Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Tuesday, January 31, 2017

முதலாளித்துவ கொள்ளையருக்கு ஆதரவான இலங்கை அரச பாடநூல்


"நலன்புரி முதலாளித்துவம்"! - முதலாளித்துவ கொள்ளையருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் யோதிலிங்கம் எழுதிய அரசறிவியல் பாடநூலில் இருந்து:

//இன்றைய முதலாளித்துவம் நலன்புரி முதலாளித்துவமாக மாற்றமடைந்துள்ளது. இந்நிலையில் முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளர்கள் புரட்சி செய்ய முன்வருவார்கள் என்பது சந்தேகமானதாகும்.// (அரசறிவியல், பக்கம் 87)

சிறிலங்கா அரச பாடத் திட்டத்திற்கு அமைய, யோதிலிங்கம் எழுதிய இந்த நூலானது, அந்நாட்டில் தற்போது இருப்பதைப் போன்ற "தாராண்மை வாத (லிபரல்) அரசு" கட்டமைப்பு உலகில் சிறந்தது என்று கூறுகின்றது. அதற்காக முதலாளித்துவம் பற்றி இல்லாத கற்பனைகளை புனைகின்றது. அதில் ஒன்று தான் "நலன்புரி முதலாளித்துவம்" என்ற கட்டுக்கதை.

நலன்புரி அரசு என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அது என்ன, "நலன்புரி முதலாளித்துவம்"? முதலாளித்துவம் எப்போதும் முதலாளிகளுக்கும், பணக்காரர்களுக்கும் மட்டுமே நலன்புரிவதாக இருக்கும். அது இயற்கை. அனைத்து மக்களுக்கும் நலன்புரியும் முதலாளித்துவம் உலகில் இருக்க முடியாது. அப்படியானால் அதற்குப் பெயர் முதலாளித்துவம் அல்ல, சோஷலிசம்.

யோதிலிங்கம் வாழும் இலங்கையில், மக்களின் அத்தியாவசிய தேவைகளான இலவசக் கல்வி, இலவச சுகாதார வசதிகளை போன்றவற்றை அரசு பொறுப்பேற்று செய்கின்றது. ஆனால், அதைச் செய்வது முதலாளித்துவம் அல்ல. இது முக்கியமாக கவனிக்கப் பட வேண்டும்.

உதாரணத்திற்கு, இலவச சேவை வழங்கும் அரச மருத்துவமனைகளுக்கு போட்டியாக, தனியார் மருத்துவமனைகள் ஊருக்கு ஊர் முளைத்துள்ளன. அங்கு நின்றால் காசு, நடந்தால் காசு, லிப்டில் ஏறினால் காசு என்று, நோயாளிகளிடம் பணத்தைக் கறந்து, அவர்களை மனநோயாளிகளாக மாற்றி விடுகின்றன. இதுவா "நலன்புரி முதலாளித்துவம்"?

ஓய்வூதியம் பெற்ற பின்னர், பிரான்ஸில் இருந்து சென்று இலங்கையில் சிலகாலம் இருந்து விட்டு வந்த நண்பர் சொன்னார். "இலங்கையில் தனியார் மருத்துவமனைகளுக்கு செலவிடும் தொகை, பிரான்ஸ் மருத்துவ செலவுகளை விட அதிகம்!" அந்த நண்பர் முன்பு மருத்துவராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத் தக்கது. இதற்குப் பேர் நலன்புரி முதலாளித்துவம் அல்ல, கொள்ளைக்கார முதலாளித்துவம்!

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் "நலன்புரி முதலாளித்துவம்" இருக்கிறது தானே என்று கேட்கலாம். ஐயா, உலகில் எந்த நாட்டில் இருந்தாலும் முதலாளிகளின் குணம் மாறுவதில்லை. நியூ யோர்க்கில் இருக்கும் நாயும் "வவ்....வவ்..." என்று தான் குரைக்கும்! எல்லா முதலாளிகளும் தொழிலாளர்களையும், வாடிக்கையாளர்களையும் ஏமாற்றி, சுரண்டித் இலாபத்தை கூட்டிக் கொள்வது வழமை.

"நலன்புரி முதலாளித்துவம்" நிலவும் நாடுகளில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றுவோருக்கு இடையிலேயே ஏற்றத்தாழ்வான ஊதியம் வழங்கப் படுகின்றது. அது சிலநேரம் பத்துப், பன்னிரண்டு மடங்கு அதிகம்! உதாரணத்திற்கு ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் அடிமட்ட ஊழியரின் சம்பளம் ஆயிரம் டொலர் என்றால், அதே நிறுவனத்தில் நிர்வாகியின் சம்பளம் பன்னிரண்டாயிரம் டொலர்!

நான் நெதர்லாந்திற்கு வந்து இருபது வருடங்களாகின்றன. இத்தனை வருட கால அனுபவத்தில், ஒரு தடவையாவது "நலன்புரி முதலாளித்துவத்தை" காணவில்லை. மாறாக கொள்ளைக்கார முதலாளித்துவம் மட்டுமே கண்டிருக்கிறேன். இது எனது அனுபவம் மட்டுமல்ல. இங்குள்ள அனைத்து உழைப்பாளிகளும் ஒத்துக் கொள்ளும் உண்மை.

வழமையாக எல்லா நிறுவனங்களிலும் மூன்று பேர் செய்யும் வேலையை, ஒரு ஆளைக் கொண்டு செய்விப்பார்கள். ரெஸ்டோரன்ட் ஒன்றில் கோப்பை கழுவும் தொழிலாளியாக இருந்தாலும், வங்கியில் கணக்குப் பார்க்கும் ஊழியராக இருந்தாலும், Burn out என சொல்லப் படும் மித மிஞ்சிய வேலைப் பளுவால் பாதிக்கப் படுகின்றனர்.

ஐரோப்பிய தொழிலகங்களில் அடிக்கடி சுகயீன விடுப்பு எடுப்போர் அதிகம். தாங்கு சக்தியை விட அதிகமாக வேலை செய்வதால், பலருக்கு மன உளைச்சல் வந்து நோயாளிகளாக மாறி விட்டனர். ஐரோப்பாவில் வேலை செய்யும் தமிழ் தொழிலாளர்கள் பலர், நாற்பது வயது தாண்டுவதற்குள் மாரடைப்பால் இறந்துள்ளனர். காரணம், சக்திக்கு மீறிய வேலைப்பளு.

எமது கண் முன்னாலேயே எமது உழைப்பு சுரண்டப் படுகின்றது. இலவசமாக உறிஞ்சப் படும் எமது உழைப்பு, முதலாளிகளின் இலாபமாக மாறுகின்றது. நிர்வாகிகளின் போனசாக மாறுகின்றது. இவர் என்னவென்றால் அது தான் "நலன்புரி முதலாளித்துவம்" என்று வக்காலத்து வாங்குகிறார்.

மேற்கு ஐரோப்பாவில் இருப்பது நலன்புரி அரசு, அது முதலாளித்துவம் அல்ல. அரசு வேறு, முதலாளித்துவம் வேறு. இந்த வித்தியாசம் அரசறிவியல் எழுதிய யோதிலிங்ககத்திற்கு தெரியாது என்று நான் நம்பவில்லை. இங்குள்ள முதலாளிகள் மக்களின் நலனுக்காக ஒரு சதம் கூட கொடுப்பதில்லை. அவர்கள் இலாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட சுயநலவாதிகள்.

இந்த முதலாளிகள் மக்களின் நலனுக்காக தானம் தர்மம் எதுவும் செய்யத் தேவையில்லை. குறைந்த பட்சம் அனைவருக்கும் வேலை வாய்ப்புகளை உறுதிப் படுத்தினாலே போதும். அந்த விடயத்தில் மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார்கள். கடந்த தசாப்த காலத்தில் மட்டும் இலட்சக் கணக்கானோர் பணிநீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.

வேலையிழந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் பல வறுமையில் வாடுகின்றன. அதற்குக் காரணம், கணணி மயமாக்கல், ரோபோ மயமாக்கல் போன்ற தொழில்நுட்ப வளர்ச்சி. நூறு தொழிலாளர்கள் செய்த வேலையை ஒரு ரோபோ செய்யும் காலம் வந்து விட்டது. இதனால் நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து விட்டு, பெருந்தொகை பணத்தை மிச்சம் பிடிக்கின்றன. அதனால் தான் வேலையில்லாப் பிரச்சினை அதிகரிக்கின்றது.

அதே நேரத்தில் நிர்வாகிகளுக்கு கொடுக்கும் இலட்சக் கணக்கான போனஸ் பணம், பங்குதாரர்களுக்கு கிடைக்கும் இலாபம் போன்றவற்றில் எந்தக் குறையுமில்லை. வேலையிழந்த தொழிலாளர்கள் தெருவில் பிச்சை எடுத்துப் பிழைத்துக் கொள்ளட்டும். அதனால், முதலாளிகளுக்கு என்ன கவலை?

இது தான் "நலன்புரி முதலாளித்துவத்தின்" மகத்துவம்! யோதிலிங்கத்தால் எப்படி இவ்வாறு மனச்சாட்சிக்கு விரோதமாக எழுத முடிகின்றது? கொள்ளைக்கார முதலாளித்திற்கு "நலன்புரி" என்று மனிதாபிமான முகமூடி அணிவித்து மாணவர்களை ஏமாற்றுவது நியாயமா? முதலாளிகளின் கொள்ளையை மறைப்பதற்காக "நலன்புரி முதலாளித்துவம்" என்று வெள்ளை அடிப்பது ஒரு பிழைப்பா?

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
இலங்கை அரசறிவியல் பாட நூலில் உள்ள கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம்
ஆசிரியர் யோதிலிங்கத்தின் இடதுசாரிகள் மீதான அவதூறுகளுக்குப் பதில்

Monday, January 30, 2017

இலங்கை அரசறிவியல் பாட நூலில் உள்ள கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம்


சி.அ.யோதிலிங்கம் எழுதிய "அரசறிவியல் - ஓர் அறிமுகம்" நூல், இலங்கையில் க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவர்கள் படிப்பதற்காக எழுதப் பட்டுள்ளது. "வினாத்தாளை மையமாக வைத்து" எழுதப் பட்டிருப்பதாக அந்த நூலில் குறிப்பிடப் பட்டுள்ளது. அவ்வாறான ஒரு பாட நூலில் சோஷலிச  நாடுகள் பற்றிய உண்மைக்கு புறம்பான, பிழையான கருத்துக்கள் எழுதப் பட்டுள்ளன. வழக்கமாக இதைப் படிக்கும் மாணவர்கள், பரீட்சையிலும் அதைத் தான் ஒப்புவிக்கப் போகிறார்கள். அதற்கு மாறாக சரியான தகவல்களை எழுதினால் அவர்களுக்கு புள்ளிகள் கிடைக்காது. தமிழ் மாணவர்களை கம்யூனிச எதிர்ப்புவாதிகளாக மூளைச் சலைவை செய்யவும் இது போன்ற பாட நூல்கள் உதவுகின்றன. இப்படியான பாடநூல்கள் சிறிலங்கா அரசின் முதலாளித்துவ சார்புக் கொள்கைக்கு ஏற்றவாறு எழுதப் படுகின்றன.

அரசறிவியல் நூலில், அரசு பற்றிய சோசலிசக் கொள்கையின் குறைபாடுகள் என்ற உபதலைப்பின் கீழ் எழுதப் பட்டுள்ள அபத்தமான கட்டுக்கதைகளையும், அதற்கான எனது விளக்கங்களையும் கீழே தருகின்றேன். 



1.//காலச் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே கார்ல் மார்க்ஸ் இக்கொள்கையை முன்வைத்தார். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பொருந்துகின்ற கொள்கை எல்லாக் காலத்துக்கும் பொருந்தும் என கூற முடியாது.// - யோதிலிங்கம்

அது என்ன "காலச் சூழ்நிலை"? கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த 19 ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் முதலாளித்துவம் அதன் உயர்ந்த வளர்ச்சிக் கட்டத்தை கண்டிருந்தது. முதலாளித்துவ பொருளாதாரம் மீதான விமர்சனமாக மூலதனம் என்ற நூலை எழுதினார். முதலாளித்துவம் எவ்வாறு உழைப்பாளிகளின் உழைப்பை உபரி மதிப்பாக சுரண்டுகின்றது? அதை எவ்வாறு மூலதனமாக மாற்றிக் கொள்கிறது? செல்வம் எவ்வாறு ஒரு குறிப்பிட்ட சிலரின் கைகளில் மட்டும் குவிகின்றது? இதை விளக்குவது தான் "கார்ல் மார்க்ஸின் கொள்கை". இன்று உலகில் எங்குமே முதலாளித்துவம் இல்லையா? உழைப்பாளிகள் சுரண்டப் படுவதில்லையா? உபரிமதிப்பு மூலதனமாக மாறுவதில்லையா?

அது எப்படி இன்றைய உலகில் ஏழைகள் மென் மேலும் ஏழைகளாகவும்,பணக்காரர்கள் மென் மேலும் பணக்காரர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்? உலக சனத்தொகையில் அரைவாசிப் பேரிடம் உள்ள செல்வம் அளவிற்கு, எட்டுப் பணக்கார்களிடம் செல்வம் குவிந்துள்ளது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் முதலிட்டுள்ள பன்னாட்டு நிறுவனங்கள், உழைப்பாளிகளுக்கு சொற்பத் தொகையை கொடுத்து சுரண்டும் பணம் (மூலதனம்) மேலை நாடுகளுக்கு கடத்தப் படுகின்றது. அந்த இலாபப் பணத்திற்கு எந்த நாட்டிலும் வரி கட்டுவதில்லை. அது வரியில்லா சொர்க்கத் தீவுகளில் இரகசிய வங்கிக் கணக்கில் குவிக்கப் படுகின்றது. இதெல்லாம் கார்ல் மார்க்ஸின் கொள்கை இந்தக் காலத்திலும் சரியாகப் பொருந்துகின்றது என்பதை தானே நிரூபிக்கின்றது?

2.//இக் கொள்கை பொருளாதாரக் காரணிகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. வரலாற்றில் செல்வாக்கு செலுத்தும் மனிதர்கள், சமூகம், மதம், புவியியல் போன்ற காரணிகளை கவனத்தில் எடுக்கவில்லை.// - யோதிலிங்கம்

ஒன்றைப் பற்றி எழுதுவதற்கு முன்னர் அதைப் பற்றி ஓரளவுக்காவது அறிந்திருக்க வேண்டும். மார்க்சியத்தின் அரிச்சுவடி கூட தெரியாமல் நுனிப்புல் மேயக் கூடாது. கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் பொருளாதாரத்தை அலசுகின்றது. ஆனால், அவர் அதை மட்டும் எழுதவில்லையே? வேறு நூல்களும் இருக்கின்றன தானே? மார்க்ஸின் நண்பர் எங்கெல்ஸ் எழுதிய "குடும்பம், அரசு, தனிச் சொத்து ஆகியவற்றின் தோற்றம்" நூலில் மனித இனத்தின் வரலாறு, மானிடவியல், சமூகவியல் என்பன ஆராயப் படுகின்றன. பிரிட்டனில் உழைக்கும் வர்க்க மக்களின் அவலங்கள் பற்றிய நூல், அன்றைய காலத்து சமூகப் பிரச்சனைகளை விரிவாக விளக்குகின்றது. வரலாற்றில் கிறிஸ்தவ மதத்தின் பாத்திரம் பற்றி மார்க்ஸ் ஒரு நூல் எழுதி இருக்கிறார். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். //வரலாற்றில் செல்வாக்கு செலுத்தும் மனிதர்கள்// வரலாறுகள் யாவும் மன்னர்களை புகழ்ந்து எழுதி இருப்பதாகவும், மக்களின் வரலாறு எழுதப் படுவதில்லை என்பதையும் மார்க்சியம் தான் எடுத்துக் காட்டியது.

3.//இன்றைய முதலாளித்துவம் நலன்புரி முதலாளித்துவமாக மாற்றமடைந்துள்ளது. இந்நிலையில் முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளர்கள் புரட்சி செய்ய முன்வருவார்கள் என்பது சந்தேகமானதாகும்.// - யோதிலிங்கம்

மேற்கு ஐரோப்பிய நாடொன்றில் வாழும் ஒருவர் இப்படி எழுதி இருந்தால், அவரது குறுகிய சிந்தனைக்கு ஒரு நியாயம் இருக்கலாம். ஆனால், இன்றைக்கும் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவர் இதை எழுதியிருப்பதை நம்ப முடியவில்லை. இலங்கையிலும் முதலாளித்துவம் இருக்கிறது. ஆனால் அங்குள்ள "நலன்புரி முதலாளித்துவம்" சிறப்பாக செயற்படுமானால், யாரும் வேலை தேடி வெளிநாடுகளுக்கு ஓட மாட்டார்கள். யாரும் வறுமையில் வாட மாட்டார்கள். வேலையில்லா விட்டால் ஒரு குடும்பமே பட்டினி கிடக்க வேண்டிய நிலைமை.

அது வந்து... மேற்கத்திய "நலன்புரி முதலாளித்துவம்" பற்றி சொன்னேன் என்று சப்பைக் கட்டு கட்டலாம். நீண்ட நெடுங்காலமாக நடந்த தொழிலாளர்களின் உரிமைப் போராட்டம் காரணமாகத் தான், மேற்கு ஐரோப்பாவில் நலன்புரி அரசுகள் உருவாகின. அதுவும் இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் தான். கிழக்கு ஐரோப்பாவில் சோஷலிச நாடுகள் உருவான பின்னர் தான். அதாவது, தாங்களும் அதே சோஷலிசக் கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதை சொல்லிக் கொள்ளாமல், நலன்புரி அரசு என்றார்கள். இல்லாவிட்டால் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் புரட்சிகள் நடந்திருக்கும் என்று அஞ்சினார்கள்.

மேற்கு ஐரோப்பிய நாடுகள் போன்ற மூலதன குவிப்புகளால் நன்மை அடைந்த முதலாளித்துவ நாடுகளில் தான், நலன்புரி அரசு இருக்கின்றது. பெரும்பாலான லத்தீன் அமெரிக்க, ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் இன்றைக்கும் முதலாளித்துவம் இருக்கிறது. ஆனால், அது எதுவுமே "நலன்புரி முதலாளித்துவம்" அல்ல. இன்றைக்கும் மார்க்ஸ் வாழ்ந்த காலத்து ஐரோப்பா மாதிரி, கஞ்சிக்கும் வழியில்லாத ஏழைகளும், மாட மாளிகைகளில் வாழும் பணக்காரர்களும் என சமூகம் இரண்டாகப் பிரிந்திருக்கிறது. அந்த நாடுகளில் ஏழைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என்பதால், அவை இன்றைக்கும் வறிய நாடுகள் என்றே அழைக்கப் படுகின்றன.

4.// மக்கள் இருக்கின்ற வரை மக்களுக்கான பொதுத் தேவைகளும் இருக்கும். இப்பொதுத் தேவைகளை நிறைவேற்ற அரசு என்ற நிறுவனமும் எப்போதும் அவசியமாக இருக்கும். இந்நிலையில் அரசற்ற கம்யூனிச சமூகம் உருவாகும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.// - யோதிலிங்கம்

ஸ்பெயின் நாட்டில் மரினலேடா (Marinaleda)என்ற கிராமம் இருக்கிறது. அங்கே பல வருட காலமாக கம்யூனிச சமூகம் சிறப்பாக இயங்கி வருகின்றது. அரசு கட்டமைப்பின் எந்த அம்சமும் அங்கே இல்லை. அதாவது, நீதிமன்றம், பொலிஸ், சிறைச்சாலை எதுவும் இல்லை! அந்தளவுக்கு அங்கே எந்தக் குற்றச் செயலும் நடப்பதில்லை! வேலை செய்யும் எல்லோருக்கும் சமமான ஊதியம் வழங்கப் படுகின்றது. 

அருகில் உள்ள ஸ்பானிஷ் கிராமங்களை விட அங்கு கொடுக்கும் சம்பளம் அதிகம்! அதனால், அயல் கிராம கூலியாட்கள் அங்கு சென்று வேலை செய்கிறார்கள். குழந்தைகள் பராமரிப்பு, ஓய்வுநேர பொழுதுபோக்குகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் அனைவருக்கும் கிடைக்கும். அத்தோடு சொந்தமாக வீடு கட்டுவதற்கு உதவியும் கிடைக்கும். இப்படியான கம்யூனிச சமூகங்கள், இன்றைக்கும் ரஷ்யாவிலும், சீனாவிலும் சில இடங்களில் இருக்கின்றன. ஏன் அமெரிக்காவில் கூட இருக்கிறது!

அரசு என்பது ஒரு அடக்குமுறை இயந்திரம். அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இலங்கையில் வாழும் தமிழர்களைக் கேட்டால் அரச அடக்குமுறைகள் பற்றிக் கதை கதையாக சொல்வார்கள். உலகில் எல்லா நாடுகளிலும் அரசு இருந்தால் அங்கு அடக்குமுறையும் இருக்கும். ஒரு நாட்டில் அதிகமாகவும், இன்னொரு நாட்டில் குறைவாகவும் இருக்கலாம். 

அரசு எப்போதும் மனிதர்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும். உதாரணத்திற்கு, பாஸ்போர்ட் இல்லாமல் யாரும் இன்னொரு நாட்டிற்கு செல்ல முடியாது. அதாவது தேசம் என்ற சிறைச்சாலைக்குள் நாங்கள் எல்லோரும் கைதிகள் தான். இது உங்களுக்கு நகைப்புக்குரியதாக இருக்குமானால், நீங்கள் அரச அடக்குமுறைகளை ஒரு சாதாரணமான விடயமாக ஏற்றுக் கொள்ள பழகி விட்டீர்கள் என்று அர்த்தம்.

5.//மார்க்ஸ் வர்க்கங்களை கவனத்தில் எடுத்தாரே தவிர அண்மைக்காலத்தில் வளர்ச்சி அடைந்துள்ள தேசியவாதம் பற்றி கவனத்தில் எடுக்கவில்லை.// -யோதிலிங்கம்

இது சுத்த அபத்தமான கூற்று. உண்மைக்கு புறம்பான கட்டுக்கதை. மார்க்ஸ் பிறப்பதற்கு முன்பிருந்தே ஐரோப்பாவில் தேசியவாத கொள்கைகள் பின்பற்றப் பட்டு வந்துள்ளன. மிகச் சரியாக சொல்வதென்றால், பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர், நெப்போலியனின் நாடு பிடிக்கும் போர்கள் நடந்தன. முதலாளித்துவம், தாராண்மைவாதம் போன்ற கொள்கைகள் அப்போது தான் ஐரோப்பா முழுவதும் பரப்பப் பட்டன. நெப்போலியன் போரில் தோற்கடிக்கப் பட்ட பின்னர், அநேகமான ஐரோப்பிய நாடுகள் குடியரசுகளாக மாறின. அப்படித் தான் தேசிய அரசுகள் தோன்றின. ஐரோப்பாவில் தேசிய அரசுகள் உருவாகி பல தசாப்தங்களுக்குப் பின்னர் தான், கார்ல் மார்க்ஸ் தனது ஆய்வுநூல்களை எழுதினார்.

கார்ல் மார்க்ஸ் ஐரிஷ் தேசியவாதத்தை ஆதரித்தார். அதற்குக் காரணம், பிரிட்டனின் காலனிகளில் ஒன்று விடுதலை அடைவது ஒரு சாதகமான விடயம் என்பது தான். அதே மாதிரி, ரஷ்யாவில் நடந்த போல்ஷெவிக் புரட்சிக்குப் பின்னர், உலகின் தேசிய விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவு வழங்குவதாக லெனின் அறிவித்தார். அப்போது பிரித்தானியா அதைக் கடுமையாக எதிர்த்து வந்தது. அதற்குக் காரணம், தேசிய விடுதலைக்காக போராடும் காலனிய நாடுகள் விடுதலை அடைந்தால், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உடைந்து நொறுங்கி விடும். கடைசியில் அது நடந்து விட்டது. 

பெரும்பாலான ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் தேசிய விடுதலைக்காக போராடியவர்கள் மார்க்சிஸ்டுகளாக இருந்தனர். இது தற்செயல் அல்ல. சில நாடுகள் சுதந்திரம் பெற்றதும் அங்கு கம்யூனிஸ்டுகள் ஆட்சி அமைத்தனர். உதாரணம்: வியட்நாம். வேறு சில நாடுகளில் தேசிய விடுதலைக்கான கம்யூனிஸ்டுகளின் போராட்டம் காலனியாதிக்கவாதிகளால் நசுக்கப் பட்டன. உதாரணம்: மலேசியா.

6.//உடைமையாளன் வர்க்கம், உழைக்கும் வர்க்கம் என்பனவற்றிற்கு புறம்பாக மத்தியதர வர்க்கம் எனும் ஒரு வர்க்கம் இன்று எழுச்சியடைந்துள்ளது. மார்க்ஸ் இது பற்றி எதுவும் கூறவில்லை.// - யோதிலிங்கம்

இது முழுக்க முழுக்க கற்பனையான வாதம். இவருக்கு மார்க்சியத்தில் அரிச்சுவடி கூடத் தெரியாது என்பதற்கு இந்த கூற்று ஒன்றே போதும். முதலாளிய வர்க்கம் உற்பத்தி சாதனங்கள் அனைத்தையும் தனது உடைமையாக வைத்திருக்கின்றது. ஏனையோர் முதலாளிகளுக்கு உழைப்பை விற்றுப் பிழைக்கும் உழைக்கும் வர்க்கத்தினர் என்பது மார்க்சிய அடிப்படைக் கோட்பாடு. 

இந்த நூலை எழுதிய யோதிலிங்கம் ஒரு முதலாளி அல்ல. அவர் ஓர் ஆசிரியராக வேலை செய்வதன் மூலம், தனது உழைப்பை தொழிற்சந்தையில் விற்று, அதற்கு ஈடாக சம்பளம் பெற்றுக் கொள்கிறார். ஆகவே அவரும் உழைக்கும் வர்க்கத்தில் ஒருவர் தான். ஆனால், அவரது பல்கலைக்கழக பட்டங்கள் தந்த தகைமை காரணமாக, சமூகத்தில் அந்தஸ்து கூடிய உத்தியோகம் ஒன்றை செய்கிறார்.

இப்படியானவர்களை திருப்திப் படுத்துவதற்காக, முதலாளிய வர்க்கம் அதிக சம்பளம் கொடுக்கிறது. காரணம், இவர்கள் "அறிவுஜீவிகள்" அல்லவா? இந்தப் பொருளாதார கட்டமைப்பு எப்படி இயங்குகின்றது என்ற இரகசியங்களை அறிந்து வைத்திருப்பார்கள். அந்த அறிவு காரணமாக, முதலாளிய வர்க்கத்தின் சுரண்டலை கேள்வி கேட்க வந்து விடுவார்கள். அதை தடுப்பது எப்படி? சம்பளத்தை கூட்டிக் கொடுத்து வாழ்க்கை வசதிகளை அனுபவிக்கும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். 

இந்தப் பிரிவினர் தான் மத்தியதர வர்க்கம். மார்க்ஸ் அவர்களை "குட்டி முதலாளிய வர்க்கம்" என்றார். அதாவது அவர்களது உயர்ந்த சமூக அந்தஸ்து, வாழ்க்கை வசதிகள் காரணமாக, முதலாளித்துவத்திற்கு விசுவாசமாக நடந்து கொள்வார்கள். இவ்வாறு இடையில் ஊசலாடும் குட்டி முதலாளிய வர்க்கத்தினரை (மத்திய தர வர்க்கம்) உழைக்கும் வர்க்கத்தின் பக்கம் வென்றெடுக்க வேண்டும். இதைத் தான் மார்க்ஸ் கூறினார்.

7.//நடைமுறையில் காணப்பட்ட சோஷலிச அரசுக்களிலும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் பல மறுக்கப் பட்டிருந்தன.// - யோதிலிங்கம்

இது மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளால் செய்யப்படும் ஒரு பக்கச் சார்பான பிரச்சாரம். "மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள்" என்று இவர் எதைக் கருதுகிறார்? மிகவும் வறுமையான ஆப்பிரிக்க நாடொன்றில், பட்டினி கிடக்கும் ஒருவனிடம் சென்று, "உனக்கு அடிப்படை ஜனநாயக உரிமை இருப்பதற்காக சந்தோஷப் படு" என்று சொன்னால், அவன் கொலைவெறியுடன் அடிக்க வருவான். ஒரு மனிதனுக்கு முதலில் உயிர் வாழ்வதற்கான உரிமை அல்லவா முக்கியம்? அதற்காக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். நிரந்தரமான வருமானம் வேண்டும். உணவு, உடை, உறையுள் மிக அவசியம். கல்வி, மருத்துவம், அத்தியாவசியம். இவை எல்லாம் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் இல்லையா?

பொதுவாக ஒரு நாட்டில் வாழும் மக்களுக்கு இருக்க வேண்டிய அனைத்து ஜனநாயக உரிமைகளும் சோஷலிச நாடுகளிலும் இருந்தன. ஆனால், இவர்கள் பல கட்சி அரசியல் உரிமையை பற்றி மட்டுமே, அதை மட்டுமே பேசுகின்றனர். உலகில் பொதுவான ஜனநாயக அமைப்பு எதுவும் இல்லை. பலகட்சி ஜனநாயகம் பற்றிப் பேசும் மேற்கத்திய நாடுகளில் கூட, 19 ம் நூற்றாண்டு வரையில் அதற்கான சுதந்திரம் மறுக்கப் பட்டு வந்தது. அப்போது எந்த நாட்டிலும் கருத்துச் சுதந்திரம் இருக்கவில்லை. பொதுத் தேர்தல்கள் நடக்கவில்லை. சர்வசன வாக்குரிமை இருக்கவில்லை. இவையெல்லாம், மேற்கத்திய நாடுகளில் உருவான கம்யூனிச, சோஷலிச கட்சிகளால், தொழிலாளர் வர்க்க நலன் சார்ந்து போராடிப் பெற்ற சலுகைகள் ஆகும்.

8.//சோஷலிச அரசில் அதிகாரம் ஓரிடத்தில் குவிகின்ற நிலைமை ஏற்படுகின்றது.// - யோதிலிங்கம்

இதுவும் முதலாளித்துவவாதிகளால் முன்னெடுக்கப் படும் எதிர்ப்புப் பிரச்சாரம் தான். "அனைத்து அதிகாரமும் மக்களுக்கே" என்பது கம்யூனிஸ்டுகளின் பிரதானமான கோஷம். ரஷ்ய மொழியில் "சோவியத்" என்றால், தொழிலாளர் மன்றம் என்று அர்த்தம். உண்மையில், தற்போது பல நாடுகளில் நடைமுறையில் பாராளுமன்ற அமைப்பில் தான் அதிகாரம் ஓரிடத்தில் குவிக்கப் படுகின்றது. அதற்குப் பதிலாக சோஷலிச நாடுகளில் அதிகாரம் பரவலாக்கப் படுகின்றது.

கிராமம், நகரம் பாகுபாடின்றி எல்லா இடங்களிலும் தொழிலாளர் மன்றங்கள் அமைக்கப் படும். அங்கு மக்கள் அனைவரும் ஒன்று கூடி விவாதித்து, வாக்கெடுப்புக்கு விடப் பட்டு, பெரும்பான்மை முடிவு ஏற்றுக் கொள்ள படும். இதை நேரடி ஜனநாயகம் என்று சொல்வார்கள். அதாவது மக்கள் நேரடியாகவே ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் ஜனநாயக அமைப்பு. தொழிற்சாலைகள், கல்லூரிகள், பாடசாலைகளிலும் இந்த ஜனநாயக அமைப்பு இயங்கும். ஒரு தொழிலகத்தின் நிர்வாகி நினைத்த நேரத்தில் ஒரு தொழிலாளியை வேலையை விட்டு தூக்க முடியாது. அதற்கு பிற தொழிலாளர்களும், தொழிற்சங்கமும் சம்மதம் தெரிவிக்க வேண்டும்.

9.//அரசின் பணிகள் அதிகரிப்பதால் ஊழல் போன்ற தீமைகள் ஏற்பட வாய்ப்புகளுண்டு.// - யோதிலிங்கம்

ஒரு நாட்டில் சோஷலிசப் புரட்சி நடந்து விட்டால், ஒரே இரவுக்குள் எல்லாம் மாறி விடுவதில்லை. முந்திய முதலாளித்துவ கட்டமைப்பில் இருந்த மாதிரியே அனைத்தும் இயங்கிக் கொண்டிருக்கும். அதாவது, சிறிது காலத்திற்கு பெரும்பாலான நிறுவனங்களை ஒரே மாதிரித் தான் நிர்வகிக்க வேண்டி இருக்கும். அது தவிர்க்க முடியாதது. முந்திய முதலாளித்துவ கட்டமைப்பில் இருந்த அதே அதிகாரிகள், நிர்வாகிகள் தமது கடமையை செய்து கொண்டிருப்பார்கள். ஆகவே, முதலாளித்துவ ஆட்சிக் காலத்தில் இருந்த ஊழல், சோஷலிச ஆட்சிக் காலத்திலும் தொடர வாய்ப்புண்டு. இதைத் தடுப்பதற்கு ஒரு வர்க்கப் போராட்டம் அவசியம்.

ஸ்டாலின் காலத்தில் "கொடூரமான சர்வாதிகார ஆட்சி" நடந்ததாக இன்றைக்கும் பரப்புரை செய்யப் படுகின்றது. மாவோ காலத்து கலாச்சாரப் புரட்சி பற்றியும் எதிர்மறையான கதைகள் பரப்பப் படுகின்றன. உண்மையில் அப்போது நடந்தது வர்க்கப் போராட்டம். அந்தக் காலகட்டத்தில் ஊழல் முற்றாக ஒழிக்கப் பட்டிருந்தது! 

ஸ்டாலின் காலத்தில், ஒரு அதிகாரி ஊழல் செய்தால், இலஞ்சம் வாங்கினால், மக்கள் விழிப்புடன் இருந்து இரகசியப் பொலிசிற்கு அறிவித்தார்கள். அதற்குப் பிறகு அவர் சிறையில் தான் காலம் கழிக்க வேண்டியிருக்கும். சிலநேரம் மரணதண்டனையும் விதித்தார்கள். அதனால், ஊழல் செய்வதற்கு எல்லோரும் பயப்பட்டார்கள். அவர்களை காட்டிக் கொடுப்பது யார் வேண்டுமானாலும் இருக்கலாம். கூட வேலை செய்யும் பணியாளாக இருக்கலாம் அல்லது குடும்ப உறுப்பினராகக் கூட இருக்கலாம்.

சீனாவில், கலாச்சாரப் புரட்சி வித்தியாசமாக நடந்தது. அங்கு மக்கள் ஒன்றுசேர்ந்து, ஊழல் செய்த அதிகாரியை பிடித்து, சந்தியில் கட்டி வைத்து அவமானப் படுத்தினார்கள். அவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப் பட்டனர். சிறை முகாம்களுக்கு அனுப்பப் பட்டனர். அதனால், கலாச்சாரப் புரட்சி நடந்த பத்து வருட காலத்தில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமிருக்கவில்லை. இதிலே முக்கியமான விடயம் என்னவென்றால், அதிகார கட்டமைப்பில் மேல் தட்டில் இருந்தவர்களும் ஊழல் செய்து பிடிபட்டால் மக்களினால் அவமானப் படுத்தப் பட்டனர். 

பிற்குறிப்பு: படித்த மத்தியதர வர்க்க தமிழர்கள் பலர் கம்யூனிச எதிர்ப்பாளர்களாக அல்லது வலதுசாரிகளாக இருப்பது தற்செயல் அல்ல. பாடசாலையில், பல்கலைக்கழகத்தில் அவர்கள் படிக்கும் காலத்திலேயே,  முதலாளித்துவவாதிகளால் மூளைச்சலவை செய்யப் படுகின்றனர். அதற்கு இந்த நூல் ஒரு சிறந்த உதாரணம்.


இது தொடர்பான முன்னைய பதிவு: 

Sunday, May 08, 2016

அரசியல் பழகு, அபத்தங்களுக்கு பதிலளி: எது புரட்சி? எது ஜனநாயகம்?

"புர‌ட்சி செய்யாதே! பூப் ப‌றித்து பூஜை செய்!" - இது க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ளுக்கு ச‌ம‌ஸ் போதிக்கும் ஜ‌ன‌நாய‌க‌ பாட‌ம். முத‌லில், இந்தியாவில் ந‌ட‌க்கும் தேர்த‌லில் ஒரு "இந்திய‌ சாவேஸ்" தேர்ந்தெடுக்க‌ப் ப‌டும் நிலைமை வ‌ர‌ட்டும். அப்போது தெரியும் இந்தப் போலி ஜ‌ன‌நாய‌க‌ம் என்ன‌ பாடுப‌ட‌ப் போகிற‌தென்று.

தி இந்து பத்திரிகையில், புரட்சிகர அரசியலில் ஈடுபடும் இளைஞர்களுக்கு அறிவுரை கூறும் வகையில், சமஸ் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அரசியல் பழகு: எது நவயுக புரட்சி? என்ற அந்தக் கட்டுரையில், அரசியல் மயப்பட்ட இளைஞர்களுக்கு ஏராளமான புத்திமதிகள் கூறுகின்றார்.

"ஆயுதப்புரட்சி இந்தக் காலத்திற்கு ஏற்றது அல்ல. ஜனநாயக வழிமுறைகளை பயன்படுத்துங்கள். படிக்கும் வயதில் புரட்சியை பற்றி நினைக்காதீர்கள். படித்து உத்தியோகம் பார்த்து சம்பாதிக்கும் வழியைப் பாருங்கள்..." இவ்வாறு அறிவுரை கூறுகின்றார்.

புதிய மொந்தையில் பழைய கள் மாதிரி, இதுவும் காலம் காலமாக "பெரியவர்களினால்" சொல்லப் பட்டு வரும் அறிவுரை தான். நான் பதினான்கு வயது சிறுவனாக இருந்த காலத்தில் தான் ஈழத்திற்கான ஆயுதப்போராட்டம் தொடங்கியது. அப்போதும் நமது பெற்றோர்கள், நம்மூர் பெரியவர்கள் சமஸ் மாதிரி அறிவுரைகள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். "அந்த இளைஞர்களைப் பாருங்கள்... எந்தவித அரசியல் நாட்டமும் இன்றி படிப்பில் கவனம் செலுத்துகிறார்கள்..." என்று சிலரை உதாரண புருஷர்களாக சுட்டிக் காட்டினார்கள்.

அன்று ஈழப்போராட்டம் பக்கம் தலைவைத்தும் படுக்காமல், கவனமாகப் படித்து பட்டம் பெற்று, உத்தியோகம் பார்த்தவர்கள் பலருண்டு. அதே நேரம், படிப்பை பாதியில் விட்டு விட்டு முழுநேர ஈழ அரசியலில் ஈடுபட்ட இளைஞர்களும் உண்டு. தமது உயிர், உடைமைகளை பணயம் வைத்து, அத்தகைய இளைஞர்கள் செய்த தியாகத்தினால் நன்மை அடைந்தவர்கள் சிலருண்டு. அவர்கள் தான், சமஸ் கூறும் "சமர்த்துப் பிள்ளைகள்"! தமது உத்தியோகத்திற்கு பங்கம் வராமல் பார்த்துக் கொண்டு, ஜனநாயக வழியில் கட்சி அரசியல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சமஸ் கூறும் அறிவுரைகள், எவ்வாறு ஈழப் போராட்டத்தில் "பரீட்சித்துப்" பார்க்கப் பட்டன என்பதற்கு இதுபோன்ற ஆயிரம் உதாரணங்களைக் காட்டலாம். தற்போது சமஸ் இந்தக் கட்டுரையை எழுத வேண்டிய காரணம் என்ன? கால் நூற்றாண்டுக்கு முன்னர், உலகம் முழுவதும் சோவியத் யூனியனின் வீழ்ச்சியை கொண்டாடியவர்கள், "கம்யூனிசம் கல்லறைக்குள் போய்விட்டது" என்று புளுகித் திரிந்தார்கள். அந்தக் காலகட்டத்தில் இந்தியாவிலும் கம்யூனிச புரட்சிகர அரசியல் சக்திகள் நலிவடைந்த நிலையில் இருந்தன. ஏற்கனவே இருந்த ஆதரவாளர்களே காணாமல் போய்க் கொண்டிருந்த நிலையில், இனிவரும் புதிய தலைமுறை அதில் நாட்டம் கொள்ளாது என்று நம்பினார்கள்.

ஆனால், காலம் மாறிவிட்டது. உலகமயமாக்கலின் தாக்கமும், தீர்க்கப் படாத மனித அவலங்களும், மீண்டும் ஒரு புரட்சிகர அரசியலின் தேவையை உணர்த்தின. இன்று உலகம் முழுவதும் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் கூட, பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் புரட்சிகர கம்யூனிச அரசியல் பேசுமளவிற்கு காலம் மாறி விட்டது. சமஸ் அதையெல்லாம் கண் முன்னால் கண்டு வந்துள்ளார். ஒருவகையில், சமஸ் எழுதியுள்ள கட்டுரையானது ஒரு நிகழ்கால யதார்த்தத்தை உணர்த்தி நிற்கின்றது.

இந்த உண்மையை சமஸ் தனது கட்டுரையில் பிரதிபலிக்கிறார்: 
//சென்னை வந்ததிலிருந்து இப்படியான இளைஞர்களை அனேகமாக மாதத்துக்கு ஒருவரையாவது சந்திக்கிறேன். பெரும்பாலும் சமூகரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் அழுத்தப்பட்ட, கிராமப்புறப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்கள். இளைஞர்களுடனான கலந்துரையாடல் கூட்டங்களிலும் இப்படியான மாணவர்களைச் சந்திக்க முடிந்தது. ஒருபுறம் அரசியல் உணர்வே இல்லாத உள்ளீடற்ற மாணவர்களை நம் கல்வி நிலையங்கள் உருவாக்குகின்றன என்றால், மறுபுறம் ஆழமான ஆர்வம் கொண்ட இப்படியான மாணவர்களுக்கு ஆக்கபூர்வமான இடமளிக்காமல் கல்வி நிலையங்கள் வெளியே தள்ளுகின்றன. இதற்கெனவே காத்திருக்கும் கசப்பு சக்திகள் அவர்களை வாரிச் சுருட்டிக்கொள்கின்றன.//

குறைந்தது பத்து வருடங்களுக்கு முன்னர் கூட, தமிழ் இளைஞர்கள் அரசியல் நீக்கப் பட்ட சமூகமாக இருந்தனர். மத்தியதர வர்க்கத்தினர் மேற்கத்திய கலாச்சாரத்தை போட்டி போட்டுக் கொண்டு பின்பற்றினார்கள். "எனக்கு அரசியல் தெரியாது... அதில் நாட்டமும் இல்லை." என்று சொல்வதே நாகரிகம் என்று கருதப் பட்டது. அரசியல் நீக்கம் செய்யப் பட்ட இளைஞர் சமுதாயத்தில், கம்யூனிசம், புரட்சி பற்றிப் பேசும் இளைஞர்களும் இருப்பார்கள் என்பதை சமஸ் போன்றவர்கள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. அவர்கள் பயந்து கொண்டிருந்த கெட்ட கனவு பலித்து விட்டது. அரசியல்மயப் பட்ட இளைஞர்களுக்கு, ஜனநாயக விழுமியங்களை கற்றுக் கொடுப்பதால், எதிர்காலத்தில் புரட்சியை தவிர்க்கலாம் என்று கணக்குப் போடுகின்றனர்.

சமஸ்: //நம் சமூகத்தில் கடந்த ஒரு நூற்றாண்டில் அதிகம் பேசப்பட்டு, உலுத்துப்போன வார்த்தை புரட்சியாகத்தான் இருக்கும். ஒரு ஜனநாயக யுகத்தில், ஆயுதவழிக் கிளர்ச்சியை அடிமனதில் வைத்துக்கொண்டு, புரட்சி எனும் வார்த்தையைப் பயன் படுத்துபவர்களை எப்படிக் குறிப்பது?//

முதலில் புரட்சி என்பதை "ஆயுதக் கிளர்ச்சி" என்று புரிந்து கொள்வதே அபத்தமானது. "முதலாளிய வர்க்கம் அமைதியான வழியில் அதிகாரத்தை மாற்றித் தந்தால் அது குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். ஆனால், அப்படி நடக்குமா என்பதே கேள்விக்குறி." இது 150 வருடங்களுக்கு முன்னர், கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் எழுதிய வாசகம்.

சமஸ் கூறுவது போல, "ஜனநாயக யுகத்தில் ஒரு ஆயுதக் கிளர்ச்சியை" தவிர்க்க முடியாதா? இந்திய முதலாளித்துவ அரசியல்வாதிகளும், இந்திய முதலாளிகளும், அமைதியான முறையில் நாட்டின் அரசியல் - பொருளாதார அதிகாரம் முழுவதையும், கம்யூனிசப் புரட்சிகர இயக்கங்களிடம் ஒப்படைத்து விட்டு, ஏதாவதொரு கரீபியன் தீவுக்கு சென்று ஓய்வெடுக்கட்டுமே? யார் வேண்டாம் என்றார்கள். அப்படி நடக்குமா என்பது தான் கேள்வி. அந்த இடத்தில் தான் புரட்சியின் தேவை எழுகின்றது. 

அது சரி, கடந்த நூற்றாண்டில் உலகில் எந்த நாட்டிலும் அமைதி வழிப் புரட்சி நடக்கவில்லையா? 1974 ம் ஆண்டு, போர்த்துக்கல் நாட்டில் நடந்த சோஷலிசப் புரட்சியில் ஒரு துளி இரத்தம் சிந்தப் படவில்லை. 1918 ம் ஆண்டு, ஹங்கேரி சோவியத் அரசு ஜனநாயக வழியில் தான் ஆட்சியைக் கைப்பற்றியது. அந்தப் புரட்சி ஆயுதக் கிளர்ச்சியாக நடக்கவில்லை.

சிலி நாட்டில் ஜனநாயக தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னர் தான் புரட்சியைக் கொண்டு வந்தார்கள். இறுதியில் சிலியின் அமைதியான ஜனநாயகப் புரட்சி நசுக்கப் பட்டது ஏன்? சமஸ் பெருமையுடன் குறிப்பிடும் அதே ஜனநாயக தேர்தலில், மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு, சதிப்புரட்சியாளர்களினால் ஆயுதமுனையில் நசுக்கப் பட்டது. 

சிலியில் நடந்த சதிப்புரட்சிக்கும், அதைத் தொடர்ந்த இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கும் அமெரிக்கா உதவியது எல்லோருக்கும் தெரியும். சமஸ் பயமுறுத்தும் புரட்சிகர கம்யூனிச/சோஷலிச சக்திகளின் ஆட்சிக் காலத்தில் சிலியில் ஒரு துளி இரத்தம் சிந்தப் படவில்லை. ஆனால், சமஸ் போற்றும் ஜனநாயக சக்திகளின் ஆட்சிக் காலத்தில் இருபதாயிரம் அப்பாவிப் பொதுமக்கள் (இனப்)படுகொலை செய்யப் பட்டனர்.

சமஸ்: //இன்னும் பழமைவாத மனநிலையிலிருந்து விடுபடாதவர்களாலேயே இப்படிப் பேச முடியும் என்று நினைக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் ஆயுதக் கிளர்ச்சியைத் தன் அந்தரங்கக் கனவாகக் கொண்டிருக்கும் ஒரு இயக்கம், தன்னையும் ஏமாற்றிக்கொண்டு தனக்குக் கீழே இருப்பவர்களையும் ஏமாற்றிக் கொள்ளப் பழக்குவதாகவே இருக்க முடியும்.//

லிபியாவில் கடாபியின் ஆட்சியைக் கவிழ்த்த மேற்குலகம் ஆதரித்த "புரட்சிப் படைகள்", அஹிம்சைப் போராட்டமா நடத்தின? லிபிய ஜிகாதியக் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கியதை மேற்கத்திய நாடுகள் பெருமையோடு சொல்லிக் கொண்டன. சிரியாவிலும் சுதந்திர சிரிய இராணுவம் என்ற புரட்சியாளர்களுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை வழங்கி ஊக்குவித்தன. சமஸ் அதற்கு ஒரு பதில் வைத்திருப்பார்: "மேற்குலக எதிரி நாடுகளுக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சி நடந்தால் அது நல்லது. மேற்குலக நட்பு நாடுகளுக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சி நடந்தால் அது கூடாது."

சமஸ்: //ஒருகாலத்தில், இந்த உலகின் பெரும் பகுதி மன்னர்கள் கையில் இருந்தது. அவர்களுடைய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.... பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி இப்படி நாமறிந்த எல்லா கிளர்ச்சிகளும் ஆயுதவழிப் போராட்டங்களாக நடக்க அதுவே காரணமாக இருந்தது. அன்றைக்கு அதற்கான நியாயமும் இருந்தது.//

மேற்குறிப்பிட்ட மூன்று புரட்சிகளும் வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு நோக்கங்களுக்காக நடந்தவை. அவற்றை, ஒரே தட்டில் வைத்து ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பது அபத்தமானது. "ரஜனிகாந்த், விஜயகாந்த் அண்ணன் தம்பி" என்பது போன்ற பாமரத்தனமான கூற்று. 

பிரெஞ்சுப் புரட்சி மன்னராட்சிக்கு எதிராகத் தான் நடந்தது. ஆனால், அதற்குப் பின்னர் ஐரோப்பாவில் நடந்த நெப்போலியன் போர்களினால் மன்னர்களின் அதிகாரம் கணிசமான அளவு குறைந்து போனது. வாட்டர்லூ போரில் நெப்போலியன் தோல்வியுற்றாலும், அவன் கொண்டு சென்று பரப்பிய "லிபரலிசம், தேசியம், முதலாளித்துவம்" போன்ற புதிய அரசியல்-பொருளாதார சித்தாந்தங்கள் ஐரோப்பிய நாடுகள் எங்கும் பரவி விட்டன. 

பல ஐரோப்பிய நாடுகளில், பூர்ஷுவா வர்க்கம் (அல்லது முதலாளித்துவவாதிகள்) அதிகாரத்திற்கு வந்தது. லிபரல்வாதிகள் என்று அழைத்துக் கொண்ட பூர்ஷுவா வர்க்கம், அரச பரம்பரையுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொண்டது. பிரிட்டன், நெதர்லாந்து, பெல்ஜியம், டென்மார்க் போன்ற நாடுகளில் அந்த அமைப்பை "பாராளுமன்ற சட்டத்திற்குட்பட்ட மன்னராட்சி" (Constitutional Monarchy)  என்று அறிவித்துக் கொண்டனர்.

அந்தக் கால ரஷ்யா இரண்டு புரட்சிகளை கண்டிருந்தது. 1905 ம் ஆண்டு நடந்த புரட்சியில், சார் மன்னனின் அதிகாரம் பெருமளவு குறைக்கப் பட்டு விட்டது. அது லிபரல்வாதிகளின் புரட்சி. அதற்குப் பிறகு தான் ரஷ்யாவில் பல கட்சிகள் பங்குபற்றும் பாராளுமன்ற அமைப்பு வந்தது. முதலாளித்துவமும் கணிசமான அளவு வளர்ச்சியைக் கண்டிருந்தது. உண்மையில் போல்ஷெவிக்குகள் நடத்திய புரட்சி, லிபரல் அரசுக்கு எதிராகவே நடந்தது.

ரஷ்யாவில், 1917 ம் ஆண்டு போல்ஷெவிக் புரட்சியாளர்களினால் கவிழ்க்கப் பட்ட லிபரல் அரசு தான், இன்றைக்கு இந்தியாவிலும் பல உலக நாடுகளிலும் உள்ளது. அதைத் தான் சமஸ் "ஜனநாயக அரசு" என்று சொல்கிறார். அனேகமாக, முதலாம் உலகப்போர் வரையில், உலகில் எந்த நாட்டிலும் ஜனநாயகத் தேர்தல்கள் நடக்கவில்லை. அதனால் ஜனநாயக நாடுகளும் இருக்கவில்லை. ஏனென்றால், அன்று அனைத்து குடி மக்களுக்கும் சர்வசன வாக்குரிமை வழங்கப் படவில்லை. பெருமளவு சொத்து வைத்திருந்த மேட்டுக்குடியினருக்கு மட்டுமே வாக்குரிமை இருந்தது.

1949 ம் ஆண்டு நடந்த சீனப் புரட்சி காலனித்துவத்திற்கு எதிரானது. அப்போது சீனாவில் மன்னராட்சி இருக்கவில்லை. சீனப் புரட்சி நடப்பதற்கு நூறு வருடங்களுக்கு முன்னரே, சீனா பிரிட்டனின் அரைக் காலனியாக மாறிவிட்டது. சீன சக்கரவர்த்தி பொம்மையாக வைக்கப் பட்டிருந்தார்.

சன்யாட்சன் தலைமையில் லிபரல்களான சீன தேசியவாதிகள் அதிகாரத்திற்கு வந்திருந்தனர். இரண்டாம் உலகப்போர் காலத்தில் சீனா ஜப்பானின் காலனி நாடாகி விட்டிருந்தது. மாவோவின் கம்யூனிசப் படைகள், ஒரு புறம் ஜப்பானிய காலனியாதிக்கப் படைகளையும், மறுபுறம் சீனத் தேசியவாத படைகளையும் எதிர்த்துப் போராடினார்கள்.

சமஸ்: //2001-க்குப் பிறகு, இந்த உலகில் தனித்த ஒரு நாடு என்று ஒன்று எதுவுமே கிடையாது. எல்லா அரசாங்கங்களும் பொருளாதார, ராணுவ, ராஜ்ஜிய வலைப்பின்னலில் பிணைக்கப்பட்டவை. உலகின் ஏதோ ஒரு சின்ன தீவில் அரசாங்கத்துக்கு எதிராக ஒரு குழு ஆயுதத்தைத் தூக்கினால், அது அந்த அரசாங்கத்தை மட்டும் அல்ல; ஒட்டுமொத்த அமைப்பையும் எதிரியாக்கிக் கொள்ளத் தயாராகிவிட்டது என்பதே பொருள். இதற்கு மிகச் சமீபத்திய உதாரணம், நம் கண் முன்னே நடந்த விடுதலைப் புலிகளின் அழிவும், தமிழ் இனப் படுகொலையும்!//

பனிப்போர் காலத்தில் உலகம் இரு துருவங்களாக பிரிந்திருந்தது. ஆனால், சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பின்னர் உலகம் முழுவதும் அமெரிக்கா தலைமையிலான ஒரு துருவ அரசியலுக்கு கட்டுப்பட்டது. 2001-க்குப் பிறகு, அது மென்மேலும் உறுதியாக்கப் பட்டது. 

2001-க்குப் பிறகு ஏற்பட்ட மாற்றமானது, ஆயுதக் குழுக்களுக்கு மட்டும் எதிரானது என்று மேலோட்டமாக பார்க்க முடியாது. ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற பெரிய நாடுகள் கூட எதிரிகளாக்கப் பட்டன. லிபியாவில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பும், சிரியாவில் நடக்கும் உள்நாட்டு யுத்தமும், 2001 நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே நடந்தது.

ஆகவே, ஒரு சிறிய ஆயுதக் குழு அரசை எதிர்க்கிறதா இல்லையா என்பதல்ல இங்கேயுள்ள பிரச்சினை. அமெரிக்காவின் ஏகாதிபத்திய நலன்களுக்கு தடையாக, ஒரு சிறிய இயக்கம் அல்ல, ஒரு பெரிய அரசு இருந்தாலும் அகற்றப் பட்டு விடும் என்பது தான் யதார்த்தம். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உத்தரவுகளுக்கு அடிபணிந்து நடந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. நேபாளத்தில் ஆயுதப்போராட்டம் நடத்திய மாவோயிஸ்டுகள் கூட அவ்வாறு தான் "சமநிலைப்" படுத்தப் பட்டனர்.

சமஸ்: //பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரை விலையாகக் கொடுத்து, எல்லாப் பெரிய எதிரிகளையும் கடந்து ஒரு ஆயுதபாணி இயக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றினாலும், இறுதியில் அது நிறுவும் ஆட்சி எப்படிப்பட்டதாக அமைகிறது? எந்த ஜனங்களின் பெயரால் ஆட்சியைக் கைப்பற்றுகிறார்களோ அதே ஜனங்களையும் ஜனநாயகத்தையும் கடைசியில் காலில் போட்டு நசுக்குவதே இதுவரை நாம் கண்ட வரலாறு.//

"ஜனங்கள்" என்று சொல்லப் படுபவர்கள் யார்? "ஜனநாயகம்" என்றால் என்ன?

முதலில் ஜனநாயகம் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன? இது தான் ஜனநாயகம் என்ற வரையறை இருக்கிறதா? பண்டைய கிரேக்கத்தில் இருந்த ஜனநாயக  அமைப்பில் எந்தக் கட்சியும் இருக்கவில்லை. அதை நேரடி ஜனநாயகம் என்று சொல்வார்கள். வாக்குரிமை பெற்ற மக்கள் தமக்குப் பிடித்த ஒருவரை தெரிவு செய்வார்கள். ஆயினும், அடிமைகளுக்கு வாக்குரிமை இருக்கவில்லை. 

இன்றைக்கு நாம் காணும் முதலாளித்துவ - ஜனநாயகத்திற்கும், கிரேக்க ஜனநாயகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் உருவான நவீன ஜனநாயகம் இது. இதற்குப் பெயர் "பிரதிநிதித்துவ ஜனநாயகம்".  பாராளுமன்ற ஜனநாயகம் என்றும் அழைக்கலாம். ஆனால் அது மட்டும் தான் ஜனநாயகம் அல்ல. 

பாராளுமன்றத் தொகுதிகளுக்கு, ஐந்து வருடங்களுக்கொரு தடவை நடக்கும் தேர்தலில், மக்கள் தமது பிரதிநிதியை தெரிவு செய்வதற்கு மட்டுமே உரிமை இருக்கிறது. அதுவும் பெரும்பாலான நாடுகளில் கட்சிகளுக்கு மட்டும் தான் ஓட்டுப் போடலாம். அதிலும் குறிப்பிட்ட சதவீத ஓட்டுக்களை பெற்றால் மட்டுமே ஆசனங்களை பெற்றுக் கொள்ளலாம். அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட, எப்போதும் இரண்டு கட்சிகள் மட்டுமே போட்டியிடுகின்றன, அல்லது ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றது. 

இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சிகள் இருந்த போதிலும், இந்தியா இன்னமும் ஒரு வறிய நாடாகவே இருப்பது எதைக் காட்டுகின்றது? எந்தக் கட்சியிடமும் மக்களின் பிரச்சினைகள் தீர்ப்பதற்கான திட்டம் கிடையாது. அப்படி ஒரு கட்சி ஆட்சிக்கு வர முடியாது. அப்படி இருந்திருந்தால் இந்தியா இன்றைக்கு மேலைத்தேய நாடுகளின் தரத்திற்கு நிகராக வந்திருக்குமே? இந்தியாவில் ஜனநாயகம் ஒரு கேலிக்கூத்து என்பது சாதாரண பாமர மக்களுக்கும் தெரியும்.

பல கட்சி ஜனநாயகம் நிலவும் நாடுகளில், கட்சிகள் பணத்தை அள்ளியெறிந்து தான் தேர்தல்களில் போட்டியிடுகின்றன. அமெரிக்காவும் அதற்கு விதிவிலக்கல்ல. பணபலம் இல்லாத கட்சி, குறைந்தது ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது. அது மட்டுமல்ல, மக்களை இனம், மதம், சாதி அடிப்படையில் பிரித்து அரசியல் செய்வதால் தான், பெரும்பான்மைக் கட்சிகள் தேர்தல் களத்தில் நின்று பிடிக்கின்றன. இந்தியாவில் எந்தக் கட்சி மக்களை ஒன்று சேர்க்கப் பாடுபட்டிருக்கிறது? அப்படியே முயற்சித்தாலும் அது நடக்கிற காரியமா?

சோஷலிச புரட்சி நடந்த நாடுகளில் ஜனநாயகம் இருக்கவில்லை என்று சமஸ் எங்கே படித்தார்? அந்த நாடுகளில் அரசு அதிகார நிறுவனங்களுக்கு மட்டும் தேர்தல் நடக்கவில்லை. பாடசாலைகள், தொழிற்சாலைகள், சமூக அமைப்புகள் எல்லாவற்றிலும் தேர்தல்கள் நடந்தன. வேட்பாளராக நிற்பவர் ஆளும் கட்சி உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது மட்டுமல்ல, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஏராளமான பணம் செலவளித்து பரப்புரை செய்வதில்லை. அவர்கள் தங்களது கொள்கைகள், திட்டங்களை பற்றி மட்டுமே தெரிவிப்பார்கள். 

"ஜனங்கள்" என்று சொல்லப் படுபவர்கள் யார்? ஒரு முதலாளித்துவ ஜனநாயக நாட்டில் அனைத்து ஜனங்களும் சமமாக நடத்தப் படுகின்றனரா? பணக்காரர்களுக்கு கிடைக்கும் வசதி வாய்ப்புகள் ஏழைகளுக்கு கிடைக்கின்றதா? உயர் சாதியினருக்கு கிடைக்கும் வாய்ப்புகள் தாழ்த்தப் பட்ட சாதியினருக்கு கிடைக்கின்றதா?

"ஜனங்களுக்குள்" ஏனிந்த பிரிவினை? இலங்கையில் சிறுபான்மைத் தமிழர்கள் ஒடுக்கப் பட்ட நேரம், ஒரு "ஜனநாயக" அரசு அவர்களை ஜனங்களாக கருதவில்லையா? அதே மாதிரி, இந்தியாவில் உள்ள "ஜனநாயக" அரசு, காஷ்மீர், அசாம் மக்களை ஒடுக்கிய நேரம், அவர்கள் "ஜனங்கள்" என்ற பிரிவுக்குள் அடங்கவில்லையா?

ஒரு முதலாளித்துவ நாட்டில், சிறுபான்மை மேட்டுக்குடியினர் வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். அடித்தட்டு மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். மத்தியதர வர்க்க மக்கள் செலவுகளை சமாளிக்க முடியாமல் கஷ்டப் படுகிறார்கள். அதன் அர்த்தம் அந்த நாடுகளில் வர்க்கப் பாகுபாடு உள்ளது என்பது தானே?

சோஷலிசப் புரட்சி நடந்த நாடுகளில் அந்த நிலைமை தலைகீழாக மாற்றப் பட்டது. அதாவது ஏழைகள், அடித்தட்டு ம‌க்க‌ள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி இருந்தனர். காலங்காலமாக ஆண்டு அனுபவித்து வந்த நிலவுடமையாளர்கள், பணக்காரர்கள், மேட்டுக்குடியினர் சமூகத்தில் கீழ் நிலைக்கு வந்தனர். அதாவது, "தாழ்த்தப் பட்டவன் உயர்த்தப் பட்டான். உயர்த்தப் பட்டவன் தாழ்த்தப் பட்டான்." இதைத் தான் "ஜனங்களை காலில் போட்டு நசுக்கினார்கள்" என்று சமஸ் குறைப் படுகின்றார்.

அரசியல் பழகுவோம்....

Monday, January 05, 2015

தேசியவாதம் சோறு போடாது! "பிரதிநிதித்துவம்" ஒரு முதலாளித்துவ கொள்கை!!


தேசியவாதம் சோறு போடாது. தெரிஞ்சுக்கோங்க மக்களே!

1991 ம் ஆண்டு, பல்லாயிரம் மக்களை பலி கொண்ட தேசிய இன விடுதலைப் போரின் பின்னர், யூகோஸ்லேவியாவில் இருந்து பிரிந்து சென்று தனி நாடான குரோவாசியாவின் இன்றைய நிலைமை இது. குரோவாசியா மக்கள், இன்று தேசியவாதத்தை குப்பைத் தொட்டிக்குள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். முன்னர் தேசியவாதம் பேசிய நடுத்தரவர்க்கத்தினர் மட்டும், இன்றைக்கு பணக்காரர்களாக தங்களது குடும்ப நலன்களை மட்டும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

யூகோஸ்லேவியா முன்னர் சோஷலிச நாடாக இருந்த காலத்தில், பிரஜைகள் எல்லோருக்கும் போதுமான உணவு, வசிக்க வீடு, நல்ல வருமானம் தரும் வேலைவாய்ப்பு எல்லாம் தாராளமாக கிடைத்து வந்தன. அது வேண்டாம் என்று சொல்லித் தான், குரோவாசிய தேசியவாதிகள் போரிட்டு தனி நாடாக பிரிந்து சென்றார்கள்.

சோஷலிசம், இடதுசாரியம் மக்களுக்கு சோறு போடுவதாக கூறிக் கொள்கிறது. ஆனால், தேசியவாதம் வெறும் பாசாங்குக்காக கூட அப்படி எதுவும் சொல்வதில்லை. குறைந்த பட்சம் பொருளாதாரம் பற்றிக் கூட எந்தக் கருத்தும் இருக்காது. தூய தேசியவாதம் மட்டும் பேசி, தனி நாடாக பிரிந்து சென்ற எல்லா நாடுகளிலும் இது தான் நடக்கிறது. ஆகவே, குறைந்த பட்சம் சோஷலிசம், இடதுசாரியம் பேசாத எந்தவொரு தேசியவாதியையும் நம்பாதீர்கள் மக்களே!

மீண்டும் மீண்டும் ஓர் உண்மையை, இங்கே பதிவு செய்ய வேண்டியுள்ளது. "தமிழ் அல்லது சிங்கள தேசியவாதிகள், புலி ஆதரவாளர்கள் அல்லது எதிர்ப்பாளர்கள், ராஜபக்ச ஆதரவாளர்கள் அல்லது எதிப்பாளர்கள், இந்து - கிறிஸ்தவ - இஸ்லாமிய மதவாதிகள்..." இவர்கள் எல்லோரும் ஒன்றிணையும் புள்ளி ஒன்றுள்ளது. அது தான் கம்யூனிசத்தின் மேலான வெறுப்புணர்வு.

இதனை நிரூபிப்பதற்கு அதிகம் சிரமப் படத் தேவையில்லை. சமூக வலைத் தளங்களில், கம்யூனிசத்தை எதிர்த்து விவாதிப்பவர்களின் அரசியல் பின்னணியை தெரிந்து கொண்டாலே போதும். தமது வழமையான கொள்கை வேறுபாடுகளை மூட்டை கட்டி வைத்து விட்டு, வரிந்து கட்டிக் கொண்டு கம்யூனிசத்தை எதிர்த்துப் பேச வந்து விடுவார்கள். தாங்கள் இப்படி ஓரணியில் சேர்ந்து நின்றால், மக்கள் மத்தியில் அம்பலப் பட்டு விடுவோமே என்ற எந்தப் பயமும் அவர்களிடம் கிடையாது.

கம்யூனிச வெறுப்பு என்பது, அவர்களது மத்தியதர வர்க்க குணாம்சம். பெரும்பான்மை உழைக்கும் மக்களை அடக்கி வைத்திருப்பதற்காகவும், அவர்களிடம் சுரண்டும் பணத்தில் சொகுசான வாழ்க்கை வசதிகளை அனுபவிப்பதற்காகவும் முதலாளிய வர்க்கத்தை ஆதரிக்கிறார்கள். மக்களுக்கு இந்த உண்மை தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, வர்ண மயமான முகமூடிகளை அணிந்து கொள்கிறார். 

ஒருவர் புலி ஆதரவாளராம்... மற்றவர் ராஜபக்சே ஆதரவாளராம்... இன்னொருவர் இஸ்லாமிய மதப் பற்றாளராம்.... மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள்? இப்படி ஆளுக்காள் தங்களுக்கு வாய்த்த முகமூடியை அணிந்து கொண்டாலும், அவர்களின் அடி மனதில் இருக்கும், உழைக்கும் மக்களுக்கு எதிரான துவேஷம் மட்டும் மாறுவதில்லை. அவர்கள் தமக்குள் முரண்பட்டு பிரிந்து நிற்பதாக காட்டிக் கொண்டாலும், கம்யூனிசத்தை எதிர்ப்பதற்கு மட்டும் ஒன்று சேர்ந்து விடுவார்கள்.

உலகம் முழுவதும், கடந்த நூறாண்டு காலமாக இது தான் நடந்து கொண்டிருக்கிறது. 19 ம் நூற்றாண்டில், கீரியும் பாம்புமாக சண்டையிட்டுக் கொண்டிருந்த, பிரான்சும், ஜெர்மனியும், பாரிஸ் கம்யூனை அழிப்பதற்காக ஒன்று சேர்ந்தன. 20 ம் நூற்றாண்டில், ரஷ்யாவில் தோன்றிய போல்ஷெவிக் புரட்சியை நசுக்குவதற்காக, ஐரோப்பிய நாடுகள் எல்லாம் தமது பகைமையை மறந்து கூட்டுச் சேர்ந்தன. உலகில் உள்ள "முஸ்லிம் நாடுகளில்" எல்லாம், மக்கள் சோஷலிசத்தை ஆதரித்த காலங்களில், இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச் சேர்ந்தார்கள். இப்படிப் பல உதாரணங்களை, வரலாறு நமக்குப் படிப்பினையாக விட்டுச் சென்றுள்ளது.

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம். தாம் தமிழ் மக்களுக்கு மேலே இருப்பதாக கருதிக் கொள்பவர்கள், "ஒட்டு மொத்த உலகத் தமிழினத்தின் பிரதிநிதிகள்" என்று கூறிக் கொள்கிறார்கள். அப்படி தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்பவர்களைப் பார்த்தால், அந்தப் பழமொழி தான் ஞாபகத்திற்கு வரும்.

குறைந்த பட்ச ஜனநாயகத்தில் கூட, மக்கள் எல்லோரும் சமமானவர்களாக கருதப் பட வேண்டும். ஆனால், யதார்த்தம் அதற்கு முரணாக உள்ளது. ஒரு சிலர், தாங்கள் மக்களிடம் இருந்து அந்நியப்பட்ட, ஒரு தனித்துவமான வர்க்கமாக கருதிக் கொள்கிறார்கள். தங்களால் மட்டுமே எல்லாம் முடியும் என்று இறுமாப்புடன் பேசுகிறார்கள்.

"மக்களின் பிரதிநிதிகள்" என்பது முதலாளித்துவ அரசியல் அமைப்பின் அடிப்படைக் கொள்கை. மக்களுக்கு அரசியல் தெரியாது. எல்லோரும் அரசியலில் பங்கெடுக்க முடியாது. அதற்காக அரசியல் பயிற்சி பெற்ற சில பிரதிநிதிகள் இருக்கிறார்கள். இப்படி சொல்லிச் சொல்லியே, மக்களை அரசியல் தெரியாத ஞானசூனியங்களாக வைத்திருக்கிறார்கள். மக்களை ஆட்டு மந்தைகளாக மேய்ப்பது தான் ஒரு சிலரின் நோக்கமாக உள்ளது.

ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் தங்களது பிரதிநிதிகளை தெரிவு செய்ய வாய்ப்புக் கொடுக்கப் படும். இந்த "பிரதிநிதி அரசியல்" படித்த மத்தியதர வர்க்கத்திற்கு சாதகமானது. அவர்கள் மக்களின் பெயரில் தங்களது வர்க்கத்தின் நலன்களுக்கான அரசியலை நடத்த முடிகின்றது.

இதைத் தான் நாங்கள் முதலாளித்துவ ஜனநாயகம் என்று சொல்கிறோம். முதலாளித்துவ அறிவுஜீவிகள் அதனை "பிரதிநிதித்துவ ஜனநாயகம்" என்று கூறிக் கொள்கிறார்கள். அதற்குப் பதிலாக, மக்கள் நேரடியாக பங்கெடுக்கும் ஜனநாயகத்தை தோற்றுவிப்பது எமது கடமை ஆகும். மக்களுக்கு பிரதிநிதிகள் தேவையில்லை. அவர்கள் தங்களைத் தாங்களே பிரதிநிதித்துவப் படுத்தும் அமைப்பு முறை வேண்டும். அது தான் உண்மையான ஜனநாயகம்.

Friday, May 09, 2014

அல்லேலூயாவும் அரசியல் அடிப்படைவாதிகளும்


எனக்குத் தெரிந்த, நெதர்லாந்தில் உள்ள அகதி முகாம் ஒன்றில், பல தமிழ்க் குடும்பங்கள் வசித்து வந்தன. பெரும்பாலானோர் இந்து மத நம்பிக்கையாளர்கள். அதில் ஒரு குடும்பம், அல்லேலூயா எனப்படும் பெந்தேகொஸ்தே கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, மிகுந்த மதப் பற்றுக் கொண்டிருந்தார்கள். அந்தக் குடும்பத்தில் சிறிய பிள்ளைகளும் இருந்தன.

"அல்லேலூயா தாய்" அந்தப் பிள்ளைகளை, பிற தமிழ்க் குடும்பங்களோடு பழக விடுவதில்லை. அதற்குக் கூறிய காரணம்: "அவர்கள் சாத்தானை, பிசாசை வழிபடுபவர்கள். அவர்களுடன் சேர்ந்தால் பிள்ளைகள் கெட்டு விடும்." என்பது தான். அதே நேரம், பிற தமிழ்க் குடும்பங்கள், அல்லேலூயா குடும்பத்தினரின் மத நம்பிக்கையை கேலி செய்தன. "பிள்ளைகள் கிறிஸ்தவ பக்திப் பாடல்கள் மட்டுமே கேட்க வேண்டுமென கட்டாயப் படுத்துகிறார்கள். சினிமாப் பாடல்களை கேட்க விடுவதில்லை...." இப்படிப் பல.

இதிலே வேடிக்கை என்னவென்றால், அவர்களுக்கு இவர்கள் செய்வது மூட நம்பிக்கையாகப் படுகின்றது. இவர்களுக்கு அவர்கள் செய்வது மூட நம்பிக்கையாகத் தெரிகின்றது. இரண்டு தரப்பினரும், "பிள்ளைகளை கெடுப்பதாக, அவர்கள் மேல் பெற்றோரின் விருப்பங்களை திணிப்பதாக, துஸ்பிரயோகம் செய்வதாக" ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்தார்கள். யார் சொல்வது சரி? அதைத் தீர்மானிப்பது யார்? இது குறித்து, நெதர்லாந்து சட்டங்கள் என்ன சொல்கின்றன?

நெதர்லாந்து, தாராளவாத (லிபரல்) கொள்கையின் அடிப்படையில் இயங்கும் சமுதாயத்தைக் கொண்ட நாடு. அது தனி மனிதனுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது. பெற்றோரும் தாம் விரும்பியவாறு தமது பிள்ளைகளை வளர்ப்பதற்கு சுதந்திரம் உள்ளவர்கள். அவர்கள் எந்த மதத்தை பின்பற்றினாலும், அல்லது எதையுமே பின்பற்றாத நாஸ்திகர்களாக இருந்தாலும், அந்த நம்பிக்கையை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கும் சுதந்திரம் உண்டு. ஒரு லிபரல் சமுதாயம், மதச் சுதந்திரத்தை மட்டும் அங்கீகரிக்கவில்லை. அரசியல் சுதந்திரத்தையும் அங்கீகரிக்கின்றது.

ஐம்பது வருடங்களுக்கு முந்திய நெதர்லாந்து மக்கள், மதவாதிகளாக, தேசியவாதிகளாக, சோஷலிசவாதிகளாக, பொதுவுடைமைவாதிகளாக பல சமூகக் கூறுகளாக பிளவு பட்டிருந்தனர். (இதனை டச்சு மொழியில் "Verzuiling" என்று சொல்வார்கள். அதாவது, தனித் தனி தூண்களாக பிரிந்து நிற்றல். ஒரு சமூகத்திற்கும், அதற்கு எதிரான சமூகத்திற்கும் இடையில் தொடர்பு இருக்காது.) பிற்காலத்தில் அந்தப் பிளவுகள் வெளித் தெரியா வண்ணம் மறைந்து விட்டது. ஆனால், தனியாக குடும்ப மட்டத்தில் இன்னமும் அரசியல் சித்தாந்த வேறுபாடுகள் தொடர்ந்தும் உள்ளன. அது மறையவே மறையாது. நெதர்லாந்து சட்டம் அதனை ஏற்றுக் கொள்கின்றது.

ஒருவரின் தனிப்பட்ட அரசியல்/ மத உரிமையை அங்கீகரிக்கும் சட்டம், பூர்வீக டச்சு மக்களுக்கு மட்டுமல்ல, வெளிநாட்டுக் குடியேறிகளின் அரசியல், மத உரிமையையும் அங்கீகரிக்கின்றது. இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த ஒரு சராசரி தமிழ்க் குடும்பம், தாம் காவிக் கொண்டு வந்த தமிழீழ தேசியவாத அடிப்படையில் பிள்ளைகளை வளர்க்கும் உரிமையை வழங்குகின்றது. அதே மாதிரி, மொரோக்கோ குடியேறிகள், அரபு மொழியையும், இஸ்லாமிய பண்பாட்டையும் பேணிப் பாதுகாக்க உதவுகின்றது. இந்த பன்முகத் தன்மை கொண்ட கலாச்சாரம், மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை என்று கூறுகின்றது.

இன்றைக்கும் சில தமிழர்கள் மத்தியில், அடிப்படை ஜனநாயகம் குறித்த புரிதல் இல்லாமை, ஒரு மிகப் பெரிய குறைபாடு. ஒரு லிபரல் ஜனநாயக நாட்டில் வாழ்ந்து கொண்டே, மேற்கத்திய கொள்கைகளை ஆதரித்துக் கொண்டே, மற்றவர்களின் ஜனநாயக உரிமையை காலில் போட்டு மிதிக்கும் கேலிக் கூத்தும் அரங்கேறுகின்றது.

மத அடிப்படைவாதம் போன்று, இதுவும் ஒரு வகை (அரசியல்) அடிப்படைவாதம் தான். தங்களது அரசியல் கொள்கை மட்டுமே ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற இறுமாப்புடன் நடந்து கொள்கின்றனர். அதற்கு மாறாக குழந்தைகளை வளர்த்தால், "பெற்றோரின் விருப்பத்தை திணிக்கிறார்கள்...சிறுவர் துஸ்பிரயோகம்..." என்று அலறித் துடிக்கிறார்கள்.

ஒவ்வொரு பெற்றோரும் தமக்குத் தெரிந்த அரசியல்/மதக் கருத்துக்களின் வழியில் தான் பிள்ளைகளை வளர்ப்பார்கள். ஒரு பாசிச நாட்டில் மட்டுமே அந்த உரிமை மறுக்கப் படுகின்றது. உங்களால் மற்றவர்களின் ஜனநாயக உரிமையை மதிக்க முடியாதென்றால், சவூதி அரேபியா போன்ற சர்வாதிகார நாடொன்றுக்கு புலம்பெயர்ந்து சென்று விடுங்கள்.


இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 

Wednesday, February 11, 2009

பயங்கரவாதிகளிடமிருந்து மீட்பதற்கு பரதேசி தேவன் வருகிறார்

ஒருகாலத்தில் மக்களை வழிநடத்திய தலைவர்கள், ஏதாவதொரு அரசியல் கொள்கையை முன்மொழிந்தார்கள். தாம் காட்டும் வழியில் சென்றால், ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் என்று நம்பிக்கையூட்டினார்கள். ஆனால் இன்றைய அரசியல் தலைவர்கள், மக்களை நிர்வகிப்பவர்களாக மட்டுமே உள்ளனர். மதம் உட்பட அனைத்து வகை அரசியல் சித்தாந்தங்களிலும் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாலோ என்னவோ, நமது காலத்து தலைவர்கள், தம்மை மீட்பர்களாக மட்டுமே காட்டிக் கொள்கின்றனர். நிச்சயமற்ற எதிர்காலம் குறித்த அச்சத்தில் இருந்து மக்களை மீட்க முனைகின்றனர். இன்னும் சிறப்பாக சொன்னால், தேசத்தை பிடித்தாட்டும் "பயங்கரவாதம்" என்ற பிசாசிடமிருந்து எமக்கு விடுதலை வாங்கித் தருவதாக உறுதியளிக்கின்றனர்.

"அச்சத்தில் இருந்து மக்களை மீட்கும் அரசியல்" பற்றிய இந்த ஆவணப்படம் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று.

Politics - The Power of Nightmares


Part 1:Baby it's Cold Outside


Part 2: The Phantom Victory


Part 3: The Shadows in the Cave