Showing posts with label மேற்கத்திய நாடுகள். Show all posts
Showing posts with label மேற்கத்திய நாடுகள். Show all posts

Tuesday, November 03, 2015

மேலைத்தேய முதலாளித்துவம் சிறந்தது என்பது ஒரு மாயை


மேலை நாடுகளில் வேலை செய்யும் பல தமிழ் தொழிலாளர்கள், கடுமையாக உடல் நலன் பாதிக்கப் பட்டுள்ளனர். சிலர் நாற்பது வயதை எட்டுவதற்குள் மாரடைப்பால் இறந்துள்ளனர். ஆனாலும், ஒரு முதலாளிய சமூகத்தில், அவர்களைப் பற்றி கவலைப் பட யார் இருக்கிறார்கள்? ஏனென்றால், சந்தையில் அளவுக்கு மிஞ்சிய தொழிலாளர்கள் குவிந்து போயுள்ளனர்.

சோஷலிச நாடுகளின் பொருளாதாரத்தில் என்ன குறைபாடு? என்று நமக்கு பொருளாதார வகுப்பெடுக்கும் அறிவுஜீவிகள் கூறும் காரணம் இது: "எல்லோருக்கும் வேலை கிடைக்குமென்றால், அங்கே போட்டி இருக்காது. தொழிலாளர்களுக்கு வேலை மீதான ஆர்வம் குறைந்து விடும். அதனால் மிகக் குறைவாக வேலை செய்வார்கள். அது உற்பத்தியை பாதிக்கும்..."

அதே பொருளாதாரப் புலிகள், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் தனியார்மயத்தை புகுத்துவதற்கு கூறும் காரணமும், கிட்டத்தட்ட அப்படித் தான் இருக்கும். அதாவது, "அரசு ஊழியர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்வதில்லை. அதே நிறுவனத்தை தனியாரிடம் கொடுத்தால், ஒரு நிமிடம் கூட சும்மா இருக்க விடாமல் கடுமையாக வேலை வாங்குவார்கள். இதனால் உற்பத்தித் திறன் அதிகரிக்கும்..."

அதெல்லாம் உண்மையா? ஏற்கனவே பல தசாப்தங்களாக, 90% பொருளாதாரத்தை தனியார் துறைகள் நிர்வகிக்கும், முதலாளித்துவ நாடுகளில் நிலைமை எப்படி இருக்கிறது? போட்டி காரணமாக வெகுமதிகளை எதிர்பார்த்து எல்லோரும் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறார்களா? இல்லை. அப்படி யாராவது சொன்னால், அது மிகப் பெரிய பொய் ஆகும்.

பணக்கார மேற்கு ஐரோப்பிய நாடுகளில், கடந்த ஆறு ஆண்டுகளாக நிலவிய பொருளாதார நெருக்கடி இன்னமும் மறையவில்லை. ஆனால், நெருக்கடியை காரணமாகக் காட்டி, பல வர்த்தக நிறுவனங்கள் ஆட்குறைப்புச் செய்துள்ளன.

"சோம்பேறிகளை" பணி நீக்கம் செய்து விட்டு, சுறுசுறுப்பான வேலையாட்களை மட்டும் வைத்துக் கொண்டன. முன்பு பத்துப் பேர் செய்த வேலையை ஒருவரை செய்ய வைத்து, "உற்பத்தித்திறனை அதிகரிக்க வைத்தன." இதனால் இலாபம் பல மடங்கு அதிகரிக்கும் என்று நம்பினார்கள்.

உண்மையில் என்ன நடந்தது? நிறுவனத்தில் பணியாற்றும் ஒவ்வொரு வேலையாள் தலை மீதும் வேலைப் பளு கூடியது. சுறுசுறுப்பான வேலையாட்கள் தான் அதிக சுரண்டலுக்கு ஆளானார்கள். விளைவு?

நெதர்லாந்து முதலாளிகளின் பொருளியல் நாளேடான Het Financiëele Dagblad (15-11-2014) பத்திரிகையில் வந்த தகவலை கீழே தருகிறேன்:

//அதிக வேலைப்பளு காரணமாக, ஊழியர்கள் அடிக்கடி சுகயீன விடுப்பு எடுப்பது அதிகரித்தது. அதனால் தொழிலகங்களில் உற்பத்தித் திறன் பெருமளவு குறைந்தது. அது மட்டுமல்ல, சுகயீன விடுப்பில் வீட்டில் நிற்கும் ஊழியர்களுக்கான செலவுகளும் அதிகரித்தன.

மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு வீட்டில் நிற்கும் ஊழியர்களை பரிசோதிக்க, கம்பனி மருத்துவர் ஒருவரை நியமிப்பார்கள். அதற்கு தனியான செலவு. அதை சம்பந்தப் பட்ட கம்பனியே கட்ட வேண்டும். மேலும் சுகயீன விடுப்பில் இருக்கும் ஊழியருக்கு பதிலாக, தற்காலிக வேலையாள் ஒருவரைப் பிடிக்க வேண்டும். அதற்கு ஏற்படும் மேலதிக செலவுகள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

மேற்படி செலவுகளால் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் பில்லியன் கணக்கான இழப்பு ஏற்படுகின்றது. எப்பாடு பட்டாவது, குறைந்தது 1% சுகயீனமுற்ற ஊழியர்களை, ஒழுங்காக வேலைக்கு வர வைத்தாலே போதும். நாடு முழுவதும் ஆறு பில்லியன் யூரோக்கள் உற்பத்தியை கூட்டலாம்.

அதிகரித்து வரும் ஊழியர்களின் சுகயீன விடுப்பை கவனத்தில் எடுத்துள்ள பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், ஒரு யோசனையை நடைமுறைப் படுத்த உள்ளன. விரைவில், ஒவ்வொரு நிறுவனத்திலும் "சுகாதார நிர்வாகி" ஒருவர் நியமிக்கப் படுவார். ஊழியர்களின் உடல் நலனை கவனிப்பது அவரது முழுநேர வேலையாக இருக்கும்.

ஊழியர்கள் என்ன சாப்பிட வேண்டும்? எத்தனை மணிக்கு படுக்கைக்கு செல்ல வேண்டும்? இதையெல்லாம் கவனிக்கப் போகிறார்களாம். உடற்பயிற்சி, சத்தான உணவு, ஆரோக்கிய வாழ்வு என்பன பற்றி இனிமேல் கம்பனிகளில் வகுப்புகள் எடுக்கப் படும்.// (Het Financiëele Dagblad)

இந்தத் திட்டம் எல்லாம் நன்றாகத் தான் உள்ளன. ஆனால், வேலையாட்களின் எண்ணிக்கையை கூட்டி, வேலைப் பளுவை குறைக்கும் திட்டம் எதுவும் அவர்களது நிகழ்ச்சி நிரலில் இல்லை. உயர்கல்வி கற்ற, நல்ல சம்பளம் வாங்கும் ஊழியர்களே அடிக்கடி சுகயீன விடுப்பில் வீட்டில் நிற்கிறார்கள். அதற்காகத் தான், அந்த முதலாளிகளின் பத்திரிகை அக்கறையோடு ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளது.

சாதாரண தொழிலாளர்களைப் பற்றி இங்கே கூறத் தேவையில்லை. அவர்களது உடல் நலனை யாரும் கவனத்தில் எடுப்பதில்லை. ஒரு தொழிலாளி கடுமையான நோய் வாய்ப்பட்டால், அவரை நீக்கி விட்டு, புதிதாக ஒருவரை நியமிப்பார்கள். 

 ******

சோஷலிச நாடுகளில், அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்குவதற்காக மக்கள் வரிசையில் நின்ற கதைகளை பற்றி அடிக்கடி கேள்விப் பட்டிருப்பீர்கள். சில அத்தியாவசிய பாவனைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நேரம், அரசு அவற்றை அனைத்து மக்களுக்கும் கிடைக்குமாறு பங்கிட்டுக் கொடுத்தது.

