Monday, June 15, 2020

மெக்சிக்கோவில் ஒரு கம்யூனிஸ்ட் தனிநாடு!


தெற்கு மெக்சிக்கோவில் உள்ள சியாப்பாஸ் மாநிலத்தில் கடந்த 24 வருடங்களாக ஒரு கம்யூனிஸ்ட் தன்னாட்சிப் பிரதேசம் இயங்கிக் கொண்டிருக்கிறது. 

1994ல் மெக்சிக்கோ அரசுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடிய மார்க்சிய EZLN குறுகிய காலத்திற்குள் பல நகரங்களையும், கிராமங்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அரசின் இராணுவ நடவடிக்கையை எதிர்த்து மெக்சிக்கோ முழுவதும் கம்யூனிச ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். நாடளாவிய மக்கள் எழுச்சி கண்டு அஞ்சிய அரச இராணுவம், EZLN புரட்சியாளர்களுடன் போர்நிறுத்தம் செய்து கொண்டது. 

அன்றிலிருந்து இன்று வரை அங்கு கம்யூனிச தன்னாட்சிப் பிரதேசங்கள் தன்னிறைவுப் பொருளாதாரம் மூலம் வளர்ந்து வருகின்றன. அவர்கள் பின்பற்றும் பொதுவுடைமைக் கல்வி அமைப்பு நமக்கு தெரிந்த முதலாளித்துவ கல்வியில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. அது மட்டுமல்ல நேரடி ஜனநாயகம் பின்பற்றப் படுகிறது. 

அங்கு பணமில்லாத சமுதாயம் உருவாகி உள்ளது. நகரசபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள் யாருக்கும் சம்பளம் வழங்கப் படுவதில்லை. அவர்களது உணவு, உடை, உறையுள் அனைத்துக்கும் கம்யூன் பொறுப்பு. இன்றைக்கும் சிறுபான்மை மாயா இன மக்கள் இந்தக் கம்யூன் அமைப்பில் சுதந்திரமாக வாழ்கிறார்கள். பன்னாட்டு இடதுசாரி தொண்டர்கள் அங்கு சென்று கம்யூன் வளர்ச்சிக்கு பங்களித்து வருகின்றனர்.



No comments: