Sunday, May 31, 2009

பாரிஸில் கலைச்செல்வனின் 4ம் ஆண்டு நினைவுக்கூட்டம் - தொகுப்பு


தோழர் கலைச்செல்வனின் 4ம் ஆண்டு நினைவுக்கூட்டம் 10.05.2009 ஞாயிற்றுக்கிழமை பாரிஸில் நடைபெற்றது. இலண்டனில் இருந்து அரசியல் இலக்கிய விமர்சகர் மு. நித்தியானந்தன் அவர்களும், அரசியல் ஆய்வாளர் வி. சிவலிங்கம் அவர்களும், தற்சமயம் பிரான்ஸை மீண்டும் புகலிடமாகக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர் காமினி வியாங்கொட அவர்களும் விசேட பேச்சாளர்களாக பங்குகொண்டிருந்தனர்.

நண்பகல் 12.00 மணியளவில் இக்கூட்டத்தினை லக்ஷ்மி ஆரம்பித்து வைத்தார். இலங்கையின் யுத்தசூழலில் இன்று தங்கள் உயிர்களைக் காவுகொடுத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் மெளனஅஞ்சலி செலுத்தி இக்கூட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கூட்டத்தினை ஆரம்பித்துப் பேசுகையில், நண்பர், தோழர் கலைச்செல்வன் பேசிய, வாழ்ந்த, இன்னும் தொடர்ந்து செயற்பட நினைத்திருக்கக்கூடிய சமூக அக்கறை சார்ந்த விடயங்களைப் பற்றிப் பேசும் ஒரு நிகழ்வாக இது அமையும் என்று நம்புவதாக குறிப்பிட்டு, சித்தார்த்தனின் ‘கடவுளர்களின் நகரம்’ என்னும் இக்கணத்துக்குப் பொருத்தமான கவிதையினைப் படித்தார்.

கடவுளர்களின் நகரங்களில் வாழுதல்

எல்லாப்பாதைகளும் திருப்பங்களில் முடிகின்றன
ஒப்பாரிகளும் விசும்பல்களும்
ஓலங்களினாலுமான நகரத்தில்
வெறும் பிரார்த்தனைகளுடன் வாழுகின்றோம்

எல்லாப் பிரார்த்தனைகளும் கடவுளருக்கானதில்லை
எல்லாக்கடவுளர்களும் சனங்களுக்கானவையுமல்ல
இருந்தபோதும்
பிரார்த்தனைகளால் நிறைகிறது நகரம்
கடவுளர்கள்
மகா காலங்களினது அற்பத்தனங்களிலிருந்து
வந்துவிடுகின்றனர் நகரங்களுக்கு

மதுவருந்தி போதையில் மிதக்கும் கடவுள்கள்
கொலைகளின் சாகசங்களை பேசும் கடவுள்கள்
சித்திரைவதைக் கூடங்களில்
குதவழி முட்கம்பி சொருகும் கடவுள்கள்
தெருக்களில்
உடைகளைந்து வெடிகுண்டு தேடும் கடவுள்கள்

அடையாள அட்டைகளைத் தொலைத்தவனின் மனமும்
மறந்துபோய் வீட்டில் விட்டு வந்தவனின் மனமும்
தெருக்களில் கதருகின்றன

கடவுளரின் அற்பத்தனங்களுக்கிடையில்
வெறும் பிரார்த்தனைகளுடன் இரவுகளை உறங்குகின்றோம்
பகல்களை ஓட்டுகிறோம்

கடவுளர் அலையும் காலத்தில்
இரவில் புணர்ச்சிக்கலையும் நாய்களினது
காலடி ஓசைகளும் கடவுளர்களுடையவைதான்

ஒப்பாரிகளும் விசும்பல்களும்
ஓலங்களினாலுமான நகரத்தில்
சனங்களின் பிரார்த்தனை
தெருவில் சுடப்படடு இறந்தவனின்
இறுதி மன்றாடலாயும் கதறலாயும்
நிர்க்கதியாய் அலைகிறது

இத்துடன் தனது ஆரம்ப உரையை முடித்துக்கொண்டார்.

நிகழ்வின் முதலாவது அமர்வாக மு. நித்தியானந்தன் அவர்கள் ‘துன்பம் சூழும் நேரம்: இலங்கை - இந்திய, உறவுகளும் ஈழத்தமிழரும்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்வை எம். பெளஸர் தலைமை வகித்து நெறிப்படுத்தினார். பெளஸர் ‘மூன்றாவது மனிதன்’ சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தவர். இப்போது இங்கிலாந்தில் புகலிடம் தேடியுள்ளார். தற்சமயம் ‘எதுவரை’ சஞ்சிகையின் நிர்வாக ஆசிரியராக இருக்கின்றார். இதனை ஒழுங்கு செய்த உயிர்நிழல் சஞ்சிகை, புகலி இணையத்தளம் ஆகியவற்றுக்கு நன்றி கூறி பெளஸர் தனது பேச்சைத் தொடங்கினார். மேலும் பெளஸர் பேசும்போது தோழர் கலைச்செல்வனுடன் தனக்கு நேரடித் தொடர்புகள் இருந்ததில்லை என்றும் அவருடைய செயற்பாடுகளின் மூலமே தனக்கு அவரை அறியக் கிடைத்தாகவும், மேலும் புகலிடத்தில் மாற்றுக் கருத்து செயற்பாடுகளில் பாரிஸ் ஒரு முக்கிய தளமாக இயங்கி வந்திருக்கின்றது, அதன் பங்குதாரர்களில் ஒருவராகவும் ஆளுமையுள்ளவராகவும் கலைச்செல்வன் திகழ்ந்திருக்கின்றார் என்றும் கலைச்செல்வன் இல்லாத வெறுமையும் இழப்பும் நமது செயற்பாடுகளைத் தேக்கத்துக்குக் கொண்டு வந்துள்ளதைப் பரவலாக உணர முடிகின்றது. அத்தேக்கத்தை மாற்றுவதற்கான புதிய சிந்தனை முறைகளுக்கும் புதிய செயற்பாடுகளுக்கும் புதிய வழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவருடைய இழப்பை இருப்பாக மாற்றுகின்ற ஒரு பணியைச் செய்வோம் என்று கேட்டுக் கொண்டார். மு. நித்தியானந்தன் அவர்களை சபைக்கு அறிமுகம் செய்த பெளஸர் இவர் இன்றைய ஆளுமைகளின் முக்கியமானவர்களில் ஒருவரென்றும் அவர் அண்மைக் காலங்களில் எழுதுவது குறைந்துள்ளமை ஒரு குறைபாடு என்பதையும் குறிப்பிட்டார்.

மு. நித்தியானந்தன் அவர்கள் இலங்கை-இந்திய உறவு என்பது இந்திய வம்சாவளியினரை இலங்கைக்கு அழைந்து வந்த போதில் முக்கியத்துவம் பெறுகின்றதென்று குறிப்பிட்டார். ஒவ்வொரு தடவையும் இந்திய வம்சாவளியினரான மலையகத் தமிழர் தொடர்பான நிலைப்பாடுகள் மாற்றமடைந்து வந்திருக்கின்றன என்றும் முதலில் அவர்கள் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டபோது அவர்கள் இலங்கைக் குடிமக்களைப் போல் நடத்தப்பட வேண்டும் என்று இந்திய அரசு கருதியது. ஆனால் இலங்கை அரசு அவர்களை வந்தேறு குடிகளாகத்தான் நடத்தியது. இதற்கான போராட்டம் கிட்டத்தட்ட 20 வருட காலங்கள் நீடித்தது. அவர்களுக்கான விசேட கடவுச்சீட்டு முறையைக் கொண்டு வந்தார்கள்.

தமிழர்களுக்கான தடுப்பு முகாம்களை நாங்கள் இப்போதுதான் காண்கிறோம் என்றும் தான் சிறுபிள்ளையாக இருந்தபோதே இந்தியத் தமிழர்களுக்கான தடுப்பு முகாம் ஸ்லேவ் ஐலண்டில் திறந்து வைக்கப்பட்டு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தங்கும் உரிமைக்கான ஆறுமாத கால உத்தரவு முடிந்த பின்பு மேலதிகமாகத் தங்கியவர்கள் எந்தக் கேள்வியும் இன்றி இந்தத் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டார்கள என்றும் குறிப்பிட்டார்.

இப்போதுள்ள இலங்கை நிலவரத்தை எடுத்தால், இலங்கைக்கு நீண்டகாலமாக, வெளியுறவுக் கொள்கை என்று திட்டவட்டமாக எதுவும் இருக்கவில்லை என்றும் பிரித்தானியர்கள் விட்டுவிட்டுப் போன பிறகு அவர்கள் எந்தெந்த நாடுகளுடன் உறவுகளைப் பேணினார்களோ அவர்களுடனேயே தன் தொடர்புகளைப் பேணி வந்தது என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசுகையில், இப்போது மகிந்த ராஜபக்க்ஷதான் உள்நாட்டு அரசியற் கொள்கையிலும் வெளிநாட்டு ராஜதந்திர உறவுகளிலும் மிகவும் வித்தியாசமான நடைமுறைகளைக் கைக்கொண்டு வருகிறார் என்றும், ஏகாதிபத்திய வல்லரசுகள் எனப்படுகின்ற மேற்கு நாடுகள், அமெரிக்கா போன்றவற்றைப் புறந் தள்ளி, லிபியா, ஈரான், பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுடன் தனது உறவுகளைப் பேணுவதும் சீனக்குடியரசு வெளிப்படையாகவே இராணுவ உதவிகளைச் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது என்றும் குறிப்பிட்டார். இவற்றைப் படிப்படியாகப் பார்த்தால் ஈழத்தமிழர்கள் பலமற்றவர்களாக உணரப்பட்ட தருணம் இதுதான் என்றும் லங்கா சுதந்திரக்கட்சி ஆட்சிபீடங்களில் இருந்த காலங்கள் ஒவ்வொன்றிலும் நிறையவே மாற்றங்கள் நடந்து வந்துள்ளன என்றும் ஆனால் மொழிக்கொள்கை தொடர்பான அவர்களுடைய நிலைப்பாடு மிகவும் பாரதுரமானதாக இருந்து வந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

முற்போக்குச் சிந்தனை கொண்ட தமிழர்கள் முற்போக்குச் சிங்கள மக்களுடன் இணைந்து சிறுபான்மையினரின் உரிமைகளுக்குப் போராட வேண்டும் என்று நினைத்தார்கள் என்றும் யாழ்ப்பாணத் தமிழர்கள் தங்களை எப்போதும் சிறுபான்மையினராகக் கருதியதில்லை என்றும் இந்த விடுதலை அமைப்புகளின் செயற்பாடுகள் சிங்கள மக்கள் மத்தியில் தீவிரமான துவேசத்தை வளர்க்கும் செயலாகத்தான் இருந்திருக்கின்றன என்றும் எதையும் தங்களால் கையாள முடியும் என்ற இறுமாப்பில் இருந்த விடுதலைப்புலிகள்தான் மகிந்தவை ஆட்சிபீடத்திற்குக் கொண்டு வந்தார்கள் என்றும் இறுதியில் அவர்களால் அது முடியாமற்போனது எனவும் கூறினார்.

அதிகாரப் பரவலாக்கத்தை வலியுறுத்தும் அரசியலமைப்புச் சட்ட உருவாக்கத்தில் நாங்களும் எங்கள் பங்கினைச் செலுத்துவதன்மூலம் எங்கள் உரிமைகளை அனுபவிக்கப் போராடுவதுதான் ஒரே வழி என்றும் எத்தனையோ இழப்புகளையும் போராட்டங்களையும் சந்தித்த நாம் இனியும் மனம் சோராது எங்கள் உரிமைகளைப் பெறுவதற்கான முயற்சியில் தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என்று இந்தத் துன்பம் சூழும்நேரத்தில் கேட்டுக் கொண்டு தனதுரையை நிறைவு செய்தார்.

மு. நித்தியானந்தன் அவர்களின் உரையை அடுத்து இந்த நிகழ்வுக்கு அழைக்கப்படடிருந்த தோழர் நாகார்ஜூனன் அவர்கள் வரமுடியாத காரணத்தினால் அவருடைய உரை லக்ஷ்மியினால் வாசிக்கப்பட்டது. (இக்கட்டுரை புகலியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது) நாகார்ஜூனன் இலண்டனில் வசிக்கின்றார். அவர் தற்போது சர்வதேச மன்னிப்புச் சபையில் பணிபுரிகிறார். இவர் சிலகாலம் பிபிசி தமிழோசையில் பணிபுரிந்திருக்கின்றார். இவர் நவீனத்துவம் பின்-நவீனத்துவம் தொடர்பான கதையாடல்களில் பரவலாக பங்கு கொண்டிருந்திருக்கின்றார்.

மதிய போசனத்தைத் தொடர்ந்து ச. தில்லைநடேசன் யாழ்ப்பாணத்துச் சமூகக் கட்டமைப்பு: பேச மறந்தவையும் பேச மறுத்தவையும் என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்வுக்கு டென்மார்க்கில் இருந்து வருகை தந்திருந்த இனி சஞ்சிகை ஆசிரியர் கரவைதாசன் தலைமை வகித்து நெறிப்படுத்தினார். இவர் சமூக அரசியற் செயற்பாட்டாளர். கன்பொல்லை சாதியப்போராட்டங்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டி வைத்து அவ்வப்போது அவை குறித்த சஞ்சிகைகளிலும் இணையத்தளங்களிலும் எழுதி வருபவர். இவர் தனதுரையில் கலைச்செல்வனுக்கும் தனக்குமான உறவு 96களில் ஆரம்பித்ததென்றும் தனது செயற்பாடுகளுக்கு கலைச்செல்வன் உந்துசக்தியாக இருந்திருக்கின்றாரென்றும் குறிப்பிட்டார். தில்லைநடேசனை அறிமுகம் செய்து பேசுகையில் இவர் கலைச்செல்வனுடன் ஆரம்ப காலங்களில் இணைந்து வேலை செய்வர்களில் ஒருவர் என்றும் நாட்டுக்கூத்துக்கலையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்றும் அவை குறித்த ஆய்வுக் கட்டுரைகள் எழுதி இருக்கின்றார் எனவும் இவர் புலம்பெயர் கலை இலக்கிய சூழலில் நன்கு அறியப்பட்டவரென்றும் குறிப்பிட்டார்.
தில்லைநடேசன் தனதுரையில், சைவமும் தமிழும் என்னும் கருத்துருவாக்கம் இடைநடுவில் கட்டப்பட்ட விடயம் என்றும் இதற்கு ஆறுமுகநாவலரின் பங்களிப்பு முக்கியமானதென்றும் குறிப்பிட்டார். விளிம்புநிலை மக்களை கலாச்சாரரீதியாக கீழ்மட்டத்தில் வைப்பதற்கான இந்த சைவம் தந்தது என்றும் கந்தபுராணக் கலாச்சாரம்தான் இதைப் பேணிப் பாதுகாத்தது என்றும் கந்தபுராணக் கலாச்சாரம் என்பது சாதியக்கலாச்சாரம் என்றும் குறிப்பிட்டார்.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலகட்டங்களில் சாதியமைப்புகள் எப்படி இருந்தன என்றும் அவை பின்னர் எப்படியாகின என்றும் வரலாற்றுத் தகவல்களுடன் பல விடயங்களைத் தொட்டுச் சென்றார். யாழ்ப்பாணச் சமூகத்தில் தேநீர்க்கடைப் பிரவேசம், கோயில் நுழைவுப் போராட்டங்கள் என்பன மூலம் அசைவுகள் ஏற்பட்டிருக்கின்றன என்றும் குறிப்பிட்டார். இன்னொருபுறம் சிறுதெய்வக் கோயில்களும் படிப்படியாக ஆகமவிதிக்குட்பட்ட கோயில்களாக மாற்றப்பட்டுக்கொண்டு வருகின்றன. கலந்துரையாடலின் முடிவில் ஏற்கனவே இருக்கின்ற ஆதாரங்களை விட்டு சொல்லப்படாத வரலாறுகளின் மூலங்களைத் தேடிச் செல்லவேண்டும் என்ற கருத்தை சுசீந்திரன் முன்வைத்தபோது தானும் அதைத்தான் செய்யவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தில்லை நடேசன் கருத்துத் தெரிவித்தார்.

தில்லைநடேசன் அவர்களின் பேச்சை அடுத்து காமினி வியாங்கொட ஊடகமும் ஜனநாயகமும் என்ற தலைப்பின்கீழ் ஆங்கிலத்தில் உரையாற்றினார். மு. நித்தியானந்தன் அவர்கள் இதனைத் தமிழில் மொழிபெயர்த்தார்.
காமினி வியாங்கொட பொருளியல் ஆசிரியராக ஏறத்தாளப் 10 வருடங்கள் பணிபுரிந்தபின் அரசியற் காரணங்களினால் புகலிடம் தேடி எண்பதுகளின் முற்பகுதியில் பிரான்ஸ் நாட்டில் வந்து தங்கியிருந்தவர். இவர் தொடர்ந்தது எழுத்தியக்கத்தில் இருக்கும் ஒரு பத்திரிகையாளர். பத்திரிகைகள் சஞ்சிகைகளுக்கு எழுதிக் கொண்டிருக்கின்ற அதேவேளை 22 நாவல்களை சிங்கள மொழிக்கு மாற்றம் செய்திருக்கின்றார். இவற்றுள் சிமோன் திபோவுவாவின் டுந ளுயபெ னுநள யுரவசநள நாவலும் அடங்கும். இவருடைய மொழிபெயர்ப்புகளில் பெரும்பாலானவை லத்தின் அமெரிக்க நாவல்களாகும். தற்பொழுது ஒரு நாவல் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருக்கின்றார்.

இவர் பிரான்ஸில் இருந்து 2007ம் ஆண்டு திரும்பவும் இலங்கைக்குச் சென்றார். அங்கிருந்த காலப்பகுதிகளில் ஒரு தனியார் வானொலி நிலையத்தின் நிர்வாகியாக இருந்திருக்கின்றார். அத்துடன் லங்கா டிசென்ற் என்கின்ற இணையத்தளத்தின் நிர்வாகியாகவும் செயற்பட்டுக் கொண்டிருந்தார். லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்குப் பின் அங்கு நீதியுடன் செற்படுவதற்கான தளம் வரும்வரையில் தொடர்ந்து இயங்குவதில்லை என முடிவெடுத்து அதற்கான காலத்திற்காகக் காத்திருக்கின்றார். தற்போது மீண்டும் பிரான்ஸில் வந்து தங்கியுள்ளார்.

காமினி வியாங்கொட அவர்கள் தான் தமிழ் மக்களின் முன்பு பேசும்பொழுது ஒருவித அசெளகரியத்தை உணர்வதாகவும் தமிழ்மொழியில் பேசமுடியாமல் இருப்பது குறித்தும் இந்தச் சங்கடம் இன்னும் ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகளில் ஒருவனாக இருக்கிறேன் என்பதும், எனவே இரண்டு மொழிகளும் அல்லாத ஒரு பொதுமொழியான ஆங்கிலத்தில் பேசுகிறேன் என்று குறிப்பிட்டார்.

அவர் பேசுகையில், "ஊடகம் என்பது எவ்வாறு இருக்கின்றது. உலகின் எந்தப் பகுதியிலும் ஜனநாயகமாக இயங்குவதற்கு அடிப்படையானது ஊடகமாகும். ஊடகம்பற்றிய மிகப் பிரபலமான பொன்மொழி ஒன்று உண்டு. அதாவது, «நாங்கள் செய்திகளைத் தருகிறோம். நீங்கள் தீர்மானியுங்கள்.» இதுவே ஐரோப்பிய ஊடகத்தினதும் ஜனநாயகத்தினதும் அடிப்படை விடயமாக இருக்கின்றது. இந்த நிலைமைகளுக்காகவே லசந்த படுகொலை செய்யப்பட்டதும் அது தொடர்பான அச்சங்களும் அங்கு அரசாங்கத்தை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களிற்கு எதுவும் எப்போதும் நேரக்கூடும் என்ற அச்சம் பத்திரிகையாளர்களுக்கு ஏற்பட்டது. இதுதான் இன்றைய இலங்கை. இது ஒருவேளை மாறக்கூடும். மாறவேண்டும்" என்று குறிப்பிட்டுப் பேசிய அவர் இலங்கையில் உள்ள பொருளாதாரக் கட்டமைப்புக்கும் அரசியல் கட்டுமானத்திற்கும் இடையிலான பொருத்தப்பாடின்மை பற்றியும் பேசினார்.

