Showing posts with label மலையகத் தமிழர் பிரச்சினை. Show all posts
Showing posts with label மலையகத் தமிழர் பிரச்சினை. Show all posts

Tuesday, December 05, 2023

வன்னியில் குடியேறிய மலையகத் தமிழர்கள்

 

Migration of Malayaka [Up-Country] Tamils to North & East! (https://www.tamizhi.net/2023/12/migration-of-malayaka-up-country-tamils.html?m=1) மலையகப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து வந்து வன்னியில் குடியேறிய மலையகத் தமிழர்கள் பற்றிய இந்த பதிவு நிறைய பொய்கள், புனைகதைகளுடன் எழுதப் பட்டுள்ளது. ஒரு போதும் ஈழத்தில் வாழ்ந்திராத, ஈழம் குறித்த எந்த புரிதலும் இல்லாத ஒரு ஏலியன் எழுதிய கட்டுரை. அதை புலிப் புகழ் பாடும் பிரச்சாரம் என்று சொல்வதே பொருத்தமானது.

1. கட்டுரையின் தொடக்கத்தில் மலையகத்தை உள்ளடக்கிய ஈழ வரைபடம் உள்ளது. உண்மையில் அது அன்று EPRLF இயக்கம் வெளியிட்ட முத்திரை. EPRLF மற்றும் EROS ஆகியன மலையகம் உள்ளடக்கிய ஈழம் கோரின. கட்டுரையில் அது குறித்து ஒரு வசனம் கூட இல்லை! முழுமையான இருட்டடிப்பு.

2. உண்மையில் ஆரம்ப காலத்தில், 1977 இலிருந்து வன்னியில் வாழ்ந்த வந்த மலையக மக்களை, LTTE இணைத்துக் கொள்ளவில்லை. கட்டுரையில் சொல்லப் பட்டிருப்பது கலப்படமில்லாத பச்சைப் பொய்! எழுபதுகளின் தொடக்கத்தில் இருந்து வன்னியில் புலிகளின் பண்ணை முகாம் இருந்தாலும், மக்களிடம் இருந்து அந்நியப் பட்டு இருந்தனர். உண்மையில் காந்தீயம் என்ற அரசு சாரா அமைப்பு தான் மலையக தமிழ் அகதிகளை குடியமர்த்தும் பணிகளில் இருந்தது. பிற்காலத்தில் PLOTE அமைப்பின் ஊடுருவல் காரணமாக அதில் வேலை செய்த பலர் PLOTE உறுப்பினர்களாக மாறினார்கள். அதன் விளைவாக நடந்த அரச அடக்குமுறை காரணமாக காந்தியம் இயங்க முடியாமல் போனது. கட்டுரையில் இந்த வரலாறு முழுமையாக மறைக்கப் படுகிறது. இந்த சம்பவங்கள் நடந்த நேரம் LTTE அங்கிருக்கவில்லை.

3. குறிப்பாக EROS இயக்கம் தான் பெருமளவு மலையகத் தமிழ் இளைஞர்களை அரசியல் மயப் படுத்தி போராளிகளாக சேர்த்துக் கொண்டனர். 1983 ம் ஆண்டு வரையில் LTTE யாழ் குடாநாட்டில் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தது. அதன் 90% உறுப்பினர்களும் யாழ் குடாநாட்டை சேர்ந்தவர்கள் தான். மலையக தமிழர்களையும் ஈழப் போராட்டத்தில் இணைத்துக் கொண்ட EPRLF, PLOTE, EROS ஆகிய இயக்கங்கள், 1986 இலிருந்து ஒவ்வொன்றாக தடைசெய்யப்பட்டன. அதற்குப் பின்னர் தான் பெருமளவு மலையகத் தமிழ் இளைஞர்கள் LTTE இல் சேர்ந்தனர்.

4. கட்டுரையாளர் மேற்படி வரலாற்றை இருட்டடிப்பு செய்து விட்டு, "எழுபதுகளில் இருந்து புலிகள் தான் மலையகத் தமிழர்களை வன்னியில் குடியேற்றினார்கள்... வீடு கட்டிக் கொடுத்தனர்.... ஏக்கர் கணக்கில் காணி உரிமை கொடுத்தார்கள்... அரசியல் கற்பித்தார்கள்... " என்று பொய்களை அடுக்கிக் கொண்டே செல்கிறார். ஏக்கர் கணக்கில் புளுகுவது என்பது இதைத் தான். 90 களில் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் ஓரிரு மாதிரிக் கிராமத் திட்டங்கள் கூட பெரியளவில் நடக்கவில்லை. அதிலும் தமது போராளிகளுக்கே அரசியல் கற்பிக்காத புலிகள், மலையகத் தமிழர்களுக்கு அரசியல் பாடம் எடுத்தார்கள் என்பதெல்லாம் சுத்த அபத்தம். பாடசாலை மாணவர்கள் மத்தியில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்காக நடத்தும் கூட்டங்களில் தமது இயக்கத்தின் போராட்ட வரலாறு பற்றிக் கூறுவார்கள். அது முற்றிலும் வேறுபட்ட விடயம்.

https://tamizhi.net/2023/12/migration-of-malayaka-up-country-tamils.html?m=1

Monday, July 31, 2017

மலையகத் தமிழரை பிரிக்கும் யாழ் சைவ வேளாள மேலாதிக்கவாதிகள்


வட இலங்கையில், ஈழத்தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரித்த அதே தீய சக்திகள், தற்போது மலையகத் தமிழ் மக்களையும் பிரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. இது காலங்காலமாக தொடரும் வழமையான "யாழ் சைவ-வேளாள மையவாத சிந்தனை" தான். அது குறித்து ஆச்சரியப் பட எதுவும் இல்லை.

ஆயினும், பொது மக்கள் விழிப்பாக இருந்து, இந்த தீய சக்திகள் விரிக்கும் வலைகளில் விழ விடாமல் தடுக்க வேண்டியது அவசியம். தேர்தல் அரசியலில் இனவாதம் பேசி வாக்குகளை அறுவடை செய்யும் மூன்றாந்தர அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகளில் அகப்படாமல் தப்ப வேண்டும்.

கிளிநொச்சி நகரிலும், அதை அண்டிய பகுதிகளிலும் மலையகத் தமிழர்கள் கணிசமான அளவில் வாழ்கின்றனர். சரியான கணக்கெடுப்பு இல்லாவிட்டாலும், 30% - 40% அளவில் இருக்கலாம் எனத் தெரிய வருகின்றது. மலையகப் பகுதிகளில் எழுபதுகளில் நடந்த கலவரங்களை அடுத்து அகதிகளாக இடம்பெயர்ந்து குடியேறியவர்கள். அவர்களது இரண்டாவது, மூன்றாவது தலைமுறையினர் சுத்தமான யாழ்ப்பாணத் தமிழ் பேசுவது மட்டுமல்லாது, வன்னியை தாயகமாக்கிக் கொண்டவர்கள்.

ஈழப்போர் நடந்த காலத்தில், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கணிசமான அளவில் மலையகத் தமிழ்ப் போராளிகள் இணைந்திருந்தனர். தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்களாக கூட இருந்துள்ளனர். போராளிகளில் மலையகத் தமிழர் எவ்வளவு என்ற சரியான எண்ணிக்கை தெரியாது. அது பற்றிய தரவுகளும் இல்லை. இருப்பினும் புலிப் போராளிகளில் பெரும்பான்மையானோர், ஒன்றில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் அல்லது வன்னியை சேர்ந்த மலையகத் தமிழர்கள். போர் நடந்த காலத்தில் களப்பலியான மாவீரர்களின் குடும்பங்களை கணக்கெடுத்தால் தெரியும்.

விரைவான நகரமயமாக்கல் நடக்கும் பகுதிகளில் கிளிநொச்சி பிரதானமானது. வடக்கே பரந்தன் சந்தி முதல் தெற்கே இரணைமடு குளம் வரையில் விரிந்த பெரியதொரு நகரம் உருவாகிக் கொண்டிருக்கிறது. புதிதாக கட்டப்பட்ட ஜெர்மன் தொழில்நுட்பக் கல்லூரி, பலகலைக் கழக விவசாய பீடம் என்பன பல பிரதேசங்களில் இருந்தும் மாணவர்களை தருவிக்கவுள்ளது. அதைவிட, வட இலங்கை உழைக்கும் வர்க்க மக்களை சுரண்ட வரும் சுதந்திர வர்த்தக வலையத் தொழிற்சாலைகள், தொழில் வாய்ப்புகளை உருவாக்கப் போகின்றது.

கிளிநொச்சியில் மூன்று வர்க்க அடிப்படை கொண்ட சமூக அமைப்பு வெளிப்படையாக தெரியும் வண்ணம் உள்ளது. பெரும் முதலீட்டு நிறுவனங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் சிங்கள முதலாளிகளும், வெளிநாட்டவரும் (இதற்குள் மேற்கத்திய NGO நிர்வாகிகளும் அடக்கம்) மேல்தட்டு வர்க்கமாக உள்ளனர். அதற்கு அடுத்த நிலையில், நிலவுடமையாளர்கள், பண்ணையார்கள், விவசாய முதலாளிகள், மத்தியதர வர்க்க ஊழியர்களாக யாழ்ப்பாணத் (ஈழத்) தமிழர்கள் உள்ளனர். அடித்தட்டு உழைக்கும் வர்க்கமாக உள்ளவர்கள் பெரும்பாலும் மலையகத் தமிழர்கள் தான்.

பாரதிபுரம் போன்ற பல கிராமங்கள் மலையகத் தமிழருக்காக ஒதுக்கப் பட்டதைப் போன்றுள்ளன. அந்தக் கிராமங்கள் தற்போதும் பின்தங்கி இருக்கின்றன. 2016 ம் ஆண்டு, அக்டோபர் மாதமளவில், பாரதிபுரம் கிராமத்தில், மலையகத் தமிழ்ப் பிள்ளைகள் படிக்கும் பாடசாலையில் அசம்பாவிதம் ஒன்று நடைபெற்றது. வறுமை காரணமாக சப்பாத்து (காலணி) அணிந்து வராத மாணவர்களை அவமானப் படுத்திய பாடசாலை அதிபர், அவர்களது செருப்புக்களை வீதியில் வீசியிருந்தார்.

ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த இந்தச் சம்பவம், பாரதிபுரம் மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தை தூண்டி விட்டது. அந்த அதிபரும் யாழ் மையவாத சிந்தனை கொண்ட மேலாதிக்கவாதி தான். சாதாரண மக்களுக்கு வர்க்க முரண்பாடுகள் புரியாது. அவர்களுக்கு தெரிந்த வகையில் தான் எதிர்வினையாற்றுவார்கள். அந்த வகையில், யாழ் மையவாதிகளின் மேலாதிக்கத்தை எதிர்க்கும் மலையகத் தமிழரின் போராட்டமாக அது அமைந்து விட்டது. ஆணவத்துடன் நடந்து கொண்ட குறிப்பிட்ட அதிபர், பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) நெருக்கமானவர் என்று கேள்விப் பட்டேன்.

நான் முன்னர் குறிப்பிட்ட படி, அதிபர்கள், ஆசிரியர்கள் போன்ற மத்தியதர வர்க்க வேலைகளில் இருப்பவர்கள் யாழ்ப்பாணத் தமிழர்கள் தான். அதற்காக அவர்கள் எல்லோரும் பூர்ஷுவா மனப்பான்மை, அல்லது யாழ் மையவாத சிந்தனை கொண்டவர்கள் என்று அர்த்தம் அல்ல. ஏழை மலையகத் தமிழ் மாணவர்களை ஊக்குவித்து படிக்க வைத்த ஆசிரியர்கள், அதிபர்களும் இருக்கிறார்கள். குறிப்பாக, எனது சித்தப்பா ஒருவரும் கிளிநொச்சியில் பாடசாலை அதிபராக இருந்தவர் தான். அவரது பதவிக் காலத்தில் இது போன்ற வர்க்கப் பிரச்சினைகள் எழவில்லை.

ஆகவே, இந்தப் பின்னணியில் தான், மலையகத் தமிழருக்கு எதிரான அண்மைய பிரச்சனைகளை பார்க்க வேண்டும். ஊடகவியலாளர் ஒருவருடான பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடலில், பா.உ. சிறிதரன் மலையகத் தமிழரை ஏளனமாகக் குறிப்பிடும் "வடக்கத்தியான்" என்ற வசைச் சொல்லை பயன்படுத்தி இருந்தார். வடக்கே இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்ற பொருளில் சொல்லப் படும் "வடக்கத்தியான்" என்ற வசைச் சொல், யாழ் மையவாதிகள் மத்தியில் சர்வ சாதாரணமாகப் புழங்குகின்றது. "வயிற்றுக்குத்தை நம்பினாலும் வடக்கத்தியானை நம்பாதே!" என்று பழமொழி மாதிரி சொல்லிக் கொள்வார்கள்.

அது ஒரு புறமிருக்க, பேஸ்புக்கில் மலையகத் தமிழர் மீது இனத்துவேசம் பாராட்டும் வீடியோ ஒன்று தீய வழியில் பிரபலமானது. ஜெர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் கச்சாய் சிவம் என்ற நபர், "சைவ வேளாளன்... ஒரிஜினல் ஈழத்தமிழன்..." என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறார். "மலையகத் தமிழர்கள் இந்தியர்கள், அவர்களும் முஸ்லிம்கள் மாதிரி சிங்களவனுக்கு அடிவருடுபவர்கள்... தோட்டக் காட்டார்கள்..." என்று வசைபாடினார். அதை விட மலையகத் தமிழ்ப் பெண்கள் "விபச்சாரிகள்" என்றும் அபாண்டமாக பழி போட்டார். ஆகவே இது மலையகத் தமிழர்கள் மத்தியில் ஆத்திரத்தை தூண்டியதில் வியப்பில்லை. அந்தக் கச்சாய் சிவம் என்ற மனநோயாளி, கிளிநொச்சி பா.உ. சிறிதரனின் உறவினர் என்று சொல்லப் படுகின்றது.

இதிலே கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், "தமிழர்கள் எல்லோரும் ஓரினம்" என்று தமிழ்த்தேசியம் பேசும் அரசியல் ஆர்வலர்கள் யாருமே இதைக் கண்டிக்கவில்லை. வன்னியில் வாழும் மலையக மக்கள் தமது உரிமைகளைப் பற்றிப் பேசினால், "இனத்தைப் பிரிக்கும் சிங்களவனின் சூழ்ச்சி" என்று கம்பு சுற்றுவதற்கு நிறையப் பேர் வருவார்கள், வந்தார்கள். மலையகத் தமிழ் மக்களின் அவலநிலை பற்றி எழுத்தாளர் தமிழ்க்கவி எழுதிய கட்டுரையை, கிளிநொச்சி நகர சபை இதழில் பிரசுரிக்க மறுத்தார்கள். சமூக வலைத் தளங்களில் தமிழ்க்கவியை மிரட்டும் வண்ணம் திட்டித் திட்டிப் பதிவிட்டனர்.

போலித் தமிழ்த் தேசியவாதிகள், தமிழினவாதிகள் யாருமே, மலையகத் தமிழருக்கு எதிரான கச்சாய் சிவத்தின் இனத்துவேச பேச்சைக் கண்டிக்கவில்லை. "தமிழர்களின் ஐக்கியத்தைக் குலைக்கும் சிங்கள கைக்கூலி கச்சாய் சிவம்" என்று பொங்கி எழவில்லை. இதிலிருந்தே அவர்கள் மனதிலும் அழுக்கு இருக்கிறது என்பது புலனாகின்றது. 

யாழ்ப்பாணத்து கனவான்கள் அறைக்குள் பேசுவதை, அந்த மனநோயாளி அம்பலத்தில் சொல்லி விட்டான். அது மட்டுமே வித்தியாசம். யாழ் மையவாத மேலாதிக்க வாதிகளுக்கென அடிப்படையான சில குணங்கள் உள்ளன. அவை என்றைக்குமே மாறாதவை. மலையகத் தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறி ஒரு பக்கம். தாழ்த்தப் பட்ட சாதியினருக்கு எதிரான சாதிவெறி மறுபக்கம். அது இரண்டும் சேர்ந்த கலவை தான், வலதுசாரி தமிழ்த் தேசியவாதிகளின் பம்மாத்து அரசியல்.

Friday, March 06, 2015

முன்னாள் போராளி பகீரதியின் கைதும், வன்னியில் மறையாத வர்க்க பேதமும்

பிரான்சில் வதிவிட அனுமதி பெற்ற பகீரதி என்ற பெண், தனது எட்டு வயது குழந்தையுடன் இலங்கையில் தனது ஊருக்கு சென்று திரும்பியவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப் பட்டு தடுத்து வைக்கப் பட்டுள்ளார்.

புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள (புலி ஆதரவு) தமிழ் ஊடகங்கள், அவரை "சாதாரண பெண்" என்று குறிப்பிட்டாலும், முன்னொருகாலத்தில் புலிகளின் தளபதியாக இருந்த காரணத்தினாலேயே கைது செய்யப் பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. அவரது கணவரும் பிரான்சில் ஒரு முக்கியமான புலிகளின் பிரமுகர் தான். இறுதிப் போர் தொடங்குவதற்கு முன்னரே, பிரான்ஸ் சென்ற பகீரதி, இப்போது தான் நாடு திரும்பியுள்ளார்.

இதிலிருந்து சில உண்மைகள் தெரிய வருகின்றன. மகிந்த ஆட்சி மறைந்து, மைத்திரி ஆட்சி வந்தாலும், முன்னாள் புலிகள் விடயத்தில் அரசு இயந்திரம் ஒரே மாதிரித் தான் செயற்படுகின்றது. பெரும்பான்மையானோர் அரசாங்கத்தை (ஜனாதிபதி + மந்திரி சபை) அரசு என்று தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். ஆட்சியாளர்கள், கட்சிகள் மாறலாம், ஆனால் அதிகாரிகளும், அரசின் கொள்கைகளும் மாறுவதில்லை.

பகீரதி முன்னாள் புலித் தளபதி என்ற விடயம், ஊரில் அவரைத் தெரிந்தவர்களாலேயே காட்டிக் கொடுக்கப் பட்டுள்ளது. அது பகீரதியின் உறவினர்கள் என்று பிரான்சில் வாழும் அரசியல் ஆர்வலர் ஒருவர் கூறுகின்றார்.

இது குறித்து வன்னியை பூர்வீகமாக கொண்ட மூதாட்டி ஒருவருடன் உரையாடும் பொழுது கேட்டேன். "சாப்பாட்டுக்கு வழியில்லாதவர்கள்... தோட்டக் காட்டு (மலையக) சனங்கள் தான் இராணுவத்திற்கு காட்டிக் கொடுப்பவர்கள்... அவர்கள் எப்போதும் அப்படித் தான்..." என்று முன்முடிவுகளுடன் கூறினார். அந்தக் கூற்றில் எள்ளளவும் உண்மையில்லை. இருப்பினும், மலையக கூலித் தொழிலாளர்கள் மீதான, யாழ்ப்பாணத் தமிழ் உயர் சாதியினரின் காழ்ப்புணர்வின் வெளிப்பாடு அப்படித் தான் இருக்கும்.

வன்னியில் புலிகளின் ஆட்சி நடந்த காலத்தில், "சாப்பாட்டுக்கு வழியில்லாததுகள், அரசின் நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு போட்டி போட்டார்கள்..." என்று சொல்லி வந்தனர். இருப்பவனுக்கும், இல்லாதவனுக்கும் இடையிலான வர்க்க வேறுபாட்டை, இதை விடத் தெளிவாக ஒரு சாமானியனால் கூற முடியாது. ஆனால், படித்த மேதாவிகள் மட்டும் "தமிழ் மக்களுக்கு இடையில் வர்க்க வேறுபாடு கிடையாது" என்று முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்து வருகிறார்கள்.

வயதில் மூத்தவர் என்பதால் அந்த மூதாட்டியுடன் நான் விவாதிக்கவில்லை. இருப்பினம், அவர் உட்பட, யாழ் சைவ- வேளாள கருத்தியல் கொண்ட வன்னியை பூர்வீகமாக கொண்ட நண்பர்கள் சிலர், "சாப்பாட்டுக்கு வழியில்லாத தோட்டக்காட்டு சனங்கள்" பற்றி, பல தடவைகள் என்னிடம் குறை கூறியுள்ளனர்.

அந்த மூதாட்டியுடன் பேசும் பொழுது, அண்மையில் காலச்சுவடு இதழில் மலையகத் தமிழர் பற்றி கருணாகரன் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாக, அ. யேசுராசா எழுதிய கட்டுரை நினைவுக்கு வந்தது. "யாழ்ப்பாணத் தமிழர், மலையகத் தமிழர் முரண்பாடு ஒரு மிகைப் படுத்தல் என்றும், இப்போது எல்லோரும் தமிழ்த் தேசியத்தின் பெயரால் ஒன்று சேர்ந்து விட்டார்கள் என்றும்," அ. யேசுராசா எழுதியிருந்தார்.

அ. யேசுராசா என்னால் மதிக்கப் படும் ஒரு மூத்த எழுத்தாளர். பல வருட கால இலக்கிய அனுபவமும், இடதுசாரி முகாமுடன் பரிச்சயமும் கொண்டவர். அவருக்கு தமிழர்கள் மத்தியில் நிலவும் வர்க்க வேறுபாடு பற்றி எதுவும் தெரியாது என்று நான் நினைக்கவில்லை. ஆனால், தமிழ் தேசியவாதிகள் எல்லோரும் வர்க்க வேறுபாடுகளை மூடி மறைப்பது போன்று தான் அவரும் நடந்து கொள்கிறார். இதுவும் ஒரு வகை "மகிந்த சிந்தனைய" தான். மகிந்த ராஜபக்ச "நாம் எல்லோரும் இலங்கையர்" என்றார். இவர்கள் "நாம் எல்லோரும் தமிழர்கள்" என்கிறார்கள்.

மலையகத்தில் நடந்த இனக் கலவரங்களுக்குப் பின்னர், பெருந்தோட்டத் தொழிலாளர்களான ஆயிரக் கணக்கான தமிழ் அகதிகள் வன்னியில் குடியேற்றப் பட்டனர். இன்று அவர்கள் பல்கிப் பெருகி வன்னி மண்ணின் குடிமக்களாக வாழ்கின்றனர். இரண்டாவது, மூன்றாவது தலைமுறையினர் சுத்தமான யாழ்ப்பாணத் தமிழ் பேசுகின்றனர். ஆயினும். வன்னியில் வாழும் பாரம்பரிய நிலவுடைமை வர்க்கமான வெள்ளாள ஆதிக்க சாதியினருக்கும், மலையக விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கும் இடையிலான வர்க்க முரண்பாடு இன்னும் மறையவில்லை.

வன்னியில் வாழும் தமிழ் மக்களுக்கிடையில் இன்னமும் நிலவும் வர்க்க முரண்பாடுகள், சில நேரம் பகை முரண்பாடுகளாக இருப்பதை, எம்முடன் பழகும் பல தமிழர்களுடனான உரையாடலின் மூலம் அறிய முடிகின்றது. தமிழ் தேசியவாதிகள் விதந்துரைப்பது போன்று, ஈழப்போரும், புலிகளின் போராட்டமும் வர்க்க முரண்பாடுகளை அழிக்கவில்லை. மாறாக, தமிழ் தேசிய அரசியலுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளப் பட்டது.

வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பிக் கொண்டிருந்த நிலவுடைமை வர்க்கத்தின் ஆதரவும், போராளிகளாக மனித வளத்தை வழங்கிக் கொண்டிருந்த கூலித் தொழிலாளர் வர்க்கத்தின் ஆதரவும் புலிகளுக்குத் தேவைப் பட்டது. இன்று, ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப் பட்டதற்குப் பின்னர், வர்க்க முரண்பாடுகள் பகிரங்கமாக வெளித் தெரிய ஆரம்பிக்கின்றன.

Friday, October 16, 2009

கொழும்பில் பண வெறிக்கு பலியாகும் தமிழ் சிறுமிகள்

ஆகஸ்ட் 15 ல் கொழும்பு மாநகரில் இரு தமிழ் சிறுமிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த செய்தி பெருமளவு தமிழ் ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை. காரணம், அந்த தமிழ் சிறுமிகளை கொன்றவர்கள் இனவெறியர்கள் அல்ல, மாறாக பணவெறியர்கள். மலையக ஏழைத் தமிழ் சிறுமிகளை வீட்டு வேலைக்காரிகளாக வைத்திருந்து உழைப்பை சுரண்டும் கொழும்பு பணக்காரர்கள் செய்த கொலை அது. அதனால் அனைத்துலக தமிழ் ஊடகங்கள் வர்க்க பாசத்தால், அந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இலங்கையில் "புதிய பூமி" மாதப் பத்திரிகையில் வந்த செய்திக் கட்டுரை இங்கே நன்றியுடன் மறுபிரசுரமாகிறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வீட்டுப் பணியாளர் எனும் இனிப்பு

'லயங்கள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பில்லை. எங்களால் நல்ல உணவையோ உடையையோ கொடுக்க முடிவதில்லை. நன்கு உண்டு உடுத்தாவது இருக்கட்டும்" என்று சொல்லிச் சொல்லியே தான் மலையகப் பெற்றோர்களில் கணிசமானோர் அவர்களின் பிள்ளைகளை வீட்டு வேலைகளுக்காக அனுப்புகின்றனர். அவ்வாறு வீட்டு வேலைகளுக்காகச் செல்வோர் உழைப்புச் சுரண்டலுக்கு மட்டுமன்றி பாலியல் துன்புறுத்தல்கட்கும் மன உளைச்சல்கட்கும் ஆளாகின்றனர். அவர்களில் வருடாந்தம் பலர் அகால மரணமான செய்திக ளையும் கேட்டிருக்கிறோம். ஆகஸ்ட் 15ம் திகதி இரண்டு சிறுமிகளின் சடலங்கள் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் கழிவு நீர் கால்வாயில் காணப்பட்டன. அவை லக்~பான தோட்டப் பிரிவைச் சேர்ந்த சுமதி, ஜீவராணி ஆகியோரின் சடலங்கள். அவர்கள் 'வீட்டுப் பணியாளர்களாக" கொழும்புக்கு உழைக்கச் சென்றவர்கள். நல்ல உணவை உண்ணவும் நல்ல உடையை உடுக்கவும் சென்றவர்கள். அதனாலேயே கழிவு நீரில் சடலமாக மிதந்தவர்கள்.

அதுமட்டுமல்ல, இறந்த பிறகு அவர்களுக்கு கௌரவப் பட்டமும் கொடுக்கப்பட்டது: அது தன்னினச் சேர்க்கையாளர்கள். ஜீவராணி (13 வயது) சுமதி (14 வயது) ஆகிய சிறுமிகள் வீட்டுப் பணிக்குச் சென்ற இடத்தில் தன்னினச் சேர்க்கையில் ஈடுபட்டதாகவும் அதற்கு இடையூறு ஏற்பட்டதால் அவர்கள் கழிவு நீர்க் கால்வாயில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டனர் என்றும் அவர்களின் எஜமானர்கள் கூறுகின்றனர். வீட்டு வேலைக்காகச் சென்றவர்கள் சடலமாக வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. இது முதலாவது தடைவையும் அல்ல கடைசித் தடவையும் அல்ல. 14 வயதானவர்களை வேலைக்கு அமர்த்தலாம் என்று சட்டம் சொல்லுகிற போதிலும் வீட்டு வேலைக்காக 14 வயதுக்கு குறைந்தவர்களும் அமர்த்தப் படுகின்றனர். 14 வயதுக்கு மேற்பட்டவர்களுங் கூட, வேலைக்கு அமர்த்தப்படும் இடங்களில் பாதுகாப்பு அற்றவர்களாகவே இருக்கின்றனர்.

பொதுவாக வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுபவர்கள் தொழிற் சட்டங்களின் ஆளுகைகளுக்கு உட்பட்டவர்களாகவோ அவற்றின் பாதுகாப்புக்கு உட்பட்டவர்களாகவோ இல்லை. இந் நிலையில் 18 வயதுக்கு குறைவான சிறுவர்களின் நிலை மிகவும் மோசமானது. மலையகச் சிறார்கள் நிலை பரிதாபகரமானது.

அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட சுமதி, ஜீவராணி ஆகியோரை அதே தோட்டத்தைச் சேர்ந்த தரகர் ஒருவர் கொழும்புக்கு கொண்டு சென்று 'ரணா ஏஜன்சி" எனும் வீட்டு வேலைக்களுக்கு சிறுவர்களை வழங்கும் முகவர் நிலையத்தில் ஒப்படைக்க அந் நிலையம் அவர்களை பௌத்தாலோக மாவத்தையில் உள்ள இரண்டு வீடுகளுக்கு அனுப்பியுள்ளது. அத் தோட்டத்தைச் சேர்ந்த தரகருக்கு ஒருவரை வேலைக்கு வழங்கும் போது மூவாயிரம் கொடுக்கப் படுவதாகவும் ரணா ஏஜன்சி ஒருவரை வேலைக்கு கொடுக்கும் போது எஜமானர்களிடமிருந்து ரூபா 10,000 பெற்றுக் கொள்வதாகவும் தெரிய வருகிறது. இந்த ரணா ஏஜன்சி தோட்டங்கள் தோறும் தரகர்களை வைத்திருக்கிறார்கள். அந்தத் தரகர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பியே வறுமையில் இருக்கும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை வீட்டு வேலைக்கு அனுப்புகிறார்கள். இந்த இரண்டு சிறுமிகளும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் அல்லது வேறு காரணங்களுக்காக கொல்லப்பட்டிருக்கலாம் என்றே அவர்களின் பெற்றோர்கள் சந்தேகம் எழுப்பினர்.

கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் மரண விசாரணை நடத்தும் போது பெற்றோர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் செய்த சமர்ப்பணத்தையடுத்து ஆகஸ்ட் 17ந் திகதி புதைக்கப்பட்ட சடலங்கள் ஆகஸ்ட் 27ந் திகதி தோண்டி எடுக்கப்பட்டன. அவை கண்டி போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மீள் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட 1வது பிரேத பரிசோதனைகள் அறிக்கையின் சடலங்கள் உடல்களில் காயங்கள் இருக்கவில்லை என்றும் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் படவில்லை என்றும் நீரில் மூழ்கியதாலேயே மரணம் ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால் சடலங்களை அடையாளங் காணும் போது உடலில் காயங்களைக் கண்டதாக சிறுமிகளின் பெற்றோர்கள் கூறுகின்றனர். அத்துடன் சுமதி என்ற சிறுமி எழுதியதாக காட்டப்படுகின்ற கடிதத்தில் அவர்கள் இருவரின் இறப்புக்கும் எஜமானர்களும் எஜமானிகளும் காரணம் அல்ல என்று எழுதப்பட்டுள்ளது. இக் கையெழுத்து சுமதி உடையது அல்ல என்று சுமதியின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

