Thursday, December 10, 2009

சட்டவிரோதமாக அமெரிக்க எல்லை கடக்க உதவும் சாதனம்

கலிபோர்னியா பல்கலைக்கழக விரிவுரையாளர் ரொட்ரிகோ டொமின்கேஸ், சட்டவிரோதமாக அமெரிக்க எல்லை கடக்க விரும்பும் குடியேறிகளுக்கு வழிகாட்டும் இலத்திரனியல் சாதனம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். கடுமையாக பாதுகாக்கப்படும் அமெரிக்க-மெக்சிகோ எல்லையை கடக்கும் குடியேறிகள் பல ஆபத்துகளை கடந்து வர வேண்டியுள்ளது. மேலும் வழிகாட்டும் நபர்களுக்கு ஆயிரக்கணக்கான டாலர்களை அள்ளிக் கொடுக்க வேண்டிய நிலை. புதிய சாதனம், மொபைல் தொலைபேசிகளை தொடர்பு படுத்தும் GPS வலையமைப்பை பின்பற்றி இயங்கும். எந்தெந்த இடத்தில் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது, எந்தெந்த இடத்தில் சாதகமான வெப்பநிலை உள்ளது போன்ற தகவல்களை இந்த சாதனம் வழங்கும். சட்டவிரோதமாக குடியேறும் நோக்குடன் வரும் ஒருவர் நவீன சாதனத்தின் உதவியுடன் இலகுவாக எல்லை கடக்க முடியும். அமெரிக்க அரசின் மனிதாபிமானமற்ற குடியேற்றவாத சட்டத்தை எதிர்த்துப் போரிடும் நோக்குடன், இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க-மெக்சிக்கோ எல்லை கடப்பவர்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டாலும், ஐரோப்பாவிலும் இதற்கான தேவை இருக்கின்றது. எல்லை கடக்க வழிகாட்டும் சாதனத்திற்கான மென்பொருளை இணையத்தில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


மேலதிக தகவல்களுக்கு:
Want to sneak into U.S.? There's an app for that
Using Mobile Phone Technology to Transcend Borders, Dimensions
Media Frenzy over the Transborder Immigrant Tool

12 comments:

Unknown said...

அருமை தோழர் கலையரசன்! உங்களின் பல்துறை சார்ந்த அறிவும், தேடலும் உண்மையிலே பாராட்ட வேண்டியதொன்றாகும்! ஆமாம் செல்போனில் GPS பாவனை என்பது நல்லதொரு விடயம் தான். என்றாலும் தண்ணீரின் அளவு, ஆழம் என்பனவற்றைக் கண்டிபிடிக்க வேண்டுமாயின் இதற்கு GPSயுடன் GIS மற்றும் arcplan எனும் மென்பொருட்களின் உதவி இல்லாமல் சாத்தியமில்லை. நானறிய சீனா மட்டுமே தற்போதுவரை GPS , GIS, மற்றும் arcplan இம்மூண்றையும் ஒருங்கிணைத்துப் துல்லியமாகப் பாவிக்கக்கூடிய நிலையில் உள்ளது.

தோழமையுடன் இ.அரவிந்த்...

Unknown said...

அருமை தோழர் கலையரசன்! உங்களின் பல்துறை சார்ந்த அறிவும், தேடலும் உண்மையிலே பாராட்ட வேண்டியதொன்றாகும்!

Pragash said...

அடடா, இது கூட நல்லது தான் இனி நாங்களும் கிளம்பிட வேண்டியது தான். சரி அதென்ன அமெரிக்காவின் குடியேற்றவாத சட்டம்?, அதன் சாராம்சம் என்ன?

Kalaiyarasan said...

தோழர் அரவிந்த்,
விரிவாக விளக்கமளித்தமைக்கு நன்றி. நான் தவறவிட்டதை உங்கள் பின்னூட்டம் பூர்த்தி செய்து விட்டது.

Kalaiyarasan said...

பிரகாஷ், ஒரு குடியேறிகளின் நாடான அமெரிக்காவில், பாரபட்சமான குடியேற்ற சட்டம் வசதியானவர்களை மட்டுமே அனுமதிக்கின்றது. வறுமையில் இருந்து மீளலாம், என்ற நோக்கோடு வரும் லத்தீன் அமெரிக்க அகதிகளை நாயை விட்டு விரட்டுகிறார்கள். எல்லையோர ஊர்காவல் படைகளும் அகதி வேட்டையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தமிழ் உதயம் said...

சாமானியனுக்குள்ள மனிதாபிமானத்தை அரசாங்கத்திடம் எதிர்பார்க்க முடியாது. தங்கள் நாட்டிற்குள் அகதிகள் வரக்கூடாது என்று ஒவ்வொரு நாடும் நினைப்பதும் இயற்கையே. சரி. அப்படி வராமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், ஐ.நா வையே கைக்குள் வைத்திருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும். ஒவ்வொரு நாட்டின் இன கலவரத்திற்கும், மத மோதல்களுக்கும் அரச பயங்கரவாததிற்கும், நேர்மையான தீர்வு ஒன்றுக்கு தனது பலத்தை பிரயோகித்து முயற்சிக்க வேண்டும். இதை எதுவுமே செய்யாமல் அகதிகள் மீது வன்மம் காட்டுவது, சாவது ஆசிய, ஆப்பிரிக்க கறுப்பர்கள் தானே, பாதிக்கப் படுவது அந்த மதத்தை சேர்ந்தவன் தானே என்கிற பாகு பாடுடன் மனித நேயமற்று நடப்பது, எதிர் காலத்தில் மேற்குலகத்தை தான் பாதிக்கும். அந்தந்த தேசத்து மக்கள் அந்தந்த தேசத்தில் வாழ்வதே நல்லது. தேவையற்ற இன பூசல்களை தடுக்கும். ஆனால் அதை உணராமலே "அடித்து கொண்டு சாகட்டும்" என்று நினைத்தால், நாளை மேற்குலக நாட்டு குடிமக்களும் அடித்து சாக வேண்டிய நிலை தான் வரும்

Kalaiyarasan said...

thamiluthayam , மீண்டும் நல்லதொரு கருத்தோடு வந்திருக்கிறீர்கள். நீங்கள் குறிப்பிட்ட ஆசிய, ஆப்பிரிக்க இனப்பூசல்களுக்கு பின்னணியில் மேற்கத்திய நாடுகளின் கைகள் மறைந்திருக்கின்றன. இதனை பல நாடுகளின் விஷயத்தில் கண்டிருக்கிறேன். அதற்கு காரணம், இந்த நாடுகள் தங்களைப் போல முன்னேறி விடக் கூடாது என்பது தான்.

jothi said...

//சாமானியனுக்குள்ள மனிதாபிமானத்தை அரசாங்கத்திடம் எதிர்பார்க்க முடியாது.//

மிக சரி.

கலை, உங்கள் பதிவுகளில் உள்ள தரம், தகவல்கள் மிக அட்டகாசம். கண்டிப்பாக உங்கள் பதிவுகள் வித்தியாசமான பார்வை கொண்டவை என்பதில் சந்தேகம் இல்லை. தொடருங்கள் உங்கள் சேவையை,..

Anonymous said...

//அமெரிக்க அரசின் மனிதாபிமானமற்ற குடியேற்றவாத சட்டத்தை எதிர்த்துப் போரிடும் நோக்குடன்//


இலங்கை தமிழர்களுக்கு எல்லா நாடுகளையும் குறை சொல்வதை தவிர ஒன்றும் தெரியாது...

adhiran said...

வணக்கம். நான் ஆதிரன். உங்கள் பதிவுகளை பிரமிப்புடன் வாசித்துக்கொண்டிருப்பவன். உங்களுடைய பன்முகத்தன்மையான பதிவுகள் எனக்கு பல திறப்புகளை தொடர்ந்து அளித்துக்கொண்டிருக்கிறது. நன்றிகள். உன்னதம் இதழில் உங்கள் பெயரில் ஒரு கட்டுரை உள்ளது. அந்த கலைதானா நீங்கள்?

Kalaiyarasan said...

வணக்கம் அதிரன், பாராட்டுகளுக்கு நன்றி.
ஆமாம், உன்னதம் இதழில் ஜூலை முதல் வந்து கொண்டிருக்கும் கட்டுரைகளையும் நான் தான் எழுதினேன். அச்சில் வந்த கட்டுரைகளை எனது வலைப்பூவிலும் இணைய வாசகர்களுக்காக பதிவிட்டுள்ளேன்.

Easwaran said...

எமது இனிய இளவல் கலை அரசருக்கு
உங்கள் தகவல்கள் அனைத்தும் ஒரு தனித்தன்மை
வாய்ந்தாக உள்ளது ,மேலும் அது மிளிர எமது அன்பின்
நற்செய்தி,
நேசமாக
ஈஸ்வரன்
இந்தியா