முதலாம், இரண்டாம் உலகப் போருக்கு பிந்திய காலங்களில், மேற்கத்திய நாடுகளிலும் அதே மாதிரியான நிலைமை இருந்தது. அந்த நாடுகளிலும் நீண்ட வரிசைகளை காண முடிந்தது. ஆனால், அது பற்றி யாரும் பேச மாட்டார்கள். பொதுவாக, மற்றவர்களுடன் பகிர்ந்துண்ண விரும்பாத சுயநலப் பிராணிகள், சோஷலிச நாடுகளில் பாவனையாளர்கள் வரிசையாக நின்ற கதைகளை அடிக்கடி நினைவு படுத்துவார்கள்.

ஒவ்வொரு வருடமும், அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும், "கருப்பு வெள்ளி தினம்" (Black Friday) பிரபலமானது. அதில் அப்படி என்ன விசேஷம்? சென்னையில் வாழும் மக்களுக்கு, ஆடித் தள்ளுபடி, தீபாவளி மலிவு விற்பனை பற்றி தெரியாமல் இருக்க முடியாது. அது தான் இதுவும். மேற்கத்திய நாட்டவருக்கு, டிசம்பர் மாதம் தான் கொண்டாட்டங்கள் நிறைந்தது. அதனால், வர்த்தக நிலையங்களும் அந்த மாதத்தில் தான், விசேட கழிவு விலையில் பொருட்களை விற்பார்கள்.

அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் வர்த்தகர்களின் நன்மை கருதி, கருப்பு வெள்ளி என்று ஒரு நாளை விடுமுறை நாளாக்கி விட்டார்கள். அன்றைக்கு அதிகாலை மூன்று மணிக்கே கடைகள் திறக்கப் படும். அன்று மட்டும் மிகக் குறைந்த விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதால், அதை வாங்குவதற்காக மக்கள், முதல் நாளே கடைகளுக்கு முன்னால் வந்து காத்திருப்பார்கள்.

கடைகள் திறக்கப் பட்ட உடனேயே, பட்டியில் இருந்து அவிழ்த்து விடப் பட்ட ஆடு,மாடுகளைப் போன்று முண்டியடித்துக் கொண்டு ஓடுவார்கள். முதல் ஆளாக சென்று தமக்கு பிடித்த பாவனைப் பொருட்களை வாங்குவதற்கு அடிபடுவார்கள். சிலர் இந்த நெரிசலுக்குள் சிக்கி, மிதி பட்டு, நசி பட்டு, மூச்சுத் திணறி இறப்பதுண்டு, அல்லது காயப் படுவதுண்டு.

இது தான், மேற்கத்திய நாடுகளில் முதலாளித்துவம் மக்களை நடத்தும் லட்சணம். மக்களை நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அடிமைகளாக்கி, தன் உணர்வற்ற கால் நடைகளாக நடத்துகின்றது. மேற்கத்திய நாடுகளில், முதலாளித்துவம் மக்களை சுய மரியாதையுள்ள மனிதர்களாக மதிப்பதில்லை. அவர்களை நுகர்வதற்காக மட்டும் வாழும் நடைப் பிணங்களாக வைத்திருக்கிறது.

மேலைத்தேய முதலாளித்துவம் சிறந்ததென, இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும் ஒரு சில ஜென்மங்களை என்ன செய்யலாம்?


Tuesday, August 12, 2014

மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான ரஷ்யாவின் பொருளாதாரத் தடை


இவ்வளவு காலமும், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் அடுத்தடுத்து பொருளாதாரத் தடைகள் விதித்து வந்தன. இன்று, ரஷ்யா ஐரோப்பாவுக்கு எதிரான பொருளாதாரத் தடை ஒன்றை அறிவித்துள்ளது. இன்று முதல், ஐரோப்பிய நாடுகளில் இருந்து விவசாய விளைபொருட்களை இறக்குமதி செய்வது தடை செய்யப் பட்டுள்ளது. இந்தத் தடை ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். இதனால், பல ஐரோப்பிய நிறுவனங்கள் திவாலாகும் நிலையில் உள்ளன.

