Showing posts with label பயணக் குறிப்புகள். Show all posts
Showing posts with label பயணக் குறிப்புகள். Show all posts

Sunday, February 16, 2020

அல்பேனியாவில் விழுந்த அமெரிக்க உளவு விமானம் (அல்பேனிய பயணக்கதை - 4)


(பாகம் : நான்கு)

பண்டைய காலத்தில் அல்பேனியர்கள் தமிழகத்திற்கு வந்திருப்பார்களா? அல்லது இரண்டு நாடுகளுக்கும் இடையில் வணிகத் தொடர்புகள் இருந்திருக்குமா? தற்காலத்தில் இது ஒரு விசித்திரமான, பைத்தியக்காரத்தனமான கேள்வியாகத் தெரியலாம். ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் இருந்திருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை. இன்றைய அல்பேனியாவின் தென் கிழக்கு பகுதிகளில் கிரேக்க மொழி பேசும் சிறுபான்மை இன மக்கள் வாழ்கின்றனர். குறிப்பாக சாரன்டே(Sarandë), ஜீரோகஸ்டர்(Gjirokaster), கோர்ஷே(Korçë) ஆகிய நகரங்களிலும், அவற்றை அண்டிய பிரதேசங்களிலும் கிரேக்கர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இரண்டாம் உலகப்போர் காலத்தில் அந்தப் பகுதியை இணைப்பதற்கு கிரேக்க குடியரசு கடுமையாக முயற்சித்தது. கிரேக்க பிராந்தியத்திற்கு பிரிவினை கோரும் ஆயுதபாணி இயக்கம் ஒன்றும் இயங்கியது.

பண்டைய காலத்தில் அல்பேனியாவின் தென் கிழக்குப் பிரதேசம், பண்டைய காலத்தில் கிரேக்க மாநிலமான இயோனியாவுடன் சேர்ந்திருந்தது. ஏன் அல்பேனியா முழுவதும் ஒரு காலத்தில் ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமாக இருந்துள்ளது என்பதை ஏற்கனவே எழுதி இருக்கிறேன். பண்டைய காலத்தில் தமிழகத்துடன் வணிகத் தொடர்பு வைத்திருந்த ரோமர்கள் "யவனர்கள்" என அழைக்கப் பட்டனர். அநேகமாக இன்றைய இயோனியா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் யவனர்கள் என அழைக்கப் பட்டிருக்கலாம். ஆகவே, யவனர்கள் என்ற பெயரில் ஒரு சில அல்பேனிய வணிகர்களும் தமிழகத்திற்கு வந்திருக்கலாம். அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாமல் இல்லை.

தேசிய இன உணர்வு இல்லாதிருந்த அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த மக்களிடம் பிரதேச உணர்வு இருந்துள்ளது. அதை இன்று நாம் பிரதேசவாதம் என்று அழைத்தாலும், அன்று அது சாதாரணமான விடயம். இதற்கு வரலாற்றில் இன்னொரு உதாரணம் காட்டலாம். டச்சுக்காரர் பிற நாடுகளில் ஹோலந்து நாட்டவர் என்று அழைக்கப் பட்டனர். உண்மையில் ஹோலந்து என்பது இன்றைய நெதர்லாந்து தேசத்தில் ஒரு மாகாணத்தின் பெயர். பண்டைய காலத்து டச்சுக் கடலோடிகள் பெரும்பாலும் ஹோலந்தில் இருந்து சென்ற படியால், அவர்கள் தமது பிரதேசத்தின் பெயரை மட்டுமே குறிப்பிட்டு வந்தனர்.

சோஷலிச அல்பேனியாவை நாற்பது வருடங்கள் ஆண்ட கம்யூனிச அதிபர் என்வர் ஹோஷா தென் பகுதி கிரேக்க நகரமான ஜீரோகஸ்டரில் பிறந்தவர். அதற்கு அருகில் உள்ள இன்னொரு கிரேக்க நகரமான கோர்ஷேயில் கல்வி கற்றவர். பிற்காலத்தில் உயர்கல்வி கற்பதற்கு புலமைப்பரிசில் பெற்று பிரான்ஸ் சென்றவர், பொதுவுடைமை அரசியலில் ஈடுபாடு கொண்டு படிப்பைக் குழப்பினார். இருப்பினும் தாயகம் திரும்பிய பின்னர் பிரெஞ்சு மொழி கற்பிக்கும் ஆசிரியர் வேலை கிடைத்தது.

இளம் வயது என்வர் ஹோஷா ஆசிரியர் தொழில் செய்த பாடசாலையும் கோர்ஷேயில் தான் இருந்தது. அப்போது அங்கே ஏற்கனவே இயங்கிக் கொண்டிருந்த கம்யூனிச இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அடுத்து வந்த வருடங்களில் அல்பேனிய வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்த சம்பவங்களில் கோர்ஷே குழுவினரின் பங்களிப்பு முக்கியமானது. 


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அல்பேனியா துருக்கி ஓட்டோமான் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்த காலத்தில், ஒரு கம்யூனிச இயக்கம் கட்டி எழுப்புவது இலகுவான காரியம் அல்ல. நாட்டுப்புறங்களில் துருக்கி நிலப்பிரபுக்களான பாஷாக்களின் அதிகாரம் எல்லை கடந்தது. அவர்கள் இயற்கை வளம் குறைந்த அல்பேனியாவை எந்த அபிவிருத்தியும் செய்யாமல் மத்திய காலத்தில் வைத்திருந்தனர். இஸ்லாமியப் பெண்கள் முக்காடு அணிந்து செல்வதும், வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதும் சர்வசாதாரணமான விடயங்கள்.

இன்றைக்கு "கம்யூனிச சர்வாதிகாரம், பலகட்சி ஜனநாயகம்" என்று அரசியல் பேசும் யாரும் அல்பேனியா அன்றிருந்த நிலைமையை எண்ணிப் பார்ப்பதில்லை. பின்தங்கிய நிலப்பிரபுத்துவ- பழமைவாத சமுதாயத்தை நவீன காலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைப்பது இலகுவான காரியம் அல்ல. அந்தக் காலகட்டத்தில் எந்தவொரு பால்கன் பிரதேச நாட்டிலும் பல கட்சித் தேர்தல் நடக்கவில்லை. ஏன் கட்சியே இருக்கவில்லை. அந்த வகையில் அல்பேனியாவில் உருவான முதலாவது அரசியல் கட்சி கம்யூனிஸ்ட் கட்சி தான்.

அந்தக் காலகட்டத்தில், கம்யூனிஸ்டுகள் மட்டும் இத்தாலி காலனியாதிக்கத்திற்கு எதிராக ஆயுதப்போராட்டம் நடத்தவில்லை. Balli Kombëtar (தேசிய முன்னணி) என்ற இன்னொரு இயக்கமும் இருந்தது. ஆனால் அது ஒருபோதும் கட்சியாக பரிணமிக்கவில்லை. பள்ளி கொம்பேட்டர் என்பது உள்ளூர் நிலப்பிரபுக்களின் நிதியில் இயங்கிய ஒரு தேசியவாத இயக்கம். இத்தாலி பாசிச ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த நேரம், சிறிது காலம் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டு ஒப்பந்தம் போட்டிருந்தனர். ஆனால் அந்த ஒற்றுமை அதிக காலம் நீடிக்கவில்லை.

இதற்கிடையே, 1943 ம் ஆண்டளவில், இத்தாலியில் முசோலினி பதவியிறக்கப் பட்ட படியாலும், இத்தாலி தொழிலாளர் வர்க்கத்தின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாகவும், அல்பேனியாவை ஆக்கிரமித்த இத்தாலிப் படைகள் வெளியேறி விட்டன. அந்த வெற்றிடத்தை ஜெர்மன் நாஸிப் படைகள் நிரப்பின. அப்போது பள்ளி கொம்பேட்டர் இயக்கத்தினர் நாஸிகளுடன் கூட்டுச் சேர்ந்து கம்யூனிஸ்டுகளை எதிர்த்துப் போரிட்டனர். அந்த நேரம் எதிரணியில் இருந்த பிரிட்டிஷ் படையினரும் பள்ளி கொம்பேட்டர் இயக்கத்தை ஆதரிந்து வநதனர்.

பள்ளி கொம்பேட்டர் இயக்கம் ஓர் அகண்ட அல்பேனியாவை குறிக்கோளாக கொண்டியங்கியது. அதாவது, அவர்கள் வெறுமனே அல்பேனிய தேசியவாதிகள் மட்டுமல்ல, அல்பேனிய பேரினவாதிகளும் கூட! ஆகையினால் யூகோஸ்லேவியாவில் அல்பேனியரை பெரும்பான்மையாக கொண்ட கொசோவோ மாநிலத்திலும் செயற்பட்டு வந்தனர். அங்கு முன்னேறிக் கொண்டிருந்த டிட்டோவின் கம்யூனிசப் படையினரால் தோற்கடிக்கப் பட்டனர். அந்தத் தோல்விக்குப் பின்னர் கொசோவோவில் இருந்து வெளியேறிய பள்ளி கொம்பெட்டர் இயக்க உறுப்பினர்கள் (அல்லது ஆதரவாளர்கள்) அல்பேனியாவுக்குள் நுழைந்தனர்.

ஆனால், அப்போது அல்பேனியா முழுவதும் கம்யூனிஸ்ட் இயக்கக் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டிருந்தது. அவர்களும் அங்குள்ள பள்ளி கொம்பேட்டார் உறுப்பினர்களை வேட்டையாடி கொன்று கொண்டிருந்தனர். அதனால் கொசோவோவில் இருந்து தப்பி வந்த அல்பேனிய தேசியவாதிகளை பிடித்து மொன்டிநீக்ரோவில் இருந்த யூகோஸ்லேவிய கம்யூனிசப் படைகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அனைவரும் கொல்லப் பட்டனர்.

அன்று நடந்த வரலாற்று சம்பவத்தை நினைவுகூரும் இன்றைய முதலாளித்துவ ஊடகவியலாளர்கள், அதை இனவாதக் கண்ணோட்டத்துடன் திரித்து சொல்லி வருகின்றனர். அதாவது, கொசோவோ அல்பேனியர்களை யூகோஸ்லேவிய கம்யூனிஸ்ட் கட்சி படுகொலை செய்தமைக்கு, அல்பேனிய கம்யூனிஸ்ட் கட்சி உடந்தையாக இருந்தது என்று கூறுகின்றனர். சுருக்கமாக சொன்னால் "இனத்துரோகம்"!

நான் இந்த சம்பவத்தை இங்கே விவரித்துக் கூறக் காரணம் இருக்கிறது. பால்கன் பிராந்தியத்தில் நிலவும் இன முரண்பாடுகள், கொள்கை முரண்பாடுகள் குறித்து வெளியுலகில் உள்ள பலருக்கு சரியான புரிதல் இல்லை. அந்தக் காலகட்டத்தில் எந்த மொழி பேசும் தேசியவாதியாக இருந்தாலும், கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான தீவிர நிலைப்பாட்டுடன் இருந்தனர். ஸ்லோவேனியா முதல் அல்பேனியா வரையில் பால்கன் பிராந்தியம் எங்கும் இது தான் நிலைமை. அதாவது, தேசியவாதிகளின் எதிரிகள் கம்யூனிஸ்டுகள். அதனால் அன்று எல்லா நாடுகளிலும் "சகோதர யுத்தங்கள்" நடந்தன.

அல்பேனியாவில் கம்யூனிஸ்ட் அரசமைந்த பின்னர் ஆயிரக்கணக்கான தேசியவாதிகள் தேசத்துரோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் குறுகிய கால நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் சுட்டுக் கொல்லப் பட்டனர். அது மட்டுமல்ல, பல்லாயிரக்கணக்கான கணக்கான பள்ளி கொம்பேட்டர் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மேற்கத்திய நாடுகளில் அடைக்கலம் கோரினார்கள். குறிப்பாக ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, இத்தாலியில் தஞ்சம் புகுந்தனர். அவர்களை சி.ஐ.ஏ. சரியாகப் பயன்படுத்திக் கொண்டது. அவர்களுக்கு இத்தாலியில் இருந்த அமெரிக்க படைத்தளத்தில் இராணுவ பயிற்சி அளிக்கப் பட்டது.

பனிப்போர் காலத்தில் முன்னாள் அல்பேனிய தேசியவாதிகள், அமெரிக்காவின் ஒட்டுக்குழுவாக மாற்றப் பட்டனர். அவர்களை அல்பேனியாவுக்குள் ஊடுருவ வைத்து கம்யூனிச அரசுக்கு எதிரான கிளர்ச்சியை உண்டாக்குவதே அமெரிக்காவின் திட்டம். ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்தது. அமெரிக்கா அனுப்பிய ஊடுருவல்காரர்கள் எல்லோரும் அகப்பட்டுக் கொண்டனர். அவர்களிடமிருந்த அமெரிக்க நவீன ஆயுதங்களும் பிடிபட்டு விட்டன. நீண்ட காலமாக அமெரிக்கா இந்தத் தகவல்களை வெளியில் விடாமல் இரகசியமாக வைத்திருந்தது.

மேற்குறிப்பிட்ட வரலாற்றுத் தகவல்களை மூடி மறைக்கும் முதலாளித்துவ ஊடகங்கள் "கம்யூனிச சர்வாதிகாரத்திற்கு பலியானவர்கள்" என்று பிரச்சாரம் செய்கின்றன. 1944 ம் ஆண்டு, அல்பேனியாவில் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்திற்கு வந்ததும் முன்னர் தம்மை எதிர்த்து போரிட்ட பள்ளி கொம்பேட்டர் இயக்கத்தின் எஞ்சிய உறுப்பினர்களை தேடிப் பிடித்து சிறையில் அடைத்தனர். அந்த விடயம் அத்துடன் முடியவில்லை. சி.ஐ.ஏ. அனுப்பிய ஒட்டுக்குழுவினரும் முன்னாள் பள்ளி கொம்பேட்டார் உறுப்பினர்கள் தானே? ஆகவே உள்நாட்டில் இன்னமும் அதன் ஆதரவாளர்கள் இருப்பார்கள் என்ற சந்தேகத்தில் பலர் கைது செய்யப் பட்டனர். அவர்களில் சிலர் தேசத் துரோகக் குற்றச்சாட்டில் சுட்டுக் கொல்லப் பட்டனர். அவர்கள் அனைவரும் அப்பாவிகள் அல்ல. 


நான் இங்கு கூறிய முன்கதை தான் என்னை ஜீரோகாஸ்டர் நோக்கி பயணம் செய்ய உந்தித் தள்ளியது. அது திரானாவில் இருந்து தெற்கே முன்னூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கு செல்வதென்றால் தொலைதூர நகரங்களுக்கு செல்லும் மினிபஸ் பிடிக்க வேண்டும். அதற்கு முதலில் திரானா நகர மத்தியில் இருந்து காமேஸ்(Kamez) எனும் இடத்திற்கு செல்ல வேண்டும். அல்பேனியாவின் பொதுப் போக்குவரத்து வண்டிகளில் இன்னமும் ஒரு கண்டக்டர் டிக்கட் கிழித்துக் கொடுக்கிறார். நகரத்தின் உள்ளே பயணம் செய்வதற்கு பஸ் கட்டணம் மிக மிகக் குறைவு. நாற்பது லெக்(0.30 யூரோ சதம்). திரானாவிலிருந்து ஜீரோகஸ்டர் பயணச்சீட்டு 1000 லெக்(8 யூரோக்கள்).

ஜீரோகஸ்டர் செல்லும் நான்கு அல்லது ஐந்து மணிநேரப் பயணத்தில் வழியில் நிலவமைப்பு மாறுவதைக் காணலாம். முதலில் கடற்கரையோரமாக பயணம் செய்யும் பொழுது ஏராளமான டூரிஸ்ட் ரிசொர்ட்டுகள் இருப்பதையும், புதிதாக பல கட்டப் பட்டுக் கொண்டிருப்பதையும் பார்க்கக் கூடியதாக உள்ளது. இரண்டு, மூன்று மணிநேர பயணத்தின் பின்னர் சனநெருக்கடி மிக்க கரையோரப் பிரதேசம் மறைந்து, மனித நடமாட்டமே இல்லாத மலைப் பகுதிகள் தென்படும். 


ஜீரோகாஸ்டர் ஒரு மலைப் பிரதேசத்தில், கிரீஸ் எல்லைக்கு அருகில் உள்ள சிறிய நகரம். அங்குள்ள மத்திய காலத்து கோட்டை தான் எனது பயணத் திட்டத்தில் அடங்கி இருந்தது. அது நகர மத்தியில் இருந்து சிறிது தூரத்தில் ஒரு குன்றின் மீது உள்ளது. booking.com மூலம் தேடிப் பிடித்த ஹொஸ்டல், கோட்டையின் பின்புறத்தில் இருந்தது. அங்கு சென்ற பின்னர் தான் அது ஒரு முட்டாள்தனமான தெரிவு என்று தெரிந்தது. ஏனெனில் நகர மத்தியில் இருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் ஒரு மலைக் கிராமத்தில் அந்த ஹொஸ்டல் இருந்தது. 

வாழ்க்கையில் நாம் எடுக்கும் முட்டாள்தனமான முடிவுகளுக்குப் பின்னால் ஏதாவதொரு பயனுள்ள அனுபவம் காத்திருக்கும். அன்று அந்தக் ஹொஸ்டலில் நான் மட்டுமே ஒரேயொரு விருந்தாளி. ஒரு நடுத்தர வயதுடைய பெண்ணும், அவரது வயோதிப தாயாரும் அந்த ஹொஸ்டல் நடத்துகிறார்கள். அது அவர்களது வீட்டுக்குப் பின்னால் உள்ளது.

அந்தப் பெண்களுக்கு ஆங்கிலம் ஒரு சொல் கூடத் தெரியாது. இருப்பினும், "டூரிஸ்ட்" என்ற ஒரு சொல் போதுமாக இருந்தது. என்னைக் கூட்டிச் சென்று தங்கும் அறையையும், குளியல் அறையையும் காட்டி விட்டார்கள். மேலதிக விபரங்களுக்கு, அந்தப் பெண்மணி தனது ஆங்கிலம் பேசத் தெரிந்த மகனை தொலைபேசியில் அழைத்து பேச வைத்தார். அடுத்த நாள் காலைச் சாப்பாடு கொடுத்து நன்றாக உபசரித்து அனுப்பினார்கள். அல்பேனிய பாரம்பரிய உணவு கிட்டத்தட்ட ஆடிக் கூழ் மாதிரி இருந்தது. குடிப்பதற்கு சுத்தமான பசும் பாலும், தேனும் தந்தார்கள். எமது ஊரில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. உண்மையில் இன்று நாம் இயந்திரமயமாக்கப் பட்ட மேற்கத்திய நகர வாழ்க்கையில் இவற்றின் சுவை கூட தெரியாமல் வாழ்கிறோம்.


நான் அங்கு மதிய வேளை சென்ற படியால் எனது பயணப் பொதியை அறையில் வைத்து கதவை சாத்தி விட்டு வெளியே இடம் பார்க்க சென்றேன். கவனிக்கவும், ஹொஸ்டல் உரிமையாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையில் நம்பகத்தன்மை மிக உயர்வாக இருந்தது. அவர்கள் எனது பாஸ்போர்ட் வாங்கிப் பார்க்கக் கூட இல்லை. என்னைப் பற்றிய எந்த விபரமும் பதிவு செய்யவில்லை. நான் போவதும் வருவதும் கூடத் தெரியாது. அடுத்த நாள் காலையில் நானாகவே அவர்களது வீட்டுக்கு சென்று கதவைத் தட்டி பணத்தைக் கொடுத்து விட்டு வந்தேன். இந்த தகவலை எனது நண்பருடன் பகிர்ந்து கொண்ட போது நம்ப முடியாமல் ஆச்சரியப் பட்டார். பெரும்பாலான வறிய நாடுகளில் நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள் நேர்மையானவர்கள். கள்ளங்கபடம் அற்றவர்கள். அத்துடன் அவர்கள் வெளிநாட்டவர்களை நம்புகிறார்கள். 


நான் தங்கி இருந்த ஹொஸ்டலில் இருந்து ஜீரோகஸ்டர் கோட்டை ஒரு கிலோமீட்டர் தூரத்தில் தான் இருந்தது. அப்படி இலகுவாக சொல்லி விடலாம். ஆனால் செல்லும் வழி கரடுமுரடாக இருந்தது. ஒரு மலையில் இருந்து இறங்கி இன்னொரு மலையில் ஏற வேண்டும். இரண்டுக்கும் நடுவில் ஓடும் ஆற்றை ஒரு குட்டிப் பாலத்தில் கடக்க வேண்டும். அதுவே ஒரு நல்ல தேகாப்பியாசம் தான். தூய்மையான மலைக் காற்றை சுவாசிப்பது ஒரு சுகமான அனுபவம். மேலும் மலையில் ஏறி இறங்குவதற்கு கருங்கல்லால் கட்டப் பட்ட படிகள் எந்தப் பாதுகாப்பும் இல்லாதவை. நாம் தான் மிகவும் அவதானமாக நடந்து செல்ல வேண்டும். அநேகமாக ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் கட்டிய படிகள் இப்போதும் பாவனையில் இருப்பதைப் போலிருந்தது. அந்தப் பகுதியில் நடக்கும் பொழுதே காலச் சக்கரத்தில் பின்னோக்கிச் சென்று பண்டைய காலத்தில் நடமாடுவது போன்ற உணர்வு தோன்றியது. 



ஜீரோகஸ்டர் கோட்டை, ஒரு காலத்தில் அல்பேனியாவை பல்வேறு குறுநில மன்னர்கள் ஆண்ட காலத்தில் கட்டப் பட்டது. ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், மலைப் பிரதேசங்களில் குட்டி ராஜ்ஜியங்கள் இருந்தன. அவை வெளியுலகுடன் தொடர்பு வைக்கவில்லை. குறிப்பிட்ட பிரதேசத்தில் மட்டுமே அதிகாரம் செலுத்திய குட்டி ராஜ்ஜியங்களில் தான் அல்பேனியரின் தனித்துவமான கலாச்சாரம் பேணப்பட்டு வந்தது. துருக்கி ஓட்டோமான் படையெடுப்புகளுக்கு பின்னர், அல்பேனியா மீண்டும் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் பகுதியாகியது. 


ஜீரோகஸ்டர் கோட்டையை ஓட்டோமான் படைகள் சுற்றி வளைத்து கைப்பற்றுவதற்கு தயாரான நேரம், எதிரிப் படைகளிடம் அகப்பட விரும்பாத இளவரசி தனது குழந்தையுடன் மதிலில் ஏறிக் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், குழந்தை மட்டும் உயிர் தப்பியதாகவும் ஒரு கர்ணபரம்பரைக் கதை உலாவுகின்றதாம். இந்தத் தகவல் இளவரசி குதித்ததாக சொல்லப்படும் இடத்தில் உள்ள கோட்டை மதில் பகுதியில் எழுதப் பட்டுள்ளது. தற்போதும் கோட்டையின் மேல் பகுதியில் உள்ள தடுப்புச் சுவர் மிகவும் கட்டையானது. அருகில் செல்லாமல் அவதானமாக இருக்குமாறு அறிவிப்புப் பலகைகள் காணப்படுகின்றன. 


அந்தக் கோட்டை மிகப் பிரமாண்டமானது. ஒரு காலத்தில் அதுவே ஒரு சிறிய நகரமாக செயற்பட்டு வந்தது. தற்போது அங்குள்ள மைதானத்தில் வருடம் ஒருமுறை கலாச்சார நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு. அந்தக் கோட்டை ஓட்டோமான் ஆட்சியின் கீழிருந்த நேரம் பயன்பாட்டில் இருந்த ரொட்டி தயாரிக்கும் வெதுப்பகம் இன்னமும் உள்ளது. அங்கு தான் படையினருக்கும் உணவு தயாரிக்கப் பட்டது. இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், அந்தக் காலத்தில் பயன்படுத்திய கனரக ஆயுதங்களை கோட்டையில் கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள். ஆர்ட்டிலறி கருவிகள், மோட்டார் குழாய்கள் போன்ற ஆயுதங்களை கிட்ட நின்று பார்த்து இரசிக்கலாம். இத்தாலிப் படையினர் பாவித்த சிறிய ரக தாங்கி ஒன்றும் அங்கே வைக்கப் பட்டுள்ளது.

கோட்டையின் மேல் மாடத்தில் ஒரு சிறிய விமானம் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளது. அது ஓர் அமெரிக்க உளவு விமானம்! அமெரிக்க விமானம் எவ்வாறு அல்பேனியாவுக்கு வந்தது என்று ஆச்சரியப் படுவோர், நான் இங்கு எழுதிய முன்கதைச் சுருக்கத்தை வாசிக்கவும். அதாவது அல்பேனியா சோஷலிச நாடாக இருந்த காலத்தில் அமெரிக்கா பல்வேறு உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இத்தாலியில் உள்ள அமெரிக்க விமானப் படைத்தளத்தில் கிளம்பும் விமானங்கள் அல்பேனிய வான்பரப்பில் அத்துமீறி ஊடுருவி வேவு பார்த்து வந்தன. உளவுத்தகவல்கள் சேகரிப்பது மட்டுமல்லாது, சி.ஐ.ஏ. யால் அனுப்பப் பட்டு அல்பேனியாவினுள் ஊடுருவியுள்ள கம்யூனிச விரோத ஒட்டுக்குழுவினருக்கு ஆயுதங்கள் விநியோகிப்பது, தகவல் பரிமாறுவது போன்ற வேலைகளிலும் அமெரிக்க விமானங்கள் ஈடுபட்டன. அது பனிப்போர் காலம் என்பதால் இந்த நடவடிக்கைகள் மிகவும் இரகசியமாக நடந்து கொண்டிருந்தன. 



அவ்வாறு இரகசிய பறப்பில் ஈடுபட்ட அமெரிக்க விமானம் ஒன்று அல்பேனிய இராணுவத்தால் பலவந்தமாக தரையிறக்கப் பட்டது. சுட்டு வீழ்த்தப் பட்டிருக்கலாம். ஆரம்பத்தில் இரகசியமாக வைத்திருந்த அமெரிக்கா சில மாதங்களின் பின்னர் தனது விமானம் ஒன்றைக் காணவில்லை என்று அறிவித்திருந்தது. அல்பேனியர்களும் எதுவும் சொல்லாமல் இருந்து விட்டு பின்னர் இத்தாலியில் உள்ள அமெரிக்கப் படைத் தளத்துடன் தொடர்பு கொண்டு தம்மிடம் பிடிபட்ட அமெரிக்க விமானியை ஒப்படைக்க சம்மதித்தனர். அப்படியே விமானியை மட்டும் திருப்பி அனுப்பி விட்டு, விமானத்தை இந்தக் கோட்டையில் கொண்டு வந்து வைத்து விட்டனர். இந்தத் தகவல் அன்றைய அமெரிக்க தினசரிப் பத்திரிகைகளில் வெளியானது. 

என்வர் ஹோஷா பிறந்த வீடு

ஜீரோகஸ்டர் கோட்டையை பார்த்து முடிந்து வெளியே வந்த பின்னர் தான், அங்கே இன்னும் பல சுற்றுலாப் பயணிகளை கவரும் இடங்கள் இருப்பது தெரிய வந்தது. அங்கெல்லாம் செல்ல நேரம் இருக்கவில்லை. நேரம் ஐந்து மணியான படியால் பூட்டியிருந்தார்கள். கோட்டையில் இருந்து நகர மத்தியை நோக்கி செல்லும் வழியில் தான் என்வர் ஹோஷா பிறந்த வீடு இருக்கிறது. முன்பு அது ஒரு சிறிய வீடாக இருந்து விபத்தொன்றில் எரிந்து விட்டதாம். பிற்காலத்தில், அதாவது கம்யூனிச ஆட்சிக் காலத்தில் அது பெரிதாக கட்டப்பட்டு என்வர் ஹோஷாவின் அருமை பெருமைகளைக் கூறும் மியூசியமாக இருந்தது. ஆனால், தொண்ணூறுகளுக்கு பிறகு அங்கிருந்த ஹோஷாவின் படங்கள், நினைவுச் சின்னங்களை எல்லாம் அகற்றி விட்டார்கள். தற்போது அது அல்பேனிய இனத்துவ - கலாச்சார அருங்காட்சியகமாக மாற்றப் பட்டுள்ளது. 


அது ஒரு நகர்ப் பகுதியாக இருந்த போதிலும் கருங்கல் கற்களால் செதுக்கப்பட்ட பாதைகள் பாதுகாப்பானதாக இருக்கவில்லை. சில இடங்களில் செங்குத்தாக இறங்கின. மிகவும் கவனமாக அடியெடுத்து வைக்க வேண்டி இருந்தது. ஹொஸ்டல் திரும்பும் வழியில் துரித உணவுக் கடை ஒன்றில் இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டேன். அல்பேனிய துரித உணவு கிட்டத்தட்ட கிரேக்க கீரோஸ், அல்லது துருக்கி கெபாப் போன்று இருக்கும். சிறு துண்டுகளாக சீவப்பட்ட இறைச்சித் துண்டுகள், உருளைக்கிழங்கு பொரியல், சலாட்டுடன் சேர்த்து, ஒரு ரொட்டியில் சுற்றித் தருவார்கள். மூன்று யூரோவுக்கு வயிறு நிறைய சாப்பிடலாம்.

அடுத்த நாள் மீண்டும் திரானா திரும்பி விமான நிலையத்திற்கு செல்ல வேண்டி இருந்தது. மீண்டும் திரானா அன்னை தெரேசா சர்வதேச விமான நிலையம். கெடுபிடி இல்லாத அமைதியான விமான நிலையத்தை நான் வேறெங்கும் காணவில்லை. குடிவரவு அதிகாரிகளும் சில நிமிடங்களில் பாஸ்போர்ட் பார்த்து தந்து விடுகிறார்கள். அந்த விமான நிலையத்தில் அல்பா விங்க்ஸ் விமான சேவை விளம்பரங்கள் மட்டுமே கண்ணில் தென்பட்டன. அது அண்மைக் காலத்தில் உருவான தனியார் விமான நிறுவனம். அது பெரும்பாலும் இத்தாலி நகரங்களை நோக்கித் தான் பறக்கின்றது.

முன்பு அல்பேனியா சோஷலிச நாடாக இருந்த காலத்தில் வான் வழிப் போக்குவரத்து மிக மிகக் குறைவாகவே நடந்து கொண்டிருந்தது. அவ்வப்போது தலைவர்கள் பயணம் செய்வதற்கென சில விமானங்கள் இருந்தன. அவர்களும் சோவியத் யூனியனுடனான தொடர்புகள் துண்டிக்கப் பட்ட பின்னர் எந்தவொரு நாட்டிற்கும் பயணம் செய்யவில்லை! அந்நேரம் சோவியத் செம்படை செக்கோஸ்லோவாக்கியா கிளர்ச்சியை ஒடுக்கியதை அல்பேனியா கண்டித்திருந்தது. அதன் விளைவாக வார்ஷோ ஒப்பந்த நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து விலகியது. அந்தத் தருணங்களில் சோவியத் படைகள் அல்பேனியா மீது படையெடுத்து வரலாம் என்றும் அஞ்சினார்கள்.

1960 ம் ஆண்டு தான், அதிபர் என்வர் ஹோஷாவின் கடைசி வெளிநாட்டுப் பயணம் இடம்பெற்றது. அதுவும் சோவியத் யூனியனுக்கு தான். கொமின்தேர்ன் மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக மொஸ்கோ சென்றிருந்த என்வர் ஹோஷா, ஸ்டாலின் விவகாரம் தொடர்பாக குருஷேவுடன் முரண்பட்ட படியால், அன்றிலிருந்து சோவியத் யூனியனுடனான தொடர்புகள் யாவும் முற்றாக துண்டிக்கப் பட்டன. அதன் பின்னர் இரு தசாப்த காலம் மாவோவின் சீனாவுடன் நட்புறவு கொண்டிருந்தனர். அப்போது அல்பேனியாவின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப சீனா பெருமளவு பங்களிப்பை வழங்கி இருந்தது. அந்தக் காலங்களில் சீன விமானங்கள் அடிக்கடி வந்து சென்றன.

மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் அல்பேனிய மக்கள் மட்டுமல்ல, தலைவர்கள் கூட வெளிநாடுகளுக்கு செல்லாமல் உள்நாட்டில் முடங்கிக் கிடந்தனர். அல்பேனியா பல தசாப்த காலமாக எந்தவொரு உலக நாட்டுடனும் சேராமல், முற்றிலும் தனிமைப் பட்டிருந்தது. அயல் நாடுகளுடனான எல்லைகள் யாவும் மூடப் பட்டிருந்தன. ஏன் என்ற கேள்விக்கு பதில் யாருக்கும் தெரியாது. ஒருவேளை, 1999 ம் ஆண்டு நடந்த மக்கள் எழுச்சியின் பின்னர் நடந்த சம்பவங்களில் இதற்கான விடை கிடைக்கலாம். 

தொண்ணூறுகளில் முதலாளித்துவம் என்றால் என்னவென்று அறிந்திராத ஒரு சமூகத்தில் பல்வேறு நிதி நிறுவனங்கள் ஆசை காட்டி மோசம் செய்தன. அது பிரமிட் மோசடி என்று அழைக்கப் படுகின்றது. சேமிப்புப் பணத்திற்கு ஐம்பது சதவீத வட்டி கிடைக்கும் என்று விளம்பரத்தை நம்பிய அப்பாவி மக்கள் தம்மிடம் இருந்த காணிகளை கூட விற்று பணம் போட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் அந்த நிறுவனங்கள் திவாலாகி விட்டதாக அறிவிக்கப் பட்டன. அல்பேனிய மக்கள் அனைவரும் ஒரே நாளில் தம்மிடம் இருந்த எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்தனர்.

இந்த பிரமிட் மோசடியில் ஆளும் ஜனநாயகக் கட்சி அரசாங்கமும் உடந்தை என்பதை அறிந்த மக்கள் கிளர்ந்தெழுந்து அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். நகர சபைக் கட்டிடங்கள் எரிக்கப் பட்டன. பொலிஸ், இராணுவம் எதுவும் அரசைக் காப்பாற்ற முன்வரவில்லை. அது மட்டுமல்ல, ஆத்திரமுற்ற மக்கள் பொலிஸ் நிலையங்களை தாக்கிய நேரம் போலீஸ்காரர்கள் பொது மக்களுடன் சேர்ந்து கொண்டனர். இராணுவ முகாம்களிலும் இதே கதை நடந்தது.

முன்பு கம்யூனிச காலகட்டத்தில் நடந்தது மாதிரி, அல்பேனிய இராணுவம் தம்மிடமிருந்த ஆயுதங்களை மக்களிடம் பங்கிட்டுக் கொடுத்தது. சில இடங்களில் மக்கள் ஆயுதக் களஞ்சியங்களை கொள்ளையடித்த நேரம் இராணுவம் தடுக்கவில்லை. அன்று மக்களின் கைகளில் ஆயுதங்கள் இருந்தன. அரசு நிராயுதபாணியாக இருந்தது. அல்பேனியா ஒரு புரட்சியின் விளிம்பில் நின்றது. இறுதியில் இத்தாலியில் இருந்து நேட்டோ இராணுவம் படையெடுத்தது. அல்பேனிய அரசின் அழைப்பின் பேரில் அமெரிக்க இராணுவம் வந்திறங்கிய பின்னர் தான் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தத் தகவல்கள் இப்போது தான் உங்களுக்கு தெரியும் என்றால் ஆச்சரியப் பட எதுவும் இல்லை. நீங்கள் எதை அறிந்து கொள்ள வேண்டும், எதை அறிந்து கொள்ளக் கூடாது என்பதை மேற்கத்திய ஊடகங்களே தீர்மானிக்கின்றன.

(முற்றும்) 

Thursday, July 07, 2011

கிரேக்க நாட்டு பயணக் குறிப்புகள்


"களிமேரா" (காலை வணக்கம்)
நகர மத்தியில் அமைந்திருந்த தேநீர்க் கடையில் சூடான கோப்பியை (Coffee) எதிர்பார்த்துக் காத்திருந்தேன். எனக்கு கிடைத்ததோ குளிர்பானமாக தயாரிக்கப்பட்ட கோப்பி. கிரேக்கர்கள் பொதுவாக குளிர் கோப்பியே அருந்துவார்கள் என்பதும், சூடான கோப்பி எனக் குறிப்பிட்டு கேட்டு தான் வாங்க வேண்டும். ஏதென்ஸ் கிரீஸின் தலைநகரம். அசுத்தமான வளி மண்டலத்தைக் கொண்ட ஐரோப்பிய நகரம். புகை படிந்தது போன்ற கட்டங்கள், நகரத்தை அசிங்கப்படுத்தின. ஹாரன் அடிக்கும் வாகனங்கள், மோட்டார் வண்டி இரைச்சல்களுக்கு மத்தியிலும் கிரேக்கர்கள் அவசர அவசரமாக வேலைக்கு சென்று கொண்டிருந்தார்கள்.
ஒமொனியா என அழைக்கப்படும் ஏதென்ஸ் நகர் மையப் பகுதியில் நடைபாதை வியாபாரிகள் வீதியோரமாக தமது கடைகளை விரித்தனர். ( இவர்கள் பற்றி பின்னர் விரிவாக...)

நான் கிரேக்க நாட்டுக்கு பயணம் போகப் புறப்பட்ட போது, எனது நண்பர்கள் "உனக்கு அங்கே என்ன வேலை?" என்று மேலும் கீழுமாகப் பார்த்தார்கள். கிரேக்கத்தைப் பற்றி தமிழர்கள் அறிய வேண்டியவை பல உள்ளன. சங்க காலத் தமிழர்கள், பண்டைய கிரேக்கர்களுடன் (தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் யவனர்கள்) வணிகத் தொடர்பு வைத்திருந்தனர். தற்காலக் கிரீஸின் வட பகுதியில் இருக்கும் மசிடோனியா (மக்கெடோனியா) விலிருந்து தான் அலெக்சாண்டர் வட இந்தியா வரை படையெடுத்து வந்தான். இதை விட, உலகக் கிறிஸ்தவர்களுக்கு கிறீஸ் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம். பாலஸ்தீனத்தில் தோன்றிய கிறிஸ்தவ மதம் கிரேக்கத்தில் உருப்பெற்றது. விவிலிய நூலில் (புதிய ஏற்பாடு) கூறப்பட்டுள்ள பல இடங்கள் தற்போதும் கிரீசில் உள்ளன. அன்று ரோம சாம்ராஜ்யப் பகுதிகளான கிறீஸ், துருக்கி, ஆகிய நாடுகளில் இருந்து தான் பெருமளவு மக்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றினார்கள். கிரேக்கம் இஸ்லாமிய மதத்திற்கும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளது. மசூதிகளின் கட்டிடக் கலை, கிரேக்க தேவாலயங்களை பின்பற்றி வடிவமைக்கப் பட்டன.

ஐரோப்பியர்கள் தமது நாகரீகம் கிரீசில் தோன்றியது என சொந்தம் கொண்டாடுவார்கள். மேற்குலக ஜனநாயகவாதிகள், கிரேக்கம் ஜனநாயகத்தின் தொட்டில் என மார் தட்டிக் கொள்வார்கள். பல்கலைக் கழகங்களில் தத்துவ விஞ்ஞானம் கற்பவர்கள், கிரேக்க தத்துவ ஞானிகளான பிளேட்டோவையும், சோக்ரடீசையும் தவிர்க்க முடியாது. மொழியியல் ரீதியாக, ஆங்கிலம் மற்றும் பல ஐரோப்பிய மொழிகள், கிரேக்க சொற்களை கடன் வாங்கியுள்ளன. மேற்குறிப்பட்ட தகவல்கள் யாவும் கிரேக்கத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள போதுமானவை.

முதலில் ஏதென்சில் அமைந்திருக்கும் அக்ரோபோலிஸ் என்ற புராதன நகரில் இருந்து ஆரம்பிப்போம். 2000 ஆண்டு பழமை வாய்ந்த நகரம், இன்றைக்கும் ஏதென்ஸ் நகருக்கு அருகில் உள்ள குன்றின் மீது கம்பீரமாக காட்சியளிக்கின்றது. கிரேக்க மொழியில் உயர்ந்த இடத்தில் அமைந்த நகரம் எனப் பொருள் படும். 2000 ஆண்டுகளுக்கு முன்னர், ஏதென்ஸ் நகர நிர்வாகம் அங்கே அமைந்திருந்தது. அன்றைய கிரேக்கம் ஒரே தேசமாக இருக்கவில்லை. சுயாதீனமான பெரிய நகரங்களின் நாடுகளாக இருந்தது. கிரேக்க மொழியில் அதினா (ஏதென்ஸ்) என்றழைக்கப் படும் நகரம், பெண் தெய்வம் ஒன்றின் பெயரால் உருவானது. (சரியான கிரேக்க உச்சரிப்பு "அஸ்தினா" என்று வரும். இதற்கும் இந்தியாவின் அஸ்தினாபுரிக்கும் ஏதாவது தொடர்பிருக்குமா தெரியவில்லை.)
அக்ரோபோலிசை பார்வையிட செலுத்த வேண்டிய கட்டணம் 12 யூரோக்கள். திறந்த வெளி அருங்காட்சியகமாக காணப்படும் பல புராதனக் கட்டிடங்கள் இடிந்து விழுந்து காணப்படுகின்றன. மீள் புனரமைப்பு பணிகள் தொடர்கின்றன. "பான்தெயோன்" என அழைக்கப் படும் பிரமாண்டமான கோவில் கூரையற்ற கட்டிடமாக காணப்படுகின்றது. கிறிஸ்தவ மதம் தோன்றுவதற்கு முன்பிருந்த கிரேக்க மதத்தில் செயுஸ் அதியுயர் ஸ்தானத்தில் இருந்தது. தலைமைக் கடவுள் செயுசுக்காக கட்டப்பட்ட ஆலயங்கள், கிரேக்கப் பகுதிகள் முழுவதும் (துருக்கியில் கூட) காணப்படுகின்றன. அக்ரோபோலிஸ் நகரில், "அகோரா" என அழைக்கப்படும் சந்தைக் கட்டிடம், இன்றும் உருக்குலையாமல் அப்படியே உள்ளது. அந்தக் கட்டிடத்தில் அகழ்வாராய்ச்சிப் பொருட்கள் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன.


(தொடரும்)

Saturday, July 18, 2009

தமிழரின் பாலியல் வேட்கை - ஒரு ஐரோப்பிய கண்ணோட்டம்


தமிழ் நாட்டில் சுற்றுப் பயணம் செய்த ஒரு நெதர்லாந்து எழுத்தாளர் தனது அனுபவங்களை பதிவு செய்துள்ளார். ஐரோப்பியர்கள் தம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தமிழர்களும் தெரிந்து கொள்வது நல்லது. "Te gast in India" என்ற நூலில் இருந்து தமிழாக்கம் செய்து தருகிறேன்.
_____________________________________________________________

பல நூற்றாண்டிற்கு முந்திய இந்தியாவை தமிழ்நாட்டில் தரிசிக்கலாம். ஆரியரின் பழக்கமான புலால் உண்ணும் முறை இங்கே கலாச்சாரமாகவில்லை. மொகலாயர்கள் தெற்கைப் பற்றி அதிகம் அக்கறைப்படவில்லை. தமது மதமாற்றும் நடவடிக்கையை வடக்கத்திய பிரதேசங்களுடன் கட்டுப்படுத்திக் கொண்டார்கள். பிரிட்டிஷார் கூட தமிழ்நாட்டில் அதிகளவு மாற்றங்களை கொண்டுவரவில்லை. மதராஸ் துறைமுகத்துடன் அவர்கள் திருப்தியடைந்தார்கள். இத்தகைய காரணங்களால் இங்கே திராவிட கலாச்சாரம் என்றென்றும் நிலைத்து நின்றது. பிரபலமான இந்துக் கோயில்கள் தெற்கில் காணப்படுவது ஒன்றும் அதிசயமல்ல. கோயில் கட்டடக்கலை ஒப்புவமை இல்லாதது.

"தமிழ் என்றால் இனிமை என்று அர்த்தம்" - எனக்கு அருகாமையில் இருந்த இளைஞர் சரளமான ஆங்கிலத்தில் ஆரம்பித்தார். நிச்சயமாக, ஆரியரின் வருகைக்கு முன்பிருந்தே தென்னிந்திய பிராந்தியத்தில் வாழ்ந்து வரும் கருநிற மேனியைக் கொண்ட மக்களைக் குறிக்க, இனிமை என்ற சொல் சிறந்த வரைவிலக்கணம். தமிழர்கள் எவ்வளவு நேர்மையானவர்கள், அன்பானவர்கள் என்று வாய் நிறைய சொல்லிக் கொண்டிருந்தார். நெற்றியில் வந்து விழும் அடர்ந்த சுருளான முடிகளுக்குள், கண்கள் பளிச்சிடுகின்றன.

 அவர் தன்னை வின்சென்ட் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.
"அது ஒரு கிறிஸ்தவப் பெயர் அல்லவா?"
"ஆமாம், நீங்கள் ஒரு கிறிஸ்தவ நாட்டில் இருந்து வருகிறீர்கள் அல்லவா?"
நிறைய அர்த்தங்களுடன் கண் சிமிட்டுகிறார்.
நாம் கிறிஸ்தவர்கள் இல்லை, எனக் கூறிய போது துணுக்குற்றார். நாம் கடவுளை நம்பவில்லை என்று சொன்னதும் பொறி பறந்தது. நாம் சொன்னதை அந்த இளைஞர் தனக்கு அருகில் இருப்பவர்களுக்கு மொழி பெயர்த்து கூறிய பின்னர், அவர்களும் நம்ப மறுத்து எம்மை உற்று நோக்கினார்கள்.

வின்சென்ட் தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலில் இருந்து மகாபலிபுரத்திற்கு வந்திருந்தார். கொடைக்கானல் கிறிஸ்தவ கேரளாவின் எல்லை அருகில் உள்ளது. "தமிழர்கள் இனிமையானவர்கள். ஆனால் மலையாளிகள் வேறு விதமானவர்கள்." விரலால் சைகை காட்டியபடி தொடர்கிறார். "மலையாளிகளை நம்ப முடியாது. ஆனால் அவர்கள் கெட்டவர்கள் அல்ல." 

வின்சென்ட் ஒரு டாக்சி சாரதி. பல இடங்களைப் பார்த்திருக்கிறார். நாம் பாறையில் தாவும் போது, வின்சென்ட் தமிழர்களைப் பற்றிய இன்னொரு கருத்தை உதிர்க்கிறார். "இன்றைய காலம் தமிழர்களின் பாலியல் வேட்கை அதிகரித்து வருகின்றது. நிறைய ஆபாசப்படங்களைப் பார்க்கிறார்கள். 'வின்சென்ட் அப்படி இல்லை.' நாம் கேட்காமலே, அவர் உறுதிப்படுத்திக் கொண்டிருந்தார். அவர் மேற்கொண்டு சொல்ல முடியாத படி, பாதையில் ஒரு பெண் பக்தைகளின் குழு எதிர்ப்படுகின்றது. அவர்கள் தமது தலைமுடிகளை கடவுளுக்கு அர்ப்பணித்து விட்டு, மொட்டந்தலையில் மஞ்சள் சந்தனம் தடவி இருந்தார்கள்.

"அங்கே பாருங்கள்!" வின்சென்ட் சுட்டிக்காட்டிய இடத்தில் 'இன்டியானா ஜோன்ஸ்' சுவரொட்டிகள் காணப்பட்டன. "விறுவிறுப்பான நல்ல படம். பார்த்தீர்களா?" "ஆனால் இப்போதெல்லாம் ஆபாசப்படங்களைப் பார்க்க கூட்டம் அலைமோதுகிறது." தலையை ஆட்டுகின்றார். "இப்போதெல்லாம் நிறையப்பேர் புகைக்கிறார்கள். கெட்ட பழக்கம். பெண்களும் புகைக்க ஆரம்பித்திருப்பது இன்னும் மோசமானது." - ஒரு 'கப்' பாலைக் குடித்துக் கொண்டே விரிவுரையாற்றுகிறார். "ஏன், அப்படி?" என்ற எமது கேள்விக்கு, "பெண்கள் தீய பழக்கங்களைப் பழகக் கூடாது. பெண்கள் கண்ணாடியைப் போன்றவர்கள். அது உடைந்தால் அதற்கு எந்தப் பெறுமதியும் இல்லை. ஒரு பெண் எப்போதும் நல்ல விஷயங்களைத் தான் செய்ய வேண்டும். வேற்று ஆண்களைப் பார்க்கக் கூடாது. தரையைப் பார்த்து நடக்க வேண்டும்."

இன்னொரு தடவை தபால் கந்தோர் சென்றிருந்தோம். கல்லாவில் இருந்த இளைஞன் முன்னால் நிற்கிறோம். "ஆஹா! நெதர்லாந்திற்கு அனுப்புகிறீர்களா?" நாம் கொடுத்த தபாலில் இருந்த முகவரியைப் பார்த்து விட்டு கூறுகிறார். பின்னர் குரலை சற்றுத் தாழ்த்தி கேட்கிறார். "நெதர்லாந்து. அங்கே யார் வேண்டுமானாலும் யார் கூடவும் பாலியல் உறவு வைத்துக் கொள்ளலாம். அப்படியல்லவா? உங்கள் நாட்டில் அப்படி நடப்பதாக இங்குள்ள பத்திரிகைகள் எழுதுகின்றன." பத்திரிகையில் வரும் எல்லாவற்றையும் நம்ப வேண்டாம் என நாம் அந்த இளைஞனை எச்சரிக்கிறோம். 

இளம் இந்தியர்கள் மனதில் மேலைதேசத்தவர்களின் பாலியல் பழக்கவழக்கம் பற்றிய தகவல்கள் சற்று தூக்கலாகவே இருக்கின்றன. ஆனால், எப்படி தபால் அலுவலக பணியாளர் அதைப்பற்றி பேசமுடியும்? அல்லது வின்சென்ட் போன்றவர்களை எடுத்துக் கொள்வோம். "தமிழர்களின் பாலியல் வேட்கை" பற்றி முறையிடுகிறார்கள். மகாபலிபுரத்தில் நடந்து கொண்டிருக்கும் போது, தமிழ்நாட்டில் கவர்ச்சி அலை வீசுவதை உணர்கிறோம். நட்பாகப் பழகும், மென்மையான இந்த மனிதர்கள் எங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள், என்று எம்மை நாமே கேட்டுக் கொள்கிறோம்.

எமது விடுதியில் ஒவ்வொரு காலையும் அந்தப் பணியாளர் தேநீருடன் வந்து எம்மை எழுப்புவார். ஆண்-பெண் உறவு பற்றி என்ன நினைக்கிறார் என்று, அந்த முதிய பணியாளரைக் கேட்கிறோம்.
"மேற்கத்திய பெண்கள், தெரியாத ஆண்களோடு பேச்சுக் கொடுப்பார்கள். எமது சமூகத்தில் அது ஏற்புடையதல்ல."
"மேற்கத்திய பெண்கள் இந்தியர்களைப் போல அடக்கமாக உடை உடுப்பதில்லை."
"ஒரு இந்தியப் பெண், உடல் பாகங்களை காட்டும் படி உடை உடுத்தியிருந்தால், அத்தோடு புகை பிடிக்கவும் குடிக்கவும் செய்தால், அந்தப் பெண் விற்பனைக்கு கிடைப்பாள், என்று அர்த்தம்."
நாம் குறுக்கிட்டு, "இந்தியப் பெண்கள் வயிறும், முதுகும் தெரியும் படி சேலை உடுக்கிறார்களே?" எனக் கேட்டோம்.
"அது அந்தப் பெண்ணின் கணவன் ஒழுங்காக சாப்பாடு போடுகிறானா, என்று பார்ப்பதற்கு." சொல்லி விட்டுச் சிரிக்கிறார். "ஆனால் தோள், தொடை, மார்பைக் காட்டிக் கொண்டு ஆடை அணிவது தவிர்க்கப்பட்டுள்ளது."

"இந்தியாவில் ஆணும், பெண்ணும் கையேடு கை கோர்த்து நடப்பதில்லை. வீதியில் முத்தமிடுவதில்லை. ஒரு இந்திய ஆண் ஒரு போதும் ஒரு பெண்ணின் அருகில் அமருவதில்லை. விருந்தினராக ஒரு நண்பனின் வீட்டிற்கு செல்லும் ஒரு இந்திய ஆண், அந்த வீட்டுப் பெண்களுடன் பேசுவதில்லை. வெளிநாட்டினருக்கு இந்த பழக்கவழக்கங்கள் தெரியாது. இதனால் சில விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுகின்றன." சிரிப்புடன் சிறிய இடைவெளி விட்டு தொடர்கிறார். "உங்களது நாட்டில் விருந்துபசரிக்கும் வீட்டு பெண்களுடன் பேசாமல் விடுவது அநாகரீகம் எனக் கேள்விப்பட்டேன்."

அடுத்த நாள் டாக்சியில் சென்னை செல்லும் வழியில் "Womens Club" என்ற செக்ஸ் படத்திற்கான போஸ்டர்களைப் பார்த்தேன். போஸ்டரின் மேலே ஒரு அறிவிப்பு. "அளவுக்கு மிஞ்சிய பாலியல் உங்கள் உடல்நலத்திற்கு கேடாகலாம்." என்ற சுகாதார அமைச்சின் அறிவித்தல். தமிழர்களின் பாலியல் வேட்கை அதிகரித்து வருவது அரசாங்கத்திற்கும் தெரிந்து விட்டது.

- Kees Rienstra
(Te sexy in Tamil Nadu)

te gast in India
Informtie Verre Reizen
Postbus 1504
6501 BM Nijmegen
The Netherlands


Wednesday, March 19, 2008

துபாய், முதலாளிகளின் சொர்க்கபுரி

வளைகுடா கடற்கரையோரம், துபாய் நகரை பார்த்த படி நிற்கிறது "பெர்ஜ் அல் அரப்" என்று அழைக்கப் படும், பாய்மரக்கப்பல் வடிவில் கட்டப்பட்ட, ஏழு நட்சத்திர ஹோட்டல். ஆமாம், எதையும் பெரிதாகவே சிந்தித்து கட்டப்பட்ட, ஐந்து நட்சத்திரத்தை விட வசதிகள் நிறைந்த ஏழு நட்சத்திர விடுதி அது. அதன் மிகக்குறைந்த அறையின் ஒரு நாள் வாடகை 800 டாலர்கள். துபாய் காரருக்கு எல்லாத்தையும் வித்தியாசமாக செய்ய ஆசை. அதனால், ஹோட்டல் விளம்பரத்துக்காக அமெரிக்காவின் டென்னிஸ் நட்சத்திரம் அன்ரே அகசியை அழைத்து வந்து, உச்சியில் இருக்கும் ஹெலி இறங்கு தளத்தில் டென்னிஸ் விளையாட வைத்தார்கள். துபாய் நாட்டின் சின்னமாகி விட்ட பெர்ஜ் அல் அரப்கட்டியதுடன் நின்று விடாது, நவீன உலக அதிசயங்கள் அமைக்க வேண்டுமென்ற ஆசையில், கடலுக்குள் பனை மர வடிவில், உலகப் பட வடிவில், என்று செயற்கை தீவுகளை வேறு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்த செயற்கை தீவுகளில், நவீன வசதிகளை கொண்ட குடியிருப்புக்களை கட்டி ரியல் எஸ்டேட் இல் விற்க இருக்கிறார்கள். துபாய் முதலாளிகளுக்கு எண்ணை விற்று வந்த கோடிக்கணக்கான பணத்தை என்ன செய்வதென்ற கவலை. அதனால் இப்படி பிரமாண்டமான கட்டுமானப் பணிகளை கற்பனை பண்ணி கட்டி கொண்டிருக்கிறார்கள். பணம் உள்ளவர்களின் வாழ்கை வசதிகளை உயர்த்துவதை மட்டுமே குறிக் கோளாக கொண்டு செயற்படும் அரசாங்கம், சாதாரண மக்களுக்காக போக்குவரத்து துறையை விருத்தி செய்யவில்லை. அதை விட கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்கும், நவீன லக அதிசயங்களை கட்டிய, கட்டிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களின் மாத வருமானம் 160 டாலர்களுக்கு மேல் போவதில்லை. மேலும் குறைவான பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக, கட்டிடங்கள் விழுந்து மடிந்தவர்கள் பலர். இந்திய, பாகிஸ்தானிய கூலி தொழிலாளர்களன அவர்களை பற்றி யாரும் கவலைப் படுவதில்லை.. அவர்களின் பெறுமதி சில நூறு டாலர்கள் மட்டுமே. இருபதாம் நூற்றாண்டு நவீன அடிமைகள் அவர்கள்.

2005 ஜனவரி மாதம், ஹஜ் பெருநாள் தொடங்க சில நாட்களே இருந்த காலம். மெக்கா போகும் யாத்திரீகர்கள் எனது விமானத்திலும் நிறைந்திருந்தனர். அவர்கள் ஏன் துபாய் வரவேண்டும்? பேச்சு கொடுத்ததில் சில உண்மைகள் வெளி வந்தன. கனடாவில் இருந்து புறப்பட்ட அந்த யாத்திரீகர்கள், ஒரு சவூதி அராபிய பிரயான முகவர் மூலம் ஒழுங்கு செய்யப் பட்டவர்கள். ஒவ்வொரு பயணியிடமும் நிறைய பணம் வாங்கி கொண்டு, குறைந்த செலவில் டிக்கெட் எடுத்து நாடு நாடக சுற்றி போகும் படி வைத்திருந்தார்கள். பாவம் இந்த அப்பாவி யாத்திரீகர்கள், தாமாகவே பிரயாணம் ஒழுங்கு பண்ண அவர்களுக்கு உரிமையில்லை. சவூதி பிரயான முகவர்களின் ஏகபோக உரிமை மதம் சம்பந்தமான புனித பயணத்தில் கோடி கட்டிப் பறக்கிறது. துபாய் விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது, பாஸ்போர்டை வைத்து பிரயாணிகளை பிரித்து விசா குத்திக் கொண்டிருந்தார்கள். ஐக்கிய அரபு ராச்சியங்கள், மற்றும் பணக்கார வளைகுடா நாடுகளின் பிரசைகளுக்கு முன்னுரிமை, அதற்கு அடுத்ததாக அமெரிக்க அல்லது பிற பணக்கார நாடுகள், கடைசியாக வறிய நாடுகளை சேர்ந்த அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். இந்த பாகுபாடு துபாய் அங்கம் வகிக்கும் ஐக்கிய அரபு எமிறேடின் நிர்வாக அரசியல். அங்கே நீதி கூட இந்த பின்னணியை வைத்து தான் வழங்கப் படுகின்றது.

விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த போது, அப்போது ஜனவரி மாதம் என்பதால் வெயில் கடுமையில்லை. சற்றே குளிரான காலநிலை. ஊர் சுற்றிகளுக்கு ஏற்ற காலநிலை. அங்கே பொது போக்குவரத்து அரிது. அதனால் டாக்ஸி, அல்லது தனியார் வாகனம் மட்டுமே தஞ்சம். நான் போய் நின்ற இடம் பழைய துபாய் நகரம். பஜார் நகரம் என்றும் சொல்லலாம். நகை கடைகள், பல சரக்கு கடைகள், மலிவான தங்குவிடுதிகள், எங்கு பார்த்தாலும் இந்தியர்கள் அல்லது பாகிஸ்தானியர்கள்.... இப்படி துபையின் அந்த பகுதி மட்டும் ஒரு சராசரி இந்திய நகரம் மாதிரி காட்சியத்தது. அங்கிருந்து ஒரு சில கி.மி. தூரம் போனால் தான் நவீன துபாய் நகரம் ஆரம்பிக்கிறது. அமாம், துபாய் நகரம் இன்னமும் புது புது குடியிருப்புகள் அமைக்கப் பட்டு பெருகிக் கொண்டே போகின்றது. பெரும்பாலும் அமெரிக்கா, ஐரோப்பிய அல்லது (எமிரேட்) அரேபியர்கள் மட்டுமே வசிக்கும் நவீன வசதிகளை கொண்ட குடியிருப்புகள், அவற்றின் மத்தியில் பாடசாலைகள், பல்பொருள் அங்காடிகள், மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை கொண்ட நியூ யார்க் போன்ற நவீன நகரங்கள்அவை. நட்சத்திர ஹோட்டல்கள், உல்லாச பிரயாணிகள் இளைப்பாறும் கடற்கரை, இப்போது கட்டப் பட்டுகொண்டிருக்கும் உலக அதிசயங்கள் எல்லாமே அங்கே தான்.

இந்த நகரமயமாக்கப் பட்ட கட்டடக் காட்டுக்கு வெளியே, பாலைவனப் பகுதியில் அமைந்திருக்கிறது நவீன அடிமைகளின் முகாம்கள். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற தென் ஆசிய நாட்டு கூலி உழைப்பாளிகள், மிகக் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்கின்றனர். தொழில் ஒப்பந்தம் தொடங்கும் நாளன்றே அவர்களின் கடவுச்சீட்டு, சட்டத்திற்கு மாறாக, வாங்கி வைக்கப் படுகின்றது. குறைந்தளவு வசதிகளை கொண்ட முகாம்களில், ஒரு அறைக்குள் எட்டுபேர் என்று தங்க வைக்கப் படுகின்றனர். வேலை செய்யும் இடத்திற்கு தினம்தோறும் கம்பெனி பஸ், தொழிலாளரை ஏற்றி இறக்கும். ஒரு தொழிலாளிக்கு சம்பளம் உட்பட ஆகும் செலவு அதிக பட்சம் முன்னூறு டாலர்கள் மட்டுமே என்பதால், அவர்களின் உழைப்பை சுரண்டுவதன் மூலம், பல கம்பெனிகள் பெருமளவு லாபம் எடுக்கின்றன. மலிவான உழைப்பாளிகள் உருவாக்கும் உற்பத்தி பொருட்கள், அல்லது சேவைகள் ஆகியவற்றின் விலைகள் சர்வதேச தரத்திற்கு உயர்வாக இருப்பதால், இந்த கொள்ளை லாபம் சாத்தியமாகின்றது. உண்மையில் அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய முதலாளிகள், பொறாமைப்படும் அளவிற்கு துபாய் பொருளாதாரம் அடிமைகளால் கட்டப்பட்டு வருகின்றது. அங்கே தொழிலாளர் நல சட்டங்கள் எதுவும் கிடையாது. தொழிற்சங்கங்களுக்கு தடை. வேலை நிறுத்தம் சட்டவிரோதம். வர்த்தக நிறுவனங்கள் வருமான வரி கட்ட தேவையில்லை. மொத்தத்தில் அது ஒரு முதலாளிகளின் சொர்க்கம். மிக அரிதாக அண்மையில் நடந்த வேலை நிறுத்தம் ஒன்று, போலிஸ் தலையீட்டால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது கைது செய்யப் பட்ட பலர் நாடு கடத்தப் பட்டிருக்கலாம்.

கூலி தொழிலாளர்கள் மட்டுமல்ல, விற்பனையாளர்கள், எழுதுவினைஞர்கள், மானேஜர்கள், டாக்டர்கள், எஞ்சினியர்கள் போன்ற சேவைத்துறையில் இருப்போரும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து குறைந்த கூலிக்கு கூட்டி வரப்படுகின்றனர். இவர்களின் சம்பளம் சாதாரண வெளிநாட்டு தொழிலாளி எடுப்பதை விட பல மடங்கு அதிகம் என்றாலும், ஒரு சாதரண எமிரேட் தொழிலாளி எடுக்கும் சம்பளத்தை விட குறைவு. சில நேரம் அலுவலக பணியில் இருக்கும் ஐரோப்பியரை விட குறைவு எனலாம். அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள் மேல்நிலை மனேஜர்களாக பதவியில் உள்ளனர். அவர்களின் ஊதியம், அவர்களின் தாயகத்தில் கிடைக்கும் அதே அளவு, அல்லது சற்று கூட. இதனால் சில தகுதி குறைந்த அமெரிக்க அல்லது ஐரோப்பியர்கள் கூட துபாயில் செல்வந்த வாழ்கை வாழ்கின்றனர்.

பண்டைய ரோம் நகரத்தில், விவசாய கூலிகள் முதல் ஆசிரியர்கள் வரை பிற நாடுகளில் இருந்து வந்த அடிமைகளே வேலை செய்தனராம். ரோம் மக்கள் அரசு துறைகளிலும், இராணுவத்திலும் மட்டுமே பணி புரிந்தனராம். இதே போன்ற சமூக கட்டுமானம் எமிரேட் முழுக்க உள்ளது. நாட்டின் பிரசைகள் அரசாங்கத்திலும், பாதுகாப்பு படை களிலும் அதிக ஊதியத்திற்கு வேலை செய்கின்றனர். மேலும் எல்லா வகையான வர்த்தக நிறுவனத்திலும் ஒரு எமிரேட் பிரசைக்கு அரைவாசி பங்கு இருக்க வேண்டும். இதனால் பல எமிரேட் பிரசைகள், சும்மா இருந்தே பணம் சம்பாதிக்கிறார்கள். மிகப் பெரும் முதலீட்டில் நடத்தப் படும் கம்பெனிகள் அமெரிக்கர்கள், அல்லது ஐரோப்பிய முதலளிகளுடயது. இடைதர மற்றும் சிறிய கம்பெனிகளை இந்தியர்கள் நடத்துகின்றனர். வெளிநாட்டினர் துபாயில் எந்த சொத்தும் வாங்க உரிமையில்லை. அவர்கள் வீடு வாங்க, வியாபார நோக்குடன் அனுமதித்தாலும், ஒரு சில கட்டுப்பாடுகளுடன், அவற்றை விற்கும் ரியல் எஸ்டேட் கம்பெனிகள் அல்லது எமிரேட் காரர்கள் லாபம் சம்பாதிக்கும் துறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எண்ணை இருப்பு குறைந்து வருவதால் இது போன்ற வர்த்தகத்தில் துபாய் நாட்டம் காட்டி வருகின்றது. ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்க கண்டங்களுக்கு நடுவில் அமைந்திருப்பதால், துபாயில் பல உலக வர்த்தக கழகங்கள் தமது விற்பனை சாலைகள், போன்றவற்றை திறந்து வைத்துள்ளன. மேலும் வரி சலுகை, சகல வசதிகளுடனான விமான நிலையம், துறைமுகம், குறைந்த கூலிக்கு பிடிக்க கூடிய தொழிலாளர்கள், ஆகிய விஷயங்கள் பல முதலாளிகள் துபாயை தெரிவு செய்ய காரணம்.

துபாய் இவ்வாறு முதலாளிகளின் சொர்க்கபுரி மட்டுமல்ல, உல்லாச பிரயாணிகளுக்கும் பார்க்க நிறைய இடங்கள் உள்ளன. துபாய் அருங்ககாட்சியகம் குறிப்பிடத்தக்கது. எண்ணை கண்டுபிடிக்கும் வரை துபாய் நகரம் எப்படி காட்சியளித்தது? அதன் மக்கள் எப்படி வாழ்ந்தனர்? போன்றவற்றை அறிய விரும்பினால் அது ஏற்ற இடம். மேலும் துபாய் வணிகர்கள் ஒரு காலத்தில் முத்துகளை உலகம் முழுக்க விற்று வந்தனர். முத்து குளிக்கும் முறை, பற்றி ஒரு பகுதி விளக்குகிறது. இன்னொரு பகுதி பாலை வன சோலையில் பேரீச்சை, பிற விவசாயம் பற்றி விளக்குகின்றது. இவை எல்லாம் நேரே பார்ப்பது போல பொம்மைகளை வைத்து காட்சிப் படுத்தப் பட்டுள்ளது.

அருங்காட்சியகத்தில் பார்ப்பதை விட்டு, பாலைவன கிராமம் ஒன்றினை அங்கிருந்த வீடுகள், கிணறுகள், தோட்டங்கள், ஒட்டகங்கள்இவ்வாறு அப்படியே இருந்த மாதிரி பார்க்க விரும்பினால், "ஹட்டா ஹெரிடேஜ் வில்லேஜ்" சிறந்த இடம். ஹட்டா துபாய் நகரில் இருந்து 115 கி.மி. கிழக்கு பக்கமாக இன்னொரு எமிரேட் புஜைரா நோக்கி போகும் பாதையில்,ஹசார் மலைகளுக்கு நடுவில் அமைந்திள்ளது. மலைகளின் பின்னணியில் அந்தக் கிராமத்தின் அமைவிடம் அதன் அழகை மெருகூட்டுகின்றது. ஹட்டாவில் தான் எமிரேட்டின் மிகப்பெரிய அணை கட்டப்பட்டுள்ளது. இதனால் பிற பாலைவன வளைகுடா நாடுகளை போலன்றி, எமிரேட்கிழக்கு பகுதியில் விவசாயம் நடக்கிறது. அதற்கு நீர்பாசன வசதி இந்த அணை மூலம் கிடைக்கிறது.

ஐக்கிய அரபு இராச்சியங்கள் ஏழு எமிரேட்களை சேர்த்து உருவானது. அந்த ஏழும் சில சுயநிர்ணய உரிமைகளுடன் ஒன்றிணைந்து ஒரே தேசமாக இயங்குகின்றன. ஒவ்வொரு எமிரேட்டுக்கும் ஒரு ஷேக் அரசியல்/நிர்வாக தலைவராக உள்ளார். ஷேக் என்பது மன்னரை குறிப்பதல்ல. பண்டைய இஸ்லாமிய அரசியல் அமைப்பின் படி ஒவ்வொரு பிரதேசத்திற்கும், ஷேக் என்ற ஒருவர் நிர்வாகத் தலைவராக தெரிவு செய்யப் பட்டு, அரசியல் நிர்வாக அதிகாரம் வழங்கப் பட்டது. ஐரோப்பியரின் வருகைக்கு பிறகு, அதுவும் எண்ணை வளம் கண்டுபிடிக்கப் பட்ட பிறகு தான் இந்த ஷேக்குகள் எல்லாம் கோடீஸ்வரர்களாக, குறுநில மன்னர்கள் போல மாறினார்கள். அபுதாபி, அதிக வருவாய் கொண்டதால், அது தலைநகரம் ஆகி விட்டது. அபுதாபி ஷேக், காலம் சென்ற சையிது, தேசத் தந்தை போலே ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளார். அவரது ஆளுயர உருவப் படங்கள் எமிரேட் எங்கும் காணலாம். அது மட்டுமல்ல, அவருக்கு சொந்தமான பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட ஆடம்பர மாளிகைகள், ஒவ்வொரு நகரிலும் உள்ளது. இராக்கில் சதாம் உருவப்படங்களை, மாளிகைகளை, கேலி செய்த சி.என்.என். போன்ற மேற்கத்தைய ஊடகங்கள் இதை கண்டு கொள்ளாதது வியப்புக்குரியது. அபுதாபி, துபாய் மட்டுமே எண்ணை வளம் காரணமாக, பணக்கார எமிரேட்களாக உள்ளன. அவை புஜைரா போன்ற எண்ணை இல்லாத "வறிய" எமிரேட்டுகளுக்கு நிதி உதவி செய்து முன்னேற்றி வருகின்றன. சட்டங்கள் கூட ஒவ்வொரு எமிரேட்டுக்கும் மாறுபடும். துபாய் மேலைத்தேய நாடுகளை போல தாராளவாத கொள்கையை கடைபிடிகின்றது. அங்கே இரவு களியாட்ட விடுதிகள், மதுபான சாலைகள், ஏன் விபசாரத்துக்கு கூட சுதந்திரம் வழங்கப் பட்டுள்ளது. துபாய் அருகிலேயே இருக்கும் ஷார்ஜா என்ற இன்னொரு எமிரேட் இதற்கு மாறாக, மத ஒழுக்க கட்டுபாடுகளை கடுமையாக கடைப் பிடிக்கின்றது. அங்கே மதுபானம் போன்றனவற்றிகு முற்றாக தடை. அபுதாபி ஓரளவு சுதந்திரமும், ஓரளவு கட்டுபாடுகளையும் கொண்டுள்ளது. இதனால் உல்லாச பிரயாணிகளையும், வர்த்தக நோக்கோடு வருபவர்களையும் துபாய் மட்டுமே கவர்வது வியப்புக்குரியதல்ல.


Travel Blogs - Blog Catalog Blog Directory

AddThis Feed Button
_______________________________________________________________
குவைத் தொழிலாளரின் குமுறும் எரிமலை
_______________________________________________________________

கலையகம்