக முன்னேற்றத்திற்காக, பெரியார் அமைதி வழியில் போராட்டம் நடத்தினார். ஆனால் இவன் போன்ற வெள்ளாள சாதிவெறி ஓநாய்கள் ஒடுக்கப்பட்ட தமிழர்களை தமிழீழ வேள்வித் தீயில் வீசி கொன்று குவித்து விட்டு, "மாவீரர்களை வணங்குகிறேன்... இனப் படுகொலைக்கு நீதி கேட்கிறேன்..." என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள். எல்லாம் கபட நாடகம். பகல் வேஷம். தமிழர்களை சுரண்டி வாழும் இவன் போன்ற சாதிவெறி ஓநாய்களை விரட்டி அடிக்க வேண்டுமானால் ஈழத்திற்கு பெரியார் தேவை. இனிமேல் நடக்கப் போவது தான் உண்மையான விடுதலைப் போராட்டம்.



Thursday, February 13, 2025

புலிக்குழு & ஒட்டுக்குழு ஒற்றுமையாக தையிட்டியில் கைகோர்த்த அதிசயம்!


புலிக் குழுவும், ஒட்டுக் குழுவும், சிங்களப் பேரினவாதிகளும், தமிழ்த் தேசிய பெருமைவாதிகளும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக போராட்டம் நடத்துவதை கனவில் கூட கண்டிருக்க மாட்டீர்கள். ஆனால் நேற்று அந்த அதிசயம் நிஜத்தில் நடந்தது! 

யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட பௌத்த விகாரையை எதிர்த்து நடந்த போராட்டத்தில் தேர்தலில் தோல்வியுற்ற எதிர்க் கட்சிகள் அனைத்தும் பங்குபற்றின. 

வழமையாக சைக்கிள் கட்சி எனப்படும் TNPF, அதிலும் 10 பேர் மட்டுமே, பௌத்த மதத்தில் புனித நாளான ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் "விகாரை எதிர்ப்பு போராட்டம்" செய்வார்கள். முன்பு இராணுவ கட்டுப்பாட்டில் உயர் பாதுகாப்பு வலயம் இருந்த காலத்தில் கட்டிய விகாரையை அகற்ற (இடிக்க) வேண்டும் என்றும், அபகரித்த அந்த நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் போராட்டம் நடத்துகிறார்கள். 

அவர்களுக்கு நஷ்ட ஈடு, அல்லது வேறு இடத்தில் காணி வழங்க ஆளுநர் முன்வந்த போதிலும், கடும்போக்கு சைக்கிள் கட்சியின் அழுத்தம் காரணமாக நில உடைமையாளர்கள் ஏற்க மறுத்து வருகின்றனர். சைக்கிள் கட்சியும் அவர்களை தனது இனவாத அரசியலுக்கு பகடைக் காய்களாக பயன்படுத்தி வருகிறது. 

அது ஒரு பக்கம் இருக்கட்டும். தற்போது இலங்கையில் ஒரு இடதுசாரி அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று அரசாங்கம் அமைத்த பின்னர், வலதுசாரி எதிர்க் கட்சிகள் அரசாங்கத்தை எதிர்க்க காரணம் தேடி அலைந்து கொண்டிருக்கின்றன. அவர்களது கண்களில் தையிட்டி விகாரை விவகாரம் தென்பட்டது.

பிறகென்ன கேட்கவா வேண்டும்? விகாரை கட்ட அனுமதித்த சிங்களப் பேரினவாத வில்லன்கள், விகாரை கட்டி முடிக்கும் வரை காத்திருந்த தமிழ்த் தேசிய புனிதர்கள் ஒன்று சேர்ந்து ஒரு  பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டார்கள். அடேங்கப்பா!

சிங்கங்களும், புலிகளும் ஒன்று சேர்ந்து நட்பு பாராட்டுவது இது ஒன்றும் முதல் தடவை அல்ல. ஏற்கனவே பிரேமதாசா காலத்தில் பார்த்த விஷயம் தான். என்ன ஒரு வித்தியாசம்? அன்று ஆயுதங்களுடன் ஒரு போர் நடந்து கொண்டிருந்தது. இன்று வாய்ப் பேச்சு அரசியல் நடக்கிறது. 

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியவாதிகள் எழுப்பும் கோஷங்களுக்கு, ஒட்டுக் குழு EPDP மற்றும் சிங்களப் பேரினவாத UNP கட்சியினரும் சேர்ந்து சொன்னார்கள் என்று நேரில் கண்ட ஒருவர் சொல்லி பெருமைப் பட்டார். அட... அட... புல்லரிக்குது!

போராட்ட களத்திற்கு ராஜபக்சே கட்சியினர் மட்டுமே வரவில்லை. ஒரு வேளை அவர்களுக்கு யாரும் அழைப்பு அனுப்பவில்லையோ தெரியாது. இல்லாவிட்டால் வடக்கின் எதிர்வினையாக தெற்கில் விகாரை ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கலாம். எப்படியாவது மதக் கலவரம், இனக் கலவரத்தை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம் தயாராக உள்ளது. 

அது சரி. இறுதியாக ஒரு கேள்வி. ஒரு வேளை சர்ச்சையில் உள்ள விகாரையின் முழுப் பொறுப்பையும் தீவிர தமிழ்த் தேசியவாதி கஜேந்திரகுமார் அல்லது அவரது TNPF கட்சியிடம் ஒப்படைத்தால் என்ன நடக்கும்? அவர்கள் சொன்ன படி விகாரையை இடித்து தரைமட்டம் ஆக்கி விட்டு நிலங்களை உரியவர்களிடம் ஒப்படைப்பார்கள் என்று நம்புகிறீர்களா? ஒருபோதும் இல்லை! அவர்கள் ஒன்றும் பொன் முட்டை இடும் வாத்தை வெட்டும் அளவுக்கு முட்டாள்கள் அல்ல. விகாரையை தொடர்ந்தும் வைத்திருந்து தென்னிலங்கை சிங்கள யாத்ரீகர்களை வரவழைத்து பணம் சம்பாதிக்க பார்ப்பார்கள். இது நடக்கா விட்டால் இருந்து பாருங்கள்.

Wednesday, January 08, 2025

"இலஞ்சம் வேண்டாம்!" - இலங்கையில் அலறும் அ‌திகா‌ரிக‌ள்!!


இலங்கை தொடர்பான இந்த தகவல்களை உங்களுக்கு எந்தவொரு தமிழ் ஊடகமும் சொல்ல போவதில்லை. 

👇👇👇

இலங்கையில் இன்று(8-1-2025), தனியார் வாகன முதலாளிகள் வேலைநிறுத்தம் அறிவித்திருக்கிறார்கள். ஆம், முதலாளிகளின் வேலைநிறுத்தம்!

ஏன் தெரியுமா? 

புதிய இடதுசாரி NPP அரசாங்கம் கொண்டு வந்த "கிளீன் சிறிலங்கா" (Clean Srilanka) திட்டத்தின் கீழ் விபத்துக்களை தடுப்பதற்கான பொலிஸ் சோதனை நடவடிக்கைகள் நடக்கின்றன. அதனால் வாகன முதலாளிகள் அதிகம் பாதிக்கப் படுகின்றார்களாம். 

1. பேருந்து வண்டிகளில் பழுதான உதிரிப்பாகங்கள் இருக்க கூடாது. தேவையற்ற கம்பிகளை கழற்ற வேண்டும். வீதியில் ஒலி மாசடைய வைக்கும், அதிக சத்தம் போடும் ஹாரன் அடிக்க கூடாது. பஸ் வண்டிக்குள் பயணிகளுக்கு இடைஞ்சலாக காதை செவிடாக்கும் அளவிற்கு அதிக சத்தமாக பாட்டு போட கூடாது.

2. சாரதி இருக்கைக்கு முன்பக்கமாக உள்ள கண்ணாடிக்கு அருகில் சாமி படங்கள் (புத்தர் சிலைகள் உட்பட) இருக்க கூடாது. ஏனெனில் அவற்றிற்கு மாலைகள், வர்ண விளக்குகள் அலங்காரம் செய்வதால் சாரதியின் பார்வையை மறைக்கிறது.

3. பந்தயம் ஓடுவது, அதி வேகமாக வாகனத்தை செலுத்துவது தடுக்கப் படுகிறது. பாடசாலைகள் போன்ற இடங்களில் போகும் பொழுது வேகத்தை குறைக்க வேண்டும். மீறினால் அதிக அபராதம் விதிப்பது மட்டுமல்ல, வாகன உரிமம் இரத்து செய்ய படலாம். 

உண்மையில் இது போன்ற பல பாதுகாப்பு விதிகள்  ஏற்கனவே சட்டத்தில் எழுதப் பட்டுள்ளன. ஆனால் முந்திய அரசாங்கங்களின் காலத்தில் யாரும் கணக்கெடுக்கவில்லை. வாகன விதி மீறல்கள் காரணமாக ஏராளமான வீதி விபத்துக்கள் நடந்தும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை. 

அது மட்டுமல்ல, தற்போது இலங்கை முழுவதும் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்க மறுக்கிறார்கள்! பொது மக்கள் விழிப்பாக இருப்பதால் லஞ்சம் வாங்க தயங்குகிறார்கள் அல்லது அச்சப் படுகிறார்கள். இதனால் ஒரேயடியாக லஞ்சம் ஒழிந்து விட்டது என்று சொல்ல வரவில்லை. வெகுவாக குறைந்து விட்டது. 

உலகில் எந்த நாட்டிலும் ஒரு இடதுசாரி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே இது போன்ற அதிசயங்களை எதிர்பார்க்கலாம். அதனால் முதலாளிகளின் ஆதிக்கத்தில் உள்ள வலதுசாரி ஊடகங்கள் இது போன்ற தகவல்களை மறைக்க பார்ப்பார்கள். அது மட்டுமல்லை, முதலாளிகளுக்கு அடிவருடி பிழைக்கும் தமிழ்த் தேசிய புனிதர்கள் கூட இதைப் பற்றி பேசாமல் வாயை மூடிக் கொண்டு இருப்பார்கள்.

Monday, November 25, 2024

இலங்கையில் முதலாவது இடதுசாரி அரசாங்கத்தில் தமிழ் அமைச்சர்கள்

 ஒரு இடதுசாரிக் கட்சி மட்டுமே இது போன்ற அதிசயங்களை நிகழ்த்திக் காட்ட முடியும். 

👇👇👇

தெற்கில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் மாத்தறை மாவட்டத்தில், NPP சார்பில் போட்டி இட்ட தமிழ் பெண் வேட்பாளர் சரொஜா சாவித்திரி போல்ராஜ், அதிகப் படியான விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகி உள்ளார். 

இன்று மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். 

சாவித்திரி போல்ராஜ் NPP செயற்பாட்டு குழு உறுப்பினர். இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக, மாத்தறை மாவட்டத்தில் இருந்து தெரிவான முதலாவது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையை பெறுகிறார்.

வடக்கு கிழ‌க்கு தமிழர்களை மூளைச்சலவை செய்யும் வகையில், காலங்காலமாக JVP எதிர்ப்பு பிரச்சாரம் செய்து வந்த தமிழினவாதிகள், இன்று வடக்கு கிழக்கில் இருந்து தமிழ் அமைச்சர்கள் இல்லை என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

இவர்களது கண்களுக்கு மலையக தமிழ் அமைச்சர்கள் தமிழர்களாக தெரியவில்லை. திருகோணமலையில் இருந்து ஒரு தமிழ் பிரதி அமைச்சர். அவரையும் புறக்கணிக்கிறார்கள். வடக்கில் இருந்து ஒரு தமிழ் அமைச்சர் இல்லை என்பது தான் இவர்களது முறைப்பாடு. இதைத் தான் யாழ்- வெள்ளாளிய மைய வாத சிந்தனை என்கிறோம். 

அது சரி, இதுவரை காலமும் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் JVP யில் சேர விடாமல் தடுத்தவர்கள் யார்? எந்த நேரமும் JVP தொடர்பாக எதிர்மறையான கருத்துக்களை பரப்பி வந்த போலித் தமிழ்த் தேசியவாதிகள் தான். No doubt. சரி இப்பவாவது திருந்தினார்களா? தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார்களா? 

NEVER. 

ஒருவர் அமைச்சராக வருவதற்கு கல்வித் தகைமை இருந்தால் மட்டும் போதாது. நீண்ட காலமாக கட்சியில் வேலை செய்திருக்க வேண்டும். அடித்தட்டு மக்கள் மத்தியில் வேலை செய்து அவர்களை அரசியல்மயப் படுத்திய கள அனுபவம் வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, அரசியல் வழிகாட்டும் சித்தாந்தமான மார்க்சிய- லெனினிசம் பற்றிய அறிவுத் தெளிவு வேண்டும். 

இது எதுவும் இல்லாமல் வெறுமனே ஒரு தமிழனாக அல்லது முஸ்லிமாக இருப்பது மட்டுமே சிறப்புத் தகைமை ஆகாது. அப்படி எதிர்பார்ப்பது கூட ஒரு பேரினவாத மனநிலை தான். 


Saturday, July 13, 2024

சாவகச்சேரி மருத்துவமனை ஊழலுக்கு எதிரான மக்கள் போராட்டம்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி வைத்தியசாலையில் நடந்த ஊழலை அம்பலப் படுத்திய டாக்டர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக மக்கள் போராட்டம். சாவகச்சேரியில் முன் ஒருபோதும் இல்லாத மக்கள் எழுச்சி. 

அரச நிதியில் மக்களுக்கு இலவச மருத்துவம் வழங்குவதற்காக நடத்தப்படும் ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் நோயாளிகளை கவனிப்பதில்லை என்றும், வேண்டுமென்றே தனியார் மருத்துவமனைக்கு செல்லுமாறு ஊக்குவிக்கிறார்கள் என்றும் டாக்டர் அர்ச்சுனா சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டி இருந்தார். அதைத் தொடர்ந்து மாவட்ட வைத்திய அதிகாரியும், தனியார் மருத்துவமனை நிர்வாகிகளும் அவரை வெளியேற்ற முயற்சித்து வருகின்றனர். போலிஸ் அனுப்பி கைது செய்து வெளியேற்ற எடுத்த முயற்சி மக்கள் போராட்டம் காரணமாக தோல்வி அடைந்தது. 

சாவகச்சேரி பகுதியில் பூரண கடையடைப்பு அறிவிக்கப்படடது. இதே நேரம் "சிங்களப் பொலிஸ் எதற்கு வந்தது?" என்று கேட்டு அரசியல் செய்ய சென்ற "தீவிர தமிழ்த் தேசியவாதி" சுகாஸ் @Sugashkanu மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அங்கிருந்து வாலை சுருட்டிக் கொண்டு ஓடினார். எல்லா இடங்களிலும் இவர்களது தமிழ்த் தேசிய நாடக அரசியல் எடுபடாது என்பதை மக்கள் உணர்த்தி உள்ளனர். தமிழ் மக்கள் இனியும் இந்த கபடவேடதாரிகளை நம்பி ஏமாறத் தயாராக இல்லை. 

இன்று இலங்கை முழுவதும் ஒரு Whitsle blower ஆக அறியப்படும் அர்ச்சுனா, மருத்துவ ஊழல் தொடர்பாக மேலும் பல தகவல்களை தெரிவித்து உள்ளார். குறிப்பாக தனியார்மயத்தை ஊக்குவிக்கும் இலங்கை அரசுக்கு "நல்ல பிள்ளை" பெயர் எடுப்பதில் யாழ் மருத்துவமனை நிர்வாகம் முதல் இடத்தில் இருக்கிறதாம். அரசு ஒதுக்கும் நிதியை செலவிடாமல் பெரும் பகுதியை திருப்பி அனுப்புகின்றனர். அத்துடன் நிர்வாகத்தில் பிரதேசவாதம், சாதியவாதம் தலை தூக்கி உள்ளமை மருத்துவ துறை சீர்கேடுகளுக்கு காரணமாக உள்ளது. 

சமூக வலைத்தளங்களில் இயங்கும் தீவிர தமிழ்த் தேசியவாதிகள், புலி விசுவாசிகள் யாரும் இதைப் பற்றி பேசாமல் மௌனமாக இருப்பதை அவதானிக்கலாம். இதை வைத்து இனவாத பிழைப்பு அரசியல் செய்ய முடியாது என்பது மட்டுமல்ல, உண்மையில் அவர்கள் சிங்கள அரச கைக்கூலிகள் தான் என்பதையும் நிரூபித்து வருகின்றனர்.

தமிழ்த் தேசியம் ஒரு குட்டி முதலாளிய வர்க்க அரசியல் என்பது மறுபடியும் நிரூபிக்க பட்டிருக்கிறது. யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை ஊழல் தொடர்பாக தமிழ் உழைக்கும் வர்க்க மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நேரம், அவர்களது வர்க்க கோபாவேசத்தை மழுங்கடிக்கும் வகையில் so called தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் நடந்து கொள்கிறார்கள். பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழரசு கட்சி தலைவர் ஸ்ரீதரன் "இது ஒரு இன அழிப்பு!" என்றார். இவர்களுக்கு இனத்தை தவிர வேறெந்த மண்ணாங்கட்டியும் தெரியாது. சும்மா எதையாவது உளற வேண்டியது. 

இன்னொரு எம்.பி. கஜேந்திரன் ஊழல் செய்த டாக்டர்கள் தண்டிக்க பட வேண்டும் என்றார். ஆனால் தனியார் மருத்துவமனைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறவில்லை. ஆனால், வேண்டுமென்றே அரச மருத்துவமனைகளில் நடக்கும் ஊழல்களை கண்டுகொள்ள மறுக்கும் அரசை கண்டிக்கவில்லை! என்னே அதிசயம்! இந்த விஷயத்தில் அரசுக்கு முட்டுக் கொடுப்பது தவறாக தெரியவில்லை. இவர்கள் யாரும் போராட்டம் நடத்திய மக்களை சென்று சந்திக்கவில்லை. 

இவர்களை விட, புலிகளின் பெயரால் ஜிகாத் (புனிதப் போர்) நடத்தும் ஏக இறைவனின் போராளிகள் சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக வாயே திறக்கவில்லை. தானடா விட்டாலும் சதை ஆடும். சிங்கள அரசுக்கு நெருக்கடி வந்தால் புலி அரசியலை கையில் எடுப்பார்கள். இந்த விஷயத்திலும் "புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?" என்று புறநானூறு பாடினார்கள். அதாவது சாவகச்சேரி மருத்துவமனை ஊழலை வெளிக் கொணர்ந்த டாக்டர் அர்ச்சுனாவின் தந்தை முன்பு புலிகளின் காவல்துறையில் இருந்தாராம். அந்த பெருமை மட்டும் அவர்களுக்கு போதும். தமிழ் மக்கள் எக்கேடு கெட்டால் இவர்களுக்கு என்ன வந்தது? 

சரி, தனியார் மருத்துவமனை தொடர்பாக இவர்களது நிலைப்பாடு என்ன? முன்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அவர்களது நிர்வாகத்தில் இயங்கியது மருத்துவமனையில் பணியாற்றிய so called "தமிழ்த் தேசிய மருத்துவர்கள்", தற்போது தனியார் மருத்துவமனைகளில் வேலை செய்கிறார்கள். தமிழ்த்தேசியர்கள் நோக்கம் பணக்காரர்களுக்கு சேவை செய்வது என்பதாக மாறி விட்டது. இது தான் குட்டி முதலாளிய அரசியல் சிந்தனை. "காசு இருந்தால் மருத்துவம். இல்லை என்றால் வருத்துவோம்!" - இது தானே மருத்துவ மாபியாவின் கொள்கை? இதற்கு சிங்கள பேரினவாத அரசும் உடந்தை. தமிழ்த் தேசியவாதிகள் கூட்டுக் களவாணிகள். 

Saturday, May 11, 2024

30 உலக நாடுகள் சேர்ந்து அழித்த 1971 ஜே.வி.பி. எழுச்சி!


"இலங்கையில் 1971 ம் ஆண்டு 30 நாடுகள் சேர்ந்து அழித்த ஜேவிபி கிளர்ச்சி!"*  

Revolution in the Air, Sixties Radicals turn to Lenin, Mao and Che  நூலில் எழுதப் பட்டுள்ள வரலாற்றுக் குறிப்பு. 

அந்த காலகட்டத்தில்  "எதிரி நாடுகளாக" கருதப்பட்ட அமெரிக்கா, பிரித்தானியா, சோவியத் யூனியன், சீனா, இந்தியா ஆகிய உலக வல்லரசு நாடுகள், இலங்கையில் ஒரு  சோஷலிச புரட்சியை நடத்த கிளம்பிய ஜேவிபி இயக்கத்தை ஒன்று சேர்ந்து ஒடுக்கின. சிறிலங்கா அரசுக்கு வேண்டிய உதவிகளை வழங்கின. 

இந்த புரிதல் தமிழர்களிடம் இருந்திருந்தால் "2009 ஆண்டு 30 நாடுகள் சேர்ந்து இனவழிப்பு செய்தான..." என்று சொல்ல வேண்டிய தேவை வந்திருக்காது. இவர்கள் ஒருநாளும் வரலாற்றில் இருந்து எந்தப் பாடமும் கற்றுக் கொள்ள மாட்டார்கள். 

1971ம் ஆண்டு ஜேவிபி கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி இருந்தன.  

இந்த வல்லரசுகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு காரணங்களுக்காக இலங்கை அரசை ஆதரித்தன:

1. இந்தியா எப்போதும் தன்னை இலங்கையின் பாதுகாவலனாக கருதி வந்துள்ளது. அங்கு நடக்கும் அரச கவிழ்ப்பு, மார்க்சிய புரட்சி எல்லாம் இந்தியாவுக்கும் ஆபத்தானது. 

2. அமெரிக்காவுக்கு இலங்கையில் கம்யூனிசத்தை அழிக்க வேண்டும் என்ற வெறி காரணம்.

3. பிரித்தானியாவை பொறுத்தவரையில் வழமையான கம்யூனிச எதிர்ப்புடன், முன்னாள் காலனிய நாடு என்ற கூடுதல் அக்கறை.

4. சோவியத் ரஷ்யா மேற்குலகுடன் முரண்பட விரும்பவில்லை. அதனால் சிறிமாவோ தலைமையிலான சமூக- ஜனநாயக அரசை ஆதரித்தது. 

4. சீனாவை பொறுத்தவரையில் சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு முக்கியம். அவர்கள் ஜேவிபி கிளர்ச்சியை ஆதரிக்கவில்லை. அத்துடன் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஒரு நட்பு நாட்டை இழக்க விரும்பவில்லை. 

இது குறித்து ஒரு தடவை மலேசியாவை சேர்ந்த ஒரு மாவோயிஸ்டுடன் உரையாடிய பொழுது, "சீனா‌வி‌ன் அன்றைய  நிலைப்பாடு தவறு தான்" என்பதை ஒத்துக் கொண்டார். அவரும் ஒரு தமிழர் தான். 

ஒரு காலத்தில் சீனா, இந்தியா ஒன்று சேர்ந்து தம்மை அழித்தார்கள் என்பதற்காக, ஜேவிபி எப்போதும் சீன- இந்திய எதிர்ப்பு வன்மத்துடன் அலையவில்லை. இந்த விஷயத்தில் தமிழ்த் தேசியவாதிகள் ஜேவிபி இடமிருந்து  கற்றுக் கொள்ள வேண்டும்.

*நாம் வரலாற்றில் இருந்து எந்தப் பாடத்தையும் கற்றுக் கொள்வதில்லை.


Wednesday, May 08, 2024

"ஜே.வி.பி. தமிழர்களின் எதிரி!" - புதிய ஜனநாயகத்தின் பு‌திய அவதூறு


புதிய ஜனநாயகம் இதழில் இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை! 

ஜேவிபி இந்திய- இலங்கை முதலாளிய ஆளும் வர்க்க நலன்களுக்கு விலை போவதாக சொல்வதில் ஒரு நியாயம் இருக்கலாம். அதே நேரத்தில், அதே ஆளும் வர்க்கத்தின் ஊதுகுழல் ஊடகங்கள் ஜேவிபி தொடர்பாக செய்யும் பொய் பிரச்சாரங்களை ஒரு உழைக்கும் வர்க்க பிரதிநிதி நம்புவது அநியாயம். 

"ஜேவிபி, 1980 க‌ளி‌ல் நிகழ்த்திய இனப் படுகொலை வன்முறைகளுக்கு மன்னிப்பு தெரிவிக்குமா?" என்று சிங்கள பேரினவாத ஆளும் வர்க்க ஊடகங்கள் விவாதங்களை கட்டமைத்தால் அதை புதிய ஜனநாயகத்தில் அ‌ப்படியே போடுவீர்களா? 1988-89 இனப் படுகொலை பழியை ஜேவிபி மீது போடுவது அபத்தம் மாத்திரம் அல்ல, ஆளும் வர்க்கத்தின் பொய்ப் பிரச்சாரத்தை அ‌ப்படியே வாந்தி எடுப்பதும் ஆகும்.

"LTTE, 2009 ல் நிகழ்த்திய இனப்படுகொலைக்கு மன்னிப்பு கேட்குமா?" என்று ஊடகங்கள் ஒரு விவாதத்தை கட்டமைப்பது சரியா? இது அரச படைகள் செய்த படுகொலைகளை மூடி மறைப்பது ஆகாதா? 2009 இனப் படுகொலைக்கு LTTE மட்டுமே காரணம் என்ற மாதிரி கட்டமைத்து ஒரு கேள்வி கேட்கப் பட்டால் அதற்கு தமிழர்களிடம் இருந்து எப்படியான எதிர்வினைகள் வரும் என்பது எல்லோருக்கும் தெரியும். அது எப்படி இவர்களால் ஜேவிபி என்றால் மட்டும் உடனே அரச ஆதரவு நிலைப்பாடு எடுக்க முடிகிறது? எனக்கு புரியவில்லை. 

இந்தக் கட்டுரையில் இன்னொரு இடத்தில் "1983 ஜூலையில் நடந்த ஈழ மக்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கைகளில் ஜேவிபி முன் நின்று செயற் பட்டது." என்று அவதூறு புனைந்து அபாண்டமான பழி சுமத்த படுகிறது. இது படு அபத்தம் மட்டுமல்ல. ஜூலை படுகொலைகளை முன் நின்று நடத்திய, உண்மையான குற்றவாளிகளான, அன்று ஆட்சியில் இருந்த வலதுசாரி- இனவாத UNP அரசாங்கத்திற்கு வெள்ளை அடிக்கும் வேலை. நிச்சயமாக, புதிய ஜனநாயகத்திடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை!

"1983 இனக் கலவரத்தை ஜேவிபி நடத்தியது!" என்று அன்றைய ஜே. ஆர். அரசாங்கம் செய்த பொய் பிரச்சாரத்தை இந்த கட்டுரையாளர் உண்மை என்று நம்பி இருக்கிறார். இலங்கையில் அன்று அதை யாரும் நம்பவில்லை. சிங்களவர் மட்டுமல்ல தமிழரும் நம்பவில்லை. அன்றிருந்த ஜே. ஆர். அரசாங்கம் இதை ஒரு சாட்டாக வைத்து, ஜேவிபி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை தடை செய்தது. அதற்கு சொல்லப்பட்ட காரணம் அது. இப்படிப் பார்ப்போம். இந்தியாவில் மோடி அரசாங்கம் குஜராத் முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலைகளுக்கு காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டி புதிய ஜனநாயகம் மற்றும் பல இந்தியா கம்யூனிஸ்ட் கட்சிகளை தடை செய்தால் அதை நாங்கள் உண்மை என்று நம்ப வேண்டுமா? 

ஆளும் வர்க்க நலன் சார்ந்த சிங்கள ஊடகங்கள் மட்டுமல்ல, தமிழ் ஊடகங்கள் கூட இனவாத கண்ணோட்டத்தில் திரிபு படுத்தி செய்தி தெரிவிப்பது வழமையாக நடந்து கொண்டிருக்கிறது. இன்று ரணில் அரசாங்க சார்பு ஊடகங்கள் ஜேவிபி யை தமிழர்களுக்கு எதிரான கட்சியாக கட்டமைத்து பிரச்சாரம் செய்கிறார்கள். அதையே தமிழ் ஊடகங்களும் செய்கின்றன. ஆனால் தமிழ் மக்கள் அதை எல்லாம் நம்புவதாக கட்டுரையாளர் நினைத்துக் கொள்வது சுத்த அபத்தம். எல்லோரையும் மூளைச் சலவை செய்ய முடியாது. சுய புத்தியில் சிந்திக்கும் தமிழர்கள் நிறையப் பேர் உள்ளனர். அவர்கள் யாரும் ஜேவிபி யை எதிரியாக கருதவில்லை.

1988-89 இனப்படுகொலயை ஒவ்வொரு வருடமும் ஜேவிபி நினைவு கூர்ந்து வருகிறது. அன்றைய காலகட்டத்தில் ஜேவிபி நடத்திய கூட்டங்களில் பங்கு பற்றிய ஒரே காரணத்திற்காக ஒட்டு மொத்த கிராம மக்களும் அரச படையினரால் படுகொலை செய்யப் பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. அதிலும் 18 வயதை அடையாத பாடசாலை மாணவர்கள் கூட ஈவிரக்கமின்றி கொலை செய்யப் பட்டுள்ளனர். இணையத்தில் சூரியகந்த புதை குழி என்று தேடிப் பாருங்கள். இது பிற்காலத்தில் தற்செயலாக கண்டுபிடிக்க பட்டது. இதை விட இன்னமும் தோண்டப் படாத மனித புதை குழிகள் ஏராளம் உள்ளன.

1988-89 இனப் படுகொலைக்கு நீதி கிடைத்து விட்டதா? அந்தப் படுகொலைகளுக்கு இதுவரை யார் பொறுப்பு ஏற்றார்கள்? எத்தனை பேர் தண்டிக்க பட்டனர்? ஒன்றுமே இல்லை. காரணம் என்ன? ஒரு சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களான ஏழைகள், உழைப்பாளிகள், தாழ்த்தப்பட்ட சாதியினர் கொன்று குவிக்கப் பட்டால் அது கு‌றி‌த்து யாருக்கும் அக்கறை இல்லை. அதனால் தான் இன்று வரையில் முதலாளித்துவ ஊடகங்கள் இதைப் பற்றி பேச மறுக்கின்றன. மேற்கத்திய, சர்வதேச நாடுகள் பாராமுகமாக உள்ளன. ஆனால் வர்க்க அரசியல் பேசும் புதிய ஜனநாயகம் இந்த உண்மைகளை கண்டு கொள்ளாமல் கடந்து செல்வது கவலை அளிக்கிறது. 




Tuesday, April 30, 2024

தமிழ்த் தேசிய மே நாள்!

 


இவ்விரண்டு முதலாளித்துவ கட்சிகளுக்கு இடையில் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?

ஒரு கட்சி "தமிழ்த் தேசிய மே நாள்" என்று பிரிவினை பேசுகிறது.
மற்ற கட்சியும் அதே பாணியில் "தமிழ்த் தேசத்து தொழிலாளர்" என்று பிரிவினை அரசியலை பேசுகிறது.

முதலாளிகள் ஒற்றுமையை இவர்கள் எதிர்க்க மாட்டார்கள்.
ஆனால் தமிழ் தொழிலாளர்கள் சிங்களத் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார்கள்.
அதற்கு தான் தமிழ்த் தேசியம் என்ற மாயத் திரை தேவைப் படுகிறது.

உலகில் எந்த நாட்டிலும், இப்படியான மோசடியான மே தினத்தை பார்க்க முடியாது. ஒரு காலத்தில் ஜெர்மனியில் ஹிட்லரின் Nazi கட்சி இதே மாதிரி "ஜெர்மன் தேசிய மே நாள்", அல்லது "ஜெர்மன் தேசத்து தொழிலாளர்" பற்றி பேசியது. அந்தக் காலம் மலையேறி விட்டது. இப்போது யாரும் அப்படி பேசத் துணிய மாட்டார்கள். உழைக்கும் மக்களுக்கு தேசியம் கிடையாது. இன, மத பேதமின்றி ஒன்று சேர்ந்து போராட வேண்டிய தொழிலாளர்களை தேசியம் பேசி பிரிப்பது அயோக்கியத்தனமானது.

அது போகட்டும்.
இவர்கள் சொல்லும் தமிழ் தேசத்தில் இன்றைக்கும் உள்ள தொழிற்சாலைகளை விரல் விட்டு எண்ணலாம். பெரும்பாலானவை சிறிய தொழிலகங்கள். அதனால் அமைப்பு ரீதியாக அணிசேரா தொழிலாளர்கள் சிறு முதலாளிகளின் தயவில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம். 
அந்த சிறு முதலாளிகள் செய்யும்  கொடுமைகள் எண்ணில் அடங்காதவை:
- மிகக் குறைந்த கூலி கொடுப்பது.
- அதிக நேரம் வேலை வாங்குவது.
- ஓய்வு நாட்களிலும் வேலை செய்ய நிர்ப்பந்திப்பது. 
- தினசரி வேலைக்கு வரச் சொல்வது.
- ஆபத்தானவை வேலைக்கு பாதுகா‌ப்பு கவசங்கள் கொடுக்க மறுப்பது.

இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.
இவற்றை எல்லாம் இந்த முதலாளித்துவ கட்சிகள் மேதின கோரிக்கைகளாக வைக்க மாட்டார்கள்.

காரணம்: மேற்படி கொடுமைகளுக்கு காரணமான தமிழ் பேசும் சிறு முதலாளிகள் தான் இந்த தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு நிதி வழங்குகிறார்கள். அதாவது தமிழ் தொழிலாளர்கள் உழைப்பை சுரண்டி அவர்களிடம் இருந்து திருடிய பணத்தில் தான் இந்த முதலாளித்துவ கட்சிகள் அரசியல் நடத்துகின்றன!
பணம் பேசுகிறது!


Saturday, April 27, 2024

EPDP & TMVP யின் இணக்க அர‌சிய‌ல், ஆயுதப் போராட்டத்தின் தோல்வி!

டக்ளஸ் தலைமையிலான EPDP மற்றும் கருணா/பிள்ளையான் தலைமையிலான TMVP ஆகிய அரசியல் கட்சிகள், சிறிலங்கா அரசுடன் ஒத்துழைப்பது தமிழீழத்திற்கான ஆயுத போராட்டத்தின் தோல்வியை எடுத்துக் காட்டுகின்றது! 

விளக்கம் கீழே 👇👇👇

இவ்விரு கட்சிகளை உருவாக்கிய ஆரம்ப கால உறுப்பினர்கள் முன் ஒரு காலத்தில் சிறிலங்கா அரசுக்கு எதிரான ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். இன்று அவர்கள் வந்தடைந்த இடம் என்னவென்று விபரிக்க தேவையில்லை.

இன்னொரு வகையில் பார்த்தால், அவர்களால் தனித்து நின்று எதிர்ப்பு அரசியல் செய்ய முடியாது. காரணம், முன்பு அரசை எதிர்த்து ஆயுதப் போராட்டம் நடத்தியவர்கள் என்பதால், அரசு எந்நேரமும் சந்தேகம் கொண்டிருக்கும். இனவாத மனநிலையும் இலகுவில் நம்ப விடாது. இதற்கு பல ஆதாரங்களை காட்டலாம். 

முன்னாள் இராணுவ ஜெனரல் கமல் குணரத்ன எழுதிய நந்திக் கடல் நோக்கி நூலை வாசிக்கவும். புலிகளால் இயங்க விடாமல் தடுக்கப் பட்ட முன்னாள் போராளிக் குழுக்கள், அரச படைகளுடன் சேர்ந்து புலிகளை எதிர்த்து போரிட முன்வந்த போதிலும் அவர்களை தம்முடன் சேர்க்காமல் தனித்து இயங்க விட பட்டதாக குறிப்பிடுகிறார். காரணம்: "அவர்களை நம்ப முடியாது. ஒரு காலத்தில் எமக்கு எதிராக ஆயுதமேந்தி போரிட்டவர்கள்." 

அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தமிழ் துணைப் படைக் குழுக்கள் இராணுவ முகாம்களுக்கு அருகாமையில் முகாமிட்டு இருந்தன. அரசு அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கி இருந்தாலும், இராணுவ சேவையில் இணைத்துக் கொள்ளவில்லை. அந்தக் குழுக்கள் தமது நிதி ஆதாயத்திற்காக தமிழ் வர்த்தகர்களிடம் மிரட்டி கப்பம் வசூலிப்பதை கண்டு கொள்ளவில்லை.  

இங்கே ஒரு சுவாரஸ்யமான விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். இன்று எதிர்ப்பு அரசியல் செய்யும் தரப்பினர் யார் என்று பார்த்தால், அவர்களுக்கும் ஆயுத போராட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இருந்திருக்காது! சிலரது உறவினர்கள் போராளிகளாக இருந்திருக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் இவர்கள் யாரும் இயக்கத்தில் சேரவில்லை. உறங்காமல் விழித்திருந்து படித்து இருப்பார்களே தவிர, ஒரு இரவாவது காவலரண் கடமையில் இருந்திருக்க மாட்டார்கள். 

அனைவருக்கும் தெரிந்த தமிழரசுக் கட்சி, அதிலிருந்து பிரிந்து சென்று "தீவிர புலி அரசியல்" பேசும் தமிழ் மக்கள் தேசிய முன்னணி. இவ்விரண்டு கட்சிகள் தான் அரசை எதிர்த்து அரசியல் செய்யும் தூய தமிழ்த் தேசியக் கட்சிகளாக தம்மைக் காட்டிக் கொள்கின்றன. ஆனால் அதன் தலைவர்கள், உறுப்பினர்கள் ஒரு போதும் துப்பாக்கியை கையால் தொட்டிருக்க மாட்டார்கள். 

ஆயுத பாணி இயக்கங்களை சேர்ந்தவர்கள் காட்டுக்குள் இரு‌ந்து அரச இராணுவத்தை எதிர்த்து போராட்டிக் கொண்டிருந்த காலத்தில், இவர்கள் படித்து பட்டம் பெற்று அதே அரச இயந்திரத்தில் வேலைக்கு சென்றனர். இது தான் யதார்த்தம். 

ஆழமாக சிந்தித்து பாருங்கள். ஒரு போதும் ஆயுதம் தூக்கியிராதவர்கள், இன்னொரு விதமாக சொன்னால் மிதவாதிகள் "எதிர்ப்பு அரசியல்" செய்வதால் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. அதே நேரம் அவர்களே இணக்க அரசியல் செய்யும் முன்னாள் போராளிகளை துரோகிகள் என்று தூற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதற்குப் பிறகும் எவனாவது தமிழீழத்திற்காக ஆயுதமேந்தி போராட முன்வருவானா? ஆளை விட்டால் போதும் சாமி என்று ஓடி விடுவான். 

அது... வந்து... என்று இழுக்காதீர்கள். ஒருவேளை பிரபாகரன் ஆயுதங்களை கைவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒரு அரசியல் கட்சியாக மாற்றினாலும் அரசுடன் ஒத்தோடும் இணக்க அரசியல் செய்து கொண்டிருப்பார். உலகில் தனிநாடு பிரிவினை கேட்டு போராடிய இயக்கங்கள் எல்லாம் கடைசியில் அவ்வாறான இடத்திற்கு வந்தடைந்து உள்ளன. PLO முதல் IRA வரை பல உதாரணங்கள் காட்டலாம்.

Thursday, April 25, 2024

பு‌லிக‌ளி‌ன் ஈழத்திலும் சாதிக்கொரு நீதி!


புலிகளின் காலத்தில் சாதி வெறியர்களுக்கு மிக மென்மையான "தண்டனை" கொடுத்து சாதிய கட்டமைப்பை பாதுகாத்து வந்துள்ளனர். இதனை "அதி தீவிர புலி விசுவாசி" ஒருவர் தானாகவே உறுதிப் படுத்தி உ‌ள்ளா‌ர். 

ஒரு கோவிலில் தாழ்த்தப்பட்ட சாதியினர் சாமி தூக்க விடாமல் உயர்த்தப் பட்ட சாதியை சேர்ந்த நிர்வாகத்தினர் தடுத்துள்ளனர். அதற்கு தண்டனை என்ன? 
தாழ்த்தப்பட்ட சாதியினர் முதுகில்/கையில் சீனியை கொட்டி நக்க வைத்து ஒரு வேடிக்கையான, மிகவும் மென்மையான தண்டனை கொடுத்துள்ளனர்! 

ஏனென்றால் அந்தக் குற்றவாளிகள் சாதியால் உயர்ந்தவர்கள். அவ‌ர்களு‌க்கு கடுமையான தண்டனை கொடுக்க முடியாது. குறைந்த பட்சம் துரோகிகள், ஒட்டுக் குழு என்று முத்திரை குத்தி சமூகத்தில் இருந்து ஒதுக்க முடியாது. காரணம் அவர்கள் சாதியால் உயர்ந்தவர்கள்! பண வசதி படைத்த ஆதிக்க சாதியினரின் நிதி போராட்டத்திற்கு தேவை. அதனால் அவர்களை பகைக்க கூடாது.
இது தான் புலிகளின் நீதி! 
சாதிக்கொரு நீதி.

சரி, அதற்கு பிறகாவது சாமி தூக்க அனுமதித்தார்களா? 
இல்லை. கோயிலை மூடி விட்டார்கள். இதனால் யாருக்கு இலாபம்? நிச்சயமாக ஆதிக்க சாதியினருக்கு தான் ஆதாயம். போர் நடந்த காலத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினரின் பங்களிப்பு அவ‌சிய‌ம். அதனால் அவர்களை திருப்திப் படுத்த தற்காலிகமாக கோயிலை மூடி விட்டனர். போர் முடிந்த பின்னர் திறக்கப் படும். ஆனால் பழைய நிலைமையே தொடரும். அதுவும் புலிகளுக்கு நன்றாகத் தெரியும். 

புலிகள் உண்மையிலேயே சாதியத்தை ஒழிக்க விரும்பி இருந்தால் சாதி வெறியர்களுக்கு மரண தண்டனை வழங்க எது தடையாக இருந்தது? 

கண்டிக்கு சென்று சிங்கள இனவெறி யின் சின்னமாக கருதப்பட்ட தலதா மாளிகைக்கு குண்டு வைக்க தெரிந்தவர்களுக்கு, அருகில் இருந்த சாதி வெறிக் கோயிலுக்கு குண்டு வைக்க முடியவில்லை. 
என்ன காரணம்? 

#அறிவோம்ஈழம்


Saturday, April 20, 2024

தமிழ்த் தேசியம்- ஒரு அதிகார வர்க்க ஒத்தோடி அரசியல்

மலையக தமிழ் தொழிலாளர்களை யாழ் தமிழ் கங்காணிகள் ஒடுக்கியது பற்றிய விவாதம் அண்மைக் காலமாக சமூக வலைத்தளங்களில் நடந்து வருகின்றது. 

இந்த வரலாற்றை மறுப்பவர்கள் கூறும் (வழமையான) காரணம், இந்த குற்றச்சாட்டு தமிழர்களை "பிளவு படுத்துகிறது"(!) என்பது தான். இப்படி பேசுவோர், "தமிழர்கள் ஒரே இனமாக ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்..." என்ற இனவாதக் கோட்பாட்டின் அடிப்படையில் அதை சொல்கிறார்கள். உண்மையில் அது ஒரு கற்பனை (myth). உலகில் உள்ள ஏனைய இனங்கள் போன்று தமிழர்களும் "ஒரே இனமாக, ஒற்றுமையாக" வாழவில்லை. பகை முரண்பாடு கொண்ட சமூகங்களாக பிரிந்து நின்றனர். இன்றைக்கு அதில் பெருமளவு மாற்றம் வந்திருந்தாலும் வர்க்க முரண்பாடு மாறவே மாறாது. காரணம், இவர்கள் வாழும் முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்பு. 

பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவில் இருந்து பெருந்தோட்ட தொழிலாளர்களை அழைத்து வரும் போதே கங்காணிகளையும் கொண்டு வந்தனர் என்று சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் அப்படி நடந்திருக்கிறது. மறுக்கவில்லை. ஆனால் பிரித்தாளும் கொள்கையில் சிறந்த பிரிட்டிஷ்காரர்கள் காலப்போக்கில் யாழ்ப்பாண கங்காணிகளை பணியில் அமர்த்தினார்கள்.

அதற்கு மூன்று காரணங்கள் உள்ளன:

1. இலங்கைத் தமிழர்கள், இந்தியாவில் இருந்து வந்த தமிழர்களை விட தனித்துவமான வரலாறு, பண்பாட்டை கொண்டவர்கள்.

2. இரண்டு வகை தமிழர்களுக்கு இடையில் உள்ள சாதி வேறுபாடு. அந்தக் காலத்தில் யாரிடமும் மொழி உணர்வு அல்லது இன உணர்வு இருக்கவில்லை. சாதிய உணர்வே மேலோங்கி  இருந்தது.

3. யாழ்ப்பாணத் தமிழர்கள் பிரிட்டிஷ் காலனிய எஜமானர்களுக்கு விசுவாசமாக இருந்தனர். இது மிக முக்கியமானது. எந்த அதிகார வர்க்கமும் தமக்கு விசுவாசமாக நடக்கும் பிரிவினருக்கு பதவிகளை கொடுக்கும். 

பொதுவாக முதலாளித்துவ கட்டமைப்பு எவ்வாறு இயங்குமோ அ‌வ்வாறு தான் மலையகத்தில் நிலைமை இருந்தது. 

அதாவது முதலாளித்துவ சமுதாயத்தில் 3 வகையான வர்க்கப் பிரிவினைகள் இருக்கும்:

1. பெரும் முதலாளிகள். மலையகத்தில் பெருந்தோட்ட முதலாளிகள். அவர்கள் பெரும்பாலும் ஆங்கிலேய அல்லது ஐரோப்பிய இனத்தவர்கள். 

2. முதலாளிகளுக்கு சேவை செய்யும் நடுத்தர வர்க்கம் அல்லது குட்டி முதலாளிய வர்க்கம். மலையகத்தில் கங்காணிகள், கீழ் மட்ட மனேஜர்கள், அலுவலக ஊழியர்கள். அவர்கள் பெரும்பாலும் யாழ்ப்பாணத் தமிழர்கள். 

3. அடித்தட்டு பாட்டாளி வர்க்கம். அவர்கள் பெரும்பாலும் இந்தியாவில் இருந்து அழைத்து வரப் பட்ட தொழிலாளர்கள். தமிழ் பேசினாலும் ஒடுக்கப்பட்ட சாதியினர். அதைவிட பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்கள். தம்மைத் தாமே அடிமைகளாக விற்றுக் கொள்ள தயாராக இருந்தவர்கள். 

இவ்வாறு மூன்று வர்க்கப் பிரிவுகளாக மலையகம் இருந்தது. இவர்களுக்குள் இணக்கப்பாடுகள் மட்டுமல்ல முரண்பாடுகளும் இருந்தன. அவற்றைப் பற்றி பேசாமல் மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கடந்த கால வர்க்கப் போராட்ட  வரலாற்றை முற்றிலுமாக இருட்டடிப்பு செய்து விட்டு இனவாதக் கண்ணோட்டத்தில் வரலாற்றை திரிபுபடுத்துவது  அதிகார வர்க்க ஒத்தோடித்தனம் அல்லாமல் வேறென்ன? இதைத் தான் தமிழ்த் தேசியம் காலாகாலமாக செய்து கொண்டிருக்கிறது.

Monday, April 15, 2024

"இராணுவத்திற்கு ஆள் சேர்த்துக் கொடுத்த ஜே.வி.பி!" நடந்தது என்ன?

ஜேவிபி க்கு எதிராக தமிழ் தரப்பில், தமிழ் வலதுசாரிகள், முன்வைக்கும் குற்றச்சாட்டு: "யுத்தம் நடந்த காலத்தில் ஜேவிபி யினர் கிராமம் கிராமமாக பிரச்சாரமும் செய்து இராணுவத்திற்கு ஆள் சேர்த்து கொடுத்தனர்!" 

இந்த குற்றச்சாட்டை வைப்பவர்கள் கூட அதை இனவாதக் கண்ணோட்டத்தில் தான் சொல்கிறார்கள். 

1. புலிகளின் காலத்தில், அவ‌ர்களது பிரச்சாரங்களில், "இராணுவம் என்பது தமிழர்களின் இரத்தம் குடிக்க காத்திருக்கும் காட்டேரிகள்" என்று தான் சித்தரிக்கப்பட்டது. உ‌ண்மையான விடுதலைப் போராட்டம் என்றால் இராணுவத்தை வென்றெடுக்க வே‌ண்டு‌ம். ஆனா‌ல் அதை விடுத்து தமிழர்களுடன் எந்தப் பகைமையும் காட்டாத இராணுவ வீரர்களையும் எதிரிகள் ஆக்கியது தான் புலிகளின் "சாதனை". 


2. வி.பு. தலைவர் பிரபாகரன் "துப்பாக்கிக் குழலிருந்து அதிகாரம் பிறக்கிறது" என்ற மாவோவின் மேற்கோளை சொல்லிக் காட்டுவார். அவர் உண்மையில் மாவோ எழுதிய "தேர்ந்தெடுத்த இராணுவப் படைப்புகள்" என்ற நூலை வாசித்து அறிந்து இருந்தால், சிறிலங்கா இராணுவத்தை தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மாற்றுவதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டிருப்பார். இந்த விஷயத்தில் புலிகள் விட்ட தவறை ஜேவிபி பயன்படுத்தி கொண்டது. 


3. ஜேவிபி தொடர்பான குற்றச்சாட்டில் ஒரு விஷயத்தை கவனிக்கவும்: "கிராமம் கிராமமாக இராணுவத்திற்கு ஆள் சேர்த்தார்க‌ள்." கவனிக்கவும்: நகரம் நகரமாக அல்ல "கிராமம் கிராமமாக". இலங்கையின் கிராமங்கள் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கி இருப்பதால், வேலைவாய்ப்பு குறைவாக இருப்பதால் அங்குள்ள இளைஞர்களுக்கு  இராணுவத்தில் சேர்வது வறுமையில் இருந்து மீள்வதற்கு ஒரு தெரிவாக உள்ளது. 


4. ஜேவிபி அன்று நடந்த போரை பயன்படுத்தி தனக்கு ஆதரவான ஆட்களை இராணுவத்திற்குள் சேர்த்து விட்டால் பிற்காலத்தில் உதவும் என்று கணக்குப் போட்டதில் தப்பில்லை. ஆ... வந்து... என்று இழுப்பவர்கள் பிரபாகரன் மேற்கோள் காட்டிய மாவோவின் படைப்புகளை வாசித்து விட்டு வாருங்கள். அரச இயந்திரமான இராணுவத்தை கொள்கை ரீதியாக வென்றெடுப்பது விடுதலைப் போராட்டத்தில் அரைவாசி வெற்றியை அடைந்ததற்கு சமன். தற்போது இராணுவத்திற்கு உள்ளே ஜேவிபி ஆட்கள் இருப்பதால் எதிர்காலத்தில் அரசு ஜேவிபி யை ஒடுக்கி அழிப்பது மிக கடினமாக இருக்கும். 


5. வழமையாக ஜேவிபி புலிகளை எதிர்த்து ஏதாவது பேசி விட்டால் அதை தமிழர்களுக்கு எதிராக பேசியது போன்று திரித்து செய்தி வெளியிடுவது வலதுசாரி தமிழ் ஊடகங்களின் வாடிக்கை. பெரும்பாலான தமிழர்களுக்கு சிங்களம் தெரியாது. அதனால் யாரும் ஆராய மாட்டார்கள் என்பது அவர்களது நம்பிக்கை. சுனாமி கட்டமைப்பு ஒப்பந்தம் அந்நிய நிதி உதவி மூலம் புலிகளை பலப் படுத்தி விடும் என்று ஜேவிபி எதிர்த்தது. ஆனால் அதை தமிழர்களுக்கு எதிரானதாக தமிழ் ஊடகங்கள் சித்தரித்தன. 

1989 ம் ஆண்டு நடந்த ஜேவிபி அழித்தொழிப்பில் புலிகள் அரச படையினருடன் கூட்டுச் சேர்ந்து ஈடுபட்டனர். தமிழ்த் தேசியவாதிகளுக்கு புரியும் மொழியில் சொன்னால் "அன்று புலிகள் ஒட்டுக் குழுவாக செயற்பட்டு இனப் படுகொலையில் பங்கெடுத்தனர்!" 

அதன் விளைவு: பழிக்கு பழி வாங்குவது மாதிரி பிற்காலத்தில் புலிகளை அழிக்க ஜேவிபி அரச படையினருடன் ஒத்துழைத்தது. இதை சரியென்று சொல்ல வரவில்லை. மேலே வீசுவது தான் கீழே வரும். நீங்கள் மற்றவர்களுக்கு என்ன செய்கிறீர்களோ, அதே தான் உங்களுக்கு திருப்பிக் கிடைக்கும்.