அதை விட, ஏற்கனவே, உக்ரைனுக்கான ரஷ்ய எரிவாயு விநியோகம் நிறுத்தப் பட்டுள்ளது. இதனால், 5 மில்லியன் மக்கள் வாழும் கீவ் நகரில், சுடு தண்ணீர் கிடைப்பதில்லை. வசதியான கீவ் நகரவாசிகள், மின்சார கொதிகலன் வாங்கி தண்ணீர் கொதிக்க வைத்து குளிக்கிறார்கள். எல்லோரும் அதைப் பாவிக்கத் தொடங்கினால், குளிர்காலத்தில் மின்சாரத் தடை எற்படும். இந்த வருடம் வரப் போகும் குளிர்காலத்தில், எரிவாயு, மின்சாரம் இன்றி வாழ வேண்டிய நிலைமை வரலாம்.

"ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறது!" பொருளாதாரப் பிரச்சினையால் பாதிக்கப் படப் போகும் ரஷ்ய மக்களுக்காக, மேற்கு ஐரோப்பியர்கள் கவலைப் படுகிறார்கள். அதற்கு காரணம் இது தான். மேற்கத்திய நாடுகளின் விவசாயப் விளைபொருட்கள், உணவுப் பொருட்களின் இறக்குமதியை தடை செய்வதாக, ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் பிரச்சினை காரணமாக, மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் கொண்டு வந்ததற்கு, பதிலடியாக இது நடந்துள்ளது.

இதனால், ஸ்பெயின், நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த உணவு ஏற்றுமதி நிறுவனங்கள் பாதிக்கப் படவுள்ளன. நெதர்லாந்தில் இருந்து பாலாடைக் கட்டி (சீஸ்), கறிமிளகாய், தக்காளி போன்ற உணவுப் பொருட்கள் ரஷ்யாவுக்கு ஏற்றுமதியாகின்றன. சுமார் ஒன்றரை பில்லியன் பெறுமதியான வர்த்தகம் பாதிக்கப் படவுள்ளது. அவை பழுதடையக் கூடிய பொருட்கள் என்பதால் களஞ்சியப் படுத்தி வைக்கவும் முடியாது.

"தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும்" என்று வாதாடி வரும், மேற்கத்திய "அரசியல் ஆய்வாளர்கள்" இந்தப் பிரச்சினையிலும் ரஷ்யா தான் அதிகளவு பாதிக்கப் படப் போகின்றது என்று ஆரூடம் கூறி வருகின்றனர். ரஷ்யா ஏற்கனவே ஈரானுடனும், லத்தீன் அமெரிக்க நாடுகளுடனும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. ஆனால், மேற்கு ஐரோப்பியர்கள் தான் தமது பொருட்களை விற்பதற்கு புதிய சந்தைகளை தேட வேண்டும். அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு, உலகில் எத்தனை நாடுகள் தயாராக இருக்கின்றன என்பதும் கேள்விக் குறி தான்.

ரஷ்யர்களும், எமது மக்களைப் போன்றவர்கள் தான். வெளிநாட்டுப் பொருட்கள், குறிப்பாக மேலைத்தேய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களை விரும்பி வாங்குவார்கள். எமது நாட்டில் நடப்பதைப் போன்று, ரஷ்யாவிலும் பண வசதி படைத்தவர்கள் மட்டுமே, மேற்கத்திய பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கிப் பாவிக்கிறார்கள். ஏழைகளும், கீழ் மத்திய தர வர்க்கத்தினரும், மலிவாகக் கிடைக்கும் உள்நாட்டுப் பொருட்களுடன் திருப்திப் பட்டுக் கொள்கின்றனர். ஆகவே, மேற்கத்திய உணவுப் பொருட்களின் இறக்குமதி தடை செய்யப் பட்டால், சிறுபான்மையினரான மேட்டுக்குடி மக்கள் மட்டும் தான் பாதிக்கப் படுவார்கள்.

அதே நேரம், மேற்கத்திய "அரசியல் ஆய்வாளர்கள்" மறு பக்கத்தையும் பார்க்க வேண்டும். ரஷ்யாவுக்கான ஏற்றுமதி தடைப் பட்டால், உள்நாட்டில் அந்தப் பொருட்களின் விலை சரியும். இதனால், மேற்கத்திய நாடுகளில் வாழும் பண வசதியற்ற, ஏழை மக்கள், குறைந்த விலையில் உணவுப் பொருட்களை வாங்கக் கூடியதாக இருக்கும். தீமையிலும் ஒரு நன்மை என்று இதனைக் குறிப்பிடலாம்.

மேற்கத்திய நாடுகளில், உணவுப் பொருட்களின் விலை குறையும் "அபாயத்தை" தடுப்பதற்காக, ஏற்றுமதியாளர்கள் அரசாங்கத்திடம் உதவி கேட்கிறார்கள். அதாவது, "ஏற்றுமதியாகாமல் தேங்கிக் கிடக்கும் உணவுப் பொருட்களை கடலில் கொட்டினாலும் கொட்டுவார்களே தவிர," உள்நாட்டு சந்தைக்கு கொண்டு வர மாட்டார்களாம். ஏனென்றால், ஒரு பொருள் சந்தையில் தாராளமாக கிடைத்தால், அதன் விலை குறைந்து விடும் என்பது அடிப்படை முதலாளித்துவ நியதி. "மலிந்தால் சந்தைக்கு வரும்" என்பது ஒரு தமிழ்ப் பழமொழி.

பாலாடைக் கட்டி (சீஸ்) ஏற்றுமதியில் நெதர்லாந்து முன்னணி வகிக்கின்றது. அது உலகம் முழுவதும் ஏற்றுமதியாகின்றது. சீஸ் உற்பத்தி செய்யும் நாடென்பதால், நெதர்லாந்தில் அதன் விலை மலிவாக இருக்கும் என்று நினைத்தீர்கள் என்றால் ஏமாந்து போவீர்கள். (அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் பலர் அவ்வாறு நினைத்து ஏமாந்து போகிறார்கள்.) உண்மையில், நெதர்லாந்தில் உற்பத்தியாகும் சீஸ், சந்தையில் தாராளமாகக் கிடைத்தாலும் அதன் விலை மிக அதிகம். ஆனால், அதே டச்சு சீஸ் கட்டியை, உதாரணத்திற்கு, அயல் நாடான ஜெர்மனியில் உள்ள ஒரு கடையில் மலிவாக வாங்கலாம்.

அதே மாதிரித் தான், நெதர்லாந்தில் உற்பத்தியாகும் கறிமிளகாய், தக்காளி போன்ற காய்கறிகளின் விலைகளும் மிகவும் அதிகம். இலங்கையில், இந்தியாவில் தக்காளியை, "ஏழைகளின் ஆப்பிள்" என்று சொல்வார்கள். ஆனால், நெதர்லாந்தில் அந்த நிலைமை மாறி உள்ளது. இங்கே ஆப்பிளின் விலை குறைவு, தக்காளியின் விலை அதிகம். ஏன் இந்த நிலைமை என்று கேட்டால், அந்நிய நாடுகளுக்கான ஏற்றுமதி தான் முக்கிய காரணம்.

இங்கே நான் நெதர்லாந்தை ஓர் உதாரணமாகத் தான் குறிப்பிட்டுள்ளேன். மற்ற ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த மக்களும், இதே கதைகளை தான் கூறுகின்றனர். அதாவது, எந்தப் பொருள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றதோ, அதன் விலை உள்நாட்டில் அதிகமாக உள்ளது. உள்நாட்டு நுகர்வை கட்டுப்படுத்தி, அந்நிய செலாவணியை ஈட்டுவதற்காக, வர்த்தகர்கள் செயற்கையாக விலையை தீர்மானிக்கிறார்கள்.

ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடை விதித்த நாடுகளைச் சேர்ந்த விமானங்கள், ரஷ்யா ஊடாக பறப்பதற்கு தடை கொண்டு வரப் படலாம் என்ற அச்சம் நிலவுகின்றது. அமெரிக்க, ஐரோப்பிய விமான சேவைகள், இதனால் மிகக் கடுமையாக பாதிக்கப் படும். ஏனென்றால், ஜப்பான, சீனாவுக்கு செல்லும் மேற்கத்திய விமானங்கள் யாவும் ரஷ்யாவின் சைபீரியா வான் பரப்பில் பயணம் செய்கின்றன. இதனால், பயண நேரம் குறைகின்றது.

சைபீரியா வான் பரப்பில் பறப்பதற்கு, ரஷ்யா தடை விதித்தால், மாற்று வழிகளை தேட வேண்டும். ரஷ்யாவுக்கு மேலே வட துருவத்திற்கு அண்மையாக பறப்பது ஒரு வழி. மேற்கு ஐரோப்பாவில் இருந்து, அலாஸ்காவில் சிறிது நேரம் தரித்து நின்று விட்டு, மேற்கொண்டு பயணத்தை தொடர வேண்டும். மற்றது, மத்திய கிழக்கு நாடுகளுக்கு மேலாக பறப்பது. இந்த இரண்டு வழிகளில் எதைத் தேர்ந்தெடுத்தாலும், பயண நேரம் அதிகமாகும். மேலதிக எரிபொருள் செலவாகும். அதனால் பயணச் செலவும் அதிகரிக்கும்.

மேற்கத்திய விமான சேவைகள், அதிகரிக்கப் போகும் செலவை, விமானப் பயணிகளின் தலைகளில் கட்டி விட முடியாத அளவிற்கு, இன்னொரு பிரச்சினை தோன்றியுள்ளது. அதாவது, ரஷ்யாவின் பொருளாதாரத் தடையானது, மேற்கத்திய நாடுகளின் விமான நிறுவனங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். ஆசிய நாடுகளில் இருந்து, மேற்கு ஐரோப்பாவுக்கு பறக்கும் ஆசிய விமான நிறுவனங்கள், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, குறைந்த செலவில் பயணம் செய்யலாம் என்று கூறி, மேற்கத்திய பயணிகளை தம் பக்கம் இழுக்க முடியும்.

மேற்குறிப்பிட்ட விமானத் தடை விவகாரம், ஏற்கனவே சோவியத் யூனியன் காலத்தில் வழமையாக இருந்து வந்தது. ஆயினும் அந்தக் காலகட்டம் வேறு. அன்று குறைந்தளவு வசதி படைத்த பயணிகள் மட்டுமே தூரப் பிரயாணம் செய்வதுண்டு. இன்று விமான டிக்கட் விலைகள் குறைந்து விட்டதால், பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும், எமிரேட்ஸ், எதிஹாட் போன்ற மத்திய கிழக்கை சேர்ந்த விமானங்கள், ஏற்கனவே குறைந்த விலையில் டிக்கட் விற்று பயணிகளை கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே, ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை மீள் பரிசீலனை செய்யுமாறு, மேற்கத்திய விமானக் கம்பனிகள் தமது நாடுகளின் அரசுக்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. நிலைமை அந்தளவு மோசமடையாது என்று, மேற்குலகில் பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், யார் கண்டது? எதிர்காலத்தில் என்னென்ன நடக்கும் என்பது யாருக்குத் தெரியும்? 

Saturday, October 30, 2010

மேலைத்தேய நிதியில் நடந்த தமிழ் இனப்படுகொலை


"இராணுவ, தொழில்நுட்ப உதவிகள் யூத தேசத்தின் ஊடாக சிறிலங்காவுக்கு வழங்கப்பட்டன. அமெரிக்காவின் ஒப்புதலின் பேரிலேயே அது நடைபெற்றது. அமெரிக்க தூதுவராலயத்தில் இஸ்ரேலிய நலன்பேணும் பிரிவு திறந்து வைக்கப்பட்டது. சிறிலங்கா கடற்படையை பலப்படுத்த இஸ்ரேல் உதவியது. அதனோடு ஷின்பெத் ஆலோசகர்கள் விசேஷ அதிரடிப் படைக்கு (STF) பயிற்சியளிக்க வந்தார்கள்."
 - விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர் அன்டன் பாலசிங்கம் எழுதிய War and Peace நூலில் இருந்து.

தமிழ் பேசும் மேற்கத்திய விசுவாசிகள், தமது இயல்பான கம்யூனிச வெறுப்பின் காரணமாக சீனா, ரஷ்யா பற்றி எல்லாம் திட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஈழத்தில் தமிழ் இனவழிப்புக்கு இஸ்ரேலும், மேற்கத்திய நாடுகளும் வழங்கிய உதவி குறித்து வாய் திறக்க மாட்டார்கள். தமிழ் ஊடகங்களும் அவர்களின் ஆதிக்கத்தில் இருப்பதால், அந்த தகவல்களை தமிழ் மக்கள் அறிய விடாது இருட்டடிப்புச் செய்வார்கள்.


சிறிலங்கா அரசு நடத்தி முடித்த தமிழ் இனப்படுகொலைக்கு அனுசரணை வழங்கிய மேலைத்தேய நாடுகள் குறித்த சிறிய ஆவணம் இது. அந்த தகவல்களை தொகுத்து வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய இடதுசாரிக் கட்சியான Green Left க்கு நன்றி. (Green Left: Sri Lanka: The West backs genocide)


ஒரு சில வாய்வழி கண்டனங்களைத் தவிர, ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது மேற்கத்திய நாடுகளோ இலங்கை அரசின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கையில் இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கும் பொழுது, ஐ.நா. பாதுகாப்பு சபை, ஐ.எம்.எப். வழங்கிய US$1.9 பில்லியன் கடனை தடுக்கவில்லை. கார்டியன் பத்திரிகை தகவலின் படி, "சிறிலங்கா மீது அத்தகைய தண்டனை தேவையில்லை என்று 15 உறுப்பினர் குழுவைக் கொண்ட பாதுகாப்பு சபை முடிவெடுத்தது."

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Robert Blake ஒரு நேர்காணலில் இவ்வாறு கூறினார்: "பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கு அமெரிக்கா இலங்கை அரசுக்கு உறுதியான ஆதரவை தெரிவிக்கின்றது.... இலங்கை இராணுவத்திற்கு தேவையான பயிற்சியையும், ஆயுத தளபாடங்களையும் அமெரிக்கா வழங்கி வருகின்றது." ( Human Rights Features Report, June 2007 )

அமெரிக்கா,"சர்வதேச இராணுவ கற்கைகளுக்கும் பயிற்சிக்குமான திட்டத்தின்" (IMET) கீழ், இலங்கைக்கு வருடந்தோறும் $500,000 வழங்கி வருகின்றது. அந்நிய இராணுவ நிதியுதவியின் கீழே 2006 ம் ஆண்டு, மேலதிகமாக ஒரு மில்லியன் டாலரும், அந்நிய நாட்டு நிதியுதவியாக $7.4 மில்லியன் டாலரும் வழங்கப்பட்டன.

2007 ம் ஆண்டிலிருந்து அமெரிக்கா இலங்கைக்கு நேரடி இராணுவ உதவி வழங்குவதை நிறுத்தியது. இருப்பினும் போர் நடந்து கொண்டிருந்த வேளை, இந்தியாவும், அமெரிக்காவும் புலனாய்வுத் தகவல்களை வழங்கின. (Christian Science Monitor ) இந்த உதவிகள் யாவும் இலங்கை அரசின் யுத்த செலவினத்திற்கு பெரிதும் உதவியுள்ளன.

பிரிட்டன் கூட இலங்கைக்கான ஆயுத விற்பனையில் நேரடியாக ஈடுபட்டது. பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் Joan Ruddock : "எனது விசாரணையின் படி கடந்த காலாண்டில் மட்டும் 7 மில்லியன் பவுன் பெறுமதியான ஆயுதங்கள் விற்றமைக்கான தரவுகள் கிடைத்துள்ளன. கவச வாகனங்கள், கனரக இயந்திரத் துப்பாக்கிகள், வேறு இராணுவ உபகரணங்கள் போன்றவற்றை விற்க அனுமதி வழங்கப் பட்டிருந்தது."

"2006 க்கும் 2008 க்கும் இடைப்பட்ட காலத்தில் 12 மில்லியன் பவுன் பெறுமதியான பிரிட்டிஷ் ஆயுதங்கள் இலங்கைக்கு விற்கப்பட்டுள்ளன." (Socialist Worker, May 12)


இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த காலத்தில் அவுஸ்திரேலிய பசுமைக் கட்சி உறுப்பினர் Bob Brown, ஒரு கண்டனப் பிரேரணையை முன்மொழிந்தார். ஆனால் அவுஸ்திரேலிய அரசு அதனை விவாதத்திற்கு விட மறுத்து விட்டது. அதற்கு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறிய காரணங்கள் பின்வருமாறு:
- "படுகொலைக்கு எந்தத் தரப்பு பொறுப்பு என்பது தெளிவில்லாமல் உள்ளது." - Labor Senator, Joe Ludwig.
- "தமிழர் தரப்பினாலேயே இனப்படுகொலை செய்யப்பட்டது." - Labor Senator, Steve Hutchins (Parliamentary Debate )


2007-08 ஆண்டுகளில், அவுஸ்திரேலியாவுக்கும், இலங்கைக்குமிடையில் $280 மில்லியன் வர்த்தகம் இடம்பெற்றதை இங்கே குறிப்பிட வேண்டும்.

பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த இந்து சமுத்திரத்திற்கான வல்லரசுப் போட்டிக்குள் இலங்கை சிக்கிக் கொண்டுள்ளது. இந்து சமுத்திரம் பூமியின் மிகப்பெரிய சமுத்திரம் அல்ல. ஆனால் உலகில் 70 % எண்ணெய்க் கப்பல்களும், 50 % சரக்குக் கப்பல்கள் இந்து சமுத்திரத்தின் ஊடாகவே பயணம் செய்கின்றன. இந்து சமுத்திரத்தை யார் கட்டுப்படுத்துகிறார்களோ, அவர்கள் முழு ஆசியாவையும் கட்டுப்படுத்துகின்றனர்." என்றார் அமெரிக்க கடற்படை தளபதி Alfred Maher.

இந்தக் காரணத்தினால் தான் சீனாவும் இலங்கை இராணுவத்திற்கு உதவி வழங்கியது. $37.6 மில்லியன் சீன ஆயுதங்களை வாங்குவதற்கு இலங்கை அரசு ஒப்பந்தம் செய்தது. ஆறு F7 யுத்த விமானங்களை சீனா இலவசமாகவே வழங்கியது. (Stockholm International Peace Research Institute ) "சீனாவின் நோக்கம் புரிந்து கொள்ள கடினமான ஒன்றல்ல.

சீனாவுக்கான சவூதி எண்ணெய் விநியோகத்தை பாதுகாக்கவும், கப்பல்களுக்கு எண்ணெய் நிரப்பவும் $1 billion செலவில் ஒரு துறைமுகத்தை கட்டிக் கொண்டிருக்கிறது."(The Times) இலங்கை அரசு அந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த பின்னரே, சீனா வேண்டிய ஆயுத, இராஜதந்திர உதவிகளை செய்தது.