Tuesday, December 12, 2017

புரட்சிகர காலகட்டத்தின் குணங்குறிகள், அதில் நமது கடமைகள் என்ன?

(பாகம் - இரண்டு)


ஒரு வர்க்கப் புரட்சிக்கு தயாராக இல்லாத, இன்றைய காலத்தில், எமது தந்திரோபாயங்கள் எப்படி இருக்க வேண்டும்? 

இன்றைய காலகட்டத்தின் தோற்றப்பாடுகள்:

- இந்தக் காலகட்டமானது முதலாளிய வர்க்கத்தின் கூடுதல் பலமாகவும், உழைக்கும் வர்க்கத்தின் பலவீனமாகவும் உணரப்படும்.

- மூலதனம் தனது முகவர்களான சீர்திருத்தவாதிகள், திருத்தல்வாதிகளை பயன்படுத்தி, உழைக்கும் வர்க்கத்தின் போர்க்குணாம்சத்தை முறியடிக்கப் பார்க்கும். வர்க்க உணர்வை அரித்து துருப்பிடிக்க வைக்கும்.

- இந்தக் காலகட்டத்தில், உழைக்கும் வர்க்கமானது முதலாளிய அரசை நொறுக்கி விட்டு சோஷலிசத்தை கொண்டு வருவதற்கான கடமையில் இருந்து பல வருட காலம் பின்தள்ளப் பட்டிருக்கும்.

- ஏகபோக மூலதனத்தின் ஆட்சி அசைக்க முடியாத அளவு பலமாக இருக்கும். அரச இயந்திரம் பழுதில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும். முரண்பாடுகள் தீவிரமடைந்திருக்காத படியால், அவை முதலாளிய வர்க்கத்திற்கு நெருக்கடி உண்டாக்க மாட்டா.

அத்தகைய "அமைதியான" காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்?

- வர்க்கப் போராட்டத்திற்கான பள்ளிக்கூடம் அமைக்கலாம். உழைக்கும் வர்க்கத்தை அரசியல்மயப் படுத்தும் கல்வி புகட்டலாம். பொறுமையான, படிப்படியான தொழிற்சங்கப் போராட்டங்களை கட்டமைக்கலாம்.

- தொழிற்சங்க நடவடிக்கை மூலம் தற்காலிக தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதுடன் நின்று விடக் கூடாது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வர்க்கப் போராட்டத்தின் குறிக்கோள்கள் பற்றிப் பரப்புரை செய்ய வேண்டும். தொழிலாளர்கள் மத்தியில் இருந்து தோன்றும் புதிய உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதே நேரம், சீர்திருத்தவாத, திருத்தல்வாத போக்குகளை எதிர்த்துப் போராட வேண்டும்.

- வர்க்க உணர்வு தானாக உருவாவதில்லை. மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கான வாழ்க்கைப் போராட்டத்தில் உறங்கிக் கிடக்கும் வர்க்க உணர்வை தட்டி எழுப்ப வேண்டும். அதை சோஷலிசத்திற்கான குறிக்கோளுடன் இணைக்க வேண்டும்.

- உழைக்கும் வர்க்கத்தினுள் படிப்படியாக வர்க்க குணாம்சத்தை புகுத்த வேண்டும். முதலாளிய அரசு அதிகாரத்துடனான ஒவ்வொரு மோதலையும், உரிமைகளை நசுக்கும் ஒவ்வொரு அடக்குமுறையையும் பயன்படுத்தி மக்களுக்கு அறிவூட்ட வேண்டும்.

- குட்டி முதலாளிய வர்க்கத்தின் மீதும் செல்வாக்குப் பிரயோகிக்க வேண்டும். அவர்களுடன் ஒரு புரட்சிகர கூட்டு வைக்க முடியாவிட்டாலும், முதலாளிய அரசின் ஆட்சி குறித்த அவர்களது அவநம்பிக்கையை, அதிருப்தியை பயன்படுத்தி அரசுக்கு எதிரான எதிர்ப்பை வலுப்படுத்த வேண்டும்.

- மூலதன ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்கு எதிரான குட்டி முதலாளிய வர்க்கத்தின் போராட்டத்தை நிபந்தனையுடன் ஆதரிப்பதன் மூலம், அவர்களை உழைக்கும் வர்க்க போராட்ட வழிக்கு கொண்டு வர முடியும்.

*******

புரட்சிகர காலகட்டத்தின் குணங்குறிகள், அதில் நமது கடமைகள் என்ன?

- இந்தக் கட்டத்தில் வர்க்கங்களுக்கு இடையிலான அதிகாரச் சமநிலை மாறி விடும். உழைக்கும் வர்க்கம் தற்காப்பு போராட்டத்தை கைவிட்டு விட்டு, முன்னரங்கிற்கு வந்து தாக்குதல் நடத்தும் கட்டத்திற்கு வந்திருக்கும். தொழிலாளர்களின் போராட்டமானது மிகப் பிரமாண்டமான பேரணிகளாகவும், வேலை நிறுத்தங்களாகவும் நடைபெறும்.

- தொழிலாளர்கள் மத்தியில் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு அதிகரிக்கும். அதே நேரத்தில் சீர்திருத்தவாத, திருத்தல்வாத போக்குகள் மறையும். உழைக்கும் வர்க்கமானது அதிகாரத்தை கைப்பற்றும் இலக்கை நெருங்கி இருக்கும். அதனால், இந்த காலகட்டத்தில் உழைக்கும் வர்க்கம் தந்திரோபாய தாக்குதல்களை தொடங்கி இருக்கும்.

- இந்தக் கட்டத்தில் முதலாளிய வர்க்கத்தின் பலவீனம் தெரிய வரும். பொருளாதாரம் சரிவை நோக்கி சென்று நெருக்கடியை அடையும் பொழுது, ஏகபோக முதலாளித்துவம் எந்தவொரு சமரசத்திற்கும் வர முடியாது. அது சமூக நல சீர்திருத்தங்களின் முடிவின் தொடக்கமாக இருக்கும். இந்தப் பிரச்சினைகளில் இருந்து மீள்வது கடினமாக இருக்கும்.

- அரசு இயந்திரம் துருப் பிடிக்கத் தொடங்கும். இடையில் நிற்கும் குட்டி முதலாளிய வர்க்கமும் கிளர்ச்சி செய்யத் தொடங்கும். முதலாளித்துவத்தை தாங்கிப் பிடிக்கும் அரசியல் கட்சிகள் பலமிழக்கும். பாராளுமன்றம் மற்றும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் மக்கள் விரோத குணாம்சத்தை உழைக்கும் வர்க்கம் கண்டு கொள்ளும்.

- முதலாளிய வர்க்கம் நேரடி அடக்குமுறையில் ஈடுபடும். அரசு அதிகாரத்திற்கு எதிரான போராட்டம் நாள்தோறும் நடக்கும். இந்தக் கட்டத்தில் இருந்து தான் வர்க்கப் போராட்டம் தொடர்கின்றது.

- இந்தக் கட்டத்தில் அரசியல் போராட்டம் முதன்மையானது. அரசியல் கோரிக்கைகள் சமூக மாற்றத்திற்கான சுலோகங்களாக மாறும். அது மக்களை எழுச்சி கொள்ள வைத்து அதிகாரத்தைக் கைப்பற்றத் தூண்டும். உழைக்கும் வர்க்கத்தின் போராட்டமானது, புரட்சிகர பாட்டாளிவர்க்கக் கட்சியின் தலைமையின் கீழ் ஒரு விடுதலைப் போராட்டமாக பரிணமிப்பதற்கான கிளர்ச்சியையும் பிரச்சாரங்களையும் கொண்டிருக்கும்.

- இந்தப் போராட்டங்கள் ஊடாக, தொழிற்சாலைகளில் வேர் பரப்பியுள்ள (கம்யூனிஸ்ட்) கட்சியானது, ஒரு வெகுஜனக் கட்சியாக வளர்ச்சி அடையும். அதன் உத்திகளுக்கான இயங்குதளம் விரிவடையும். இது உழைக்கும் வர்க்கத்தை பலதரப் பட்ட போராட்டங்களை நடத்துவதற்கு ஊக்குவிக்கும். அதன் வியூகத்திற்கான வாய்ப்புகளும் வளர்ச்சி அடையும். நடுத்தர வர்க்கமான குட்டி முதலாளிய வர்க்கத்தினர் மத்தியிலும் கட்சிக்கு ஆதரவு கூடும். அந்த வர்க்கத்தினரையும் பாட்டாளி வர்க்கத்திற்கு ஆதரவாக இழுத்தெடுக்க முடியும்.

- வர்க்கப் போராட்டத்தை ஒரு புரட்சியை நோக்கி நகர்த்திச் செல்வதே, இந்தக் கால கட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.

- இந்தக் காலகட்டம், பொருளாதார போராட்டத்தை அரசியல் போராட்டத்துடன் ஒன்று சேர்க்கும், விரிவான, ஆழமான போராட்டமாக பரிணமிக்கிறது. குட்டி பூர்ஷுவா வர்க்கத்தை பாட்டாளிவர்க்க சார்பானவர்களாக வென்றெடுத்து, அவர்கள் எல்லோரையும் தொழிலாளர்களின் கூட்டாளிகள் ஆக்கி, இதுவரை அறியப் படாத போராட்ட வழிமுறைகளை கற்றுக் கொடுக்கிறது.

- மாற்றத்திற்கான சுலோகங்களைக் கொண்டு அரசியல்மயப் படுத்த வேண்டும். அரச இயந்திரத்தை துருப்பிடிக்க வைப்பதுடன் நன்று விடாது, அரச அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான ஒவ்வொரு முயற்சியையும் எதிர்த்துப் போராட வேண்டும். மக்களை எமது தந்திரோபாய முடிவுகளுக்கு நெருக்கமாக கொண்டு வர வேண்டும்.

- கம்யூனிஸ்ட் கட்சியை வெகுஜன செயற்பாட்டுகளை ஒழுங்கு படுத்தும் மக்கள் கட்சியாக மாற்ற வேண்டும். நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு புரட்சி ஒன்றே மாற்று வழி என்பதை பிரச்சாரம் செய்ய வேண்டும்.

(Willi Dickhut எழுதிய Strategy and Tactics in the Class Struggle - பாட்டாளி வர்க்க கல்வி நூலில் இருந்து சில பகுதிகள்) 


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

No comments: