Showing posts with label கணணி. Show all posts
Showing posts with label கணணி. Show all posts

Tuesday, February 11, 2014

"இணையப் புரட்சியாளர்களுக்கு அஞ்சும் அதிகார வர்க்கம்!" - ஒரு நேர்காணல்


“இணையம் எமது சமுதாயத்தை தலை கீழாக மாற்றி வருகின்றது. முன்னொருபோதும் இல்லாதவாறு, சாமானிய மக்களின் கருத்துக்களும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. ஸ்னோடன் என்ற தனி மனிதன், ஒபாமாவுக்கு சவாலாக உருவெடுத்துள்ள அதிசயம், வரலாற்றில் இதற்கு முன்னர் நடந்ததில்லை. இது நமது சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள மாபெரும் ஜனநாயகப் புரட்சி. இணையப் புரட்சியாளர்களின் நடவடிக்கைகள் ஒரு பக்கம் கற்பனாவாதமாக தோன்றினாலும், மறு பக்கம் அதிகார வர்க்கத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன.” - மிஷேல் செரெஸ்

83 வயதான பிரெஞ்சு தத்துவவியல் பேராசிரியர் மிஷேல் செரெஸ் (Michel Serres), புதிய தலைமுறை இணையப் புரட்சியாளர்களை வரவேற்று, ஒரு நூலை எழுதி இருக்கிறார். Pettite Poucette (சிறிய சுண்டுவிரல்) என்ற அந்த நூல், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டதாக நான் இன்னும் அறியவில்லை. அதன் டச்சு மொழிபெயர்ப்பு அடுத்த மாதம் வெளிவரவுள்ளது. இதற்கிடையில், நெதர்லாந்தில் வெளியாகும் Vrij Nederland சஞ்சிகை, அவரது பேட்டி ஒன்றைப் பிரசுரித்துள்ளது. தமிழ் வாசகர்களுக்காக, நான் அதனை  தமிழில் சுருக்கமாக மொழிபெயர்த்துள்ளேன்.

______________________________________________________________________________

1930 ம் ஆண்டு பிறந்த செரெஸ், ஸ்பெயின் உள்நாட்டு யுத்தம், இரண்டாவது உலகப்போர், பிரான்சின் இரண்டு காலனிய போர்களையும், அவரது வாழ்நாளில் பார்த்து விட்டார். தனது பிறப்பில் இருந்து, முப்பது வயது வரையில் போர்களை மட்டுமே கண்டு வளர்ந்ததாக கூறுகினார். தற்கால பத்திரிகைகள், போர்கள், பயங்கரவாத தாக்குதல்களுக்கு, தேவையற்ற அளவு அதிக முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிப்பதாக குறைப்படுகின்றார். உண்மையில், உலகம் முன்பிருந்ததை விட பெருமளவு முன்னேறி விட்டதாகவும், பயங்கரவாதம் குறிப்பிடத் தக்க அளவு தாக்கத்தை உண்டாக்கவில்லை என்றும் கூறுகின்றார்.

செரெஸ் சுயமாக படித்து முன்னேறிய ஒருவராக தன்னைத் தானே சொல்லிக் கொள்கிறார். (கணிதவியல், இலக்கியம், தத்துவியல் கற்றவர். பாரிஸ் சோர்போன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார். அமெரிக்காவில் பத்து வருடமும், கோஸ்டாரிகா, தென் கொரியா, மாலி, மெக்சிகோ ஆகிய நாடுகளில் விஜயம் செய்யும் விரிவுரையாளராகவும் பணியாற்றி உள்ளார்.) பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொடுக்காத பலவற்றை, அனுபவத்தில் அறிந்து கொண்டதாக கூறுகின்றார். அவரது கூற்றில்: “அறிவு மகிழ்ச்சியை அளிக்கின்றது. அறிவு விடுதலை செய்கின்றது.”  மிஷேல் செரெஸ் தனது  என்பது வயதில், இணையப் பாவனை பற்றி ஒரு நூலை எழுதி வெளியிட்டதில் ஆச்சரியம் எதுவுமில்லை. 

இந்த வயதிலும் தளராமல், சமூக வலைத்தளங்களில் செயற்பட்டு வருகின்றார். அவருக்கென்று ஒரு வலைப்பூ (Blog) வைத்திருக்கிறார். அமெரிக்க தொழில்நுட்ப பூங்காவான சிலிக்கான் வலியில் பணியாற்றும் பொழுதே இணையத்தை பாவிக்கத் தொடங்கி விட்டதாகவும், தற்போது தனது பேரப் பிள்ளைகள் மூலம் நிறையக் கற்றுக் கொள்வதாகவும் கூறுகின்றார்: “அறிவும், விஞ்ஞானமும், பெற்றோர் மூலம் பிள்ளைகளுக்கு கடத்தப் படுகின்றது. ஆனால், தொழில்நுட்பத்தை பெற்றோர்கள் பிள்ளைகளிடம் இருந்து கற்றுக் கொள்கிறார்கள்.”

  • கேள்வி: உங்களது நூலில், பிரஜைகள் தலைவர்களாவதாகவும், இளைய சமுதாயம் அதிகார பலத்தை தங்கள் கையில் எடுத்திருப்பதாகவும், பழைய அதிகார வர்த்தினரின் பலம் நொறுங்கி வருவதாகவும் குறிப்பிட்டு உள்ளீர்கள். அதன் அர்த்தம் என்ன?


பதில்: தொழில்நுட்பம், (சமுதாய)  மாற்றத்தை கொண்டு வந்திருந்தாலும், அதில் குறைபாடுகளும் உள்ளன. கூகிள் உலகம் முழுவதும் உளவு பார்க்க முடியும். அவர்கள் அதை செய்து கொண்டிருக்கிறார்கள். அங்கெலா மெர்க்கலின் தொலைபேசி உரையாடல்களும் ஒட்டுக் கேட்கப் பட்டன. அனால், இவை அனைத்தும் தனி ஒரு மனிதனின் முயற்சியால் வெளியில் தெரிய வந்தது. அதன் அர்த்தம், ஜனாதிபதி ஒபாமா அளவிற்கு, ஒரு தனி மனிதனின் செல்வாக்கு வளர்ந்துள்ளது. ஏனென்றால் அவர் தான் ஒட்டுக் கேட்கும் உளவுத் தகவல்களை வெளிக் கொணர்ந்தார். ஒரு தனி மனிதன்! அது நானாக இருக்கலாம், நீங்களாக இருக்கலாம். இது ஒரு நவீன ஜனநாயகம்.

  • கேள்வி: அது சில நேரம் அச்சத்தை உண்டாக்குகின்றது.


பதில்: ஆமாம், அச்சமும் தான். ஆனால், உலகில் ஒரு புதிய சமநிலை தோன்றி உள்ளது. உலகின் மிகப் பெரிய சக்தி வாய்ந்த தலைவர்களுக்கு சவாலாக, ஒரு தனி மனிதன் வந்துள்ளான். ஒரு தனி மனிதனால் அதிகாரத்தை எதிர்த்து போராட முடிகின்றது. அது ஒரு கற்பனாவாதமாக தெரிந்தாலும், அதே நேரத்தில் அச்சத்தையும் உண்டாக்குகின்றது.

  • கேள்வி: ஆகவே, உங்களது நூலில் எழுதி இருப்பதைப் போல, நீங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கின்றீர்கள்.


பதில்: ஆமாம். இந்தப் போக்கு, மேலதிக ஜனநாயகத்தையும், சமத்துவத்தையும் கொண்டு வரும் என்று நம்புகின்றேன். எமது சமுதாயம் ஈபில் கோபுரம் போன்று கட்டப் பட்டுள்ளது. உச்சியில் ஒரு சில அரசியல்வாதிகள் இருந்து கொண்டு, கீழே இருக்கும் மக்கள் திரளின் மேல் தமது முடிவுகளையும், கொள்கைகளையும் திணித்துக் கொண்டிருக்கிறார்கள். உச்சியில் ஒரு சில ஊடகவியலாளர்கள் இருந்து கொண்டு, கீழே இருக்கும் ஏராளமான மக்களுக்கு தகவல்களை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். 

நான் நினைக்கிறேன், கணணி யுகமானது, அறிவுடைமையை ஜனநாயக மயப் படுத்துவதிலும், சமுதாயத்தை மாற்றுவதிலும் முக்கிய பங்காற்றியுள்ளது. ஒரு நூறு வருடங்களுக்கு முன்னர் கூட, ஆட்சியில் இருந்த அரசன், அல்லது ஜனாதிபதிக்கு, தனது விவசாயக் குடிமக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தெரியாது. தற்போது ஒரு விவசாயிக்கு, உலக தானிய விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கம் பற்றி தெரிந்திருக்கிறது. அது ஜனநாயக உறவுகளில் மாற்றத்தை கொண்டு வரும்.

குடிமக்கள் ஒரு வல்லாட்சிக்கு வளைந்து கொடுக்க தயாராக இல்லை. பழைய உலகம் எம் கண் முன்னால் நொறுங்கிக் கொண்டிருக்கிறது. எமக்கு நல்லது எது, கெட்டது எது என்று கூறிக் கொண்டிருந்த அரசியல்வாதிகள். தாங்கள் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதையே வாசிக்க, கேட்க, பார்க்க வேண்டுமென்று எதிர்பார்த்த ஊடகங்கள். அவர்களின் காலம் போய் விட்டது. குடி மக்களான நாங்கள், அடிமைகளோ அல்லது புத்தி சுவாதீனமற்றவர்களோ அல்ல. எங்களுக்கும் ஏதோ கொஞ்சம் தெரியும், அல்லது நன்றாகத் தெரியும் என்று நினைத்துக் கொள்கிறோம்.

தேசங்களும், தேவாலயங்களும் பல நூறாண்டுகளாக யுத்தம் செய்யும் இயந்திரங்களாக மட்டுமே இருந்து வந்துள்ளன. அதை விட, இன்னொருவரின் உயிரைக் கேட்காத, மாய உலகில் வாழ்வதை நான் விரும்புவேன். ஆனால், சமுதாய கட்டுமானம் உடையுமாக இருந்தால், தன் முனைப்பு அதிகமான தனி மனிதர்கள் அல்லவா எஞ்சி இருப்பார்கள்? அப்படி நினைத்தால், இதற்கு முந்திய தலைமுறையை ஒரு தடவை திரும்பிப் பாருங்கள். அவர்கள் எந்தளவுக்கு கூடி வாழ்ந்திருக்கிறார்கள்? விவாகரத்துகள் பெருகின. இரண்டாம் உலகப் போருக்கு பிந்திய அரசியல் கட்சிகள், எந்தக் கொள்கையும் இல்லாத வெறும் கோதுகளாக மட்டுமே இருந்து வருகின்றன. அதிகார வர்க்கத்தை சொகுசான பஞ்சு மெத்தையில் வைத்திருப்பதற்காக, ஓட்டு வாங்கும் இயந்திரங்களாக மட்டுமே அரசியல் கட்சிகள் உள்ளன.

இணையத்தில், வலைப்பூவில் தனது அரசியல் கருத்தை வெளியிடும் ஒருவருக்கு கிடைக்கும் ஓட்டுகள், ஒரு அரசியல் கட்சி தேர்தலில் பெற்ற ஓட்டுகளை விட அதிகமாக உள்ளது. இது எதைக் காட்டுகின்றது? அவர்கள் உங்களையும், என்னையும் போன்று சாதாரண மக்கள். ஆனால், அரசியல்வாதிகளின் பேச்சை விட, அவர்களின் கருத்துக்களை கேட்போரின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. இது, ஒரே சமயத்தில், ஆச்சரியத்திற்கு உரியதாகவும், கவலையளிப்பதாகவும் உள்ளது.

இந்த நிலைமை, இன்னும் இருபது, முப்பது வருடங்களில் எத்தகைய விளைவுகளை கொண்டு வரும்? ஒரு புதிய வகை அரசியல் தோன்றலாம். ஆனால், என்ன வகை? அது பற்றி சொல்லத் தெரியவில்லை.

தொழில்நுட்ப வளர்ச்சியை நாங்கள் நன்மையாக எடுத்துக் கொள்ள வேண்டும். நல்ல திசையில் வழிநடத்தினால், தொழில்நுட்ப மாற்றத்தினால் நன்மையை உண்டாக்கலாம். எனது பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் இந்தப் புதிய உலகில் உலாவிக் கொண்டிருக்கிறார்கள். புதியதோர் உலகைப் படைப்பதற்கு, நாங்கள் அவர்களுக்கு உதவ முடியும். இது தத்துவ அறிஞர்களின் கடமையாக இருக்க வேண்டும். ஆனால், ஒரு சிலர் மட்டுமே அதில் ஆர்வமாக உள்ளனர்.

19 ம் நூற்றாண்டு தத்துவ அறிஞர்களிடம் ஒரு அரசியல் நோக்கு இருந்தது. உதாரணத்திற்கு: சோஷலிசம். சிலர் அதனை ஒரு கற்பனையான கோட்பாடாக கருதி இருக்கலாம். ஆனால், அதற்குப் பதிலாக, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில், சமூக காப்புறுதி, ஏழைகளுக்கு உதவுதல் போன்ற திட்டங்கள் கொண்டு வரப் படவில்லையா? தற்போதும் சமுதாயம் திரும்பவும் மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால், அது எதை நோக்கி செல்கின்றது என்பதை தீர்மானிக்க முடியாது. மரபு ரீதியாக, தத்துவ அறிஞர்கள் புத்தகங்களை மட்டுமே நம்பி இருந்தார்கள். கணனித் திரைகளை அல்ல. அவர்கள் தம்மை காலத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள வேண்டும்.

  • கேள்வி: நீங்கள் அதைச் செய்கிறீர்கள் தானே?


பதில்: நான் பல வருட காலமாக, என்னை அதில் ஈடுபடுத்தி வந்திருக்கிறேன். ஐம்பது வருடங்களுக்கு முன்னர் “ஹெர்மெஸ்” என்ற தலைப்பின் கீழ், நான் ஒரு புத்தகம் எழுதினேன். கிரேக்க புராணத்தின் படி, ஹெர்மஸ் என்பவன் கடவுளின் தூதுவன் அல்லது தகவல் தொடர்புக்கான தெய்வம். நெருப்பு அல்லது தொழிற்துறை புரட்சியின் தெய்வமான புரொமதெயுசிடம் இருந்து, ஹெர்மஸ் எமது சமுதாயத்தின் அதிகாரத்தை கைப்பற்றுவதாக எழுதி இருந்தேன். ஆனால், அன்றைக்கு நான் சொன்னதை யாரும் கேட்கவில்லை. ஹா… ஹா… ஹா…

  • கேள்வி: கணணி மயமாக்கல் எமது மூளை வளர்ச்சியில் பங்காற்றுவதாக சொல்கிறீர்கள்.


பதில்: நாங்கள் ஒரு புத்தகத்தை வாசிக்கும் பொழுது, எமது மூளையில் எந்தெந்த நரம்புகள் இயங்க ஆரம்பிக்கின்றன என்று,  விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தார்கள். அந்த குறிப்பிட்ட நரம்புகள், வாசிப்பதற்கு முன்னர் என்ன செய்து கொண்டிருந்தன? ஒன்றுமேயில்லை! அதனால், நாங்கள் தகவல்களை பெற்றுக் கொள்ளும் பொழுது, எமது மூளையும் வளர்ச்சி அடைகின்றது. இது எமது சிந்தனா முறையில் ஒரு புரட்சியை உண்டு பண்ணலாம். வரலாற்றில் ஏற்கனவே இது போன்ற இரண்டு புரட்சிகள் நடந்துள்ளன. எழுதும் கலை கண்டுபிடிக்கப் பட்ட பொழுதும், நூல்களை அச்சடிக்கும் கலை கண்டுபிடிக்கப் பட்ட பொழுதும், எமது சிந்தனா முறை மாற்றமடைந்தது.

  • கேள்வி: எல்லோரும் எல்லோருடனும் தொடர்பாடுவதாக உங்களது நூலில் புகழ்ந்து எழுதி இருக்கிறீர்கள். ஆனால் இந்த தொடர்பாடல் மேலோட்டமானது அல்லவா? 


பதில்: உண்மை தான். இதெல்லாம் கண்ணுக்கு புலப்படாத கற்பனையான தொடர்பாடல் தான். ஆனால், முந்திய காலத்திலும் அப்படித் தான் இருந்தது. தந்தி, தொலைபேசி மூலமான தொடர்பாடல் எப்படி நடைபெற்றது? கண்ணுக்கு புலப்படாத தொடர்பாடல் எப்போதும் மேலோட்டமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் தொலைபேசி மூலம், ஒருவரை ஒருவர் பார்க்காமலே, மறுமுனையில் இருப்பவருடன் ஆழமான உரையாடல் ஒன்றை நடத்தலாம். அதே நேரம், உங்களுக்கு எதிரில் இருப்பவருடனான உரையாடல் மேலோட்டமாக இருக்கலாம். நான் இளைஞனாக இருந்த காலத்தில், சினிமா நட்சத்திரமான இங்க்ரிட் பெர்க்மான் மீது காதல் வயப் பட்டிருந்தேன். அவளை நான் எனது வாழ்கையில் ஒரு நாளும் நேரில் காணவில்லை. ஆனால், நான் மானசீகமாக காதலித்தேன்.

  • கேள்வி: அறிவு எல்லா இடங்களிலும் வியாபித்துள்ளதாக நீங்கள் உணர்கிறீர்கள். ஆனால், அது ஒரு குழப்பகரமான சூழ்நிலையாக தோன்றவில்லையா? நாலாபுறமும் இருந்து, தகவல்கள் குண்டு மழையாகப் பொழிகின்றன. இணையமானது ஒரு பெரிய நீர்த் தேக்கமாக உள்ளது.


பதில்: தகவலும், அறிவும் ஒன்றல்ல. அணுப் பௌதிகவியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், விக்கிபீடியாவில் தேடினால் அது பற்றி நிறைய அறிந்து கொள்ளலாம். அதை வாசித்தாலும், எனக்கு ஒன்றுமே புரியாது. அதாவது, எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது. ஆனால், அறிவு கிடைக்கவில்லை. பெருங் குழப்பம்? ஐயா, நீங்கள் ஒரு தடவை நூலகத்திற்கு சென்று பாருங்கள். அங்கேயும் நீங்கள் குழம்பிப் போகலாம். புத்தகங்கள் அகர வரிசைப் படி அடுக்கி வைக்கப் பட்டுள்ளன. அது மட்டும் தான். அறிவும் ஒரு காலத்தில் ஒழுங்கு படுத்தப் படாமல் கிடந்தது. அரிஸ்டாட்டில், லைப்னிஸ், எராஸ்முஸ்… மிகப் பெரிய தத்துவ அறிஞர்கள் அறிவை ஒழுங்கு படுத்தும் முயற்சியில் இறங்கினார்கள். ஆனால், அது அனேகமாக சாத்தியப் படாத வேலை.

  • கேள்வி: ஆனால், ஊடகங்கள் இப்போது அந்த வேலையை செய்கின்றன. (தகவல்களை) தெரிவு செய்கின்றன, வகைப் படுத்துகின்றன, விளக்குகின்றன.


பதில்: ஊடகங்கள் மக்களுக்கு தகவல்களை கொடுப்பது நல்ல விடயம் தான். ஆனால், அதில் தீமையும் உள்ளது. எனக்குப் பதிலாக இன்னொருவர், தகவல்களை வகைப் படுத்தி, எனக்குத் தருகிறார். இணையத்தில் நானாகவே தெரிவு செய்ய முடியும். எனக்கு வேண்டிய தகவல்களை வகைப் படுத்தி பெற்றுக் கொள்ள முடியும். நீங்களாகவே ஒரு தகவலை தேடி எடுத்து அறிந்து கொள்வதில் இருந்து தான், உண்மையான அறிவு வளர்கின்றது.

  • கேள்வி: ஆனால், குடிப்பதற்கு கடலளவு தண்ணீர் உள்ளது. நல்ல தகவல்களும், தவறான தகவல்களும் ஒன்று கலந்து உள்ளன. பொய்கள் பரப்பப் படுகின்றன. எல்லாம் தெரிந்த மனிதர்களும் தவறான விக்கிபீடியா கண்டுபிடிப்புகளால் நோய் வாய்ப் படலாம். 


பதில்: மனிதர்கள் தவறிழைகிறார்கள், மிகைப் படுத்தி சொல்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள். உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளலாம். இன்னொருவரையும் ஏமாற்றலாம். உங்களுக்கு ஒரு விடயத்தை எடுத்துக் கூறும் ஒருவர், எப்போதும் உண்மையை சொல்வதில்லை. பத்திரிகை மூலம் சொல்லப் படும் தகவல்களும் உண்மையாக இருப்பதில்லை. தகவல்களை கொடுப்பவர்கள் எப்போதும் அதற்குத் தகுதியானவர்களும் அல்ல. நடைமுறை வாழ்வில் உள்ள அத்தனை சிக்கல்களும், இணைய வெளியிலும் இருக்கவே செய்யும்.

(நன்றி: Vrij Nederland, 8 februari 2014)

Monday, November 10, 2008

உங்கள் கணணியில் உதிரம் வடிகின்றது!


கணணி அல்லது மொபைல் போன் பாவிக்கும் அனைவரும் எதோ ஒரு வகையில் கொங்கோவில் நடக்கும் இனப்படுகொலை யுத்தத்துடன் தொடர்புபட்டவர்கள் தான். யாராவது ஒரு திருடன், சொத்துக்கு உரிமையாளரை கொலை செய்துவிட்டு, கொள்ளையடித்த பொருட்களை குறைந்த விலை கொடுத்து வாங்கினால், நாமும் அந்த கொலைக்கும், கொள்ளைக்கும் உடந்தையாக இருந்ததாக குற்ற உணர்ச்சி எழுவதில்லையா? ஆனால் அந்த பாவத்தை நாம் எல்லோரும் தெரிந்தோ தெரியாமலோ செய்துகொண்டு தான் இருக்கிறோம். இன்று உலகில் கணணி, மற்றும் மொபைல் தொலைபேசி போன்ற இலத்திரனியல் பொருட்களின் விலை குறைந்து பாவனை அதிகரித்து இருக்கின்றதென்றால், அதற்கு முக்கிய காரணம், அவற்றிற்கான மூலப்பொருட்கள் கொங்கோவில் இருந்து பெருமளவில் கொள்ளையடிக்கப்படுவது தான். இது வெறும் கொள்ளை சம்பந்தமான பிரச்சினை மட்டுமல்ல, கனிம வள சுரங்கங்களை கைப்பற்றி சுரண்டுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் தமது வாழிடங்களில் இருந்து விரட்டப்பட்டனர், அல்லது படுகொலை செய்யப்பட்டனர். கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இலத்திரனியல் நிறுவனங்களின் மாபெரும் கொள்ளைக்காக நான்கு மில்லியன் அப்பாவி மக்கள் பலிகொடுக்கப்பட்டனர்.

பெரிய ஆப்பிரிக்க நாடான கொங்கோ, உலகில் பணக்கார நாடுகளில் ஒன்று. தங்கம், வைரம் மட்டுமல்ல, யுரேனியம் போன்ற விலைமதிக்கமுடியாத கனிமவளங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஒருகாலத்தில்(19 ம், 20 ம் நூற்றாண்டில்) பெல்ஜிய அரசரின் தனிச் சொத்தாக இருந்த கொங்கோ சுரங்கங்களிலும், பெருந்தோட்டங்களிலும் அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் கட்டாய வேலை வாங்கப்பட்டனர். உற்பத்தி குறையும் போதெல்லாம், குழந்தை தொழிலாளராக இருந்தாலும், தண்டனையாக கைகள் வெட்டப்பட்டன. அந்த நிலைமை இன்றைய “நாகரீக உலகிலும்” மாறவில்லை. அன்று பெல்ஜிய அரசரும், முதலாளிகளும் கொங்கோவை சுரண்டிக் கொழுத்தனர்; இன்று பன்னாட்டு நிறுவனங்கள் (உங்கள் மனங்கவர்ந்த “நோக்கியா” உட்பட) பகல் கொள்ளையில் போட்டிபோடுகின்றன.

உலகில் இனப்பிரச்சினை என்று அறியப்பட்ட யுத்தங்கள் பல பணப்பிரச்சினை காரணமாக நடப்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஏற்கனவே சியாரா லியோனில் வைர சுரங்கங்களுக்காக நடந்த சண்டையை, இனப்பிரச்சினை என்று சர்வதேச ஊடகங்கள் செய்த பிரச்சாரத்தை முறியடித்து “Blood Diamond” திரைப்படம் உண்மையை எடுத்துக் காட்டுகின்றது. இருந்தாலும் பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த சர்வதேச ஊடகங்கள் கொங்கோவில் நடக்கும் போரையும் “இனப்பிரச்சினை” என்றே பிரச்சாரம் செய்கின்றன. அவர்களைப்பொறுத்த வரை கொங்கோலிய அரசபடைகள் பொதுமக்களை துன்புறுத்துகின்றன, சொத்துகளை கொள்ளையடிக்கின்றன, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கின்றன, அதற்கெதிராக “லோறன்ட் குண்டா” தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் போராடுகின்றனர். அங்கே நடப்பது இனப்பிரச்சினை. (துட்சி) சிறுபான்மை இனத்தை, (நிங்காலா மொழிபேசும்)பெரும்பான்மை இனம் அடக்கி இனப்படுகொலை செய்கின்றது.

அங்கே மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் இல்லை என்று நான் இங்கே கூறவரவில்லை. ஆனால் அதற்கு பின்னணியில் இருக்கும் அயல்நாடுகளான உகண்டா, ருவாண்டா படைகளின் ஆக்கிரமிப்பு, மூலப்பொருட்களுக்கு உரிய விலையை கொடுக்காது கொள்ளையடிக்கும் மேற்குலக வர்த்தக கழகங்கள் போன்றவற்றின் லாப நோக்கங்கள் திட்டமிட்டே மறைக்கப்படுகின்றன. ருவாண்டாவின் அரசபடையினர் சீருடையை மாற்றிப் போட்டுக் கொண்டு “கிளர்ச்சியாளர்கள்” என்று சர்வதேச தொலைக்காட்சி கமெராக்களுக்கு முன்னாள் காட்சிதருகின்றனர். “நடுநிலை தவறாத” ஊடகங்கள் எதற்காக “கிளர்ச்சியாளர்களை” மட்டும் பேட்டி எடுக்கின்றன? அங்கே நடப்பது இனப்பிரச்சினை என்று நாம் நம்ப வேண்டுமாம்.
கடந்த பத்தாண்டுகளாக கொங்கோ போரில் நான்கு மில்லியன் மக்கள் கொல்லப்பட்டதை சர்வதேச ஊடகங்கள் அதிக அக்கறை எடுத்து அறிவிக்கவில்லை. தற்போதும் அதுதான் நடக்கின்றது. சில மனித உரிமை ஸ்தாபனங்களின் விடாமுயற்சியால் ஐ.நா.சபை தலையிட்ட போது மட்டும் சிறிதளவு கவனிப்பு இருந்தது. அதுகூட கிழக்கு கொங்கோவில் அரசபடைகளின் கட்டுப்பாட்டை குறைத்து, கிளர்ச்சிப் படைகளுக்கு(என்று சொல்லப்படுவன) சுரங்கங்களை பராமரிக்கும் உரிமை வாங்கிக் கொடுக்கும் வகையிலேயே அந்த “சர்வதேச தலையீடு” இடம்பெற்றது. சமாதானப்படைகள் என்ற பெயரில் வந்த பன்னாட்டு இராணுவத்தினர்(இந்தியா கூட படை அனுப்பியது) சமாதானத்தை நிலைநாட்டினார்களோ இல்லையோ, கன்னிப் பெண்கள் மீது பாலியல் இச்சையை தீர்த்து தமது ஆண்மையை மட்டும் நிலைநாட்டினார்கள். மறந்தும் கூட கனிமவளங்கள் கொள்ளையடியடிக்கப்படும் சுரங்கங்கள் பக்கமே போகவில்லை. அது கூட பரவாயில்லை. அந்த சுரங்கங்களை நிர்வகிக்கும் கிரிமினல் கும்பல்களுக்கு ஆயுதம் விற்று மேலதிக வருமானம் தேடிக்கொண்டனர். இப்படி வேலியே பயிரை மேய்ந்த கதைகள் வெளிவந்த போது ஐ.நா.சபை நாணத்தால் கூனியது.

கிழக்கு கொங்கோவில் எந்த ஒரு அரசியல் சக்தியினதும் முழுமையான கட்டுப்பட்டு கிடையாது. கொங்கோ அரசாங்கத்தின் கனிமவள அமைச்சு நிர்வகிக்கும் சுரங்கங்கள் கூட அரசபடையில் இருக்கும் கொமாண்டர்களின் லாபநோக்கின் கீழ் சுரண்டப்படுகின்றன. தலைநகர் கின்சாசாவில் இருக்கும் மைய அரசோ, அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்து தேசத்தை பாதுகாக்கும் போர் என்று தான் கூறிவருகின்றது. இதில் ஓரளவு உண்மை இருப்பதால் சாதாரண பொதுமக்கள் போருக்கு ஆதரவளித்து வந்துள்ளனர். ஒரு காலத்தில் நட்பு நாடுகளான அங்கோலா, சிம்பாப்வேயும் தமது படைகளை அனுப்பி வைத்ததால், “ஆப்பிரிக்காவின் உலகப்போர்” என்றும் அழைக்கப்பட்டது. அப்போது கொங்கோ அரசு தோழமை நாடுகளின் இராணுவ உதவிக்கு மாறாக தெற்கில் சில சுரங்கங்களை வாடகைக்கு கொடுத்திருந்தது.

இந்தப் பிரச்சினையில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்னவெனில், கொங்கோ அரசபடையாக இருந்தாலும், அங்கோலாவின் தோழமை இராணுவமாக இருந்தாலும், அல்லது “கிளர்ச்சியாளர்” சீருடையணிந்த ருவாண்டா படையாக இருந்தாலும், அனைவரது நோக்கமும் எந்தச் சுரங்கத்தை யார் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது என்பது தான். அதே நேரம் அந்த சுரங்கங்களில் இருந்து அகழப்படும் தங்கம், வைரம், மற்றும் கொல்த்தான் போன்ற விலைமதிப்பற்ற திரவியங்கள் யாவற்றையும் இடைத்தரகர்கள் வாங்கிக்கொண்டாலும், அவை போய்ச் சேரும் இடங்கள் (உலக மக்களின் நன்மதிப்பை பெற்ற) பன்னாட்டு நிறுவனங்கள் தான்.

கொங்கோ போர் தீவிரமடைவதற்கு முக்கிய காரணம் கொல்த்தான் என்ற மூலப்பொருள். இதிலிருந்து தான் இலத்திரனியல் கருவிகளில் பயன்படுத்தப்படும் “சிப்” தயாரிக்கப்படுகின்றது. உலக சந்தையில் நடமாடும் தொலைபேசி(மொபைல்), மடிக் கணணி(லப் டாப்) போன்றவற்றின் விலை கணிசமாக குறைந்து, விற்பனை அதிகரித்ததற்கும், கொங்கோ மக்கள் கொல்லப் படுவதற்குமிடையில் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. மூலப்பொருட்களுக்கு உரிய விலை கொடுக்கப்பட்டு, நியாயமான வியாபாரம் நடக்குமாயிருந்தால் இலத்திரனியல் பொருட்களின் விலை இப்போதும் (நாம் வாங்க முடியாத அளவு) அதிகமாக இருந்திருக்கும். ஆனால் கொங்கோ மக்களை படுகொலை செய்து அல்லது அடித்துவிரட்டி விட்டு, எஞ்சியோரை வைத்து அடிமைகளாக்கி உற்பத்தி செய்யப்படும் கொல்த்தான் என்ற மூலப்பொருளின் விலை சர்வதேச சந்தையில் மிகக்குறைவாக இருக்கும் என்பதை கூறத்தேவையில்லை. இதைப்பற்றி யாருக்கு என்ன கவலை? எமது மத்தியதர வர்க்கம் வாங்கிப் பயன்படுத்தக் கூடியவாறு பாவனைப்பொருட்கள் மலிவான விலையில் கிடைக்க வேண்டும். இலத்திரனியல் கம்பனிகளின் நிகரலாபம் அதிகரிக்க வேண்டும். அதனால் உலக பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டும். இவை தானே நமது நல்வாழ்வுக்கு முக்கியம்? அதற்காக காந்தியின் குரங்குப் பொம்மை போல, “உண்மையை பார்க்காமல், கேட்காமல், பேசாமல்”; கணணிப்புரட்சியின் மகிமையை பற்றி மட்டுமே பேசிப் பொழுது போக்குவோம்.

மேலதிக தகவல்களைப் பெறுவதற்கு :
Documentary Video: Grand Theft Congo - DRC
Mining for minerals fuels Congo conflict
________________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy