Wednesday, July 23, 2014

காஸா இனவழிப்பு போருக்கு சவூதி அரேபியா ஆதரவு!


“காஸா : இஸ்ரேலின் முள்ளிவாய்க்கால்” என்று ஏற்கனவே குறிப்பிட்டு எழுதி இருந்தேன். 2009 ம் ஆண்டு, வன்னியில் நடந்த அதே இறுதிப்போர், இன்று 2014 ம் ஆண்டு காஸாவில் நடந்து கொண்டிருக்கிறது. இரண்டு போர்களுக்குமான தயாரிப்புகளும் முன்னெடுப்புகளும் கிட்டத் தட்ட ஒரே மாதிரி அமைந்துள்ளன. புலிகளின் இடத்தில் ஹமாசும், சிறிலங்கா அரசின் இடத்தில் இஸ்ரேலிய அரசும் உள்ளன.

ஈழத்தில் நடந்த இன அழிப்புப் போருக்கு அயலில் இருந்த பெரிய நாடான இந்தியா ஆதரவளித்தது. அதே மாதிரி, இஸ்ரேலுக்கு அயலில் உள்ள பெரிய நாடான சவூதி அரேபியா, இன்றைய காஸா இன அழிப்புப் போருக்கு உதவிக் கொண்டிருக்கிறது.

இந்த உண்மையை சொன்னால், பலருக்கு நம்ப முடியாமல் இருக்கலாம். ஈழத்தில் கொல்லப் பட்ட பெரும்பான்மை தமிழ் மக்கள் இந்துக்களாக இருந்த போதிலும், ஓர் "இந்து நாடான" இந்தியா அந்தப் படுகொலைகளை அங்கீகரித்தது. காஸாவில் கொல்லப்பட்ட பெரும்பான்மை அரபு மக்கள் முஸ்லிம்களாக இருந்த போதிலும், ஒரு "முஸ்லிம் நாடான" சவூதி அரேபியா அந்தப் படுகொலைகளை அங்கீகரித்துள்ளது. "ஒரே மதத்தவருக்கு இடையிலான ஒற்றுமை" வெளியில் மக்களை ஏமாற்றுவதற்காக மட்டுமே பயன்படும். உள்ளுக்குள்ளே அவரவர் பொருளாதார நலன்கள் மட்டுமே முக்கியமாக கருதப் படுகின்றன.

இஸ்ரேலிய தொலைக்காட்சியான சனல் 10 ல் நடந்த கலந்துரையாடல் ஒன்றில், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சாகுல் மபாஸ் (Shaul Mofaz) அதனை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். (Mofaz proposes role for Saudi Arabia and UAE to disarm Gaza; https://www.middleeastmonitor.com/news/middle-east/12931-mofaz-proposes-role-for-saudi-arabia-and-uae-to-disarm-gaza)  காஸாவில் தற்போது நடந்து கொண்டிருக்கும் போருக்கு சவூதி அரேபியாவும், ஐக்கிய அரபு எமிரேட்சும் நிதியுதவி செய்யுமளவிற்கு சென்றுள்ளன! அதற்கு என்ன காரணம்?

பாலஸ்தீன பிரச்சினையில், “முஸ்லிம் நாடுகள்” எல்லாம் ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்கின்றன என்பது ஒரு கட்டுக்கதை. வரலாறு நெடுகிலும், இஸ்ரேலுடன் ஒத்துழைத்த “முஸ்லிம் நாடுகள்” பலவுள்ளன. ஜோர்டான் பகிரங்கமாகவும், சவூதி அரேபியா மறைமுகமாகவும், தொடக்கத்தில் இருந்தே இஸ்ரேலுடன் நட்புறவை பேணி வந்துள்ளன. அவை பாலஸ்தீனத்தில், இஸ்ரேலுடன் சமரச உடன்படிக்கை செய்து கொண்ட அப்பாசின் கட்சியை ஆதரிக்கின்றன. ஹமாஸ், புலிகள் போன்று, நீண்ட காலமாக எந்த வித விட்டுக் கொடுப்புகளுக்கும் முன்வரவில்லை. ஆயுதப் போராட்டம் மூலம், பாலஸ்தீன விடுதலை அடையாமல் ஓயப் போவதில்லை என்று பிடிவாதமாக மறுத்து வந்தது.

சவூதி மன்னர் அப்துல்லாவின் மைத்துனர் துர்க்கி, புலனாய்வுத் துறைக்கு பொறுப்பாக இருப்பவர். அவர் அண்மையில், பெல்ஜியம் சென்று இஸ்ரேலிய ஜெனரல் ஆமோஸ் யால்டின் (Amos Yadlin) உடன் சந்தித்துப் பேசி இருக்கிறார். மத்திய கிழக்கில் ஒரு “புதிய சமாதானத் திட்டம்” குறித்து ஆராய்ந்துள்ளனர். அதன் முதற் கட்டமாக, ஹமாஸ் ஒழித்துக் கட்டப் பட வேண்டும்.

இஸ்ரேலுக்கும், சவூதி அரேபியாவுக்கும் பொதுவான நண்பர்களும், பொதுவான பகைவர்களும் இருக்கின்றனர். இரண்டு நாடுகளுக்கும் அமெரிக்கா சிறந்த நண்பன். அதே மாதிரி, ஈரான், சிரியா ஆகிய நாடுகள் ஜென்ம விரோதிகள். அண்மைக் காலம் வரையில், எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியும், சிரியாவும், ஈரானும் ஹமாசுக்கு உதவி வந்தன. சிரியா அரசு, உள்நாட்டுப் போரில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறது.

எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி அதிகாரத்தில் இருந்து இறக்கப் பட்டது. (முன்னர் எகிப்து பற்றிய பதிவொன்றில், முஸ்லிம் சகோதரத்துவ கட்சிக்கு சவூதி அரேபியா உதவியதாக தவறுதலாக எழுதி இருந்தேன். அதனை ஏற்கனவே சில நண்பர்கள் சுட்டிக் காட்டி இருந்தனர். எனக்குக் கிடைத்த தகவல்களும் அதை உறுதிப் படுத்துகின்றன. அப்போது நடந்த தவறுக்காக மன்னிப்புக் கோருகின்றேன்.)

பாலஸ்தீனத்திற்குள் ஈரான் ஊடுருவதற்கு முன்னர், ஹமாஸ் ஒழித்துக் கட்டப் பட வேண்டும் என்பது இரண்டு கூட்டுக் களவாணிகளின் இரகசியத் திட்டம். (ஏற்கனவே இப்படி எல்லாம் நடக்கும் என்று மோப்பம் பிடித்த ஈரான், “பாலஸ்தீன மீட்புப் படை” ஒன்றை உருவாக்கி உள்ளது. ஆனால், அவர்களால் காசாவுக்குள் ஊடுருவ முடியுமா என்பது சந்தேகமே.) 

இதற்கிடையே, சூடான் தலைநகர் கார்ட்டூமுக்கு அருகில் உள்ள இராணுவ முகாம் ஒன்றின் மீது, இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டு வீசியுள்ளன. (Israel said to bomb Sudan weapon warehouse; http://www.timesofisrael.com/israel-said-to-bomb-sudan-weapon-warehouse/) அந்த தாக்குதலில் சிலருக்கு காயமேற்பட்டதுடன், அங்கிருந்த ஆயுத தளபாடங்கள் வெடித்து நாசமாகியுள்ளன. அனேகமாக, ஈரானில் இருந்து ஹமாசுக்கு அனுப்பப் பட்ட ஏவுகணைகள் அங்கே பாதுகாத்து வைக்கப் பட்டதாகவும், அதனாலேயே இஸ்ரேல் தாக்கியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இஸ்ரேலும், சவூதி அரேபியாவும் கூட்டுச் சேர்ந்து, பாலஸ்தீன பிரச்சினையை தமது பாணியிலேயே தீர்க்க விரும்புகின்றன. அது ஏற்கனவே தமிழர்களுக்கு நன்கு பரிச்சயமான “முள்ளிவாய்க்கால் தீர்வு”. அதன் முதல் கட்டமாக, இஸ்ரேல் காஸா மீது வான் வழித் தாக்குதல்களை நடத்தியது. இரண்டாம் கட்டமாக, தரை வழியாக படையினரை நகர்த்தியுள்ளது. இந்த யுத்தம் இப்போதைக்கு முடியப் போவதில்லை என்பதை ஏற்கனவே இஸ்ரேலிய அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். சில இனவாதிகள் “இனப்படுகொலை செய்வதில் தவறில்லை” என்று பகிரங்கமாக பேசி வருகின்றனர்.

காஸா ஆக்கிரமிப்புப் போரின் இறுதியில், இஸ்ரேலிய இராணுவம் ஆயிரக் கணக்கான பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்து விட்டிருக்கும். ஆனால், ஹமாஸ் முற்றிலுமாக அழித்தொழிக்கப் பட்டதை தனது வெற்றியாக பறை சாற்றிக் கொள்ளும். அதற்குப் பின்னர், காஸாவில் எஞ்சியுள்ள மக்களுக்கு வீடுகள் கட்டித் தருகிறோம் என்று சொல்லிக் கொண்டு, சவூதி அரேபியாவும், ஐக்கிய அரபு எமிரேட்சும் களத்தில் இறங்கும்.

ஹமாஸ் அழிக்கப் பட்ட பின்னர், அந்த அரசியல் வெற்றிடத்தில் அப்பாசின் பதா கட்சி பதவியில் அமர்த்தப் படும். “அழிவுகளில் இருந்து மீண்டெழுதல், மீள் கட்டுமானம், இன நல்லிணக்கம்….” இது போன்ற கவர்ச்சிகரமான கோஷங்களுடன் அந்தத் திட்டங்கள் நிறைவேறும். 

இதெல்லாம் நடக்கும் வரையில் சர்வதேச சமூகம் கண்களை மூடிக் கொண்டிருக்கும். ஐ.நா. ஒப்புக்கு விசாரணை செய்து, காஸாவில் பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப் பட்டதாக ஓர் அறிக்கை சமர்ப்பிக்கும். போர்க்குற்றங்கள் நடந்துள்ளதாக ஆதாரங்களுடன் நிரூபிக்கும். ஜெனீவாவில் இஸ்ரேலுக்கு எதிரான கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப் படும். அதற்கும் அப்பால் எதுவும் நடக்காது.

இவை எல்லாம் ஏற்கனவே ஈழத் தமிழர்கள் கண்டு அனுபவித்த சம்பவங்கள் தான். ஏகாதிபத்திய நாடுகளால் வன்னியில் நிறைவேற்றப் பட்ட நகல் திட்டம், இந்த முறை காஸாவில் பிரயோகிக்கப் படுகின்றது. ஏகாதிபத்தியம் என்றால் என்னவென்று அறிந்து கொள்ளாமல், “ஈழப் பிரச்சினை வேறு, பாலஸ்தீன பிரச்சினை வேறு” என்று இன்றைக்கும் நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவிகள், வரலாற்றில் இருந்து எதையுமே கற்றுக் கொள்ளப் போவதில்லை.

*******


இஸ்ரேலிய கம்யூனிஸ்ட் கட்சியுடன், உலக நாடுகளில் உள்ள பல்வேறு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு போருக்கு எதிரான கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியமும் இஸ்ரேலின் போர்க்குற்றங்களில் பங்காளிகள் எனக் குற்றம் சாட்டியுள்ளன. பாலஸ்தீன மக்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களையும், படுகொலைகளையும் கண்டிப்பதுடன், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவையும் தெரிவித்துள்ளனர். 

கூட்டறிக்கையில் விடுக்கப் பட்டுள்ள கோரிக்கைகள்: 
  • பாலஸ்தீன மக்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் கண்டிக்கப் பட வேண்டும். 
  • பாலஸ்தீன மக்களுக்கு எதிரான விமானத் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப் பட வேண்டும். 
  • இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் வெளியேற வேண்டும். 
  • இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப் பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப் பட வேண்டும். - காஸா, ஜெருசலேம், மேற்குக்கரை பகுதிகளில் வாழும் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் விலக்கப் பட வேண்டும். 
  • 1967 ம் ஆண்டுக்கு முன்பிருந்த எல்லைக்கு அப்பாலான குடியேற்றங்கள் அகற்றப் பட வேண்டும். 
  • ஐ.நா. தீர்மானத்திற்கு அமைய பாலஸ்தீன அகதிகளின் தாயகம் திரும்புதல் உறுதி செய்யப் பட வேண்டும். - இஸ்ரேலுடனான கூட்டு இராணுவப் பயிற்சிகள் இரத்து செய்யப் பட வேண்டும். 
  • கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்ட, 1967 ம் ஆண்டின் எல்லைக் கோட்டின் அடிப்படையில் பாலஸ்தீன தேசம் அங்கீகரிக்கப் பட வேண்டும்.


இந்த அறிக்கையில் கையெழுத்திட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளின் விபரம் : 
1. Communist Party of Albania
2. Algerian Party for Democracy and Socialism
3. The Communist Party of Australia
4. Democratic Progressive Party (Bahrain)
5. Communist Party of Bangladesh
6. Bangladesh Workers Party
7. Communist Party of Brazil
8. British Communist Party
9. New Communist Party of Britain
10. Communist Party of Canada
 11. Chilean Communist Party
12. Croatia, Socialist Workers Party
13. AKEL (Cyprus)
14. Communist Party of Denmark
15. FARC-EP, PCCC, (Colombia)
16. Communist Party of Finland
17. The German Communist Party
18. Communist Party of Greece
19. Hungarian Workers' Party
20. Communist Party of India (Marxist)
21. The Tudeh Party (Iran)
22. Communist Party of Ireland
23. The Communist Party of Israel
24. The Italian Communist Party
25. Jordanian Communist Party
26. Communist Party of Luxembourg
27. Communist Party of Mexico
28. Popular Socialist Party - National Political Union, Mexico
29. New Communist Party of the Netherlands
30. Communist Party of Norway
31. Palestinian Communist Party
32. Palestinian People's Party
33. Communist Party of Peru
34. Philippine Communist Party (PKP-1930)
35. Communist Party of Poland
36. Portuguese Communist Party
37. Romanian Communist Party
38. The Communist Party of the Russian Federation
39. South African Communist Party
40. Russian Communist Workers' Party
41. Yugoslavia, New Communist Party
42. Communist Party of Serbia
43. Communist Party of Slovakia
44. Communist Party of the Peoples of Spain; Catalonia,
45. Communist Party of Spain
46. Sudanese Communist Party
47. Communist Party of Sweden
48. Syrian Communist Party
49. League of Communists of Ukraine
50. Austrian Workers' Party
51. Belarusian Communist Workers' Party
52. Communist Party of Sweden

4 comments:

Anonymous said...

ஈழப் பிரச்சினை வேறு, பாலஸ்தீன பிரச்சினை வேறு---Read The Holly Bible or ask any christian about Cannan 2000 years ago...Then you can write about Gaza and Israel..sorry for you.. your article is a rubish

Unknown said...

எல்லாருக்கும் ஒரு கருத்து இருக்கும்... என்னோட கேள்வி என்ன-ன்னா, ஏன் ஆளாளுக்கு மூடிட்டு அவனுங்க வேலைய பாக்கக் கூடாது? இந்தியா, ஸ்ரீலங்கா ரெண்டும் தனித் தனி நாடு. தமிழ் மொழி புழக்கத்தில் இருப்பதால், நாம் இருவரும் ஒருவர் ஆகிவிட முடியாது. சும்மா இருக்குற சங்கை ஊதி கெடுக்குற அரசியல்வாதிகள் தேவையே இல்லாமல் பல பிரச்சனைகளை கிளப்பி விட்டு இருக்கிறாங்க. இந்தியா வாழ் முஸ்லிம்களுக்கு தனி இந்துஸ்தான் வேண்டும் என்று கேட்டால், இவர்கள் கொடுத்து விடுவார்களா, ஆனால், இலங்கை வாழ் தமிழர்களுக்கு மட்டும் தனி ஈழம் வேண்டும் என்று கண்டோர் கேட்போரிடமும் விளம்பரத்திற்காக கூவி வரும் அரசியல் வியாபாரத்தை நான் வெறுக்கிறேன். தமிழ் பேசுபவர் எல்லாம் தமிழர் கிடையாது... தீவிரவாதி கூட தமிழ் பேசுவான். அவன் தமிழன் கிடையாது. தமிழருக்கென்றே ஒரு பாரம்பரியம் மிக்க கலாச்சாரம் உள்ளதாக சரித்திரம் ஆவணப் படுத்தி இருக்கிறது. என்னுடைய கேள்விக்கு மீண்டும் வருகிறேன். ஏன் இந்த நாடுகள் அவரவர் சொந்த அலுவல்களை மட்டும் பார்க்கக் கூடாது?

Mahess said...

காஸாவை அழிப்பதனால், அல்லது இஸ்ரேலுக்கு உதவுவதனால், சவூதி அரேபியாவுக்குக் கிடைக்கும் நன்மைகள் எவை?

Kalaiyarasan said...

//காஸாவை அழிப்பதனால், அல்லது இஸ்ரேலுக்கு உதவுவதனால், சவூதி அரேபியாவுக்குக் கிடைக்கும் நன்மைகள் எவை?//

உங்கள் கேள்விக்கு விடை மேலே உள்ள கட்டுரையில் விரிவாக எழுதப் பட்டுள்ளது.