Showing posts with label கிறீஸ். Show all posts
Showing posts with label கிறீஸ். Show all posts

Thursday, July 07, 2011

கிரேக்க நாட்டு பயணக் குறிப்புகள்


"களிமேரா" (காலை வணக்கம்)
நகர மத்தியில் அமைந்திருந்த தேநீர்க் கடையில் சூடான கோப்பியை (Coffee) எதிர்பார்த்துக் காத்திருந்தேன். எனக்கு கிடைத்ததோ குளிர்பானமாக தயாரிக்கப்பட்ட கோப்பி. கிரேக்கர்கள் பொதுவாக குளிர் கோப்பியே அருந்துவார்கள் என்பதும், சூடான கோப்பி எனக் குறிப்பிட்டு கேட்டு தான் வாங்க வேண்டும். ஏதென்ஸ் கிரீஸின் தலைநகரம். அசுத்தமான வளி மண்டலத்தைக் கொண்ட ஐரோப்பிய நகரம். புகை படிந்தது போன்ற கட்டங்கள், நகரத்தை அசிங்கப்படுத்தின. ஹாரன் அடிக்கும் வாகனங்கள், மோட்டார் வண்டி இரைச்சல்களுக்கு மத்தியிலும் கிரேக்கர்கள் அவசர அவசரமாக வேலைக்கு சென்று கொண்டிருந்தார்கள்.
ஒமொனியா என அழைக்கப்படும் ஏதென்ஸ் நகர் மையப் பகுதியில் நடைபாதை வியாபாரிகள் வீதியோரமாக தமது கடைகளை விரித்தனர். ( இவர்கள் பற்றி பின்னர் விரிவாக...)

நான் கிரேக்க நாட்டுக்கு பயணம் போகப் புறப்பட்ட போது, எனது நண்பர்கள் "உனக்கு அங்கே என்ன வேலை?" என்று மேலும் கீழுமாகப் பார்த்தார்கள். கிரேக்கத்தைப் பற்றி தமிழர்கள் அறிய வேண்டியவை பல உள்ளன. சங்க காலத் தமிழர்கள், பண்டைய கிரேக்கர்களுடன் (தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் யவனர்கள்) வணிகத் தொடர்பு வைத்திருந்தனர். தற்காலக் கிரீஸின் வட பகுதியில் இருக்கும் மசிடோனியா (மக்கெடோனியா) விலிருந்து தான் அலெக்சாண்டர் வட இந்தியா வரை படையெடுத்து வந்தான். இதை விட, உலகக் கிறிஸ்தவர்களுக்கு கிறீஸ் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம். பாலஸ்தீனத்தில் தோன்றிய கிறிஸ்தவ மதம் கிரேக்கத்தில் உருப்பெற்றது. விவிலிய நூலில் (புதிய ஏற்பாடு) கூறப்பட்டுள்ள பல இடங்கள் தற்போதும் கிரீசில் உள்ளன. அன்று ரோம சாம்ராஜ்யப் பகுதிகளான கிறீஸ், துருக்கி, ஆகிய நாடுகளில் இருந்து தான் பெருமளவு மக்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றினார்கள். கிரேக்கம் இஸ்லாமிய மதத்திற்கும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளது. மசூதிகளின் கட்டிடக் கலை, கிரேக்க தேவாலயங்களை பின்பற்றி வடிவமைக்கப் பட்டன.

ஐரோப்பியர்கள் தமது நாகரீகம் கிரீசில் தோன்றியது என சொந்தம் கொண்டாடுவார்கள். மேற்குலக ஜனநாயகவாதிகள், கிரேக்கம் ஜனநாயகத்தின் தொட்டில் என மார் தட்டிக் கொள்வார்கள். பல்கலைக் கழகங்களில் தத்துவ விஞ்ஞானம் கற்பவர்கள், கிரேக்க தத்துவ ஞானிகளான பிளேட்டோவையும், சோக்ரடீசையும் தவிர்க்க முடியாது. மொழியியல் ரீதியாக, ஆங்கிலம் மற்றும் பல ஐரோப்பிய மொழிகள், கிரேக்க சொற்களை கடன் வாங்கியுள்ளன. மேற்குறிப்பட்ட தகவல்கள் யாவும் கிரேக்கத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள போதுமானவை.

முதலில் ஏதென்சில் அமைந்திருக்கும் அக்ரோபோலிஸ் என்ற புராதன நகரில் இருந்து ஆரம்பிப்போம். 2000 ஆண்டு பழமை வாய்ந்த நகரம், இன்றைக்கும் ஏதென்ஸ் நகருக்கு அருகில் உள்ள குன்றின் மீது கம்பீரமாக காட்சியளிக்கின்றது. கிரேக்க மொழியில் உயர்ந்த இடத்தில் அமைந்த நகரம் எனப் பொருள் படும். 2000 ஆண்டுகளுக்கு முன்னர், ஏதென்ஸ் நகர நிர்வாகம் அங்கே அமைந்திருந்தது. அன்றைய கிரேக்கம் ஒரே தேசமாக இருக்கவில்லை. சுயாதீனமான பெரிய நகரங்களின் நாடுகளாக இருந்தது. கிரேக்க மொழியில் அதினா (ஏதென்ஸ்) என்றழைக்கப் படும் நகரம், பெண் தெய்வம் ஒன்றின் பெயரால் உருவானது. (சரியான கிரேக்க உச்சரிப்பு "அஸ்தினா" என்று வரும். இதற்கும் இந்தியாவின் அஸ்தினாபுரிக்கும் ஏதாவது தொடர்பிருக்குமா தெரியவில்லை.)
அக்ரோபோலிசை பார்வையிட செலுத்த வேண்டிய கட்டணம் 12 யூரோக்கள். திறந்த வெளி அருங்காட்சியகமாக காணப்படும் பல புராதனக் கட்டிடங்கள் இடிந்து விழுந்து காணப்படுகின்றன. மீள் புனரமைப்பு பணிகள் தொடர்கின்றன. "பான்தெயோன்" என அழைக்கப் படும் பிரமாண்டமான கோவில் கூரையற்ற கட்டிடமாக காணப்படுகின்றது. கிறிஸ்தவ மதம் தோன்றுவதற்கு முன்பிருந்த கிரேக்க மதத்தில் செயுஸ் அதியுயர் ஸ்தானத்தில் இருந்தது. தலைமைக் கடவுள் செயுசுக்காக கட்டப்பட்ட ஆலயங்கள், கிரேக்கப் பகுதிகள் முழுவதும் (துருக்கியில் கூட) காணப்படுகின்றன. அக்ரோபோலிஸ் நகரில், "அகோரா" என அழைக்கப்படும் சந்தைக் கட்டிடம், இன்றும் உருக்குலையாமல் அப்படியே உள்ளது. அந்தக் கட்டிடத்தில் அகழ்வாராய்ச்சிப் பொருட்கள் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன.


(தொடரும்)

Friday, July 01, 2011

கிரேக்க பொருளாதாரம் திவாலானது எப்படி? - ஆவணப்படம்

அந்நிய நாட்டு கடன் சுமையால், பொருளாதார நெருக்கடிக்கும் சிக்கித் தவிக்கும் கிரீசின் பிரச்சனைகளை ஆராயும் ஆவணப்படம். பொருளாதார நெருக்கடியில் ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்களின் பங்களிப்பு என்ன? ஒரு பக்கம், ஆயுதங்களை வாங்க வைப்பதற்காக கடன் வழங்குகின்றன. மறு பக்கம், கடனையும் வட்டியையும் திருப்பிச் செலுத்துவதற்கு சாமானிய மக்களின் தலையின் கடன் சுமையை இறக்கி விடுகின்றன. ஏற்கனவே பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி மீண்ட, ஆர்ஜன்தீனா, எக்குவடோர் ஆகிய நாடுகளின் முன்மாதிரி அலசப்படுகின்றது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஒரே வழி, சுயாதீனமான கணக்குப் பரிசோதகர்களை நியமிக்க வேண்டும். யாரிடம் எவ்வளவு கடன் வாங்கப்பட்டன? எதற்கு செலவழிக்கப் பட்டன? இதில் பொதுமக்கள் செலுத்த வேண்டிய பங்கு எவ்வளவு? இது போன்ற தகவல்கள் பகிரங்கமாக்கப் பட வேண்டும். அல்லாவிட்டால், கிரேக்க பிரதமரும் நாட்டை விட்டு ஓட வேண்டிய நிலைமை ஏற்படும். எதிர்காலத்தில் வர்க்கப் போராட்டம் வலுக்கும். ஆங்கில உபதலைப்புகளுடன், கிரேக்க மொழியில் அமைந்த ஆவணப்படம். கிரீஸ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனை இங்கே தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

Thursday, June 16, 2011

ஏதென்ஸ் நகரில் "மக்கள் மன்றம்", கிரேக்க அரசு நெருக்கடியில்


ஜூன் 15 , அன்று கிரீசில் நடந்த பொது வேலை நிறுத்தத்தின் போது திரண்ட பெருந்திரள் மக்கள், கிரேக்க பாராளுமன்றத்தை முற்றுகையிட்டனர். போலிஸின் வன்முறைத் தூண்டுதல்களுக்கு பயந்து கலைந்து செல்லாமல், முன்றலில் கூடியுள்ளனர். அங்கே தற்போது "மக்கள் பாராளுமன்றம்" அமைக்கப்பட்டுள்ளது. முதலாளித்துவ பாராளுன்றத்தினுள் ஜனநாயகம் கிடையாது. அதற்கு பதிலாக,
தெருவில் கூட ஜனநாயகம் மலரலாம் என்பதை கிரேக்க மக்கள் நிரூபித்துள்ளனர்.
அலையெனத் திரண்ட மக்கள் எழுச்சியைக் கண்டு மிரண்ட அரசாங்கம், மந்திரி சபையை கலைத்துள்ளது. அனைத்து கட்சிகளும் பங்குபற்றும் புதிய அரசாங்கம் அமைக்கப் படும் என்று பிரதமர் Papandreou தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன உத்தரவிட்ட பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப் படுத்தியதால், கிரேக்க அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆயினும், இந்த நிமிடம் வரையில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட மக்கள், போராட்டத்தை கைவிடவில்லை. அரசாங்கம் மட்டுமல்ல, வங்கிகளும், சர்வதேச நாணய நிதியமும் கிரீசை விட்டு அகல வேண்டும் என்று, தொடர்ந்து போராடி வருகின்றனர்.
தலைநகர் ஏதென்சில் மட்டுமல்லாது, பிற நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஆகிய நகரங்களில் உள்ள மேயரின் அலுவலகம், நகராட்சி கட்டிடங்கள் போன்றன சில மணி நேரங்கள் என்றாலும் மக்கள் கட்டுப்பாட்டில் இருந்துள்ளன. கிரேக்க மக்கள் எழுச்சியின் போது எடுக்கப்பட்ட படங்கள் இங்கே இணைக்கப் பட்டுள்ளன.


Tuesday, August 03, 2010

கிரேக்க கெரில்லாக் குழு: "முதலாளித்துவத்திற்கு எதிரான போர்"

கிரீசில் அண்மையில் இடம் பெற்ற அரசியல் படுகொலைக்கு ‘Sect of Revolutionaries’ என்ற புதிய அமைப்பு உரிமை கோரியுள்ளது. 19 July அன்று Sokratis Giolias என்ற ஊடகவியலாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதிகாலை அவரது வீட்டிற்கு வந்த இனந்தெரியாத மூன்று பேர் தானியங்கி துப்பாக்கிகளால் சுட்டு விட்டு தப்பி விட்டனர். படுகொலையான நபர் ஊடகவியலாளர் என்ற போர்வையில் போலிசுக்கு தகவல் சேகரிப்பவர் என்று நம்பப்படுகின்றது.

கிரீஸின் பிரபல நாளேடான Ta Nea வுக்கு அனுப்பப்பட்டுள்ள குறுந்தகடு ஒன்று படுகொலைக்கு உரிமை கோருகின்றது. இதன் மூலம் புதியதொரு தலைமறைவு கெரில்லா இயக்கத்தின் இருப்பு பற்றியும் தெரிய வந்துள்ளது. அவர்கள் அனுப்பிய குறுந்தகட்டில் இயக்கத்தின் ஆயுதக் கையிருப்பைக் காட்டும் போட்டோ ஒன்றும் உள்ளது. உரிமை கோரும் அறிவிப்பில், தாம் கிரேக்க ஜனநாயகத்திற்கு எதிராக போராடப் போவதாக தெரிவித்துள்ளனர். முதலாளித்துவத்திற்கு எதிராக போர்ப் பிரகடனம் செய்துள்ளனர். கிறீஸ் இனிமேலும் முதலாளித்துவத்தின் பாதுகாப்பான புகலிடம் அல்ல என்று சுற்றுலாப் பயணிகள் அறிந்து கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளது. குண்டு வைப்பு, மரண தண்டனை, நாச வேலை போன்ற புரட்சிகர நடவடிக்கைகள் மூலம் கிறீஸ் முழுவதையும் போர்க் களமாக மாற்றப் போவதாக சூளுரைத்துள்ளனர்.

கடந்த வருடம், பெப்ரவரி மாதம் இடம்பெற்ற போலிஸ் நிலைய தாக்குதலுக்கும் ‘Sect of Revolutionaries’ ஏற்கனவே உரிமை கோரியிருந்தது. தானியங்கி துப்பாக்கிகள், கிரனேட்கள் சகிதம் நடைபெற்ற தாக்குதலில் போலிஸ் நிலையத்திற்கு பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை. "இம்முறை அவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பி விட்டார்கள். அடுத்த தடவை நிலைமை வேறு விதமாக இருக்கும்" இவ்வாறு அந்த உரிமை கோரும் கடிதத்தில் இருந்தது.
இதற்கிடையே கிரீசில் பார ஊர்தி வாகன சாரதிகள் வாரக்கணக்காக வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர். இதனால் நாட்டில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கண்ணீர்ப்புகை பிரயோகம், தடியடி மூலம் போலீசார் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களை அடக்க எத்தனித்த முயற்சி கைகூடவில்லை. இறுதியில் அரச ஆணையின் பிரகாரம், இராணுவ சாரதிகள் பார ஊர்திகளை எடுத்துச் சென்று எரிபொருள் விநியோகம் செய்துள்ளனர்.


Wednesday, May 12, 2010

ஐரோப்பாவை மிரட்டும் கிரேக்கப் புரட்சி !

அமெரிக்காவில் மையம் கொண்ட பொருளாதார சுனாமி ஐரோப்பிய கரைகளை வந்தடைந்துள்ளது. அட்லாண்டிக் சமுத்திரக் கரையை அண்டிய அயர்லாந்து, மத்திய தரைக் கடல் நாடுகளான போர்த்துக்கல், ஸ்பெயின், இத்தாலி, கிறீஸ் ஆகிய நாடுகளும் சுனாமியின் அகோரமான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. இவற்றில் கிரீசில் ஏற்பட்ட பாதிப்புகள் மட்டும் வெளித் தெரிய ஆரம்பித்துள்ளது. முதன் முதலாக செல்வந்த மேற்கு ஐரோப்பிய வட்டத்தை சேர்ந்த ஒரு தேசம் திவாலாகின்றது. மக்கள் வங்கிகளையும், வங்கிகள் அரசாங்கத்தையும், அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தையும் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனர். யார் குற்றவாளி?

துருக்கி, ஜெர்மனி என்று அந்நிய நாடுகளின் ஆக்கிரமிப்புக்குள் உள்ளாகி சின்னாபின்னமான கிறீஸ், செல்வந்த நாடுகளின் வரிசையில் சேர்ந்த பொருளாதார அதிசயம் எதிர்பாராதது தான். பலமான பொருளாதாரத்தைக் கொண்ட ஜெர்மனியிடம் இருந்து கடன் பெறக் காத்திருக்கும் கிறீஸ், இரண்டாம் உலகப் போரில் நாஜிகள் திருடிய தங்கத்தை மீட்க முடியாமல் உள்ளது. கேந்திர முக்கியத்துவம் காரணமாக, கிறீஸ் சோஷலிச முகாமில் சேர விடாமல் தடுத்த பிரிட்டன், புராதன கலைப்பொருட்களை இன்னும் திருப்பிக் கொடுக்கவில்லை.

கிரேக்கம் ஐரோப்பிய நாகரீகத்தின் தொட்டில் என புகழப்படுவதெல்லாம், பாட நூலில் மட்டும்தான். நாகரீகம் கற்றுக் கொண்ட நாடுகள், தற்போது கிரீசை அடிமையாக்க திட்டம் போடுகின்றன. அந்நிய நாட்டு கடனை வாங்கி ஒலிம்பிக் போட்டி போன்ற ஆடம்பரங்களில் செலவிட்டதால், பொதுநல சேவைக்கு அள்ளிக் கொடுத்ததால், வந்தது இந்த நெருக்கடி என்று திட்டுகின்றன. கொடுத்த கடனை அடைப்பதற்கு 110 பில்லியன் டாலர் கடன் வழங்கப்படுகின்றது. இந்தக் கடனில் ஜெர்மனியின் பங்கு அதிகம். ஜெர்மனி நெருக்கடியில் சிக்கிய தனது வங்கிகளின் மீட்சிக்காக ட்ரில்லியன் யூரோக்களை அள்ளிக் கொடுத்த்து. அதனோடு ஒப்பிடும் போது சகோதர ஐரோப்பிய நாடான கிரீசுக்கு வழங்கியது சொற்பத் தொகை.

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்தவராக இணையும் நாடுகளுக்கு என்று சில விதிமுறைகள் இருந்தன. வருடாந்த பட்ஜெட்டில் துண்டு விழும் தொகை மூன்று வீதத்திற்கு கூடக் கூடாது. அரசின் மொத்த அந்நிய/உள்நாட்டு கடன்கள் 60 வீதத்திற்கு மேலே அதிகரிக்க கூடாது.மீறினால் அபராதம் விதிக்கப்பட்டது. கிறீஸ் அரசால் ஒரு போதும் அந்த இலக்கை அடைய முடியவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பொய்க் கணக்கு காட்டிக் கொண்டிருந்தது.

மோசடியான கணக்குகளை எழுதுவதற்கு, பொருளாதாரத்தில் சூரப் புலிகளான அமெரிக்க கணக்காளர்களை அமர்த்தியது. அமெரிக்க முதலீட்டு வங்கியான Goldman Sachs அரசாங்கத்தின் கடன் தொகையை குறைத்துக் காட்டி கணக்கை முடித்தார்கள். எப்படி? கிரேக்க அரசின் கடன் பத்திரங்கள் யென், டாலர் நாணயப் பெறுமதிக்கு மாற்றப் பட்டன. அரசாங்கம் கொடுக்க வேண்டிய கடன் நிலுவைகளை எதிர்காலத்தில் கொடுப்பதாக வேறொரு கணக்கில் குறித்தார்கள். மேலதிகமாக Goldman Sachs வங்கியே ஒரு பில்லியன் யூரோ கடனாக கொடுத்து சரிக்கட்டியது.

கிரேக்க மக்கள் கடன் அட்டைகளில் வாழ்ந்து கொண்டிருக்கையில், அரசாங்கம் அந்நியக் கடன்களால் இயங்கிக் கொண்டிருந்தது. நிதி நெருக்கடி தோன்றிய காலத்தில் இருந்தே, வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாத மக்கள் கடன் அட்டைகளில் பணம் எடுத்து செலவழிக்கின்றனர். இந்தக் கடனை எல்லாம் எப்போது திருப்பிக் கட்டுவோம் என்பது அவர்களுக்கே தெரியாது. இது நெருக்கடியை இரட்டிப்பாக்குகின்றது. தற்கால கிரேக்க பொருளாதாரம் ஒரு மாயையின் மேலே தான் கட்டப்பட்டிருந்தது.

பாரம்பரிய விவசாய நாடான கிரீஸ், எழுபதுகளுக்குப் பின்னர் விவசாயத்தைக் கைவிட்டது. அதிக வருமானம் ஈட்டித் தரும் உல்லாசப் பிரயாணத் துறையில் நம்பியிருந்தது. இருப்பினும் உள்நாட்டு விவசாயிகளை ஊக்குவிக்க அரசு வழங்கிய மானியத்தைக் கொண்டு, விவசாயத் துறையும் மறுமலர்ச்சி கண்டது. அகதிகளாக அல்லது சட்டவிரோதமாக குடியேறிய அல்பேனிய, இந்திய, பாகிஸ்தானிய கூலியாட்கள் வயல்களில் குறைந்த கூலிக்கு வேலை செய்தார்கள். இதனால் கிரேக்க விவசாயிகள் வளமாக வாழ முடிந்தது. தனது நாட்டு விவசாயிகளுக்கு மானியம் கொடுக்கும் ஜெர்மனி போன்ற பணக்கார ஐரோப்பிய நாடுகள், கிரேக்க விவசாயிகளுக்கு கொடுத்த மானியத்தை பொருளாதாரத் தவறாக சுட்டிக் காட்டுகின்றன. ஆமாம், கடன் வாங்கியவன் கடன் கொடுத்தவனைப் போல வாழ நினைக்கலாமா?

இரண்டாம் உலகப்போர் காலத்தில் நாஜிகளின் ஆக்கிரமிப்பில் இருந்த கிரீசை விடுவிக்க கம்யூனிச கட்சியின் விடுதலைப் படை போராடியது. எந்த வல்லரசின் உதவியுமின்றி, பெரும்பாலான பகுதிகளை விடுதலை செய்து தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள். பெரும்பான்மை கிரேக்க மக்கள் விவசாய சமூகமாக இருந்தமையும், கம்யூனிஸ்ட்களின் வெற்றிக்கு மூல காரணம். பிரிட்டனின் உதவியுடன் கம்யூனிசக் கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது.

அதன் பிறகு கிரீஸ் மேற்குலக பொருளாதார ஆதிக்கத்தின் கீழ் வந்தது. விவசாய பொருளாதாரம் புறக்கணிக்கப்பட்டு, அந்த இடத்தில் சுற்றுலாப் பொருளாதாரம் புகுத்தப்பட்டது. ஒரு காலத்தில் மீனவ சமூகத்தினர் மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்த தீவுகள் மெருகூட்டப்பட்டன. பிரிட்டன், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற பணக்கார ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்த உல்லாசப் பயணிகள் கிரேக்க தீவுகளை தமது கோடைகால காலனிகளாக மாற்றினார்கள். அவர்கள் கொண்டு வந்து கொட்டிய பணம் கிரேக்க மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக் காரணமாக இருந்தது.

கை நிறையச் சம்பாதித்து வாய் நிறையச் சாப்பிடும் மக்கள், கம்யூனிஸ்ட்கள் சொல்வதைக் கேட்க மாட்டார்கள் என்பது உண்மை தான். சிறிது காலம் தடை செய்யப் பட்டிருந்து, பின்னர் புத்துயிர் பெற்ற கிரேக்க கம்யூனிசக் கட்சியும் பாராளுமன்ற அரசியல் சாக்கடையில் கலந்து விட்டது. இருப்பினும் கம்யூனிச அபாயம் கனவில் வந்து மிரட்டினாலும், கிரேக்க அரசு கலங்கிய அப்படியான சந்தர்ப்பங்களில்,” யாமிருக்கப் பயமேன்” என்று ஆட்சியைப் பிடித்தது இராணுவம்.

பாசிசவாதிகளும், தேசியவாதிகளும் நிறைந்திருந்த கிரேக்க இராணுவம், அயல் நாடான துருக்கியைக் காட்டி மக்களைப் பயமுறுத்தி கொண்டிருந்த்து. கிரீசுக்கும் துருக்கிக்கும் ஜென்மப் பகை. பிற்கால இஸ்லாமியப் படையெடுப்புகளுக்கு தலைமை தாங்கிய ஓட்டோமான் துருக்கியர்கள், முழு கிரீசையும் தமது சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக வைத்திருந்தார்கள். கிரேக்க கிறிஸ்தவ மதகுருக்கள் தலைமையில் துருக்கியருக்கு எதிரான விடுதலைப் போராட்டம் நடந்தது.

முதலாம் உலகப் போரின் பின்னர்தான் நவீன கிரேக்க தேசம் உருவானது. அன்றிலிருந்து இன்று வரை தன்னை துருக்கியின் முதன்மை எதிரியாகக் காட்டிக் கொள்வதில், கிரீசுக்கு அலாதிப் பிரியம். நிலப்பரப்பில், மக்கட்தொகையில் பல மடங்கு பெரிதான துருக்கியுடன் இராணுவரீதியாக மோதுவது சாத்தியமில்லை. இருப்பினும் அதைச் சொல்லிச் சொல்லியே ஆயுதங்களை வாங்கிக் குவித்தது. அன்று கிரீசுக்கு ஆயுதங்களை ஆயுதங்களை விற்றுக் கொண்டிருந்த மேற்குலக நாடுகள், இன்று பொருளாதார பிரச்சினைக்கு அதையே காரணமாகக் காட்டுகின்றன.

கிரேக்கர்களையும், துருக்கியரையும் மதம், மொழி போன்ற அம்சங்கள் பிரித்து வைத்திருந்தாலும், நெருங்கிய கலாச்சார ஒற்றுமைகளை கொண்டுள்ளனர். சராசரி கிரேக்கர்களின் மனோபாவத்தை, மேற்கு ஐரோப்பியருடன் ஒப்பிட முடியாது. கிறிஸ்தவ மதம் ஒன்றைத் தவிர வேறு எதுவும் அவர்களை பிற ஐரோப்பியருடன் பிணைப்பதில்லை. மத்திய கிழக்கு நாடுகளின் ஒன்றியம் உருவானால், கிரீஸ் அதில் மிகக் கச்சிதமாக பொருந்தும். ”லஞ்சம், ஊழல் கிரேக்க சமூகத்தை விட்டு இன்னும் அகலவில்லை, அது தான் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம்…” என்று ஐரோப்பிய பொருளாதார நிபுணர்கள் ஒப்பாரி வைக்கின்றனர். ஐரோப்பிய மத்திய வங்கியும் ஏதோ இப்போது தான் கண்டுபிடித்ததைப் போல பதறுகின்றது.

கிரீசில் சிறிது காலம் வாழ்ந்த அகதிகளுக்கு கூட இதெல்லாம் எப்போதோ தெரியும். அகதித் தஞ்சம் கேட்ட குற்றத்திற்காக சிறை சென்றதும், பணம் கொடுத்து விடுதலையானதும் பல அகதிகளுக்கு அவர்களது தாயகத்தை நினைவுபடுத்தின. சாதாரண கிரேக்க மக்கள் முன்னர் லஞ்ச, ஊழல் பிரச்சினை குறித்து முறையிடவில்லை என்பது உண்மைதான். நமது நாடுகளில் லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதித்துக் கொள்ளும் மத்திய தர வர்க்கத்தைப் போலத்தான் சராசரி கிரேக்கர்களும் வாழ்ந்தார்கள். லஞ்சப் பேய் ஒரு காலத்தில் தமது இருப்பிற்கே ஆப்பு வைக்கும் என்பதை காலம் தாழ்த்தித்தான் புரிந்து கொண்டார்கள்.

நல்லது. தற்போது எழுந்துள்ள பொருளாதார பிரச்சினைக்கு என்ன தீர்வு? ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை சீர்குலைக்கும் கிரீசை வெளியேற்றி விடலாம். மேற்குலக முதலீட்டு வங்கிகள், அரசாங்கத்தின் கடன்பத்திரங்களில் முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அரை வாசித் தொகை திருப்பித் தரப் படும் என்று ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது. மிகுதி அரைவாசி யார் தருவார்கள்? சந்தேகமில்லாமல் கிரேக்க பிரஜைகள் தான். தமது சம்பளத்தை, ஓய்வூதியத்தை குறைத்து, காப்புறுதிகளுக்கு அதிக கட்டுப்பணம் கட்டி, வங்கிச் சேவைக்கு அதிக கட்டணம் செலுத்தி, கடனை அடைப்பார்கள்.

இந்த நிபந்தனைகளுக்கு கிரேக்க பாராளுமன்றத்தில் ஆளும் சோஷலிசக் கட்சியும், தீவிர வலதுசாரிக் கட்சியும் ஒப்புதல் அளித்துள்ளன. இவையெல்லாம் கிரேக்க மக்களை ஆத்திரமுற வைத்ததில் வியப்பில்லை. இன்றைக்கும் தமது லாபத்தை குறைத்துக் கொள்ளாத முதலாளிகளும், ஆடம்பரங்களைக் குறைத்துக் கொள்ளாத பணக்காரர்களும் கடன் சுமையை பொறுப்பேற்க வேண்டும். தேசத்தின் தவறான முகாமைத்துவத்திற்கு இவர்கள் காரணமில்லையா? அதிகம் படித்த கணக்கியல் நிபுணர்கள் தானே கணக்கில் மோசடி செய்தார்கள்? சிக்கலான பொருளாதார சூத்திரமெல்லாம் சாதாரண பொதுமகனுக்கு புரியாத சிதம்பர ரகசியம். ஆயினும் அப்பாவி பொது மக்கள் தான் பொருளாதார பிரச்சினைக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.

கிரீசின் பொருளாதாரப் பிரச்சினை யூரோ நாணயத்தை பாதிக்கின்றது. இது ஒரு வகையில் நன்மையை தந்தாலும், நீண்ட கால நோக்கில் தீங்கு விளைவிக்கலாம். யூரோ நாணயத்தின் பெறுமதி குறைந்துள்ளதால் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளுவதற்கு வழிவகுத்துள்ளது. ஆயினும் பணக்கார ஐரோப்பிய நாடுகள் மட்டுமே இதனால் லாபமடைந்துள்ளன. தற்போது முன்பு இருந்ததைப் போல முன்னேறிய வட ஐரோப்பிய நாடுகள், பின் தங்கிய தென் ஐரோப்பிய நாடுகள் என்ற பிரிவினை மீண்டும் தோன்றியுள்ளது. கிரீஸ், தென் இத்தாலி, தென் ஸ்பெயின், தென் போர்த்துக்கல் என்பன, ஒரு காலத்தில் வறுமையில் வாடிய அபிவிருத்தியடையாத பகுதிகளாக இருந்தன. அந்தப் பகுதி மக்கள் வேலை தேடி செல்வந்த வட- ஐரோப்பிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தாராளமான நிதி வழங்கல், தென் ஐரோப்பாவின் அபிவிருத்திக்கு உதவியது. குறிப்பாக உல்லாசப் பிரயாணத் துறை, ரியல் எஸ்டேட் போன்ற பொருளாதார அபிவிருத்திகளே இடம் பெற்றன. அங்கேயெல்லாம் உல்லாசப் பயணிகளாக சென்றதும், வீட்டுமனை வாங்கியதும் வட- ஐரோப்பியர்கள் தான். பொருளாதார நெருக்கடியால் அவர்கள் தமது நாடுகளிலேயே தங்கி விட்டார்கள். அவர்களது அரசுகளும் கடும் பிரயத்தனப் பட்டு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டன. இதனால் என்ன நடந்தது என்றால், தென்னக ஐரோப்பிய பகுதிகளில் வேலைகள் பறி போயின. அந்த இடத்தில் வட ஐரோப்பிய மக்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.

யூரோ நாணய கூட்டமைப்பில் இருந்து கிரீசை வெளியேற்றுவதால், பிற ஐரோப்பிய நாடுகள் தமது பொருளாதாரத்தை பாதுகாக்க நினைக்கின்றன. கிரீசை தொடர்ந்தும் வைத்துக் கொள்வதற்காக ஆகும் செலவு, தற்போது வழங்கிய கடனை விட மூன்று மடங்கு அதிகம். அதனால் கிரீசை கழற்றி விடுவதே உத்தமம். கிரீசும் வேறு வழியின்றி தனது பழைய தேசிய நாணயமான டிராக்மாவை மீண்டும் கொண்டு வர வேண்டும். ஆனால் புதிய டிராக்மாவை யூரோவுக்கு பரிமாற்றம் செய்யும் போது, ஐரோப்பிய ஒன்றியம் குறைந்த விலையை நிர்ணயிக்கும். இதனால் கிரேக்கர்கள் வாங்கிய கடன், திருப்பிச் செலுத்தப் படும் காலம் வரும் போது இரண்டு மடங்காகி இருக்கும். அதனோடு வருடாந்தம் கட்ட வேண்டிய வட்டியையும் சேர்த்துப் பாருங்கள். கிரீஸ் திவாலானதால் பணக்கார ஐரோப்பிய நாடுகளும், ஐ.எம்.எப்.பும் புதிய வருமானத்தை தேடிக் கொண்டுள்ளன. அதை விட பெறுமதி குறைந்த டிராக்மாவை சுவீகரித்துக் கொண்ட கிரீசுக்கு வட- ஐரோப்பிய உல்லாசப் பிரயாணிகள் அதிகளவில் படையெடுப்பார்கள். சுருக்கமாக சொன்னால், மேற்கு ஐரோப்பிய நாடுகள் கீழே விழுந்த கிரீசை தமது காலனிய சுரண்டலுக்கு உட்படுத்தப் போகின்றன. ”கிரேக்க அரசாங்கம் தீவுகளை வெளிநாடுகளுக்கு விற்கப் போகின்றது,” என்ற வதந்தியும் மக்கள் மத்தியில் உலவுகின்றது.

சாதாரண கிரேக்க மக்களின் தார்மீக கோபாவேசம், வேலை நிறுத்த போராட்டங்கள், ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் மூலம் வெளிப்படுகின்றது. ஏதென்ஸ் சர்வதேச விமான நிலையத்தை மூடும் அளவிற்கு தொழிற்சங்கங்கள் வலுவாக உள்ளன. கிரீசில் போர்க்குணமிக்க தொழிற்சங்கம், கம்யூனிஸ்ட் கட்சி (KKE ) யினுடையது. ஆயினும் இன்றைய கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிக்கு தயாராக உள்ளதா என்பது கேள்விக்குறி. ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளராக இருப்பதே தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. பாசிச இராணுவ ஆட்சியின் கீழ் கடுமையாக பாதிக்கப்பட்ட கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி, தற்போது ஆயுதமேந்திய வன்முறைப் போராட்டத்திற்கு தயாராக இல்லை. அந்த இடத்தை வேறு சில இடதுசாரி இயக்கங்கள் பிடித்துள்ளன.

எழுபதுகளில் இராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்ததில் ஏதென்ஸ் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளது. மார்க்சிச-லெனினிசத்தையும், கூடவே அனார்கிசத்தையும் கொள்கையாக கொண்ட தீவிரவாத அமைப்புகள் உருவாகின. நீண்ட காலமாக பிடிபடாமல் இருந்த அதன் தலைவர்கள், மேற்குலகின் நிர்ப்பந்தத்தின் பின்னர் கைது செய்யப்பட்டனர். இத்துடன் கிரீசின் இடதுசாரி தீவிரவாதம் முடிவுக்கு வந்துவிட்டதாக, ஏகாதிபத்தியம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது. எல்லாம் சிறிது காலம் மட்டும் தான். அமெரிக்காவின் நிதி நெருக்கடி அவர்களின் உறக்கத்தை கெடுத்தது.

கிரீசில் முதலாளித்துவம் தனது சவக்குழியை தானே தோண்டிக் கொண்ருந்தது. பொய், சூதுவாது, மோசடி மூலம் மக்கள் மத்தியில் அம்பலப்பட்ட கும்பல் ஒன்று, காவல்துறையை ஏவி மக்கள் எழுச்சியை அடக்க முடியாது தத்தளிக்கின்றது. நிதி நெருக்கடியின் விளைவாக தன்னிச்சையாக தோன்றிய மக்கள் போராட்டம் அதிகார வர்க்கத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. இவையெல்லாம் ஒரு சில தினங்களில் ஓய்ந்து போகும் சலசலப்புகள் என்று தான் பலரும் நினைத்தார்கள். இரண்டு வருடங்கள் போராட்டம் தொடரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

மே 5 அன்று, ஏதென்ஸ் மாநகரில் மூன்று லட்சம் மக்கள் அணிதிரண்ட ஊர்வலம் சாதாரண நிகழ்வல்ல. அனைத்தையும் இழந்தவர்களின் கலகம், வங்கிகளை கலக்கமடைய வைத்தது. பன்னாட்டு நிறுவனங்கள், வங்கிகள், ஆடம்பர அங்காடிகள், என்று எவையெல்லாம் முதலாளித்துவத்தின் குறியீடாக உள்ளதோ, அவையெல்லாம் இலக்குகளாகின. அமைதிவழிப் போராட்டம் எதையும் சாதிக்காததைக் கண்ட இளைஞர்கள் பலர் தீவிரவாத வழியை நாடுகின்றனர். பெற்றோர்களால் தமது பிள்ளைகளை தடுக்க முடியவில்லை. அல்லது விரும்பவில்லை. அவர்களைப் பொறுத்த வரை இழப்பதற்கு எதுவுமற்றவர்கள். போராட்டத்திற்கு தள்ளப்பட்டவர்கள். அவர்களுக்கு நேற்று வரை அரசியல் வேப்பம்காயாக கசத்தது. இன்று அரசியல் அவர்களை பற்றிக் கொண்டுள்ளது.

கிரேக்க அரசுக்கும், முதலாளித்துவத்திற்கும் எதிரான போராட்டத்தை தீவிரமாக முன்னெடுப்பவர்கள் அனார்கிஸ்ட்கள் என்ற இடதுசாரி அமைப்பை சேர்ந்தவர்கள். அவர்களை ஒரு அமைப்பு என்று கூற முடியாது. அப்படி சொல்வதையே வெறுக்கிறார்கள். அவர்களுக்கென்று கட்சி, தலைவர், செயலாளர் என்று எதுவும் கிடையாது. ஒவ்வொருவரும் சுதந்திரமான தனிநபர்கள். ரகசிய வலைப்பின்னல் மூலம் சந்தித்துக் கொள்கிறார்கள். பொதுவான போராட்டத்தில் இணைந்து கொள்கின்றனர். செல்லிடத் தொலைபேசி, இன்டர்நெட் போன்ற நவீன தொழில்நுட்ப கருவிகளை போராட்டங்களை ஒழுங்குபடுத்த பயன்படுத்துகின்றனர்.

இதுவரை காலமும், இந்த சாதனங்களை எல்லாம், முதலாளித்துவம் தனது எதிரிகளை கண்காணிக்கவும், எதிரி நாட்டு அரசுகளை கவிழ்க்கவும் பயன்படுத்தி வந்தது. “ஆஹா, எழுந்தது பார் டிவிட்டர் புரட்சி.” என்று தமது சாதனைகளை தாமே பாராட்டிக் கொண்டிருந்தனர். ஆனால் என்றோ ஒரு நாள், மேற்குலக நாடுகளிலும் ”டிவிட்டர் புரட்சி” வெடிக்கும் என்று கனவு கண்டிருக்க மாட்டார்கள். கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின், போர்த்துக்கல், என்று எங்கெல்லாம் நெருக்கடி தோன்றுகிறதோ, அங்கெல்லாம் மக்கள் போராடக் காத்திருக்கிறார்கள். ஏனென்றால் நூறாண்டு கால போராட்டத்தின் ஊடாக பெற்றுக் கொண்ட உரிமைகளை, அவர்கள் ஒரே நாளில் இழக்கத் தயாராக இல்லை.



Thursday, May 06, 2010

ஏதென்சில் மீண்டும் மக்கள் எழுச்சி

ஏதென்ஸ் நகரில் ஆர்ப்பாட்டக்காரர்களால் இரண்டு வங்கிகள் தாக்கப்பட்டன. தாக்குதலால் எரிந்து கொண்டிருந்த வங்கி ஒன்றினுள் (Marfin bank)சில ஊழியர்களும் அகப்பட்டுக் கொண்டனர். மூன்று பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். "சர்வதேச பொருளாதார நெருக்கடிக்கு முதல் பலி!" அலறின ஐரோப்பிய நாளேடுகள். மரணத்திற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன்நிறுத்துவதாக சூளுரைத்தார் அதிபர் பபன்ற்றேயு. முதலாளித்துவஊடகங்களும்ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பழி சுமத்த ஆரம்பித்தன. ஆனால் வங்கி எரிப்பில் பலியான ஊழியர்களின் உடலைப் பார்க்க வந்த வங்கி மேலாளரை சுற்றிவளைத்தனர் பொது மக்கள். அவரை நோக்கி "கொலைகாரன்" என்று கோஷம் எழுப்பினர். (பார்க்க: வீடியோ 1)

பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி திவாலாகும் நிலையில் இருந்த கிரீசுக்குகடன் உதவி வழங்குவதென்று ஐரோப்பிய ஒன்றியம், .எம்.எப். என்பன தீர்மானித்துள்ளன. ஆனால் அதற்குப் பதிலாக கிரேக்க அரசாங்கம் சமூகநல செலவினங்களைக் குறைக்க வேண்டும். வேலை செய்து கொண்டிருந்தவர்கள், தமது சம்பளத்தில் திடீரென 300 யூரோ குறைந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர். ஓய்வூதியம் பெறுவோரின் வருமானத்தில் 100 யூரோ குறைந்தது. அதிகரித்துவரும் வேலையற்றோரின் நிலைமை கவலைக்கிடமானது. அவர்களுக்கு அரசு வழங்கி வந்த காப்பீடு ஏறக்குறைய கைவிடப்பட்டுவிடும். பொதுநலத்திட்டங்களான கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் இனிமேல் அரசசெலவினம் வெகுவாகக் குறைக்கப்படும். 110 பில்லியன் கடனுதவிக்கு பதிலாக, சுற்றுலாப்பயணிகளைக் கவரும் அழகான கிரேக்க தீவுகளை அரசாங்கம் விற்றுவிடும் என்று பொது மக்கள் மத்தியில்வதந்தி உலாவுகின்றது.

மே 5 ம் தேதி, ஐரோப்பிய கடனுதவியை ஏற்றுக் கொள்வதைப் பற்றி விவாதிக்க கிரேக்க பாராளுமன்றம் கூடியது. குறிப்பாக அரச செலவினங்களைக் குறைக்கும் நிபந்தனைகளை சுற்றியே விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நூறாண்டுகாலம் போராடிப் பெற்ற சமூக உரிமைகள், ஒரே இரவில் பறிபோவதைகண்டு வெகுண்டெழுந்த மக்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டனர். "நெருக்கடியால் ஏற்பட்ட செலவை பணக்காரர்களிடம் இருந்து அறவிடு!", "அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் திருடர்கள்" போன்ற சுலோகங்களைக் கொண்ட பதாகைகள் காணப்பட்டன. "(தேசம்) விலை போய்விட்டது" என்ற வாசகம் பொறிக்கப்பட்ட தட்டி எல்லோர் கைகளிலும்இருந்தது. ஏறத்தாள மூன்று லட்சம் மக்கள் ஏதென்ஸ் நகரில் குழுமியிருந்ததாக வெகுஜனஊடகங்களே தெரிவிக்கின்றன. விமான நிலையத்தில் எந்த விமானமும் பறக்கவில்லை. துறைமுகத்தில் படகுச் சேவைகள் யாவும் நிறுத்தப்பட்டதால், தீவுகள் வெளியுலகில் இருந்து துண்டிக்கப் பட்டன. உல்லாசப்பயணிகள் அதிகளவில் விஜயம் செய்யும் புராதன "அக்ரோபோலிஸ்" நகரம் கம்யூனிஸ்ட்கட்சியை (KKE) சேர்ந்த போராட்டக் காரர்கள் கட்டுப்பாட்டில்வைத்திருந்தனர். சுருக்கமாக, ஏதென்ஸ் நகரம் முழுவதும் ஸ்தம்பிதமடைந்திருந்தது.

மக்கள் திரள் பாராளுமன்றத்தினுள் நுழைய முயன்ற போதிலும், கலவரத்தடுப்பு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். பாராளுமன்ற வளாகத்தில் கடுமையான சண்டை நடந்தது. மக்கள் எழுச்சியின் முன்னர் அதிகாரத்தை இழந்துகொண்டிருந்த காவலர்கள், இடதுசாரிக் கட்சிகளின் அலுவலகங்களை உடைத்துநொறுக்கி தமது ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டனர். (பார்க்க: வீடியோ 2 ) ஆர்ப்பாடக் காரர்கள் போலிஸ் வாகனம் ஒன்றையும், வீதியில் நிறுத்தி வைக்கப்பட்ட ஆடம்பரக் கார்களையும் எரித்து நாசமாக்கினார்கள். தேசிய வரித்திணைக்களக் கட்டிடமும் பெட்ரோல் குண்டுவீச்சுக்கு இலக்காகி எரிந்தது. "வன்முறையில் ஈடுபடும் ஆர்ப்பாட்டக் காரர்கள், ஸ்கூட்டரில் வந்து தாக்குதல் நடத்துகின்றனர். செல்லிடத் தொலைபேசிகளை பயன்படுத்தி சிறந்த வலைப்பின்னலை ஏற்படுத்தி உள்ளனர். மக்கள் திரளை தமது கவசமாகபாவிக்கின்றனர்." இவ்வாறு தனது இயலாமைக்கு சப்பைக் கட்டுகட்டியது ஏதென்ஸ் போலிஸ் நிர்வாகம்.

கிரேக்க பொருளாதார பிரச்சினைகளும், அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டாங்களும் ஐரோப்பிய பங்கு சந்தை வர்த்தகத்தில் கிலியைதோற்றுவித்துள்ளது. யூரோநாணயத்தின் பெறுமதியை குறைத்துள்ளது. கிறீஸ், வழியில் போர்த்துக்கல், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளும் பாரியபொருளாதார பிரச்சினைகளை சந்தித்துள்ளன. திவாலாகும் நாடுகளை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து கழற்றிவிட்டு விட்டால் நல்லது, என்றும் சிலபொருளாதார நிபுணர்கள் ஆலோசனை கூறி வருகின்றனர். அப்படி செய்யாவிட்டால் டாலரை அடுத்து, யூரோநாணயமும் வீழ்ச்சியை நோக்கி செல்வதை தடுக்க முடியாது என்று எச்சரிக்கின்றனர்.

Video 1


Video 2

Monday, December 07, 2009

ஏதென்ஸ் நகரம் மீண்டும் எரிகின்றது


6 December 2009, கடந்த வருடம் கிறீஸ் பொலிஸ், தெருவில் நின்ற இடதுசாரி அமைப்பின் ஆதரவாளரான சிறுவனை சுட்டுக் கொன்றனர். அந்தக் கொலை பாதுகாப்புப் படையினருக்கு எதிரான மக்கள் எழுச்சிக்கு வித்திட்டது. கிரேக்க மக்கள் எழுச்சியின் ஓராண்டு நினைவுதினமான இன்று மீண்டும் கலவரம் மூண்டது. பத்தாயிரத்துக்குமதிகமானோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், கலகத் தடுப்பு பொலிசாருக்கு எதிரான கல்வீச்சு என்பனவற்றால் ஏதென்ஸ் நகரம் போர்க்களமாக காட்சியளித்தது. ஏதென்ஸ் தொழில்நுட்ப கல்லூரியை புரட்சிகர மாணவர்கள் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கின்றனர். கல்லூரியை சுற்றி பொலிஸ் முற்றுகையிட்டுள்ளது. இதற்கிடையே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக் கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மிகுதியை இங்கே இணைக்கப்பட்ட புகைப்படங்களையும், வீடியோவையும் பார்த்து தெரிந்து கொள்ளவும்.





Sunday, December 06, 2009

கிறீஸ்: டிசம்பர் புரட்சியின் ஓராண்டு நினைவுதினம்




6 Dec. 2008, கிரீஸின் ஊழல்மய அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த கிரேக்க உழைக்கும் வர்க்கப் போரின் ஓராண்டு நினைவுதினம் இன்று. ஏதென்ஸ் நகரின் பின்தங்கிய புறநகர்ப் பகுதி ஒன்றில், Alexis Grigoropoulos என்ற சிறுவனை பாசிச பொலிஸ்காரர்கள் சுட்டுக்கொன்றனர். அந்த சம்பவத்தால் ஆத்திரமுற்ற இளைஞர்களின் எழுச்சி கிறீஸ் நாட்டை புரட்சியின் விளிம்பில் தள்ளியது.

சீன தொலைக்காட்சி, கிரேக்க எழுச்சியை சிறப்பாக ஆவணப்படுத்தியுள்ளது. கிரீஸின் சமூகப் பிரச்சனைகளை அலசும் ஆங்கில மொழி பேசும் வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.


மேலதிக விபரங்களுக்கு முன்னைய பதிவுகளைப் பார்க்கவும்:
கிறீசிலிருந்து புரட்சிகர கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
தொட்டில் ஜனநாயகம் தொடர் புரட்சி வரை
நிதி நெருக்கடியால் புரட்சி வெடிக்குமா?
வர்க்கப் போர் இட்ட தீ: ஏதென்ஸ் எரிகின்றது
கிரேக்க மாணவர் எழுச்சி, ஏதென்ஸ் நகரம் தீப்பிடித்தது

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Latest News from Athens

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Arrests mark Greek riot anniversary

Greek police have arrested at least 100 youths n Athens, the capital, on the eve of planned demonstrations to mark a teenager's killing by police.

The arrests on Saturday took place after hundreds of people rallied in the central district of Exarchia, where Alexis Grigoropoulos, the 15-year old teenager, was gunned down by a police officer on December 6 last year.

The youths reportedly attacked police officers with stones and petrol bombs. In total, three cars had been destroyed, officials said.

In a raid in the western district of Keratsini, police detained at least 20 people in a suspected anarchist hideout where petrol cannisters, hammers and gas masks were found on the premises, police said.
(Al Jazeera, December 6, 2009)

University Occupations ahead of the 6th of December have kicked off
Thursday, December 3, 2009

In Athens, the School of Economics (one of the strongholds of last December’s uprising) was announced to be closed indefinitely by the university’s adminstration under the ridiculous pretext of the …swine flu. Indeed, once the announcement was made, tens of swines (aka greek police) did show up at the gates of the university, swearing, beating and tear-gassing the students who immediately tried to occupy the campus to keep it open, ahead of the 6th of December.

Sunday, March 15, 2009

கிரீஸின் மனித உரிமை மீறல்கள்: ஐரோப்பாவின் களங்கம்

கிரீஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆரம்ப கால அங்கத்துவ நாடுகளில் ஒன்று. அதே நேரம் ஐரோப்பாவில் மனித உரிமைகள் மீறப்படும் குற்றச் சாட்டுகளிலும் கிரீஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அண்மையில் ஆப்கானிய அகதி ஒருவரை போலிஸ் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்து கொன்ற சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளது. பெப்ருவரி 15 ம் திகதி இடம்பெற்ற அந்த ஆப்கானிய அகதியின் மரணம் தொடர்பாக, அவரின் உறவினர்கள் கிரேக்க போலீசாரை குற்றவாளிகளாக நிறுத்தி உள்ளனர். சம்பந்தப்பட்ட நபர் குளியறையில் தற்கொலை செய்து கொண்டதாக கிரேக்க போலிஸ் தெரிவித்துள்ளது. இருப்பினும் உடலில் காணப்படும் தழும்புகள், அந்த அகதியை போலீசார் சித்திரவதை செய்து கொன்றிருக்கலாம், அல்லது சித்திரவதை காரணமாக தற்கொலைக்கு தூண்டப்பட்டிருக்கலாம் என அவரின் உறவினர்கள் நம்புகின்றனர். கிரீஸ் நாட்டு சட்டப்படி போலிஸ் சித்திரவதை செய்வது சட்டவிரோதம் என்பதுடன், நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும்..

வழக்கை பதிவு செய்தவர்கள் சார்பான சட்டத்தரணி கூறும் போது, "சடலத்தை ஒப்படைக்க 6 மாதங்கள் எடுக்கலாம் என போலீசார் கூறியதாகவும், ஆனால் இறுதிக் கிரியைகளுக்காக உடலை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்புவதற்கு தருமாறு கேட்டிருப்பதாகவும்" தெரிவித்தார். கிரேக்க பொலிசாரினால் அகதிகள் அடிக்கடி தாக்கப்படுவதை சுட்டிக்காட்டும் "சர்வதேச மன்னிப்புச் சபை" போன்ற மனித உரிமை ஸ்தாபனங்கள், போலிஸ் மீதான நடவடிக்கை எடுப்பதில் உள்ள சட்டச் சிக்கல்களை கோடிட்டுக் காட்டியுள்ளன.

இதே நேரம் மதச் சகிப்புத்தன்மை இல்லாத மேற்குலக நாடாகவும் கிரீஸ் உள்ளது. ஓட்டோமான் துருக்கியர்கள் கிரீசை ஆட்சி செய்த காலத்திற்கு பின்பு, அதாவது 200 ஆண்டுகளுக்குப் பின்னர், இதுவரை புதிய மசூதிகள் எதுவும் அங்கே கட்டப்படவில்லை. உலகமயமாக்கப்பட்ட உலகில், கிரீசில் இருக்கும் சுமார் ஒரு லட்சம் முஸ்லீம்கள், தொழுகை நடத்துவதற்கு பள்ளிவாசல் இல்லாமல் சிரமப்படுகின்றனர். ஏதென்ஸ் நகரில் புறநகர்ப் பகுதி ஒன்றில் பாகிஸ்தானிய குடிவரவாளர்கள், ஒரு வீட்டின் நிலக்கீழ் அறையை மசூதியாக பயன்படுத்தி வந்துள்ளனர். அவ்விடத்தில் அதிகளவான பாகிஸ்தானியர்கள் கூடுவதைக் கண்ட அயலார்கள் பொலிசிற்கு முறைப்பாடு செய்தனர். போலிஸ் விசாரணையின் போது அந்த வீட்டில் சட்டவிரோத மசூதி இயங்குவதை கண்டறிந்த பின்னால், வீட்டின் உரிமையாளருக்கு 90000 யூரோக்கள் தண்டப்பணம் செலுத்துமாறு நகரசபை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

உள்ளூர் மனித உரிமைகள் நிறுவனமொன்று,இந்த விடயத்தில் அரசாங்கத்தில் இருக்கும் வலதுசாரிகள், இனவாதக் கண்ணோட்டத்தில் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த சில கிரேக்கர்கள், "எங்களை நிறவெறியர்கள் என்று அழையுங்கள். பரவாயில்லை. நாம் விட்டுக் கொடுக்க மாட்டோம்." என கருத்து தெரிவித்தனர். 2004 ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற போது, சர்வதேச கவனம் கிரீஸின் மீது குவிந்திருந்த வேளை, அரசே ஒரு மசூதி கட்டித் தருவதாக வாக்களித்தது. இருப்பினும் கிரேக்க கிறிஸ்தவ சபையினரின் கடுமையான எதிர்ப்புக் காரணமாக, அந்த திட்டம் பின்னர் கிடப்பில் போடப்பட்டது. அதே போல உலகம் முழுவதும் தனது செலவில் மசூதி கட்டிக் கொடுக்கும் சவூதி அரேபியாவின் கோரிக்கைக்கும், பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை.

கிரேக்க மக்களின் வாழ்க்கையிலும், அரசாங்கத்திலும், கிரேக்க கிறிஸ்தவ சபையின் செல்வாக்கு அதிகமாக காணப்படுவதால், அங்கே பிற மதங்களுக்கு சுதந்திரம் கிடைப்பதில்லை. இஸ்லாமிய மதத்திற்கு மட்டும் இந்த நிலைமை என்றில்லை. கிரீஸின் கூடப்பிறந்த தம்பி முறை கொண்டாடும் சைப்பிரசில், பௌத்தர்கள் தமக்கென புத்த கோயில் கட்ட விண்ணப்பித்த போது, "வாகன தரிப்பிட வசதி இல்லை" என்ற காரணம் காட்டி நிராகரிக்கப்பட்டது. இந்த நாடுகளில் இந்துக்கள் சொற்ப தொகையில் வாழ்வதால் அவர்களின் கோயில் கட்டும் ஆசையும் நிறைவேறப்போவதில்லை.

கிரீஸின் மனித உரிமைகள் பாதுகாக்கும் சட்டங்கள் நடைமுறைக்கு வர வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுத்து வருகின்றது. அந்த நாட்டில் புகலிடம் கேட்கும் அகதிகளில் ஒரு வீதமானோர் மட்டுமே அங்கீகரிக்கப்படுகிறனர். இருப்பினும் ஐரோப்பிய கோட்டைக்குள் நுழைய விரும்புவர்கள் கிரீசிற்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

Saturday, March 14, 2009

கிரீஸில் புரட்சிகர ஆயுதப்போராட்டம் ஆரம்பம்


ஏதென்ஸ் நகரத்தில், அமெரிக்காவின் சர்வதேச வங்கியான City Bank தலைமைக் கட்டிடத்தை கார்க் குண்டு வைத்து தகர்க்க முயற்சி. 125 கிலோ குண்டு வெடித்தாலும் சேதம் அதிகம் இல்லை. பத்திரிகைகளுக்கு அனுப்பபட்ட புரட்சிகர யுத்தம் என்ற அமைப்பின் உரிமை கோரல் கடிதம், "நிதி நெருக்கடிக்கு பொறுப்பான, சர்வதேச மூலதனத்தின் கிரிமினல் தலைமையகம் City Bank..." என்று தமது செயலை நியாயப்படுத்தி உள்ளது. இன்று லட்சக்கணக்கில் வேலையிழந்து வரும் மக்கள் பலர் புதிதாக துளிர் விடும் தீவிரவாதத்திற்கு ஆதரவு தெரிவிப்பது இரகசியமல்ல. புரட்சிகர யுத்தம் தனது கடிதத்தில், "முதலாளித்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்களையும், அரசியல்-பொருளாதார மேட்டுக்குடியினரையும், இலக்கு வைக்கப் போவதாக" எச்சரித்துள்ளது.

பெப்ரவரி மாதம் இதைத்தவிர வேறு சிறு வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அரசிற்கு ஆதரவு வழங்கும் பிரபல வெகுஜன தொலைக்காட்சி காரியாலயம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உரிமை கோரும் குறுந்தகடு, சில மாதங்களுக்கு முன்னர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட 15 வயது சிறுவனின் சமாதி மீது கண்டெடுக்கப்பட்டது. அதிலும் ஊழல் அரசிற்கு ஆதரவளிக்கும் ஊடகவியலாளருக்கு கொலைப்பயமுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்குப் பிற அரச அதிகாரிகள், தொழிலதிபர்கள் ஆகியோரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சில முன்னணி ஊடகவியலாளர்களும் தாக்குதல் பட்டியலில் அடங்குவதாக தெரிய வந்துள்ளது. ஏதென்ஸ் நகர ரயில் நிலையமொன்றில் தரித்து நின்ற ரயிலில் இருந்த பயணிகளை முகமூடி அணிந்த ஆயுததாரிகள் அப்புறப்படுத்தி விட்டு ரயில் பெட்டிகளுக்கு தீவைத்துள்ளனர். பிறிதொரு சம்பவத்தில், தென் மேற்குப் பகுதி ரயில் தண்டவாளங்கள் நாசமாக்கப்பட்டிருந்தன. இவற்றால் ரயில் திணைக்களத்திற்கு மில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.


எழுபதுகளில் ஆரம்பித்து அடுத்து வந்த பத்தாண்டுகளாக கிரீசை அதிர வைத்த நவம்பர் 17 என்ற புரட்சி இயக்க உறுப்பினர்கள் அனைவரும் தொண்ணூறுகளின் இறுதியில் கைது செய்யப்பட்ட பின்னர், கிரீசில் இனிமேல் தீவிரவாதம் தலையெடுக்காது என்றே பலரும் நம்பி இருந்தனர். ஆனால் கடந்த வருடம் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்ட கிரீஸ், கடந்த டிசம்பர் மாதம் தினசரி கலவரங்களை சந்தித்து வந்தது. கலவரங்களில் சில தீவிரவாத இளைஞர்கள் மட்டும் அல்லாது, பொது மக்களும் கணிசமான அளவில் பங்கு பற்றி இருந்தனர்.

பொலிசிற்கு கல்லெறியும் 12, 13 வயது சிறுவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறியது. தமது பிள்ளைகளுக்கு என்ன நடக்குமோ என்ற அச்சத்தில், தவிர்க்கவியலாது பெற்றோரும் அரச எதிர்ப்பு கலவரங்களில் பங்கேற்றனர். அரசு நிலமையை பொறுமையாக கையாண்டது. "இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி கலகம் செய்வார்கள்? அவர்களே களைத்துப் போய் கைவிட்டு விடுவார்கள்." என்று கணக்குப் போட்டது. வீதிகளில் பொலிசிற்கு கல் வீசும் போராட்டம் தற்போது ஓய்ந்து விட்டது உண்மை தான். ஆனால் அதுவே சில இளைஞர்களை ஆயுதமேந்தி போராடும் நிலைக்கு தள்ளி உள்ளது. "இந்த புதிய தலைமுறை புரட்சியாளர்கள் மிகவும் தீவிரமானவர்கள். அதனால் நாட்டில் மீண்டும் இரத்தம் சிந்தும் போர் வெடிக்கலாம்." என பல கிரேக்கர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Death threat to Greek media as terrorists plot bomb havoc
Greek terror group: Citibank attacked over crisis

Friday, December 19, 2008

கிறீசிலிருந்து புரட்சிகர கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கிரீஸ் மாணவர் எழுச்சி அலை, பத்து நாட்களாகியும் இன்னும் ஓயவில்லை. ஆளும் வலதுசாரி அரசாங்கம் ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாராளுமன்றத்தில் அறிவித்த பின்னரும் கலவரங்கள் தணியவில்லை. வாரக்கணக்காக தொடர்ந்த கலவரங்கள் காரணமாகத் தான், நாட்டில் ஊழல் ஒரு பிரச்சினை என்பதையும், அதனை இல்லாதொழிக்க வேண்டிய அவசியத்தையும் கிரீஸ் அரசாங்கம் உணர்ந்து கொண்டது. (நமது அரசாங்கங்களும், இது போன்ற கலவரங்கள் நடக்கும் வரை காத்திருக்கிறார்கள் போலும்.) இருப்பினும் முதலாளித்துவ பொருளாதார கொள்கைகள் தான் மாணவர் எழுச்சிக்கு காரணம் என்ற போதும், அதை தவிர வேறு பொருளாதார நடைமுறைகள் எதுவும் அரசாங்கத்திற்கு தெரியாதாம். அதனால் ஏற்கனவே பாதிப்படைந்த தேசப் பொருளாதாரத்தை, கலவரங்கள் மேலும் பின்னடைய வைத்துள்ளதாக கிரீஸ் பிரதமர் கவலைப்படுகிறார். ஏதென்ஸ் நகரத்தில் மட்டும் 400 க்கும் அதிகமான வர்த்தக ஸ்தாபனங்கள் தீக்கிரையாகியுள்ளன. நகரமத்தியில் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க வைக்கப்பட்டிருந்த பாரிய கிறிஸ்துமஸ் மரம் கூட தீயிடப்பட்டது. (இது பண்டிகைக் காலமாகையால், வியாபாரத்தை அதிகரிக்க ஐரோப்பிய நகரத்தெருக்களில் சோடனை அலங்காரங்கள் காணப்படும் ) பொருளாதார பிரச்சினை காரணமாக பெருமளவு மக்கள், பண்டிகை காலங்களில் செலவிட அதிக பணமில்லாமல் இருக்கும் வேளை, பணக்காரர்கள் மட்டும் வழமை போல வாங்கிக் குவிக்கின்றனர். இது போன்ற வர்க்க வேறுபாடு தான், கலவரக்காரர்களை மக்கள் ஆதரிக்க காரணம்.

டிசம்பர் 16 ம் திகதி, ஒரு இளைஞர் குழு தேசிய தொலைக்காட்சியின்(NET) செய்தி நேரத்தின் போது, அந்த நிலையத்தினுள் புகுந்தது. அப்போது அந்த தொலைக்காட்சி, கிரேக்க பிரதமரின் பாராளுமன்ற உரையை நேரடி ஒளிபரப்பு செய்துகொண்டிருந்தது. சிறிது நேரம் அந்த ஒளிபரப்பு தடைப்பட்டு, தொலைக்காட்சி கமெராக்கள் புரட்சி வாசகங்களை தாங்கி இருந்த இளைஞர்களை படம் பிடித்தன. "தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்தி விட்டு, வீதிக்கு வந்து போராடுங்கள்" என்று கிரேக்க மொழியில் எழுதியிருந்த வாசகங்களை, நாடு முழுவதும் மக்கள் கண்டுகளித்தனர். அந்த வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.


VIDEO of the Police Bus set on fire in Athens




________________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy

Tuesday, December 09, 2008

வர்க்கப் போர் இட்ட தீ: ஏதென்ஸ் எரிகின்றது


ஐரோப்பாவின் அழகிய நகரங்களில் ஒன்றான ஏதென்ஸ், நான்காவது நாளாக எரிகின்றது. வங்கிகள் யாவும் (வெளிப்புறமாக) அடித்து நொறுக்கப்பட்டு விட்டன. நுகர்வுக் கலாச்சாரத்திற்கு மக்களை அடிமைகளாக்கிய, ஆடம்பர வர்த்தக நிலையங்கள் சாம்பலாக கிடக்கின்றன. துப்பாக்கிகளை விற்பனை செய்யும் கடைகள் சில, இனந்தெரியாதவர்களால் சூறையாடப்பட்டுள்ளன. வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்பவர்களின் கைகளில் துப்பாக்கிகள் காணப்படுவதாக பொலிஸ் அறிவித்துள்ளது. தொழிற்சங்கங்கள் நாடளாவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுகின்றன. மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக, ஆசிரியர்களும் ஊர்வலமாக போகின்றனர். பல நகரங்களில் பொலிஸ் நிலையங்கள் சுற்றி வளைக்கப்படுள்ளன. நான்காவது நாளாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை சுற்றிவளைத்துள்ளனர். மக்களிடம் இருந்து அதிகாரவர்க்கத்தை பாதுகாக்கும் பணியில், பொலிஸ் படை அதிக அக்கறை காட்டுகின்றது.

தெருக்களில் போலீசுடன் மோதுபவர்களின் வயது குறைந்து கொண்டே போகின்றது. ஆர்ப்பாட்டக்காரரில் அதிகளவில் பதின்ம வயதினர் காணப்படுவதாக, வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக அரசியல்மயப்படுத்தப்படாத விடலைப்பருவ சிறுவர்கள், கண்ணில் காணும் கடைகளையும், மோட்டார் வண்டிகளையும் கொளுத்துவதே போராட்டம் என்று பிழையாக புரிந்து கொள்கின்றனர். அப்படியான சம்பவங்களை ஊக்குவிப்பது போல, பொலிஸ் வேடிக்கை பார்க்கின்றது.

அரசாங்கமும் அதைக்காட்டி மக்களையும், போராட்டக்காரரையும் பிரித்து வைக்க முயற்சிக்கிறது. என்ன அதிசயம்! முதலாளித்துவத்தின் சின்னங்களான, வங்கிகளும், பெரிய வணிக நிலையங்களும் எரிக்கப்படுவதை, ஊடகங்கள் அடக்கி வாசிக்கின்றன. ஆரம்பத்தில் இந்த சம்பவத்தை, ஒரு சில இடதுசாரி வன்முறையாளரின் கலகமாக சித்தரித்த பி.பி.சி. செய்தியாளர், நான்கு நாட்களுக்குப் பிறகு தான், கிறீசில் வர்க்கப்போராட்டம் நடப்பதாக திருவாய் மலர்ந்திருக்கிறார்.

பொலிஸ் வன்முறைக்கு பலியான ஒரு சிறுவனின் கொலை, தேசம் முழுவதையும் கிளர்ந்து எழ வைக்கும், என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது தான். ஆனால் கிறீசில் பகை முரண்பாடுகளை கொண்ட இரண்டு வர்க்கங்கள் இருப்பது, இப்போது தான் மேற்கத்திய ஊடகவியலாளருக்கு தெரிய வந்திருக்கிறது! ஐரோப்பிய மக்கள், "வர்க்க பேதங்களை மறந்து, சகோதர பாசத்துடன் வாழ்கிறார்கள்", என்ற பரப்புரை இவ்வளவு விரைவில் அம்பலப்படும், என்று அந்த ஊடகவியலாளரைப் போலவே பலர் கனவிலும் நினைக்கவில்லை. உலகப் பொருளாதார நெருக்கடி கிறீசையும் கடுமையாக பாதித்துள்ளது. வேலையற்றோர் பிரச்சினை, ஏழைகளின் தொகை அதிகரித்தல், கல்வி கற்பது பெரும் பணச்செலவாகி விட்டதால் ஏற்பட்ட மாணவரின் அதிருப்தி, போன்ற பல பிரச்சினைகள், கிறீசில் இருக்கின்றன என்ற உண்மை, பி.பி.சி. போன்ற ஊடகங்களுக்கு இப்போது தான் தெரிகின்றதாம்.

பெரும்பான்மை கிரேக்க மக்கள்,அரசாங்கத்தின் நவீனமயமாக்கல் என்ற பொருளாதார சீர்திருத்த கொள்கைகளால் வெறுப்படைந்து வருகின்றனர்.
அந்த அதிருப்தியின் வெளிப்பாடே, ஆர்ப்பாட்டக்காரருக்கு கிடைக்கும் மக்கள் ஆதரவும், அதனால் ஒதுங்கி நிற்கும் பொலிஸ் நடவடிக்கையும் அமைந்துள்ளது. பொது மக்களுக்கு சேவை செய்த அரசு நிறுவனங்களை, தனியார்மயமாக்கியதால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. பொறுத்துப் பார்த்த மக்கள் தான் பொங்கி எழுகிறார்கள். ஜனநாயகம், அமைதிவழி போராட்டம், என்று கூறி இன்றைய மக்கள் எழுச்சி அடக்கப்படுமா? அல்லது போராட்டத்திற்கு தலைமை தாங்குபவர்கள் புரட்சிகர மாற்றங்களை கொண்டுவருவார்களா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.




முன்னைய பதிவுகள்:
கிரேக்க மாணவர் எழுச்சி, ஏதென்ஸ் நகரம் தீப்பிடித்தது
தனியொருவனுக்கு உணவில்லையெனில் கடைகளை சூறையாடுவோம்


Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy

Sunday, December 07, 2008

கிரேக்க மாணவர் எழுச்சி, ஏதென்ஸ் நகரம் தீப்பிடித்தது


Greece, நேற்றிரவு (6 டிசம்பர்), ஏதென்ஸ் நகரில், இடதுசாரிகளின் கோட்டை என கருதப்படும் எக்சர்கியா பகுதியில் ஒரு 16 வயது சிறுவன் பொலிஸாரால் சுடப்பட்டு மரணமடைந்ததை தொடர்ந்து, கிறீஸ் முழுவதும் கலவரம் வெடித்தது. தெற்கே ஏதென்ஸ் நகரம் முதல் வடக்கே தெஸ்ஸலொநிகி வரை காட்டுத்தீ போல பரவிய இந்த கலவரத்தில் பல போலிஸ் வாகனங்கள் தாக்கப்பட்டன, வர்த்தக நிலையங்கள் எரியூட்டப்பட்டன. ஏதென்ஸ் நகரில் மட்டும் 16 வங்கிகள், 20 கடைகள், டசின் கணக்கான கார்கள் தீக்கிரையாக்கப்படன. "அவர்கள் தமது எதிர்ப்பை காட்ட உரிமை உண்டு, ஆனால் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது." எனக் கூறிய உள்துறை அமைச்சர், இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்ததாகவும் தெரியவருகின்றது. தொடர்ந்து துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தொடர்பான இரு போலீசார் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கிறீஸ் கலவரத்தின் பின்னணி என்ன? சம்பவம் நடந்த இடத்தில் வழமையான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் வாகனம் மீது பெட்ரோல் குண்டை வீசியதாலேயே, அந்த 16 வயது சிறுவன் சுடப்பட்டான், என்பது அரசதரப்பு வாதம். ஆனால் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த பிற இளைஞர்கள் வேறுவிதமாக கூறுகின்றனர். (அனார்க்கிச, கம்யூனிச) இடதுசாரிகளின் செல்வாக்கு மிக்க அந்த பகுதியில், அடிக்கடி காவல்துறையினர் அடாவடித்தனம் புரிந்துவருவது வழக்கம். அன்றைய தினம், சில இளைஞர்கள் பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், நிலைமை மோசமடைந்து, எங்கோ இருந்து வந்த கல் ஒன்று பொலிஸ் காரை பதம் பார்த்த வேளை, ஒரு பொலிஸ்காரர் இடுப்பிலிருந்த துப்பாக்கியை உருவி, ஒரு இளைஞனின் நெஞ்சுப் பகுதியை நோக்கி சுட்டதாகவும், அந்த இடத்திலேயே சூடு வாங்கிய இளைஞன் மரணமடைந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து வீதியில் கூடிய வாலிபர்களையும், பொதுமக்களையும் நூற்றுக்கணக்கான கலவரத்தடுப்பு போலீசார் சுற்றிவளைத்தனர். இருப்பினும் ஏதென்ஸ் நகரம் பற்றி எரிவதை மட்டும் அவர்களால் தடுக்க முடியவில்லை. இளைஞர்கள் பல இடங்களில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பொலிஸ் படையை எதிர்த்து சண்டை போட்டனர்.

அடுத்த நாள் பல வெகுஜன ஊடகங்கள் கலவர செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த போதும், கடந்த பல நாட்களாகவே கிறீஸ் நாடாளாவிய, அதேநேரம் ஒழுங்குபடுத்தப்பட்ட மாணவர் எழுச்சிக்கு முகம் கொடுத்து வருவதை செய்தியாக கூட தெரிவிக்கவில்லை. கிரேக்க அரசு கொண்டு வந்த கல்வி சீர்திருத்தத்தை எதிர்த்து நாடுமுழுவதும் பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள் போராடி வருகின்றனர். கடந்த இரு நாட்களாகவே, மருத்துவ பீட மாணவர்களும், மருத்துவ தாதிகளும் சுகாதார அமைச்சை ஆக்கிரமித்து, தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து, பதில் சுகாதார அமைச்சரை பணயக்கைதியாக பிடித்து வைத்துள்ளனர். (பார்க்க:Medical students held Deputy Health Minister hostage) புதிய கல்வி சட்டத்தை எதிர்த்த மாணவர் ஆர்ப்பாட்டத்தின் போது, போலீசார் ஒரு மாணவனை கைது செய்ததாகவும் தெரியவருகின்றது. அப்போதும் இதை எதிர்த்த மாணவர்கள் போலீசுடன் சண்டையிட்டுள்ளனர். ஆனால் ஊடகங்களுக்கு இதெல்லாம் செய்திகளல்ல. வர்த்தக நிலையங்களை, வாகனங்களை கொளுத்தினால் மட்டுமே கவனமெடுத்து செய்தி வெளியிடுவார்கள். (இதுவன்றோ பத்திரிகாதர்மம்! )

சில நாட்களுக்கு முன்னர் தான், குறைந்த கூலி கொடுத்து சுரண்டப்படும் வெளிநாட்டு தொழிலாளரும், எந்த உரிமைகளுமற்ற அகதிகளும் ஏதென்ஸ் நகரில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதிகாரிகள் குறைந்தளவு தஞ்ச விண்ணப்பங்களை மட்டுமே எடுப்பதாலும், பொலிஸ் நெருக்குதலில் ஒரு அகதி படுகாயமுற்றதாலும், ஆத்திரமடைந்த கும்பல் கலவரத்தில் இறங்கியதாக தெரியவருகின்றது. கிறீசிற்கு வருடந்தோறும் பல்லாயிரக்கணக்கான அகதிகள் வருகை தருகின்ற போதும், மிக மிக குறைந்தளவு விண்ணப்பங்களே ஏற்றுக் கொல்லப்படுவதாக மனித உரிமை ஸ்தாபனங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

மேலதிக விபரங்களுக்கு:
- Greece: 16year old murdered by police, heavy riots
- Medical students held Deputy Health Minister hostage
- Asylum seekers riot in Athens

Video: Greece Riots



கிறீஸ் தொடர்பான முன்னைய பதிவு:
தனியொருவனுக்கு உணவில்லையெனில் கடைகளை சூறையாடுவோம்
________________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.