உண்மை எவ்வாறு இருந்த போதிலும் மரண விசாரணைகளில் அச் சிறுமிகளின் மரணங்கள் தற்கொலையா அல்லது கொலையா என்பது சாட்சியங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். ஆனால் இந்த இரண்டு சிறுமிகளின் மரணங்கள் மலையகத்தை உலுக்கியுள்ளன. சிறுவர்களை வீட்டு வேலைக்கு அனுப்புவது பற்றி சிந்திக்க வைத்துள்ளன எனலாம்.

சில அரசியல்வாதிகளும் தொழிற்சங்கவாதிகளும் இச் சம்பவத்தை தங்கள் தங்கள் அரசியல் இருப்பிற்கான பிரசாரமாகப் பயன்படுத்தினர். சில அரசசார்பற்ற நிறுவனங்கள் நிதியைப் பெற்றுக் கொள்வதற்கான செயல்திட்ட அறிக்கைகளை தயாரிக்கப் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு அப்பால் நேர்மையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

'மலையகச் சிறார்களை வீட்டு வேலைக்கு அமர்த்துவதும் மலையக தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்காலமும்" என்ற தலைப்பில் பகிரங்க கருத்தரங்கை 'புதிய மலையகம்", செம்ரெம்பர் 6ந் திகதி நடத்தியது. அதில் தொழிலாளர்களின் பிரசன்னம் பெரிய எண்ணிக்கையில் இருக்கவில்லை. ஆனால் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதில் சில தொழிற் சங்கத் தலைவர்கள் உரையாற்றிவிட்டுச் சென்று விட்டனர். கருத்தரங்கின் முடிவுவரை இருந்தவர்கள் முக்கியமான தீர்மானங்களை எடுத்தனர்.

18வயதுக் குறைந்த மலையகச் சிறார்களை வீட்டு வேலைக்கு அனுப்புவதில்லை என்ற பண்பாட்டு ரீதியான முடிவுகளை எடுத்தனர். எவ்வளவு தான் பொருளாதாரப் பிரச்சனை இருந்தாலும் வீட்டு வேலைகளுக்கு சிறார்களை அனுப்புவதில்லை என்று மலையகம் எங்கும் விழிப்புணர்வு வேலைத் திட்டங்களைப் 'புதிய மலையகம்" ஏனைய அமைப்புக்களுடன் ஐக்கியப்பட்டு முன்னெடுப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது.

அதே வேளை வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்படுபவர்களுக்கு தொழிற் சட்ட ரீதியாகவும் விசேட ஏற்பாடுகளின் ஊடாகவும் பாதுகாப்புகளை ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையும் அங்கு முன்வைக்கப் பட்டது.

சம்பள உயர்வு வேண்டி ஒத்துழையாமைப் போராட்டம் நடைபெறுகின்ற போது அந்த இரண்டு சிறுமிகளின் மரணம் தோட்டத் தொழிலாளர்களின் வறுமையைப் போக்கும் அளவுக்கு சம்பள உயர்வு அவசியம் என்பதையே வலியுறுத்தி வேண்டியுள்ளது.

எமது நாட்டுச் சூழலில் வீட்டு வேலை என்பது அடிமை வேலையே 'வீட்டுப் பணியாளர்கள்" என்ற அழகு தமிழில் அழைக்கப்பட்;டாலும் வீட்டு வேலை செய்வோர் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர். அவர்கள் திறன் மிக்க தொழிலாளர்களாக மதிக்கப்படுவதில்லை. அதிலும் சிறுவர்களை வீட்டு வேலைக்கு அனுப்புவதன் மூலம் எதிர்கால அடிமைகளை உருவாக்கவே துணைபோகின்றோம்.

200 வருட மலையக மக்களின் அடிமை வாழ்வு தகர்க்கப்பட போராட்டங்கள் நடைபெறுகின்ற போது மேலும் மேலும் அடிமைகளை பயிற்றுவிக்கத் துணை போவதைத் தவிர்ப்போம். சிறார்களை வீட்டு வேலைக்கு அமர்த்தாது இருப்போம்.

(நன்றி: புதிய பூமி, செப்டம்பர் 2009 )