Thursday, April 02, 2009

இலங்கையில் அந்நியத் தலையீடு, யாருக்கு நன்மை?

அமெரிக்க படைகள் வருமா? இந்தியப் படைகள் வருமா? எது முந்திக் கொள்ளும் என்பது தற்போது அலசப்படும் விஷயம். யாரின் நலனுக்காக வரலாம் என்பது அலசப்பட வேண்டிய விடயமல்ல. ஆயினும் அதுவும் அலசப்படுகின்றது. பிரிட்டிஷ் அரசாங்கம், அமெரிக்க அரசாங்கம், இந்திய அரசாங்க மட்டங்களில் தற்போது இலங்கையில் நடைபெறும் இராணுவ நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்படுகின்றன. அறிக்கைகள் விடப்படுகின்றன. அவ் அறிக்கைகளை தமிழ் ஊடகங்கள் தமிழருக்கு சார்பானது போலவும், சிங்கள ஊடகங்கள் சிங்கள மக்களுக்கு சார்பானது போலவும் பிரச்சாரம் செய்கின்றன. அதே போன்று பேரினவாதிகளும் அவர்களுக்கு ஏற்றவகையில், தமிழ் தேசியவாதிகள் அவர்களுக்கு ஏற்ற வகையிலும், வெளிநாடுகளில் தலையீடு பற்றி விபரிக்கின்றனர். ஆனால் மனிதாபிமானத்தின் பெயரால் வரும் எந்தவொரு தலையீடும் தமிழ் தேசிய இனத்திற்கோ அல்லது முழு நாட்டிற்குமோ நன்மை தேடித் தருவதாக அமையமாட்டாது. அதற்குப் பதிலாக தலையீடு செய்பவர்களின் நலன்களே முதன்மையும் முக்கியத்துவமும் அடையும் என்பது முன் உணரப்பட வேண்டியதாகும்.

இராணுவ நடவடிக்கைகள் காரணமாக முல்லைத்தீவில் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் மக்களை வெளியேற்ற அமெரிக்கா நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும், அது பற்றி இந்தியாவுடன் பேசி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இராணுவ நடவடிக்கையின் பின்னர் இலங்கை அரச படைகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பகுதிகளில் நடமாடும் சிகிச்சை அளிப்பதற்காக இந்தியாவில் இருந்து இராணுவ வைத்தியக் குழு இலங்கை வந்துள்ளது. அவர்கள் புல்மோட்டையில் அவர்களது முதலாவது நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். இரண்டாவது குழுவினரும் இங்கு வந்து நடவடிக்கைகளில் ஈடுபட இருக்கின்றனர். இது மனிதாபிமான வைத்திய நடவடிக்கை என்று கூறப்படுகின்றது. இதேவேளை இராணுவ நடவடிக்கைகள் இடம்பெறும் பகுதிகளில் இருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு அமெரிக்க படையினர் உதவவுள்ளதாக நீண்டகாலமாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆசிய பசுபிக் பிராந்திய நடவடிக்கைக்கு பொறுப்பான அமெரிக்க அதிகாரிகள் மக்களை மீட்கும் நடவடிக்கைகள் பற்றி பேசி வருகின்றனர். அமெரிக்கப் படைகள் இங்கு வந்து குறிப்பிட்ட மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது பற்றி இலங்கையின் வெளிவிவகார அமைச்சருடன் பேசப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அவ்வாறான உதவிகளை அமெரிக்காவிடம் இலங்கை கேட்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

மக்களை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அமெரிக்கக் கப்பல் கொழும்புத் துறைமுகத்திற்கு வெளியில் நிற்பதாகவும் செய்திகள் வெளியாகின. அதுவும் பின்னர் மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எந்தவொரு வெளிநாட்டு தலையீடும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உதவும் வகையில் அமைந்து விடும் என்று ஜே.வி.பி. கூறுகின்றது. ஹெல உறுமயவும் அதே கருத்தைக் கொண்டுள்ளது. இலங்கைப் படையினரின் இராணுவ நடவடிக்கைகளின் வெற்றியை இந்தியாவும் அமெரிக்காவும் பங்குபோட்டுக் கொள்ள அனுமதிக்கக் கூடாது என்றும் அவர்கள் கூறுகின்றனர். அத்துடன் அமெரிக்க இந்திய தலையீடுகள் விடுதலைப் புலிகளை பாதுகாப்பதாகவே இருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

மறுபுறத்தில் நடைபெறும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கோ தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கோ அமெரிக்க இந்திய தலையீடுகள் எவ்வகையிலும் உதவுவதாக இராது என்பதை தமிழ் மக்கள் உணராமல் இல்லை. அவ்வாறான தலையீடுகள் தமிழ்மக்களின் துன்பங்களை துடைக்காது என்பதை அனுபவரீதியாக தமிழ்மக்கள் உணர்ந்துள்ளனர். அரசாங்கத்தை பொறுத்தவரை அரசாங்கத்தின் இராணுவ நிகழ்ச்சி நிரலுக்கு உதவும் வகையிலான வெளிநாட்டு தலையீடுகளை எதிர்ப்பதாக திட்டவட்டமாக கூறுவதில்லை.

தற்போதைய உலக ஒழுங்கில் இந்தியாவின் தலையீடு மிதமிஞ்சியதாகவே இருக்கிறது. இலங்கை அரசின் மீது இந்தியாவின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது. யுத்தத்திலும் இந்தியாவின் பங்களிப்பு அதிகமாகவே இருந்து வருகிறது. ஐ.நா.சபையும் அறிக்கைகளை விடுத்து தனது கட்டுப்பாட்டை செலுத்திப்பார்க்கின்றது. ஐ.நா.சபை மணித் உரிமைகள் சபையினூடாக இலங்கையில் தலையீடுகள் செய்யப்படுகின்றன. ஐரோப்பிய யூனியன் நாடுகளும் இலங்கை அரசின் மீது கட்டுப்பாட்டை செலுத்தி வருகின்றன. ஜப்பானும் அதே வழியிலே செயற்படுகின்றது.

அமெரிக்க, இந்திய, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் தலையீடுகள் யாவும் தற்போதும் இருக்கின்றன. முன்பு அதனுடைய தலையீடு த.வி.பு. இயக்கம் இராணுவரீதியாக பலமாக இருந்த போது அதனை அடிப்படையாக்கி கொண்டு இலங்கை அரசாங்கத்தை அடிபணிய வைத்தன. தற்போது இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைகளுக்கு இடையூறு இல்லாத வகையில் (அதனை உள்ளார்ந்தமாக ஆதரித்துக் கொண்டு) இலங்கை அரசின் மீது கட்டுப்பாட்டை செலுத்துகின்றன. இந்தத் தலையீடுகள் ஒருபுறம் இலங்கை நாட்டின் இறைமையின் மீதான மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. மறுபுறம் தமிழ் மக்களின் உரிமைகளை கொச்சைப் படுத்தும் வகையிலானதாகும். அரசாங்கம் அதனது இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்டினாலும், இந்த தலையீடுகள் வெவ்வேறு விதமாக தொடரவே செய்யும்.

தேசிய இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப்படாத வரை நிரந்தர சமாதானம் ஏற்படாது என்பதும், அந்நிய மேலாதிக்க ஏகாதிபத்திய சக்திகளின் தலையீடும் தொடரத் தான் செய்யும். அந்நியத் தலையீடுகள் பிரச்சினையை திசை திருப்பி மேலும் சிக்கல்களை அதிகரிப்பதாகவே அமையும். இது தற்போதைய உலக ஒழுங்கில் ஒரு பிரச்சினையை இன்னொரு பிரச்சினையாக மாற்றுவது என்பதாகும். (அதாவது பிரச்சினையை தீர்ப்பதற்குப் பதிலாக இன்னொன்றாக மாற்றுவது.) தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வென்பது தற்போது மனிதப் பேரவலங்களில் இருந்து மக்களை காப்பாற்றுவதாக மாற்றப்பட்டுள்ளது. சூடான், கொங்கோ, எத்தியோப்பியா, சோமாலியா போன்ற நாடுகள் தீர்க்கப்படாத் அல்லது நீடிக்கப்படும் சிவில் யுத்தங்கள் நடைபெறும் நாடுகளாக காட்டப்படுவது போன்று இலங்கையும் காட்டப்படலாம். இவ்வாறான நிலையில் மனிதாபிமான நடவடிக்கைகள் தலையீடுகள் என்று கூறி அந்நிய தலையீடுகளும் நெருக்கடிகளும் வரலாம். அப்படி வருவது இந்நாட்டு மக்களுக்கும் குறிப்பாக அடக்கப்படும் தேசிய இனங்களுக்கும் எந்த வித் விமோசனமும் கிடைக்கப் போவதில்லை. அதே வேளை நாட்டின் இறைமை அந்நிய சக்திகளால் அபகரிக்கப்படும் நிலையே தோன்றும்.

யாரின் ஊடாகவேனும், எவருக்காகவேனும் வருகிற எந்த அந்நியத் தலையீடுகளும் அரோக்கியமானவையாக இருக்க முடியாது.
எனவே அமெரிக்க மேற்குலப் பக்கத்தில் இருந்தும், இந்தியாவின் மூலமாகவும், அல்லது ஐ.நா. மூலமாகவும் வரக்கூடிய மனிதாபிமானத் தலையீடுகள் இந் நாட்டை நாசம் செய்யுமே தவிர, பிரச்சினைகளை தீர்க்க உதவப் போவதில்லை. இதனை அரசாங்கமும், ஜனாதிபதியும் கவனத்திற் கொண்டு, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை முன்வைத்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரல் வேண்டும், என்பதையே நாம் வற்புறுத்துகின்றோம்.

(நன்றி: புதிய பூமி, மார்ச் 2009, அனுமதியுடன்)

Puthiya Poomi
47 3rd Floor
C.C.S.M. Complex
Colombo 11
Sri Lanka

E-mail: puthiyapoomi@gmail.com

New Democratic Party,Sri Lanka

1 comment:

ttpian said...

சொட்டையை நம்பியவர் மண்டயை போடுவார்!
சொட்டை வாழும்,அடுத்தவன் சாவில்!