Showing posts with label தகவல் தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தகவல் தொழில்நுட்பம். Show all posts

Wednesday, June 20, 2018

இரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே!

முதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் மாதிரி, இதுவும் குற்றச் செயல்களில் ஈடுபடும் தனிநபர்களே பிரச்சினைக்கு காரணம் என்பது போல சித்தரித்து திசைதிருப்பி விடுகின்றது. எந்த இடத்திலும் முதலாளித்துவம் மீதான விமர்சனம் கிடையாது.

பேஸ்புக் "இலவசமாக" கிடைப்பதற்குக் காரணம் தகவல் திருட்டு என்பது ஏற்கனவே நிரூபிக்கப் பட்ட விடயம். இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க் சுக்கர்பெர்க், அமெரிக்க காங்கிரஸ் விசாரணைக்கும் முகம் கொடுக்க வேண்டி இருந்தது. கூகிள் கூட தகவல் திருட்டில் ஈடுபடும் நிறுவனம் தான். இவ்வாறு பல பன்னாட்டு IT நிறுவனங்கள் சட்டபூர்வமான தகவல் திருட்டில் ஈடுபட்டிருக்கின்றன.

இந்தத் தகவல் திருட்டு, சட்டபூர்வமான வழிகளில் நடக்கிறது. உதாரணத்திற்கு நாம் புதிதாக பேஸ்புக் கணக்கு திறக்கும் பொழுது, அவர்களது நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாக சம்மதம் தெரிவிக்க வேண்டும். அப்போது தான் பாவிக்க முடியும். பேஸ்புக் நிறுவனம் நமது தகவல்களை மூன்றாம் நபருக்கு விற்பதற்கு அனுமதிப்பதும் நிபந்தனைகளில் ஒன்று.

நமது தகவல்களை திருடி விற்காமல், மார்க் சுக்கர்பெர்க் உலகில் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவராக வந்திருக்க முடியுமா? அமெரிக்க பங்குச் சந்தையில் குறிப்பிடும் அளவிற்கு பேஸ்புக் நிறுவனம் கோடிக் கணக்கான இலாபம் சம்பாதிக்க முடியுமா? சுருக்கமாக, இரும்புத்திரை திரைப்படத்தில் வரும் வில்லன் பாத்திரமான சத்தியமூர்த்தியின் (அர்ஜுன்) இடத்தில் மார்க் சுக்கர்பெர்க்கை வைத்துப் பார்த்தால் தவறேதும் இல்லை.

ஆனால், இரும்புத்திரை திரைப்படம் அதைப் பற்றிப் பேசாமால், ஸ்மார்ட் போன்களை ஹேக் செய்யும் கிரிமினல் கும்பல்கள் பற்றி மட்டுமே பேசுகின்றது. இது படத் தயாரிப்பாளர், இயக்குனரை பொறுத்தவரையில் "பாதுகாப்பான அரசியல்". இப்படித் தான், இது போன்ற பல அரசியல் படங்கள், மக்களை அரசியல் மயப் படுத்தாமல், பொழுதுபோக்கு அம்சங்களுடன் திருப்திப் பட வைக்கின்றன.

ஜோர்ஜ் ஓர்வெல் எழுதிய 1984 நாவலில், மக்கள் அனைவரையும் கண்காணித்து, அவர்களது சிந்திக்கும் திறனையும் மாற்றும் சக்திவாய்ந்த அரசு பற்றி எழுதி இருந்தார். இன்று அந்த நாவலில் கற்பனை செய்ததை விட பல மடங்கு அதிகமாக கண்காணிக்கப் படுகிறோம். "பெரியண்ணன் கண்காணிக்கிறான்" (Big brother is watching) என்று நாவலில் ஜோர்ஜ் ஓர்வெல் எழுதிய வாசகம் உண்மையாகி உள்ளது.

ஒரு வீட்டிற்குள், நான்கு சுவருக்குள் என்ன நடக்கிறது என்பதை மொபைல் போன், தொலைக்காட்சி பெட்டி என்பன மூலம் இலகுவாக உளவறிய முடியும். இதற்காகவே எல்லா ஸ்மார்ட் போன்களிலும் அமெரிக்கா ஒரு மென்பொருளை பொருத்தி விட்டுள்ளது. அண்மையில் ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்கல் கூட அமெரிக்காவினால் ஒட்டுக் கேட்ட விவகாரம் வெளியாகியது.

தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து மக்களின் வாழ்க்கையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தாலும்,அது மக்களை நுகர்வோர் எனும் விலங்குகளாக மாற்றிக் கொண்டிருக்கிறது. எமது விருப்பங்களை துல்லியமாக அறிந்து கொண்டு, அதற்கு ஏற்றவாறு பொருட்களை விளம்பரம் செய்கிறார்கள்.

நூறு வருடங்களுக்கு முன்பிருந்த முதலாளிகளுக்கு, வாடிக்கையாளர்களின் விருப்பங்களை அறிவது மிகப் பெரிய சவாலாக இருந்தது. மக்களின் விருப்பங்கள் மாறும் பொழுது, அல்லது குறையும் பொழுது நட்டம் ஏற்பட்டு, மூடப் பட்ட வணிக நிறுவனங்கள் பலவுண்டு. இனிமேல் அந்தப் பிரச்சினை இல்லை. 

தகவல் தொழில்நுட்பம் உலக மக்கள் அனைவரதும் மூளைகளை கட்டுப்படுத்துகின்றது. உலகில் மிகவும் சக்திவாய்ந்த பன்னாட்டு நிறுவனங்களே இந்தக் குற்றங்களில் பகிரங்கமாக ஈடுபடுகின்றன. அதை அமெரிக்கா உட்பட உலகில் எந்த அரசும் கட்டுப்படுத்துவதில்லை. தாராளமாக திருடலாம் என வசதி ஏற்படுத்திக் கொடுக்கப் பட்டுள்ளது.

இரும்புத்திரை திரைப்படத்தில் கடன் எனும் அடிமை விலங்கு, அதனால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றியும் விரிவாக காட்டப் படுகின்றது. இன்றைய காலத்தில் முதலாளித்துவ பொருளாதாரம் முழுவதும் கடனை நம்பியே இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு நாட்டு நாணயத்தின் மதிப்பை தீர்மானிப்பது தங்கம் அல்ல, கடன் என்பது பலர் அறியாத தகவல். 

"பணக்கார நாடுகள்" என்று கருதப்படும் மேற்கத்திய நாடுகளில் பெரும்பான்மை மக்கள், கடந்த பல தசாப்த காலமாக கடனில் தான் வாழ்கிறார்கள். வெளிநாட்டு மோகத்தில் மேற்குலகு செல்லும் நம்மவர்கள், இந்த உண்மையை அங்கு சென்ற பின்னர் தான் அறிந்து கொண்டனர்.

கடன் விடயத்தில் வங்கிகள் நேர்மையாக நடந்து கொள்வது போலவும், இடைத் தரகர்களான கிரிமினல்கள் ஏமாற்றுவது போலவும், இரும்புத்திரை திரைப்படத்தில் காட்டுவது மாதிரி எல்லா இடங்களிலும் நடப்பதில்லை. பத்திரங்களை பார்க்காமல் இலகு கடன் கொடுக்கும் விடயத்தில் வங்கிகளிலும் ஊழல் நடக்கிறது. 

இதற்கு சிறந்த உதாரணம், அமெரிக்காவில் 2008 ம் ஆண்டு ஏற்பட்ட சப் பிரைம் மோசடியும், அதனால் ஏற்பட்ட உலக நிதி நெருக்கடியும் ஆகும். தகுதி இல்லாதவர்களுக்கு கடன் கொடுத்த மோசடி காரணமாக, Lehman Brothers போன்ற அமெரிக்காவின் மிகப் பழமையான வங்கிகள் கூட திவாலாகின. இதே பிரச்சினை காரணமாக, ஒரு குட்டி ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் வங்கிகள் திவாலான படியால், அந்த நாட்டுப் பொருளாதாரமே ஸ்தம்பிதம் அடைந்தது.

