Saturday, August 25, 2018

"இனப்பிரச்சினை தீர்க்காது வைத்திருப்பது அரசியல் லாபத்திற்கே ஆகும்" - நேர்காணல்

இலங்கையில் வெளிவரும் தேசம் (ஓகஸ்ட் 2018) பத்திரிகையில் பிரசுரமான எனது நேர்காணல்.  



"இனப்பிரச்சினைகளை தீர்க்காது வைத்திருப்பது அரசியல் லாபத்திற்கே ஆகும்" 
- எழுத்தாளர் கலை மார்க்ஸ் -  

கேள்வி: அரசியற் செயற்பாடுகளுடனும், கலை இலக்கியத்துறைக்குள்ளும் செயற்பட்டுவரும் நீங்கள் தேசம் வாசகர்களுக்காக வேண்டி உங்களைப் பற்றிய ஓர் அறிமுகத்தை வழங்க முடியுமா?

பதில்:
நிச்சயமாக, நான் சிறுவயதில் கொழும்பில் வாழ்ந்திருக்கிறேன். எனது வாழ்க்கை யாழ்ப்பாண வாழ்க்கை. அதனால் அனைத்து சமூகங்களுடனும் சேர்ந்து வாழும் சந்தர்ப்பம் எனக்கு சிறு வயதிலிருந்தே கிடைத்துள்ளது.

எனது குடும்பம் இடதுசாரி குடும்பமல்ல. அவர்கள் வலதுசாரீய தமிழ் தேசிய சிந்தனை கொண்டவர்கள். அன்றையக் காலகட்டத்தில் கொழும்பில் தான் தமிழ் தேசிய அரசியல் தொடங்கியதென்று நான் நினைக்கிறேன். யாழ்ப்பாணத்தை விடவும் கொழும்பில் தான் இது சம்பந்தமான கூட்டங்கள், பிரிவினைக்காக தமிழினத்திற்கான கோஷங்கள் அதிகமாக எழுப்பப்பட்டுக்கொண்டிருந்தன.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட மத்தியத்தர கொழும்புத் தமிழர்கள் இவ்வாறான கோஷங்களை முன்வைத்து தங்களது வர்க்க நலனுக்காகவும், அரசியற் தேவைகளுக்கும் முன்வைத்தனர். கொழும்பு சார்ந்த தலைமைகளும் இதைத்தான் செய்தனர். இவர்களுக்கான ஆதரவு மக்கள் தளம் யாழ்ப்பாணத்திலிருந்தது. எனது பெற்றோர்கள் மூலம் சிறுவயதிலிருந்து இதைப் பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. 

எனது பெற்றோர்கள் படித்த மத்தியத்தர வர்க்க சிந்தனை கொண்டவர்கள். இவர்கள் நிறைய புத்தகங்களை வாங்கி வீட்டில் அடுக்கி வைத்திருந்தனர். எனது தந்தை கொழும்பு நூலகத்தில் விற்பதற்கிருந்த பழைய புத்தகங்களையெல்லாம் வாங்கிக் கட்டிக்கொண்டு வருவார். என்னென்ன புத்தகங்கள் வாங்கினோம் என்று அவருக்கே தெரியாது. அதில் கார்ல் மார்க்ஸ் இனுடைய புத்தகங்கள், பெரியாருடைய புத்தகங்கள், மாக்சிம் கோர்கியின் 'நான் பயின்ற பல்கலைக்கழகம்", லெனின் 'ஏழை மக்களுக்கு" போன்ற பல புத்தகங்கள் இருந்தன. அந்த வாசிப்பு எனக்கு வேறுபட்ட அறிவைக் கொடுத்தது.

என்னுடைய 24 வயதில் (1991 ஆம் ஆண்டு) நான் வெளிநாடு சென்றேன். நான் முதலாவதாக சுவிசர்லாந்திற்கே சென்றேன். நான் ஒரு முறை வெளிநாடு செல்லும் போது பிரித்தானிய பெண்மணியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் அவரிடம் தமிழ், தமிழர், பண்பாடு, கலாசாரம், மூத்தமொழி என்றெல்லாம் பேசினேன். நான் தமிழ் தேசிய சூழலில் வாழ்ந்திருந்ததால் தேசியவாதியாக பேசினேன். அவர் எல்லாவற்றையும் கேட்டு விட்டு போகும்போது, என்னிடம் ஐரோப்பியர்களுக்கென்று ஒரு கலாசாரம் உள்ளது. ஐரோப்பியர்களுக்கென்று வரலாறும் உள்ளது. முதலாவது அதைப் படியுங்கள் என்றார். இவ்வாறான தேசியவாதக் கருத்துக்களினால் தொடர்பு அறுந்துபோனது.

நான் ஐரோப்பாவிற்கு சென்ற காலத்தில் உலகில் பெரிய மாற்றம் நிகழ்ந்தது. அன்றையக்கால கட்டத்தில் தான் பெர்லின் சுவர் விழுந்தது. சோவியத் யூனியன் உடைந்தது. அன்றைய தொலைக்காட்சிகளில் அவை தான் முக்கியமானச் செய்தி. ரோமானியாவின் சதிபுரட்சிக் காரணமாக இராணுவம் நாட்டைக் கைப்பற்றியது. நான் ரோமானிய விமான நிலையத்திலிருக்கும்போது சுற்றிலும் நிறைய இராணுவத்தினர் இருந்தனர். சோவியத் யூனியன் உடைந்த பிறகு எல்லோரும் சோஷலிசம் விழுந்ததென்று மாற்று வழி தேடினர். 

அந்த நேரத்தில் நான் அனாகிட்ஸ்களோடு இணைந்து கொண்டேன். அடுத்ததாக ட்ரொஸ்க்கி அமைப்பினரோடு சேர்ந்தேன். அதன்போது நான் துருக்கி அகதி ஒருவரைச் சந்தித்தேன். அவர் ட்ரொஸ்க்கிவாதி. டொனிகிலிப்ட்டின் புத்தகத்தை அவர் துருக்கி மொழிக்கு மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார். அதில் லெனின் தொடர்பான எதிர்மறையான கருத்துக்கள் இருந்தன. இவருக்கு அது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஸ்டாலின் செய்த கொலைகளையெல்லாம் லெனின் செய்த கொலைகள் போன்று அதில் எழுதப்பட்டிருந்தது. அதன் பின் அவர் அதிலிருந்து விலகிவிட்டார். நானும் அவர்களுடைய தொடர்பை விட்டுவிட்டேன்.

நான் 1995 ஆம் ஆண்டு நெதர்லாந்து வந்தேன். நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்பு கிடைத்தது. இவர்கள் உள்நாட்டு அரசியலை மட்டுமன்றி சர்வதேச அரசியலைப் பற்றியும் பேசினர். நான் இக்கட்சியில் கூட்டம் நடாத்தி, ஊர்வலம் சென்று பத்திரிகை விற்று எழுத்துலகிற்குள் பிரவேசித்தேன்.

கேள்வி: இன்றைய பொதுநல இலக்கியப் படைப்புகளுக்கும் இளைஞர்களுக்குமிடையிலான உறவு எப்படியாக உள்ளது?

பதில்:
இளைஞர்களின் வாசிப்புப் பழக்கம் மிக மிகக்குறைந்து போயுள்ளது. அநேகமாக சினிமாவில் தான் மூழ்கிபோயுள்ளார்கள். குறிப்பிட்ட வலைத்தள பக்கங்களை மட்டுமே பார்க்கின்ற நிலைமைகளே உள்ளன. இளைஞர்கள் மத்தியில் தேடல் குறைந்து போய் விட்டதாக நான் நினைக்கிறேன். யுத்த நேரத்திலும் குறிப்பிட்ட வலைத்தள பக்கங்களையே பார்த்தனர். அவர்களுக்கு அதுபோதும் என்பதுபோல் இருந்து கொள்வார்கள். 

சமூகம் சார்ந்த வாசிப்பு எதுவுமே இல்லை. படித்தவர்கள் மத்தியிலும் வாசிப்பு குறைந்துபோய் விட்டது. இந்த முதலாளித்துவ சிந்தனை சரியானவற்றைத் தெரிந்துக் கொள்ள விடாது. அதேபோல் வாசிக்கவும் விடாது. உழைப்பு, பணம், களிக் கொண்டாட்டத்திற்குள்ளேயே இளைய தலைமுறைகளை பள்ளிக்கூடங்களில் இருந்து ஆரம்பிக்கவேண்டும்.

கேள்வி:
முன்பு சமூகத்தையே புரட்டிப்போட்ட எழுத்தாக்கங்கள் படைக்கப்பட்டன. இன்று அவ்வாறான நிலைமைகள் காணப்படுகின்றனவா?

பதில்:
மார்க்சிம் கோர்க்கியினுடைய காலத்திற் கூட நூற்றுக்கு தொண்ணூறு சதவீதமான மக்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அநேகமாக மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தான் படித்திருந்தார்கள். அன்றைய மக்களின் சிந்தனை முறை வித்தியாசம். அதைப் புரட்சிகர காலகட்டம் என்றும் சொல்லலாம். லெனின் கூட மத்திய தர வர்க்கத்தை சேர்ந்த ஒருவர் தான். அவருடைய உறவினர்களும் அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கள். அப்படி வந்தவர் ஏன் இப்படி சிந்திக்க வேண்டும்?

அந்தக் காலக்கட்டமும் வேறு. அந்த நிலைமை இன்று இல்லையென்று சொல்ல முடியாது. மழுங்கடிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டே அதை செய்திருக்கிறார்கள். முதலாளித்துவ வாதிகளும் முட்டாள்கள் கிடையாது. புரட்சிகள் ஏற்படும்போது எப்படி தடுக்கவேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். அதை தடுப்பதற்கான திட்டங்களை சிந்தித்து வகுத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதற்கான அவர்களின் ஒரு தந்திரோபாயம் தான் வசதி வாய்ப்புகளைக் காட்டி விடுதல்.

ஐரோப்பியர்கள் இலங்கையை வறுமையான நாடாகவே பார்க்கிறார்கள். ஆனால் இங்குள்ளவர்கள் வசதியான குடும்ப வாழ்க்கையை வாழ்கிறோம் என்று நினைக்கிறார்கள். பெரும்பான்மையாக எல்லா வீடுகளிலும் மோட்டார் வாகனங்கள் உள்ளன. முதலாளித்துவம் இப்படியான கட்டுக்குள் மக்களை வைத்துள்ளது. முதலாளித்துவத் திட்டம் எல்லா இடங்களிலும் ஊடுருவி உள்ளது. வறுமையான குடும்பத்தில் உள்ள ஒருவரை வசதியான ஒரு இடத்தில் விடும்போது, அவர் ஒரே நாளில் மாறிவிடுவார். முதலாளித்துவ வசதிகளை காட்டிவிடுகின்றது.

கேள்வி:
வாசிப்பு பழக்கம் புத்தகத்தில் இருந்து நகர்ந்து சமூக வளைத்தளங்களுக்கூடாக முக நூல் என்று நகர்ந்து கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் இடதுசாரிகளுடைய செயற்பாடுகள் எவ்வாறு உள்ளது?

பதில்:
இது முக்கியமாக பேசப்பட வேண்டிய விடயம். இதை என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்லலாம். இணையத்தை ஆரம்பிப்பதிலிருந்தே பயன்படுத்தி வருபவர்களில் நானும் ஒருவன். 1992 இல் இணையம் வந்தது. அந்த நேரம் இணையம் முழு உலகையும் ஆக்கிரமிக்கும் என்று நான் நினைக்கவில்லை. இணைய பாவனை குறைவாக இருந்த காலத்திலேயே இடதுசாரீய கருத்துக்களும், மார்க்ஸிசம், லெனினிசம் என்று எல்லாவற்றையும் புகுத்திவிட்டன. வர்த்தக மயப்படுத்தி வந்த முதலாளித்துவத் தளத்தை இடதுசாரிகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இந்த தளம் முற்போக்கு சிந்தனை கொண்டவர்களை இணைக்கிறது.

மக்கள் மத்தியில் பொதுவுடமைச் சிந்தனை கொண்டவர்கள் இருக்கிறார்கள். இன்று நிலவும் அரசியல் மேல் வெறுப்புக்கொண்டவர்களும் இருக்கிறார்கள். அவர்களை ஒழுங்குப்படுத்துவதற்கான அமைப்பு இல்லை. வர்க்கப் போராட்டத்தை நாம் தெளிப்படுத்த வேண்டும். அதற்கான ஒரு ஊடகமான சமூக வலைத்தளங்களை பயன்படுத்த வேண்டும். அரசாங்கம் கட்டுப்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் மிக இலகுவானதுதான் சமூக வலைத்தளம்.

பத்திரிகையை எங்கு அச்சடிக்கிறார்கள்? எங்கு செல்கிறது? எங்கு வருகிறார்கள்? என்றெல்லாம் தெரியாது. சமூக வலைத்தளங்களை அரசாங்கத்தால் முடக்கமுடியும். அதுவரையில் அதன் சுதந்திரத்தை நாம் பயன்படுத்திக் கொள்வோம். இதன் மூலம் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வோம். மக்கள் மத்தியில் ஊடுருவிச் செல்வோம். ஆனால் இதை அதிகமாக வலதுசாரிகள் தான் பயன்படுத்துகிறார்கள். 'ப்ளொக்" மூலம் பதிவுகளை பதிவிட்டு இத்தாலியில் வலதுசாரிகள் பெரிய கட்சியையே உருவாக்கியுள்ளார்கள். இதுபோன்று இடதுசாரிகளுக்கும் முடியும்.

எங்களுடைய கருத்துக்களை நாம் கதைக்க வேண்டும். அவர்களுக்கு விட்டுக் கொடுக்கக்கூடாது முரண்பாடு அதிகரித்து வெடிக்கும்போது தான் போராட்டங்கள் வெடிக்கும். அதுவரைக்கும் இவ்வாறான முரண்பாடுகள் இருக்கிறது என்பதை நாம் வெளியில் கொண்டுவர வேண்டும்.

கேள்வி :
புலம்பெயர் தமிழர்களுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவும் அரசியற் சிந்தனையும் எவ்வாறு உள்ளது?

பதில்:
உண்மையாக சொல்லப் போனால் அவர்களுக்கு எந்த வித அரசியலும் கிடையாது. யுத்த சூழலில் இருந்து வந்ததால் தமிழ் தேசிய அரசியலோடு நெருக்கம் அதிகம். ஆனால் தமிழ் தேசியம் என்றால் என்ன? அதன் மூலம் என்ன செய்யப் போகிறார்கள்? என்பதுக்கூட தெரியாதவர்கள் தமிழ் தேசியத்தை ஆதரிக்கிறார்கள். தனி நாடு வேண்டுமென்றார்கள். தனி நாடு கிடைத்திருந்தாலும் அவர்கள் மறுபடியும் இலங்கைக்கு வரமாட்டார்கள். எரித்திரியாவை உதாரணமாக சொல்லலாம்.

கேள்வி:
இந்த முதலாளித்துவ அரசாங்கத்தால் சிறுபான்மை மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்பான உங்கள் கருத்து என்ன?

பதில்:
அவர்கள் பிரச்சினைகளை தீர்க்காது வைத்திருப்பது அரசியல் இலாபத்திற்கே ஆகும். தீர்க்கவேண்டுமென்று நினைத்திருந்தால் எப்போதோ தீர்த்திருக்கலாம். இந்த பிரச்சனைகளினால் அவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். உதாரணமாக ஜனாதிபதி கொலை செய்யப்பட்ட சம்பவங்களும் உள்ளன. இருந்தாலும் அவர்களுடைய இலாபம் கருதி அவர்கள் செய்கிறார்கள். இது ஒரு செயற்பாடு (system)  

கேள்வி:
எவ்வாறானதொரு அரசியலை எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்:
முதலாளித்துவ ஆட்சியில் பொருளாதார நெருக்கடி, பண வீக்கம், விலையேற்றம் போன்ற பிரச்சினைகள் இருக்கும். இது இருக்கிறது தான் அவர்களுக்கு சாதகம். இது மாறாது. சிலர் கேட்கலாம் சிங்கப்பூர் மாறவில்லையா? ஹொங்கொங் மாறவில்லையா? என்று. இங்கு நாம் ஒன்றை கவனிக்கவேண்டும் சீனாவிற்கு பக்கத்தில் ஹொங்கொங் உள்ளது. வியட்நாமிற்கு பக்கத்தில் தான் சிங்கப்பூர் உள்ளது. ஆகவே சோஷலிச நாடுகளுக்கு போட்டியாக ஏகாதிபத்திய நாடுகளால் இந்நாடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. வேறொன்றும் அந்த நாடுகளின் மேல் கொண்ட பாசத்தால் அல்ல. ஒரு வேளை இந்தியா சோஷலிச நாடாக இருந்திருந்தால் இலங்கையில் எல்லாப் பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டிருக்கலாம்.

அதுமட்டுமல்லாது முதலாளித்துவ ஆட்சியில் ஊழல் என்பது அவர்களுக்குச் சரியானது இங்கு பொருளாதாரத்தை கவனிக்கமாட்டார்கள். இதனால் கடன் வழங்குபவர்களுக்கு இலாபம் கிடைக்கும். வட்டிக் கிடைக்கும் என்பதால் வழங்கிய பணத்தில் ஊழல் செய்தாலும் வழங்கியவர்களுக்கு கவலையில்லை. அவர்கள் கேள்வி கேட்காது மறுபடி மறுபடி கடன் வழங்குவார்கள். ஊழல் தொடரும். இவ்வாறான கடன் வழங்கல் மூலம் நாட்டை மறு காலனியாதிக்கத்திற்குள் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். இதற்கு எதிர்மறையான சோஷலிச ஆட்சி மலரவேண்டுமென்பதே எங்கள் கனவு.

[நேர்கண்டவர்: சதீஷ்]


No comments: