Sunday, December 20, 2009

ஸ்ரீ லங்கா ஜனாதிபதியை கைது செய்வது தொடர்பாக...

(2001 ம் ஆண்டு, சந்திரிக்கா குமாரதுங்க சிறி லங்கா ஜனாதிபதியாக வீற்றிருந்த காலத்தில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டது. ஈழப்போர் உச்சத்தில் இருந்த காலத்தில் நெதர்லாந்து வந்திருந்த சந்திரிக்காவை கைது செய்யுமாறு வழக்குப் போடப்பட்டது. அன்றிருந்த சர்வதேச சூழ்நிலை இன்றும் பெரிதாக மாறிவிடவில்லை என்பதை இந்த ஆய்வு எடுத்துக் கூறும். "உயிர்நிழல்" (மார்ச்-ஏப்ரல் 2001 ) சஞ்சிகைக்கு எழுதிய கட்டுரை. சில திருத்தங்களுடன் வலையேற்றம் செய்யப்படுகின்றது.)

பிரிட்டனில், விடுதலைப் புலிகள் உட்பட உலகெங்கும் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் 21 அமைப்புகள், "பயங்கரவாத இயக்கங்களாக" அப்போது தான் அறிவிக்கப்பட்டு பெரும் சர்ச்சையை கிளப்பி விட்டிருந்தது. இது தொடர்பாக பிரிட்டனில் வாழும் தமிழ் சமூகம் மட்டுமல்ல, பல்வேறு தேசங்களை சேர்ந்த முஸ்லிம் சமூகமும் அதிருப்தி தெரிவித்திருந்த போதிலும், இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.இதுவரை காலமும் மேற்கைரோப்பிய நாடுகள், தத்தமது நாடுகளில் தத்தமது அரசாங்கங்களுக்கு எதிராக வன்முறைப் போராட்டங்களில் ஈடுபடும் இயக்கங்களையே தடை செய்து வந்தன. உதாரணமாக, பிரிட்டனில் IRA , ஸ்பெயினில் ETA என்பனவற்றை சொல்லலாம். ஆனால் அமெரிக்காவின் "புதிய உலக ஒழுங்கு" மற்ற நாடுகளின் அரசியலிலும் மூக்கை நுழைப்பதன் நிமித்தம், "உலகப் பயங்கரவாத இயக்கங்களின்" பட்டியலை தயாரித்தது போல, தனது சகோதர நட்பு நாடான பிரிட்டனையும் செய்யத் தூண்டியதன் விளைவே மேற்குறிப்பிட்ட தடைச்சட்டம்.

இத்தகைய பின்னணியிலேயே புதிய ஒழுங்கை ஏற்றுக் கொண்ட இலங்கையின் (முன்னாள்) ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஐரோப்பிய விஜயமும் அமைந்திருந்தது. ஐரோப்பாவில் வாழும் முன்னாள், இந்நாள் தமிழ் அகதிகளின் திட்டுகளையும், வசைகளையும், அதிருப்தியையும் ஒரு பொருட்டாக மதிக்காது, ஐரோப்பிய ஒன்றியம் சந்திரிக்காவுடன் வர்த்தகம் செய்வது பற்றி பேசியது. நாட்டில் சமாதானம் வந்துவிட்டால் தனது முதலீடுகள் அதிகரிக்கும் என உறுதி கூறியது. ஐரோப்பாவின் சக்தி வாய்ந்த நாடான ஜெர்மனியில் தனது விஜயத்தை முடித்துக் கொண்டு, சந்திரிக்கா ஹொலன்ட் வந்து சேர்ந்தார். அப்போது அவரைக் கைது செய்யுமாறு கோரும் டச்சு வழக்கறிஞர் ஒருவரின் மனு, நீதி அமைச்சுக்கு அனுப்பப்பட்டது. சர்வதேச சித்திரவதை தடுப்புச் சட்டத்தில் இலங்கை அரசும் ஒப்பமிட்ட போதும், அங்கே சித்திரவதை நடக்கின்றது. இதற்கு முப்படைகளின் தலைவி என்ற வகையில் சந்திரிகா பொறுபேற்க வேண்டும். எனக்கோரி பாதிக்கப்பட்ட இரு அகதிகளின் பெயரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. எனினும் "ஆதாரம் போதாது", "தெளிவில்லை" எனச் சாட்டு சொல்லி நீதியமைச்சு மனுவை நிராகரித்து விட்டது. இதைப்பற்றியோ அல்லது மனித உரிமைகள் பற்றியோ எதுவும் அலட்டிக் கொள்ளாது, நெதர்லாந்து இராணியும், பிரதமரும், இருநாடுகளுக்கு இடையே உள்ள நானூறு ஆண்டு கால உறவை மெச்சியபடியே சந்திரிக்காவுடன் விருந்துண்டு மகிழ்ந்தனர்.

மேற்கைரோப்பிய நாடுகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நிலவும் அன்னியோன்யமான உறவு இன்று பகிரங்கமாகிவிட்ட போதும், இந்தக் கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ள எம்மில் பலருக்கு கஷ்டமாக இருக்கலாம். மேற்கைரோப்பாவின் "ஜனநாயக, மனிதாபிமான" முகத்தைக் கண்டு மதி மயங்கி, அந்த மாயையில் இருந்து விடுபட முடியாதவர்கள், பற்பல சமாதானங்களை தமக்குள்ள கூறிக்கொள்ளலாம். ஆனால் இந்த நாடுகள் எப்போதாவது ஜனநாயகம், மனித உரிமைகள் பற்றிப் பேசினால், அது எப்போதும் தமது நலன் சார்ந்தது தான் என்பதைப் புரிந்து கொள்ள அதிக காலம் எடுக்காது.

இலங்கையைப் போலவே யூகோஸ்லேவியாவில் (இன்று செர்பியா) அல்பேனியர்களை பெரும்பான்மையாக கொண்ட கொசோவோ மாநிலம் பிரிவினை வேண்டிப் போராடியது எல்லோருக்கும் தெரியும். அங்கிருந்த ஆயுதக்குழுவான "கொசோவோ விடுதலை இராணுவம்" (KLA ) மேற்கைரோப்பாவினால் ஆதரிக்கப்பட்டது. ஜெர்மனி ஆயுதத் தளபாடங்களை வழங்கியது. ஐரோப்பா எங்கும் KLA ஆதரவுப் பிரச்சாரம் நடந்தது. யூகோஸ்லேவிய ராணுவத்தின் பொது மக்கள் மீதான அடக்குமுறை, மனித உரிமை மீறல்கள், என்பன பற்றி எல்லாம் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதன் தாக்கத்தால் உலக மக்கள் செர்பிய ராணுவத்தையும், ஜனாதிபதி மிலோசோவிச்சையும் வெறுத்தனர். யூகோஸ்லேவியா மீது ஆயுத விநியோகத்தடை, பொருளாதாரத் தடை என்பன ஏற்படுத்தப்பட்டன. மிலோசோவிச்சை மனிதப்படுகொலைகளுக்கு காரணமான குற்றவாளியாக இன்டர்போல் அறிவித்தது. பதவியிழந்த முன்னாள் ஜனாதிபதியை போர்க்கால குற்றங்களுக்காக விசாரிப்பதற்காக சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு இன்றுள்ள அரசு மீது நிர்ப்பந்திக்கப்பட்டது.

மிலோசோவிச்சும் சந்திரிக்கா போன்றே தேர்தலில் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி தான். இருவரும் தத்தமது நாடுகளில் எழுந்த சிறுபான்மையினத்தின் போராட்டத்தை அடக்குவதற்கு இராணுவ வன்முறையை ஏவிவிட்டவர்கள் தான். இரண்டு நாடுகளிலும் ராணுவத்தால் நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு ஆதாரங்கள் உள்ளன. அனால் மிலோசொவிச்சுக்கு சிறைத்தண்டனை, சந்திரிக்காவுக்கு விருந்துபசாரம்! ஏன் இந்தப் பாரபட்சம்?

இதன் பதில் மேற்குலகின் இராணுவ பொருளாதார நலன்களில் தங்கியுள்ளது. கொசோவோ பிரச்சினை தொடங்க முன்பு, "யூகோஸ்லேவியாவில் நேட்டோ படைகளுக்கு தளமமைக்க விட வேண்டும்," என முன்னால் அதிபர் மிலோசோவிச்சை கேட்ட பொழுது அவர் அதற்கு மறுத்து விட்டார். மேலும் அந்த நாட்டின் முக்கிய வர்த்தக நிறுவனங்கள் அரசின், அல்லது அரசுக்கு சார்பான உள்ளூர் முதலாளிகளின் வசம் இருந்தன. இந்த நிலை மாறவேண்டுமானால் மிலோசோவிச்சை அகற்ற வேண்டும். இதன் விளைவே கொசோவோ யுத்தமும், மிலோசோவிச் கைதும். ஆனால் இலங்கை நிலைமை அப்படியல்ல. சந்திரிகா மேற்குலகின் தாளத்திற்கு ஏற்ப ஆடுவதால், அவர் கேட்கும் போதெல்லாம் தமிழ் பேசும் இனத்திற்கு எதிரான போருக்கு தேவைப்படும் ஆயுத தளபாடங்களோ நிதி உதவியோ அனுப்பி வைக்கப்பட்டன.

மேற்குலக அரசுகளுக்கும், மக்கள் மீது அடக்குமுறையை ஏவிவிடும் சர்வாதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்பு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. காலங்காலமாக இருந்து வரும் உறவு தான். சிலி நாட்டில் இராணுவ சதிப்புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த சர்வாதிகாரி பினோச்சே, கொன்றழித்த சொந்த நாட்டு மக்களின் தொகை 20000 என சர்வதேச நிறுவனங்கள் கூறுகின்றன. சதிப்புரட்சியில் அமெரிக்க சி.ஐ.ஏ.யின் பங்கும், பின்னர் தொடர்ந்த சர்வாதிகார ஆட்சிக்கு ஆட்சிக்கு அமெரிக்க, மேற்கைரோப்பிய ஆதரவும் இரகசியமல்ல. பதவி விலகிய பினோச்சே 20 வருடங்களுக்கு பின்னர் மருத்துவ சிகிச்சைக்காக இங்கிலாந்து வந்த போது கைது செய்யுமாறு வேண்டுகோள்கள் வந்தன. மனித உரிமை நிறுவனங்களின் கூச்சல்களுக்கு செவி கொடுக்காத பிரித்தானிய அரசு, பினோச்சேயை பத்திரமாக நாட்டுக்கு அனுப்பி வைத்தது.

சிலி போலவே ஆர்ஜன்தீனாவிலும் இராணுவம் சதிப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் பின்பு, கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்களின் தொகை 30000 க்கும் மேல். சித்திரவதையில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை இராணுவம் விமானத்தில் கொண்டு போய் கடலில் கொட்டியது. இதைத் தவிர அரச எதிர்ப்பு அமைப்புகளை சேர்ந்தோரின் பிள்ளைகள் பலவந்தமாக பெற்றோரிடம் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு வேறு இடங்களில் வளர்க்கப்பட்டனர். இந்த அக்கிரமங்களுக்கு காரணமாக இருந்த அமைச்சர் ஒருவரின் மகள், இன்று நெதர்லாந்தின் வருங்கால மன்னன் வில்லெம் அலெக்சாண்டரின் மனைவி!

ஒரு பக்கத்தில் சர்வாதிகாரிகளுடனும், அடக்குமுறையாளருடனும் கொஞ்சிக் குலாவும் மேற்குலக நாடுகள், மறுபக்கத்தில் தமக்கு விரோதமான நாடுகளின் தலைவர்களை கைது செய்யுமாறு கோரிக்கை விடவும் தயங்குவதில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், கைதுக்கு காரணமாக மனித உரிமை மீறல்களை குறிப்பிடுகிறார்கள். அதே நேரம் தமது நட்பு நாடுகளில் நடக்கும் மனித உரிமை மீறல்களை கண்டும் காணாதது போல பாசாங்கு செய்கின்றனர். இதற்கு உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஸ்கொட்லாந்து "லோக்கர்பீ" விமானக் குண்டுவெடிப்புக்கு காரணமான கடாபியை கைது செய்யுமாறு பிரிட்டன் அரசு கோரியது. ( அந்த விமானத்தில் குண்டு இருப்பதாக ரஷ்ய உளவுத் துறையால், அமெரிக்க அரசுக்கு தெரிவிக்கப்பட்டும், அது அசட்டை செய்யப்பட்டது.) அதே போல கியூப வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த இரு விமானங்களை சுட்டு வீழ்த்திய குற்றச் சாட்டில் காஸ்ட்ரோவை கைது செய்யுமாறு அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது.

பனிப்போர் முடிவில் கலைக்கப்பட்ட கிழக்கு ஜெர்மன் அரசின் கடைசி ஜனாதிபதி கிரென்ஸ் இப்போது வசிப்பது ஜெர்மன் சிறைச்சாலையில். அன்றைய கிழக்கு ஜெர்மனியில் இருந்து வெளியேற விரும்பிய நான்கு அகதிகளை எல்லையில் சுட்டுக் கொன்ற குற்றச் சாட்டில் (நேரடியாக சம்பந்தப்படாத போதிலும்) கிரென்ஸ் சிறை வைக்கப்பட்டார். வட இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தப்பி ஓடிய அப்பாவி தமிழ் அகதிகளை இலங்கை கடற்படை கடலில் வைத்து சுட்டுக் கொன்றது. ஜெர்மன் நீதித்துறையின் நியாயப்படி பார்த்தாலும், முப்படைகளின் தலைவியான சந்திரிகா கைது செய்யப்பட வாய்ப்புண்டு. ஆனால் அது நடக்கப் போவதில்லை. கிரென்ஸ் மேற்கு ஜெர்மனியுடன் சித்தாந்த அடிப்படையில் முரண்பட்ட சோஷலிச கிழக்கு ஜெர்மனியின் அதிபராக இருந்தவர். ஆகையால் அவர் ஜெர்மனியின் எதிரி. ஆனால் ஜெர்மன் அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் அப்படி எந்த சித்தாந்த முரண்பாடும் இல்லையே.

அரசியலில் எப்போதும் "நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர நலன்கள் மட்டுமே உண்டு." அது மீண்டும் மீண்டும் உறுதிப் படுத்தப் படுகின்றது. மேற்குலக நாடுகளைப் பொறுத்தவரை அவர்களது சொந்த பொருளாதார நலன்களே எப்போதும் முன்னிறுத்தப் படுகின்றன. எந்தவொரு நாட்டின் அரசோ, ஆயுதக் குழுவோ, அவர்களின் பாதையில் தடைக்கல்லாக இருப்பின் அது அகற்றப்பட வேண்டும். அவர்களின் கட்டளைகளுக்கு அடிபணியாத பயங்கரவாதிகளுக்கு, முரண்படும் முரட்டு நாடுகளுக்கு எதிராக மூர்க்கமான போர் கட்டவிழ்த்து விடப்படும். எங்காவது இயல்பாக எழும் மக்கள் எழுச்சிகள் ஈவிரக்கமின்றி நசுக்கப்படும். இதுவே இன்றைய புதிய ஒழுங்கின் நியதி. இதற்கு நீங்கள் ஒத்துப் போகிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்களா என்பதே, அடக்கப்படும் அனைத்து மக்களின் முன்னாள் உள்ள கேள்வி. இங்கே இப்போது கேள்விகள் மட்டுமே கேட்கப் பட்டுள்ளன. விடைகளை நீங்களாகவே தேடி அறிந்து கொள்வீர்கள்.
(உயிர்நிழல் மார்ச்-ஏப்ரல் 2001 )

1 comment:

Pragash said...

உலக வல்லரசுகள் தமது நலன்களுக்காக குறி வைத்திருக்கும் நாடுகள் தமது விோதிகள் பக்கம் சாய எத்தனிக்கும் ோது மட்டும் அந்நாட்டில் நடைபெறும் மனித உாிமை மீறல்களை அந்நாடுகளை வழிக்கு ொண்டு வருவதற்காக கையில் எடுக்கின்றன. இல்லாவிடில் அப்படிொரு விடயம் இருப்பதாகவே அவா்கள் கண்ணுக்கு ொிவதில்லை. இலங்கையிலும் தற்ோது அது தான் நடைபெறுகின்றது. சீனா,பாகிஷ்தான் பக்கம் இலங்கை சாயமுற்பட்டதால் அொிக்கா ோாக்குற்ற விசாரணைகள் பற்றி பேச்செடுக்கின்றது. இல்லாவிடில் கைகுலுக்கி பாரம்பாிய நட்புறவு பற்றி பேசிக்ொண்டு இருப்பாா்கள்.