Thursday, December 24, 2020

தேடல் 2020: கத்தோலிக்க "ஆன்மீக உதயம்" இதழில் வெளியான நேர்காணல்

நெதர்லாந்து கத்தோலிக்க திருச்சபையினரால் வெளியிடப் படும் "ஆன்மீக உதயம்" என்ற காலாண்டிதழில் (மார்கழி 2020), "தேடல்" என்ற தலைப்பின் கீழ் பிரசுரமான எனது நேர்காணல் (பகுதி - இரண்டு):


 

  • 1) இந்தவருடம் ஆரம்பத்தில் தொடங்கிய அமைதியின்மை இன்னும் முடிவடையவே இல்லை இதனை பற்றிய தங்களின் பார்வை என்ன ? 

அமைதியின்மை என்பதன் மூலம், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஏற்பட்ட குழப்பகரமான சூழ்நிலையை குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். இருபத்தியோராம் நூற்றாண்டில் உலக நாடுகள் எல்லாம் முன்னெப்போதும் இல்லாதவாறு ஒன்றுடன் ஒன்று தொடர்பாக உள்ளன. சர்வதேச விமான, கப்பல் போக்குவரத்து முன்னரை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. அதுவே உலகம் முழுவதும் வைரஸ் தொற்றுவதற்கான அடிப்படைக் காரணம். அதனால் தான் வைரஸ் தொற்றியவரை தனிமைப் படுத்தல் திட்டங்கள் நடைமுறைக்கு வந்தன. ஆனால், சாதாரண மக்களுக்கு இந்த விடயங்கள் தெரிய வருவதில்லை. அதனால் யாரோ ஒருவருக்கு நோய் தொற்றி விட்டால் அவரைக் கண்டு மிரளும் போக்கு அதிகமாக உள்ளது. இது சாதாரண மனித இயல்பு எனலாம். ஒருவருக்கு நோய் வந்தால் உறவினர்களே ஓடி விடுவார்கள். இது மனித உறவுகளில் விரிசல்களையும் உண்டுபண்ணுகிறது.  


  • 2) கொரோனா என்னும் ஒரு தொற்று நோய் உலகத்தையே மிகவும் பயபீதியில் வைத்திருக்கின்றது இதன் பின்னணி எப்படியானது என்பதைப்பற்றிய தங்கள் பார்வை என்ன? 

ஐரோப்பாவில் நூறு வருடங்களுக்கு முன்னர் ஸ்பானிஷ் காய்ச்சல் எனும் தொற்று நோய் பல கோடி மக்களை பலி கொண்டது. அதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் பிளேக் நோய் காரணமாக ஐரோப்பிய மக்கட்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு குறைந்தது! ஆகவே அவற்றுடன் ஒப்பிட்டால் கொரொனோ தொற்று நோய் ஓரளவு கட்டுக்குள் வந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். சில வருடங்களுக்கு முன்னர் எபோலா வைரஸ் பல ஆப்பிரிக்க நாடுகளை தாக்கியது. அதன் இன்னொரு வடிவம் தான் கோவிட் எனும் கொரோனா வைரஸ். இன்றுள்ள மனித இனத்தில் எவருக்குமே இதை தடுப்பதற்கான நோயெதிர்ப்பு சக்தி இல்லை என்பது தான் முக்கியமான விடயம். நூறு அல்லது இருநூறு வருடங்களுக்கு முன்பு சாதாரண சளிக்காய்ச்சல் வந்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. தற்போது யாரும் அதைக் கண்டு அச்சமடைவதில்லை. அதற்குக் காரணம், சாதாரண சளிக்காய்ச்சல் கொண்டு வரும் வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான நோயெதிர்ப்புச் சக்தி எமது உடல்களில் வந்து விட்டது. அது போன்றதொரு நிலைமை கொரோனா வைரஸ் விவகாரத்திலும் ஏற்படும். இங்கே நான் இன்னொரு உண்மையையும் குறிப்பிட வேண்டும். உலகம் முழுவதும் வாழும் மக்கள் யாவும் ஒரே மனித இனம் என்பதை கொரோனா நிரூபித்துள்ளது.  


  • 3) உலகில் பெருகிவரும் மக்கள் தொகையை குறைக்க குறிவைத்த நோய் எனவும் குறை கூறுகின்றனர் இது நியாயமா ? 

இரண்டாவது கேள்விக்கான பதிலே இதற்கும் பொருந்தும் என நினைக்கிறேன். நோயெதிர்ப்புச் சக்தி இல்லாத நிலையில் மக்கள் பலியாவதும் நடந்து கொண்டிருக்கும். இதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். சின்னம்மை நோய் வந்து யாரும் சாவதில்லை. ஆனால், அந்தமான் போன்ற தீவுகளில், வெளியுலகில் இருந்து முற்றிலும் தனிமைப் படுத்தப் பட்ட நிலையில் வாழும் பழங்குடி இன மக்களுக்கு சின்னம்மை நோய்க் கிருமி தொற்றினால் மரணிக்கும் வாய்ப்பு அதிகம். காரணம், அவர்களது உடலில் அதற்கான நோயெதிர்ப்புச் சக்தி இல்லை.  


  • 4) ஒரு சில நாடுகளில் இந்த நோய் தாக்கம் மிகவும் குறைவு ஒரு சில நாடுகளில் மிகவும் அதிகம் ஏன் இவ்வாறு ஒரு சில நாடுகளில் மனிதர் சாப்பிடும் உணவில் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்க வாய்ப்பு உள்ளதா அல்லது மனித நிறங்களில் தொற்று மாறுபடுகின்றதா? 

இது எதுவுமே காரணம் அல்ல. முதலாவது கேள்விக்கு அளித்த பதிலை மீண்டும் ஒரு தடவை வாசித்து பார்க்கவும். இன்றைய உலகம் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு நெருக்கமாக வந்து விட்டது. நாடுகளுக்கு இடையிலான மனிதர்களினதும், பொருட்களினதும் போக்குவரத்துகள் அதிகரித்து விட்டன. அதைப் பாவித்து வைரஸ் பரவுவதையும் தடுக்க முடியாது. அதனால் தான், ஒவ்வொரு நாடும் தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொள்ளத் தொடங்கியது. குறிப்பிட்ட காலம் வெளியுலகத் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப் பட்டன. Lock down என்று ஊரடங்கு சட்டம் போட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைத்தார்கள். இருப்பினும் சில நாடுகளில் பெருமளவில் தொற்றி, மரணங்கள் சம்பவித்தமைக்கு பல காரணங்கள் இருக்கலாம். அவர்கள் ஆரம்பத்தில் அலட்சியமாக இருந்திருக்கலாம். உதாரணத்திற்கு, வைரஸ் பரவிய ஆரம்ப காலங்களில் விமான நிலையங்களில் எந்தக் கட்டுப்பாடும் இருக்கவில்லை. மேலும், அமெரிக்கா, பிரித்தானியா போன்ற பணக்கார நாடுகளில் கூட மருத்துவ மனைகளில் பெரும் வசதிக் குறைபாடுகள் காணப்பட்டன. இத்தாலியில் மருத்துவ சேவை முற்றாக சீர்குலைந்தது. அதற்கு மாறாக, முன்கூட்டியே அவதானமாக பல விதமான கட்டுப்பாடுகளை விதித்த நாடுகளில் வைரஸ் தொற்று குறைந்து காணப்பட்டது. உதாரணத்திற்கு வியட்நாமில் ஒருவர் கூட சாகவில்லை! சுறுசுறுப்பான நாகரிக உலகில் இருந்து ஒதுங்கி இருந்த, தொலைதூரத்தில் இருந்த பிரதேசங்களிலும் வைரஸ் தொற்றவில்லை. உதாரணத்திற்கு பசுபிக் கடல் பிராந்தியத்தில் உள்ள தீவுகளை குறிப்படலாம். 


  • 5) யுத்தம் குறைவடைந்தாலும் அமைதியான யுத்தம் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றது. இதன் பொருளாதார தாக்கம் எப்படியானது? 

அமைதியான யுத்தம் என்பதை பனிப்போர் என்றும் குறிப்பிடலாம். அதாவது ஒரு கெடுபிடியான, பதற்றமான நிலைமை. சிலநேரம் ஒரு தசாப்த காலமாக, ஒரு துப்பாக்கி வேட்டு கூட தீர்க்கப் பட்டிருக்காது. ஆனால், துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்காத அமைதியான காலத்தில் பொருளாதார பிரச்சினைகள் வெளித் தெரிய வருகின்றது. யுத்தம் நடந்த காலத்திலும் பொருளாதார பிரச்சினைகள் இருந்திருக்கும். ஆனால், யாரும் அதைக் கண்டுகொள்ள மாட்டார்கள். எல்லோருடைய கவனமும் யுத்தத்தின் மேல் குவிந்திருக்கும். சிலநேரம், யுத்தகால பொருளாதாரம் இதை விடக் கொடூரமான தாக்கத்தை உண்டுபண்ணி இருக்கலாம். ஆனால், அது தற்காலிகமானது என்ற எண்ணம் ஏற்பட்டு விடுகிறது. அதற்கு மாறாக அமைதிக் கால பொருளாதாரப் பிரச்சினைகளால் ஏற்படும் தாக்கம் எமது வாழ்க்கையை நிரந்தரமாகப் பாதிக்கப் போகிறது என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. சில நேரம் அரசுகள், நாட்டின் பொருளாதார பிரச்சனைகளை மறைப்பதற்காக மக்கள் மீது யுத்தத்தை திணிப்பதுண்டு. ஆனால், ஒரு தடவை யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட்டால், மீண்டும் ஒரு யுத்த நிலைக்கு செல்வதற்கு யாரும் தயாராக இருக்க மாட்டார்கள். அவ்வாறான அமைதியான சூழ்நிலையில் பொருளாதார தாக்கம் மக்களால் அதிகமாக உணரப்படும். 

 

 *****

பகுதி ஒன்று - நெதர்லாந்து "ஆன்மீக உதயம்" இதழில் வெளியான எனது நேர்காணல்  

No comments: