Showing posts with label குழந்தைகள் அரசியல். Show all posts
Showing posts with label குழந்தைகள் அரசியல். Show all posts

Friday, May 09, 2014

அல்லேலூயாவும் அரசியல் அடிப்படைவாதிகளும்


எனக்குத் தெரிந்த, நெதர்லாந்தில் உள்ள அகதி முகாம் ஒன்றில், பல தமிழ்க் குடும்பங்கள் வசித்து வந்தன. பெரும்பாலானோர் இந்து மத நம்பிக்கையாளர்கள். அதில் ஒரு குடும்பம், அல்லேலூயா எனப்படும் பெந்தேகொஸ்தே கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, மிகுந்த மதப் பற்றுக் கொண்டிருந்தார்கள். அந்தக் குடும்பத்தில் சிறிய பிள்ளைகளும் இருந்தன.

"அல்லேலூயா தாய்" அந்தப் பிள்ளைகளை, பிற தமிழ்க் குடும்பங்களோடு பழக விடுவதில்லை. அதற்குக் கூறிய காரணம்: "அவர்கள் சாத்தானை, பிசாசை வழிபடுபவர்கள். அவர்களுடன் சேர்ந்தால் பிள்ளைகள் கெட்டு விடும்." என்பது தான். அதே நேரம், பிற தமிழ்க் குடும்பங்கள், அல்லேலூயா குடும்பத்தினரின் மத நம்பிக்கையை கேலி செய்தன. "பிள்ளைகள் கிறிஸ்தவ பக்திப் பாடல்கள் மட்டுமே கேட்க வேண்டுமென கட்டாயப் படுத்துகிறார்கள். சினிமாப் பாடல்களை கேட்க விடுவதில்லை...." இப்படிப் பல.

இதிலே வேடிக்கை என்னவென்றால், அவர்களுக்கு இவர்கள் செய்வது மூட நம்பிக்கையாகப் படுகின்றது. இவர்களுக்கு அவர்கள் செய்வது மூட நம்பிக்கையாகத் தெரிகின்றது. இரண்டு தரப்பினரும், "பிள்ளைகளை கெடுப்பதாக, அவர்கள் மேல் பெற்றோரின் விருப்பங்களை திணிப்பதாக, துஸ்பிரயோகம் செய்வதாக" ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்தார்கள். யார் சொல்வது சரி? அதைத் தீர்மானிப்பது யார்? இது குறித்து, நெதர்லாந்து சட்டங்கள் என்ன சொல்கின்றன?

நெதர்லாந்து, தாராளவாத (லிபரல்) கொள்கையின் அடிப்படையில் இயங்கும் சமுதாயத்தைக் கொண்ட நாடு. அது தனி மனிதனுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது. பெற்றோரும் தாம் விரும்பியவாறு தமது பிள்ளைகளை வளர்ப்பதற்கு சுதந்திரம் உள்ளவர்கள். அவர்கள் எந்த மதத்தை பின்பற்றினாலும், அல்லது எதையுமே பின்பற்றாத நாஸ்திகர்களாக இருந்தாலும், அந்த நம்பிக்கையை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கும் சுதந்திரம் உண்டு. ஒரு லிபரல் சமுதாயம், மதச் சுதந்திரத்தை மட்டும் அங்கீகரிக்கவில்லை. அரசியல் சுதந்திரத்தையும் அங்கீகரிக்கின்றது.

ஐம்பது வருடங்களுக்கு முந்திய நெதர்லாந்து மக்கள், மதவாதிகளாக, தேசியவாதிகளாக, சோஷலிசவாதிகளாக, பொதுவுடைமைவாதிகளாக பல சமூகக் கூறுகளாக பிளவு பட்டிருந்தனர். (இதனை டச்சு மொழியில் "Verzuiling" என்று சொல்வார்கள். அதாவது, தனித் தனி தூண்களாக பிரிந்து நிற்றல். ஒரு சமூகத்திற்கும், அதற்கு எதிரான சமூகத்திற்கும் இடையில் தொடர்பு இருக்காது.) பிற்காலத்தில் அந்தப் பிளவுகள் வெளித் தெரியா வண்ணம் மறைந்து விட்டது. ஆனால், தனியாக குடும்ப மட்டத்தில் இன்னமும் அரசியல் சித்தாந்த வேறுபாடுகள் தொடர்ந்தும் உள்ளன. அது மறையவே மறையாது. நெதர்லாந்து சட்டம் அதனை ஏற்றுக் கொள்கின்றது.

ஒருவரின் தனிப்பட்ட அரசியல்/ மத உரிமையை அங்கீகரிக்கும் சட்டம், பூர்வீக டச்சு மக்களுக்கு மட்டுமல்ல, வெளிநாட்டுக் குடியேறிகளின் அரசியல், மத உரிமையையும் அங்கீகரிக்கின்றது. இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த ஒரு சராசரி தமிழ்க் குடும்பம், தாம் காவிக் கொண்டு வந்த தமிழீழ தேசியவாத அடிப்படையில் பிள்ளைகளை வளர்க்கும் உரிமையை வழங்குகின்றது. அதே மாதிரி, மொரோக்கோ குடியேறிகள், அரபு மொழியையும், இஸ்லாமிய பண்பாட்டையும் பேணிப் பாதுகாக்க உதவுகின்றது. இந்த பன்முகத் தன்மை கொண்ட கலாச்சாரம், மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை என்று கூறுகின்றது.

இன்றைக்கும் சில தமிழர்கள் மத்தியில், அடிப்படை ஜனநாயகம் குறித்த புரிதல் இல்லாமை, ஒரு மிகப் பெரிய குறைபாடு. ஒரு லிபரல் ஜனநாயக நாட்டில் வாழ்ந்து கொண்டே, மேற்கத்திய கொள்கைகளை ஆதரித்துக் கொண்டே, மற்றவர்களின் ஜனநாயக உரிமையை காலில் போட்டு மிதிக்கும் கேலிக் கூத்தும் அரங்கேறுகின்றது.

மத அடிப்படைவாதம் போன்று, இதுவும் ஒரு வகை (அரசியல்) அடிப்படைவாதம் தான். தங்களது அரசியல் கொள்கை மட்டுமே ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற இறுமாப்புடன் நடந்து கொள்கின்றனர். அதற்கு மாறாக குழந்தைகளை வளர்த்தால், "பெற்றோரின் விருப்பத்தை திணிக்கிறார்கள்...சிறுவர் துஸ்பிரயோகம்..." என்று அலறித் துடிக்கிறார்கள்.

ஒவ்வொரு பெற்றோரும் தமக்குத் தெரிந்த அரசியல்/மதக் கருத்துக்களின் வழியில் தான் பிள்ளைகளை வளர்ப்பார்கள். ஒரு பாசிச நாட்டில் மட்டுமே அந்த உரிமை மறுக்கப் படுகின்றது. உங்களால் மற்றவர்களின் ஜனநாயக உரிமையை மதிக்க முடியாதென்றால், சவூதி அரேபியா போன்ற சர்வாதிகார நாடொன்றுக்கு புலம்பெயர்ந்து சென்று விடுங்கள்.


இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 

Saturday, May 04, 2013

மே தினமும், குழந்தைகளின் அரசியலும் - எனது சாட்சியம்

இந்த வருடம் (2013), நெதர்லாந்து, ரொட்டர்டாம் நகரில் நடந்த மே தினப் பேரணியில், ஆயிரத்திற்கும் குறையாத பன்னாட்டு தொழிலாளர்களும், அவர்களது குடும்பங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

1. வில்லம் அலெக்சாண்டரை நெதர்லாந்து மன்னராக முடிசூட்டும்
விழா 30-04-2013

2. உழைப்பாளர் தினம், மே 1, 2013.


முதலாவது படத்தில்: இலங்கை, இந்தோனேசியா போன்ற காலனிகளை சுரண்டிக் கொழுத்த, உலகில் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தின் வாரிசும், ஆப்பிரிக்க நாடுகளில் மனித உரிமைகளை மீறிய ஷெல் எண்ணை நிறுவன முதலாளியுமான வில்லெம் அலெக்சாண்டர் நெதர்லாந்தின் புதிய மன்னராக முடிசூட்டிக் கொள்கிறார். 21 ம் நூற்றாண்டுக்கு பொருந்தாத, புராதன கால சம்பிரதாயமான மன்னராட்சியை கொண்டாடும் மக்கள். (முக்கிய குறிப்பு: அன்றைய தினம் அனைவருக்கும் விடுமுறை தினமாகும்.) 

இரண்டாவது படத்தில்: தொழிலாளர்களின் மே தினத்தில், இழந்த உரிமைகளுக்காக போராடும் உழைக்கும் மக்கள். (முக்கிய குறிப்பு: அன்றைய தினம் விடுமுறை கிடையாது. வழமையான வேலை நாள்.) 

முதலாவது படத்தை பார்த்து "ஆஹா... அற்புதம்" என்று புகழ்கிறவர்கள், இரண்டாவது படத்தை பார்த்து விட்டு "அய்யய்யோ... சிறுவர் துஸ்பிரயோகம்" என்று அலறுகின்றனர். ஆண்டானின் பிறந்தநாளை அடிமைகள் கொண்டாடுவதை சாதாரண நிகழ்வாக எடுத்துக் கொள்கிறவர்கள், அடிமைகள் தங்கள் உரிமைகளுக்காக போராடுவதை "அசாதாரணமான அரசியல் திணிப்பாக" கருதி எதிர்க்கிறார்கள். எது அரசியல் திணிப்பு? எது துஸ்பிரயோகம்? இதை தீர்மானிப்பது யார்? 




மே தினத்தில் செங்கொடி ஏந்தினால், முஷ்டியை உயர்த்தினால் "அரசியல்- சித்தாந்த திணிப்பு" என்றெல்லாம் அறநெறி போதிக்கும் நண்பர்களே! 

நான் இன்றைக்கும், தொழிலாளர் வர்க்கத்தை சேர்ந்த ஒருவன் தான். நான்கு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால், பத்து வருடங்களாக செய்து வந்த நிரந்தர வேலையும் பறிபோனது. அதற்குப் பிறகு கிடைக்கும் எந்த விதமான வேலையையும் மனம் கோணாமல் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். "வாயில் நுழையாத பெயரை கொண்டிருப்பதாலும், இருட்டான தோற்றத்தை உடையவன் என்பதாலும், ஆசிய நாடொன்றில் பிறந்த படியாலும்", தொழிலாளர் சந்தையில் எனது உழைப்பிற்கான கேள்வி குறைந்து கொண்டே செல்கின்றது. சிரமப் பட்டு வேலை தேடும் பொழுது, முதலாளிகளால் பாகுபாடு காட்டப் படுகிறேன். 

வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வரும் நாட்டில், உதிரித் தொழிலாளர்கள் வேண்டாத பண்டமாகி வருகின்றனர். இதை விட உயர்ந்து வரும் வாழ்க்கை செலவை ஈடுகட்டுமளவு போதாத வருமானம். என்னிடம் காரும் இல்லை, சொந்த வீடும் இல்லை, சொத்துக்களும் இல்லை. வங்கியில் பல இலட்சம் சேமிப்புப் பணமும் கிடையாது. வாழ்க்கை முழுவதும் எனது உரிமைகளை போராடித் தான் பெற வேண்டியுள்ளது. 

என்னைப் போன்ற பாதிக்கப் பட்ட மற்ற தொழிலாளர்களும் இணைந்து போராடுவதற்கு வருடத்தில் ஒரு தடவையாவது மே தினம் வருகின்றது. அதனை "வேற்றுக் கிரகவாசிகளின் அரசியல்- சித்தாந்த திணிப்பு" என்று மிரளுகிறவர்கள், எந்தளவு தூரம் உழைக்கும் மக்களிடம் இருந்து அந்நியப் பட்டிருக்கிறார்கள் என்பது புரிகின்றது. 


அரசியலும், போராட்டமும் எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதால், அது எனக்கு தவறாகத் தெரியவில்லை. என்னை ஒரு அரசியலற்ற மனிதனாக அறிவித்துக் கொள்ளும் மேட்டுக்குடி பண்பாடோ அல்லது பின்நவீனத்துவ சிந்தனையோ என்னிடம் கிடையாது. நாங்கள் அரசியலை வலிந்து திணித்துக் கொள்ளவில்லை. அரசியல் எங்களை தேடி வந்து பற்றிக் கொள்கின்றது. 

வீட்டுக்கு அருகில் இருக்கும் குழந்தைகள் காப்பகத்தில் மகனை சேர்த்து விட்டு, வேலைக்கு போய் வந்த காலங்களை நினைத்துப் பார்க்கிறேன். அரசாங்கம் மானியத்தை நிறுத்தியதால், குழந்தைகள் காப்பகம் மூடப்பட்டு, ஒன்றரை வயது குழந்தையான அகரனை வீட்டிலேயே வைத்திருக்க வேண்டிய நிலை உருவானது. அந்த நேரத்தில், வேலையிழந்த குழந்தைகள் காப்பக ஊழியர்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். அதுவே எனது ஒரு வயது மகன் கற்ற முதலாவது அரசியல் பாடம். 

ஐரோப்பியர்கள் கோடை கால விடுமுறைக்கு குடும்பத்துடன் வெளியே சென்று கூடாரமடித்து, அல்லது ஒரு ரிசோர்ட்டில் தங்கி உல்லாசமாக பொழுது போக்குவது வழக்கம். மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள இடதுசாரிக் கட்சிகள் நடத்தும் ஒரு வார கோடை விடுமுறை முகாம், வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு ஒரு வரப்பிரசாதம். (அரசு மானியம் கொடுப்பதால் தங்குமிட செலவு மிகக் குறைவு.

கிறிஸ்தவ சபைகளும் கோடை விடுமுறை முகாம்களை நடத்துகின்றன. மத நம்பிக்கையுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.) ஒரு தடவை நோர்வே மாவோயிஸ்ட் கட்சி நடத்திய கோடை கால விடுமுறை முகாமில் குடும்பத்துடன் கலந்து கொண்டோம். அங்கே பெரியவர்களுக்கு அரசியல் வகுப்புகள், கலந்துரையாடல்கள் ஒரு பக்கம் நடக்கும். மறு பக்கம், சிறுவர்களுக்கான விளையாட்டுகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ஒழுங்கு படுத்தப் பட்டிருக்கும். 

சர்வதேச பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினால், நாங்களும் பொருளாதார பிரச்சினைகளுக்குள் மாட்டிக் கொள்ளும் நேரம், எம்மால் முடிந்ததெல்லாம் சமூக மாற்றத்திற்காக, நான்கு பேர் கூடிக் கதைப்பது தான். அதனை சில மெத்தப் படித்த அறிவாளிகள் "அரசியல் சித்தாந்தம்" என்று வரையறுக்கின்றனர். எங்களது சமூகப் பிரச்சினைக்காக ஒன்று கூடுவது அரசியல் சித்தாந்தம் என்றால், அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். வாழ்க்கையில் நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தான், எமது அரசியல் சித்தாந்தம் என்னவென்பதை தீர்மானிக்கின்றது.

******

 வீடியோ: ரொட்டர்டாம் நகரில் நடந்த மே தின ஊர்வலம்.