தற்போது வரும் பல தமிழ்த் திரைப்படங்கள், மக்கள் எதிர்நோக்கும் அரசியல், பொருளாதார பிரச்சினைகள் பற்றிப் பேசுகின்றன. அந்தளவுக்கு ஒரு குறைந்த பட்ச விழிப்புணர்வு உருவாகி உள்ளது. இருப்பினும், பொழுதுபோக்கு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாலும், தனி நபர்களை வில்லன்களாக காட்டுவதாலும், திரைப்படம் சொல்ல வரும் செய்திகளை மக்கள் கவனத்தில் எடுக்காமல் விடுகின்றனர்.

இறுதியாக, இந்தத் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து அல்லது வாங்கி வெளியிட்டுள்ளமை ஒரு வேடிக்கையான முரண்நகை. மொபைல் போன் வாடிக்கையாளர்களின் பணத்தை திருடுவது முதல், கிரிமினல்களின் குற்றச் செயல்களுக்கு உடந்தையாக இருந்தது வரையில், லைக்கா நிறுவனம் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன.

இதிலே வேடிக்கை என்னவென்றால், இரும்புத்திரை படத்தில் காட்டப்படும் தகவல் திருட்டை லைக்கா நிறுவனமே செய்து கொண்டிருக்கிறது. ஐரோப்பாவில் லைக்கா சிம் கார்ட் "இலவசமாக" கொடுக்கும் பொழுது, அதில் ஒரு கவர்ச்சியான விளம்பரம் இருக்கும். லைக்காவின் இணையப் பக்கத்தில், மொபைல் போன் இலக்கத்துடன், எமது பெயர், முகவரி போன்ற விபரங்களை பதிவு செய்தால் 5-10 யூரோ/பவுன்ஸ் "இலவசமாக" கொடுக்கிறார்கள்.

இந்த "இலவச" சலுகைக்கு ஆசைப்பட்டு, பல பாவனையாளர்கள் தமது பெயர் விபரங்களை பதிவு செய்வார்கள். லைக்கா நிறுவனம் அவற்றை ஏதாவதொரு கால் சென்டருக்கு நல்ல விலைக்கு விற்று விடும். லைக்கா விற்பனை செய்யும் ஒரு தகவலின் விலை நூறு யூரோ/பவுன் என்று வைத்துக் கொண்டாலும், நமக்கு "இலவசமாக" தரும் பணம் அதில் பத்தில் ஒரு பங்கு கூட இல்லை. இந்த விபரங்களை லைக்காவில் வேலை செய்த ஒருவரே என்னிடம் தெரிவித்திருந்தார்.

சுருக்கமாக, இரும்புத்திரை படத்தில் சொல்லப்படும் குற்றச் செயலை, அதைத் தயாரித்த லைக்கா நிறுவனமே செய்கிறது. அந்தத் திரைப்படத்தின் கதை தனது நிறுவனத்தின் மோசடிகளை அமபலப் படுத்துகிறது என்று தெரிந்து கொண்டே, லைக்கா நிறுவனம் திரைப்படத்தை வெளியிட்டுள்ளது.

தனிப்பட்ட வாழ்வில் முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்கள் கூட, இந்த முதலாளித்துவ எதிர்ப்புத் திரைப் படத்தை இரசித்து பார்த்து விட்டு பாராட்டுகிறார்கள்! இதிலிருந்தே, தமிழ் மக்களின் அரசியல் அறிவு எந்தளவு மந்தமாக இருக்கிறது என்பது புரியும். மக்களின் அறியாமை தான் அரசியல்வாதிகளின் முதலீடு என்று சொல்வார்கள். லைக்கா வெளியிட்ட  இரும்புத்திரையும் அந்த ரகம் தான். 

Tuesday, February 11, 2014

"இணையப் புரட்சியாளர்களுக்கு அஞ்சும் அதிகார வர்க்கம்!" - ஒரு நேர்காணல்


“இணையம் எமது சமுதாயத்தை தலை கீழாக மாற்றி வருகின்றது. முன்னொருபோதும் இல்லாதவாறு, சாமானிய மக்களின் கருத்துக்களும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. ஸ்னோடன் என்ற தனி மனிதன், ஒபாமாவுக்கு சவாலாக உருவெடுத்துள்ள அதிசயம், வரலாற்றில் இதற்கு முன்னர் நடந்ததில்லை. இது நமது சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள மாபெரும் ஜனநாயகப் புரட்சி. இணையப் புரட்சியாளர்களின் நடவடிக்கைகள் ஒரு பக்கம் கற்பனாவாதமாக தோன்றினாலும், மறு பக்கம் அதிகார வர்க்கத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன.” - மிஷேல் செரெஸ்

83 வயதான பிரெஞ்சு தத்துவவியல் பேராசிரியர் மிஷேல் செரெஸ் (Michel Serres), புதிய தலைமுறை இணையப் புரட்சியாளர்களை வரவேற்று, ஒரு நூலை எழுதி இருக்கிறார். Pettite Poucette (சிறிய சுண்டுவிரல்) என்ற அந்த நூல், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டதாக நான் இன்னும் அறியவில்லை. அதன் டச்சு மொழிபெயர்ப்பு அடுத்த மாதம் வெளிவரவுள்ளது. இதற்கிடையில், நெதர்லாந்தில் வெளியாகும் Vrij Nederland சஞ்சிகை, அவரது பேட்டி ஒன்றைப் பிரசுரித்துள்ளது. தமிழ் வாசகர்களுக்காக, நான் அதனை  தமிழில் சுருக்கமாக மொழிபெயர்த்துள்ளேன்.

______________________________________________________________________________

1930 ம் ஆண்டு பிறந்த செரெஸ், ஸ்பெயின் உள்நாட்டு யுத்தம், இரண்டாவது உலகப்போர், பிரான்சின் இரண்டு காலனிய போர்களையும், அவரது வாழ்நாளில் பார்த்து விட்டார். தனது பிறப்பில் இருந்து, முப்பது வயது வரையில் போர்களை மட்டுமே கண்டு வளர்ந்ததாக கூறுகினார். தற்கால பத்திரிகைகள், போர்கள், பயங்கரவாத தாக்குதல்களுக்கு, தேவையற்ற அளவு அதிக முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிப்பதாக குறைப்படுகின்றார். உண்மையில், உலகம் முன்பிருந்ததை விட பெருமளவு முன்னேறி விட்டதாகவும், பயங்கரவாதம் குறிப்பிடத் தக்க அளவு தாக்கத்தை உண்டாக்கவில்லை என்றும் கூறுகின்றார்.

செரெஸ் சுயமாக படித்து முன்னேறிய ஒருவராக தன்னைத் தானே சொல்லிக் கொள்கிறார். (கணிதவியல், இலக்கியம், தத்துவியல் கற்றவர். பாரிஸ் சோர்போன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார். அமெரிக்காவில் பத்து வருடமும், கோஸ்டாரிகா, தென் கொரியா, மாலி, மெக்சிகோ ஆகிய நாடுகளில் விஜயம் செய்யும் விரிவுரையாளராகவும் பணியாற்றி உள்ளார்.) பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொடுக்காத பலவற்றை, அனுபவத்தில் அறிந்து கொண்டதாக கூறுகின்றார். அவரது கூற்றில்: “அறிவு மகிழ்ச்சியை அளிக்கின்றது. அறிவு விடுதலை செய்கின்றது.”  மிஷேல் செரெஸ் தனது  என்பது வயதில், இணையப் பாவனை பற்றி ஒரு நூலை எழுதி வெளியிட்டதில் ஆச்சரியம் எதுவுமில்லை. 

இந்த வயதிலும் தளராமல், சமூக வலைத்தளங்களில் செயற்பட்டு வருகின்றார். அவருக்கென்று ஒரு வலைப்பூ (Blog) வைத்திருக்கிறார். அமெரிக்க தொழில்நுட்ப பூங்காவான சிலிக்கான் வலியில் பணியாற்றும் பொழுதே இணையத்தை பாவிக்கத் தொடங்கி விட்டதாகவும், தற்போது தனது பேரப் பிள்ளைகள் மூலம் நிறையக் கற்றுக் கொள்வதாகவும் கூறுகின்றார்: “அறிவும், விஞ்ஞானமும், பெற்றோர் மூலம் பிள்ளைகளுக்கு கடத்தப் படுகின்றது. ஆனால், தொழில்நுட்பத்தை பெற்றோர்கள் பிள்ளைகளிடம் இருந்து கற்றுக் கொள்கிறார்கள்.”

  • கேள்வி: உங்களது நூலில், பிரஜைகள் தலைவர்களாவதாகவும், இளைய சமுதாயம் அதிகார பலத்தை தங்கள் கையில் எடுத்திருப்பதாகவும், பழைய அதிகார வர்த்தினரின் பலம் நொறுங்கி வருவதாகவும் குறிப்பிட்டு உள்ளீர்கள். அதன் அர்த்தம் என்ன?


பதில்: தொழில்நுட்பம், (சமுதாய)  மாற்றத்தை கொண்டு வந்திருந்தாலும், அதில் குறைபாடுகளும் உள்ளன. கூகிள் உலகம் முழுவதும் உளவு பார்க்க முடியும். அவர்கள் அதை செய்து கொண்டிருக்கிறார்கள். அங்கெலா மெர்க்கலின் தொலைபேசி உரையாடல்களும் ஒட்டுக் கேட்கப் பட்டன. அனால், இவை அனைத்தும் தனி ஒரு மனிதனின் முயற்சியால் வெளியில் தெரிய வந்தது. அதன் அர்த்தம், ஜனாதிபதி ஒபாமா அளவிற்கு, ஒரு தனி மனிதனின் செல்வாக்கு வளர்ந்துள்ளது. ஏனென்றால் அவர் தான் ஒட்டுக் கேட்கும் உளவுத் தகவல்களை வெளிக் கொணர்ந்தார். ஒரு தனி மனிதன்! அது நானாக இருக்கலாம், நீங்களாக இருக்கலாம். இது ஒரு நவீன ஜனநாயகம்.

  • கேள்வி: அது சில நேரம் அச்சத்தை உண்டாக்குகின்றது.


பதில்: ஆமாம், அச்சமும் தான். ஆனால், உலகில் ஒரு புதிய சமநிலை தோன்றி உள்ளது. உலகின் மிகப் பெரிய சக்தி வாய்ந்த தலைவர்களுக்கு சவாலாக, ஒரு தனி மனிதன் வந்துள்ளான். ஒரு தனி மனிதனால் அதிகாரத்தை எதிர்த்து போராட முடிகின்றது. அது ஒரு கற்பனாவாதமாக தெரிந்தாலும், அதே நேரத்தில் அச்சத்தையும் உண்டாக்குகின்றது.

  • கேள்வி: ஆகவே, உங்களது நூலில் எழுதி இருப்பதைப் போல, நீங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கின்றீர்கள்.


பதில்: ஆமாம். இந்தப் போக்கு, மேலதிக ஜனநாயகத்தையும், சமத்துவத்தையும் கொண்டு வரும் என்று நம்புகின்றேன். எமது சமுதாயம் ஈபில் கோபுரம் போன்று கட்டப் பட்டுள்ளது. உச்சியில் ஒரு சில அரசியல்வாதிகள் இருந்து கொண்டு, கீழே இருக்கும் மக்கள் திரளின் மேல் தமது முடிவுகளையும், கொள்கைகளையும் திணித்துக் கொண்டிருக்கிறார்கள். உச்சியில் ஒரு சில ஊடகவியலாளர்கள் இருந்து கொண்டு, கீழே இருக்கும் ஏராளமான மக்களுக்கு தகவல்களை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். 

நான் நினைக்கிறேன், கணணி யுகமானது, அறிவுடைமையை ஜனநாயக மயப் படுத்துவதிலும், சமுதாயத்தை மாற்றுவதிலும் முக்கிய பங்காற்றியுள்ளது. ஒரு நூறு வருடங்களுக்கு முன்னர் கூட, ஆட்சியில் இருந்த அரசன், அல்லது ஜனாதிபதிக்கு, தனது விவசாயக் குடிமக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தெரியாது. தற்போது ஒரு விவசாயிக்கு, உலக தானிய விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கம் பற்றி தெரிந்திருக்கிறது. அது ஜனநாயக உறவுகளில் மாற்றத்தை கொண்டு வரும்.

குடிமக்கள் ஒரு வல்லாட்சிக்கு வளைந்து கொடுக்க தயாராக இல்லை. பழைய உலகம் எம் கண் முன்னால் நொறுங்கிக் கொண்டிருக்கிறது. எமக்கு நல்லது எது, கெட்டது எது என்று கூறிக் கொண்டிருந்த அரசியல்வாதிகள். தாங்கள் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதையே வாசிக்க, கேட்க, பார்க்க வேண்டுமென்று எதிர்பார்த்த ஊடகங்கள். அவர்களின் காலம் போய் விட்டது. குடி மக்களான நாங்கள், அடிமைகளோ அல்லது புத்தி சுவாதீனமற்றவர்களோ அல்ல. எங்களுக்கும் ஏதோ கொஞ்சம் தெரியும், அல்லது நன்றாகத் தெரியும் என்று நினைத்துக் கொள்கிறோம்.

தேசங்களும், தேவாலயங்களும் பல நூறாண்டுகளாக யுத்தம் செய்யும் இயந்திரங்களாக மட்டுமே இருந்து வந்துள்ளன. அதை விட, இன்னொருவரின் உயிரைக் கேட்காத, மாய உலகில் வாழ்வதை நான் விரும்புவேன். ஆனால், சமுதாய கட்டுமானம் உடையுமாக இருந்தால், தன் முனைப்பு அதிகமான தனி மனிதர்கள் அல்லவா எஞ்சி இருப்பார்கள்? அப்படி நினைத்தால், இதற்கு முந்திய தலைமுறையை ஒரு தடவை திரும்பிப் பாருங்கள். அவர்கள் எந்தளவுக்கு கூடி வாழ்ந்திருக்கிறார்கள்? விவாகரத்துகள் பெருகின. இரண்டாம் உலகப் போருக்கு பிந்திய அரசியல் கட்சிகள், எந்தக் கொள்கையும் இல்லாத வெறும் கோதுகளாக மட்டுமே இருந்து வருகின்றன. அதிகார வர்க்கத்தை சொகுசான பஞ்சு மெத்தையில் வைத்திருப்பதற்காக, ஓட்டு வாங்கும் இயந்திரங்களாக மட்டுமே அரசியல் கட்சிகள் உள்ளன.

இணையத்தில், வலைப்பூவில் தனது அரசியல் கருத்தை வெளியிடும் ஒருவருக்கு கிடைக்கும் ஓட்டுகள், ஒரு அரசியல் கட்சி தேர்தலில் பெற்ற ஓட்டுகளை விட அதிகமாக உள்ளது. இது எதைக் காட்டுகின்றது? அவர்கள் உங்களையும், என்னையும் போன்று சாதாரண மக்கள். ஆனால், அரசியல்வாதிகளின் பேச்சை விட, அவர்களின் கருத்துக்களை கேட்போரின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. இது, ஒரே சமயத்தில், ஆச்சரியத்திற்கு உரியதாகவும், கவலையளிப்பதாகவும் உள்ளது.

இந்த நிலைமை, இன்னும் இருபது, முப்பது வருடங்களில் எத்தகைய விளைவுகளை கொண்டு வரும்? ஒரு புதிய வகை அரசியல் தோன்றலாம். ஆனால், என்ன வகை? அது பற்றி சொல்லத் தெரியவில்லை.

தொழில்நுட்ப வளர்ச்சியை நாங்கள் நன்மையாக எடுத்துக் கொள்ள வேண்டும். நல்ல திசையில் வழிநடத்தினால், தொழில்நுட்ப மாற்றத்தினால் நன்மையை உண்டாக்கலாம். எனது பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் இந்தப் புதிய உலகில் உலாவிக் கொண்டிருக்கிறார்கள். புதியதோர் உலகைப் படைப்பதற்கு, நாங்கள் அவர்களுக்கு உதவ முடியும். இது தத்துவ அறிஞர்களின் கடமையாக இருக்க வேண்டும். ஆனால், ஒரு சிலர் மட்டுமே அதில் ஆர்வமாக உள்ளனர்.

19 ம் நூற்றாண்டு தத்துவ அறிஞர்களிடம் ஒரு அரசியல் நோக்கு இருந்தது. உதாரணத்திற்கு: சோஷலிசம். சிலர் அதனை ஒரு கற்பனையான கோட்பாடாக கருதி இருக்கலாம். ஆனால், அதற்குப் பதிலாக, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில், சமூக காப்புறுதி, ஏழைகளுக்கு உதவுதல் போன்ற திட்டங்கள் கொண்டு வரப் படவில்லையா? தற்போதும் சமுதாயம் திரும்பவும் மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால், அது எதை நோக்கி செல்கின்றது என்பதை தீர்மானிக்க முடியாது. மரபு ரீதியாக, தத்துவ அறிஞர்கள் புத்தகங்களை மட்டுமே நம்பி இருந்தார்கள். கணனித் திரைகளை அல்ல. அவர்கள் தம்மை காலத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள வேண்டும்.

  • கேள்வி: நீங்கள் அதைச் செய்கிறீர்கள் தானே?


பதில்: நான் பல வருட காலமாக, என்னை அதில் ஈடுபடுத்தி வந்திருக்கிறேன். ஐம்பது வருடங்களுக்கு முன்னர் “ஹெர்மெஸ்” என்ற தலைப்பின் கீழ், நான் ஒரு புத்தகம் எழுதினேன். கிரேக்க புராணத்தின் படி, ஹெர்மஸ் என்பவன் கடவுளின் தூதுவன் அல்லது தகவல் தொடர்புக்கான தெய்வம். நெருப்பு அல்லது தொழிற்துறை புரட்சியின் தெய்வமான புரொமதெயுசிடம் இருந்து, ஹெர்மஸ் எமது சமுதாயத்தின் அதிகாரத்தை கைப்பற்றுவதாக எழுதி இருந்தேன். ஆனால், அன்றைக்கு நான் சொன்னதை யாரும் கேட்கவில்லை. ஹா… ஹா… ஹா…

  • கேள்வி: கணணி மயமாக்கல் எமது மூளை வளர்ச்சியில் பங்காற்றுவதாக சொல்கிறீர்கள்.


பதில்: நாங்கள் ஒரு புத்தகத்தை வாசிக்கும் பொழுது, எமது மூளையில் எந்தெந்த நரம்புகள் இயங்க ஆரம்பிக்கின்றன என்று,  விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தார்கள். அந்த குறிப்பிட்ட நரம்புகள், வாசிப்பதற்கு முன்னர் என்ன செய்து கொண்டிருந்தன? ஒன்றுமேயில்லை! அதனால், நாங்கள் தகவல்களை பெற்றுக் கொள்ளும் பொழுது, எமது மூளையும் வளர்ச்சி அடைகின்றது. இது எமது சிந்தனா முறையில் ஒரு புரட்சியை உண்டு பண்ணலாம். வரலாற்றில் ஏற்கனவே இது போன்ற இரண்டு புரட்சிகள் நடந்துள்ளன. எழுதும் கலை கண்டுபிடிக்கப் பட்ட பொழுதும், நூல்களை அச்சடிக்கும் கலை கண்டுபிடிக்கப் பட்ட பொழுதும், எமது சிந்தனா முறை மாற்றமடைந்தது.

  • கேள்வி: எல்லோரும் எல்லோருடனும் தொடர்பாடுவதாக உங்களது நூலில் புகழ்ந்து எழுதி இருக்கிறீர்கள். ஆனால் இந்த தொடர்பாடல் மேலோட்டமானது அல்லவா? 


பதில்: உண்மை தான். இதெல்லாம் கண்ணுக்கு புலப்படாத கற்பனையான தொடர்பாடல் தான். ஆனால், முந்திய காலத்திலும் அப்படித் தான் இருந்தது. தந்தி, தொலைபேசி மூலமான தொடர்பாடல் எப்படி நடைபெற்றது? கண்ணுக்கு புலப்படாத தொடர்பாடல் எப்போதும் மேலோட்டமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் தொலைபேசி மூலம், ஒருவரை ஒருவர் பார்க்காமலே, மறுமுனையில் இருப்பவருடன் ஆழமான உரையாடல் ஒன்றை நடத்தலாம். அதே நேரம், உங்களுக்கு எதிரில் இருப்பவருடனான உரையாடல் மேலோட்டமாக இருக்கலாம். நான் இளைஞனாக இருந்த காலத்தில், சினிமா நட்சத்திரமான இங்க்ரிட் பெர்க்மான் மீது காதல் வயப் பட்டிருந்தேன். அவளை நான் எனது வாழ்கையில் ஒரு நாளும் நேரில் காணவில்லை. ஆனால், நான் மானசீகமாக காதலித்தேன்.

  • கேள்வி: அறிவு எல்லா இடங்களிலும் வியாபித்துள்ளதாக நீங்கள் உணர்கிறீர்கள். ஆனால், அது ஒரு குழப்பகரமான சூழ்நிலையாக தோன்றவில்லையா? நாலாபுறமும் இருந்து, தகவல்கள் குண்டு மழையாகப் பொழிகின்றன. இணையமானது ஒரு பெரிய நீர்த் தேக்கமாக உள்ளது.


பதில்: தகவலும், அறிவும் ஒன்றல்ல. அணுப் பௌதிகவியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், விக்கிபீடியாவில் தேடினால் அது பற்றி நிறைய அறிந்து கொள்ளலாம். அதை வாசித்தாலும், எனக்கு ஒன்றுமே புரியாது. அதாவது, எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது. ஆனால், அறிவு கிடைக்கவில்லை. பெருங் குழப்பம்? ஐயா, நீங்கள் ஒரு தடவை நூலகத்திற்கு சென்று பாருங்கள். அங்கேயும் நீங்கள் குழம்பிப் போகலாம். புத்தகங்கள் அகர வரிசைப் படி அடுக்கி வைக்கப் பட்டுள்ளன. அது மட்டும் தான். அறிவும் ஒரு காலத்தில் ஒழுங்கு படுத்தப் படாமல் கிடந்தது. அரிஸ்டாட்டில், லைப்னிஸ், எராஸ்முஸ்… மிகப் பெரிய தத்துவ அறிஞர்கள் அறிவை ஒழுங்கு படுத்தும் முயற்சியில் இறங்கினார்கள். ஆனால், அது அனேகமாக சாத்தியப் படாத வேலை.

  • கேள்வி: ஆனால், ஊடகங்கள் இப்போது அந்த வேலையை செய்கின்றன. (தகவல்களை) தெரிவு செய்கின்றன, வகைப் படுத்துகின்றன, விளக்குகின்றன.


பதில்: ஊடகங்கள் மக்களுக்கு தகவல்களை கொடுப்பது நல்ல விடயம் தான். ஆனால், அதில் தீமையும் உள்ளது. எனக்குப் பதிலாக இன்னொருவர், தகவல்களை வகைப் படுத்தி, எனக்குத் தருகிறார். இணையத்தில் நானாகவே தெரிவு செய்ய முடியும். எனக்கு வேண்டிய தகவல்களை வகைப் படுத்தி பெற்றுக் கொள்ள முடியும். நீங்களாகவே ஒரு தகவலை தேடி எடுத்து அறிந்து கொள்வதில் இருந்து தான், உண்மையான அறிவு வளர்கின்றது.

  • கேள்வி: ஆனால், குடிப்பதற்கு கடலளவு தண்ணீர் உள்ளது. நல்ல தகவல்களும், தவறான தகவல்களும் ஒன்று கலந்து உள்ளன. பொய்கள் பரப்பப் படுகின்றன. எல்லாம் தெரிந்த மனிதர்களும் தவறான விக்கிபீடியா கண்டுபிடிப்புகளால் நோய் வாய்ப் படலாம். 


பதில்: மனிதர்கள் தவறிழைகிறார்கள், மிகைப் படுத்தி சொல்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள். உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளலாம். இன்னொருவரையும் ஏமாற்றலாம். உங்களுக்கு ஒரு விடயத்தை எடுத்துக் கூறும் ஒருவர், எப்போதும் உண்மையை சொல்வதில்லை. பத்திரிகை மூலம் சொல்லப் படும் தகவல்களும் உண்மையாக இருப்பதில்லை. தகவல்களை கொடுப்பவர்கள் எப்போதும் அதற்குத் தகுதியானவர்களும் அல்ல. நடைமுறை வாழ்வில் உள்ள அத்தனை சிக்கல்களும், இணைய வெளியிலும் இருக்கவே செய்யும்.

(நன்றி: Vrij Nederland, 8 februari 2014)