Showing posts with label பேட்டி. Show all posts
Showing posts with label பேட்டி. Show all posts

Thursday, December 24, 2020

தேடல் 2020: கத்தோலிக்க "ஆன்மீக உதயம்" இதழில் வெளியான நேர்காணல்

நெதர்லாந்து கத்தோலிக்க திருச்சபையினரால் வெளியிடப் படும் "ஆன்மீக உதயம்" என்ற காலாண்டிதழில் (மார்கழி 2020), "தேடல்" என்ற தலைப்பின் கீழ் பிரசுரமான எனது நேர்காணல் (பகுதி - இரண்டு):


 

  • 1) இந்தவருடம் ஆரம்பத்தில் தொடங்கிய அமைதியின்மை இன்னும் முடிவடையவே இல்லை இதனை பற்றிய தங்களின் பார்வை என்ன ? 

அமைதியின்மை என்பதன் மூலம், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஏற்பட்ட குழப்பகரமான சூழ்நிலையை குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். இருபத்தியோராம் நூற்றாண்டில் உலக நாடுகள் எல்லாம் முன்னெப்போதும் இல்லாதவாறு ஒன்றுடன் ஒன்று தொடர்பாக உள்ளன. சர்வதேச விமான, கப்பல் போக்குவரத்து முன்னரை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. அதுவே உலகம் முழுவதும் வைரஸ் தொற்றுவதற்கான அடிப்படைக் காரணம். அதனால் தான் வைரஸ் தொற்றியவரை தனிமைப் படுத்தல் திட்டங்கள் நடைமுறைக்கு வந்தன. ஆனால், சாதாரண மக்களுக்கு இந்த விடயங்கள் தெரிய வருவதில்லை. அதனால் யாரோ ஒருவருக்கு நோய் தொற்றி விட்டால் அவரைக் கண்டு மிரளும் போக்கு அதிகமாக உள்ளது. இது சாதாரண மனித இயல்பு எனலாம். ஒருவருக்கு நோய் வந்தால் உறவினர்களே ஓடி விடுவார்கள். இது மனித உறவுகளில் விரிசல்களையும் உண்டுபண்ணுகிறது.  


  • 2) கொரோனா என்னும் ஒரு தொற்று நோய் உலகத்தையே மிகவும் பயபீதியில் வைத்திருக்கின்றது இதன் பின்னணி எப்படியானது என்பதைப்பற்றிய தங்கள் பார்வை என்ன? 

ஐரோப்பாவில் நூறு வருடங்களுக்கு முன்னர் ஸ்பானிஷ் காய்ச்சல் எனும் தொற்று நோய் பல கோடி மக்களை பலி கொண்டது. அதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் பிளேக் நோய் காரணமாக ஐரோப்பிய மக்கட்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு குறைந்தது! ஆகவே அவற்றுடன் ஒப்பிட்டால் கொரொனோ தொற்று நோய் ஓரளவு கட்டுக்குள் வந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். சில வருடங்களுக்கு முன்னர் எபோலா வைரஸ் பல ஆப்பிரிக்க நாடுகளை தாக்கியது. அதன் இன்னொரு வடிவம் தான் கோவிட் எனும் கொரோனா வைரஸ். இன்றுள்ள மனித இனத்தில் எவருக்குமே இதை தடுப்பதற்கான நோயெதிர்ப்பு சக்தி இல்லை என்பது தான் முக்கியமான விடயம். நூறு அல்லது இருநூறு வருடங்களுக்கு முன்பு சாதாரண சளிக்காய்ச்சல் வந்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. தற்போது யாரும் அதைக் கண்டு அச்சமடைவதில்லை. அதற்குக் காரணம், சாதாரண சளிக்காய்ச்சல் கொண்டு வரும் வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான நோயெதிர்ப்புச் சக்தி எமது உடல்களில் வந்து விட்டது. அது போன்றதொரு நிலைமை கொரோனா வைரஸ் விவகாரத்திலும் ஏற்படும். இங்கே நான் இன்னொரு உண்மையையும் குறிப்பிட வேண்டும். உலகம் முழுவதும் வாழும் மக்கள் யாவும் ஒரே மனித இனம் என்பதை கொரோனா நிரூபித்துள்ளது.  


  • 3) உலகில் பெருகிவரும் மக்கள் தொகையை குறைக்க குறிவைத்த நோய் எனவும் குறை கூறுகின்றனர் இது நியாயமா ? 

இரண்டாவது கேள்விக்கான பதிலே இதற்கும் பொருந்தும் என நினைக்கிறேன். நோயெதிர்ப்புச் சக்தி இல்லாத நிலையில் மக்கள் பலியாவதும் நடந்து கொண்டிருக்கும். இதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். சின்னம்மை நோய் வந்து யாரும் சாவதில்லை. ஆனால், அந்தமான் போன்ற தீவுகளில், வெளியுலகில் இருந்து முற்றிலும் தனிமைப் படுத்தப் பட்ட நிலையில் வாழும் பழங்குடி இன மக்களுக்கு சின்னம்மை நோய்க் கிருமி தொற்றினால் மரணிக்கும் வாய்ப்பு அதிகம். காரணம், அவர்களது உடலில் அதற்கான நோயெதிர்ப்புச் சக்தி இல்லை.  


  • 4) ஒரு சில நாடுகளில் இந்த நோய் தாக்கம் மிகவும் குறைவு ஒரு சில நாடுகளில் மிகவும் அதிகம் ஏன் இவ்வாறு ஒரு சில நாடுகளில் மனிதர் சாப்பிடும் உணவில் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்க வாய்ப்பு உள்ளதா அல்லது மனித நிறங்களில் தொற்று மாறுபடுகின்றதா? 

இது எதுவுமே காரணம் அல்ல. முதலாவது கேள்விக்கு அளித்த பதிலை மீண்டும் ஒரு தடவை வாசித்து பார்க்கவும். இன்றைய உலகம் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு நெருக்கமாக வந்து விட்டது. நாடுகளுக்கு இடையிலான மனிதர்களினதும், பொருட்களினதும் போக்குவரத்துகள் அதிகரித்து விட்டன. அதைப் பாவித்து வைரஸ் பரவுவதையும் தடுக்க முடியாது. அதனால் தான், ஒவ்வொரு நாடும் தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொள்ளத் தொடங்கியது. குறிப்பிட்ட காலம் வெளியுலகத் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப் பட்டன. Lock down என்று ஊரடங்கு சட்டம் போட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைத்தார்கள். இருப்பினும் சில நாடுகளில் பெருமளவில் தொற்றி, மரணங்கள் சம்பவித்தமைக்கு பல காரணங்கள் இருக்கலாம். அவர்கள் ஆரம்பத்தில் அலட்சியமாக இருந்திருக்கலாம். உதாரணத்திற்கு, வைரஸ் பரவிய ஆரம்ப காலங்களில் விமான நிலையங்களில் எந்தக் கட்டுப்பாடும் இருக்கவில்லை. மேலும், அமெரிக்கா, பிரித்தானியா போன்ற பணக்கார நாடுகளில் கூட மருத்துவ மனைகளில் பெரும் வசதிக் குறைபாடுகள் காணப்பட்டன. இத்தாலியில் மருத்துவ சேவை முற்றாக சீர்குலைந்தது. அதற்கு மாறாக, முன்கூட்டியே அவதானமாக பல விதமான கட்டுப்பாடுகளை விதித்த நாடுகளில் வைரஸ் தொற்று குறைந்து காணப்பட்டது. உதாரணத்திற்கு வியட்நாமில் ஒருவர் கூட சாகவில்லை! சுறுசுறுப்பான நாகரிக உலகில் இருந்து ஒதுங்கி இருந்த, தொலைதூரத்தில் இருந்த பிரதேசங்களிலும் வைரஸ் தொற்றவில்லை. உதாரணத்திற்கு பசுபிக் கடல் பிராந்தியத்தில் உள்ள தீவுகளை குறிப்படலாம். 


  • 5) யுத்தம் குறைவடைந்தாலும் அமைதியான யுத்தம் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றது. இதன் பொருளாதார தாக்கம் எப்படியானது? 

அமைதியான யுத்தம் என்பதை பனிப்போர் என்றும் குறிப்பிடலாம். அதாவது ஒரு கெடுபிடியான, பதற்றமான நிலைமை. சிலநேரம் ஒரு தசாப்த காலமாக, ஒரு துப்பாக்கி வேட்டு கூட தீர்க்கப் பட்டிருக்காது. ஆனால், துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்காத அமைதியான காலத்தில் பொருளாதார பிரச்சினைகள் வெளித் தெரிய வருகின்றது. யுத்தம் நடந்த காலத்திலும் பொருளாதார பிரச்சினைகள் இருந்திருக்கும். ஆனால், யாரும் அதைக் கண்டுகொள்ள மாட்டார்கள். எல்லோருடைய கவனமும் யுத்தத்தின் மேல் குவிந்திருக்கும். சிலநேரம், யுத்தகால பொருளாதாரம் இதை விடக் கொடூரமான தாக்கத்தை உண்டுபண்ணி இருக்கலாம். ஆனால், அது தற்காலிகமானது என்ற எண்ணம் ஏற்பட்டு விடுகிறது. அதற்கு மாறாக அமைதிக் கால பொருளாதாரப் பிரச்சினைகளால் ஏற்படும் தாக்கம் எமது வாழ்க்கையை நிரந்தரமாகப் பாதிக்கப் போகிறது என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. சில நேரம் அரசுகள், நாட்டின் பொருளாதார பிரச்சனைகளை மறைப்பதற்காக மக்கள் மீது யுத்தத்தை திணிப்பதுண்டு. ஆனால், ஒரு தடவை யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட்டால், மீண்டும் ஒரு யுத்த நிலைக்கு செல்வதற்கு யாரும் தயாராக இருக்க மாட்டார்கள். அவ்வாறான அமைதியான சூழ்நிலையில் பொருளாதார தாக்கம் மக்களால் அதிகமாக உணரப்படும். 

 

 *****

பகுதி ஒன்று - நெதர்லாந்து "ஆன்மீக உதயம்" இதழில் வெளியான எனது நேர்காணல்  

Wednesday, April 22, 2020

நெதர்லாந்து "ஆன்மீக உதயம்" இதழில் வெளியான எனது நேர்காணல்

நெதர்லாந்து கத்தோலிக்க திருச்சபையினரால் வெளியிடப் படும் "ஆன்மீக உதயம்" என்ற காலாண்டிதழில், "தேடல்" என்ற தலைப்பின் கீழ் பிரசுரமான எனது நேர்காணல்:



1)நெதெர்லாந்து நாட்டில் சமயப் பின்னணி அன்றும் இன்றும் எப்படி இருக்கிறது?

சமயம் என்பதை விட சமய நிறுவனம் என்பது தான் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். நெதர்லாந்தும் ஒரு காலத்தில் "மத அடிப்படைவாத" நாடாக இருந்தது தான். அதன் அர்த்தம் மக்கள் ஏதாவதொரு மத நிறுவனத்திற்கு கட்டுப்பட்டு வாழ்ந்தனர். ஒரு புறம் கத்தோலிக்க- கிறிஸ்தவ நிறுவனமும், மறுபுறம் புரட்டஸ்தாந்து- கிறிஸ்தவ நிறுவனமும் தமது உறுப்பினர்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. அவற்றிற்கு கட்டுப்பட மறுத்தவர்கள் சமூக நீக்கம் செய்யப் பட்டனர். அவ்வாறு சமூக நீக்கம் செய்யப் பட்டவருடன் சொந்தக்காரர்களும் தொடர்பு வைக்க முடியாது. மேலும் கத்தோலிக்க, புரட்டஸ்தாந்து சமூகங்களுக்கு இடையிலான தொடர்பாடலும் மிகக் குறைவாக இருந்தது. அதாவது ஒரு கத்தோலிக்கரும், புரட்டஸ்தாந்துகாரரும் திருமணம் செய்வதை நினைத்துப் பார்க்க முடியாத காலம் இருந்தது.

உண்மையில் இதுபோன்ற அதீத கட்டுப்பாடுகள் காரணமாகத் தான் இன்றைய மதச்சார்பற்ற அரசுக்கு மக்கள் ஆதரவு கிடைத்தது என நினைக்கிறேன். பொருளாதார வளர்ச்சி காரணமாக நகரங்களில் சனத்தொகை பெருகியதும் மதக் கட்டுப்பாடுகளில் இருந்து விட்டு விலகக் காரணமாக அமைந்திருந்தது. அதே நேரம் முன்பு மத நிறுவனங்கள் செய்து வந்த வேலைகளை எல்லாம் அரசு பொறுப்பெடுத்தது. உதாரணத்திற்கு, முன்பெல்லாம் ஏழைகள், வேலையற்றவர்கள், தேவாலயத்தின் கதவைத் தட்டி உதவி கேட்டு வந்தனர். தற்போது நலன்புரி அரசுத் திட்டங்கள் அனைத்து நலிவடைந்த பிரிவனருக்கும் உதவுகின்றன. இதனால் பெரும்பாலான மக்கள் மத்தியில் மத நம்பிக்கை குறைந்து கொண்டு சென்றது. தற்காலத்தில் ஆன்மிகம் என்பது ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை, அல்லது தேடல் சம்பந்தப் பட்ட விடயமாகி விட்டது.

2) தாங்கள் ஒரு இடதுசாரி முனைப்புடையவரா அவ்வாறு இருப்பதற்கு காரணம் என்ன?

இதற்கும் நெதர்லாந்து வரலாற்றில் இருந்து உதாரணம் காட்டலாம் என நினைக்கிறேன். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த Domela Nieuwenhuis நெதர்லாந்து சோஷலிச இயக்கத்தின் தந்தையாக போற்றப் படுகிறார். அவர் ஒரு காலத்தில் பாதிரியாராக கிறிஸ்தவ மதப் பிரசங்கம் செய்து வந்தார்! ஜெர்மன் - பிரான்ஸ் போரில் ஏற்பட்ட அழிவுகளை கண்ட பின்னர் சமாதானத்தை விரும்புவோராகவும், சமத்துவக் கருத்துக்களில் ஈடுபாடு கொண்டவராகவும் மாறினார். தொழிலாளர்களின் கூலி உயர்வுக்கான போராட்டங்களை நடத்தினார். மன்னர், மத நிறுவனம், முதலாளித்துவம், மதுபானக் கடை போன்றவற்றிற்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.

இது போன்ற எழுச்சிக் கருத்துக்கள் எல்லாம் "இடதுசாரித்தனம்" என்றால் நானும் அதைப் பின்பற்றுவதில் தவறென்ன? எப்போதும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு மக்களின் நலன்களுக்காக பாடுபடுகிறவர் இடதுசாரியாகத் தான் இருக்க முடியும். தென் அமெரிக்காவில் ஒரு காலத்தில் மார்க்சியத்தையும், கிறிஸ்தவத்தையும் கலந்து "விடுதலை இறையியல்" போதித்த கத்தோலிக்க பாதிரியார்கள் அங்குள்ள ஏழை மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தமையும் குறிப்பிடத் தக்கது. இயேசு கிறிஸ்துவின் போதனைகளில் கூட நிறைய இடதுசாரிக் கருத்துக்கள் உள்ளன. அவர் ஏழைகள் அனுபவிக்கும் இன்னல்களுக்கு தீர்வாக பரலோக ராஜ்ஜியத்தில் நம்பிக்கை வைக்கச் சொன்னார். நான் பூலோகத்தில் ஒரு சொர்க்கத்தை உருவாக்க வேண்டும் என்கிறேன். அதாவது தற்போதுள்ள அரசு, பொருளாதார அமைப்புகளில் மாற்றம் கொண்டு வருவதன் மூலம், செல்வத்தை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும்.

3) தாங்கள் ஒரு சிறந்த பன்மொழி அறிவு திறன் கொண்டவர் என்பதை நான் நினைக்கின்றேன் இவ்வாறு தங்களை வளம்படுத்த காரணம் ஏதும் உண்டா?

எனது வாழ்நாளில் பெரும் பகுதியை பன்முகக் கலாச்சார சமுதாயத்தில் கழித்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். சிறுவயதில் இருந்தே உலகின் பிற நாடுகளுக்கும் சென்று அங்குள்ள நிலைமையை நேரில் கண்டறிய வேண்டும் என்ற பேரவா இருந்தது. "ஒரே இடத்தில் இருந்து குப்பை கொட்டுவது" ஒத்துவரவில்லை. "நாடோடியாக அலைவது" பிடித்த விடயமாக இருந்தது. அதற்கு பல மொழிகளையும் கற்பது அவசியம் எனக் கண்டுகொண்டேன். "ஆங்கிலம் தெரிந்தால் உலகில் எங்கு வேண்டுமானாலும் போகலாம்" என்பது ஒரு முன்முடிவு. அது உண்மையல்ல. நாம் கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு அந்நிய மொழியும் ஒரு புதிய உலகத்திற்கான திறவுகோல். குறைந்தது பத்து சொற்களை அறிந்து கொண்டாலே பல புதிய அனுபவங்கள் கிடைக்கும். எமது அறிவும் விசாலமடையும். ஆயிரம் புத்தகங்களை படிப்பதை விட, ஆயிரம் மைல்கள் பயணம் செய்வது சிறந்தது என்றொரு சீனப் பழமொழி உள்ளது.

4) தங்கள் பார்வையில் புலம் பெயர் தமிழர்களின் தமிழ் பற்று எவ்வாறு உள்ளது?

தமிழர் மட்டுமல்லாது, ஒவ்வொரு புலம்பெயர் சமூகமும் குறிப்பிட்ட சில காலம் தாயக பிரிவுத் துயரில் சிக்கியிருக்கும். அண்மையில் நெதர்லாந்து பத்திரிகையில் ஒரு கட்டுரை வாசித்தேன். நியூசிலாந்தில் குடியேறிய டச்சுக் காரர்கள் தங்களது மொழி, கலாச்சாரத்தை இன்னமும் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் நியூசிலாந்து சமூகத்துடன் கலப்பதில்லை. ஒரு தனியான பிரதேசத்தில் மூடப்பட்ட சமூகமாக வாழ்கிறார்கள். பலர் டச்சு மொழி மட்டுமே பேசுகிறார்கள். டச்சு மரபு வழி உணவை உண்கிறார்கள். அவர்களுக்கென தனியாக ஒரு டச்சு மொழி பத்திரிகையும் வெளிவருகிறது. ஆகவே இது உலகம் முழுவதும் உள்ள தோற்றப்பாடு தான்.

புலம்பெயர் தமிழர்களின் தமிழ்ப்பற்று இன்று ஓர் அடையாள அரசியலாக மாறிக் கொண்டிருப்பதை காணக் கூடியதாக உள்ளது. அதாவது, சுற்றி வர வேறொரு மொழி பேசும், வேற்றின கலாச்சாரத்தில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக தங்களது தனித்துவத்தை தக்க வைப்பதற்கான போராட்டம். இரண்டாவது தலைமுறையினர் இதில் ஆர்வமில்லாத மாதிரி காட்டிக் கொண்டாலும், அன்றாடம் சந்திக்கும் சமூகப் பிரச்சினைகள் அவர்களையும் அடையாளம் தேட வைக்கிறது. இதற்குள் ஐரோப்பிய அரசுக்களின் பிரித்தாளும் அரசியல் இருப்பதையும் வருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டி உள்ளது.

5) அண்மைக்காலமாக எமது தாயகத்தில் திடீர் என்று சமய முரண்பாடுகள் அதிகரித்து செல்கின்றது இதற்கான கரணம் என்ன என்பதை எம்மோடு பகிர முடியுமா?

இருபத்தியோராம் நூற்றாண்டில், இலங்கையில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் சமய முரண்பாடுகள் அதிகரித்து செல்கின்றது. இதில் இலங்கையும் விதிவிலக்கல்ல. உண்மையில் இது மதங்களுக்கு இடையிலான முரண்பாடு அல்ல. ஒரு சிலர் மதத்தின் பெயரால் அரசியல் செய்கிறார்கள். அதற்குப் பல அப்பாவிகள் பலியாகிறார்கள். ஒவ்வொரு மதத்திலும் அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் இருக்கிறார்கள். ஆனால், முப்பது வருடங்களுக்கு முன்னர் அவர்கள் சொல்வதை யாரும் கேட்கவில்லை. சரியாகச் சொன்னால், அரசு ஆதரவு இருக்கவில்லை என்று சொல்லலாம். ஆனால், இப்போதைய நிலைமை வேறு. அரசு மறைமுகமாக மதத் தீவிரவாதிகளை ஊக்குவிக்கிறது. பெரும்பான்மை, சிறுபான்மை என்றில்லாமல் எல்லா மதங்களிலும் இது நடக்கிறது.

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்வார்கள். மக்கள் மதரீதியாக பிளவுபட்டால் ஆளும் வர்க்கத்திற்கு கொண்டாட்டம். உண்மையில் அரசு செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. ஒரு பிரஜைக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவது, இவையெல்லாம் அரசின் கடமைகள் என அரசமைப்பு சட்டத்தில் எழுதப் பட்டுள்ளது. அதைவிட அரசியல்வாதிகள் பொதுச் சொத்துக்களை கொள்ளையடிப்பது, ஊழல் செய்வது தனிக் கதை. அது பற்றி மக்கள் கேள்வி கேட்பதை தடுக்க வேண்டும் என்றால், அவர்களது கவனத்தை வேறு பக்கத்திற்கு திசை திருப்பி விட வேண்டும். அதற்கு சமய முரண்பாடுகள் உதவுகின்றன. சமய முரண்பாடுகள் மட்டுமல்ல, இனக்கலவரம், யுத்தம் போன்றன கூட ஆட்சியாளர்களின் நலன்களை பாதுகாக்க உதவுகின்றன.

Saturday, August 25, 2018

"இனப்பிரச்சினை தீர்க்காது வைத்திருப்பது அரசியல் லாபத்திற்கே ஆகும்" - நேர்காணல்

இலங்கையில் வெளிவரும் தேசம் (ஓகஸ்ட் 2018) பத்திரிகையில் பிரசுரமான எனது நேர்காணல்.  



"இனப்பிரச்சினைகளை தீர்க்காது வைத்திருப்பது அரசியல் லாபத்திற்கே ஆகும்" 
- எழுத்தாளர் கலை மார்க்ஸ் -  

கேள்வி: அரசியற் செயற்பாடுகளுடனும், கலை இலக்கியத்துறைக்குள்ளும் செயற்பட்டுவரும் நீங்கள் தேசம் வாசகர்களுக்காக வேண்டி உங்களைப் பற்றிய ஓர் அறிமுகத்தை வழங்க முடியுமா?

பதில்:
நிச்சயமாக, நான் சிறுவயதில் கொழும்பில் வாழ்ந்திருக்கிறேன். எனது வாழ்க்கை யாழ்ப்பாண வாழ்க்கை. அதனால் அனைத்து சமூகங்களுடனும் சேர்ந்து வாழும் சந்தர்ப்பம் எனக்கு சிறு வயதிலிருந்தே கிடைத்துள்ளது.

எனது குடும்பம் இடதுசாரி குடும்பமல்ல. அவர்கள் வலதுசாரீய தமிழ் தேசிய சிந்தனை கொண்டவர்கள். அன்றையக் காலகட்டத்தில் கொழும்பில் தான் தமிழ் தேசிய அரசியல் தொடங்கியதென்று நான் நினைக்கிறேன். யாழ்ப்பாணத்தை விடவும் கொழும்பில் தான் இது சம்பந்தமான கூட்டங்கள், பிரிவினைக்காக தமிழினத்திற்கான கோஷங்கள் அதிகமாக எழுப்பப்பட்டுக்கொண்டிருந்தன.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட மத்தியத்தர கொழும்புத் தமிழர்கள் இவ்வாறான கோஷங்களை முன்வைத்து தங்களது வர்க்க நலனுக்காகவும், அரசியற் தேவைகளுக்கும் முன்வைத்தனர். கொழும்பு சார்ந்த தலைமைகளும் இதைத்தான் செய்தனர். இவர்களுக்கான ஆதரவு மக்கள் தளம் யாழ்ப்பாணத்திலிருந்தது. எனது பெற்றோர்கள் மூலம் சிறுவயதிலிருந்து இதைப் பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. 

எனது பெற்றோர்கள் படித்த மத்தியத்தர வர்க்க சிந்தனை கொண்டவர்கள். இவர்கள் நிறைய புத்தகங்களை வாங்கி வீட்டில் அடுக்கி வைத்திருந்தனர். எனது தந்தை கொழும்பு நூலகத்தில் விற்பதற்கிருந்த பழைய புத்தகங்களையெல்லாம் வாங்கிக் கட்டிக்கொண்டு வருவார். என்னென்ன புத்தகங்கள் வாங்கினோம் என்று அவருக்கே தெரியாது. அதில் கார்ல் மார்க்ஸ் இனுடைய புத்தகங்கள், பெரியாருடைய புத்தகங்கள், மாக்சிம் கோர்கியின் 'நான் பயின்ற பல்கலைக்கழகம்", லெனின் 'ஏழை மக்களுக்கு" போன்ற பல புத்தகங்கள் இருந்தன. அந்த வாசிப்பு எனக்கு வேறுபட்ட அறிவைக் கொடுத்தது.

என்னுடைய 24 வயதில் (1991 ஆம் ஆண்டு) நான் வெளிநாடு சென்றேன். நான் முதலாவதாக சுவிசர்லாந்திற்கே சென்றேன். நான் ஒரு முறை வெளிநாடு செல்லும் போது பிரித்தானிய பெண்மணியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் அவரிடம் தமிழ், தமிழர், பண்பாடு, கலாசாரம், மூத்தமொழி என்றெல்லாம் பேசினேன். நான் தமிழ் தேசிய சூழலில் வாழ்ந்திருந்ததால் தேசியவாதியாக பேசினேன். அவர் எல்லாவற்றையும் கேட்டு விட்டு போகும்போது, என்னிடம் ஐரோப்பியர்களுக்கென்று ஒரு கலாசாரம் உள்ளது. ஐரோப்பியர்களுக்கென்று வரலாறும் உள்ளது. முதலாவது அதைப் படியுங்கள் என்றார். இவ்வாறான தேசியவாதக் கருத்துக்களினால் தொடர்பு அறுந்துபோனது.

நான் ஐரோப்பாவிற்கு சென்ற காலத்தில் உலகில் பெரிய மாற்றம் நிகழ்ந்தது. அன்றையக்கால கட்டத்தில் தான் பெர்லின் சுவர் விழுந்தது. சோவியத் யூனியன் உடைந்தது. அன்றைய தொலைக்காட்சிகளில் அவை தான் முக்கியமானச் செய்தி. ரோமானியாவின் சதிபுரட்சிக் காரணமாக இராணுவம் நாட்டைக் கைப்பற்றியது. நான் ரோமானிய விமான நிலையத்திலிருக்கும்போது சுற்றிலும் நிறைய இராணுவத்தினர் இருந்தனர். சோவியத் யூனியன் உடைந்த பிறகு எல்லோரும் சோஷலிசம் விழுந்ததென்று மாற்று வழி தேடினர். 

அந்த நேரத்தில் நான் அனாகிட்ஸ்களோடு இணைந்து கொண்டேன். அடுத்ததாக ட்ரொஸ்க்கி அமைப்பினரோடு சேர்ந்தேன். அதன்போது நான் துருக்கி அகதி ஒருவரைச் சந்தித்தேன். அவர் ட்ரொஸ்க்கிவாதி. டொனிகிலிப்ட்டின் புத்தகத்தை அவர் துருக்கி மொழிக்கு மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார். அதில் லெனின் தொடர்பான எதிர்மறையான கருத்துக்கள் இருந்தன. இவருக்கு அது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஸ்டாலின் செய்த கொலைகளையெல்லாம் லெனின் செய்த கொலைகள் போன்று அதில் எழுதப்பட்டிருந்தது. அதன் பின் அவர் அதிலிருந்து விலகிவிட்டார். நானும் அவர்களுடைய தொடர்பை விட்டுவிட்டேன்.

நான் 1995 ஆம் ஆண்டு நெதர்லாந்து வந்தேன். நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்பு கிடைத்தது. இவர்கள் உள்நாட்டு அரசியலை மட்டுமன்றி சர்வதேச அரசியலைப் பற்றியும் பேசினர். நான் இக்கட்சியில் கூட்டம் நடாத்தி, ஊர்வலம் சென்று பத்திரிகை விற்று எழுத்துலகிற்குள் பிரவேசித்தேன்.

கேள்வி: இன்றைய பொதுநல இலக்கியப் படைப்புகளுக்கும் இளைஞர்களுக்குமிடையிலான உறவு எப்படியாக உள்ளது?

பதில்:
இளைஞர்களின் வாசிப்புப் பழக்கம் மிக மிகக்குறைந்து போயுள்ளது. அநேகமாக சினிமாவில் தான் மூழ்கிபோயுள்ளார்கள். குறிப்பிட்ட வலைத்தள பக்கங்களை மட்டுமே பார்க்கின்ற நிலைமைகளே உள்ளன. இளைஞர்கள் மத்தியில் தேடல் குறைந்து போய் விட்டதாக நான் நினைக்கிறேன். யுத்த நேரத்திலும் குறிப்பிட்ட வலைத்தள பக்கங்களையே பார்த்தனர். அவர்களுக்கு அதுபோதும் என்பதுபோல் இருந்து கொள்வார்கள். 

சமூகம் சார்ந்த வாசிப்பு எதுவுமே இல்லை. படித்தவர்கள் மத்தியிலும் வாசிப்பு குறைந்துபோய் விட்டது. இந்த முதலாளித்துவ சிந்தனை சரியானவற்றைத் தெரிந்துக் கொள்ள விடாது. அதேபோல் வாசிக்கவும் விடாது. உழைப்பு, பணம், களிக் கொண்டாட்டத்திற்குள்ளேயே இளைய தலைமுறைகளை பள்ளிக்கூடங்களில் இருந்து ஆரம்பிக்கவேண்டும்.

கேள்வி:
முன்பு சமூகத்தையே புரட்டிப்போட்ட எழுத்தாக்கங்கள் படைக்கப்பட்டன. இன்று அவ்வாறான நிலைமைகள் காணப்படுகின்றனவா?

பதில்:
மார்க்சிம் கோர்க்கியினுடைய காலத்திற் கூட நூற்றுக்கு தொண்ணூறு சதவீதமான மக்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அநேகமாக மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தான் படித்திருந்தார்கள். அன்றைய மக்களின் சிந்தனை முறை வித்தியாசம். அதைப் புரட்சிகர காலகட்டம் என்றும் சொல்லலாம். லெனின் கூட மத்திய தர வர்க்கத்தை சேர்ந்த ஒருவர் தான். அவருடைய உறவினர்களும் அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கள். அப்படி வந்தவர் ஏன் இப்படி சிந்திக்க வேண்டும்?

அந்தக் காலக்கட்டமும் வேறு. அந்த நிலைமை இன்று இல்லையென்று சொல்ல முடியாது. மழுங்கடிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டே அதை செய்திருக்கிறார்கள். முதலாளித்துவ வாதிகளும் முட்டாள்கள் கிடையாது. புரட்சிகள் ஏற்படும்போது எப்படி தடுக்கவேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். அதை தடுப்பதற்கான திட்டங்களை சிந்தித்து வகுத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதற்கான அவர்களின் ஒரு தந்திரோபாயம் தான் வசதி வாய்ப்புகளைக் காட்டி விடுதல்.

ஐரோப்பியர்கள் இலங்கையை வறுமையான நாடாகவே பார்க்கிறார்கள். ஆனால் இங்குள்ளவர்கள் வசதியான குடும்ப வாழ்க்கையை வாழ்கிறோம் என்று நினைக்கிறார்கள். பெரும்பான்மையாக எல்லா வீடுகளிலும் மோட்டார் வாகனங்கள் உள்ளன. முதலாளித்துவம் இப்படியான கட்டுக்குள் மக்களை வைத்துள்ளது. முதலாளித்துவத் திட்டம் எல்லா இடங்களிலும் ஊடுருவி உள்ளது. வறுமையான குடும்பத்தில் உள்ள ஒருவரை வசதியான ஒரு இடத்தில் விடும்போது, அவர் ஒரே நாளில் மாறிவிடுவார். முதலாளித்துவ வசதிகளை காட்டிவிடுகின்றது.

கேள்வி:
வாசிப்பு பழக்கம் புத்தகத்தில் இருந்து நகர்ந்து சமூக வளைத்தளங்களுக்கூடாக முக நூல் என்று நகர்ந்து கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் இடதுசாரிகளுடைய செயற்பாடுகள் எவ்வாறு உள்ளது?

பதில்:
இது முக்கியமாக பேசப்பட வேண்டிய விடயம். இதை என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்லலாம். இணையத்தை ஆரம்பிப்பதிலிருந்தே பயன்படுத்தி வருபவர்களில் நானும் ஒருவன். 1992 இல் இணையம் வந்தது. அந்த நேரம் இணையம் முழு உலகையும் ஆக்கிரமிக்கும் என்று நான் நினைக்கவில்லை. இணைய பாவனை குறைவாக இருந்த காலத்திலேயே இடதுசாரீய கருத்துக்களும், மார்க்ஸிசம், லெனினிசம் என்று எல்லாவற்றையும் புகுத்திவிட்டன. வர்த்தக மயப்படுத்தி வந்த முதலாளித்துவத் தளத்தை இடதுசாரிகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இந்த தளம் முற்போக்கு சிந்தனை கொண்டவர்களை இணைக்கிறது.

மக்கள் மத்தியில் பொதுவுடமைச் சிந்தனை கொண்டவர்கள் இருக்கிறார்கள். இன்று நிலவும் அரசியல் மேல் வெறுப்புக்கொண்டவர்களும் இருக்கிறார்கள். அவர்களை ஒழுங்குப்படுத்துவதற்கான அமைப்பு இல்லை. வர்க்கப் போராட்டத்தை நாம் தெளிப்படுத்த வேண்டும். அதற்கான ஒரு ஊடகமான சமூக வலைத்தளங்களை பயன்படுத்த வேண்டும். அரசாங்கம் கட்டுப்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் மிக இலகுவானதுதான் சமூக வலைத்தளம்.

பத்திரிகையை எங்கு அச்சடிக்கிறார்கள்? எங்கு செல்கிறது? எங்கு வருகிறார்கள்? என்றெல்லாம் தெரியாது. சமூக வலைத்தளங்களை அரசாங்கத்தால் முடக்கமுடியும். அதுவரையில் அதன் சுதந்திரத்தை நாம் பயன்படுத்திக் கொள்வோம். இதன் மூலம் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வோம். மக்கள் மத்தியில் ஊடுருவிச் செல்வோம். ஆனால் இதை அதிகமாக வலதுசாரிகள் தான் பயன்படுத்துகிறார்கள். 'ப்ளொக்" மூலம் பதிவுகளை பதிவிட்டு இத்தாலியில் வலதுசாரிகள் பெரிய கட்சியையே உருவாக்கியுள்ளார்கள். இதுபோன்று இடதுசாரிகளுக்கும் முடியும்.

எங்களுடைய கருத்துக்களை நாம் கதைக்க வேண்டும். அவர்களுக்கு விட்டுக் கொடுக்கக்கூடாது முரண்பாடு அதிகரித்து வெடிக்கும்போது தான் போராட்டங்கள் வெடிக்கும். அதுவரைக்கும் இவ்வாறான முரண்பாடுகள் இருக்கிறது என்பதை நாம் வெளியில் கொண்டுவர வேண்டும்.

கேள்வி :
புலம்பெயர் தமிழர்களுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவும் அரசியற் சிந்தனையும் எவ்வாறு உள்ளது?

பதில்:
உண்மையாக சொல்லப் போனால் அவர்களுக்கு எந்த வித அரசியலும் கிடையாது. யுத்த சூழலில் இருந்து வந்ததால் தமிழ் தேசிய அரசியலோடு நெருக்கம் அதிகம். ஆனால் தமிழ் தேசியம் என்றால் என்ன? அதன் மூலம் என்ன செய்யப் போகிறார்கள்? என்பதுக்கூட தெரியாதவர்கள் தமிழ் தேசியத்தை ஆதரிக்கிறார்கள். தனி நாடு வேண்டுமென்றார்கள். தனி நாடு கிடைத்திருந்தாலும் அவர்கள் மறுபடியும் இலங்கைக்கு வரமாட்டார்கள். எரித்திரியாவை உதாரணமாக சொல்லலாம்.

கேள்வி:
இந்த முதலாளித்துவ அரசாங்கத்தால் சிறுபான்மை மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்பான உங்கள் கருத்து என்ன?

பதில்:
அவர்கள் பிரச்சினைகளை தீர்க்காது வைத்திருப்பது அரசியல் இலாபத்திற்கே ஆகும். தீர்க்கவேண்டுமென்று நினைத்திருந்தால் எப்போதோ தீர்த்திருக்கலாம். இந்த பிரச்சனைகளினால் அவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். உதாரணமாக ஜனாதிபதி கொலை செய்யப்பட்ட சம்பவங்களும் உள்ளன. இருந்தாலும் அவர்களுடைய இலாபம் கருதி அவர்கள் செய்கிறார்கள். இது ஒரு செயற்பாடு (system)  

கேள்வி:
எவ்வாறானதொரு அரசியலை எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்:
முதலாளித்துவ ஆட்சியில் பொருளாதார நெருக்கடி, பண வீக்கம், விலையேற்றம் போன்ற பிரச்சினைகள் இருக்கும். இது இருக்கிறது தான் அவர்களுக்கு சாதகம். இது மாறாது. சிலர் கேட்கலாம் சிங்கப்பூர் மாறவில்லையா? ஹொங்கொங் மாறவில்லையா? என்று. இங்கு நாம் ஒன்றை கவனிக்கவேண்டும் சீனாவிற்கு பக்கத்தில் ஹொங்கொங் உள்ளது. வியட்நாமிற்கு பக்கத்தில் தான் சிங்கப்பூர் உள்ளது. ஆகவே சோஷலிச நாடுகளுக்கு போட்டியாக ஏகாதிபத்திய நாடுகளால் இந்நாடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. வேறொன்றும் அந்த நாடுகளின் மேல் கொண்ட பாசத்தால் அல்ல. ஒரு வேளை இந்தியா சோஷலிச நாடாக இருந்திருந்தால் இலங்கையில் எல்லாப் பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டிருக்கலாம்.

அதுமட்டுமல்லாது முதலாளித்துவ ஆட்சியில் ஊழல் என்பது அவர்களுக்குச் சரியானது இங்கு பொருளாதாரத்தை கவனிக்கமாட்டார்கள். இதனால் கடன் வழங்குபவர்களுக்கு இலாபம் கிடைக்கும். வட்டிக் கிடைக்கும் என்பதால் வழங்கிய பணத்தில் ஊழல் செய்தாலும் வழங்கியவர்களுக்கு கவலையில்லை. அவர்கள் கேள்வி கேட்காது மறுபடி மறுபடி கடன் வழங்குவார்கள். ஊழல் தொடரும். இவ்வாறான கடன் வழங்கல் மூலம் நாட்டை மறு காலனியாதிக்கத்திற்குள் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். இதற்கு எதிர்மறையான சோஷலிச ஆட்சி மலரவேண்டுமென்பதே எங்கள் கனவு.

[நேர்கண்டவர்: சதீஷ்]