Monday, June 22, 2020

ஒரு பொலித்தீன் பைக்காக விற்கப் பட்ட சோவியத் தேசம்!

அமெரிக்க தத்துவ அறிஞர் Andre Vltchek ஒரு முன்னாள் சோவியத் யூனியன் பிரஜை. சிறு வயதில் அவரது தந்தையின் தொழில் நிமித்தம்  செக்கோஸ்லாவாக்கியாவில் வாழ்ந்து வந்தார். முப்பது வருடங்களுக்கு முன்பு கம்யூனிசத்தில் வெறுப்புற்று அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த இளம் தலைமுறையை சேர்ந்தவர். மேற்கத்திய முதலாளித்துவ சொர்க்கபுரியாக கருதப்பட்ட அமெரிக்காவுக்கு வந்த பின்னர், தான் மிகப் பெரிய தவறு செய்து விட்டேன் என்று வருந்தி இருக்கிறார். 

அவர் தனது செக் நாட்டு வாழ்க்கை அனுபவங்களை இந்தக் கட்டுரையில் எழுதி இருக்கிறார். அமெரிக்க ஏகாதிபத்தியம் எவ்வாறு உலக நாடுகளை நாசமாக்கி வருகிறது என்பதை இன்றைய ஹாங்காங் மக்களுக்கு அறிவுறுத்துவதற்காக இதை எழுதி இருக்கிறார். முன்னாள் சோஷலிச நாடுகளுக்குள் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள விரும்புவோர் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதை நான் இங்கே தமிழில் சுருக்கி தருகிறேன்.

அன்றைய வாழ்க்கை நன்றாக அர்த்தமுள்ளதாக இருந்தது. செல்வச் செழிப்புள்ளதாக இருந்தது. செல்வம் என்பது பணத்தின் அடிப்படையில் அல்லாது, பண்பாட்டு ரீதியாக, அறிவுபூர்வமானதாக, ஆரோக்கியமானதாக இருந்தது. ஆனால், அது பனிப்போர் உச்சத்தில் இருந்த காலகட்டம்.

நாங்கள் கிளர்ந்தெழும் இளைஞர்களாக, அத்துடன் இலகுவில் ஏமாறக் கூடியவர்களாக இருந்தோம். எங்களுக்கு எவ்வளவு கிடைத்தாலும் திருப்திப் படவில்லை. எல்லாம் தானாகக் கிடைத்ததாக எண்ணிக் கொண்டோம். இரவு நேரங்களில் BBC, Voice of America, Radio Free Europe ஆகிய வானொலிகளில் சொல்வதை செவிமடுத்தோம். அவை சோஷலிச நாடுகளையும், மேற்கத்திய ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் நாடுகளையும் பற்றி அவதூறாகசொன்ன எல்லாவற்றையும் நம்பினோம்.

செக் நாட்டு சோஷலிச தொழிற்துறை நிறுவனங்கள் ஆசிய, ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு நாடுகளில் நட்பு ரீதியாக பல தொழிற்சாலைகளை கட்டிக் கொடுத்தன. அவை உருக்காலை, சீனி ஆளை என்று பலதரப் பட்டன. ஆனால் நாங்கள் அவற்றை பெருமையாகக் கருதவில்லை ஏனென்றால் மேற்கத்திய ஊடகங்கள் அந்த திட்டங்களை பற்றி குறை சொல்லிக் கொண்டிருந்தன.

எங்களுடைய சினிமா தியேட்டர்கள் இத்தாலி, பிரெஞ்சு, சோவியத், ஜப்பானிய ஆகிய நாடுகளில் இருந்து மிகச் சிறந்த திரைப்படங்களை காண்பித்துக் கொண்டிருந்தன. ஆனால், நாங்கள் அமெரிக்க குப்பைப் படங்களை பார்க்க வேண்டுமென கேட்டுக் கொண்டிருந்தோம்.

மேடைக் கச்சேரி ஆனாலும், பதிவுசெய்யப் பட்டதானாலும், எமக்குக் கிடைத்த இசை மிக உயர்ந்த தரத்தில் இருந்தது. சிறிது தாமதமானாலும் நாம் விரும்பிக் கேட்ட இசை உள்ளூர் கடைகளில் கிடைத்தது. அன்று எமது கடைகளில் ஒன்றுக்கும் உதவாத குப்பைகள் விற்கப் படவில்லை. ஆனால், நாங்கள் அதைத் தான் விரும்பிக் கேட்டோம். அதையெல்லாம் மத அனுஷ்டானம் மாதிரி விரும்பிக் கேட்டதுடன், கேசட் வடிவிலும் பதிவு செய்து வைத்திருந்தோம். ஏதாவது கிடைக்கவில்லை என்றால், சுதந்திர பேச்சுரிமை பறிப்பு என்று மேற்கத்திய ஊடகங்கள் அலறின.

இளம் மூளைகளை ஏமாற்றுவது எப்படி என்று அன்று அவர்களுக்கு தெரிந்திருந்தது. ஒரு கட்டத்தில் நாம் விரக்தி அடைந்தவர்களாக இருந்தோம். எங்கள் நாடுகளில் இருந்த எல்லாவற்றையும் விமர்சித்தோம். எதனோடும் ஒப்பிட்டுப் பாராமல், சிறிதளவு கூட நடுநிலைமை இல்லாமல் நடந்து கொண்டோம்.

(மேற்குலகு) எங்களுக்கு சொன்னதை எல்லாம் திருப்பிச் சொன்னோம்: சோவியத் யூனியன், செக்கோஸ்லாவாக்கியாவில் இருந்த எதுவுமே கூடாது. மேற்குலகில் இருந்த ஒவ்வொன்றும் சிறந்தது. ஆம், அன்றிருந்த நிலைமை மிகப்பெரிய பைத்தியக்காரத்தனம், அல்லது மத அடிப்படைவாதம் போன்ற நம்பிக்கை. உண்மையில் அன்று நாம் ஒரு தொற்று நோயால் பீடிக்கப் பட்டிருந்தோம். அது எங்களை முட்டாள்களாக மாற்றி விட்டது.

சோஷலிச மானியங்கள் மூலம் எமக்குக் கிடைத்த வசதிகளான நூலகம், அரங்கம், தேநீர் விடுதி ஆகிய பொது இடங்களை பயன்படுத்தி எமது தேசத்தின் மீது சேறு பூசிக் கொண்டே, மேற்குலகை மகிமைப் படுத்தினோம். மேற்குலக வானொலி, தொலைக்காட்சி, அங்கிருந்து கடத்தப்பட்டு வந்த சஞ்சிகைகள் என்பன இவ்வாறு தான் எம்மை மூளைச்சலவை செய்து வைத்திருந்தன.

அந்தக் காலங்களில் மேற்குலகில் இருந்து வந்த பொலித்தீன் பைகள் எமது அந்தஸ்தாக மாறின! உங்களுக்கு தெரியுமா? இன்றைக்கு பெட்டிக் கடைகளில், சில மலிவான சூப்பர் மார்க்கெட்டுகளில் கொடுக்கும் அதே பொலித்தீன் பைகள் (shopping bags) தான். அவற்றை நாம் நிறையப் பணம் கொடுத்து வாங்கினோம். ஏனென்றால் அது நுகர்வுக் கலாச்சாரத்தை அடையாள படுத்தியது! நுகர்வுக் கலாச்சாரம் தான் நல்லது என்று நாங்கள் நம்ப வைக்கப் பட்டிருந்தோம்.

சுதந்திரத்தை விரும்ப வேண்டும் என்று எமக்கு சொல்லப் பட்டது. அதாவது, மேற்கத்திய பாணி சுதந்திரத்தை. "சுதந்திரத்திற்காக போராட வேண்டும்" என்று கற்பிக்கப் பட்டோம். உண்மையில் நாம் பல வகைகளில் மேற்குலக நாடுகளை விட அதிக சுதந்திரத்தை அனுபவித்து வந்தோம். இதை நான் முதல் தடவையாக அமெரிக்கா வந்த பின்னர் தான் உணர்ந்து கொண்டேன். நியூ யோர்க் நகரில் என்னுடைய வயதையொத்த பிள்ளைகள் உலக அறிவு குறைந்தவர்களாக, மோசமான கல்வியறிவு கொண்டவர்களாக இருந்தனர்.

எமது உணவுகள் சுவையானவையாக, இயற்கையாக உற்பத்தி செய்யப் பட்டவையாக இருந்தன. ஆனால், நாம் வர்ணமயமான பைகளில் அடைக்கப்பட்ட மேற்கத்திய பொருட்களுக்காக ஆசைப்பட்டோம். நாம் இரசாயன பொருட்களை உண்ண விரும்பினோம்.

நாம் எப்போதும் ஆத்திரத்தோடு எதிர்க்கத் தயாராக இருந்தோம். எமது குடும்பங்களை பகைத்துக் கொண்டோம். நாம் மிக இளமையாக இருந்தாலும் பெரியவர்களாக நினைத்துக் கொண்டோம். நான் எனது முதலாவது கவிதைப் புத்தகத்தை வெளியிட்டு விட்டு,கதவை இழுத்து சாத்தி விட்டு, நியூ யோர்க்கிற்கு சென்று விட்டேன். நான் ஒரு முட்டாளாக்கப் பட்டு விட்டேன் என்பதை வெகு விரைவில் உணர்ந்து கொண்டேன்.


முழுமையான கட்டுரையை இந்த இணைப்பில் வாசிக்கலாம்:

No comments: