Showing posts with label சவூதி அரேபியா. Show all posts
Showing posts with label சவூதி அரேபியா. Show all posts

Monday, June 05, 2017

கட்டார் இராஜதந்திர நெருக்கடிக்கு காரணம் என்ன?


கட்டார் நாட்டுடன் சவூதி அரேபியா உட்பட ஐந்து அரபு நாடுகள் இராஜதந்திர உறவுகளை முறித்துள்ளன. அமெரிக்காவுக்கு ஆதரவான, எண்ணை வளம் நிறைந்த, பணக்கார வளைகுடா நாடுகளுக்கு இடையிலான திடீர் இராஜதந்திர நெருக்கடிக்கு காரணம் என்ன?

கட்டாரின் ஒரேயொரு நிலத்தொடர்பு சவூதி அரேபியாவுடன் மட்டுமே என்பதால், அந்நாட்டில் இருந்து இறக்குமதியான உணவுப் பொருட்களுக்கு தடைவிதிக்கப் பட்டுள்ளது. அதை அடுத்து, சூப்பர் மார்க்கெட்டுகளில் இருப்பதையெல்லாம் மக்கள் வாங்கி விட்டதால் அவை வெறுமையாகக் கிடக்கின்றன.

"கட்டார் பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவளிக்கிறது" என்ற குற்றச்சாட்டை சுமத்தியே சவூதி அரேபியா தொடர்பை முறித்துக் கொண்டது. அதை அடுத்து குவைத், ஐ.அ.எமிரேட்ஸ், பாஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகளும் இராஜதந்திர உறவை துண்டித்துக் கொண்டன.

இதற்கு சொல்லப் படும் காரணம் வேடிக்கையானது. கட்டார் அதிபரின் இணையத்தளத்தில், ஹமாஸ், ஹிஸ்புல்லா, முஸ்லிம் சகோதரத்துவம் போன்ற இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவிக்கப் பட்டிருந்ததாக சவூதி அரேபியாவில் காரணம் சொல்லப் படுகின்றது.

இது உண்மையில் அடுப்பு சட்டியைப் பார்த்து கருப்பு என்று பழித்தது போன்றது. பயங்கரவாத இயக்கங்களுக்கு உதவும் நாடுகளில் சவூதி அரேபியா முன்னுக்கு நிற்கிறது. அவ்விரண்டு நாடுகளும், சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்திற்கு நிதி, ஆயுத உதவிகள் வழங்கி இருந்தன. உலகில் வேறு பல இயக்கங்களுக்கும் அவை இரண்டும் சேர்ந்து உதவி செய்துள்ளன.

(சவூதி அரேபியாவின் பரம வைரியான) ஈரானின் ஆதரவு பெற்ற "பயங்கரவாத இயக்கங்களுக்கு", கட்டார் உதவி செய்தது என்று சவூதி குற்றம் சாட்டுகின்றது. யேமனில் நடக்கும் போரில் சவூதி தலைமையிலான இராணுவக் கூட்டமைப்பில் இருந்து கட்டார் வீரர்கள் வெளியேற்றப் பட்டுள்ளனர்.

வளைகுடா நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகள் அமெரிக்காவுக்கு தலையிடியாக இருக்கப் போகின்றது. ஏனெனில் கட்டாரில் அமெரிக்காவின் மிகப் பெரிய படைத்தளம் உள்ளது. அதன் எதிர்காலமும் கேள்விக்குறியாக உள்ளது. இதற்கிடையில், கட்டார் ஈரானுடன் நெருங்குவதாக அமெரிக்கா சந்தேகப் படுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஒபாமா நிர்வாகம் நடந்த காலத்திலேயே, கட்டாருக்கான ஆயுத விநியோகத்திற்கு தடை போடப் பட்டிருந்தது.

கட்டார் தொடர்பான இராஜதந்திர நெருக்கடிக்கு இன்னொரு காரணமும் சொல்லப் படுகின்றது. பிரிட்டனில் தேர்தல் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர், லண்டனில் நடந்த தாக்குதல் கடும்போக்கு வலதுசாரி கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சிக்கு சாதகமாக அமையும் என்று சிலர் நினைக்கலாம்.

ஆனால், எதிர்பாராதவிதமாக அந்தக் கட்சியின் மீதான கண்டனங்கள் அதிகரித்தன. தேர்தல் பிரச்சாரக் காலத்தில், சவூதி அரேபியாவுக்கு ஆயுத விற்பனை செய்வதை தெரேசா மே அம்மையார் நியாயப் படுத்தி வந்தார். தற்போது எதிர்க்கட்சிகள் அதை வைத்தே திருப்பித் தாக்குகின்றன.

லண்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகாவது, பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் சவூதி அரேபியாவுடனான தொடர்புகளை முறித்துக் கொள்ள வேண்டும் என்று, லேபர் கட்சியும், லிபரல் ஜனநாயகக் கட்சியும் அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஆயுத பெற ஊழல் தொடர்பான ஆவணங்களை பகிரங்கப் படுத்த வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை.

பல தசாப்த காலமாக, சவூதி அரேபியாவிற்கான பெருமளவில் ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக பிரித்தானியா இருந்து வருகின்றது. கொலைக்கருவிகளின் ஏற்றுமதியால் பெருமளவு அந்நிய செலாவணி கிடைக்கிறது. (இல்லாவிட்டால் பிரிட்டன் ஒரு பணக்கார நாடாக இருக்க முடியுமா?) ஆகவே, எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாக, இரகசிய ஆயுத பேரம் தொடர்பான ஆவணங்களை கையளிப்பதற்கு கன்சர்வேட்டிவ் கட்சி முன்வருமா என்பது சந்தேகத்திற்குரியது.

இந்தப் பின்னணியில் பார்க்கும் பொழுது, கட்டாருடனான இராஜதந்திர நெருக்கடிக்கான காரணம் புரியும். கட்டார் "பயங்கரவாத இயக்கங்களுக்கு உதவுகின்றது" என்று சவூதி அரேபியா குற்றம் சுமத்திய காரணம் புரியும். அதாவது, "கட்டார் மட்டுமே குற்றவாளி" என்று சுட்டிக் காட்டி விட்டு, சவூதி அரேபியா நல்ல பிள்ளைக்கு நடிக்கிறது. தன்னோடு கூட்டுச் சேர்ந்து கொள்ளையடித்த சிறிய திருடனை காட்டிக் கொடுத்து விட்டு, பெரிய திருடன் தப்பிக் கொள்வதைப் போன்றது. முப்பது வருடங்களுக்கு முன்னர் ஈராக்கில் சதாம் ஹுசைனுக்கு நடந்த கதியும் அதே தான்.

இதற்கிடையில், உலக சந்தையில் எண்ணை விலை உயர்ந்துள்ளதையும் குறிப்பிட வேண்டும். கடந்த ஐந்தாண்டு காலமாக படு வேகமாக சரிவடைந்து வந்த எண்ணை விலை, பல்வேறு பொருளாதார இழப்புகளுக்கும் காரணமாக அமைந்திருந்தது. எண்ணை வள ஒபெக் நாடுகளின் பொருளாதார நலன்களுக்காக கட்டார் பலி கொடுக்கப் பட்டிருக்கலாம். 

தொண்ணூறுகளுக்கு முன்னர், சோவியத் யூனியன் என்ற "கம்யூனிசப் பூதம்" இருந்த படியால், அமெரிக்கர்களும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் ஒன்று சேர்ந்து ஆப்கான் போரில் "தீய சக்திக்கு" எதிராக போரிட்டார்கள். சோவியத் யூனியன் வீழ்ந்து "கம்யூனிசப் பூதத்தின் அச்சுறுத்தல்" மறைந்த பின்னர், அவர்கள் தமக்குள் முரண்பட்டு சண்டையிடத் தொடங்கினார்கள். 

தற்கால உலக மக்கள் இஸ்லாமிய- பயங்கரவாத பீதியூட்டப் பட்டு, ஊடகங்களால் மூளைச் சலவை செய்யப் படுகின்றனர். "பயங்கரவாத எதிர்ப்புப் போர்" என்ற போர்வையின் கீழ் ஆயுத விற்பனை அமோகமாக நடக்கிறது. பல கோடி இலாபம் வருமானம் தரும் வியாபாரத்தில் ஊழல்கள் நடப்பது சர்வசாதாரணம். இதற்கிடையே எண்ணை விலையை வைத்து சூதாடும் வணிகர்களுக்கும் பஞ்சமில்லை. 

"முஸ்லிம் நாடுகளில் இருந்து வரும் பிரயாணிகளுக்கு விசா தடை விதித்து" உலகப் புகழ் பெற்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அண்மையில் தான் சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்து சொந்தம் கொண்டாடினார். முஸ்லிம் நாடுகளின் தலைவர்களை கூட்டி வைத்துக் கொண்டு "பயங்கரவாதத்தை இந்தப் பூமியில் இருந்து துடைத்தழிப்போம்" என்று சூளுரைத்தார். இந்த வாய்ச் சவடால் எல்லாம் ஆயுத விற்பனைக்காகத் தான் என்பது தெரிந்த விடயம். 

Thursday, July 07, 2016

9/11 மர்மம் : ஜோர்ஜ் புஷ் மறைக்க விரும்பிய பயங்கரவாதி யார்?


2001/09/11 நியூ யார்க் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப் பட்ட தாக்குதலை நடத்தியது யார் என்ற மர்மம் இன்னும் துலங்கவில்லை. ஆப்கானிஸ்தானில் ஒரு மலைக் குகைக்குள் பதுங்கியிருந்த, முன்னாள் சி.ஐ.ஏ. உளவாளி ஒசாமா பின்லாடன் தான் தாக்குதல் நடத்தியதாக, அன்றைய ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்க இராணுவம் படையெடுத்து ஆக்கிரமித்திருந்தது.

அன்றிலிருந்து இன்று வரை, 9/11 ஒரு உள்வீட்டு சதி என்று நம்புவோர் இருக்கிறார்கள். அவற்றை எல்லாம் கற்பனை என்று புறந்தள்ளி ஒதுக்குவோர் கூட ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை ஒன்றுள்ளது. 9/11 தாக்குதலில் சவூதி அரேபிய அரசின் பங்கு என்ன? விமானக் கடத்தல்காரர்கள் என்று அடையாளப் படுத்தப் பட்ட நபர்களில் பெரும்பான்மையானோர் சவூதி அரேபிய பிரஜைகள். அமெரிக்க அரசும், அரச அடிவருடி ஊடகங்களும், சவூதி அரேபியாவின் பெயரை குறிப்பிடாமல் தவிர்த்து வந்த காரணம் என்ன?

அமெரிக்க பாராளுமன்றத்தின் உண்மை அறியும் குழுவினர், 2004 ம் ஆண்டு தமது விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பித்தார்கள். ஆனால் அந்த அறிக்கையில் 28 பக்கங்கள் காணாமல் போயுள்ளன! அவற்றை மறைக்கச் சொல்லி உத்தரவிட்டது வேறு யாருமல்ல, அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் தான்! இன்று வரையில் இரகசியமாக வைத்திருப்பதற்கு, அந்த 28 பக்கங்களில் என்ன எழுதி இருந்தது?

9/11 தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்கள் அமைப்பாக திரண்டுள்ளனர். அவர்கள் அந்த 28 பக்கங்களை பகிரங்கப் படுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ரிப்பளிக்கன் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அவர்களுக்கு ஆதரவளிக்கிறார்கள். பாராளுமன்ற விசாரணை அறிக்கையை எவ்வாறு ஜனாதிபதி தடை செய்ய முடியும் என்றும் கேள்வி எழுப்பப் படுகின்றது.

பாராளுமன்ற தீர்மானத்தின் நோக்கம், அன்றைய தாக்குதலில் சவூதி அரேபியாவின் பங்களிப்பு என்ன என்பதை அம்பலப் படுத்துவது தான். மே மாதம், செனட் சபையில் டெமோக்கிராட்டிக் கட்சி உறுப்பினர் Chuck Schumer ஒரு பிரேரணையை முன்மொழிந்தார். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளின் பட்டியலில் சவூதி அரேபியாவையும் உள்ளடக்க வேண்டும் என்பது அதன் சாராம்சம். ஆனால், அதை நடைமுறைப் படுத்த விடாமல், ஜனாதிபதி ஒபாமா தனது வீட்டோ உரிமையை பாவித்து தடுத்து விட்டார். ஏனென்றால், "சவூதி அரேபியா போன்ற நட்பு நாடுகளுடனான உறவைப் பாதித்து விடும்" என்பது தான் காரணம்.

2004 ம் ஆண்டு வெளியான 9/11 அறிக்கையில் நீக்கப் பட்ட 28 பக்கங்களில் சவூதி அரேபியா பற்றிய விபரங்கள் இருந்தன என்று சந்தேகிக்கப் படுகின்றது. இது தொடர்பாக புலனாய்வுத்துறைக்கு ஏற்கனவே தெரிந்திருந்த போதிலும் வாயை திறக்கவில்லை. இது ஒரு பாராளுமன்ற விசாரணை அறிக்கை என்ற படியால், அந்த 28 பக்கங்களையும் வெளியிடுவது அல்லது மறைப்பது தொடர்பாக பாராளுமன்றமே முடிவெடுக்க வேண்டும் என்று 9/11 தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்கள் நம்புகிறார்கள்.

இதற்கிடையில் "28pages" என்ற பெயரில் அமைப்பு வடிவமாக திரண்ட உறவினர்கள், இன்னொரு இரகசிய அறிக்கையும் இருப்பதாக தெரிவித்துள்ளனர். "File 17" என்று பெயரிடப் பட்ட அந்த அறிக்கையில், விமானக் கடத்தல்காரர்களுடன் தொடர்பு வைத்திருந்த பதினெட்டு சவூதி பிரஜைகளின் பெயர்கள் உள்ளன. அவர்கள் எல்லோரும் சவூதி அரச மட்டத்தில் செல்வாக்கான நபர்கள். அந்த அறிக்கை கடந்த வருடம் வெளியிடப் பட்டாலும், "மேலதிக விசாரணைகளுக்காக" அது உடனடியாக மறைக்கப் பட்டது.

அந்த இரகசிய அறிக்கையில் இருந்த ஒருவர்: ஒமார் அல் பயூமி (Omar Al-Bayoumi), சவூதி அரசுடன் நெருங்கிய தொடர்பை பேணும், கலிபோர்னியாவில் வசிக்கும் அரேபியர். 2000 ம் ஆண்டு, ஜனவரி மாதம், அவர் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள அமெரிக்க தூதுவராலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து, சான்டியேகோ நகருக்கு பயணம் செய்து, உணவு விடுதி ஒன்றில் Nawaf al-Hazmi, Khalid al-Mihdhar ஆகிய இருவரையும் சந்தித்துள்ளார். 

Nawaf al-Hazmi, Khalid al-Mihdhar ஆகிய இரண்டு பேரும், 9/11 தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் பட்டியலில் இருந்தனர்! ஒமார் அல் பயூமி அந்த இரண்டு பயங்கரவாதிகளுக்கும் வாடகை வீடு ஒழுங்கு படுத்திக் கொடுத்துள்ளார். வீட்டின் வாடகை ஒப்பந்தமும் அவரது பெயரில் தான் இருந்தது. சான்டியேகோ நகரில் வாழும் முஸ்லிம் சமூகத்தில், ஒமார் அல் பயூமி புலனாய்வுத்துறைக்கு வேலை செய்வதாக பலருக்குத் தெரிந்திருந்தது. இந்த விபரம் எல்லாம் File 17 ல் எழுதப் பட்டுள்ளன.

இன்னொரு உதாரணம்: சாலே அல் ஹுசைன் (Saleh Al-Hussayen). அவர் சவூதி உள்துறை அமைச்சில் வேலை செய்த அரச அதிகாரி. தாக்குதல் நடப்பதற்கு முதல் நாள், அதாவது 10 செப்டம்பர் 2001 அன்று, விமானக் கடத்தல்காரர்கள் தங்கியிருந்த அதே ஹொட்டேலில் இருந்துள்ளார். 

ஒரு மத அறிஞருமான சாலே அல் ஹுசைன், FBI விசாரணையின் போது கடத்தல்காரர்களை தனக்குத் தெரியாது என்று கூறினார். ஆனால், அவர் பொய் சொல்வதாக விசாரணை அதிகாரிகள் நம்பினார்கள். அவர் திடீரென மயங்கி விழுந்த படியால், அல்லது அப்படி நடித்த படியால், விசாரணை இடைநிறுத்தப் பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட சில நாட்களில் அமெரிக்காவை விட்டு வெளியேறி விட்டார்.

இங்கே எழும் முக்கியமான கேள்வி என்னவெனில், 9/11 தாக்குதலில் சவூதி அரசுக்கு மட்டுமல்லாது, அமெரிக்க அரசுக்கும் பங்கிருக்கிறதா? இதற்குப் பின்னணியில் உள்ள அரசியல், பொருளாதார ஆதாயங்கள் என்ன? ஜோர்ஜ் புஷ் குடும்பமும், சவூதி மன்னர் குடும்பமும், கார்லைல் ஆயுத நிறுவனத்தின் பங்குதாரர்கள். ஆப்கானிஸ்தான், ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போர்களில் ஆயுத விற்பனை மூலம் பெருமளவு இலாபம் சேர்த்து விட்டனர். சிலநேரம், 9/11 தாக்குதலை நடத்தியதன் நோக்கமே அதுவாக இருக்கலாம்.

மேலதிக தகவல்களுக்கு:

Tuesday, September 08, 2015

சிரிய அகதிகள் பற்றி வலதுசாரி அறிவிலிகளுக்கு இலகுவான விளக்கம்

மேற்கு ஐரோப்பாவில் என்ன நடந்தாலும், அது உலகச் செய்தியாகி விடும். அந்த வகையில், தற்போது சிரியாவில் இருந்து பெருந்தொகையில் வந்து கொண்டிருக்கும் அகதிகள் பிரச்சினையும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஐரோப்பாவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் விவாதிக்கப் படும் பேசு பொருளாகி உள்ளது.

இதற்கிடையே, அகதிகள் மீது காழ்ப்புணர்வை வெளிப்படுத்தும் தீவிர வலதுசாரிகளின் பதிவுகளையும் ஆங்காங்கே காணக் கூடியதாக உள்ளது. வலதுசாரிகளான சில தமிழர்களும், ஐரோப்பிய நிறவெறியர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை உள்வாங்கி எதிரொலித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகையினால், அவற்றிற்கு பதிலளிக்கும் வகையில், இந்த விளக்கக் குறிப்புகளை எழுத வேண்டியுள்ளது. 


  • சிரிய அகதிகள் எதற்காக முஸ்லிம் நாடுகளுக்கு செல்லவில்லை?


அகதிகள் தாமாகவே ஒரு நாட்டிற்கு சென்று அடைக்கலம் கோருவதற்கும், குறிப்பிட்ட ஒரு நாடு தானாகவே முன்வந்து அகதிகளை ஏற்றுக் கொள்வதற்கும் இடையிலான வித்தியாசத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அகதிகளை தமக்குள் பங்கிட்டுக் கொள்வதற்கு, செல்வந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் விவாதிப்பது போன்று, சவூதி அரேபியா போன்ற செல்வந்த வளைகுடா நாடுகளும் முன்வர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. அதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அது உலக நாடுகளின் அரசுக்கள், தமக்குள் தீர்மானத்துக் கொள்ள வேண்டிய விடயம். அதை அகதிகள் தீர்மானிப்பதில்லை. அவர்கள் தாம் விரும்பிய நாட்டிற்குத் தான் செல்வார்கள். 

சவூதி அரேபியா அகதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதை ஓர் இராஜதந்திர பிரச்சினையாக பார்க்காமல், "சிரிய அகதிகள் ஏன் அந்த நாட்டிற்கு செல்லவில்லை?" என்று அகதிகளை நோக்கிக் கேட்பது முட்டாள்தனமானது. சிரிய அகதிகள், ஐரோப்பாவுக்கு செல்லாமல், முஸ்லிம் நாடுகளில் தஞ்சம் கோர வேண்டும் என்று யாரும் உத்தரவிட முடியாது. ஐரோப்பிய தீவிர வலதுசாரிக் கட்சிகள், நவ நாஸி குழுக்கள் பிரச்சாரம் செய்யும் கருத்துக்களை, சில தமிழ் வலதுசாரிகளும் வாந்தியெடுப்பது அருவருக்கத் தக்கது.

சிரிய உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் எழுந்த அகதிகள் நெருக்கடி முஸ்லிம் நாடுகளைத் தான் முதலில் பாதித்திருந்தது. துருக்கி, லெபனான், ஜோர்டான் ஆகிய மூன்று அயல்நாடுகளும், இன்றைக்கும் இலட்சக் கணக்கான சிரிய அகதிகளை வைத்திருக்கின்றன. அநேகமாக, துருக்கி அகதி முகாம்களில் தங்கி இருந்த அகதிகள் தான், கிரீஸ், மாசிடோனியா, செர்பியா, ஹங்கேரி வழியாக மேற்கு ஐரோப்பாவுக்கு சென்றனர். 

அதுவும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான அகதிகளே அவ்வாறு சென்றனர். ஏனென்றால், சட்டவிரோதமாக கிரீஸ் நாட்டிற்கு செல்லும் வரையில், பயண முகவர்கள் அல்லது கடத்தல்காரர்களின் உதவி தேவைப் பட்டது. அதற்கு ஆயிரக் கணக்கான அமெரிக்க டாலர்கள் தேவைப்பட்டது. ஓரளவு வசதியானவர்கள் மட்டுமே அந்தளவு செலவளிக்கும் தகுதியை கொண்டிருந்தனர்.


  • சிரிய அகதிகள் எதற்காக முஸ்லிம்களின் புனித பூமியான சவூதி அரேபியாவுக்கு செல்லவில்லை?


ஐரோப்பிய தீவிர வலதுசாரிகளின்
இனவாதப் பிரச்சாரம் 
அகதிகள் என்ன காரணத்திற்காக தாயகத்தை விட்டு வெளியேறினார்கள் என்பது பற்றி எதுவும் தெரியாத அறிவிலிகளால் தான், இது போன்ற மடத் தனமான கேள்விகளை கேட்க முடியும். முதலில் சிரிய உள்நாட்டுப் போர் பற்றி ஓரளவேனும் அறிந்து கொண்டு பேச வேண்டும். 

ஐந்து வருடங்களுக்கு முன்னர், போர் நடப்பதற்கான அறிகுறியே இல்லாமல் இருந்த சிரியாவின் நிலைமை என்ன? பெண்கள் கூட மிகவும் சுதந்திரமாக திரிந்த, மேலைத்தேய கலாச்சாரத்தை பின்பற்றிய நாடாக இருந்தது. அனைத்து பிரஜைகளும் அரபு மொழி பேசினாலும், பல்வேறு பட்ட சமூகங்களாக பிரிந்திருந்தனர். பல்வேறுபட்ட மதங்களை, அல்லது மதப் பிரிவுகளை பின்பற்றினார்கள். சிரியா ஒரு சர்வாதிகாரியால் ஆளப்பட்ட மதச்சார்பற்ற நாடாக இருந்தது.

உள்நாட்டுப் போரின் பின்னர், கிளர்ச்சிக் குழுக்கள் மத்தியில் கடும்போக்கு வஹாபிஸ்டுகளின் கை ஓங்கியது. அவர்கள் சவூதி அரேபியாவில் மேலாதிக்கம் செலுத்தும் வஹாபிச- இஸ்லாம் என்ற பிரிவை சேர்ந்தவர்கள். இஸ்லாமியவாத கிளர்ச்சிக் குழுக்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள், பெண்கள் அடக்கப் பட்டனர். 

மேற்கத்திய பாணியில் நவ நாகரிக உடை உடுத்திப் பழகிய பெண்களை, முகத்தில் இருந்து கால் வரை மூடும் கருநிற அங்கி அணிய வைத்தார்கள். கல்வியில் சிறந்த, விமானிகளாக கூட பணியாற்றிய பெண்களை, பாடசாலைக்கு செல்ல விடாமல், வீட்டுக்குள் முடங்க வைத்தார்கள்.

வஹாபிச மத அடிப்படைவாதிகள் ஆண்களையும் அடக்கி வைத்தார்கள். மதுபானம் தாராளமாக கிடைத்து வந்த நாட்டில், அதைத் தடை செய்தார்கள். மீறுவோர் கடுமையாக தண்டிக்கப் பட்டார்கள். சினிமா அல்லது காதல் பாட்டுக்கள் கேட்க முடியாது. தாடி வளர்க்க வேண்டும், இப்படிப் பல கட்டுப்பாடுகள். 

மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெரும்பாலான ஆண்கள், வாழ்க்கையில் ஒரு நாளேனும் பள்ளிவாசலுக்கு சென்றிருக்க மாட்டார்கள். அவர்கள் ஐந்து வேளையும் தொழுகைக்கு வர வேண்டுமென கட்டாயப் படுத்தப் பட்டனர்.

இதிலே கவனத்தில் எடுக்கப் பட வேண்டிய முக்கியமான விடயம் உள்ளது. சிரியாவில் பெரும்பான்மை சமூகமாக உள்ள சன்னி முஸ்லிம்களுக்கு மட்டும் தான் அத்தகைய கட்டுப்பாடுகள். வேறுவிதமாக சொன்னால், அவர்கள் மட்டும் தான் இஸ்லாமிய தேசத்தில் வாழும் தகைமை கொண்டவர்கள்.

வஹாபிச மத அடிப்படைவாதிகள், தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இருந்த சிறுபான்மை சமூகங்களை ஒடுக்கி, இனச் சுத்திகரிப்பு செய்தனர். ஷியா இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், அலாவித்துகள் ஒன்றில் படுகொலை செய்யப் பட்டனர், அல்லது வெளியேற்றப் பட்டனர்.

அன்பான வலதுசாரிகளே! இப்போது சொல்லுங்கள். மேற்குறிப்பிட்ட அடக்குமுறைகளை கண்டு அனுபவித்த பின்னரும், எந்த மடையனாவது சவூதி அரேபியாவுக்கு சென்று அகதித் தஞ்சம் கோருவானா? அடுப்பில் இருந்து நெருப்புக்குள் விழுந்தது போல இருக்காதா? சிரியாவில் உருவான இஸ்லாமிய தேசத்தில், சவூதி அரேபியாவில் உள்ளதைப் போன்ற, சிலநேரம் அதைவிட மோசமான, அடக்குமுறை ஆட்சி தான் நடக்கிறது என்பது இப்போது தெரிந்திருக்கும். 

அது மட்டுமல்ல, இயற்கை வளம் நிறைந்த, சிரியா நாட்டின் மேற்குப் பகுதியில் தான் மக்கள் செறிவாக வாழ்கிறார்கள். கிழக்குப் பகுதியில் யாரும் வசிப்பதில்லை. ஏனென்றால், அது வெறும் பாலைவனம். எப்படியாவது "முஸ்லிம்களின் புனித பூமியான" சவூதி அரேபியாவுக்கு செல்ல வேண்டுமென்ற குறிக்கோளுடன், அகதிகள் பாலைவன சுடுமணலில் பயணம் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். 

அவர்கள் முதலில் ஈராக்கிற்கு சென்று, அங்கிருந்து தான் சவூதி அரேபிய செல்ல முடியும். ஆனால், இந்த இடத்தில் அன்பிற்குரிய முட்டாள் வலதுசாரிகள் ஓர் உண்மையை மறந்து விடுகிறார்கள். அந்தப் பிரதேசம் முழுவதும், ISIS என்ற இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள "இஸ்லாமிய தேசம்" ஆகும்.

யார் இந்த ISIS? சவூதி அரேபியாவில் உள்ளதைப் போன்ற வஹாபிச சர்வாதிகார ஆட்சியை சிரியாவில் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. காரணத்தை புரிந்து கொள்வது மிகவும் எளிது. அதன் தலைமையில் உள்ள பெரும்பாலான உறுப்பினர் சவூதி அரேபியர்கள்! குறிப்பிட்ட அளவு ஈராக்கியர்களும் தலைமைப் பொறுப்பில் உள்ளனர். அந்த ஈராக்கியர்கள் ஏற்கனவே ஈராக்கில் சவூதி அரேபிய நிதியுதவி பெற்று அல்கைதா என்ற பெயரில் இயங்கியவர்கள். 

சவூதி அரேபியர்களையும், ஈராக்கியர்களையும் தலைவர்களாக கொண்ட ISIS இயக்கம், சிரியர்களை அகதிகளாக சவூதி அரேபியா செல்ல விட்டு விடுமா? "நீங்கள் எதற்கு சவூதி அரேபியாவுக்கு செல்ல வேண்டும்? நாங்கள் உங்களுக்காக ஒரு குட்டி சவூதி அரேபியாவை இங்கே உருவாக்கி வைத்திருக்கிறோம்?" என்று கேட்பார்கள்.
ISIS கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், அகதிகளின் வெளியேற்றத்தை தடுப்பதற்கான பிரச்சார சுவரொட்டிகள். குறிப்பாக, மருத்துவர்கள் போன்ற மத்தியதர வர்க்கத்தினரை நோக்கி எழுதப் பட்டுள்ளது. 

"குட்டி சவூதி அரேபியாவில்" இருந்து வெளியேறும் சன்னி முஸ்லிம் பிரிவினர், ஆசாத் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு செல்ல மாட்டார்கள். ஏனென்றால், சிரிய அரசு அவர்களை எதிரிகளாகக் கருதுகின்றது. 

ஈழப்போர் நடந்த காலங்களில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து செல்லும் தமிழர்கள், சிறிலங்கா அரசினால் எந்தளவு துன்புறுத்தப் பட்டார்கள் என்பதை நான் இங்கே சொல்லத் தேவையில்லை. அதே பிரச்சினை தான், சன்னி முஸ்லிம்களுக்கும் ஏற்படும்.

முஸ்லிம் அகதிகள், "குட்டி சவூதி அரேபியாவான" இஸ்லாமிய தேசத்தில் இருந்து வெளியேற விரும்பினால், அதற்கு வசதியான வழி, லெபனானும், துருக்கியும் தான். குறைந்தது ஐம்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நாட்டிற்கு செல்லாமல், ஆயிரம் கிலோமீட்டர் பாலைவனத்திற்குள் பயணம் செய்து, எந்த மடையனும் சவூதி அரேபியாவுக்கு போக மாட்டான். 

"துரதிர்ஷ்ட வசமாக", லெபனான், துருக்கி ஆகிய "முஸ்லிம்" நாடுகள், ஐரோப்பாக் கண்டத்திற்கு அருகாமையில் உள்ளன. அகதிகள் ஐரோப்பா செல்வது வலதுசாரிகளுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக, புவியியல் அமைப்பை மாற்றியமைக்க முடியுமா? டியர் வலதுசாரீஸ்! துருக்கி இருக்குமிடத்தில் சவூதி அரேபியாவை வைக்கச் சொல்லி, கடவுளிடம் மனுக் கொடுத்துப் பாருங்கள்!

அது சரி, வலதுசாரிகளே! உங்களிடமும் ஒரு கேள்வியை கேட்க வேண்டியுள்ளது. சிரியாவில் வாழும் முஸ்லிம்கள் அல்லாத பிற மதச் சிறுபான்மையினரான, கிறிஸ்தவர்கள், அலாவித்துகள், டுரூசியர்கள், யூதர்கள், இவர்களும் முஸ்லிம் நாடுகளுக்குத் தான் அகதிகளாக செல்ல வேண்டுமா? 

என்னது? சிரியாவில் வேற்று மதங்களை சேர்ந்த மக்களும் வாழ்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? முதலில் ஓர் உண்மையை அறிந்து கொள்ளுங்கள். விவிலிய கதைகள் நடந்த நாடுகளில் சிரியாவும் ஒன்று. அங்கே இப்போதும் பண்டைய கால கிறிஸ்தவ மதப் பிரிவுகள் உள்ளன. அது மட்டுமல்ல, ஏசு கிறிஸ்துவின் தாய்மொழி என கருதப்படும் அரமைக் மொழி பேசும் மக்களும் சிரியாவில் தான் வாழ்கின்றனர்.

கிறிஸ்தவ மதம் பல பிரிவுகளாக பிரிந்துள்ளது மாதிரி, இஸ்லாமிய மதமும் பிரிந்துள்ளது. கிறிஸ்தவத்தில் கத்தோலிக்கம் மாதிரி இஸ்லாத்தில் சன்னி மார்க்கம் உள்ளது. அதிலிருந்து பிரிந்தது ஷியா மார்க்கம். 

கத்தோலிக்கத்தில் இருந்து புரடஸ்தாந்துகாரர்கள் பிரிந்து சென்றதும், பின்னர் அதிலிருந்து பெந்தெகொஸ்தே, யெகோவா என்றேல்லாம் பிரிவுகள் உண்டானதும் தெரிந்திருக்கும். அதே மாதிரி, ஷியாவில் இருந்து பிரிந்து, அலாவி, டுரூசி போன்ற பல பிரிவுகள் உண்டாகின. அந்தப் பிரிவுகள் எல்லாம் சிரியாவில் உள்ளன.

அமெரிக்காவில் சில பெந்தெகொஸ்தே - புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்கள், தம்மை தனியான மதமாக ஸ்தாபித்துக் கொண்டனர். குறிப்பாக, யெகோவா, மொர்மன் சபைகளை சொல்லலாம். அதே மாதிரி, சிரியாவில் அலாவிகள், டுரூசியர்கள் பெரும்பான்மை மதங்களினால் வேற்று மதத்தவராக நடத்தப் பட்டனர். 

குறிப்பாக அலாவி பிரிவினர், இந்தியாவில் இருப்பது மாதிரி தாழ்த்தப் பட்ட சாதியினரின் நிலையில் இருந்தனர். அவர்கள் பல நூறாண்டுகளாக தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கப் பட்டனர். இன்றைய அதிபர் பஷாரின் தந்தை ஆசாத்தின் ஆட்சிக் காலத்தில், அலாவித்துக்கள் ஷியா மதப் பிரிவினராக உயர்த்தப் பட்டனர். ஈரானுடன் ஏற்பட்ட நெருக்கமான அரசியல் - இராஜதந்திர உறவுகள் அதற்கு உதவின.

சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான கோலான் குன்றுப் பகுதியில் டுரூசியர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் தம்மை தனியான மதமாக கருதிக் கொள்கிறார்கள். அவர்களுக்கென தனியான மதச் சடங்குகள், வழிபாட்டு முறைகள் உள்ளதால், பெரும்பான்மை இஸ்லாமியர்கள் அவர்களை முஸ்லிம்களாக ஏற்றுக் கொள்வதில்லை. கோலான் குன்றுகளில் ஒரு பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது. அதனால், கணிசமான அளவு டுரூசியர்கள் இஸ்ரேலுக்குள் வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகியது. அவர்கள் இஸ்ரேலிய பிரஜாவுரிமை பெற்று, இஸ்ரேலிய இராணுவத்திலும் பணியாற்றுகிறார்கள். 

ஸோ... வலதுசாரீஸ்... சிரிய டுரூசிய அகதிகளை, இஸ்ரேலுக்கு செல்லுமாறு அறிவுரை வழங்கலாமே? இஸ்லாத்துடன் எந்த சம்பந்தமுமில்லாத சிரிய கிறிஸ்தவர்கள், சிரிய டுரூசியர்கள் கூட முஸ்லிம் நாடுகளுக்கு, குறிப்பாக சவூதி அரேபியாவுக்கு அகதிகளாக செல்ல வேண்டுமா? திஸ் இஸ் டூ மச். வாட்ஸ் த ப்ராப்ளம் வலதுசாரீஸ்?



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Wednesday, July 23, 2014

காஸா இனவழிப்பு போருக்கு சவூதி அரேபியா ஆதரவு!


“காஸா : இஸ்ரேலின் முள்ளிவாய்க்கால்” என்று ஏற்கனவே குறிப்பிட்டு எழுதி இருந்தேன். 2009 ம் ஆண்டு, வன்னியில் நடந்த அதே இறுதிப்போர், இன்று 2014 ம் ஆண்டு காஸாவில் நடந்து கொண்டிருக்கிறது. இரண்டு போர்களுக்குமான தயாரிப்புகளும் முன்னெடுப்புகளும் கிட்டத் தட்ட ஒரே மாதிரி அமைந்துள்ளன. புலிகளின் இடத்தில் ஹமாசும், சிறிலங்கா அரசின் இடத்தில் இஸ்ரேலிய அரசும் உள்ளன.

ஈழத்தில் நடந்த இன அழிப்புப் போருக்கு அயலில் இருந்த பெரிய நாடான இந்தியா ஆதரவளித்தது. அதே மாதிரி, இஸ்ரேலுக்கு அயலில் உள்ள பெரிய நாடான சவூதி அரேபியா, இன்றைய காஸா இன அழிப்புப் போருக்கு உதவிக் கொண்டிருக்கிறது.

இந்த உண்மையை சொன்னால், பலருக்கு நம்ப முடியாமல் இருக்கலாம். ஈழத்தில் கொல்லப் பட்ட பெரும்பான்மை தமிழ் மக்கள் இந்துக்களாக இருந்த போதிலும், ஓர் "இந்து நாடான" இந்தியா அந்தப் படுகொலைகளை அங்கீகரித்தது. காஸாவில் கொல்லப்பட்ட பெரும்பான்மை அரபு மக்கள் முஸ்லிம்களாக இருந்த போதிலும், ஒரு "முஸ்லிம் நாடான" சவூதி அரேபியா அந்தப் படுகொலைகளை அங்கீகரித்துள்ளது. "ஒரே மதத்தவருக்கு இடையிலான ஒற்றுமை" வெளியில் மக்களை ஏமாற்றுவதற்காக மட்டுமே பயன்படும். உள்ளுக்குள்ளே அவரவர் பொருளாதார நலன்கள் மட்டுமே முக்கியமாக கருதப் படுகின்றன.

இஸ்ரேலிய தொலைக்காட்சியான சனல் 10 ல் நடந்த கலந்துரையாடல் ஒன்றில், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சாகுல் மபாஸ் (Shaul Mofaz) அதனை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். (Mofaz proposes role for Saudi Arabia and UAE to disarm Gaza; https://www.middleeastmonitor.com/news/middle-east/12931-mofaz-proposes-role-for-saudi-arabia-and-uae-to-disarm-gaza)  காஸாவில் தற்போது நடந்து கொண்டிருக்கும் போருக்கு சவூதி அரேபியாவும், ஐக்கிய அரபு எமிரேட்சும் நிதியுதவி செய்யுமளவிற்கு சென்றுள்ளன! அதற்கு என்ன காரணம்?

பாலஸ்தீன பிரச்சினையில், “முஸ்லிம் நாடுகள்” எல்லாம் ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்கின்றன என்பது ஒரு கட்டுக்கதை. வரலாறு நெடுகிலும், இஸ்ரேலுடன் ஒத்துழைத்த “முஸ்லிம் நாடுகள்” பலவுள்ளன. ஜோர்டான் பகிரங்கமாகவும், சவூதி அரேபியா மறைமுகமாகவும், தொடக்கத்தில் இருந்தே இஸ்ரேலுடன் நட்புறவை பேணி வந்துள்ளன. அவை பாலஸ்தீனத்தில், இஸ்ரேலுடன் சமரச உடன்படிக்கை செய்து கொண்ட அப்பாசின் கட்சியை ஆதரிக்கின்றன. ஹமாஸ், புலிகள் போன்று, நீண்ட காலமாக எந்த வித விட்டுக் கொடுப்புகளுக்கும் முன்வரவில்லை. ஆயுதப் போராட்டம் மூலம், பாலஸ்தீன விடுதலை அடையாமல் ஓயப் போவதில்லை என்று பிடிவாதமாக மறுத்து வந்தது.

சவூதி மன்னர் அப்துல்லாவின் மைத்துனர் துர்க்கி, புலனாய்வுத் துறைக்கு பொறுப்பாக இருப்பவர். அவர் அண்மையில், பெல்ஜியம் சென்று இஸ்ரேலிய ஜெனரல் ஆமோஸ் யால்டின் (Amos Yadlin) உடன் சந்தித்துப் பேசி இருக்கிறார். மத்திய கிழக்கில் ஒரு “புதிய சமாதானத் திட்டம்” குறித்து ஆராய்ந்துள்ளனர். அதன் முதற் கட்டமாக, ஹமாஸ் ஒழித்துக் கட்டப் பட வேண்டும்.

இஸ்ரேலுக்கும், சவூதி அரேபியாவுக்கும் பொதுவான நண்பர்களும், பொதுவான பகைவர்களும் இருக்கின்றனர். இரண்டு நாடுகளுக்கும் அமெரிக்கா சிறந்த நண்பன். அதே மாதிரி, ஈரான், சிரியா ஆகிய நாடுகள் ஜென்ம விரோதிகள். அண்மைக் காலம் வரையில், எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியும், சிரியாவும், ஈரானும் ஹமாசுக்கு உதவி வந்தன. சிரியா அரசு, உள்நாட்டுப் போரில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறது.

எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி அதிகாரத்தில் இருந்து இறக்கப் பட்டது. (முன்னர் எகிப்து பற்றிய பதிவொன்றில், முஸ்லிம் சகோதரத்துவ கட்சிக்கு சவூதி அரேபியா உதவியதாக தவறுதலாக எழுதி இருந்தேன். அதனை ஏற்கனவே சில நண்பர்கள் சுட்டிக் காட்டி இருந்தனர். எனக்குக் கிடைத்த தகவல்களும் அதை உறுதிப் படுத்துகின்றன. அப்போது நடந்த தவறுக்காக மன்னிப்புக் கோருகின்றேன்.)

பாலஸ்தீனத்திற்குள் ஈரான் ஊடுருவதற்கு முன்னர், ஹமாஸ் ஒழித்துக் கட்டப் பட வேண்டும் என்பது இரண்டு கூட்டுக் களவாணிகளின் இரகசியத் திட்டம். (ஏற்கனவே இப்படி எல்லாம் நடக்கும் என்று மோப்பம் பிடித்த ஈரான், “பாலஸ்தீன மீட்புப் படை” ஒன்றை உருவாக்கி உள்ளது. ஆனால், அவர்களால் காசாவுக்குள் ஊடுருவ முடியுமா என்பது சந்தேகமே.) 

இதற்கிடையே, சூடான் தலைநகர் கார்ட்டூமுக்கு அருகில் உள்ள இராணுவ முகாம் ஒன்றின் மீது, இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டு வீசியுள்ளன. (Israel said to bomb Sudan weapon warehouse; http://www.timesofisrael.com/israel-said-to-bomb-sudan-weapon-warehouse/) அந்த தாக்குதலில் சிலருக்கு காயமேற்பட்டதுடன், அங்கிருந்த ஆயுத தளபாடங்கள் வெடித்து நாசமாகியுள்ளன. அனேகமாக, ஈரானில் இருந்து ஹமாசுக்கு அனுப்பப் பட்ட ஏவுகணைகள் அங்கே பாதுகாத்து வைக்கப் பட்டதாகவும், அதனாலேயே இஸ்ரேல் தாக்கியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இஸ்ரேலும், சவூதி அரேபியாவும் கூட்டுச் சேர்ந்து, பாலஸ்தீன பிரச்சினையை தமது பாணியிலேயே தீர்க்க விரும்புகின்றன. அது ஏற்கனவே தமிழர்களுக்கு நன்கு பரிச்சயமான “முள்ளிவாய்க்கால் தீர்வு”. அதன் முதல் கட்டமாக, இஸ்ரேல் காஸா மீது வான் வழித் தாக்குதல்களை நடத்தியது. இரண்டாம் கட்டமாக, தரை வழியாக படையினரை நகர்த்தியுள்ளது. இந்த யுத்தம் இப்போதைக்கு முடியப் போவதில்லை என்பதை ஏற்கனவே இஸ்ரேலிய அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். சில இனவாதிகள் “இனப்படுகொலை செய்வதில் தவறில்லை” என்று பகிரங்கமாக பேசி வருகின்றனர்.

காஸா ஆக்கிரமிப்புப் போரின் இறுதியில், இஸ்ரேலிய இராணுவம் ஆயிரக் கணக்கான பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்து விட்டிருக்கும். ஆனால், ஹமாஸ் முற்றிலுமாக அழித்தொழிக்கப் பட்டதை தனது வெற்றியாக பறை சாற்றிக் கொள்ளும். அதற்குப் பின்னர், காஸாவில் எஞ்சியுள்ள மக்களுக்கு வீடுகள் கட்டித் தருகிறோம் என்று சொல்லிக் கொண்டு, சவூதி அரேபியாவும், ஐக்கிய அரபு எமிரேட்சும் களத்தில் இறங்கும்.

ஹமாஸ் அழிக்கப் பட்ட பின்னர், அந்த அரசியல் வெற்றிடத்தில் அப்பாசின் பதா கட்சி பதவியில் அமர்த்தப் படும். “அழிவுகளில் இருந்து மீண்டெழுதல், மீள் கட்டுமானம், இன நல்லிணக்கம்….” இது போன்ற கவர்ச்சிகரமான கோஷங்களுடன் அந்தத் திட்டங்கள் நிறைவேறும். 

இதெல்லாம் நடக்கும் வரையில் சர்வதேச சமூகம் கண்களை மூடிக் கொண்டிருக்கும். ஐ.நா. ஒப்புக்கு விசாரணை செய்து, காஸாவில் பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப் பட்டதாக ஓர் அறிக்கை சமர்ப்பிக்கும். போர்க்குற்றங்கள் நடந்துள்ளதாக ஆதாரங்களுடன் நிரூபிக்கும். ஜெனீவாவில் இஸ்ரேலுக்கு எதிரான கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப் படும். அதற்கும் அப்பால் எதுவும் நடக்காது.

இவை எல்லாம் ஏற்கனவே ஈழத் தமிழர்கள் கண்டு அனுபவித்த சம்பவங்கள் தான். ஏகாதிபத்திய நாடுகளால் வன்னியில் நிறைவேற்றப் பட்ட நகல் திட்டம், இந்த முறை காஸாவில் பிரயோகிக்கப் படுகின்றது. ஏகாதிபத்தியம் என்றால் என்னவென்று அறிந்து கொள்ளாமல், “ஈழப் பிரச்சினை வேறு, பாலஸ்தீன பிரச்சினை வேறு” என்று இன்றைக்கும் நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவிகள், வரலாற்றில் இருந்து எதையுமே கற்றுக் கொள்ளப் போவதில்லை.

*******


இஸ்ரேலிய கம்யூனிஸ்ட் கட்சியுடன், உலக நாடுகளில் உள்ள பல்வேறு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு போருக்கு எதிரான கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியமும் இஸ்ரேலின் போர்க்குற்றங்களில் பங்காளிகள் எனக் குற்றம் சாட்டியுள்ளன. பாலஸ்தீன மக்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களையும், படுகொலைகளையும் கண்டிப்பதுடன், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவையும் தெரிவித்துள்ளனர். 

கூட்டறிக்கையில் விடுக்கப் பட்டுள்ள கோரிக்கைகள்: 
  • பாலஸ்தீன மக்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் கண்டிக்கப் பட வேண்டும். 
  • பாலஸ்தீன மக்களுக்கு எதிரான விமானத் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப் பட வேண்டும். 
  • இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் வெளியேற வேண்டும். 
  • இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப் பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப் பட வேண்டும். - காஸா, ஜெருசலேம், மேற்குக்கரை பகுதிகளில் வாழும் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் விலக்கப் பட வேண்டும். 
  • 1967 ம் ஆண்டுக்கு முன்பிருந்த எல்லைக்கு அப்பாலான குடியேற்றங்கள் அகற்றப் பட வேண்டும். 
  • ஐ.நா. தீர்மானத்திற்கு அமைய பாலஸ்தீன அகதிகளின் தாயகம் திரும்புதல் உறுதி செய்யப் பட வேண்டும். - இஸ்ரேலுடனான கூட்டு இராணுவப் பயிற்சிகள் இரத்து செய்யப் பட வேண்டும். 
  • கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்ட, 1967 ம் ஆண்டின் எல்லைக் கோட்டின் அடிப்படையில் பாலஸ்தீன தேசம் அங்கீகரிக்கப் பட வேண்டும்.


இந்த அறிக்கையில் கையெழுத்திட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளின் விபரம் : 
1. Communist Party of Albania
2. Algerian Party for Democracy and Socialism
3. The Communist Party of Australia
4. Democratic Progressive Party (Bahrain)
5. Communist Party of Bangladesh
6. Bangladesh Workers Party
7. Communist Party of Brazil
8. British Communist Party
9. New Communist Party of Britain
10. Communist Party of Canada
 11. Chilean Communist Party
12. Croatia, Socialist Workers Party
13. AKEL (Cyprus)
14. Communist Party of Denmark
15. FARC-EP, PCCC, (Colombia)
16. Communist Party of Finland
17. The German Communist Party
18. Communist Party of Greece
19. Hungarian Workers' Party
20. Communist Party of India (Marxist)
21. The Tudeh Party (Iran)
22. Communist Party of Ireland
23. The Communist Party of Israel
24. The Italian Communist Party
25. Jordanian Communist Party
26. Communist Party of Luxembourg
27. Communist Party of Mexico
28. Popular Socialist Party - National Political Union, Mexico
29. New Communist Party of the Netherlands
30. Communist Party of Norway
31. Palestinian Communist Party
32. Palestinian People's Party
33. Communist Party of Peru
34. Philippine Communist Party (PKP-1930)
35. Communist Party of Poland
36. Portuguese Communist Party
37. Romanian Communist Party
38. The Communist Party of the Russian Federation
39. South African Communist Party
40. Russian Communist Workers' Party
41. Yugoslavia, New Communist Party
42. Communist Party of Serbia
43. Communist Party of Slovakia
44. Communist Party of the Peoples of Spain; Catalonia,
45. Communist Party of Spain
46. Sudanese Communist Party
47. Communist Party of Sweden
48. Syrian Communist Party
49. League of Communists of Ukraine
50. Austrian Workers' Party
51. Belarusian Communist Workers' Party
52. Communist Party of Sweden

Sunday, May 13, 2012

யூத ராஜ்ஜியம் இனப்படுகொலை செய்த சவூதி கிறிஸ்தவர்கள்

"யூதர்களும், கிறிஸ்தவர்களும், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, நண்பர்களாக வாழ்ந்து வருவது போலவும், அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் மட்டுமே பரம்பரைப் பகை நிலவியது போலவும்," நினைத்துக் கொண்டிருக்கும் பலருக்கு தெரியாத உண்மைக் கதை இது. மதவெறியர்கள் பல உண்மைகளை மறைத்தும், திரிபுபடுத்தியும் பிரச்சாரம் செய்து வருவதால், இந்தக் கதையும் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசப்பட்டுக் கிடந்தது. சவூதி அரேபியாவில், யூதர்களால் இனப்படுகொலை செய்யப்பட்ட, இருபதாயிரம் கிறிஸ்தவர்களைப் பற்றி, நம்மில் எத்தனை பேர் கேள்விப் பட்டிருக்கிறார்கள்? ஒரு காலத்தில், சவூதி அரேபியாவில் கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர் என்பதையே அறியாத பலர் உண்டு.

இன்று, நூறு வீதம் முஸ்லிம் மக்கட்தொகை கொண்ட நாடான சவூதி அரேபியாவில், ஒரு காலத்தில் கிறிஸ்தவ மதம் பரவி இருந்தது. ஏறத்தாள இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் (Wikipedia: கி.பி. 5 ம் நூற்றாண்டு), அரபு மொழி பேசும் இனக்குழு ஒன்று, கிறிஸ்தவ ராஜ்ஜியம் ஒன்றை ஸ்தாபித்து இருந்தது. சர்வதேச வாணிபம் காரணமாக, நாகரிக வளர்ச்சி கண்டிருந்தது. அன்று, ஐரோப்பாவிலும், ஆப்பிரிக்காவிலும் இருந்த கிறிஸ்தவ சாம்ராஜ்யங்களுடன், இராஜதந்திர உறவுகளைப் பேணி வந்தது. அதன் வளர்ச்சி கண்டு பொறாமை கொண்ட யூதர்கள், அந்த நாட்டின் மீது படையெடுத்து, அங்கிருந்த மக்கள் அனைவரையும் இனப்படுகொலை செய்தார்கள். சுமார் இருபதாயிரம் கிறிஸ்தவர்கள் இனவழிப்புகுள்ளான  சம்பவம், திருக் குர்ஆனில் கண்டிக்கப் பட்டுள்ளது.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், உலக நாடுகளின் வரைபடம் வேறு மாதிரி இருந்தது. அன்றிருந்த நாடுகள் பல இன்று இல்லை. இன்றிருக்கும் நாடுகள் அன்று இருக்கவில்லை. அரேபியா தீபகற்பத்தின், மேற்குப் பகுதியும், தென் கிழக்குப் பகுதியும் மட்டுமே நாகரீகமடைந்த சமுதாயங்களைக் கொண்டிருந்தன. மேற்கில் பாலஸ்தீனப் பகுதி நாகரீகம் குறித்து, உலகம் முழுவதும் அறிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், இன்று யேமன் என்ற தேசமாகவுள்ள, தென் கிழக்கு அரேபியாவின் நாகரீகம் குறித்து அறிந்தவர்கள் மிகக் குறைவு. விவிலிய நூலில், சாலமன் மன்னனின் காதலியான ஷீபா (அல்லது சபா) எனும் அரசி பற்றிய கதை வருகின்றது. கருநிற அழகியான ஷீபா இராணி ஆட்சி செய்த நாடு, இன்றைய யேமனில் இருந்துள்ளது. அந்த ராஜ்ஜியம் அழிந்து பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், ஹிம்யாரித் (Himyarite) ராஜ்ஜியம் தோன்றியது.

ஹிம்யாரித் ராஜ்ஜியம், ஷீபாவின் நாட்டையும் கைப்பற்றி விரிவடைந்து கொண்டு சென்றது. இன்றைய யேமன் நாட்டின் பெரும்பகுதி, ஹிம்யாரித் ராஜ்யத்திற்குள் அடங்கியது. ஆப்பிரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையிலானசர்வதேச வர்த்தகம் காரணமாக, பலமான நாடாக விளங்கியது. ஹிம்யாரித் ராஜ்யத்தின் பிரஜைகளும் அரபு அல்லது அது போன்ற மொழியைப் பேசி வந்தனர். ஹிம்யாரித் அரச பரம்பரையில் கடைசி மன்னன் யூசுப் அசார் து நவாஸ் (Yusuf As'ar Dhu Nuwas), யூத மதத்தை தழுவிக் கொண்டான். மன்னன் எவ்வழி, அதுபோல மக்களும் அவ்வழியே யூதர்களாக மாறினார்கள். "யூதர்கள் ஒரே மரபணு கொண்ட ஓரின மக்கள்" என்ற கட்டுக்கதை, இன்றைக்கும் படித்தவர்களால் கூட நம்பப் படுகின்றது. கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயங்களைப் போன்று, யூத மதமும் பிறரை மத மாற்றம் செய்து சேர்த்துக் கொண்ட உண்மையை மறைக்கின்றனர். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், பாலஸ்தீனத்தில் நிறுவன மயபட்ட மதமாக திகழ்ந்த யூத மதம், பல மத்திய கிழக்கு நாடுகளில் மட்டுமல்லாது, எத்தியோப்பியா வரை பரவியது.

ஹிம்யாரித் மன்னன் து நவாஸ் யூத மதத்திற்கு மாறியதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. உலக வரலாற்றில், பல மன்னர்களின் மத மாற்றத்திற்கு அது காரணமாக இருந்துள்ளது. சர்வதேச வர்த்தகம், அதனால் கிடைக்கும் அனுகூலங்களை அனுபவிப்பதற்கு, குறிப்பிட்ட மதத்தை பின்பற்றுவது நன்மை அளித்தது. அன்றைய காலத்தில், ஏற்றுமதி வர்த்தகத்தில், அதிக வருமானத்தை ஈட்டித் தரும் பொருளாக இருந்தது, சாம்பிராணி! தங்கம், வைரம் போன்று, சாம்பிராணி விற்று கோடீஸ்வரரானவர்கள் பலர். ஆலயங்களில் இறைவனை வழிபடுவதற்கு மட்டுமல்ல, வீடுகளில் நறுமணம் கமழச் செய்வதற்கு, அல்லது கிருமிநாசினியாக, இவ்வாறு பல்வேறு காரணங்களுக்காக சாம்பிராணி பயன்படுத்தப் பட்டது. சாம்பிராணி விளையும் மரம், ஒமானிலும், யேமனிலும் மாத்திரமே காணப்பட்டது. அதனால் தான் அதற்கு அந்தளவு கிராக்கி. சாம்பிராணி ஏற்றுமதி செய்யும் வணிகர்கள், ஹிம்யாரித் நாட்டின் ஊடாகத் தான் பயணம் செய்ய வேண்டும். அவர்கள் கட்டும் வரிப் பணத்தினால், அரசாங்கத்தின் கஜானா நிரம்பி வழிந்தது. 

கிறிஸ்தவ மதம் பரவிய ஆரம்ப காலங்களில், கத்தோலிக்க தேவாலய வழிபாடுகளிலும் சாம்பிராணி பயன்படுத்தப் பட்டது. பல நூறு வருடங்களுக்குப் பின்னர், புதிதாக முளைத்த இஸ்லாமிய சாம்ராஜ்யம் சாம்பிராணி வர்த்தகத்தை கட்டுப்படுத்தியதால் தான், கத்தோலிக்க திருச்சபை அந்த வழக்கத்தை கை விட்டது. அதன் பிறகு தான், மெழுதிரி கொளுத்தும் வழக்கத்தை அறிமுகப் படுத்தினார்கள். சர்வதேச வர்த்தகத்தில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாகத் தான், தாங்கள் மெழுகுதிரி கொளுத்தி வழிபடுகிறோம் என்பது, இன்றும் கூட பல கிறிஸ்தவர்களுக்கு தெரியாது. இஸ்லாமிய சாம்ராஜ்யத்திற்கு முன்னர், யூதர்களின் ஹிம்யாரித் ராஜ்ஜியம் சாம்பிராணி வர்த்தகத்தை கட்டுப்படுத்தியது. எனினும், கிறிஸ்தவ மதம் பரவிய காலத்தில், அந்தப் பிரதேசத்தில் தோன்றிய கிறிஸ்தவ தேசம் ஒன்று, சாம்பிராணி வர்த்தகத்தில் பங்கெடுத்துக் கொண்டது. இதனால், கிறிஸ்தவ உலகிற்கான சாம்பிராணி ஏற்றுமதி தடையின்றி நடப்பதற்கு உறுதிப் படுத்தப் பட்டது. இருப்பினும், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த, அரபு கிறிஸ்தவ நாட்டின் வீழ்ச்சியை தடுப்பதற்கு, எந்தவொரு கிறிஸ்தவ நாடும் முன்வராத காரணம் இது வரை துலங்கவில்லை.

சவூதி அரேபியாவில், யேமன் நாட்டு எல்லையோரம் அமைந்திருக்கிறது, நஜ்ரான் (Najran) என்ற நகரம். இன்று அது வளர்ந்து கொண்டிருக்கும் நவீன நகரம். பாலைவன சவூதி அரேபியாவில், இயற்கை எழில் கொஞ்சும் சோலைக்குள் அமைந்திருக்கும் நஜ்ரான், விவசாயத்திற்கேற்ற மண் வளம் கொண்டது. நஜ்ரான் நகரில், அல்லது அதற்கு அருகாமையில் பண்டைய நகரமான "அல் உக்தூத்" (Al-Ukhdood) அமைந்திருந்தது. இன்று சில இடிபாடுகளை மட்டுமே கொண்டிருக்கும் அந்தப் பகுதி, ஒரு காலத்தில் உன்னத நாகரிக வளர்ச்சி கண்ட நகரமாக திகழ்ந்தது. அந்த நகரில் வாழ்ந்த மக்கள், அந்த நகரோடு சேர்த்து அழிக்கப் பட்டு விட்டனர். உலக வரலாற்றில் இடம்பெற்ற மிகக் கொடூரமான இனப்படுகொலைகளில் அதுவும் ஒன்று.

யூத மன்னனான து நவாஸ், முதலில் பலம் பொருந்திய அக்சும் (இன்றைய எத்தியோப்பியா) சாம்ராஜ்யத்தின் மீது தான் படையெடுத்தான். அந்தப் படையெடுப்பின் போது பல கிறிஸ்தவ தேவாலயங்கள் எரிக்கப் பட்டன. அக்சும் சாம்ராஜ்யத்தின் படைகளை போரில் பலவீனப் படுத்திய பின்னர் தான், அயலில் இருந்த நஜ்ரான் (அல் உக்தூத்) முற்றுகையிடப் பட்டது. நஜ்ரானுக்கு, கிறிஸ்தவ சகோதர நாடான அக்சுமிலிருந்து உதவி கிடைப்பதை தடுப்பது, முதலில் அவர்களின் நோக்கமாக இருந்திருக்கும். அந்த வியூகம் சரியான கணிப்புடன் போடப் பட்டிருந்தது. முற்றுகைக்குள்ளானஅல் உக்தூத்அரசு உதவி கேட்டு, கிரேக்கத்தில் இருந்த கிறிஸ்தவ ரோம சாம்ராஜ்யத்திற்கு தகவல் அனுப்பியது. ஆனால், அங்கிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. சில நேரம், தகவல் தாமதமாகப் போய்ச் சேர்ந்திருக்கலாம்.

கி.பி. 524 ம் ஆண்டு,அல் உக்தூத் யூதப் படைகளால் முற்றுகையிடப் பட்டது. தமது அயலில் ஒரு கிறிஸ்தவ தேசத்தின் அபாரமான வளர்ச்சி கண்டு பொறாமை கொண்ட யூதர்களும், து நவாசின் படையெடுப்புக்கு உதவி செய்தனர். அன்று யூதர்களின் வெறுப்புணர்வு எந்தளவு தீவிரமாக இருந்தது என்பதற்கு, அடுத்து வரும் சம்பவங்கள் சாட்சியம் கூறும். முற்றுகைக்குள் மாட்டிக் கொண்ட அல் உக்தூத் பிரஜைகள் அனைவரும், யூதர்களாக மதம் மாற வேண்டும், அல்லது மரணத்தை தழுவிக் கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இறுதிக் கணம் வரையில் போராடி மடிய விரும்பியஅல் உக்தூத்பிரஜைகள், மதம் மாற மறுத்தனர். யூதப் படைகள்,அல் உக்தூத்நகரை சுற்றி அகழி வெட்டி, சிதை அடுக்கி தீ மூட்டினார்கள். அல் உக்தூத்மக்களை, ஒருவர் விடாது எல்லோரையும் உயிரோடு நெருப்பில் போட்டுக் கொளுத்தினார்கள்.

மொத்தம் இருபதாயிரம் பேர், இனவழிப்புக்கு பலியானதாக கூறப் படுகின்றது. ரோம சாம்ராஜ்யத்தின் கிறிஸ்தவ தலைமைச் செலகத்திற்கு அனுப்பப் பட்ட கடிதத்திலும் இது தெரிவிக்கப் பட்டுள்ளது. அல்உக்தூத் நகரின் தியாகிகள், ஒவ்வொரு வருடமும் கிறிஸ்தவ உலகில் நினைவுகூரப் பட்டனர். இஸ்லாமியர்களின் புனித நூலான குர் ஆனில், அல் உக்தூத் இனப்படுகொலை பற்றி பதிவு செய்யப் பட்டுள்ளது. (Surat al-Buruj of the Q'uran 85:4–8 ) 

இனப் படுகொலைக்குப் பின்னர், அல் உக்துக் ஹிம்யாரித் யூத ராஜ்யத்திற்குள் உள் வாங்கப் பட்டிருந்தது. ஆயினும், நஜ்ரானிலும், சவூதி அரேபியாவின் பிற பகுதிகளிலும் கிறிஸ்தவ சமூகம் தொடர்ந்திருந்தது. மெக்காவில் இருந்து பரவிய இஸ்லாம் என்ற புதிய மதம், அந்தப் பிரதேசத்தையும் வந்தடைந்தது. இறைதூதர் முகமது நபி காலத்தில், கிறிஸ்தவர்களும், யூதர்களும் புனித நூலின் மக்களாக சிறப்புரிமை கொடுக்கப் பட்டு பாதுகாக்கப் பட்டனர். முகமது நபியின் காலத்திற்குப் பின்னர், அரேபிய தீபகற்பம் முழுவதும் ஒரு இஸ்லாமிய அரசினால் ஆளப் பட்டது. அப்போது செய்யப் பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், நஜ்ரான் கிறிஸ்தவர்கள் ஈராக்கிற்கு நாடு கடத்தப் பட்டனர். இஸ்லாமிய ராஜ்யத்திற்குள் தொடர்ந்தும் வாழ்ந்து கொண்டிருந்த கிறிஸ்தவர்கள், பிற்காலத்தில் முஸ்லிம்களாக மாறி விட்டனர். யேமன் தேச யூதர்களின் சமூகம், இருபதாம் நூற்றாண்டு வரை அந்த இடத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்தது. நவீன இஸ்ரேல் உருவான பின்னர், பெரும்பான்மையான யேமன் யூதர்கள், இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்து விட்டனர்.

 மேலதிக தகவல்களுக்கு:
Najran 
Christian Community of Najran 
Himyarite Kingdom



Thursday, December 03, 2009

சவூதி அனுப்பிய ஹஜ் வெடி குண்டுகள்

உலகின் பல பாகங்களில் இருந்தும் முஸ்லிம் ஹஜ் யாத்ரீகர்கள் மெக்காவில் குவிந்து கொண்டிருந்தனர். முஸ்லிம்களின் மிகப் புனிதமான இரண்டு மசூதிகளின் பாதுகாவலன் மன்னன் அப்துல்லாவிற்கு வேறு வேலை இருந்தது. சவூதி அரேபியாவின் கொல்லைப்புற நாடான யேமன் முஸ்லிம்களை கொல்லும் கொடிய யுத்தத்தை நெறிப்படுத்திக் கொண்டிருந்தார். முதலில் சவூதி விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் யேமன் வான் பரப்பினுள் நுழைந்து குண்டு வீசின. பின்னர் சவூதி இராணுவம் எல்லை தாண்டிச் சென்று கண்ணில் பட்டவர்களை சுட்டுத்தள்ளினார்கள்.

கிராமங்கள் மீது கடும் சேதம் விளைவிக்கும் வெள்ளை பொஸ்பரஸ் துகள்கள் தூவப்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். சர்வதேச மன்னிப்புச் சபை இது குறித்து சவூதி அரசிடம் விளக்கம் கோரியது. சவூதியின் ஆக்கிரமிப்பு காரணமாக மட்டும், குறைந்தது ஐம்பதினாயிரம் யேமன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஏற்கனவே நான்காண்டுகளாக நடக்கும் யுத்தத்தினால் லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். கடுமையான செய்தித் தணிக்கை காரணமாக, இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. அகதிமுகாம்களுக்குள் முடங்கிய குழந்தைகள் போஷாக்கின்மையால் மடிந்து கொண்டிருக்கின்றன.

உலகின் மிகவும் வறிய நாடுகளில் ஒன்றான யேமன் கடந்த நான்காண்டுகளாக வெல்ல முடியாத போர் ஒன்றில் ஈடுபட்டுள்ளது. சவூதி அரேபியா, ஈரான் போன்ற அந்நிய சக்திகள் யேமன் உள்நாட்டு யுத்தத்தில் தலையிட்டு வருகின்றன. அவர்களைப் பொறுத்த வரை இது ஒரு பதிலிப் போர். நேருக்கு நேர் சந்திக்க தயங்கும் பகைவர்களான சவூதியும், ஈரானும் தமது பதிலிகள் மூலம் போரிடுகின்றன. யேமன் அரசு, ஹூதி போராளிகள், அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள், இவர்கள் மத்தியில் சிக்கி திணறும் மக்கள் செத்து மடிகிறார்கள். அகதி முகாம்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பும் Unicef, மக்கள் சில இடங்களில் பட்டினியால் வாடுவதாக தெரிவிக்கின்றது. யேமன் முழுவதும் தினசரி 250 குழந்தைகள் ஊட்டச்சத்தின்றி மரிக்கின்றன. இந்த செய்திகள் சர்வதேச ஊடகங்களின் கவனத்தைப் பெறுவதில்லை. இன்றுவரை ஐ.நா. சபை, சவூதி படையெடுப்பை கண்டிக்க அவசர கூட்டம் கூடவில்லை. உலகமே பாராமுகமாக இருக்கும் வேளை, யேமனில் மனித அவலம் அரங்கேறுகின்றது.

சவூதி இராணுவத்தின் அத்துமீறல்களுக்கு யேமன் அரசு அனுமதியளித்தது. தன்னால் அடக்க முடியாத "ஹூதி" கிளர்ச்சியாளர்களை அடக்க சவூதி படைகளை வலிந்து அழைத்தது. யேமனில் இரு தசாப்தங்களுக்கு மேலாக சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ஜனாதிபதி அலி அப்துல்லா சாலே க்கு இது மூன்றாவது போர்முனை. தொன்னூறுகளில் முன்னாள் கம்யூனிஸ்ட்களின் நிராசையான தென் யேமன் பிரிவினைப் போரை, இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் துணை கொண்டு அடக்கினார். 9/11 க்கு பின்னர் அமெரிக்கா நெறிப்படுத்திய பயங்கரவாத எதிர்ப்பு போர் யேமனையும் விட்டு வைக்கவில்லை. அல் கைதா தலைவர் பின் லாடனின் தாயகப் பூமியல்லவா? அல் கைதாவை ஒடுக்கி விட்டதாக யேமன் அரசு அறிவித்துள்ளது. ஆனால் தற்போதைய சவூதி படையெடுப்பு, அல் கைதா பூதம் அடைபட்டிருந்த புட்டியை திறந்து விடுமோ, என்ற அச்சம் தோன்றியுள்ளது. மேற்குறிப்பிட்ட யுத்தங்களிலும் சவூதி அரேபியாவின் பங்களிப்பு இருந்துள்ளது. ஆனால் திரை மறைவில். யேமன் அரசுக்கு தேவையான ஆயுதங்களும், ஆலோசனைகளும் தாராளமாக வழங்கப்பட்டன.

2004 ம் ஆண்டு, வட யேமனில் புதிய போர்முனை தோன்றியது. வட-மேற்கு பிரதேசத்தை சேர்ந்த சையது மக்கள் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்தார்கள். மேலெழுந்தவாரியாக யேமன் அரபு மொழி பேசும் ஒரே இனத்தவர்கள் வாழும் நாடு போல தோற்றமளிக்கிறது. குலம் அல்லது சாதி ரீதியாக, மதவாரியாக பிரிந்துள்ள சமூகம் வெளி உலகின் கண்களுக்கு தெரிவதில்லை. குறிப்பாக வட-மேற்கு Sadah மாகாணத்தை சேர்ந்த சையது மக்கள் ஷியா மதப்பிரிவை சேர்ந்தவர்கள். சுன்னி முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் யேமனில், ஷியா இஸ்லாமிய மதம் அவர்களின் பண்டைய இனத்தூய்மையை பாதுகாத்து வைத்திருக்கிறது. இவர்கள் நீண்ட காலமாக யேமனில் ஆட்சி புரியும் வகுப்பினராக இருந்துள்ளனர். சையது ஷியா மதத் தலைவரின் அரசியல் சர்வாதிகாரம், 1960 ல் ஏற்பட்ட தேசியவாதிகளின் சதிப்புரட்சியால் முடிவுக்கு வந்தது. அன்றிலிருந்து பெரிதும் பின்தங்கி விட்ட சமூகமாகி விட்ட சையிது மக்கள் தற்போது கிளர்ந்து எழுந்துள்ளனர்.

சையிது சமூகத்தில் இருந்து தோன்றிய "ஹூதி" இயக்க உறுப்பினர்கள் குறைந்தது 5000 பேர் அளவில் இருக்கலாம். கெரில்லாக்களுக்கு ஏற்ற மறைவிடமாக விளங்கக் கூடிய மலைகளும், குகைகளும், சுரங்கப்பாதைகளும் அவர்களுக்கு உதவுகின்றன. முன்னாள் படைவீரர்கள் பலர் ஹூதி போராளிகளாக மாறியுள்ளனர். யேமன் இராணுவத்தில் கணிசமான சையிது சிப்பாய்கள் கடமையாற்றுவது குறிப்பிடத் தக்கது. சையிது படை வீரர்கள் தமது மக்களின் குடியிருப்புகள் மீது குண்டு போட தயங்கியதும், சவூதி இராணுவ தலையீட்டுக்கு ஒரு காரணம். சமீபத்தில் அமெரிக்க ஆயுத சந்தையில் வாங்கிய F-15 , Tornado ஜெட் விமானங்கள் போராளிகளின் நிலைகள் மீது குண்டு போடுகின்றன. தமது எல்லைக் காவல் படைவீரர் ஹூதி போராளிகளால் கொல்லப்பட்டதற்கு பழி வாங்கவே தானும் போரில் குதித்ததாக சவூதி அரேபியா கூறி வருகின்றது. யேமன் இராணுவத்துடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த தம்மை எல்லை கடந்து அத்துமீறிய சவூதி விமானங்கள் தாக்குவதாக போராளிகள் கூறுகின்றனர். யேமனுக்குள் ஊடுருவிய சவூதி யுத்த தாங்கி ஒன்றை கைப்பற்றியதாக காட்டும் வீடியோ ஒன்றையும் அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அனுப்பியிருந்தனர்.

இதற்கிடையே ஹூதி இயக்கத்தினருக்கு கொடுப்பதற்காக அனுப்பபட்ட ஈரானிய கப்பல் ஒன்றை கைப்பற்றியிருப்பதாக யேமன் அரசு அறிவித்தது. இது பற்றிய மேலதிக தகவல் எதுவும் பின்னர் வராததால், உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை. ஷியா முஸ்லிம்களின் இராஜ்யமான ஈரான் ஹூதி போராளிகளுக்கு உதவி வருகின்றது என்ற அச்சம் யேமன், சவூதி அரச மட்டத்தில் நிலவுகின்றது. தென் லெபனானில் ஷியா பிரிவை சேர்ந்த ஹிஸ்புல்லா தனக்கென கட்டுப்பாட்டு பிரதேசத்தைக் கொண்டுள்ளது. அது போல, யேமனுக்கும், சவூதி அரேபியாவுக்கும் நடுவில் இன்னொரு ஷியா கட்டுப்பாட்டுப் பிரதேசம் உருவாக்கி வருவதாக பிரச்சாரம் செய்யப்படுகின்றது. அதே நேரம், இரு நாடுகளுக்கும் நடுவில் பத்து கிலோமீட்டருக்கு சூனியப் பிரதேசம் அமைக்க இருப்பதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.

ஹூதி போராளிகள் தனது நாட்டினுள் ஊடுருவியதாக இன்னொரு காரணத்தை சவூதி அரசு எடுத்து விட்டது. இந்த அறிவிப்பானது சவூதி அரேபியா ஏன் யேமன் பிரச்சினையில் தலையிட்டது என மறைமுகமாக சுட்டி நிற்கின்றது. யேமன் எல்லையோர சவூதி அரேபியாவில் சையிது, மற்றும் இஸ்மாயில் சமூக மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் ஷியா மதப் பிரிவை சேர்ந்தவர்கள் என்பது மட்டுமல்ல, தோற்றத்தில் யேமனியர்கள் போன்றிருப்பர். நிச்சயமாக அவர்களின் மனதின் ஓரத்தில் ஹூதி போராளிகள் மீது அனுதாபம் இருக்கும். இதனால் சவூதி அரசு இந்தப் பிரிவினரை சந்தேகக் கண் கொண்டு பார்க்கின்றது. அந்தப் பிரதேசம் ஏற்கனவே ஒரு அடக்கப்பட்ட கிளர்ச்சியை கண்டுள்ளது. (முன்பொரு தடவை சவூதி படையினர் நிகழ்த்திய ஷியா இனப்படுகொலை இதுவரை எந்த ஊடகத்திலும் வரவில்லை.) யேமனிய சகோதர இயக்க உதவியுடன் மீண்டும் தனக்கெதிரான கிளர்ச்சி தோன்றும் என சவூதி அரேபியா அஞ்சுகின்றது.

நான்காண்டுகளாக போரிட்டும் வெல்ல முடியாத யேமன் இராணுவத்தின் கையாலாகத்தனம். இந்த இடைவெளியில் நுழைந்துள்ள ஈரான். இதனால் பலம்பெற்ற ஹூதி போராளிகள் தமக்கென கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை வைத்திருக்கும் சாத்தியக்கூறுகள் தென்பட்டன. அதனை முளையிலேயே கிள்ளியெறிய சவூதி அரேபியா விரும்புகின்றது. அல் கைதா, (அல் கைதா என்பது வெளியுலகம் அறிந்த பொதுப் பெயர்) இப்போது இந்தப் போரை ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அல் கைதா சுன்னி முஸ்லிம் பிரிவினரின் குழுவென்பது குறிப்பிடத்தக்கது. இன்று எம் முன்னால் எழுந்துள்ள கேள்வி. ஹூதி இயக்கத்தை அழிப்பதில் சவூதி இராணுவம் வெற்றி பெறுமா? சவூதி இராணுவ நடவடிக்கை தோல்வியுற்றால், அல் கைதா போன்ற பிற ஆயுதக் குழுக்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். அது மீண்டும் சவூதி அரேபியாவினுள் ஆயுதப் போராட்டத்தை தூண்டி விடும். சவூதி அரசு தான் விதைத்த வினைகளை அறுவடை செய்து கொண்டு வீட்டிற்கு வரும் காலம் தொலைவில் இல்லை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
யேமன் பிரச்சினையை ஆழமாக அறிந்து கொள்ள இந்தப் பதிவையும் வாசிக்கவும்:
யேமன்: நேற்று நண்பர்கள், இன்று எதிரிகள்

Sunday, February 08, 2009

சவூதி அரேபியா: வறுமையின் நிறம் பச்சை

( அல் கைதா தொடர் - 3)

றியாத் மாநகரில் வசதி படைத்தவர்கள் மட்டும் வாழும் குடியிருப்பு அது. சகல வசதிகளையும் கொண்ட அடுக்கு மாடிக் கட்டடங்களைச் சுற்றி நாற்புறமும் ஆளுயர மதில்கள். அங்கே வசிப்பர்கள் அனைவரும் அமெரிக்க, பிரிட்டன் போன்ற மேற்குலக நாடுகளைச் சேர்ந்தவர்கள். அதிக சம்பளம் வாங்கும் பெரிய பதவிகளில் இருப்பவர்கள். சாதாரண மனிதர்கள் எவரும் அந்தக் குடியிருப்புப் பக்கம் செல்லமுடியாது. நேரம் இரவு 11.20 மணி. வரப்போகும் ஆபத்தை உணராத குடியிருப்பைப் பாதுகாக்கும் வாயிற்காவலர்கள், தம்மை நெருங்கிய அமெரிக்கத் தயாரிப்புக் காரைக் கண்டு அசட்டையாக இருந்தார்கள். திடீரெனக் காருக்குள் இருந்தவர்கள் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டனர். ஒரு நிமிடத்திற்குள் காவலரண் தாக்குதல் செய்பவர்களின் வசமானது. தொடர்ந்து நுளைவாயில் கதவு திறக்கப்பட்டது. இந்தத் தருணத்திற்காகக் காத்திருந்த ட்ரக் வண்டியொன்று விசையுடன் ஓடிச்சென்று அடுக்குமாடிக் கட்டடமொன்றுடன் மோதியது. காதைச் செவிடாக்கும் பயங்கர வெடிச்சத்தம் மாநகரின் உறக்கத்தைக் கலைத்தது. இவ்வளவும் 15 நிமிடத்திற்குள் நடந்தேறின.

மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது இந்தத் தாக்குதல் மேற்குலக நாட்டு பிரசைகளை நோக்கிக் குறிவைத்ததாகத் தோன்றும். இருப்பினும் இம்முறையும் சர்வதேசச் செய்தி ஊடகங்களால் ஒரு முக்கிய உண்மை மறைக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட அமெரிக்கக் கம்பனிக்குக் குறிவைக்கப்பட்ட விடயம் பலருக்குத் தெரியாது. "வினெல் கோப்ரேஷன்" என்ற சவூதி அரேபிய இராணுவத்தைப் பலப்படுத்த வந்துள்ள தனியார் வர்த்தகப் பாதுகாப்பு நிறுவனம்தான் தாக்குதல்காரரின் இலக்கு.

"வினெல் கோப்ரேஷன்" தொடக்கத்தில் அமெரிக்க லொஸ் ஏஞ்ஜலஸ் பகுதியில் அணைகட்டும் பணிகளில் ஈடுபட்டது. பின்னர் தனது வியாபாரத்தைப் பெருக்கும் நோக்கோடு இராணுவ வர்த்தகத்தில் இறங்கிவிட்டது. சீனாவின் உள்நாட்டுப்போரில் சியாங்கை சேக்கின் பாஸிச இராணுவத்திற்கு ஆயுதத் தளபாட உதவி வழங்கியது. வியட்னாம் போரின்போது இராணுவ நோக்கத்திற்கான அமெரிக்க இராணுவத்திற்கு விமான நிலையங்களைக் கட்டிக்கொடுத்தது. கிரெனெடாவில் சி.ஐ.ஏ உடன் சேர்ந்து கொண்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட இடதுசாரிப் பிரதமரின் ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தது. தொண்ணூறுகளில் மிகப்பெரிய பாதுகாப்பு வர்த்தக நிறுவனமான "கார்லைல் குறூப்", "வினெல் கோப்ரேஷன்" ஐ வாங்கியது. தாய் நிறுவனமான கார்லைல் குறூப்பின் தலைவர் பிராங் கார்லூச்சி அன்றைய அமெரிக்க ஜனாதிபதி றொனால்ட் ரீகனின் செயலாளராகப் பதவி வகித்தவர். இன்றைய ஜனாதிபதி புஷ் ன் குடும்பத்திற்கும் இந்த நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்புகள் உள்ளன.

"வினெல் கோப்ரேஷன்" சவூதி அரேபியாவில் என்ன செய்கிறது ? இந்த நிறுவனம் சவூதி அரேபிய அரசுடன் 800 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. வேலை ? எண்ணைக் கிணறுகளபை; பாதுகாப்பது, சவூதி அரேபிய இராணுவத்திற்குப் பயிற்சி ஆலோசளை வழங்குவது, மன்னர் குடும்பத்திற்குப் பாதுகாப்பு வழங்குவது... நேரடியாகச் சொன்னால், இக் கம்பெனி ஒரு கூலிப்படையாக சவூதி அரேபியாவில் தொழிற்படுகிறது. தனது சொந்தப் பிரஜைகளை நம்பாத சவூதி மன்னர் கடந்த இருபத்தைந்து வருடங்களாக வினெலை தனது நம்பிக்கைக்குரிய பாதுகாப்புப் படையாக வைத்துக்கொண்டுள்ளார். 1979 ம் ஆண்டு (ஈரானால் தூண்டப்பட்ட) கிளர்ச்சியாளர்கள், மெக்காவில் வருடாந்தம் இடம்பெறும் புனித யாத்திரையைப் பயன்படுத்தி, மெக்கா பெரிய பள்ளிவாசலை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். மன்னரின் உத்தரவின்பேரில் கலகத்தை அடக்க வினெல் கூலிப்படை மெக்கா சென்றது. ஆயிரக்கணக்கான கலகக்காரரை கொன்று குவித்தது. இந்தச் சம்பவம் அன்று உலக நாடுகளின் கண்களை, காதுகளை எட்டாவண்ணம் மறைக்கப்பட்டது. ";இன்னொரு ஈரான்" உருவாவதைத் தடுப்பது முக்கியம் என்று அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ரீகன் படுகொலைகளை நியாயப்படுத்தினார்.

ஈரான் என்னதான் மத அடிப்படைவாத அரசாக இருந்தபோதும், சவூதி அரேபியாவின் 100 ஆண்டுகால மத அடிப்படைவாத ஆட்சியின் தீவிரத் தன்மையளவிற்கு இல்லை. விமான நிலையச் சுங்கப்பரிசோதனையின் போது, சாதாரண சினிமாச் சஞ்சிகையின், கவர்ச்சி நடிகைகளின் படங்கள் மீது கறுப்பு வண்ணம் பூசப்படும், பிற மதத்தவர்கள் தமது வீட்டில் கூட தெய்வ உருவப்படங்களை வைத்திருப்பதற்குத் தடை, பெண்கள் வாகனம் ஓடத்தடை, பேரூந்து வண்டிகளில் பெண்களுக்கெனப் பின்புறத்தில் ஒதுக்கப்பட்ட தனியான இடங்கள், பூங்காக்களில் ஆண்களுக்கு மட்டும் அல்லது குடும்பங்களுக்கு மட்டும் என வேறுபாடுகள் கொண்ட இட ஒதுக்கீடு, பெண்களுக்கென வரையறுக்கப்பட்ட உயர்கல்வியும் , வேலைவாய்ப்பும், நாடுமுழுவதிலும் எந்த இடத்திலும் சினிமா இல்லை, மதுபானத் தடை, சட்டவிரோதமாக மதுதயாரிப்போரின் சிறையடைப்பு, களவுக்குக் கைவெட்டுதல், கள்ள உறவு வைத்த பெண்களைச் சந்தியில் வைத்துக் கல்லால் எறிந்து கொல்லுதல் போன்றவையெல்லாம் சவூதி அரேபியாவின் சாதாரண விடயங்கள். இந்நாடு எத்தனை தூரம் மத அடிப்படைவாதத்தில் ஊறியுள்ளதென்பதற்கான சில சான்றுகள் இவை.

சவூதி அரேபியாவில் "ஜனநாயகம்" , "சுதந்திரம்" போன்ற சொற்களைப் பாவிப்பதே குற்றம் என்று சொல்லுமளவிற்குச் சர்வாதிகார ஆட்சி நிலவுகிறது. மன்னர் குடும்பம்தான் ஜனாதிபதி, மந்திரிகள், பாராளுமன்றம், அரசாங்க அதிகாரிகள் எல்லாம். (மன்னரின் நூற்றுக்கணக்கான மனைவிமாருக்குப் பிறந்த ஆயிரக்கணக்கான பிள்ளைகள் போதும் முழு நாட்டையும் நிர்வகிக்க). சாதாரண குடிமக்கள் உழைத்துச் சாப்பிடும் வேளை, மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சும்மாவிருக்க அரசாங்கம் பணம் கொடுக்கிறது. ஈராக்கில் சதாம் கட்டிய ஒரு டசின் மாளிகைகளைப்பற்றி உலக நாட்டுப் பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதித்தள்ளின. ஆனால், சவூதி மன்னர் குடும்பத்திற்குச் சொந்தமான இருபதிற்கும் குறையாத ஆடம்பர மாளிகைகள் பற்றி யாரும் கதைப்பதில்லை. முன்னாள் மன்னர் பஹ்த் கடைசியாக ஸ்பெயினுக்கு உல்லாசப் பிரயாணம் போனபோது தன்னோடு 50 பென்ஸ் கார்களையும் 350 சேவகர்களையும் எடுத்துச்சென்றார்.

இவ்வளவிருந்தும் சவூதி அரேபியாவை யாரும் கண்டுகொள்வதில்லை. இதுவரை ஏன் எந்தவொரு செய்தி ஊடகமும் 100 ஆண்டுகால மத அடிப்படைவாத, சர்வாதிகார ஆட்சியாளர்களைப்பற்றி அறிவிப்பதில்லை? எல்லாம் சவூதி அரேபியா மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிக நெருங்கிய கூட்டாளியென்ற காரணத்தால்தான். பெரும்பாலான சவூதி அரேபியாவின் இறக்குமதிப் பொருட்கள் அமெரிக்காவில் இருந்து வருகின்றன. அதேபோல பெருமளவு எண்ணை ஏற்றுமதியாகுவதும் அமெரிக்காவிற்குத்தான். (சவூதி அரேபியா உலகிலேயே முதலாவது எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடு). மத்திய கிழக்கில் பெருமளவு அமெரிக்க ஆயுதங்களை, யுத்த விமானங்களை சவூதி அரேபியா வாங்கிக் குவித்து வருகின்றது. மலிவு விலையில் எண்ணை வாங்கும் அமெரிக்கா, பின்னர் ஆயுத விற்பனை மூலம் "பெற்றோலிய டொலர்களை" திரும்பப் பெற்றுக்கொள்கிறது.

1991 ம் ஆண்டு வளைகுடாப் போர் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிட்டது. யுத்தத்திற்கான செலவில் கணிசமான பகுதியை சவூதி அரேபியா பொறுப்பெடுக்கவேண்டுமெனக் கூறியது அமெரிக்கா. மில்லியன் டொலர்களை விழுங்கிய போர்ச் செலவுகள் சவூதிப் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்தது. ஏற்கெனவே எழுபதுகளின் மத்தியில் உருவான உலக பொருளாதாரப் பின்னடைவு வேறு சேர்ந்துகொண்டது. இதுவும் போதாதென்று (மேற்குலக நாடுகளால் வற்புறுத்தப்பட்ட) எண்ணை விலையிறக்கம் ஏற்றுமதி வருமானத்தைக் குறைத்தது. விளைவு ? வேலைவாய்ப்புகள் குறைந்தன, மாதாந்த வருமானம் குறைந்தது, சலுகைகள் நிறுத்தப்பட்டன. 1980 ல் ஒரு தனிநபரின் சராசரி வருட வருமானம் 28000 டொலர்களாக இருந்தது. இது அன்றைய அமெரிக்கரின் வருமானத்திற்குச் சமமானது. இன்று சவூதி அரேபிய தனிநபர் வருமானம் 7230 டொலர்களாகக் குறைந்துவிட்டது. இதேநேரம் அமெரிக்காவில் இவ்வருமானம் 34100 டொலர்களாக உயர்ந்துவிட்டது. விரைவான சனத்தொகைப் பெருக்கமும் பெருநகரங்களை நோக்கிய இடப்பெயர்வும் நிலைமையை மோசமடைய வைத்தது. இன்று சவூதி அரேபிய அரசாங்கம் 55 பில்லியன் டொலர்களுக்குக் கடனாளி என்றால் நம்புவது கடினமாகத்தானிருக்கும்.

சவூதி அரேபியாவில் வறுமை என்பது சில வருடங்களுக்கு முன்பு கற்பனை பண்ணிக்கூடப் பார்க்கமுடியாத விடயம். அங்கே வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் மக்களின் தொகை 20 வீதமாக இருக்கலாம் எனப் புகலிடத்தில் அரசியல் நடாத்தும் எதிர்க்கட்சி ஒன்று தெரிவித்தது. தலைநகரம் றியாத்திலும், ஜித்தாவிலும் சில பகுதிகள் ஏழைகள் வாழும் சேரிகளாகக் காட்சியளிக்கின்றன. திருட்டு, போதைப்பொருட்பாவனை என இன்னபிற குற்றச்செயல்கள் அதிகரிக்கின்றன. தெருவோரங்களில் பிச்சையெடுக்கும் பெண்களைக் காண்பது சாதாரணமாகிவிட்டது. இருப்பினும் குறிப்பிட்ட சேரிப்பகுதிகளினுள் வெளியிடத்து ஆட்கள் போவது இலகுவானதல்ல. நிலைமையைப் பார்க்கப்போன பத்திரிளையாளர்களைத் தடுத்து பொலிஸ் திருப்பியனுப்பியுள்ளது. உதவி நிறுவனத்தின் சார்பிலும் யாரும் அங்கு செல்லமுடியாது.

பல வருடங்களுக்கு முன்பு பிற அரபு நாடுகளிலிருந்து வந்து குடியேறியதால் பிரஜா உரிமை பெற்றவர்களின் பிள்ளைகள், விவாகரத்துப் பெற்ற அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தொழிற்தேர்ச்சி பெறாத சவூதிப் பிரஜைகள் ஆகியோரே அதிகமாக வறுமையில் வாழ்கின்றனர். வேலையில்லாப் பிரச்சனைக்கும் வறுமைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்ட வேலையில்லாதோர் தொகை 8 வீதம். ஆனால், உண்மைத் தொகை 25 வீதமாக இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. வருடந்தோறும் உருவாக்கப்படும் புதிய வேலைவாய்ப்புகளுக்கு, இரண்டு மடங்கு பேர் விண்ணப்பிக்கின்றர். இப்படியான நிலையிலும் தனியார் நிறுவனங்கள் வெளிநாட்டவரைத் தொடர்ந்தும் வேலைக்கு வைத்திருக்க விரும்புகின்றன. ஒரு சவூதிப் பட்டதாரி 800 டொலர்களை மாதச் சம்பளமாகக் கேட்டால் அதே வேலையை அனுபவமிக்க இந்தியப் பட்டதாரி 400 டொலருக்குச் செய்யத் தயாராகவிருப்பதுதான் இதற்குக் காரணம். ஒரு சவூதிப்பிரஜை தன்னுடைய குடும்பத்தையும் பராமரிக்கவேண்டிய நிலையிலிருக்கிறான். மேலும் வேலையில்லாப் பிரச்சினை காரணமாக ஆண்களுக்குத் திருமணமாவதும் தள்ளிப்போடப்படுகின்றது. அங்கே மணம் முடிக்கவேண்டிய ஆண், சீதனம் கொடுக்கவேண்டுமென்பதை நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். இன்னொரு பக்கத்தில் துப்பரவுத் தொழில் போன்றவற்றைச் செய்யும் அடிமட்டத் தொழிலாளர்கள் இப்போதும் வெளிநாட்டவர்கள் தான். அவர்கள் மாதாந்த வருமானம் 80 டொலர்களாகும். அத்தோடு எந்தவிதத் தொழிலாளர் நல உரிமையுமற்று அவர்கள் சுரண்டப்படுகின்றனர். சவூதி அரேபிய அரசு தனது உழைப்பாளர் வர்க்கத்தை இவ்வாறு தந்திரமாகப் பிரித்து வைத்துள்ளது.

இதுவரை கூறப்பட்ட பின்னணியின் அடிப்படையிலேயே சவூதி அரேபியாவில் அல்-கைதாவின் வளர்ச்சியைப் பார்க்கவேண்டும். எண்பதுகளில் "சர்வதேசக் கம்யூனிசத்தை" எதிர்த்த அணியில் சவூதி அரேபியா அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்திருந்தது. உள்நாட்டுப் பிரச்சனைகளை மறைக்க தனது நாட்டு இளைஞர்களை ஆப்கானிஸ்தானுக்கு சோவியத் இராணுவத்தை எதிர்த்துப் போராட அனுப்பி வைத்தது. கடைசியில் சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் (பனிப்) போர் முடிந்து நாடு திரும்பியவர்களுக்கு, அமெரிக்க அடிவருடி மன்னரின் ஊழலாட்சி கண்ணுக்குப் புலப்பட்டது. அப்போது ஆரம்பித்ததுதான் அல்-கைதாவின் சவூதி அரேபிய விடுதலைப் போராட்டம். ஆடம்பரமாக வாழ்ந்து, ஊதாரித்தனமாகச் செலவு செய்யும் மன்னர் "முஸ்லீம் அல்ல, மக்களின் எதிரி" என அல்-கைதா அறிவித்தது. வறுமையில் வாடிய வேலையற்ற இளைஞர்கள் அல்-கைதாவினால் கவரப்பட்டனர். இன்று சவூதி அரேபியாவில் சுதந்திரமான தேர்தல் நடாத்தப்பட்டால் பின்லாடன் ஜனாதிபதியாகும் வாய்ப்புள்ளதை எதிரிகளும் ஒப்புக்கொள்கின்றனர்.

2001 செப்டம்பர் 11 ல் நிகழ்ந்த நியூ யோர்க் தாக்குதலுடன் உடனடியாக ஆப்கானிஸ்தான் தொடர்புபடுத்தப்பட்டது. விமானக் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் என அறிவிக்கப்பட்டவர்கள் சவூதி அரேபியப் பிரஜைகள் என்ற விடயத்திற்கு அன்று யாரும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அந்தத் தாக்குதலில் அல்-கைதா தான் பொறுப்பு என்பது, இதுவரையும் உறுதியாகத் தெரியாவிட்டாலும், செப்டம்பர் 11 க்கும் பிற்பாடு, சவூதி அரேபியாவில் அல்-கைதாவிற்கு ஆதரவு பெருகியுள்ளது, மறுக்கவியலாத உண்மை. இதற்கு அமெரிக்க அரசின் சர்வதேச அளவிலான பிரச்சாரமும் காரணமாக இருக்கலாம். சவூதி ஆட்சியாளர்கள் எவ்வளவுதான் ஊழல் பெருச்சாளிகளாக இருந்தபோதும் அவர்களைக் குறிவைக்கும் தாக்குதல்களை பின்லாடன் ஆதரிக்கவில்லை என்றும் தெரியவருகின்றது. இருப்பினும், சவூதி அரசாங்கம் அல்-கைதாவை அடக்குவதில் தீவிரம் காட்டுகிறது. (பார்க்க: அறிக்கை 17- ஜிகாத் என்ற விடுதலைப் போராட்டம்).

"சவூதி அரசாங்கம் பயங்கரவாதத்தை அடக்குவதில் தீவிரம் காட்டவில்லை. றியாத் குண்டுவெடிப்பைத் தடுக்கத் தகுந்த பாதுகாப்பு கொடுக்கவில்லை" என்று அமெரிக்க அரசு அறிவித்தது. இந்தக்கூற்று நகைப்பிற்கிடமானது. ஏனெனில் உலகில் சவூதி அரேபியாவிற்கு நிகரான சர்வாதிகார ஆட்சியை காண்பதரிது. அங்கே அரசியல் நிர்ணயச்சட்டம் எதுவும் கிடையாது. மன்னர் சொல்வதுதான் சட்டம். அப்படியான நிலையில் அரசுக்கு எதிராகக் கதைப்பதற்குக் கூட யாரும் துணியமாட்டார்கள். மேலும் றியாத் தாக்குதலுக்கு இலக்கான வினெல் நிறுவனம் சவூதி அரசின் முழுப்பாதுகாப்பையும் பொறுப்பெடுத்திருந்தது. இப்போது யார் யாரைப் பாதுகாக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

ஆப்கானிஸ்தான் போரின் பின்னர் அல்-கைதாவை அடக்கிவிட்டோம் என்று அமெரிக்கா தம்பட்டம் அடித்த பிறகு இந்தத் தாக்குதல்கள் நடந்திருப்பது, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எவ்வளவு தூரம் வெற்றியளிக்கும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அண்மையில் முடிந்த ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போர் அந்தப் பிராந்தியத்தில் எதிர்விளைவுகளை உண்டாக்குமென்பது, மத்தியகிழக்கு அரசியலை அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். அமெரிக்கப் பத்திரிகைகளில் கூட இது பற்றி விமர்சனக் கட்டுரைகள் வந்திருந்த போதும், சாதாரண அமெரிக்கர்கள் தம் நாட்டுப் பத்திரிகைகள் கூடவா வாசிப்பதில்லை எனப் பலர் வினவுமளவிற்கு நிலைமை இருக்கிறது. உண்மையில் தன்நாட்டு மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அமெரிக்க அரசின் வெளிநாட்டு அரசியல் போக்கு இன்னமும் மாறவில்லை. சாதாரண அரபுமக்கள் அமெரிக்க முதலாளித்துவத்தை அல்ல அதன் வெளிவிவகாரக் கொள்கைகளையே எதிர்க்கின்றனர்.

இருப்பினும் அமெரிக்க அரசின் வெளிவிவகாரக் கொள்கையும் முதலாளித்துவப் பொருளாதாரமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கமுடியாதவை என்பது மத்திய கிழக்கு அரபுக்களுக்கு புரிய இன்னும் சிறிது காலம் எடுக்கலாம். ஆனால், சித்தாந்த ரீதியாகச் சீரமைக்கப்படாத தன்னெழுச்சியான எதிர்ப்பியக்கங்கள் வளர்ந்து வருகின்றன. அவைகள் "பேசும் மொழி" இஸ்லாமாக இருப்பதனால் பிறருக்கு இதைப்புரிந்து கொள்ள முடியாதிருக்கலாம். ஏகாதிபத்தியத்திற்குச் சேவை செய்யும் அரபு நாடுகளின் அரசாங்கங்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக எல்லாவகையான எதிர்ப்பையும் முறியடித்த பின்னர், மக்களுக்குத் தனது எதிர்ப்பை காட்ட இருக்கும் ஒரே வழி மதம் மட்டும்தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உள்ளூர் சந்தைகளில் வந்து குவியும் மேலைத்தேச நுகர்பொருட்களின் தாக்கம் உருவாக்கும் எதிர்விளைவுகள் அளவிடமுடியாதவை. உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் வீழ்ச்சி அதனைச் சார்ந்திருக்கும் மக்களின் வருமானத்தைப் பாதித்து வறுமைக்குத் தள்ளிவிடுகின்றது. மேலும் உள்நாடு உற்பத்திகள் அந்தப்பிரதேச மக்களின் கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்தவை. இதற்கு மாறாக மேற்கத்தைய பாவனைப் பொருட்கள் கலாச்சாரச் சீரழிவை உருவாக்குகின்றன. குறிப்பாக, அமெரிக்கா தனது உற்பத்திப் பொருட்களின் சந்தைக்காக பிறநாட்டுக் கலாச்சாரங்களில் ஆதிக்கம் செலுத்துவதைக் காட்டித்தான், ஈரானிய மத அடிப்படைவாதத் தலைவர் கொமெய்னி "அமெரிக்கா பெரிய சாத்தான்" என்று கூறினார். அதாவது சாத்தான் மக்களின் மனதை மயக்கி மறைமுகமாக ஆதிக்கம் செலுத்துகிறது.

இஸ்லாமிய ஆயுதபாணி இயக்கங்கள் மோசமடையும் சமூகப் பிரச்சினைகளை தமது கண்ணோட்டத்தில் பார்க்கின்றன. வறுமையை ஒழிக்க, அந்நியக் கலாச்சார ஆதிக்கத்தைத் தடுக்க முழு முஸ்லீம்களினதும் தேசியவிடுதலைப் போராட்டமே சரியான பாதை என்று போதிக்கின்றன. இதனால் இஸ்லாம் மூலம் தமக்கு விமோசனம் கிடைக்கும் என்று நம்பும் குறிப்பாக வேலையற்ற, வறிய இளைஞர்கள் தீவிரவாத அரசியலால் கவரப்படுவதில் வியப்பில்லை. மொரோக்கோவிலுள்ள கஸாபிளாங்கோவில் நடந்த தாக்குதலைச் செய்தவர்கள் அனைவரும் மாநகர சேரிப்பகுதிகளிலிருந்து வந்த வறிய இளைஞர்கள் என்பதை அரசே தெரிவித்தது.

அடிப்படை வசதிகள் இன்மை, வேலைவாய்ப்பு இன்மை, வறுமை என்பனவே பயங்கரவாதிகளை உருவாக்கும் விளைநிலங்கள். அதனால் பயங்கரவாதத்திற்கெதிராக போர் புரிபவர்கள் முதலில் இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்கவேண்டும் என இதுவரை பலர் கருத்துக் கூறியுள்ளனர். பிரான்ஸில் நடந்த உலகப் பணக்கார நாடுகளின் G 8 மாநாட்டில் அறிக்கை சமர்ப்பித்த சமூக ஆய்வு நிறுவனமொன்று உலகில் பல உள்நாட்டு யுத்தங்களுக்குக் காரணம் இனங்களுக்கு அல்லது மதங்களுக்கு இடையிலான மோதலல்ல, மாறாக வறுமைதான் அடிப்படையென்று தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை பல மேலைத்தேய (ஆளும் வர்க்க சார்பு) அறிஞர்களின் கருத்துகளை நிராகரிக்கின்றது. பல்வேறு இனங்கள், மதங்கள் தமது கலாச்சார ஆதிக்கத்தை நிலைநாட்ட ஒன்றோடொன்று மோதுகின்றன. " கலாச்சாரங்களின் மோதல்" (?) அல்லது ஜனநாயகமின்மை என்பவையே இன்றைய யுத்தஙகளுக்குக் காரணமென்பது மேற்கத்தைய புத்திஜீவிகள் எம்மீது திணிக்க விரும்பும் கருத்து.

"சவூதி அரேபியா ஜனநாயக நாடானால், அவர்கள் எம்முடன் ஒத்துழைக்கமாட்டார்கள்." என்று வெளிப்படையாகவே கூறினார் அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர். பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு அரசாங்கத்திற்கு ஆயுத உதவி செய்வது எந்த வகை ஜனநாயகம் என்று தெரியவில்லை. ஈரானில் இவ்வாறான போக்கு கடைசியில் இஸ்லாமியப் புரட்சிக்கு வித்திட்டது. சவூதி அரேபியாவில் அப்படியொரு நிலைவந்தால் அந்நாட்டு அரசியற் தலைமையை எதிரியாகக் காட்டிவிட்டு, அமெரிக்க இராணுவம் நேரடியாகத் தலையிடும். பனாமா, ஈராக் எனத் தொடரும் வரிசையில், நாளை சவூதியும் இணையலாம்.

Video: Poverty exists in Saudi Arabia too

_____________________________________________________________________________________

அல் கைதா தொடர்பான முன்னைய பதிவுகள்:
1.அல் கைதா என்ற ஆவி
2. ஜிகாத் என்ற விடுதலைப் போராட்டம்
_____________________________________________________________________________________