இவருடைய உரையைத் தொடர்ந்து ஏற்பட்ட விவாதங்களில் அவர் அரசு இழைக்கும் அநீதிகளை மட்டும் பொருட்படுத்துபவராக இருக்கிறார் என்றும் தமிழ் மக்கள் மத்தியில் அநீதிக்கு எதிராகக் குரலெழுப்புபவர்கள் இருமுனைத் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டி இருப்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை என்றும் மேலும் லசந்தவின் படுகொலை அரசு செய்யவில்லை என்று நம்புவதாகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. தமிழ்ப்பகுதிகளில் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களுக்கெதிராக இவர்கள் எந்தவிதமான போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை என்றும் காமினியின்மீது குற்றம் சாட்டினார்கள். அவர் தான் ஒரு பத்திரிகையாளனாகத் தன்னளவில் தான் சரியாகத்தான் செயற்பட்டிருக்கிறேன் என்று பதிலளித்தார்.
காமினி வியாங்கொடவினுடனான விவாதங்களின்போது ஏற்பட்ட ஒரு எதிர்மனநிலை அவருக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்குமாயின் அதற்காக நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம் என்று அந்தோனிப்பிள்ளை அவர்களும் சுசீந்திரன் அவர்களும் தெரிவித்தனர்.

காமினி வியங்கொடவின் பேச்சைத் தொடர்ந்த இடைவேளையின் பின், 'கோணல்களும் நேர்கோடுகளும் : இலங்கை இனப் பிரச்சினை' என்னும் தலைப்பில் கடந்து வந்த பாதைகளில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் இனிமேல் எங்கள் முன்னெடுப்புகள் எப்படி அமையலாம் என்பதைக் கேள்விகளாக முன்வைத்தார் வி. சிவலிங்கம் அவர்கள். இந்நிகழ்வுக்கு கலையரசன் தலைமை தாங்கினார். கலையரசன் நெதர்லாந்தில் இருந்து வந்து கலந்து கொண்டார். இவர் சர்வதேச அரசியல் பற்றித் தொடர்ந்து எழுதி வருபவர். இவர் கலையகம் என்ற வலைப்பக்கம் ஆரம்பித்து நடத்தி வருகின்றார். இடைவிடாத, சோராத எழுத்தியக்கத்தில் இருப்பவர்.

இவர் சிவலிங்கம் அவர்களை அறிமுகப்படுத்துகையில், அவர் மனிதஉரிமை குறித்த பிரக்ஞையுடன் தொடர்ந்து செயற்பட்டு வருபவர் என்றும் அவர் சிறந்த அரசியல் ஆய்வாளரென்று குறிப்பிட்டுக் காட்டி, அவருடைய அரசியல் ஆய்வுகளுக்காக பாராட்டுகளைப் பெறும் அதேவேளை சர்ச்சைகளுக்கும் ஆளாகிவருபவர். ஆனால் எந்தச் சந்தர்ப்பத்திலும் தான் உண்மையென்று நம்புவதை எந்தத் தயக்கமும் இன்றித் துணிந்து சொல்லும் ஆளுமை மிக்கவர். என்று குறிப்பிட்டார்.

ஊடகவியலாளறாகவும், அரசியல் செயற்பாட்டாளராகவும் அறியப்படட கு.உதயகுமார் அவர்கள் இந்நிகழ்வை நெறிப்படுத்தினார்.

வி. சிவலிங்கம் அவர்கள் பேசுகையில் ஏற்கனவே நடைபெற்ற அமர்வுகளின் தொடர்ச்சியாகவே தன்னுரை அமைகிறது எனவும் இத் தலைப்புகள் கலைச்செல்வன் பேசி இருந்திருக்கக்கூடிய, விவாதித்திருக்கக்கூடிய தலைப்புகளாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்றும் அவை மிகவும் பொருத்தப்பாடான தலைப்புகளாகவே அமைந்துள்ளன என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் இன்று மிகவும் நெருக்கடியான சூழலில் நாங்கள் இருந்துகொண்டிருப்பதாகவும் உண்மையைப் பேசுவதனால் உயிராபத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழல், கூட்டங்களிற்குப் போகமுடியாது, ஊர்வலங்களில் பங்குகொள்ளமுடியாது போன்ற இக்கட்டான சூழலில் நாங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டு ஆரம்பித்தார்.
மேலும் அவர் பேசுகையில், "ஏற்கனவே பல வருடங்களாக நாங்கள் பேசிக்கொண்டு வந்தவைகள் இன்று யதார்த்தமாகிக் கொண்டு வருகின்ற ஒரு நிலையில் வந்து நிற்கிறோம். அதனை நம்புவதற்கு மறுத்தவர்கள் அந்த யதார்த்தத்தை அனுமதிக்க மறுக்கும்போது ஏற்கனவே இப்படியான கருத்துக்களைக் கொண்டிருந்த நபர்களின்மீதே அவர்களின் பார்வை திரும்பும் சாத்தியங்கள்தான் அதிகம் உண்டு. மதப் பிரசங்கங்கள்போல யாருடைய மனதையும் நோகடிக்காமல் இந்த விடயங்களைப் பேசமுடியாது. அத்துடன் எதை நம்பி நாங்கள் செயற்பட்டோமோ அதனைச் செயலாக்க வேண்டிய காலகட்டமும் நெருங்கி இருக்கின்றது. இது அரசியல் வியாக்கியானம் செய்யும் காலகட்டமல்ல. எங்களிற்கு முன்னே நிறையச் சவால்கள் இருக்கின்றன. இந்தச் சவால்களுக்கு நாங்கள் எவ்வாறு முகம் கொடுக்கப் போகின்றோம்? என்பதைப் பார்க்கவேண்டும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசுகையில் பெளத்த மேலாதிக்கவாதம் முதலாளித்துவப் பொருளாதாரத்துடன் ஒட்ட முடியாமல் இருப்பதற்கான தூய்மைவாதம் பற்றியும் இன்றைய புதிய முதலாளிகள் திறந்த பொருளாதாரத்தினால் உருவாக்கப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டு 30 வருடங்களிற்கு முதல் இருந்த பொருளாதாரக் கொள்கையும் இன்றைய பொருளாதாரக் கொள்கையும் எப்படி வித்தியாசப்பட்டிருக்கின்றன என்பதையும் எடுத்துக்காட்டிப் பேசினார்.

கொழும்பை மையமாக வைத்திருந்த அதிகார வர்க்கம் இப்போது நாட்டுப்புறச் சிங்கள முதலாளிகளை நோக்கிச் சென்றுள்ளது எவ்வாறு என்பதையும் குறிப்பிட்டார்.

இறுதியாக, ஷோபாசக்தியின் ‘இப்போது உண்மையை எழுத வேண்டும். அதாவது துயரை எழுத வேண்டும். ஏனென்றால் நம் காலத்தில் உண்மை என்பது துயராய் இருக்கிறது» என்னும் வரிகளுடன் தனதுரையை நிறைவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து 'இன்றைய யுத்த சூழலும் நாம் எதிர்நோக்கும் சவால்களும்' என்ற தலைப்பில் திறந்த விவாதம் நடைபெற்றது. இவ் விவாத அரங்கில் தேசியவாதக் கருத்தியல்களின் ஆபத்து, ஐக்கிய இலங்கையின்கீழ் சிறுபான்மையினர் சமத்துவத்துடன் வாழ்தல், மற்றும் சிறுபான்மையினரின் கூட்டு வேலைத்திட்டம், பெரும்பான்மையினத்தின் முற்போக்கு சக்திகளுடன் இணைந்து செயற்பட வேண்டிய காலத்தின் கட்டாயம் என்பன குறித்து காத்திரமான விவாதம் நடைபெற்றது.

விவாதங்களில், தேவதாசன், கரவைதாசன், ஆறுமுகம், வி.ரி. இளங்கோவன், மனோ, யோகரட்ணம், சுகன், பெளஸர், கலையரசன், பாலகிருஷ்ணன், புஸ்பராணி, ஜெயா பத்மநாதன், மோகன், உதயகுமார், சுசீந்திரன், அந்தோனிப்பிள்ளை, கண்ணன், ராஜன் ஆகியோர் பங்கு கொண்டனர். எழுபது பேர்வரை கலந்துகொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.

இக்கூட்டம் சிறப்பாக நடைபெறுவதற்கு மண்டபத்தையும் உணவு ஏற்பாடுகளையும் மலரும் ராஜனும் ஏற்பாடு செய்திருந்தனர். ஏனைய ஒழுங்குகளுக்கு கிருபன், அனந்தன், நாதன், மீனாள், தமரா, அருணா, அருண், அகில், அருந்தினா, சசி, வனஜா, குணரட்ணராஜா ஆகியோர் தங்கள் பங்களிப்பை வழங்கினார்கள்.


(நன்றி:புகலி)

Tuesday, May 26, 2009

அகில ஆப்பிரிக்க ஆட்சிக்கவிழ்ப்பு நிறுவனம் (LTD)

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 7
மொரிஷியஸ் தீவு பற்றி தமிழர்கள் அறிந்திருக்கும் அளவிற்கு, அதைவிட பன்மடங்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த "கொமொரோ" (Comoros) தீவுகள் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. கிழக்கு ஆப்பிரிக்க கடலில், ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து மாபெரும் மடகஸ்கார் தீவை பிரிக்கும், மொசாம்பிக் நீரிணையின் மத்தியில் அமைந்துள்ள நான்கு சிறு தீவுகள் சேர்ந்து, கொமொரோஸ் குடியரசு உருவானது. உலக வரைபடத்தில் பூதக் கண்ணாடி வைத்துப் பார்க்க வேண்டிய குட்டி தேசம். பிரான்சின் நவ-காலனியக் கொள்கையின் கேலிச்சித்திரம். வெள்ளையின கூலிப்படைகளின் (இன்று: "தனியார் இராணுவம்") விளையாட்டு மைதானம். கற்பனைக்கெட்டாத திகில் கதைகள் பலவற்றைக் கொண்டது அந்த தேசத்தின் வரலாறு.

கொமோரோ தீவுகளை "இருண்ட ஆப்பிரிக்காவை" சேர்ந்த பகுதியாக கருதுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. நீண்ட காலமாகவே இந்து சமுத்திர வர்த்தகத்தில் ஈடுபட்ட அரேபிய வியாபாரிகள், கொமோரோ தீவுகளில் தங்கிச் செல்வது வழக்கம். அவர்கள் ஏற்கனவே அங்கே வசித்து வந்த, உள்ளூர் கறுப்பின, மலேய(அல்லது இந்தோனேசிய) மக்களுடன் கலந்திருக்க வாய்ப்புண்டு. அரேபியர்கள் இஸ்லாமிய மதத்தையும் தம்மோடு கொண்டு வர மறக்கவில்லை. இருப்பினும், 19 ம் நூற்றாண்டளவில் தென் ஈரான் நகரான ஷிராசில் இருந்து பெருமளவு அரேபியர்கள் நிரந்தரமாக குடியேறிய பின்னரே நவீன வரலாறு (மன்னராட்சிக் காலம்) ஆரம்பமாகியது. 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயருடன் போட்டி போட்டுக் கொண்டு இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்திய பிரான்சின் மேலாண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டி இருந்த நிர்ப்பந்தம், காலனிய காலகட்டத்தை கட்டியம் கூறியது.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், அனைத்து ஆப்பிரிக்க நாடுகளும் காலனிய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்று, ஐ.நா. மன்றம் கூறி வந்த போதிலும் பிரான்ஸ் அதற்கு செவி மடுக்கவில்லை. 1975 ம் ஆண்டு, அரை மனதுடன் கொமோரசிற்கு சுதந்திரம் வழங்கியது. அப்போது கூட, மயோத் (Mayotte) தீவு மக்கள் சர்வசன வாக்கெடுப்பில் பிரான்சுடன் சேர்ந்திருக்க விரும்புகிறார்கள், என்று காரணம் காட்டி, அந்த தீவை தனியாகப் பிரித்து தனது "கடல் கடந்த பிரதேசம்" ஆக்கியது. (இவ்வாண்டு மீண்டும் ஒரு தேர்தல் மூலம் பிரான்சின் மாகாணமாகியது.) சுதந்திர கொமோரோ குடியரசு மயோத் தீவுக்கு உரிமை கோரிய போதிலும், கேந்திர முக்கியத்துவம் காரணமாக பிரான்ஸ் விட்டுக் கொடுக்க மறுத்து வருகின்றது. மொசாம்பிக் நீரிணை ஊடான வர்த்தக கப்பல் போக்குவரத்தை கண்காணிப்பதும், (அல்லாவிட்டால் மடகஸ்காரை சுற்றிப் போக வேண்டும்), கட்டுப்படுத்துவதும் மயோத்தில் உள்ள பிரெஞ்சு தளங்களின் முக்கிய நோக்கம். அதைவிட, அந்தப் பிராந்தியத்தில் ஈரான் இலகுவாக (தொப்புள்கொடி உறவை காரணமாகக் காட்டி) ஊடுருவ முடியும் என்பதால், அதனை தடுக்கும் நோக்கமும் உள்ளது. கொமோரோ, சான்சிபார் (தான்சானியா) ஆகிய தீவுகளில் குறிப்பிடத்தக்க அளவு ஈரானிய வம்சாவழியினர் இன்றும் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மயோத் தீவு மக்கள், அரசியல் நிர்ணய சட்டப்படி பிரெஞ்சுப் பிரசைகள் என்பதால், அங்கே தனிநபர் வருமானம் அதிகம். இதனால் அயலில் இருக்கும் ஏழை நாடான கொமோரோவை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கள், மயோத் சென்று குழந்தைகளை பெற்றெடுக்க விரும்புகின்றனர். பிரெஞ்சு மண்ணில் பிறக்கும் குழந்தைக்கு பிரெஞ்சு பிரசாவுரிமை கிடைக்கும் என்பதற்காக, ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொள்ளும் பல கர்ப்பிணிப் பெண்கள் அகால மரணமடைகின்றனர். இதற்கிடையே 1997 ம் ஆண்டு, உலக வரலாற்றில் முன்னெப்போதும் நடக்காத அதிசயம் நிகழ்ந்தது. அதுவரை கொமோரோ குடியரசின் பகுதியாக இருந்த, "அஞ்சுவான் தீவு" தனி நாடாக பிரகடனம் செய்தது. அத்தோடு நில்லாமல், "மீண்டும் பிரெஞ்சுக் காலனியாக" மாற விருப்பம் தெரிவித்தது! உலகமயமாக்கப் பட்ட காலத்தில், பிரான்ஸ் இந்தக் கூத்தை எல்லாம் மெச்சும் நிலையில் இருக்கவில்லை. பிரான்சால் கைவிடப்பட்ட அஞ்சுவான் மீது, 2008 ம் ஆண்டு ஆப்பிரிக்க ஒன்றிய படைகள் படையெடுத்து, மீண்டும் கொமொரோசுடன் சேர்த்து விட்டன. இந்த நிகழ்வு, ஆப்பிரிக்காவில் ஐரோப்பிய காலனிய எஜமானர்களின் பிடி தளர்ந்து வருவதை எடுத்துக் காட்டுகின்றது.

கொமொரோஸ் குடியரசின் வரலாற்றில், 1975 ம் ஆண்டிலிருந்து 1995 ம் ஆண்டு வரையிலான காலகட்டம் குறிப்பிடத்தக்கது. இந்த இடைப்பட்ட காலத்தில், நவ-காலனிய மேலாண்மைக்காக பிரான்சால் பல முறை பந்தாடப்பட்டது. ஆனால் பிரான்ஸ் இதில் நேரடியாக சம்பந்தப்படவில்லை, அதற்குப் பதிலாக "சதிப்புரட்சி மன்னன்" பொப் டெநர்ட்(Bob Denard) தலைமையிலான கூலிப்படையை பயன்படுத்தியது. இயற்கையிலேயே கம்யூனிச எதிர்ப்புவாதியும், பணத்திற்காக எதையும் செய்யத்தயங்காத Bob Denard இன் ஒரேயொரு தொழில் ஆப்பிரிக்க நாடுகளின் ஆட்சிகளைக் கவிழ்ப்பது! கொங்கோ, பெனின், இவ்வாறு பல ஆப்பிரிக்க நாடுகளில் இடம்பெற்ற 20 க்கும் அதிகமான ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளில், Bob Denard இன் கூலிப்படையினர் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலும் பணத்திற்காகவே சண்டையிட்ட போதிலும், பிரெஞ்சு அரசின் விசுவாசமான அடியாளாக செயற்பட்டதையும் யாரும் மறுக்க முடியாது.

DGSE (Direction Générale de la Sécurité Extérieure) என்ற பிரெஞ்சு வெளிநாட்டு புலனாய்வுத் துறை (பிரெஞ்சு சி.ஐ.ஏ.), Bob Denard உடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது. இரண்டு முறை கொலைக் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது, அவனே இதனை தெரிவித்துள்ளான். தான் பிரெஞ்சு அரசின் உத்தரவின் பேரில் சதிப்புரட்சிகளில் ஈடுபட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளான். இந்த இரகசிய உறவை மெய்ப்பிப்பது போல, எதிர்த் தரப்பிற்கு வழக்கை வாபஸ் வாங்குமாறு மேலிடத்து நிர்ப்பந்தங்கள் வந்தன. Bob பின் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டது. 1989 ல் கொமொரோஸ் ஜனாதிபதி அஹ்மத் அப்தல்லாவை கொலை செய்த குற்றச்சாட்டு காரணமாகவே அவன் நீதிமரத்தில் ஆஜர் படுத்தப்பட்டான். இது பெரும்பாலும் உண்மையாக இருக்க சாத்தியமுண்டு. பொப் டெநர்ட் பத்து வருடங்களாக கொமோரோ தீவுகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தான். அவன் தலைமையிலான "சிறப்புப் பாதுகாப்புப் படை", தேசத்தை மட்டுமல்ல, ஜனாதிபதியையும் ஆட்டிப்படைத்தது. தனது தேசத்தை பணயம் வைத்திருந்த கூலிப்படையின் அதிகாரத்தை களைய முயன்ற போது தான், கொமொரோஸ் ஜனாதிபதி கொலை செய்யப்பட்டார்.

சில நேரம் வரலாற்றில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள், புனை கதைகளையும் மிஞ்சி விடும். 1975 ம் ஆண்டு ஒரு தலைப்பட்சமாக சுதந்திரப் பிரகடனம் செய்தது கொமொராஸ். நாட்டின் முதலாவது ஜனாதிபதியான அப்தல்லாவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக, பொப் டேனர்ட்டின் கூலிப்படையினர் தென் ஆப்பிரிக்காவில் இருந்து படகுகளில் வந்திறங்கினர். தமக்குப் பிடித்த அலி சொய்லியிடம் ஆட்சியை ஒப்படைத்தனர். அந்த சதிப்புரட்சிக்கு பிரான்சின் மறைமுக ஆதரவு இருந்ததாக நம்பப்படுகின்றது. மூன்று வருடங்களுக்குப் பின்னர் அலி சொய்லி தேசியப் பொருளாதாரத்தை பாதுகாக்க முற்பட்ட போது, மீண்டுமொரு சதிப்புரட்சி நிகழ்ந்தது. இம்முறையும் "அகில ஆப்பிரிக்க வெள்ளைக்கார தாதா" பொப் டெனார்ட், தனது அடியாட்படையுடன் வந்தான். அலி சொய்லியை கொன்று விட்டு, முன்னர் தன்னால் பதவியகற்றப்பட்ட அஹ்மத் அப்தல்லாவையே மீண்டும் ஜனாதிபதியாக்கினான். இம்முறை அப்தல்லாவின் ஆட்சி இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பிரதிபலித்தது. ஆனால் அதெல்லாம் பிரான்சிற்கு பிரச்சினையாக படவில்லை.

பிரெஞ்சு அரசால் செல்லமாக "திரு. ஆப்பிரிக்கா" என்று அழைக்கப்பட்ட பொப் டேனர்ட்டின் பொற்காலம் அப்போது ஆரம்பமாகியது. கொமொரோசில் இஸ்லாமிய மத்தைதை தழுவி, ஆறு மனைவிகளுடன், எட்டுப் பிள்ளைகளுடன், சொகுசு பங்களாவில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தான். தீவின் பல வர்த்தக ஸ்தாபனங்களுக்கு ஏகபோக தொழிலதிபரானான். என்ன தான் இருந்தாலும், பழைய குலத் தொழிலை கைவிட முடியுமா? கொமோரசை தளமாக பயன்படுத்தி, பல ஆப்பிரிக்கா நாடுகளுக்கு "கூலிப்படை விநியோகம்" நடந்தது. இதற்கிடையே தென் ஆப்பிரிக்காவுடன் தரகு வியாபாரம் வேறு. அப்போது தென் ஆப்பிரிக்காவை சிறுபான்மை வெள்ளையின நிறவெறிக் கட்சி ஆட்சி செய்து வந்தது. அதனால் ஐ.நா.மன்றத்தினால் சர்வதேச பொருளாதார தடை விதிக்கப்பட்டிருந்தது. அதற்காக பிரான்சும், பிற மேற்குலக நாடுகளும் நிறவெறி தென் ஆப்பிரிக்காவுடனான வர்த்தக தொடர்புகளை முறித்துக் கொள்ளவில்லை. ஐ.நா.மன்றத்தை ஏமாற்றி, "நம்ம ஆள்" பொப் டெநர்ட் ஆட்சி செய்த கொமொரோஸ் ஊடாக வர்த்தகம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

பனிப்போர் உச்சகட்டத்தில் இருந்த காலம் அது. அதனால் தான் கொமோரோ தீவுகளில் கூலிப்படையினரின் அடாவத்தனங்களை பிரான்ஸ் கண்டுகொள்ளவில்லை. பிரான்சின் பொருளாதார நலன்களும் கவனிக்கப்படவேண்டியவை. ஆயினும் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர், சர்வதேச அரசியல் நிலைமை வேகமாக மாறியது. அந்தக் காலகட்டத்தில், 1989 ம் ஆண்டு எழுந்த முரண்பாடுகளால் பொப் டெநர்ட் கொமொரோஸ் ஜனாதிபதி அப்தல்லாவை கொலை செய்த தகவல் கிடைத்ததும், இன்னொரு சதிப்புரட்சிக்கான எச்சரிக்கைமணி பிரான்ஸில் எதிரொலித்தது. தீவில் திடீரென குதித்த பிரெஞ்சு பரசூட் துருப்பினர், பொப் டெநர்ட்டை கைது செய்து தாயகம் கொண்டு சென்றனர். அப்போது நடந்த வழக்கைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். ஆனால் ஆடிய கால்கள் சும்மா இருக்குமா? எந்த நாட்டிலாவது ஆட்சியை கவிழ்க்காவிட்டால் அவனுக்கு பொழுது போகாது. 1995 ம் ஆண்டு, புதிதாக 33 கூலிப்படையினரை சேர்த்துக் கொண்டு, பொப் டெனார்ட் ஐந்தாவது தடவையாக கொமொரோஸ் மீது படையெடுத்தான். இம்முறை பிரான்சிற்கு போதும் போதும் என்றாகி விட்டது. நூற்றுக்கணக்கான பிரெஞ்சு இராணுவத்தினர் கொமொரோசில் இறக்கப்பட்டு, கூலிப்படையினர் சுற்றிவளைக்கப்பட்டனர். சண்டையிடாமல் சரணடைந்த பொப் டெநர்ட், அதற்குப் பிறகு சாகும் வரை ஆப்பிரிக்கா பக்கம் தலைவைத்துப் படுக்கவில்லை.

இத்தோடு ஆப்பிரிக்காவை அச்சுறுத்தி வந்த ஆட்சிக்கவிழ்ப்பு பூதம் ஒழிந்தது என்று சுபம் போட முடியவில்லை. 2004 ம் ஆண்டு வந்த செய்தி ஒன்று, இப்போதும் ஐரோப்பியர்கள் சிலர் திடீர் சதிப்புரட்சி மூலம் ஆப்பிரிக்க நாடுகளை கைப்பற்ற தயாராக இருப்பதைக் காட்டியது. சில ஐரோப்பிய நிறுவனங்களின் வர்த்தக நலன்களே இதற்கு காரணம். ஒரு நாள், பிரிட்டிஷ் பத்திரிகைகளில் 3 வது அல்லது 4 வது பக்கத்தில், தீப்பெட்டி அளவில் அந்த செய்தி பிரசுரமாகி இருந்தது. "இகுவடோரியல் கினியா"(Equatorial Guinea) என்ற மேற்கு ஆப்பிரிக்க நாட்டு அரசை சதிப்புரட்சி மூலம் அகற்ற திட்டம் தீட்டியதாக, சிம்பாப்வேயில் சைமன் மன் என்ற பிரிட்டிஷ் கூலிப்படை கப்டனின் கைது பற்றிய செய்தி அது. சைமனுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாக, (சைமனின் நீதிமன்ற வாக்குமூலப்படி) மாஜி பிரிட்டிஷ் பிரதமர் மாக்கிரட் தச்சரின் "அருந்தவப்" புதல்வன் மார்க் தச்சரும் தென் ஆப்பிரிக்காவில் வைத்து கைது செய்யப்பட்டார். உண்மையில் தென் ஆப்பிரிக்க உளவுத்துறை அவர்களை நீண்ட காலமாக கண்காணித்து வந்தது. இருப்பினும் கைது செய்யப்பட்டவர்கள் அப்பாவிகள் என்பது போல, "இந்த (வெள்ளைப்) பூனையும் பால் குடிக்குமா?" என்று செய்தியை வெளியிட்டன பிரிட்டிஷ் "நடுநிலை" பத்திரிகைகள். "தனது மகன் ஜெயிலுக்கு போனால், தான் தற்கொலை செய்து கொள்வேன்" என்ற மார்க்கிரட் தச்சரின் வற்புறுத்தலின் பேரில், அவரது மகன் விடுதலை செய்யப்பாட்டார். தனது ஆட்சிக் காலத்தில் நூற்றுக்கணக்கான சமூக விடுதலைப் போராளிகளை ஜெயிலுக்கு அனுப்பி, இரும்புப் பெண்மணி என்று பெயரெடுத்த மாக்கிரட் தச்சரின் "தாயுள்ளம்", சொந்த மகன் ஜெயிலுக்கு போவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இகுவடோரியல் கினியா சமீபத்தில் எண்ணை வளம் கண்டுபிடிக்கப்பட்ட நாடு. அந்த நாட்டின் அரசு ஒரு காலத்தில் சோஷலிச நாடாக திகழ்ந்ததுடன், கியூபாவுடனும் நல்லுறவைப் பேணி வந்தது. எண்ணைப் பொருளாதார ஆதிக்கம் தனது கையை விட்டு போகாத படி, கம்பெனிகள் கேட்கும் அதிக பங்கு லாபத்திற்கு விட்டுக் கொடுக்க மறுத்து வந்தது. இதனால் கினியா எண்ணை மீது கண் வைத்த, மார்க் தச்சரின் பன்னாட்டு வர்த்தக நிறுவனம் குறுக்கு வழியை நாடியது. ஒரு கூலிப்படையை அனுப்பி இ.கினியா ஆட்சியை கவிழ்த்து விட்டு, தானே எண்ணைக் கிணறுகளை முழுவதுமாக அபகரிக்கும் நோக்கம் ஈடேறவில்லை. மார்க் போன்ற வர்த்தகர்கள் இது போன்ற தீய வழிகளில் தானே கோடீஸ்வரன் ஆனார்கள்? நம்மூரில் அடியாட்படை அனுப்பி சொத்துகளை அபகரிக்கும் வர்த்தகப் பெருந்தகைகளுக்கும், மார்க் தச்சரின் பன்னாட்டு நிறுவனத்திற்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. வர்த்தக நிறுவனங்களுக்காக ஒரு நாட்டையே பிடித்துக் கொடுக்கும் சர்வதேச கூலிப்படைகள், "Executive Outcomes" என்ற கவர்ச்சிகரமான பெயர்களுடன் இப்போதும் தென் ஆப்பிரிக்காவில் இயங்கி வருகின்றன. அவர்களது குறிக்கோள் பணம் மட்டும் தான். பெருமைக்காக "கம்யூனிச எதிர்ப்பு போராளிகள்" என்று தமக்கு தாமே புகழாரம் சூட்டிக் கொள்கின்றனர்.

2004 ம் ஆண்டு, சைமன் மன் 64 கூலிப்படையினருடன் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வாடகை விமானத்தை அமர்த்திக் கொண்டு, சிம்பாப்வே போய் இறங்கிய போதே கைது செய்யப்பட்டனர். சிம்பாப்வேயில் ஆயுதங்களை வாங்கிக் கொண்டு இ.கினியா போவது அவர்களது நோக்கம். ஆப்பிரிக்க நாடுகள் என்றாலே ஊழல்மய அரசியல்வாதிகள், பணத்திற்காக எதுவும் செய்வார்கள் என்று கணக்குப் போட்ட "மன்"னின் நினைப்பில் மண் விழுந்தது. விமானநிலையத்தில் வைத்தே கைது செய்யப்பட்டு, சட்டவிரோதமாக ஆயுதம் வாங்கவிருந்த குற்றச்சாட்டில் 7 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. 2007 ம் ஆண்டு இ.கினியா கேட்டுக்கொண்டதன்படி அந்நாட்டிற்கு நாடு கடத்த உத்தேசிக்கப்பட்டது. அப்போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்த டோனி பிளேர், சைமன் என்ற கிரிமினலை விடுதலை செய்யுமாறு சிம்பாப்வேயை கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தார். பிரிட்டிஷ் சிறைகளில் வாடும் ஒரு குற்றமும் செய்யாத அப்பாவி அகதிகளை விடுதலை செய்ய மறுத்த டோனி பிளேர், கொலை பாதகச் செயலை செய்யும் கூலிப்படை கிரிமினலை விடுவிக்க கோரிய காரணம் என்ன? இனப்பாசம் என்பதைத் தவிர இதற்கு வேறென்ன பதில் இருக்க முடியும்?

ஆப்பிரிக்க நாடுகளின் ஆட்சியை கவிழ்க்கும் காரியத்தை, பெருந்தொகை பணத்திற்கு ஒப்பந்தம் பேசி செய்து முடிக்கும் கூலிப்படைகள், ஒ...மன்னிக்கவும், "தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள்" தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இப்போதும் சட்டபூர்வமாக இயங்கி வருகின்றன. இவைகளை யார் வேண்டுமானாலும் கூலிக்கு அமர்த்திக் கொண்டு, தமக்குப் பிடித்த ஆப்பிரிக்க, ஆசிய நாட்டு அதிகாரத்தை சதிப்புரட்சி மூலம் கைப்பற்றலாம். அவர்கள் கேட்கும் விலையை கொடுத்தால் சரி. ஏதாவதொரு (ஆப்பிரிக்க) நாட்டில் கூலிப்படையினர் நடவடிக்கையில் ஈடுபடும் போது, சில நேரம் வியாபாரத்தில் பங்கும் கிடைக்கின்றது. ஒருமுறை RUF கெரில்லாக்களை அடக்குவதற்காக, சியாரா லியோன் அரசு கூலிப்படையினரை அமர்த்தியது. அப்போது கூலிப்படையினர் தலைநகரை பாதுகாப்பதை விட வைரச் சுரங்கங்களை பாதுகாப்பதை பெரிதும் விரும்பினர். சுரங்கங்களில் உள்ளூர் மக்களை கட்டாய வேலை வாங்கியதிலும், கொள்ளையடித்த வைரங்களை கடத்தி சென்று விற்று லாபமீட்டியதிலும், கூலிப்படையினருக்கும் பங்குண்டு.

அநேகமாக எல்லா கூலிப்படைகளும் வெள்ளையினத்தவர் நிர்வாகத்தின் கீழ் தான் இயங்குகின்றன. மேலதிகாரிகள் எப்போதும் வெளையர்கள் தான். அவர்களின் கீழ் கூலிக்கு அமர்த்தப்படும் போர்வீரர்கள் அனேகமாக கறுப்பர்களாக இருப்பர். இதனால் கூலிப்படை புகுந்த நாடுகளில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் போதெல்லாம், அதனை "கறுப்பர்கள் மீது கறுப்பர்களின் வன்முறை" என்று சில மேற்கத்திய ஊடகங்கள் சித்தரிக்கின்றன. ஒரு காலத்தில் நிறவெறி தென் ஆப்பிரிக்கா, நமீபியாவை ஆக்கிரமித்திருந்த போது நடந்த இனப்படுகொலைகள் குறிப்பிடத்தக்க உதாரணம். நமீபிய மக்களை கொலை செய்ததிலும், அவர்களின் சொத்துகளை அழித்த போர்க் குற்றங்களில், அன்று தென் ஆப்பிரிக்க கூலிப்படையில் பணியாற்றிய கறுப்பர்களும் ஈடுபட்டதை மறுப்பதற்கில்லை. இருப்பினும் மேற்கத்திய ஊடகங்கள் குள்ளபுத்தியுடன், "கறுப்பர்களின் அத்துமீறல்களை" மட்டும் பெரிது படுத்தி "செய்தி போல" தெரிவிக்கின்றன. இதை செய்தி என்று சொல்ல முடியாது. "தவறான தகவல் வழங்கும் ஊடகப் பிரச்சாரம்" என்றே கூற வேண்டும். மேற்கத்திய நாடுகளில் இந்த தவறான தகவல்கள் செலுத்தும் தாக்கம், மக்களின் சிந்தனையை கறை படுத்துகின்றது. மேலைத்தேய வெள்ளையின மக்கள்: "ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த விவேகமற்ற கறுப்பர்கள், அவர்களுக்குள்ளே அடிபட்டுச் சாகிறார்கள். கறுப்பர்களுக்கிடையே ஒற்றுமையில்லை. எமக்கென்ன வந்தது?" என நினைக்கின்றனர். ஆப்பிரிக்காவில் மட்டுமல்ல, ஆசிய கண்டத்திலும் பகைமை கொண்ட இரு இனங்கள் உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபடும் போதும் ஐரோப்பிய மக்கள் அப்படித்தான் கருதுகின்றனர்.

(தொடரும்)


முன்னைய பதிவுகள்:
நைஜீரியா: எண்ணை வளம் தொல்லை இந்த வல்லரசில் !
ஐரோப்பிய காட்டுமிராண்டிகள் திருடிய ஆப்பிரிக்க அறிவுடமை
காங்கோவை விழுங்கிய பெல்ஜிய பூதம்
ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 1

Friday, May 22, 2009

புலிகளின் வீழ்ச்சியும், சர்வதேச சூழ்ச்சியும்


பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சைகள் ஓயப் போவதில்லை. ஆதரவாளர்களைப் பொறுத்த வரை சாகாவரம் பெற்ற மாமனிதராகிய பிரபாகரன் அவர்களின் இதயத்தில் குடியிருக்கலாம். நக்கீரன் போன்ற தமிழ் தேசிய நாளிதழ்கள் அதற்கான ஆதாரங்களையும் அள்ளிவீசலாம். உலகம் அதைக் கடந்து நகர்ந்து கொண்டிருக்கின்றது.

ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்ட இறுமாப்பில், இலங்கை அரசும், இந்தியாவும், சர்வதேச நாடுகளும் எதிர்காலம் குறித்து ஆராய்கின்றன. போர் உச்சத்தில் இருந்த போது, தமிழர்கள் கொல்லப்பட்ட போது வராத ஐ.நா. செயலாளர் பான் கி மூன், எல்லாம் முடிந்த பிறகு இலங்கைக்கு விஜயம் செய்கிறார். இன்று பூகோள அரசியல் முற்றாக மாறி விட்ட நிலையில், பிரபாகரன் உயிரோடு இருந்தாலும், இறந்திருந்தாலும் எந்தத் தாக்கத்தையும் கொண்டு வரப் போவதில்லை.

ஈழத்திற்கான ஆயுதப் போராட்டம் தொடர வேண்டும், என்று தமிழ் நாட்டு தமிழர்களும், புலம்பெயர்ந்த தமிழர்களும் எதிர்பார்க்கலாம். ஆனால் கள நிலைமை அதற்கு மாறாக உள்ளது. ஈழத்தில் இருக்கும் தமிழரும், புலம்பெயர்ந்த தமிழரும் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்யவில்லை. அவர்களின் நலன்கள் வேறுவேறாக உள்ளன. அன்றாடம் அவலங்களை வாழ்க்கையாக கொண்டிருந்த ஈழத் தமிழர்கள், போரிட வலுவற்று துவண்டு போயுள்ளனர். அவர்கள் இன்னொரு போரை எதிர்கொள்ளும் சக்தியற்றுக் கிடக்கின்றனர். 


தமிழ் ஊடகங்கள் கூறியது போல, வன்னியில் நடந்த இறுதி யுத்தத்தில் 25000 தமிழ் மக்கள் அழிக்கப் பட்டதாக இருக்கலாம். இதுவரை காலமும் கொடூரமான இனவழிப்புப் போருக்கு முகம் கொடுத்த எஞ்சியிருக்கும் ஈழத் தமிழ் மக்கள், மீண்டும் ஒரு இனவழிப்பை எதிர்கொள்ள தயாராக இருப்பார்களா என்பது சந்தேகமே. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான், அதன் வலியும், வேதனையும் புரியும்.

2001 ம் ஆண்டு, ஈழத்திலும், உலகிலும் நிலைமைகள் வெகு வேகமாக மாறி விட்டிருந்தன. இந்த மாற்றத்தை பலர் கவனிக்கத் தவறி விட்டார்கள். அப்போது யாழ் குடாநாட்டை கைப்பற்றும் அளவிற்கு புலிகள் பலமாக இருந்தனர். இலங்கை இராணுவம் பலவீனமான நிலையில் இருந்தது. அப்படி இருந்தும் யாழ் குடாநாட்டு போரில் இருந்து புலிகள் பின்வாங்கிச் சென்றனர். இதன் காரணத்தை தலைவர் பிரபாகரன் பின்னர் தனது மாவீரர் உரையில் ஏற்கனவே குறிப்பிட்டார். (இந்தியா போன்ற) வெளி நாடுகளின் அழுத்தம் காரணமாக குடாநாட்டை கைப்பற்றும் முயற்சி கைகூடாமல் போனதை சூசகமாக தெரிவித்தார். 


இந்தியா மீண்டும் தனது இராணுவத்தை அனுப்பி, யாழ் குடாநாடு புலிகளின் கைகளில் போகாமல் தடுக்க தயாராக இருந்தது. போரில் திருப்புமுனையாக, பாகிஸ்தான் பல் குழல் பீரங்கிகளை இலங்கை இராணுவத்திற்கு அனுப்பி வைத்தது. இலங்கை இராணுவத்தின் கண்மூடித் தனமான அகோர குண்டு வீச்சிற்கு இலக்காகி சாவகச்சேரி என்ற நகரமே வரைபடத்தில் இருந்து அழிக்கப்பட்டது. சிங்கள பேரினவாதம் தனது கோரப்பற்களை அப்போதே காட்டி விட்டது.

மறுபக்கத்தில் வருடக்கணக்காக சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வந்த வன்னித் தமிழ் மக்கள், புலிகளின் கட்டுப்பாட்டை மீறி வெளியேற தலைப்பட்டனர். அரசு ஏற்படுத்திய நீண்ட கால பொருளாதாரத் தடை, வன்னியில் மக்கள் இனி வாழ முடியாது என்ற நிலையை உருவாக்கியது. குழந்தைகள் போஷாக்கின்மையால் இறந்து கொண்டிருந்தனர். 2002 ம் ஆண்டு, சமாதான உடன்படிக்கை உருவாவதற்கு வன்னி வாழ் தமிழ் மக்களின் அழுத்தம் ஒரு காரணம். மக்கள் 20 வருட தொடர்ச்சியான போரினால் களைப்படைந்து விட்டனர். எப்படியாவது சமாதானம் வந்தால் நல்லது என்ற எண்ணம் மட்டுமே அவர்கள் சிந்தனையில் இருந்தது.

இலங்கைப் பிரச்சினையில் சர்வதேச தலையீடு ஏற்பட்டது. நோர்வேயின் அனுசரணையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. உலக வல்லரசான அமெரிக்காவும், பிராந்திய வல்லரசான இந்தியாவும் ஆதரவு வழங்கின. அப்போது மீண்டும் போர் தொடங்கினால் என்ன நடக்கும் என்று அமெரிக்க தூதுவர் பகிரங்கமாகவே தெரிவித்தார். "தமிழீழ இராஜ்யம் உருவாக விட மாட்டோம். புலிகளின் ஆயுதக் கொள்வனவு எங்கே நடக்கிறது போன்ற விபரங்கள் எம்மிடம் உள்ளன. புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசின் கரங்களை வலுப்படுத்துவோம்." 


9/11 க்குப் பின்னான காலமது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்கா முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தது. 2006 ம் ஆண்டு, மீண்டும் போர் தொடங்கிய போது, தெற்கில் சில குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றன. இவற்றை அரசு சர்வதேச ஆதரவை தேட பயன்படுத்திக் கொண்டது. சில குண்டுவெடிப்புகள் அரச புலனாய்வுத் துறையின் கைவரிசையாக இருந்திருக்கலாம். இருப்பினும் பயங்கரவாத சம்பவங்களை எதிர்க்காத புலிகளினதும், தமிழ் மக்களினதும் சந்தர்ப்பவாத மௌனம், இலங்கை அரசிற்கு சாதகமாகிப் போனது. பெரும்பான்மை சிங்கள மக்களினதும், சர்வதேச நாடுகளினதும் ஆதரவை கேள்விக்கிடமின்றி பெற்றுக் கொள்ள முடிந்தது.

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஒரு போதும் ஏகாதிபத்தியத்தின் அரசியலை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களைப் பொறுத்த வரை உலகில் உள்ள ஒரேயொரு ஏகாதிபத்தியம் "சிங்கள ஏகாதிபத்தியம்" மட்டுமே. வலதுசாரி அரசியல் கோட்பாடுகளில் இருந்தே இது போன்ற சிந்தனை பிறக்கின்றது. வர்க்கம் என்றால் ஆண், பெண் என்ற பாலியல் பிரிவாக புரிந்து கொள்பவர்களிடம் வேறெதை எதிர்பார்க்க முடியும்? அவர்களை சொல்லிக் குற்றமில்லை. புலம் பெயர்ந்த தமிழர்களை தலைமை தாங்கும் நிலையில் உள்ள படித்த மத்திய தர வர்க்கம், எப்போதும் ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்வதில் பெருமை கொள்கின்றது. மேலைத்தேய நாடுகளில் அவர்களின் வர்க்க நலன்கள் பிரிக்க முடியாதவாறு பின்னிப் பிணைந்துள்ளன.

உலகம் முழுவதும் இனப்படுகொலைகளை அரங்கேற்றி அதிகாரத்தைப் பிடித்த, காலனிய மக்களை அழித்து செல்வம் சேர்த்த மேற்கத்திய நாடுகளிடம், இலங்கையின் இனப்படுகொலை பற்றி இடித்துரைப்பதில் அர்த்தமில்லை. நான் கூட ஒரு காலத்தில் மேற்கத்திய அரச அதிகாரிகளுக்கு, அரசியல்வாதிகளுக்கு, ஊடகங்களுக்கு இலங்கை நிலவரம் பற்றி விலாவாரியாக எடுத்துச் சொல்லியிருக்கிறேன். 


எல்லாவற்றையும் கவனமாக கேட்டுக் கொள்ளும் அவர்களது இராஜதந்திரம், செயலில் மட்டும் தமது தேச நலன் என்பதற்கு அப்பால் செல்ல விடுவதில்லை. உலகின் எந்த மூலையிலும் ஒரு பிரச்சினையை உருவாக்கவோ, தீர்க்கவோ வல்ல சாணக்கியர்கள் அவர்கள். உலகில் ஒவ்வொரு நாட்டுடனும் எவ்வாறு நடந்து கொள்வது, அந்த நாட்டைப் பற்றிய எமது நிலைப்பாடு என்ன, எனபன குறித்து மேற்கத்திய அரசுகள் தெளிவாகவே கொள்கை வகுத்துள்ளன. அதிலிருந்து அவை மாறப் போவதில்லை.

சர்வதேச நாடுகள் புலிகளின் வீழ்ச்சியை எதிர்பார்ப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. நோர்வேயின் அனுசரணையிலான சமாதான பேச்சுவார்த்தையின் போது, இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் அதிகாரத்தை பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்த்தன. இரண்டு பக்கமும் இதயசுத்தியுடன் பேச்சுவார்த்தையில் பங்குபற்றவில்லை. போர்நிறுத்தம் என்பதை போருக்கான தயார்படுத்தல் என்று புரிந்து கொண்டார்கள். சமாதான காலத்தில் புலிகள் ஆயுதக் கடத்தலை மேற்கொண்ட போது, இந்திய செய்மதிகள் காட்டிக் கொடுத்தன. அமெரிக்காவில் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்ட முகவர்கள் கைது செய்யப்பட்டனர். 


புலிகளின் சர்வதேச பொறுப்பாளரும், ஆயுதங்களை வாங்கி அனுப்புவருமான கே.பி. பத்மநாதன் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டதாக செய்தி வந்தது. அவரை இலங்கை அரச அதிகாரிகள் பொறுப்பெடுக்க சென்ற போது, ஆள் அங்கே இல்லை. இடையில் என்ன நடந்தது என்பது இன்னமும் துலங்காத மர்மம். பத்மநாதன் C.I.A., RAW ஆகிய சர்வதேச உளவுத்துறையினரின் கண்காணிப்பில் இருப்பவர். புலிகளின் ஆயுதக் கொள்வனவு எந்த விதப் பிரச்சினையுமின்றி தொடருமானால், அது வேறு பல விடுதலை இயக்கங்களையும் ஊக்குவிக்கும் என்று சர்வதேசம் அஞ்சியது.

புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற அதே கால கட்டத்தில், இந்தோனேசியாவில் அச்சே விடுதலை இயக்கம், சூடானில் கிறிஸ்தவ தென் பகுதியின் சுதந்திரத்திற்கு போராடிய இயக்கம், ஆகியன உலகமயமாக்கலின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆயுதப் போராட்டத்தை கைவிட்டன. அதற்கு மாறாக இலங்கையில் மட்டும், இரு தரப்பும் பேச்சுவார்த்தையில் நாட்டமற்று போருக்கு தயாராகின. 


இலங்கை அரசு யுத்தநிறுத்தை ஒரு தலைப்பட்சமாக முறித்திருந்தாலும், தமிழர் தரப்பு தொடர்ந்து சமாதானத்திற்காக போராடி இருந்திருக்க வேண்டும். அப்படியான நிலையில் இலங்கை அரசின் மீது சர்வதேச அழுத்தம் அதிகரித்திருக்கும். ஏனெனில் இலங்கையில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதை சர்வதேச சமூகம் விரும்பவில்லை. இது அவர்களின் நலன்களுக்கு பாதகமானது.

மேற்குல நாடுகளின் ஊடகங்கள், இலங்கையில் நடக்கும் போரை, அல்லது தமிழின அழிப்பு யுத்தத்தை, முக்கியமற்ற செய்தியாக மட்டுமே தெரிவித்து வருகின்றன. தமது மக்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என தீர்மானிக்கும் நிலையில் ஊடகங்கள் உள்ளன. அனேகமாக பத்திரிகைகளில் மட்டும், சர்வதேச செய்திகளுக்காக ஒதுக்கிய பக்கத்தில் தீப்பெட்டி அளவில் தான் இலங்கைப் போர் பற்றிய செய்தி பிரசுரமாகும். இனப்படுகொலை என்று சொல்லக் கூடிய அளவிற்கு, மூவாயிரம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டாலும், அந்தச் செய்திக்கு தீப்பெட்டி அளவு தான் இடம் ஒதுக்கப்படும். 


மே 16 ம் திகதி, எதிர்பாராவிதமாக புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் பத்மநாதன் தெரிவித்த, "புலிகள் ஆயுதங்களை மௌனமாக்குகின்றனர்" என்ற செய்தி அனைத்துப் பத்திரிகைகளிலும் முதல் பக்கத்தில் இடம்பெற்றது. "தமிழ்ப் புலிகள் தோற்று விட்டனர்" என்று அந்தச் செய்திக்கு தலைப்பிடப் பட்டிருந்தது. பத்மநாதன் சொன்னதை யார் எப்படி மொழிபெயர்த்துக் கொண்டாலும், மேற்குலகைப் பொறுத்த வரை, புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சரணடைவதாகத் தான் புரிந்து கொண்டார்கள். மேற்குலக அரசுகள் புலிகளின் தோல்வியை எப்போதோ எதிர்பார்த்திருந்ததை, செய்திக்கு அளிக்கப் பட்ட முக்கியத்துவம் எடுத்துக் காட்டுகின்றது.

மேற்குலக பொருளாதாரம் இறங்குமுகமாக இருக்கும் காரணமாக, நிதி நெருக்கடி தோற்றுவித்த பொருளாதார தேக்கம் காரணமாக, இலங்கையில் போர் முடிவுக்கு வருவது அவர்களுக்கு தேவையாகப் படுகின்றது. மேற்குலக நாடுகள், ஆண்டு தோறும் வருகை தரும் இலங்கை அகதிகளை கட்டுப்படுத்த, முடியுமானால் ஒரேயடியாக நிறுத்த விரும்புகின்றன. இலங்கையில் போர் தொடரும் பட்சத்தில், மனிதாபிமான காரணத்தினால் அகதிகளின் வருகையை தடுக்க முடியாது. இலங்கையில் போரை எதோ ஒரு வகையில் நிறுத்துவதன் மூலம், அதை நிறைவேற்றிக் கொள்ளலாம். தற்போது போர் முடிவுக்கு வந்து விட்டதால், தமிழ் அகதிகள் இனிமேல் பெருமளவில் திருப்பியனுப்பப் படுவார்கள்.

இலங்கைப் பிரச்சினையில், ஒன்றில் பேச்சுவார்த்தை மூலம் ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும், அல்லது போரில் யாராவது ஒருவர் வெல்ல வேண்டும். இந்த முடிவை மேற்கத்திய நாடுகள் எப்போதோ எடுத்து விட்டன. ஒரு காலத்தில் இலங்கையின் உள் நாட்டு யுத்தம், தமிழ்-சிங்கள இனங்களைப் பிரித்து வைக்கும், அதனால் அந்நியத் தலையீட்டுக்கு வழி பிறக்கும் என நம்பினார்கள். தற்போது அந்தப் போர், உலகமயமாக்கலுக்கு தடையாகத் தெரிகின்றது. 


புலிகளின் தலைமையை காட்டிக் கொடுத்த சர்வதேச சூழ்ச்சியை, இதன் பின்னணியிலேயே புரிந்து கொள்ளப்பட வேண்டும். புலிகளின் வீழ்ச்சியால், ஏகாதிபத்தியம் திருப்தியடைந்து விடவில்லை. ஏகாதிபத்தியமானது ஈழத் தமிழர்களை மட்டுமல்ல சிங்களவர்களையும் தனது மறுகாலனிய அடிமைகளாக்க கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றது. இப்போதே காலனிய அடிமைப் படுத்தலை நியாயப்படுத்த தொடங்கி விட்டார்கள். மேலைத்தேய விழுமியங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் உலகமயமாக்கப்பட்ட சிறந்த குடிமக்களாகும் படி அழைப்பு விடுக்கின்றனர்.

Thursday, May 21, 2009

கறுப்பர்களுக்கு இனவெறி கற்பித்த வெள்ளையின கனவான்கள்

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 6

ருவான்டா, 1994 ம் ஆண்டு, நவீன உலகை உலுக்கிய இன அழிப்பு நடவடிக்கை, ஒரு வானொலி அறிவிப்புடன் ஆரம்பமாகியது: "ஹூட்டு சகோதரர்களே! எம்மை இதுவரை காலமும் அடிமைகளாக அடக்கி ஆண்டு வந்த துட்சி கரப்பான் பூச்சிகளை அழிக்கும் காலம் வந்துவிட்டது." இனவாத வெறுப்பை கக்கும் அந்த அறிவிப்பை செய்த "மில் கொலின்ஸ் சுதந்திர வானொலி" ஹூட்டு பாஸிச சக்திகளால் நடத்தப்பட்ட தனியார் வானொலி என நம்பப்படுகின்றது. ருவான்டாவில் நீண்ட காலமாகவே ஹூட்டு இனவெறி அரசியல் நடத்தி வந்த, பாஸிச "குடியரசு பாதுகாப்புக் கூட்டணி" (CDR) கட்சியுடன், ஆளும்கட்சி தலைமையிலான Interahamwe என்ற துணைப்படையும் சேர்ந்து கொண்டு சிறுபான்மை துட்சி இன மக்களை நரபலி வேட்டையாடிக் கொன்று குவித்தனர். ருவான்டாவின் தேசிய இராணுவம் பெரும்பான்மை ஹூட்டு இனத்தவரின் ஆதிக்கத்தில் இருந்ததால், இனப்படுகொலையில் இராணுவத்தின் நேரடி பங்களிப்பை மறுக்கமுடியாது.

ருவான்டாவின் பெரும்பான்மை இனமான ஹூட்டுக்களுக்கும், சிறுபான்மை இனமான துட்சிகளுக்கும் இடையிலான பகைமை, கசப்புணர்வு நீண்ட காலமாக நீறு பூத்த நெருப்பாக அடங்கிக் கிடந்தது. ருவான்டா பெல்ஜியத்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து, துட்சி சிறுபான்மையினருக்கு எதிரான இனக்கலவரங்களையும், துட்சி கிளர்ச்சியாளர்களின் அரசுக்கு எதிரான ஆயுதமேந்திய போராட்டத்தையும் சந்தித்துள்ளது. 1994 ல் பதவியில் இருந்த ஜனாதிபதி "ஹபியாரிமனா" வெளிநாட்டு அழுத்தம் காரணமாக, அமைதிப் பேச்சுவார்த்தைக்கும், அதிகாரப் பரவலாக்கத்திற்கும் சம்மதித்திருந்தார். இதனால் ஹபியாரிமனா ஒரு ஹூட்டு இன மிதவாதியாக, இன்னும் சொன்னால் "ஹூட்டு இனத் துரோகியாக", பாஸிச சக்திகளால் கணிக்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு. இருப்பினும் 1994 ம் ஆண்டு, ஏப்ரல் 6 ம் திகதி, தான்சானியாவில் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு நாடு திரும்பிக் கொண்டிருந்த ஜனாதிபதியின் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஏவுகணையை ஏவியது யார் என்ற மர்மம் இன்று வரை துலங்கவில்லை. ஹூட்டு பாசிஸ்டுகள் சுட்டு வீழ்த்தி இருக்கலாம் என்று அப்போது நம்பப்பட்டாலும், இன்றைய ருவான்டா அதிபர் "போல் ககாமே" யின் துட்சி கெரிலாக்களினது வேலை என்று பிரான்ஸ் குற்றஞ் சாட்டியது. (விமானி ஒரு பிரெஞ்சுக் காரர் என்பதால் பிரெஞ்சு நீதிமன்றம் விசாரணை நடத்தியது.)

எது எப்படி இருந்த போதிலும், ஜனாதிபதி ஹபியாரிமனாவின் மரணத்திற்குப் பின்னர் நாட்டில் அராஜகம் தலைவிரித்தாடியது. "துட்சி கிளர்ச்சியாளர்கள் எமது ஜனாதிபதியை படுகொலை செய்துவிட்டார்கள்." என்ற செய்தி ஹூட்டு மக்கள் மத்தியில் காட்டுத்தீ போல பரவியது. விரைவில் அதுவே முழு துட்சி இனத்தவருக்கும் எதிரான துவேஷமாக உருவெடுத்தது. நாடு முழுவதும் வீதித்தடைகள் போடப்பட்டன. ஹூட்டு ஆயுததாரிகளின் வீதித்தடைச் சோதனையின் போது மறிக்கப்பட்ட வாகனங்களில் இருந்து துட்சி இனத்தை சேர்ந்தவர்களை தனியாக பிரித்தெடுத்தனர். அடையாள அட்டையில், "இனம்: துட்சி" என்று குறிப்பிட்டிருப்பதே அவர்களை காட்டிக் கொடுக்க போதுமானதாக இருந்தது. (அடையாள அட்டையில் இனத்தை குறிப்பிடும் வழக்கம் பெல்ஜிய காலனிய ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.) பெண்கள், குழந்தைகள் என்று வேறுபடுத்தாது துட்சி என்ற காரணத்திற்காகவே கொலை செய்யப்பட்டனர். துப்பாக்கிச் சன்னங்களை வீணாக்குவது செலவு என்று, அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டனர். குடியிருப்புகளுக்கு சென்று துட்சிகளை கொலை செய்த படையினர், சுடப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளுக்கான செலவை அவர்களே பொறுப்பெடுக்க வேண்டும் என்று மரணத்திலும் கணக்குப் பார்த்தனர். சாதாரண மக்களும் கொலை வெறியாட்டத்தில் பங்குபற்றுமாறு ஊக்குவிக்கப்பட்டனர். ஒரு கொலையை செய்தவனுக்கு, இன்னும் இன்னும் கொலை செய்ய வேண்டும் என்ற வெறி ஏறியது. கொலை செய்யப்பட்டவர்கள் துட்சி இனத்தவர்கள் மட்டுமல்ல. இன நல்லிணக்கத்தை விரும்பிய, மிதவாத ஹூட்டுகளும் கொல்லப்பட்டனர். உலகம் மறுபக்கம் பார்த்துக் கொண்டிருக்கையில், சில மாதங்களுக்குள் எட்டு லட்சம் முதல் ஒரு மில்லியன் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

"இரண்டாம் உலகப்போரில் நடந்த யூத இன அழிப்பிற்குப் பின்னர், இன்று உலகம் ஆப்பிரிக்காவின் மாபெரும் இனப்படுகொலையை பார்த்தக் கொண்டிருக்கிறது." என்று நெஞ்சை நெகிழ வைக்கும் உருக்கமான காட்சிகளை விபரித்துக் கொண்டிருந்த சர்வதேச தொலைக்காட்சிகளால் உலகின் மனச்சாட்சியை உலுக்க முடியவில்லை. சோவியத் ஒன்றிய வீழ்ச்சிக்குப் பின்னர் உலகின் ஒரேயொரு வல்லரசாக திகழ்ந்த அமெரிக்கா, தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கையை விரித்தது. "குழந்தை வல்லரசான" ஐரோப்பிய ஒன்றியம் வாய்ச்சொல்லில் மட்டுமே தான் கெட்டிக்காரன் என்று காட்டிக் கொண்டிருந்தது. இவ்வாறு இனப்படுகொலையை தொடராது தடுக்க வழி இருந்த போதும், சந்தர்ப்பத்தை தவற விட்ட காரணம் என்ன? அரசியலில் நண்பர்கள் கிடையாது. நிரந்தர நலன்கள் மட்டுமே உள்ளன. பிரான்ஸ் அன்று ருவான்டாவை ஆட்சி செய்த ஹூட்டு இராணுவத்திற்கு பயிற்சி அளித்து, ஆயுதங்கள் கொடுத்து வந்தது. அதே போல துட்சி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வந்தது. அவரவருக்கு தமது ஆட்கள் வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பே மேலோங்கி இருந்தது.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், அமெரிக்காவின் கவனம் ஐரோப்பிய வல்லரசுகளின் மீது திரும்பியது. ஆப்பிரிக்காவில் நவ-காலனிய அரசியலில் மும்முரமாக ஈடுபட்டிருந்த பிரான்ஸ் அதன் கண்ணில் துருத்திக் கொண்டிருந்தது. ருவான்டாவில் துட்சிகளின் கிளர்ச்சி, பிரான்சின் ஆதிக்கத்தை துடைத்தெறியும் பதிலிப் போராக அமெரிக்காவால் கருதப்பட்டது. துட்சிகளின் கெரில்லா இராணுவமான "ருவான்டா தேசாபிமான முன்னணி" (RPF) அயல் நாடான (ஆங்கிலம் பேசும்) உகண்டாவில் தளம் அமைத்திருந்ததும், RPF படைத் தளபதி (இன்றைய ஜனாதிபதி) போல் ககாமே உட்பட பல தலைவர்கள் உகண்டாவில் ஆங்கில மொழி வழிக் கல்வி கற்றிருந்தும், அமெரிக்கா இலகுவாக ஊடுருவ வாய்ப்பாக அமைந்தது. உகண்டாவின் இன்றைய ஜனாதிபதி முசவேனி, ஆட்சியைக் கைப்பற்ற நடத்திய ஆயுதப் போராட்டத்தில், RPF போராளிகள் பங்குபற்றி இருந்தனர். முசவேனி, ககாமே ஆகியோரை "ஆப்பிரிக்காவின் நம்பிக்கை தரும் இளம் தலைமுறையை சேர்ந்த தலைவர்கள், மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவார்கள்" என்று அமெரிக்க ஊடகங்கள் புகழ் பாடிக் கொண்டிருந்தன. ஒருவேளை ருவாண்டாவில் ககாமே ஆட்சிக்கு வந்த பின்னர், அரச கரும மொழியாகவும், கல்வியிலும் பிரெஞ்சை ஒதுக்கி விட்டு ஆங்கிலத்தை நடைமுறைக்கு கொண்டு வந்ததை சாதனையாக கூறலாம்.

ருவாண்டாவில் இருப்பது இனப்பிரச்சினையா? ருவாண்டா மக்கள், காலங்காலமாக ஹூட்டு, துட்சி என்ற இன அடிப்படையில் பிரிந்து வாழ்ந்து வந்தனரா? இது ஆயிரம் வருடக்கால இனப்பகையா? நாம் முதலாளிய ஊடகங்கள் சொல்வதை நம்பினால், மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு "ஆம்" என்று பதில் வரும். ஆனால் இந்தக் கருத்தியல் எவ்வளவு தூரம் சரி என்று, எந்த சமூக விஞ்ஞானியும் ஆராயவில்லை, அல்லது அவர்களது முடிவுகள் பாரபட்சமின்றி இருப்பின் பிரசுரிக்கப்படுவதில்லை. முதலில் "இனம்" (Ethnicity, Race எதுவாக இருந்தாலும்) என்ற சொல்லே ஒரு ஐரோப்பியக் கண்டுபிடிப்பாகும். ருவான்டாவின் இனப்பிரச்சினை, ஆச்சரியப்படத்தக்க வகையில் இலங்கை இனப்பிரச்சினையுடன் பெரும்பாலும் ஒத்திருப்பதை, நீங்கள் இந்தக் கட்டுரையை வாசிக்கும் போது புரிந்து கொள்வீர்கள். இது ஒன்றும் தற்செயல் அல்ல. காலனிய எஜமானர்களின் பிரித்தாளும் கொள்கை, எங்கேயும் ஒரே மாதிரித் தான் நடைமுறைப் படுத்தப்பட்டது. ஆங்கிலேயர்கள் எவ்வாறு இலங்கையில் வாழ்ந்த சிங்கள, தமிழ் மொழி பேசும் மக்களுக்கிடையில் இனப் பகையை தோற்றுவித்து, இனவாதப் படுகொலைகளுக்கு வழிவகுத்தார்களோ, அதே வேலையை பெல்ஜியர்கள் ருவான்டாவில் செய்தனர்.

19 ம் நூற்றாண்டின் இறுதியில், உலகின் மிக நீண்ட நதியான நைலின் நதிமூலத்தை தேடிச் சென்ற ஐரோப்பியர் சிலர் ருவான்டாவை "கண்டுபிடித்தனர்". அவர்களைத் தொடர்ந்து கிறிஸ்தவ மதம் பரப்புவோரும் அந்தப் பிரதேச மக்களை கத்தோலிக்கர்களாக மாற்றும் பணியில் ஈடுபட்டனர். இவர்கள் எல்லோருக்கும் ருவான்டாவில் எதிர்பாராத ஆச்சரியங்கள் காத்திருந்தன. இன்றைய ருவான்டா, புரூண்டி, மற்றும் உகண்டாவின் தென் பகுதி, கொங்கோவின் கிழக்குப்பகுதி என்பனவற்றை உள்ளடக்கிய, ஒரே அதிகார மையத்தைக் கொண்ட மன்னரின் ஆட்சிப்பிரதேசமாக இருந்தது. மன்னரின் கீழ் நூற்றுக்கணக்கான சிற்றரசர்கள் மாகாணங்களை நிர்வகித்து வந்தனர். சுருக்கமாக சொன்னால், ஐரோப்பாவில் இருந்த அதே நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு முறை ருவான்டாவிலும் காணப்பட்டது. ஆயிரம் வருடங்களாக மக்கள் விவசாயம் செய்யும் அறிவைப் பெற்றிருந்தனர். அழகிய மலைநாடான ருவான்டாவில், ஒவ்வொரு குன்றும் ஒரு குடும்பத்திற்கு சொந்தமான விவசாய நிலமாக இருந்தது.

ருவான்டாவில் துவா (அல்லது பிக்மீ) என்றழைக்கப்படும் பழங்குடியினரும் வாழ்ந்து வருகின்றனர். பிற ஆப்பிரிக்க மக்களிடமிருந்து வேறுபடுத்தி அறியக்கூடிய தோற்ற அமைப்பைக் கொண்ட (குள்ளமானவர்கள், பழுப்பு நிறத்தவர்கள்) துவா மக்கள் இன்றும் கூட புராதன வேடுவர் சமூகமாகத் தான் வாழ்கின்றனர். யாருக்கும் தீங்கு செய்யாத, தானுண்டு, தனது வேலையுண்டு என வாழ்ந்து வரும் துவா மக்களை, ருவான்டா அரசர்கள் அடிமைகளாக வைத்திருந்தனர். அரசன் மட்டுமல்ல, நிலப்பிரபுக்களும் துட்சி இனத்தை சேர்ந்தவர்களாக அதிகாரம் செலுத்தினர். அதற்கு மாறாக பெரும்பான்மை ஹூட்டு இன மக்கள் நாட்டுப்புறங்களில் பண்ணையடிமைகளாக, குத்தகை விவசாயிகளாக இருந்தனர். இந்த உண்மையே ஹூட்டு-துட்சி இனப் பிரிவினையை நிரூபிக்க போதுமானதல்ல. ஏனெனில் "நாகரிக காலத்தை" சேர்ந்த நாம் இனம் பற்றி புரிந்து வைத்திருப்பதற்கும், அன்றைய மக்களின் சிந்தனைக்கும் இடையில் நிறைய வேறுபாடு இருக்கின்றது. தனது சொந்த விவசாய நிலங்களில் அதிக விளைச்சலைப் பெறக்கூடியதாக பயிரிட்டு, தனது செல்வத்தை பெருக்கிக் கொள்ளும் ஹூட்டு ஒருவர் நிலப்பிரபுவாக வர முடிந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் அதிகாரத்தில் இருப்பது யாராக இருந்தாலும் துட்சி என அழைக்கப்படலாயினர்.

துட்சிகளின் மூதாதையர் எத்தியோப்பியாவில் இருந்து வந்தவர்கள் என்ற கருத்து நிலவுகின்றது. இரு பக்க இனவாதிகள் மத்தியிலும், ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் மத்தியிலும் இது போன்ற கருத்துகள் பிரபலமானவை. ("துட்சிகளை எத்தியோப்பியாவிற்கு திருப்பி அனுப்புவோம்." என்பது ஹூட்டு இனவாதிகளின் முழக்கங்களில் ஒன்று.) எத்தியோப்பியர், அல்லது சோமாலியர்கள் போல (இவர்களை பிற ஆப்பிரிக்கர்களிடம் இருந்து இலகுவில் பிரித்தறிய முடியும்) பெரும்பாலான துட்சிகள் தோன்றுவதை மறுப்பதற்கில்லை. துட்சிகள் என்றால் உயரமானவர்கள், ஒடுங்கிய முகம், மெல்லிய உடல்வாகு கொண்டவர்கள்; ஹூட்டுகள் பருமனானவர்கள், வட்டமான முகம் கொண்டவர்கள், என்றெல்லாம் பிரித்துப் பார்ப்பது எல்லோருக்கும் பொருந்தாது. இருப்பினும் இனப்படுகொலை செய்யும் இனவாதிகளுக்கு அந்த வெளித் தோற்றமே போதுமானதாக இருந்தது.

ருவான்டாவின் எழுதப்படாத செவிவழி வரலாற்றின் படி, கி.பி. 700 ம் ஆண்டளவில் வருகை தந்த ஹூட்டுகள், மரங்களை வெட்டி, நிலங்களை பண்படுத்தி விவசாயம் செய்து வந்துள்ளனர். பல்வேறு வகையான பழ மரங்களை நட்டு, உணவுப்பயிர்களை பயிரிட்டு, அதன் பலனை அனுபவித்து வந்தனர். இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த துவா வேடர்களைப் போலன்றி, குடிசைகளை கட்டி, கிராமங்களில் வாழ்ந்தனர். சமுதாயம் வளர்ச்சி அடைந்த போது "முவாமி" என அழைக்கப்படும் மன்னனின் அதிகார மையமாக பரிணமித்தது. ஆயிரம் வருடங்களுக்கு முன்பே மத்திய ஆப்பிரிக்க இராச்சியமான, ருவான்டா முழுவதும், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் நிலவியது.

ஹூட்டு நாகரீகம் தொடங்கி முன்னூறு வருடங்களுக்குப் பின்னர், வடக்கே இருந்து மாடுகளை மேய்த்துக் கொண்டு வந்தனர், துட்சிகள் என்ற வந்தேறுகுடிகள். இது இந்தியாவில் ஆரியரின் வருகையுடன் ஒப்பு நோக்கத்தக்கது. துட்சிகள் சமுதாயத்தில் மாடுகள் வைத்திருப்பது செல்வச் செழிப்பின் அடையாளம். ஒருவர் எத்தனைமாடுகள் வைத்திருக்கிறார் என்பதை வைத்துதான், அவர் பணக்காரரா இல்லையா என்பது தீர்மானிக்கப்பட்டது. இந்த கலாச்சாரம் இன்றும் கூட (துட்சி இனக்குடும்பத்தை சேர்ந்த) கென்யாவின் மாசாய் இன மக்கள் மத்தியில் நிலவுகின்றது. தமது மாடுகளுக்கு மேய்ச்சல் நிலம் தேடியே துட்சிகள், ருவான்டாவிற்கு வந்தனர். அதனால் அங்கே விவசாயம் செய்து வந்த ஹூட்டுகளுடன் நிலத்திற்கான போட்டி, பொருளாதார முரண்பாடுகளை (கவனிக்கவும்: இன முரண்பாடுகள் அல்ல) தோற்றுவித்தது.

வேறுபாடான பொருளாதார நலன்கள் இருந்த போதிலும், காலப்போக்கில் துட்சிகள், தம்மை விட நாகரீகத்தில் மேலோங்கியிருந்த ஹூட்டுகளின் மொழியையும், மதத்தையும் மட்டுமல்ல கலாச்சாரத்தையும் தமதாக்கிக் கொண்டனர். முரண்நகையாக அதுவே துட்சி இன மேலாதிக்கத்திற்கு ஆதாரமாக அமைந்தது.
அதிகார வெறி கொண்ட துட்சிகள் விரைவில் ருவான்டாவின் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினர். ஹூட்டுகள் விவசாயத்தையே பெரிதாக மதித்ததால், அவர்களை தமது ஆட்சிக்கு கீழ்ப்படிய வைப்பது, புதிய ஆட்சியாளருக்கு இலகுவாக அமைந்தது. ஹூட்டுகள் உழைக்கும் வர்க்கமாகவும், துட்சிகள் ஆளும் வர்க்கமாகவும் மாறியது அப்போது தான். தேச நிர்வாகத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. துட்சிகள் ஆரம்பத்திலேயே மேலிருந்து கீழே வரும் அதிகாரப் படிநிலைச் சமூகமாக வாழ்ந்தவர்கள். அதனால் தான் 20 ம் நூற்றாண்டிலும், அதிகார வர்க்கம் முழுவதும் துட்சிகளை கொண்டிருந்தது. தேசப் பாதுகாப்பும் அவர்கள் வசமே இருந்தது. விவசாயம் சார்ந்த உற்பத்தி உறவுகளில் பண்ணையடிமை முறையை புகுத்தினர். துட்சி பண்ணையார்களின் மாடுகளுக்கு மேய்ச்சல் நிலம் தேவைப்பட்ட போது, ஹூட்டு விவசாயிகளிடம் நிலங்களை பெற்றுக் கொண்டு, பண்டமாற்றாக சில மாடுகளைக் கொடுத்தனர். ஹூட்டு விவசாயிகள் மாடுகளை பராமரித்தாலும், பிறக்கும் கன்றுக்குட்டிகளை மட்டும் துட்சி உரிமையாளருக்கு கொடுத்து விட வேண்டும். நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் உற்பத்தியின் பலன்களை அனுபவிப்பது நிலப்பிரபுவாகத் தானே இருக்க முடியும்?

19 ம் நூற்றாண்டில் ஐரோப்பிய வல்லரசுகள் ஆப்பிரிக்காவை பங்கு போட்ட போது, ஜெர்மனிக்கு கிடைத்த துண்டுகளில் ருவான்டாவும் ஒன்று. ஏற்கனவே இராச்சியத்தின் பகுதிகள் பிரிட்டனுக்கும் (உகண்டா), பெல்ஜியத்திற்கும் (கொங்கோ) தாரை வார்க்கப்பட்டது பற்றியோ, தன் நாடு தற்போது ஜெர்மன் ஏகாதிபத்தியத்திற்குள் அடங்குகின்றது என்பதையோ ருவான்டா மன்னன் அறிந்திருக்கவில்லை. இருப்பினும் தான்சானியாவில் இருந்து ருவான்டா விவகாரங்களை கவனித்துக் கொண்ட ஜெர்மன் ஆளுநர், அரசாட்சியில் தலையிடவில்லை. முதலாம் உலக யுத்தத்தில் ஜெர்மனியை தோற்கடித்த பெல்ஜியம், ருவான்டாவை தனது காலனியாக்கியது. "பெல்ஜியத்தால் பாதுகாக்கப்படும் பிரதேசம்" என்று ஐ.நா. மன்றத்தின் முன்னோடியான உலக மக்கள் பேரவை தீர்மானித்தது. காலனிக்கும், பாதுகாப்புப் பிரதேசத்திற்கும் இடையில் அதிக வித்தியாசம் இருக்கவில்லை. பெல்ஜியம் தனது முப்பது வருட காலனிய ஆட்சிக்காலத்தில் ஐரோப்பியமயப்பட்ட கல்வியையும், நிர்வாகத்தையும் அறிமுகப்படுத்தியது. அப்போது தான் இனவாதக் கருத்துகள் துட்சி, ஹூட்டு இன மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டன.

துட்சி நிலப்பிரபுக்களின் அதிகாரம் செலுத்தும் திறமையை கண்டு வியந்த ஐரோப்பியர்கள், துட்சிகள் "சாதாரண ஆப்பிரிக்கர்களாக" இருக்க முடியாது என முடிவுசெய்தனர். அந்த எண்ணத்தில் உதித்தது தான் இன்றைய இனவாத கோட்பாடுகள். பாப்பரசரின் பிரதிநிதியான வணக்கத்திற்குரிய "லெயோன் கிளாஸ்", மிஷனரி பாடசாலைகள் மூலம் இனவாதக் கருத்துகளையும் போதித்து வந்தார். ஆரம்ப காலங்களில் துட்சி இனப் பிள்ளைகளுக்கு மட்டுமே ஐரோப்பிய பாணி கல்வி போதிக்கப்பட்டது. "துட்சிகள் ஆளப்பிறந்தவர்கள்", "இனரீதியாக ஹூட்டுக்களை விட சிறந்தவர்கள்", போன்ற இனவாதக் கருத்துகள், பாடசாலை சென்ற பிஞ்சுமனங்களில் விதைக்கப்பட்டன. புதிய மத்தியதர வர்க்கமாக உருவாகிய, கல்வி கற்ற துட்சிகளை அரச கருமங்களை முன்னெடுக்கவும், மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட புதிய நிர்வாக அலகுகளில் அதிகாரிகளாகவும் நாடு முழுவதும் நியமிக்கப்பட்டனர். அதே நேரம், இன்னொரு பக்கத்தில் பெல்ஜியர்கள் சிறிய அளவு ஹூட்டு நடுத்தர வர்க்கத்தையும் உருவாக்கத்தவறவில்லை. இருப்பினும் ருவான்டா சுதந்திரம் பெற்ற நேரம், பெரும்பாலான அரச பதவிகளில் துட்சிகளே வீற்றிருந்தனர்.

1958 ல் எடுத்த கணக்கெடுப்பின் படி, மொத்த சனத்தொகையில் 14 வீதமான துட்சிகள், பல்கலைக்கழகங்களில் மூன்றில் இரண்டு பங்கு மாணவர்களாக இருந்தனர். சுதந்திரத்திற்குப் பின்னர் நடந்த பொதுத் தேர்தலில், பெரும்பான்மை ஹூட்டு மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற அரசாங்கம் தரப்படுத்தலை கொண்டு வந்து, இனப்பிரச்சினைக்கு வழி சமைத்தது. மெல்ல மெல்ல அதிகாரம் துட்சிகளின் கைகளில் இருந்து பறிக்கப்பட்டது. பேரினவாத அரசாங்கம், ஹூட்டுகளுக்கு அதிக சலுகைகள் வழங்கி, பெரும்பான்மை வாக்குவங்கியை தக்க வைத்துக் கொண்டது. துட்சியினத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள், இனப்பிரச்சினையை தீர்க்குமாறு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதும், ஹூட்டு இனவாத சக்திகளின் எதிர்ப்புக் காரணமாக ஒப்பந்தங்களை முறிப்பதும் நடந்தேறின. ஒவ்வொரு தடவையும் துட்சிகள் அஹிம்சா வழியில் எதிர்ப்புக் காட்டிய போதெல்லாம், இனக்கலவரங்கள் தூண்டி விடப்பட்டன. இதனால் பெருமளவு துட்சி மக்கள் அகதிகளாக அயல் நாடுகளில் புகலிடம் கோரினர். துட்சிகள் ஆயுதமேந்திய போராட்டத்தின் மூலமே தமது உரிமைகளைப் பெற முடியும் என இளைஞர்கள் நம்பினார். ஹூட்டு பேரினவாத அரசிற்கெதிராக ஆரம்பிக்கப்பட்ட துட்சி விடுதலை இயக்கம் (RPF) கெரில்லாத் தாக்குதல்களை நடத்தியது. இதையெல்லாம் எங்கேயோ கேட்ட மாதிரி இல்லையா? ஆமாம், ருவான்டா-இலங்கை, துட்சிகள்-தமிழர்கள், ஹூட்டுகள்-சிங்களவர்கள், பெல்ஜியம்-பிரிட்டன், இந்தச் சொற்களை மாற்றிப் போட்டுப் பாருங்கள். வரலாறு ஒரே மாதிரித் தோன்றும்.

1994 ம் ஆண்டு, துட்சியின மக்கள் வகைதொகையின்றி கொன்று குவிக்கப்பட்டாலும், துட்சிகளின் விடுதலைப்படையான RPF கெரில்லாக்களின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை. தலைநகர் கிகாலியை கிளர்ச்சிப்படை கைப்பற்றியதும், ஹூட்டு மக்களும் அரச படையினரும் கொங்கோவிற்குள் புகலிடம் கோரினர். இதனால் யுத்தம் அயல்நாடான கொங்கோவிற்கும் பரவியது. RPF இயக்கத்தில் துட்சி இன மேலாண்மைக் கருத்துகளை கொண்ட போல் ககாமே போன்ற தலைவர்களின் ஆதிக்கம் நிலவுகின்றது. அதுவே புதிய அரசின் கொள்கையை தீர்மானிக்கின்றது. இன அழிப்புக் குற்றத்தில் ஈடுபட்ட மாஜி இராணுவ வீரர்களை தேடுவதாக காரணம் காட்டி, இரண்டு தடவை ருவான்டாவின் புதிய (துட்சி) இராணுவம் கொங்கோவிற்குள் படையெடுத்தது. அது சர்வதேச கண்டனங்களையும் தோற்றுவித்தது. இருப்பினும் பலமான அமெரிக்க வல்லரசின் ஆதரவு காரணமாக, கொங்கோவில் நிலை கொண்டிருந்த ஐ.நா.சமாதானப் படை சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. (ஐ.நா. படை அதிகாரிகள் துட்சி இராணுவத்துடன் ஒத்துழைத்தாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.)

"பெரும்பான்மை ஹூட்டு இன மக்கள் கொங்கோ அகதி முகாம்களில் வசித்துக் கொண்டிருக்கையில், ருவான்டாவில் தங்கி விட்ட சிறுபான்மை துட்சிகளை மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்தும் RPF அரசாங்கம் நீதி நெறிமுறைக்கு உட்பட்டதா?" என்ற கேள்வி சர்வதேச அரங்கில் முன் வைக்கப்பட்டது. ஆனால் சிறுபான்மையினரின் அரசாங்கம் கடந்த பத்தாண்டுகளாக நிலைத்து நிற்பதுடன், சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. சில வருடங்களுக்குப் பின்னர், கணிசமான அளவு ஹூட்டுகள் தயக்கத்துடன் தாயகம் திரும்பினர். RPF ம் இன அழிப்பில் ஈடுபட்டது என்பதும், துட்சி ஆயுததாரிகள் ஹூட்டு மக்களை கொன்றுள்ளனர் என்ற குற்றச்சாட்டும், மறுக்க முடியாத உண்மைகள். ருவான்டாவில் துட்சியின ஆதிக்கம் நிலைநாட்டப்பட்ட பின்னர், RPF அரசிற்கு ஹூட்டுகளை வேட்டையாட வேண்டிய தேவை இருக்கவில்லை. ஜனாதிபதி போல் ககாமேயின் கவனம் பின்னர் தனது இனத்திற்குள் இருக்கும் எதிரிகளை நோக்கி திரும்பியது. "இன அழிப்பில் ஈடுபட்ட கொலைகாரர்கள்" என்பது தான் தீர்த்துக் கட்டப்படும் அனைத்து எதிரிகள் மீதும் வைக்கப்படும் குற்றச்சாட்டு. கொங்கோவை தளமாகக் கொண்ட, ஹூட்டுகளின் புதிய கெரில்லா இயக்கம் ஒன்று அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவதாக அண்மைக்காலமாக கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நவீன ருவான்டாவின் வரலாற்றில் ஏகாதிபத்திய தலையீடு பல்வேறு நோக்கங்களுக்காக வெளிப்பட்டுள்ளது. இதற்காக ஏகாதிபத்தியம் தனது பிரசைகளின் உயிரையும், தேசத்தின் நன்மதிப்பையும் கூட விலையாக கொடுத்துள்ளது. காலனிய ஆதிக்கம் காலாவதியாகி, நவ-காலனிய காலகட்டம் ஆரம்பித்த நேரம், பெல்ஜியம் ருவான்டாவை பிரான்சிற்கு தத்துக் கொடுத்து விட்டிருந்தது. அந்நியக் கடன் வழங்குவதில் முதன்மையான நாடான பிரான்சின் வற்புறுத்தலுக்கு இணங்கித் தான், ருவாண்டாவின் ஹூட்டு அரசும், RPF இயக்கமும் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டன. சமாதானத்தை நிலைநாட்ட ஐ.நா.சமாதானப்படை (MINUAR) வந்தது. ஒப்பந்தம் மீறப்பட்டு, மீண்டும் யுத்தம் மூண்ட பின்னர், ஜனாதிபதி ஹபியாரிமனா கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் முகமாக, ஐ.நா.சமாதானப்படையில் பணியாற்றிய பத்து பெல்ஜிய வீரர்கள் ஹூட்டு தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு ஐ.நா. படைகள் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டன.
இனப்படுகொலைக்கு தலைமை தாங்கிய, ஹூட்டு துணைப்படையான Interahamwe க்கு பிரான்ஸ் இராணுவப் பயிற்சி வழங்கி வந்தது. இதனால் "பிரான்சிற்கும் இன அழிப்பில் பங்குண்டு" என்ற குற்றச்சாட்டை இன்றைய ருவான்டா (துட்சி) அரசு பன்னாட்டு ஊடகவியலாளரின் முன்னால் (டிசம்பர் 2008) சமர்ப்பித்தது.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, காலஞ்சென்ற பிரெஞ்சு ஜனாதிபதி மித்தரோன் உட்பட பல பெரிய தலைகள் இன அழிப்பு குற்றத்திற்காக சர்வதேச நீதிமன்றத்திற்கு முன்னால் நிறுத்தப்படுவது சாத்தியமானதல்ல. இருப்பினும் இஸ்ரேலைப் போல, ருவான்டாவும் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாகி வருவதை இது எடுத்துக் காட்டுகின்றது. மத்திய ஆப்பிரிக்காவில் இன்னொரு இஸ்ரேலை உருவாக்குவது தான் அமெரிக்காவின் நோக்கமும். இஸ்ரேல் "யூத இனப்படுகொலையை தேசிய அரசியல் சித்தாந்தமாக" கடைப்பிடிப்பதைப் போல, இன்றைய ருவான்டாவில் துட்சி இனப்படுகொலை பற்றிய நினைவுகூரல் தவிர்க்கவியலாத அம்சமாகி விட்டது. இனப்படுகொலைக்கு பலியானவர்களின் ஞாபகச் சின்னங்கள் பற்றி ஒவ்வொரு பிரசையும் அறிந்திருக்க வேண்டும். ருவான்டாவும் இஸ்ரேலைப் போலவே சர்வதேச கண்டனங்களைப் பொருட்படுத்தாது அயல்நாடுகள் மீது படையெடுக்க முடிகிறது. கொங்கோவில் கபிலாவின் தேசியவாத அரசு, சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை போட்ட கையோடு, கிழக்கெல்லையில் படையெடுத்த ருவான்டா இராணுவத்துடன் நீண்ட போருக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பேரழிவை ஏற்படுத்திய யுத்தம் கொங்கோவை அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வைத்தது. அமெரிக்க இராணுவ ஆலோசகர்கள் ருவான்டா இராணுவத்தை, ஆப்பிரிக்காவின் தலைசிறந்த நவீன இராணுவமாக்க பாடுபடுகின்றனர். வருங்காலத்தில் ஒரு குட்டி நாடான ருவான்டா, தன்னை சுற்றியிருக்கும் பலவீனமான பெரிய நாடுகளை பயமுறுத்தப் போகின்றது.

Friday, May 15, 2009

மதத்தின் பொருளாதார அடிப்படைகள்

மத அடிப்படைவாதம்: ஒரு மேலைத்தேய இறக்குமதி - 4
"முதலாளித்துவம் ஒரு மேற்கத்திய சித்தாந்தம்" என்று இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் பிரச்சாரம் செய்த போதிலும், முதலாளித்துவ பொருளாதாரம் இஸ்லாமின் வருகையின் போதே ஆரம்பமாகி விட்டது. ஐரோப்பிய முதலாளித்துவம் வெனிஸ் நகரத்தில் இருந்து ஆரம்பமாகின்றது. வெனிசியர்கள் சிலுவைப்போர் காலத்தில் அரேபியரிடம் இருந்த நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டனர். இஸ்லாம் என்ற மதம் கூட அரேபிய வணிகர் சமூகத்தில் இருந்து தான் தோன்றியது.

சந்தைப் பொருளாதாரத்திற்கு இஸ்லாம் ஒரு போதும் தடையாக இருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், இஸ்லாமிய நாகரீகத்தில் சந்தை மேலும் வளம் பெற்றது. சீனா முதல் ஐரோப்பா வரையிலான சர்வதேச சந்தையை தோற்றுவித்தது. இறைத்தூதர் முகமதுவின் பொன்மொழிகள் அடங்கிய "ஹாடித்" தில் "சந்தையில் விலை நிர்ணயம் செய்வது" பற்றிய வசனங்கள் உள்ளன. "விற்பனைப் பண்டங்களின் கேள்வியைப் பொறுத்து, விலையில் ஏற்ற இறக்கம்" இருக்க அனுமதிக்கும் இறைத்தூதர், "பற்றாக்குறை ஏற்படும் காலத்தில் விலையை உயர்த்துவதற்கு" சம்மதிக்கவில்லை. வர்ததகர்கள் ஏகபோக உரிமை பெறுவதும், வேண்டுமென்றே விலையை உயர்த்துவதும் போன்ற செயல்களை அன்றைய இஸ்லாமிய அரசாங்கங்கள் கட்டுப்படுத்தின. உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் காலத்தில் அரசே தலையிட்டு அதிக பட்ச விலையை நிர்ணயித்தது.

மேற்கத்திய பொருளாதார அறிஞர்கள் சந்தை சுதந்திரமாக இயங்க வேண்டும் என்ற விதிகளை கொண்டு வந்தனர். இருபதாம் நூற்றாண்டில், அமெரிக்காவில் பகாசுர கம்பெனிகள் ஏகபோக உரிமை பெற்று பொருட்களின் விலையை செயற்கையாக உயர்த்தி வந்தன. அப்போது அரசு தலையிட்டு ஏகபோகத்தை உடைக்க வேண்டி வந்தது. இதனால் அரசு தலையீடற்ற தூய சந்தைப் பொருளாதாரம் இருக்கமுடியாது. ஐரோப்பாவில் உருவான "வர்த்தகர் சமூகம்" போன்று இஸ்லாமியப் பேரரசில் உருவாகாததற்கு வேறு காரணங்கள் இருக்கலாம்.
1. மன்னனின் அதிகாரம் பலமாக நிலைநிறுத்தப் பட்டிருந்தது. வணிகர்களும், புத்திஜீவிகளும் மன்னனுக்கு சேவையாளர்கள் என்ற தரத்தில் இருந்தனர். அவர்கள் பலமான தலைமைச் சமூகமாக உருவாவதற்கான வாய்ப்புகள் முன்கூட்டியே தவிர்க்கப்பட்டன.
2. இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம். இந்த சட்டத்தின் படி சொத்தின் பெரும்பகுதி தானாகவே மூத்த பிள்ளைக்கு போகாது. அனைத்து பிள்ளைகளுக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். தனி நபருக்கும், அசையா சொத்துகளுக்குமிடையிலான பலவீனமான தொடர்பு, பெருமளவில் காணி நிலங்களை பாதித்தது. வாரிசு அற்றோர் தமது சொத்துகளை, அல்லது காணிகளை மசூதிக்கு கொடுக்கும் வழக்கம் உள்ளது.
3. மசூதிகள் வழிபாட்டு ஸ்தலம் என்பதற்கு அப்பால், சிறு கடைகளைக் கொண்ட வியாபார மையமாகவும் இயங்கி வருகின்றன. இருப்பினும் மத்திய கால ஐரோப்பாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை சொந்தமாக வைத்திருந்தது போல மசூதிகள் வைத்திருக்கவில்லை. அதாவது தேவாலயங்கள் நிலப்பிரபுத்துவ பொருளாதாரத்தையும், மசூதிகள் முதலாளித்துவ பொருளாதாரத்தையும் பின்பற்றின.

இன்றைய மத அடிப்படைவாதிகள் (உதாரணத்திற்கு ஹமாஸ்) சில நேரம் சோஷலிசம் பேசுகின்றனர். இது குறித்து சில விளக்கங்கள். முதலாவது தலைமுறையை சேர்ந்த வகாபிகளிடம் சோஷலிச போக்குகள் காணப்படவில்லை. கிட்டத்தட்ட இதே காலத்தில் இந்தியாவில் தோன்றிய ஜாமாத்-ஏ-இஸ்லாமியும் பகிரங்கமாக முதலாளித்துவத்தை பின்பற்றியது. மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்களே இந்த இயக்கத்திற்கு தலைமை தாங்கினர். அதற்கு மாறாக பாலஸ்தீனம், அல்ஜீரியா, லெபனான் போன்ற நாடுகளில் தோன்றிய போர்க்குணாம்சம் மிக்க மத அடிப்படைவாத அமைப்புகள், ஏழை அடித்தட்டு வர்க்கத்தில் இருந்து தோன்றியிருந்தன. தாம் சார்ந்த வர்க்கத்தின் ஆதரவு இன்றியமையாதது என்பதால், சோஷலிச பொருளாதார திட்டங்களை முன்மொழிகின்றன. வட்ட்யில்லாத கடன் வழங்கும் இஸ்லாமிய வங்கிகள், ஏழைகளுக்கான இலவச மருத்துவ மனைகள், இலவச பாடசாலைகள் என்பன இவர்களின் முயற்சியால் செயல்வடிவம் பெறுகின்றன.

"வட்டி அறவிடத் தடை" என்பது இஸ்லாம் மட்டும் கொண்டுவந்த விதியல்ல. யூத, கத்தோலிக்க, புரட்டஸ்தாந்து மதங்கள் கூட ஆரம்பத்தில் குறிப்பிட்ட காலம் வட்டி அறவிட தடை விதித்திருந்தன. ஆயினும் காலப்போக்கில் பொருளாதார வளர்ச்சி இந்தத் தடையை மீறியது. இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் தற்போது யூதர்களை கந்து வட்டிக்காரராகவும், முதலாளிகளாகவும் காட்டி பொது மக்களின் ஆதரவை திரட்டுகின்றனர். கொடுத்த கடனுக்கு அநியாய வட்டி வாங்கி ஏழைகளை வருத்துவதை குர் ஆன் கடுமையாக கண்டிக்கின்றது. இதன் அடிப்படையில் கட்டப்பட்ட இஸ்லாமிய வங்கிகள், சாதாரண மக்களுக்கு வழங்கும் சிறு கடன்களுக்கு வட்டி அறவிடுவதில்லை. எகிப்தில் மத அடிப்படைவாதிகள் இஸ்லாமிய வங்கிகளை நிறுவி ஏழைகளுக்கு சேவை செய்கின்றனர். அந்த வங்கிகளுக்கு நன்கொடை வழங்கும் புரவலர்கள் பலர் மத்திய கிழக்கு நாடுகளில் பணி புரிந்து விட்டு வந்தவர்கள். அதைவிட பெருமளவு நிதி சவூதி அரேபியாவில் இருந்து வருகின்றது. வேறொருவிதமாக கூறினால், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பணக்கார மேற்குலக நாடுகளின் நிதியில் இயங்குவது போல, சவூதி அரேபியா பல ஏழை முஸ்லிம் நாடுகளில் தொண்டு செய்கின்றது.

ஒரு முஸ்லிமின் பிரதான மதக் கடமையான "ஸகாட்" வழங்குவதும், மதவாத சோஷலிசத்திற்கு வலுச் சேர்க்கின்றது. ஸகாட் என்ற, வசதி படைத்தவர்கள் தமது வருமானத்திலிருந்து வழங்கும் சிறு தொகையானது, ஏழை மக்களின் நலன் காக்க பயன்படுத்தப் பட வேண்டும். என்னே அதிசயம்! 20 ம் நூற்றாண்டு ஐரோப்பிய சமூக ஜனநாயகக் கட்சிகள், ஸகாட் முறையை தமது நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தினர். ஆனால் அவர்களது "நலன்புரி அரசு" தொழில் செய்யும் அனைத்து பிரசைகளிடம் இருந்தும் வரி அறவிட்டது. ஏழை முஸ்லிம் நாடுகள் ஐரோப்பா சொல்லிக் கொடுத்த முதலாளித்துவத்தை பின்பற்றின. ஆனால் இஸ்லாமின் ஸகாட் எவ்வாறு நலன்புரி அரசை கொண்டு வந்தது என்பதை மட்டும் வசதியாக மறந்து விடுகின்றனர். இதனால் முதலாளித்துவ தீய விளைவுகளால் ஏழைகள் பாதிக்கப்படும் போது, மேற்குலக கோட்பாடுகளை பின்பற்றுவதே துயரத்திற்கு காரணம் என்று மத அடிப்படைவாதிகள் பிரச்சாரம் செய்கின்றனர். இஸ்லாமிய அரசு வந்தால் இந்த நிலை ஒரே இரவில் மாறி விடும் என்று மக்களை ஏமாற்றுகின்றனர்.

அன்றிருந்த இஸ்லாமிய இராச்சியமாகட்டும், வருங்காலத்தில் வரப்போகும் இஸ்லாமிய குடியரசாகட்டும், அது எப்போதும் வர்க்கச் சமூகமாகவே இருக்கும் என்பதை மறுக்க முடியாது. இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை நிர்வகித்த அரச குடும்பமும், மேட்டுக்குடி பிரபுக்களும், வழக்கம் போல மது, மாது, போன்ற கேளிக்கைகளில் உல்லாசமாகப் பொழுதைக் களித்தனர். அதற்கு மாறாக சாதாரண குடியானவர்கள் வயல்களில் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது. அவர்களின் மனைவி, பிள்ளைகளும் சேர்ந்தே வேலை செய்யுமளவிற்கு குடும்பக் கஷ்டம்.

பல தார மணம் என்பது, அன்றும் இன்றும் வசதி படைத்தவர்களுக்கு மட்டும் கிடைக்கும் ஆடம்பரம். இஸ்லாமிய சட்டப்படி அனைத்து மனைவிகளையும் சமமாகப் பராமரிப்பதென்பது பணக்காரருக்கு மட்டுமே இயலும். திருட்டுக் குற்றத்திற்காக கைகளை இழந்தவர்கள் கூட ஏழை மக்கள் தான். வசதி படைத்த மேட்டுக்குடியினர் பாரதூரமான குற்றம் செய்தாலும் மென்மையான தண்டனைகளுடன் தப்ப முடிந்தது. மேலும் எத்தகைய கடுமையான தண்டனையாலும் சாதாரண திருட்டைக் கூட முற்றாக ஒழிக்க முடியவில்லை. மனிதாபிமற்ற தண்டனைகளுக்கு பேர் போன சவூதி அரேபியாவிலேயே திருட்டுக் குற்றங்கள் அதிகரிக்கின்றன. ஊடகங்கள் வெளியிடுவதில்லை என்பதால், அப்படி எதுவும் நடப்பதில்லை என்று அர்த்தமில்லை.

நமது காலத்து மத அடிப்படைவாதிகள், அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், தனியுடமை பற்றியோ, அல்லது சமூக ஏற்றத்தாழ்வுகள் பற்றியோ மறந்தும் கேள்வி எழுப்புவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை குர் ஆனில் சொல்லப்பட்ட, இறைவனின் நேரடி ஆட்சிக்கு தம்மை தயார் படுத்துகின்றனர். கிறிஸ்தவர்கள் அதையே இயேசு கிறிஸ்து அரசனின் ஆட்சி என்று சொல்கின்றனர். இந்துக்கள் அதனை கலியுகக் கல்கி அவதாரம் என்றழைக்கின்றனர். எல்லா மதங்களும் தொடங்கும் புள்ளி ஒன்றென்றால், எல்லா மத அடிப்படைவாதங்களும் முடியும் புள்ளியும் ஒன்று தான்.

---(முற்றும்)---

முன்னைய பதிவுகள்:
3.பெண்ணடிமைத்தனமும் மதவாத சட்டங்களும்
2.இஸ்லாமிய மத அரசியலின் தோற்றம்
1.மத அடிப்படைவாதம் : ஒரு மேலைத்தேய இறக்குமதி

Thursday, May 14, 2009

பெண்ணடிமைத்தனமும் மதவாத சட்டங்களும்

மத அடிப்படைவாதம்: ஒரு மேலைத்தேய இறக்குமதி - 3
இதுவரை இஸ்லாமிய உலகில் மத அடிப்படைவாதத்தை தோற்றுவித்த சக்திகளைப் பார்த்தோம். இனி அவர்களின் தத்துவார்த்த கொள்கை விளக்கங்களை பார்ப்போம். முதலில் மத அடிப்படியாவாதம் என்றால் என்ன என்பதற்கு சரியான வரைவிலக்கணம் கொடுக்கப்படுவது அவசியம். நடைமுறையில் இருக்கும் பல சொற்களின் அர்த்தம் தெரிந்து பயன்படுத்துவது சிறந்தது.
1. பழமைவாதிகள்: சமயச் சடங்குகளை, ஆச்சாரங்களை வழுவுறா வண்ணம் பின்பற்றுவபவர்கள். தம்மைத் தாமே சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ளும் இவர்கள் பொதுவாக அரசியலில் ஈடுபடுவதில்லை.
2. இஸ்லாமியவாதிகள்: இஸ்லாம் என்ற மதத்தின் பெயரால் அரசியல் நடத்துபவர்கள். பாராளுமன்ற கட்சி அரசியல் நடத்துபவர்கள் முதல், ஆயதப் போராட்டத்தில் நம்பிக்கை உள்ள தீவிரவாதிகள் வரை.
3. மத அடிப்படைவாதிகள்: சாத்வீக வழியிலேயோ, அல்லது வன்முறைப் போராட்டம் மூலமோ இஸ்லாமியப் புரட்சியை ஏற்படுத்த விரும்புபவர்கள். புனித நூல் சட்டமாகும். அனைவரும் மத நெறிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுவர்.
இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள், மேற்கே மொரோக்கோ முதல் கிழக்கே சீனா வரையிலான பரந்த இஸ்லாமிய சாம்ராஜ்யம் ஒன்றை அமைக்க கனவு காண்கின்றனர். மேற்குறிப்பிட்ட விளக்கங்கள் பிற மதங்களை சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வெவ்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்களாக இருந்த போதிலும், அவர்கள் எல்லோரும் தத்துவார்த்த ரீதியாக ஒன்று படுகின்றனர். முதலில் மேற்குலக நாடுகளால் முஸ்லிம்கள் அடக்கப்படுவதாகவும், அதற்கு தமக்கிடையே ஒற்றுமையின்மையால் முஸ்லிம்கள் பலவீனமாக இருப்பதாகவும், மதப்பற்று குறைந்ததுமே காரணம் என்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் என அழைத்துக் கொள்பவர்கள் எல்லோரும் முஸ்லிம்கள் அல்ல. இஸ்லாமிய புனித நூலின் சட்டங்களுக்கு அமைய வாழ்பவர்கள் மட்டுமே உண்மையான முஸ்லிம்கள். இதேநேரம், சட்டங்கள் பலவிதமாக மொழிபெயர்க்கப் படுவதால் வரும் குழப்பங்கள் இன்னும் தீரவில்லை.

"மத ஒற்றுமை" என்றால் என்னவென்று விரிவாகப் பார்ப்போம். பத்திற்கும் குறையாத மதப்பிரிவுகள் ஒன்று சேருதல். வர்க்கங்கள் மோதல் இன்றி சமரசம் செய்து கொள்தல். தேசியம் என்பது மேலைத்தேய கற்பிதம் என்பதால், "முஸ்லிம்" என்பது மட்டுமே ஒரேயொரு தேசிய அடையாளம். தற்காலத்தில் நமக்குத் தெரிந்த சில நாடுகளை, "முஸ்லிம் நாடுகள்" என அழைக்கபடுவதை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு நாடு முதலாளித்துவ அல்லது சோஷலிச கொள்கைகளை பின்பற்றினால், அவையெல்லாம் மேலைத்தேய சித்தாந்தங்கள் என்று நிராகரிக்கின்றனர். மதத்தை பின்பற்றாத மிதவாதிகளை அல்லது மதச்சார்பற்றவர்களை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. "எம்மதமும் சம்மதம்" என்று கூறுவதை பிழையான நிலைப்பாடாக கருதுகின்றனர். அவர்களின் உலகில் நாஸ்திகர்கள் என்று யாரும் இருக்க முடியாது, எல்லோரும் எதோ ஒரு மதத்தை சேர்ந்தவர்கள். ஒரே மதம்: இஸ்லாம், ஒரே மொழி: அரபு, ஒரே இனம்: முஸ்லிம் என்பது, இஸ்லாமியக் குடியரசின் தாரக மந்திரம்.

மேலைத்தேய நாகரீகம் தமது தொன்மையான கலாச்சாரத்தை பாதிக்கின்றது என குறைப்படுகின்றனர். ஆபாசப்படங்கள், போதைப்பொருட்கள், அரைகுறை ஆடை அணிதல், கண்டவனுடன் திரியும் சுதந்திரப்போக்கு, போன்ற மேலைநாட்டு கலாச்சார சீரழிவு தமது பிள்ளைகளை கெடுத்து விடும் என அஞ்சுகின்றனர். பழமைவாத பிற்போக்குத்தனங்களில் ஊறிய மக்களை, "கலாச்சார அழிவு" பற்றிய பீதியூட்டி, அதனை மேற்குலகிற்கு எதிரான வெறுப்பாக வளர்க்கின்றனர். "ஐரோப்பியர்கள் கலாச்சாரமற்றவர்கள். நாம் பழம்பெருமை வாய்ந்த கலாச்சாரத்தை கட்டிக்காப்பவர்கள்." என்ற கூற்று இன அடிப்படையில் தான் முன்வைக்கப்படுகின்றது. மேலைத்தேய கலாச்சார ஆதிக்கத்தை எதிர்க்கும் மத அடிப்படைவாதிகள், மேலை நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பாவனைப்பொருட்களை எதிர்ப்பதில்லை. அதியுயர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட மேற்குலக உற்பத்திப் பொருட்கள், குறிப்பாக ஆயுதங்கள் இன்றி அவர்களது இஸ்லாமியக் குடியரசு நிலைக்க முடியாது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வட மாநிலங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். பல தசாப்தங்களாக நாட்டை இரும்புப்பிடியில் வைத்திருந்த சர்வாதிகாரம் மறைந்து, ஜனநாயகம் வந்த போது, முஸ்லிகள் தமக்கு ஷரியா சட்டம் வேண்டும் எனக் கோரினர். இதை அடுத்து ஏற்பட்ட கிறிஸ்தவ-முஸ்லிம் கலவரத்தால், இறுதியில் ஷரியா சட்டம் கொண்டுவர அரசு இணங்கியது. இது நடைமுறைக்கு வந்த பின்னர் தான், வதந்திகள் எவ்வளவு தூரம் ஆபத்தானவை என தெரிய வந்தது. அரசியல் சட்டப்படி, ஷரியா சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இரண்டு வகை நீதிமன்றங்கள் இருக்கின்றன. முஸ்லிம் அல்லாதவர்கள் தமக்கு விரும்பிய நீதி மன்றத்தில் நீதி கோரலாம். ஆனால் ஷரியா சட்டம் அனைத்து மதத்தினருக்கும் பாதிப்பான கொடுங்கோல் சட்டம் என்பது போல பரப்பட்ட வதந்தி பல உயிர்களை காவு கொண்டிருந்தது.

இஸ்லாமிய சட்டம் என பொதுவாக அறியப்பட்ட ஷரியா (பாதை) பற்றிய பரந்த அறிவு பலரிடம் இல்லை. பைபிளில் (பழைய ஏற்பாடு) மோசசிற்கு ஆண்டவன் அளித்த பத்துக் கட்டளைகள் தான் நவீன சட்டங்களின் மூலமாக கருதப்படுகின்றது. பழைய ஏற்பாட்டில் காணப்படும் பல சட்டங்கள், குர் ஆனிலும் இருக்கின்றன. அதே நேரம் அரேபிய குடாநாட்டின் பாரம்பரிய சட்டங்களும் சேர்ந்திருக்க வாய்ப்புண்டு. இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படை குர் ஆனாக இருந்த போதிலும், 12 ம் நூற்றாண்டில் தான் சட்டவாக்கம் முழுமை பெற்றது. அந்தக் கால கட்டத்தில் நான்கு சட்டக்கல்லூரிகள் நிறுவப்பட்டு, சட்டக் படிப்பில் புலமை பெற்றவர்களைக் கொண்டு ஆராய்ச்சிகள் நடந்தன. நான்கு கல்லூரிகளும் அதனை நிறுவிய அறிஞர்களின் பெயர்களால் அறியப்படுகின்றன. இஸ்லாமிய சட்டம் பற்றிய இந்த நான்கு கல்லூரிகளின் பார்வையும், கொடுக்கும் விளக்கங்களும் சில நேரம் வேறுபடுகின்றன. "ஹனாபி கல்லூரி" மிதவாத போக்குடையது. அதற்கு மாறாக "மாலிக் கல்லூரி" கடும்போக்கு பழமைவாதிகளை கொண்டது. "ஷாபி கல்லூரி" இவையிரண்டுக்கும் இடைப்பட்ட போக்குடையது. "ஹன்பலி கல்லூரி" வஹாபியரின் கோட்டை. இவை நான்கும் சவூதி அரேபியாவில் அமைந்திருந்தன. ஒரு காலத்தில் இஸ்லாமியப் பேரரசின் தலைநகராக இருந்த பாக்தாதில் "கானூன்" என்ற பெயரில், மிகவும் மாறுபட்ட மதச்சார்பற்ற சிவில் சட்டம் ஏற்படுத்தப்பட்டது. இது பெரும்பாலும் இன்று நடைமுறையில் உள்ள மேற்கத்திய நவீன சட்டத்தை போன்றது.

இதிலிருந்து இஸ்லாமிய ஷரியா சட்டம், எந்தக் கல்லூரியால் முன்மொழியப்பட்டது என்பதைப் பார்ப்பதும் அவசியம். திருட்டுக் குற்றத்திற்கு கையை வெட்டுவது போன்ற சரத்துகள் உள்ளன தான். ஆயினும் இது கடும்போக்காளரின் கல்லூரியில் மட்டுமே போதிக்கப்படுகின்றது. இத்தகைய கொடூரமான தண்டனைகளுக்கு மாற்றாக, மென்மையான தண்டனைகளை வழங்கும் நீதிமன்றங்களும் உண்டு. உதாரணத்திற்கு பாகிஸ்தானில் அமுலில் உள்ள ஷரியா சட்டம் அது கை வெட்டுவது போன்ற தண்டனைகளை வழங்குவதில்லை. மேலும் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்திருக்கும் காலகட்டத்தில் மட்டுமே கடுமையான சட்டங்களை குர் ஆன் முன்மொழிகின்றது. இதே நேரம் இறைத்தூதர் முகமது வாழ்ந்த காலத்தையும், அப்போதிருந்த அரேபிய சமூகத்தையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

அன்றைய சமூக கட்டுப்பாடுகள் எந்த அளவிற்கு மோசமாக இருந்தது, என்பதை ஒற்றியே இது போன்ற சட்டங்கள் உருவாக்கப்பட்டன. உதாரணத்திற்கு மாற்றானுடன் தகாத உறவு வைத்திருந்த பெண்ணை கல்லால் எறிந்து கொல்லும் தண்டனை பற்றி குர் ஆன் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், தகாத உறவைக் கண்ட நான்கு சாட்சிகள் தேவை. இப்படியான சம்பவங்களை நேரில் கண்ட நான்கு சாட்சிகளை தேடிப்பிடிப்பது இலகுவான காரியமல்ல. வதந்திகளை கேள்விப்பட்டே குற்றஞ் சாட்டப்பட்ட பெண்ணை கல் வீசிக் கொன்று கொண்டிருந்த சமூகத்தில், சாட்சிகளை விசாரித்த பிறகு தண்டனையை நிறைவேற்றுமாறு குர் ஆன் சட்டம் கொண்டு வந்தது. அன்றிருந்த பெண்களின் கையறு நிலையுடன் ஒப்பிடும் போது, இந்த சட்டம் பெண்ணுக்கு சில உரிமைகளை வழங்கியது. இயேசு வாழ்ந்த யூத சமூகத்திலும் அத்தகைய வழக்கம் இருந்ததை பைபிள் கதை ஒன்று எடுத்துக் காட்டுகின்றது.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர், இஸ்லாமிய மதத்தை நிந்தித்தற்காக சல்மான் ருஷ்டி என்ற எழுத்தாளருக்கு ஆயத்துல்லா கொமெய்னி வழங்கிய மரண தண்டனை தீர்ப்பிற்கு பின்னர், பத்வா என்ற சொல் உலகப்பிரசித்தி பெற்றது. அதிலிருந்து பலர் பத்வா என்றால் மரண தண்டனை என அர்த்தப்படுத்திக் கொண்டனர். ஆனால் அந்த சொல்லின் உண்மையான அர்த்தம் வேறு. ஒரு வழக்கறிஞர் தன்னிடம் சட்ட உதவி கேட்டு வருபவரிடம், சட்டப் புத்தகங்களை புரட்டி வழக்கு சார்பான விளக்கம் கொடுப்பார். அதை அடிப்படையாக கொண்டு நீதிபதி தீர்ப்பு சொல்வார். அதற்கு தான் பத்வா என்று பெயர். ஆனால் கொமெய்னி வழங்கிய பத்வா வேறு. அது அரசியல் நோக்கத்திற்காக மதத்தையும், சட்டத்தையும் திரித்த பத்வா. நமது காலத்து மத அடிப்படைவாதிகள் எல்லாம் இப்படி மதப்போர்வை போர்த்திய அரசியல்வாதிகள் தாம். பிற்போக்குவாதிகளின் விவேகமற்ற செயல்கள், பலரது கவனத்தை ஈர்க்கின்றன.

முஸ்லிம் பெண்கள் தலையில் இருந்து பாதம் வரை மூடும் "நிகாப்", அல்லது "பூர்க்கா", அல்லது "ஷடோர்" என்ற ஆடை அணிவது பற்றி உலகம் முழுவதும் பலவாறாக விவாதிக்கப் படுகின்றது. இந்த ஆடையின் பூர்வீகம் ஈரான். அங்கே ஷடோர் என அழைக்கப்படும் இந்த ஆடை, இஸ்லாமிற்கு முந்திய கலாச்சாரத்தை சேர்ந்தது. குர் ஆன் தோன்றிய காலத்தில், அரேபியாவில் இந்தப் பழக்கம் இருந்ததற்கான ஆதாரம் இல்லை. புனித நூல் இது பற்றி தெளிவாக எங்குமே குறிப்பிடவில்லை. இறைத்தூதர் முகமதுவை பின்பற்றிய பெண்களுடன், அமைப்பை சேர்ந்த ஆண்கள் திரைக்கு பின்னால் இருந்தே பேச வேண்டும் என்று ஒரு வாசகம் உண்டு. மேலும் தம்மை வேறுபடுத்திக் காட்ட முஸ்லிம் பெண்கள் அடக்கமான ஆடை அணிய வேண்டும் என்றும் சொல்லப்படுகின்றது. அனேகமாக திரை என்ற பொருள்படும் "ஹிஜாப்" என்ற அரபுச் சொல், உடலை மூடும் ஆடை என மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம். ஒரு வீட்டிற்கு ஆண்கள் விருந்தினராக செல்லும் நேரம், அந்த வீட்டு பெண்கள் திரை மறைவில் இருப்பர். இந்தக் குறிப்பு பைபிளிலும் வருகின்றது. இப்போதும் எமது நாடுகளிலும் சில பழமைவாதம் பேணும் குடும்ப பெண்கள், வீட்டிற்கு அந்நிய ஆண்கள் வந்தால் சமையலறைக்குள் சென்று விடும் பழக்கம் இங்கே நினைவுகூரத்தக்கது.

இஸ்லாமிய அரசர்கள் ஆண்ட காலத்தில், அவர்களின் அரண்மனையில் ஹாரம் (அந்தப்புரம்) என்ற பெண்களுக்கு தனியே ஒதுக்கப்பட்ட பகுதி இருந்தது. அந்தப்புரத்தில் இருந்த பெண்கள், வெளியுலகம் காணாது, சுதந்திரமின்றி அடைந்து கிடந்தனர். நாட்டுப்புறங்களில் ஏழைக் குடியானவன், தனது வீட்டில் தனியான அந்தப்புரம் வைத்திருக்க வசதியற்றவன். அதனாலும் தனது வீட்டுப் பெண்கள் உடலை மூடும் ஆடை அணிந்து வெளியே செல்லுமாறு கட்டுப்படுத்தி இருக்கலாம். நாட்டுப்புற பெண்கள், வயலில் சேலை செய்ய வேண்டி இருந்தது, அல்லது சந்தைக்கு சென்று வர வேண்டி இருந்தது. ஆகவே அந்தப்புரமாக இருந்தால் என்ன, உடலை மூடும் ஆடையாக இருந்தால் என்ன, பெண் அடக்குமுறையை நெறிப்படுத்தவே கொண்டுவரப்பட்டன. மத அடிப்படைவாதிகள் பூர்க்கா அணிவது பெண்களுக்கு பாதுகாப்பானது என புதிய வியாக்கியானம் சொல்கின்றனர். அப்படியானால் இன்றைய சமூகம் பாதுகாப்பற்றது என்பதை ஒப்புக் கொள்கின்றனர். சமூகக் குறைபாடுகளை களையாமல், பெண்களே உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் எனக் கூறுவது, ஒரு பிரச்சினைக்கான தற்காலிக தீர்வு மட்டுமே. இன்றைய முஸ்லிம் பெண்கள் தம்மை கட்டுப்பாடான மதப்பற்றாளர்கள் எனக் காட்ட, தலையை மூடி முக்காடு போரடுவது வேறு விடயம். 19 நூற்றாண்டு ஐரோப்பாவில், கத்தோலிக்க தேவாலயத்தினுள் பிரார்த்தனைக்கு போகும் கிறிஸ்தவ பெண்களும் முக்காடு அணிந்திருந்தனர்.

இஸ்லாமிய மதம் மட்டுமல்ல, கிறிஸ்தவ, யூத மதங்கள் கூட ஆணாதிக்க சமுதாயத்தில் உருவானவை தான். சமநிலையற்ற சமுதாயம் பற்றி குறிப்பட்ட மதங்கள் கேள்வி எழுப்பாததுடன், அதை சாதாரண தோற்றப்பாடாக ஏற்றுக் கொள்கின்றன. இஸ்லாமிய மதம் தோன்றிய முகமதுவின் காலத்தில் பெண்களின் நிலை வேறு விதமாக இருந்தது. முகமது தலைமையிலான இஸ்லாமியப்படையில் பெண் வீராங்கனைகளும் இருந்தனர். பண்டைய அரேபிய சமுதாயத்தில் இஸ்லாம் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தாவிட்டாலும், சீர்த்திருத்தியது. இறைத்தூதர் முகமதுவே ஒரு விதவையை மணந்து கொண்ட விடயம் குறிப்பிடத்தக்கது. விதவைகள் மறுமணம் அப்போதே ஏற்றுக்கொள்ளப்பட்டது. பெண்களுக்கான சொத்துரிமையை குர் ஆண் அங்கீகரித்தது. இருப்பினும் தற்கால மத அடிப்படைவாதிகள் கொண்டுவர விரும்பும் சொத்துரிமைச் சட்டங்கள், பெண்களை ஆண்களில் தங்கி இருக்கச் செய்யும் நோக்கம் கொண்டவை. ஜோர்டான், வளைகுடா நாடுகள், (தாலிபானின்) ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில், "மனைவி தனது சொத்தை விற்க கணவனின் அனுமதி பெற வேண்டும்" என்ற சட்டம் உள்ளது. இதே சட்டம் "தேச வழமைச் சட்டம்" என்ற பெயரில் இலங்கையில் யாழ் குடாநாட்டில் அமுலில் உள்ளது. அங்கே இந்த சட்டத்தை கொண்டுவந்தவர்கள், சைவ மதத்தை சேர்ந்த தமிழ் பழமைவாதிகள்.
---(தொடரும்)---

Wednesday, May 13, 2009

இஸ்லாமிய மத அரசியலின் தோற்றம்

மத அடிப்படைவாதம் ஒரு மேலைத்தேய இறக்குமதி - 2

இஸ்லாமிய அடிப்படைவாதம் எங்கேயும் ஒரே மாதிரியாக தோன்றவில்லை. இதன் வளர்ச்சியை இரண்டு கால கட்டமாக பிரிக்கலாம். 20 ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதி, மற்றும் இறுதிப்பகுதி என இரண்டு தலைமுறைகளை கண்டுள்ளது. முதலாவது தலைமுறையை சேர்ந்தவர்கள் பின்தங்கிய பாலைவன நாடான சவூதி அரேபியாவில், மேற்கத்திய செல்வாக்கிற்கு உட்பட்ட எகிப்திலும் தோன்றியது. இவ்விரு மதவாத இயக்கங்களும் வெவேறு தளங்களில் தோன்றியிருந்ததுடன், சில கொள்கை வேறுபாடுகளைக் கொண்டிருந்தன. சவூதி அரேபியாவில் "முஹமது பின் அப்துல் வஹாப்" இஸ்லாமிய புனித ஸ்தலங்கள் இருக்குமிடங்களுக்கு யாத்திரை சென்று வந்து, தனது கருத்துகளை நூலில் வடித்தார். அவரது ஆதரவாளர்கள் தம்மை "முவாஹிதூன்" என அழைத்துக் கொண்டனர். ஆனால் பிறர் அவர்களை "வஹாபிகள்"என அழைத்தனர்.

வகாபிகளைப் பொறுத்தவரை குர் ஆனில் எழுதி உள்ளவை மட்டுமே ஏற்றுக் கொள்ளத்தக்கன. புனிதர்களை வழிபடும் தர்க்காகளை ஏற்றுக் கொள்ளவில்லை.
மெதினாவில் இறைத்தூதர் முகமதுவின் கல்லறை ஒன்று இருந்தது. மக்கள் வழிபடுகிறார்கள் என்று, அதைக் கூட சேதமாக்கினார்கள். அரேபிய இனக்குழு ஒன்றின் தலைவரான முஹமது இபுன் சவுத் தலைமையில் வஹாபிகள் இராணுவ பலத்தை கட்டி அமைத்தனர். ஆரம்பத்தில் சிறிய ஆயுதக் குழுவாக இருந்து, பின்னர் படை பலத்தை பெருக்கி, ரியாத், மெதீனா போன்ற நகரங்களை கைப்பற்றி தமது ஆதிக்கத்தை நிலைநாட்டினார்கள். அது தான் சவூதி அரேபியா என்ற நவீன தேசம் தோன்றிய கதை. வஹாபி மதப்பிரிவின் தலைவனாக மட்டுமல்ல, அரசுத் தலைவனாகவும் மாறிய (அப்துல் அசீஸ் இபுன்) சவூத்தின் பெயர் அந்த புதிய நாட்டிற்கு சூட்டப்பட்டது. முதலாம் உலக யுத்தத்தின் முடிவில், அந்தப் பிராந்தியத்திற்கு வருகை தந்த இராணுவ பலம் மிக்க அந்நியர்களான பிரிட்டிஷாருடன் சில உடன்படிக்கைகள் போடப்பட்டன.

சவூதி அரேபியாவில் மையம் கொண்ட வஹாபிகள், பின்னர் பிற நாடுகளுக்கும் தமது மத அடிப்படைவாத புரட்சியை ஏற்றுமதி செய்ய விளைந்தனர். அளவு கடந்த எண்ணை வளம் அவர்களது கனவை நனவாக்கியது. ஜெத்தாவில் இருக்கும் இஸ்லாமியப் பல்கலைக்கழகம் உலகெங்கும் இருந்து வரும் முஸ்லிம் மாணவர்களுக்கு இலவச மதக்கல்வி அளித்தது. முஸ்லிம்கள் செறிவாக வாழும் நாடுகளில் வகாபிச சங்கம் அமைக்க ஊக்குவிக்கப்பட்டது. சவூதி அரசின் நிதி உதவியில் புதிய மசூதிகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இவற்றை விட பிற நாடுகளின் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கு பெருமளவு நிதி உதவி வழங்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகளை எதிர்த்து போரிட்ட முஜாகிதீன் குழுக்கள், மற்றும் பின் லாடன் போன்றோரின் கூலிப்படைகள் என்பன குறிப்பிடத்தக்க உதாரணங்கள். சூடானில் திடீர் சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றிய துரபியின் மத அடிப்படைவாத அரசிற்கும் சவூதி அரேபியா பக்க பலமாக இருந்தது.

அண்மையில் தான் சவூதி அரேபியா தனது நூறாவது பிறந்த நாளை கொண்டாடியது. இந்த நூறாண்டுகளில் அங்குள்ள மன்னனின் சர்வாதிகாரம் பற்றி, மத அடிப்படைவாத பிற்போக்குத்தனம் பற்றி, கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுவது பற்றி, பெண்ணடக்குமுறை பற்றி, இதுவரை ஜனநாயகம் காக்கும் மேற்குலக நாடுகளாகட்டும், மனித உரிமை நிறுவனங்களாகட்டும் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. அங்கே பிற மத தெய்வங்களின் படங்களை வைத்திருப்பது குற்றம். அது மட்டுமல்ல பிற இஸ்லாமிய மதப் பிரிவுகளும் தடை செய்யப்பட்டுள்ளன. பெண்கள் முகத்தை திரையிட்டு மூடி, கருநிற அங்கி அணிந்தே வெளியில் செல்ல வேண்டும். பெண்களுக்கு வாகனமோட்டும் உரிமை இல்லை. (ஈரானில் கூட இந்த அளவு கட்டுப்பாட்டுகள் கிடையாது.)

சவூதி வகாபிசத்திற்கு மாறாக எகிப்தில் தோன்றிய "முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம்" மத அடிப்படைவாதத்திற்கு புதிய கோட்பாட்டு விளக்கம் அளித்தது. இஸ்லாமிய மத வரலாற்றில் முதன்முதலாக அனைத்து பிரிவுகளையும் ஒன்றிணைத்து, முஸ்லிம் என்ற ஒற்றை (அரசியல்) அடையாளத்தின் கீழ் கொண்டுவருவதை தனது இலட்சியமாக கொண்டுள்ளது. இன்று பல இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் கனவு காணும் "அகண்ட இஸ்லாமிய இராச்சியத்திற்கு" அடிக்கோள் நாட்டியது. சவூதி வஹாபிகள் ஒரு மதத்தின் உட்பிரிவாக இயங்குவதுடன், தமது பாதையே சரியானது என்று மாற்றுப் பிரிவினர் மீது ஆதிக்கத்தை நிலைநாட்ட எத்தனிக்கின்றனர். முஸ்லிம் சகோதரத்துவம் ஆரம்பத்தில் இருந்தே அரசியல் கட்சியாக தான் உருவெடுத்தது.

"ஹசன் அல் பன்னா" என்ற முன்னை நாள் பாடசாலை ஆசிரியர் 1928 ல், முஸ்லிம் சகோதரத்துவம் (al Ikhwan al Muslimun) என்ற கட்சியை தொடங்கினார். ஆரம்பித்த காலத்தில் இருந்தே அவர்களது அரசியல் அபிலாஷைகள் தெரிந்தன. இந்தியாவில் இந்துத்வாவாதிகள் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக கலவரங்களை உண்டாக்கியது போல, எகிப்தில் கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்களை முஸ்லிம் சகோதரத்துவ கட்சி தூண்டி விட்டது. கட்சியின் ஸ்தாபகர் ஹசன் அல் பன்னா, ஒரு கலவரத்தின் பொது மர்மமான முறையில் கொல்லப்பட்டார். ஆனால் அதற்குப் பிறகும் பெரும்பான்மை முஸ்லிம்கள் மத்தியில் கட்சியின் செல்வாக்கு வளர்ந்தது. யூத எதிர்ப்பு அரசியலில் மட்டுமல்ல, கொள்கை அடிப்படையில் நாசிஸத்துடன் ஒரே பாதையில் பயணம் செய்கின்றனர்.

எகிப்தில் பிரிட்டிஷாரின் வெளியேற்றத்தின் பின்னர் ஏற்பட்ட சதிப்புரட்சி மூலம், ஆட்சிக்கு வந்த நாசர் தலைமையிலான இராணுவ அதிகாரிகள் சோஷலிச பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுத்தனர். முஸ்லிம் சகோதரத்துவம் நாசரின் ஆட்சியை கவிழ்க்க சதிப்புரட்சி செய்து தோல்வி கண்டது. ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டதால், கட்சி குறிப்பிட்ட காலத்திற்கு இயங்கவில்லை. தலைவர் பன்னாவின் மரணத்தின் பின்னர் கட்சி இரண்டாக உடைந்தது.
1. "ஜிகாத் அல் இஸ்லாமி": இது பாலஸ்தீனத்திலும் இயங்கி வருகின்றது.
2. "தக்பீர் வா ஹிஜ்ரா": சிறையில் இருந்த உறுப்பினர்களில் இருந்து தோன்றியது.

முஸ்லிம் சகோதரர்களால் கவரப்பட்ட ஈரானின் ஆயத்துல்லா கொமைனி, இஸ்லாமியப்புரட்சியை வெற்றிகரமாக தலைமை தாங்கி உலகின் கவனத்தை ஈர்த்தார். ஈரானை ஷா மன்னன் ஆண்ட காலத்தில் மத நிறுவனங்கள் நன்றாக பராமரிக்கப்பட்டன. ஆனால் இறுதிக்காலத்தில் ஷா வழங்கி வந்த நிதியை நிறுத்தியதால், மதத் தலைவர்கள் அரசனுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். மக்களை அணி திரட்டி, புரட்சி நடத்தி, தாமே ஆட்சியை கைப்பற்றினர். மத அடிப்படைவாத ஆட்சி எப்படி இருக்கும் என்பதற்கு தற்கால ஈரான் ஒரு உதாரணம். ஆரம்பத்தில் பல எதிர்பார்ப்புகளுடன் இஸ்லாமியப் புரட்சியை வரவேற்ற பொது மக்கள், காலப்போக்கில் மாயையில் இருந்து விடுபட்டனர். இரு தசாப்தங்களாக இஸ்லாமியப் போர்வையின் கீழ், முதலாளித்துவ பொருளாதாரக் கட்டமைப்பு, ஏழை-பணக்காரன் வேற்றுமையை அதிகரித்துள்ளது. பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கு மதம் ஒரு தீர்வல்ல என உணர்ந்துள்ளனர்.

--- (தொடரும்) ---

Tuesday, May 12, 2009

மத அடிப்படைவாதம் : ஒரு மேலைத்தேய இறக்குமதி


"இறைவனின் இல்லங்கள் யாவும் மனிதர்களாலேயே நடத்தப்படுகின்றன. அவர்கள் குர் ஆன் வாசகங்களை கொண்டு பயத்தை விதைக்கிறார்கள்... உலகில் இரண்டு வகையான மனிதர்கள் உண்டு. ஒன்று, மதத்தை பின்பற்றும் அறிவில்லாதவர்கள். இரண்டு, எந்த மதத்தையும் பின்பற்றாத அறிவாளிகள்." - அபு அலா அல் மா அரி (11 ம் நூற்றாண்டில் பாக்தாத்தில் வாழ்ந்த அரபுதத்துவஞானி)

அண்மைக்காலமாக உலகில் அதிகமானோர் பாவிக்கும் சொற்பதங்களில் ஒன்று: "மத அடிப்படைவாதம்". பலருக்கு இதன் சரியான அர்த்தம் தெரிவதில்லை. அர்த்தம் தெரிந்தவர்கள் தமது அரசியல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்துகிறார்கள். இதனால் இது மதம் சார்ந்த மொழிப் பிரயோகமாகவன்றி, அரசியல் சார்ந்தமொழிப் பிரயோகமாக காணப்படுகின்றது. புதிய உலக ஒழுங்கின் புதிய எதிரிகளான இஸ்லாமியரை குறித்து, எதிர்மறையான கருத்துகள் பரப்பப்படுகின்றன. இஸ்லாமிய மத அடிப்படைவாதம் என்ற சொற்பிரயோகம், இது இஸ்லாமியருக்கு மட்டுமே உரிய சிறப்படையாளம் என்ற எண்ணத்தை உருவாக்குகின்றது. உண்மையில் மத அடிப்படைவாதம் என்றால் என்ன? என்றதெளிவான புரிதல், யார் மத அடிப்படைவாதிகள் என முடிவு செய்யவும் உதவியாக இருக்கும். மேலும் மதத்திற்கும் அரசியலுக்கும் இடையிலான வேறுபாடுகள், ஒற்றுமைகள் என்னென்ன என்பதையும் அறிந்திருத்தல் வேண்டும்.

உலகில் மத அடிப்படைவாத போக்குகள் 20 ம் நூற்றாண்டில் இருந்தே தெரியஆரம்பிக்கின்றன. அதற்கு முன்பு இருந்த மதங்களின் ஆட்சி அமைப்பும், நமதுகால மத அடிப்படைவாதத்தையும் ஒன்றோ என போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது. மனித நாகரிக வளர்ச்சியில் மதங்கள் வகித்த பாத்திரம் முக்கியமானது. ஆரம்பத்தில் ஆன்மீக இயக்கமாக தொடங்கிய மதங்கள், பின்னர் அரசு நிறுவனமாக வளர்ந்து, தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டன. பிற்காலத்தில் ஐரோப்பாவில் தோன்றிய புதிய சித்தாந்தம் லிபரலிசம். அது வர்த்தகர்கள், மத்தியதர வர்க்கம் ஆகியோரது சித்தாந்தமாக செல்வாக்குப் பெற்றபோது, கிறிஸ்தவ மதத்தின் ஆட்சி தூக்கி எறியப்பட்டது. சமூகத்தில் தேவாலயம் வகித்த பாத்திரத்தை பாராளுமன்றமும், மதகுருக்களின் பாத்திரத்தை அரச அதிகாரிகளும், பைபிளை அரசியல் நிர்ணய சட்டமும் மாற்றிக் கொண்டன. பிரபலமான பிரெஞ்சுப்புரட்சி இந்த மாற்றங்களை நடைமுறைக்கு கொண்டுவந்தது.

ஒரு காலத்தில் மேற்கு ஐரோப்பா முழுவதையும், ஆட்சி செய்த கத்தோலிக்க மதத்தின் தலைமைப்பீடமான வத்திக்கான் மாற்றங்களை பார்த்துக் கொண்டு சும்மா இருக்கவில்லை. பாப்பரசர் "பைபிள் ஆய்வுக் குழு" வை நிறுவினார். இந்தக் குழு, பைபிளில் நடந்தவைகள் உண்மையாக நடந்த சம்பவங்கள் என அறிக்கை சமர்ப்பித்தது. அனைத்து கத்தோலிக்க மதகுருக்களும் இதை ஏற்றுக் கொண்டு சத்தியப்பிரமாணம் செய்யும் படி பணிக்கப் பட்டனர். இவ்வியக்கமானது "
intégrisme"  என அழைக்கப்பட்டது. இன்றும் கூட மத அடிப்படைவாதிகளை குறிக்க பிரெஞ்சு மொழியில் இந்தச் சொல் (intégrisme) பயன்படுத்தப் படுகின்றது. ஐரோப்பா மீண்டும் கிரிஸ்தவ மயமாக்கப்பட வேண்டும் என்பதே இவ்வியக்கத்தின் குறிக்கோள்.

கத்தோலிக்க மதத்தின் ஆதிக்கத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்த, ஆனால் பைபிளை ஏற்றுக் கொண்ட ஒரு பிரிவினர், புரட்டஸ்தாந்துக்காரர் என அழைக்கப்படலாயினர். இவர்கள் பைபிளில் எழுதி உள்ளதின் படி வாழ்வதே உண்மையான கிறிஸ்தவனின் கடமை என நம்பினர். இவர்கள் பெருமளவில் புதிய கண்டமான அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து சென்று, அங்கே தமது குடியிருப்புக்களை அமைத்துக் கொண்டனர். அவர்கள் பைபிள் நெறிகளின் படி அமைந்த வாழ்க்கை முறையை தமது குடியிருப்புகளில் நடைமுறைப்படுத்தினர். ஆனால் அவர்களின் எதிரி "நவீனமயமாக்கல்" வடிவில் வந்தது. நவீனமயமாக்கல் தமது மத நெறிகளை சீர்குலைத்து விடும் என அஞ்சியகடும்போக்காளர்கள், மத நம்பிக்கையை மீட்பதற்காக இயக்கம் ஆரம்பித்தனர். 1910 க்கும் 1915 க்கும் இடைப்பட்ட காலத்தில், "The Fundamentals" என்ற பெயரில் துண்டுபிரசுர பிரச்சாரம் செய்தனர். "ஒரு மத அடிப்படைவாதி, மத நம்பிக்கையின்அடிப்படைகளுக்காக போராடத் தயாராக இருக்க வேண்டும். பைபிளில் எழுதிஉள்ளதின் மூலம் வாழ்வதன் மூலமே நம்பிக்கையை மீட்க முடியும்." இவ்வாறு அந்தப் பிரசுரங்களில் இருந்தது.

இந்த புதிய இயக்கத்தை சேர்ந்தவர்கள் தம்மை "மத அடிப்படைவாதிகள்" எனஅழைத்துக் கொண்டனர். இதனால் புரட்டஸ்தாந்து கடும்போக்காளரை குறிக்கவே மத அடிப்படிவாதம் என்ற சொல் பயன்படுத்தப்பட வேண்டும் என்று சிலர் வாதாடுகின்றனர். இன்றும் கூட அமெரிக்காவில் பல பகுதிகளில் பைபிள் நெறிகளுக்கு அமைய வாழும் கிராமங்கள் பல உள்ளன. அவர்களின் வீடுகளில் தொலைக்காட்சி போன்ற நவீன பாவனைப் பொருட்களை காண முடியாது. இன்றும் போக்குவரத்திற்கு குதிரை வண்டிகளை பயன்படுத்துகின்றனர். சில சமூகங்களில் பல தார மணமுறை கூட நிலவுகின்றது. பெண்கள் பொதுவாக உடலை மூடும் ஆடை அணிய வேண்டும். கிராமத்தினுள் மதுபானம் கொண்டுவர முடியாது. சுருக்கமாக சொன்னால், ஆப்கானிஸ்தானில் தாலிபான் கொண்டுவந்த மதக் கட்டுபாடுகள் பல அந்த அமெரிக்க கிராமங்களில் நடைமுறையில் உள்ளன.

மத அடிப்படைவாதம் அமெரிக்காவில் தோன்றினாலும், அது ஐரோப்பாவில்ஏற்பட்ட நவீனமயமாக்கலின் எதிர்மறையான விளைவுகளில் ஒன்று. பிரெஞ்சுப்புரட்சி முன்மொழிந்த பகுத்தறிவுவாதம், மற்றும் டார்வின், கார்ல் மார்க்ஸ்ஆகியோர் கடவுளை மறுத்து மனிதனை முன்னிறுத்தினர். இது கிறிஸ்தவ மதத்தை கடுமையாக பாதித்தது. மேலும் நவீன உலகில் லிபரலிசம் தோற்றுவித்தசுதந்திரவாதப் போக்கால் ஏற்படும் தீயவிளைவுகளை காட்டி; இவையெல்லாம் மத நம்பிக்கைக் குறைவால் ஏற்படுகின்றது என பிரச்சாரம் செய்கின்றனர். ஐரோப்பிய நாடுகளில் குறைந்த அளவு உறுப்பினர்களை கொண்ட, கிறிஸ்தவ மதஅடிப்படைவாதக் கட்சிகள் இன்றும் இயங்கி வருகின்றன. அமெரிக்காவில் சில மத அடிப்படைவாதக் குழுக்கள் இரகசியமாக ஆயுதங்கள் வைத்திருக்கின்றன. ஒருமுறை FBI இது போன்ற மத நிறுவனம் ஒன்றை முற்றுகை இட்டு, ஆயுதபாணிகளுடன் துப்பாக்கிச் சமருக்கு பின்னரே உள் நுழைய முடிந்தது. ஒக்லஹோமா நகரில் நடந்த குண்டுவெடிப்பிற்கும் கிறிஸ்தவ மத அடிப்படைவாத குழு ஒன்றே காரணம். "கூ கிளாஸ் கான்" போன்ற வெள்ளைநிறவாத அமைப்பை சேர்ந்தவர்களும் மத அடிப்படைவாதிகளாக உள்ளனர்.

தேசியவாதம், பாசிசம் போன்றன ஐரோப்பாவில் தோன்றி இருப்பினும், பின்னர்உலகில் பிற கண்டங்களில் காணப்பட்ட, இதே கொள்கைகளை கொண்ட அரசியல் இயக்கங்களையும் குறிக்க பயன்பட்டன. அதே போல மத அடிப்படைவாதம் என்ற சொல், கிறிஸ்தவ மதத்தில் தோன்றி இருந்த போதிலும், பின்னர் பிற மதங்களில் இதே கொள்கை கொண்டவர்களை குறிப்பிட பயன்பட்டது. பல ஐரோப்பிய கருத்தியல்கள் உலகம் முழுவதும் பரவியதற்கு, காலனிய காலகட்டமும் ஒரு காரணம். காலனிய ஆட்சியாளர்கள் தாம் ஆண்ட நாடுகளில் கிறிஸ்தவ மதத்திற்கு அரச மதம் என்ற ஸ்தானத்தை கொடுத்து வைத்திருந்தனர். உள்ளூர் மதங்கள் மறுமலர்ச்சி என்ற பெயரில் தம்மைமறுசீரமைத்துக் கொண்டன. இந்த மறுமலர்ச்சிக் காலத்தில், இலங்கையில் பௌத்த மதமும், இந்தியாவில் இந்து மதமும், எகிப்தில் இஸ்லாமிய மதமும்தம்மை மறுசீரமைத்துக் கொண்டன. அனைத்து மத அடிப்படைவாதிகளும் அவர்கள் எம்மதத்தை சேர்ந்தவர்களாக இருப்பினும், சொல்லும் கருத்துகள் ஒன்றாக இருப்பதை உற்றுக் கவனிப்பவர்கள் புரிந்து கொள்ளலாம். அனைவரும் மதத்தின் பெயரால் கடவுளின் (ஜனநாயகமற்ற) ராஜ்யத்தை அமைக்க விரும்பிகின்றனர். அதற்காக வன்முறையை பின்பற்ற தயங்காதவர்களாகவும், வேறு மதங்களின் மீது வெறுப்பு காட்டுபவர்களாகவும் உள்ளனர். இனி இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.


(தொடரும்)