
Saturday, January 28, 2012
மக்கள் எழுச்சியை நசுக்கும், மேலைத்தேய மூலதன உரிமை

DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Tuesday, January 24, 2012
சிவப்பு அபாயம்! வர்க்கப் புரட்சி; சிறிலங்கா அரசு மிரட்சி


மேலதிக தகவல்களுக்கு :
1.‘Military abducted Lalith, Kugan’
2.Love of Democracy and Securing Human Rights, Are these an Offence in Sri Lanka?
3.Former Tigers 'threatened' in north
4.'Ex-LTTE cadres are with us' Jana Aragala Group
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Sunday, January 22, 2012
லண்டனில் நூல் அறிமுகமும், அரசியல் உரையாடலும்

காலம்-29-01-2012 – 11.30am -06pm
இடம்:
South Ruislip Methodist Church Hall,
Queens Walk, Ruislip HA4 0NL
கலையரசன், சுசீந்திரன் (ஜெர்மன்), நிர்மலா இராஜசிங்கம், சிவகுமார்(சரிநிகர்), சந்தூஸ் பரராஜசிங்கம், வேலு, றஷ்மி, பௌசர் ஆகியோரின் உரைகளுடன் பங்குபற்றுனர்களின் கருத்துக்களும் இடம்பெறும். உரையாடல்கள் தொகுக்கப்பட்டு ஆவணமாக்கப்படும்.
தயவு செய்து இந்நிகழ்வில் கலந்து கொள்ள ஆர்வமாக இருப்பவர்கள் முன் கூட்டியே தமது பிரசன்னத்தை உறுதிப்படுத்தினால் பகல் உணவு மற்றும் அனைத்து ஏறபாடுகளுக்கும் உதவியாக இருக்கும் என்பதினை கவனத்தில் கொள்க. குறித்த திகதியினை முன் கூட்டி ஒதுக்கிவைத்துக் கொள்ளவும்.
தொடர்புகளுக்கு- email – eathuvarai@gmail.com
tel – 078 17 262980,075 33 087523,074 35 703902
மேலதிக தகவல்களுக்கு அழைப்பிதழ் இணைப்பினை பார்க்கவும்.
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Saturday, January 21, 2012
தமிழரின் பூர்வீகம் ஆப்பிரிக்கா! இந்துக்களின் பூர்வீகம் துருக்கிஸ்தான்!!
தமிழர், இந்துக்களின் பூர்வீகம் தொடர்பாக எழுதிய கட்டுரைகள்:
* ஆப்பிரிக்காவில் தமிழரின் வேர்கள்
* இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Wednesday, January 18, 2012
அமெரிக்க கரையை அண்மிக்கும் மெக்சிகோவின் புரட்சிப் புயல்

கிளின்ட் ஈஸ்ட்வூட் போன்ற பிரபல ஹாலிவூட் நட்சத்திரங்களின் படங்களில் ஒரு சிறப்பம்சம் இருக்கும். ஸ்பானிய மொழி பேசும் மெக்சிகோ-அமெரிக்கர்கள் கிரிமினல் குற்றங்களில் ஈடுபடும் வில்லன்களாக காண்பிக்கப்படுவார்கள். அமெரிக்க வெள்ளையர்களால் "ஹிஸ்பானியர்கள்" என்று அழைக்கப்படும் இனத்தை சேர்ந்தவர்கள் கிரிமினல்கள் என்பது அவர்களின் பொதுப்புத்தியில் உறைந்துள்ளது. ஆரம்பத்தில் அமெரிக்காவினால் ஆக்கிரமிக்கப்பட்ட மெக்சிகோவின் மாநிலங்களை சேர்ந்தோரே அவ்வாறு அழைக்கப் பாடலாயினர். தற்போது அந்தச் சொல், லத்தீன் அமெரிக்க நாடுகளை சேர்ந்த குடியேறிகளையும் குறிக்க பயன்படுத்தப் படுகின்றது. அமெரிக்க-மெக்சிகோ போரின் விளைவாக, லட்சக்கணக்கான மெக்சிக்கர்கள் ஒரே இரவில் அமெரிக்கர்களாக மாறி விட்டனர். போருக்குப் பின்னர், நியூ மெக்சிகோ, கலிபோர்னியா போன்ற மாநிலங்களில் ஆங்கிலம் பேசும் வெள்ளையினத்தவரின் குடியேற்றம் அதிகரித்தது. ஆக்கிரமிக்கப் பட்ட மாநிலங்களின் அரசியல், பொருளாதார மையங்கள் அவர்கள் கைகளில் இருந்தன. அவர்களுக்கு முன்னர் அங்கேயே வாழ்ந்து வந்த மெக்சிக்கர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளானார்கள். ஆங்கிலேயர்களின் பண்ணைகளில் விவசாயக் கூலிகளாக, தொழிற்சாலைகளில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். பொதுவாக எல்லாவிடங்களிலும் மெக்சிக்க தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த ஊதியம் வழங்கப் பட்டது.
மெக்சிகோ சமூகத்தை சேர்ந்தவர்கள் முன்னேறுவதற்கு, மொழி தடைக்கல்லாக இருந்தது. இதனால் இரண்டாவது தலைமுறை ஆங்கில மொழிப் புலமை பெற வேண்டுமென்று எதிர்பார்த்தார்கள். பொருளாதார முன்னேற்றம் கருதி அமெரிக்க பிரஜையாவதை ஊக்குவிக்கும் அமைப்புகளும் தோன்றின. இவ்வாறான பின்னணியைக் கொண்ட பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகள், இரண்டுங் கெட்டான் நிலைக்கு தள்ளப்பட்டனர். அவர்களால் அமெரிக்க மைய நீரோட்டத்துடன் ஒன்று கலக்க முடியவில்லை. அதே நேரம், மெக்சிகோ வேர்களும் அந்நியமாகத் தெரிந்தன. இரண்டு கலாச்சாரங்களுக்குள் ஊசலாடிக் கொண்டிருந்த இளந்தலைமுறை, தனக்கென தனியான அடையாளம் தேடத் தொடங்கியது. கல்வி நிறைவடையாமலே பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேறுதல். பெற்றோரின் "இழிந்த தொழிலை" செய்வதற்கு மனம் ஒப்பாமை. குறுக்கு வழியில் பணக்காரனாக வேண்டுமென்ற எண்ணம். இன்னோரன்ன காரணங்களால் இரண்டாவது தலைமுறையை சேர்ந்த மெக்சிக்கர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்தது. அன்றைய காலகட்டத்தில், தொள தொள கோட்டும், காற்சட்டையும் மெக்சிக்க இளம் சமுதாயம் மத்தியில் நாகரீகமாகவிருந்தது. அதனால் அமெரிக்க போலிஸ், அவ்வாறான உடை அணிந்த இளைஞர்களை கைது செய்யத் தொடங்கியது. இன்று ஒரு நாட்டில், "இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படுமானால், மனித உரிமைகளை மீறும் முரட்டு நாடு" என்ற முத்திரை குத்தப்பட்டிருக்கும்.
பல தசாப்தங்களுக்குப் பிறகு, பல்வேறு லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் குடியேறிய வேளை, மெக்சிக்கர்கள் பொருளாதார வளத்தில் முன்னேறியிருந்தனர். அதனால், சகோதர லத்தீன் அமெரிக்க குடியேறிகளை தாழ்வாகப் பார்க்கத் தொடங்கினர். ஒரே மொழியான ஸ்பானிஷ், அவர்களை ஒன்றிணைக்கவில்லை. நகரங்களில் ஒவ்வொரு நாட்டை சேர்ந்தவர்களுக்கு தனியான பகுதிகள் உருவாகின. இன்றும் கூட, அந்த சமூகங்கள் ஒன்றை மற்றொன்று வெறுக்கும் நிலைமை காணப்படுகின்றது. உதாரணத்திற்கு, கியூபா ஒரு சோஷலிச நாடாக மாறியதால், அமெரிக்க அரசின் கவனம் முழுவதும் கியூப குடியேறிகள் மீது குவிந்திருந்தது. இதனால் கொதித்தெழுந்த மெக்சிக்கர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். "உலகில் உள்ள இனங்கள் எல்லாம் மொழியடிப்படையில் ஒற்றுமையைக் கொண்டுள்ளன...", என்பன போன்ற தமிழினவாதிகளின் பெருங் கதையாடல்களுக்கு ஆதாரம் எதுவுமில்லை. செயற்கையாகத் தோன்றும் மொழிவாரித் தேசியங்களில், எப்போதும் பலமான நடுத்தர வர்க்கம் ஒன்று ஆதிக்கம் செலுத்தும். லத்தீன் அமெரிக்க நாடுகளில் முதன் முதலில் சுதந்திரம் பெற்ற நாடுகளில், உழைக்கும் வர்க்கத்தின் ஆதரவைப் பெறுவது அவசியம் என்பது உணரப்பட்டது. அன்று முதல் இன்று வரை, வறுமை ஒழிப்பு, நிலங்களை மறுபங்கீடு செய்வது, கல்வி, தொழில் வாய்ப்பு போன்ற பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றது. லத்தீன் அமெரிக்காவில், வலது- இடது என்று எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அல்லது சர்வாதிகாரியே ஆண்டாலும், இது தான் நிலைமை. மெக்சிகோவின் வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது சமூகப் புரட்சிக்கு அமெரிக்காவும் ஒரு வகையில் உதவியுள்ளது.
பிற நாடுகளின் உள் விவகாரங்களில் அமெரிக்கா மூக்கை நுழைப்பது வழமையானது. திறமையில்லாத அதிபரை விழுத்துவதும், அந்த இடத்தில் இன்னொரு தலையாட்டிப் பொம்மையை நிறுவுவதும், அமெரிக்காவுக்கு கைவந்த கலைகள். சில நேரம் அரசைக் கவிழ்ப்பது கடினமாகவிருந்தால், ஆயுதங்கள் வழங்கி கிளர்ச்சிக் குழுக்களை தூண்டி விடுவார்கள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், டியாஸ் என்ற சர்வாதிகாரி ஆண்ட காலத்தில் தான் எதிர்பாராத திருப்பங்கள் தோன்றின. மெக்சிகோ எண்ணை சுத்திகரிப்பு ஆலைகள், சுரங்கத் தொழில் போன்ற துறைகளில், அமெரிக்க நிறுவனங்களின் முதலீடு அதிகமாக இருந்தது. டியாஸ் ஆட்சியில் மேட்டுக்குடி வர்க்கத்தினரின் நலன்கள் சிறப்பாக கவனிக்கப் பட்டன. பூர்வீக இந்தியர்களும், கலப்பின மேஸ்தீசோக்களும் கடுமையான சுரண்டலுக்கு ஆளானதால், வறுமையில் வாடினார்கள். அவர்கள் மத்தியில் இருந்து கலகக் குரல்கள் கேட்டன. இன்றும் மெக்சிகோவில் காவிய நாயகனாக புகழப்படும் "பாஞ்சோ வியா", வட மெக்சிகோவில் சிறு கெரில்லாக் குழுவுக்கு தலைமை தாங்கினார். பாஞ்சோ வியாவின் கெரில்லாக்கள், முதலில் சிறு நகரங்களையும், பின்னர் பெரு நகரங்களையும் கைப்பற்றினார்கள். அவர்களுக்கான ஆயுத விநியோகம், அமெரிக்க எல்லையில் இருந்து வந்து கொண்டிருந்தது. படிப்பறிவற்ற, சாதாரண திருடனாக வாழ்க்கையை ஆரம்பித்த பாஞ்சோ வியா, தான் சொல்கிற படி கேட்பான், என்று அமெரிக்கா நம்பியிருக்கலாம். "நிலவுடமையாளர்களைக் கொல்லுங்கள்! நிலங்களை பறித்தெடுங்கள்!!" என்பன போன்ற கோஷங்கள் வலுக்கவே அமெரிக்கா விழித்துக் கொண்டது. ஆயுத விநியோகம் தடைப் பட்டதால், பாஞ்சோ வியாவின் படையினர், அமெரிக்க இலக்குகளையும் குறி வைத்துத் தாக்கினார்கள். பாஞ்சோ வியா பகைவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். நண்பர்களுக்கு அள்ளிக் கொடுத்தார். அவர் கைப்பற்றிய இடங்களில் நிலமற்ற விவசாயிகளுக்கு, நிலங்களை பகிர்ந்தளித்தார். கல்விச்சாலைகள் கட்டினார்.
நாட்டில் ஏற்பட்ட குழப்ப நிலையை பயன்படுத்தி, பூர்வீக இந்தியர்களும் புரட்சியில் கலந்து கொண்டனர். இந்தியர்கள் அதிகளவில் வாழும் தென் மெக்சிகோவில் "சப்பாத்தா" வின் தலைமையில் புரட்சி வெடித்தது. இன்றைக்கும் கூட, மெக்சிகோ இந்திய மக்களுக்கு சப்பாத்தா ஒரு ஒப்பற்ற தலைவன். பாஞ்சோ வியாவின் படைகளும், சப்பாத்தாவின் படைகளும் தமக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டன. தலைநகரான மெக்சிகோ நகரில், அதிகாரத்தில் இருந்தவர்கள் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். புரட்சிப் படைகள் தலைநகரைக் கைப்பற்றவும், ஜனாதிபதி அமெரிக்காவில் அகதித் தஞ்சம் கோரவும் சரியாகவிருந்தது. ரஷ்யாவில் பொதுவுடமைப் புரட்சி நடந்த 1917 ம் ஆண்டு, மெக்சிகோவின் சமூகப் புரட்சி வெற்றி வாகை சூடியது. ஒரு புரட்சியை வெல்வதை விட, அதை காப்பாற்றுவது தான் கடினமானது. மெக்சிகோவில் புரட்சியை நடத்தியவர்கள் மத்தியில் பொதுவான அரசியல் சித்தாந்தம் காணப்படவில்லை. லிபரல் முற்போக்காளர்கள், சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள், அனார்கிஸ்டுகள், இந்திய தேசியவாதிகள், இவை எதிலும் சாராத "ராபின் ஹூட் வகையறாக்கள்" போன்ற பல்வேறு கலவைகளைக் கொண்டவர்கள். அவர்கள் தமக்குள் மோதிக் கொள்ளவே நேரம் சரியாகவிருந்தது. இந்த குழப்பத்தில், நடுத்தர வர்க்கம் பிரதிநிதித்துவப் படுத்திய லிபரல் முற்போக்காளர்கள் ஆட்சி அமைக்க முன்வந்தார்கள். சுமார் எழுபதாண்டுகளாக PRI என்ற, "புரட்சியை பாதுகாக்கும்" கட்சி ஆட்சி செலுத்தியது. , காலப்போக்கில் PRI , நம்மூர் திராவிடக் கட்சிகளைப் போல, பெயரில் மட்டும் புரட்சியைக் கொண்ட கட்சியாக மாறி விட்டது. ஒரே கட்சி ஆட்சியதிகாரத்தை வைத்திருந்ததால், கட்சித் தலைவர்கள் குடும்பச் சொத்துக்களை பெருக்கிக் கொண்டார்கள்.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் மெக்சிகோ தனித்துவமான அரசியல் கலாச்சாரத்தை பேணி வருகின்றது. ஒரு கட்சியின் சர்வாதிகாரம், ஜனநாயாகமற்ற தேர்தல்கள் போன்ற குறைகள் இருந்த போதிலும், எந்தவொரு அரசியல் கட்சியும் தடை செய்யப்படவில்லை. முதலாளிகள் சொத்தைப் பெருக்கிக் கொள்ள சுதந்திரம் வழங்கப் பட்டது. அந்நிய முதலீடுகளுக்கும் அனுமதி வழங்கப் பட்டது. அதே நேரம், கம்யூனிஸ்ட் கட்சி ஒழுங்கமைத்த தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கவில்லை. அங்கு நிலவிய சாதகமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தான், ஸ்டாலினுடன் முரண்பட்ட ட்ராஸ்கி, மெக்சிகோவை தனது இரண்டாவது தாயகமாக்கினார். மெக்சிகோ உலகப் புரட்சியாளர்களுக்கு புகலிடமாக திகழ்ந்தது என்ற கூற்று, வெறும் மிகைப்படுத்தல் அல்ல. குவாத்தமாலாவில் நடந்த சதிப்புரட்சியை தொடர்ந்து வெளியேறிய சேகுவேராவும், கியூபாவில் இராணுவ முகாம் தாக்குதலில் தோல்வியுற்று ஓடி வந்த பிடல் காஸ்ட்ரோவும் அங்கே தான் சந்தித்துக் கொண்டனர். மெக்சிகோவில் இருந்து தான் கியூபாப் புரட்சிக்கான திட்டங்கள் தீட்டப் பட்டன. கியூபப் புரட்சியாளர்கள் மெக்சிகோ கரையை விட்டு "கிரான்மா" படகில் புறப்பட்ட நாளில் இருந்து, சோஷலிச கியூபாவின் நிர்மாணம் வரையில், மெக்சிகோ அரசு துணை நின்றது. சிறந்த இராஜதந்திர உறவைக் கொண்ட அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு அசைந்து கொடுக்காமல், கியூபப் புரட்சியை ஆதரித்தது. அதற்காக மெக்சிகோ அரசைப் பற்றி தப்புக்கணக்கு போட்டு விட முடியாது. மத்திய அமெரிக்காவில் நிகராகுவா, எல்சல்வடோர் கெரிலாக்களின் போராட்டத்திற்கு மெக்சிகோ ஆதரவளிக்கவில்லை. அடுத்ததாக தனது நாட்டுக்குள் காத்திருக்கும் கம்யூனிசப் புரட்சியாளர்கள் கிளம்பி விடுவார்கள் என்று அஞ்சிக் கொண்டிருந்தது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், மெக்சிகோ அரசு எதிர்பார்த்த பூதம் கிளம்பி விட்டிருந்தது.
1994 ம் ஆண்டு, அமெரிக்காவின் தலைமையில் NAFTA ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டது. கனடா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு இடையில் வரிகளை தளர்த்துவது, வணிகத்தை அதிகரிப்பது, அந்த ஒப்பந்தத்தின் நோக்கம். உண்மையில் அமெரிக்க நிறுவனங்கள் மெக்சிகோவில் தடையின்றி சுதந்திரமாக செயற்பட வழிவகுத்த ஒப்பந்தம் அது. 1 ஜனவரி 1994 , மெக்சிகோ வரலாற்றில் மறக்க முடியாத நாள். NAFTA ஒப்பந்தம் கைச்சாத்திட்ட அன்று, தென் மெக்சிகோ மாநிலமான சியாப்பாசில் புரட்சி வெடித்தது. பூர்வீக இந்தியர்களின் காவிய நாயகனான சப்பாத்தாவின் பெயரில் ஒரு புதிய இயக்கம் தோன்றியது. சப்பாத்திஸ்டா தேசிய விடுதலை இராணுவம், ஒரு சில நாட்களுக்குள் சில நகரங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இதற்கு முன்னர் யாரும் கேள்விப்படாத மார்க்சிய அமைப்பு, அதனை தலைமை தாங்கிய மார்கோஸ் என்ற மர்ம ஆசாமி, குறுகிய காலத்திற்குள் முன்னேறிய போராளிகளின் வேகம், என்பன உலகை உலுக்கி எடுத்தன. சர்வதேச ஊடகங்களின் கவனம் முழுவதும் சியாப்பாஸ் மீது குவிந்தது. மெக்சிகோ விமானப் படையின் கண்மூடித் தனமான குண்டு வீச்சுக்கு தாக்குப் படிக்க முடியாமல், போராளிகள் மலைகளுக்குள் பதுங்கிக் கொண்டனர். புரட்சி தொடங்கிய வேகத்திலேயே நசுக்கப்பட்டாலும், மெக்சிகோ அரசு, சப்பாதிஸ்டாக்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முன் வந்தது. சமாதான உடன்படிக்கை காரணமாக, சப்பாதிஸ்தாக்கள் அதற்குப் பிறகு ஒரு துப்பாக்கி வெட்டுக் கூட தீர்க்கவில்லை. இருப்பினும், சியாப்பாஸ் மாநிலத்தில் இராணுவ பிரசன்னம் நீடிக்கிறது.
நீண்ட காலமாக சபாதிஸ்தாக்களின் தலைவரான மார்கோஸ் குறித்த வதந்திகள் உலாவின. எப்போதும் குளிருக்கு அணியும் முகமூடியோடு காணப்படும் மார்கோஸ் ஒரு பூர்வீக இந்தியர் என்று தான் முதலில் கருதப் பட்டது. ஆனால், மெக்சிகோ அரசின் புலனாய்வின் படி, மார்கோஸ் ஒரு முன்னைநாள் பல்கலைக்கழக பேராசிரியர். ஸ்பானிய வேர்களைக் கொண்ட நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர். இந்தியாவில் "ஒரு மார்க்சிய- தலித் விடுதலை இயக்கத்திற்கு, ஒரு பிராமணர் தலைமை தாங்குகிறார்..." என்பது போன்ற சர்ச்சை அது. இருப்பினும், சியாப்பாசில் பெரும்பான்மையாக வாழும் பூர்வீக இந்தியர்களுக்கு, மார்கோசின் பூர்வீகத்தை அறியும் ஆவல் இல்லை. சியாப்பாஸ், மெக்சிகோவில் மிகவும் பின்தங்கிய வறிய மாநிலம். தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவும் அபிவிருத்தியடையாத, அரசினால் புறக்கணிக்கப்பட்ட மாநிலம். பெரு நகரத்தில் வசதியாக வாழ்ந்த ஒருவர், சியாப்பாஸ் ஏழை இந்தியர்களின் உரிமைகளுக்காக போராடுவதை பலர் வரவேற்கின்றனர். மேற்கத்திய நாடுகளில் இருந்து பல சமூக ஆர்வலர்கள், இடதுசாரி இளைஞர்கள் சியாப்பாஸ் சென்றனர். பூர்வீக இந்தியர்களின் உரிமைப் போராட்டத்தில் பங்குபற்ற விரும்பினார்கள். காட்டுக்குள் நடக்கும் கலந்துரையாடல்களில் உரையாற்றும் மார்கோஸ், "நவ தாராளவாதக் கொள்கைக்கு எதிரான மார்க்சிய சொல்லணிகளால் மக்களை மயக்குவதாக..." எதிராளிகள் குறை கூறுகின்றனர். இருப்பினும், மெக்சிகோவின் உள்ளேயே அதிகம் அறியப்படாத சியாப்பாஸ் மக்களின் பிரச்சினைகளை உலகறியச் செய்ததில், மார்கோசின் பங்கு அளப்பரியது.
ஒஹகா (Oaxaca ), சியாபாஸ் போன்று தெற்கே இருக்கும் பூர்வீக இந்தியர்களை பெரும்பான்மையாக கொண்ட இன்னொரு மாநிலம். மைய அரசினால் புறந் தள்ளப்பட்ட, வறுமையான மாநிலம். காலனிய காலம் முதல், இன்று வரை மெக்சிகோ பழங்குடியினர் தாழ்த்தப்பட்ட சாதியாக சுரண்டப் படுகின்றனர். ஒடுக்கப்பட்ட இந்திய சமூகத்தில் பிறந்த புத்திஜீவிகள் ஒன்றிணைந்த மெக்சிகோவிற்குள் சம உரிமைகளுக்காக போராடினார்கள். சியாப்பாஸ் மாநிலத்தை சேர்ந்த சப்பாத்தா என்ற இந்தியத் தலைவர், வட மெக்சிகோ பாஞ்சாவியாவுடன் இணைந்து, அரச அதிகாரத்தை கைப்பற்றினார். அவருக்கு முன்னர், ஒஹாகா மாநிலத்தை சேர்ந்த இன்னொரு இந்தியத் தலைவர், மெக்சிகோவின் ஜனாதிபதியானார். மெக்சிகோவின் முதலாவது பழங்குடியின ஜனாதிபதியான ஹுவாராஸ், சிறு வயதில் ஒரு பணக்காரர் வீட்டில் வேலைக்காரனாக பணியாற்றி வந்தார். பிற்காலத்தில் விடாமுயற்சியுடன் சட்டம் பயின்று நாட்டின் அதிபரான ஹுவாரசின் ஆட்சியில் பூர்வீக இந்தியர்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிந்தது. ஹுவாராஸ், சப்பாத்தா போன்ற பழங்குடியினத் தலைவர்கள், மெக்சிகோவின் பிற இனத்தவர்களினதும் ஆதரவைப் பெற்றிருந்ததால் தான், தமது சமூகத்தினரது உரிமைகளையும் பெற முடிந்தது. அதனால், மெக்சிகோவின் பிற இனத்தவர்கள் மட்டுமல்ல, சர்வதேச சமூகத்தை சேர்ந்தவர்களும், இந்திய பழங்குடியினரின் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டனர். தேசிய இன விடுதலைக்காக போராடுவோர் அறிந்து வைத்திருக்க வேண்டிய உண்மை இது. இந்திய பழங்குடி மக்கள், 21 ம் நூற்றாண்டிலும், குறுந்தேசியவாத சகதிக்குள் சிக்காது, வெளிநாட்டு ஆதரவைத் திரட்ட முடிந்தது. 2006 ம் ஆண்டு, ஒஹாகா மாநிலத்தில் மக்கள் எழுச்சி இடம்பெற்றது. மீண்டும் சர்வதேச ஆர்வலர்கள் புரட்சியை பாதுகாக்க மெக்சிகோ பயணமானார்கள்.
2006 ம் ஆண்டு, ஒஹாகா மாநிலத்தில் வெடித்த புரட்சிக்கு, பள்ளிக்கூடங்களின் இழிநிலை காரணமாக அமைந்தது. நம்மூர் அரசுப் பள்ளிகளில் நிலவும் அதே குறைபாடுகள் தான் அங்கேயும். மானியக் குறைப்பால் கவனிக்கப்படாத பாடசாலைகள். குறைந்த ஊதியம் பெறும் ஆசிரியர்கள். பாடநூல்கள், சீருடை போன்றவற்றை வாங்க முடியாமல் திண்டாடும் ஏழை மாணவர்கள், கல்வியை இடையில் நிறுத்தி விடுதல். காலங்காலமாக அரசினால் தீர்க்கப்படாத பிரச்சினையை, உழைக்கும் வர்க்கப் புரட்சி முடிவுக்கு கொண்டு வந்தது. ஒஹாகாவில் ஆசிரியர்களின் தொழிற்சங்கம் (SNTE) முதலில் ஊதிய உயர்வு கோரித் தான் வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்தது. பின்னர் பிற உழைக்கும் மக்களின் தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் இணைந்து கொண்டனர். மாநிலத் தலைநகரின் மத்தியில் கூடாரங்கள் அமைத்து போராடியவர்கள், விரைவிலேயே நகரம் முழுவதையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.
மெக்சிகோவில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. நகராட்சி, உள்ளூராட்சி அலுவலகங்கள் புரட்சியாளர் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பை, உழைக்கும் மக்களை பிரதிநிதித்துவப் படுத்திய அரசாங்கம் பொறுப்பேற்றது. "ஒஹாகா மக்கள் ஜனநாயக பேரவை" என்று அந்த அரசுக்கு பெயரிடப் பட்டது. ஒவ்வொரு தெருவிலும் புரட்சிக் கமிட்டிகள் உருவாகின. அந்தந்த தெருவில் வாழும் மக்கள் கூடி கமிட்டிக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்தனர். இந்தக் கமிட்டிகளின் பிரதிநிதிகள் ஒன்று கூடி, பேரவைக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்தனர். ஒஹாகா புரட்சிக்கு முன் நின்று உழைத்த ஆசிரியர்கள் சங்கம், பாடசாலைகளை இயக்கியது. மாணவர்களுக்கு வழமையான பாடத் திட்டத்துடன், சமுதாயத்திற்கு தேவையான அறிவையும் புகட்டினார்கள். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட வானொலிச் சேவை, புரட்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றது. அதனால், புரட்சி எந்தளவு முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதை பரந்து வாழும் வெளி மாவட்ட மக்களும் அறிந்து கொண்டனர். சர்வதேச ஆர்வலர்களும், இந்த வானொலி நிலையங்களில் பணியாற்றினார்கள்.
ஒஹாகா புரட்சி நீண்ட காலம் நிலைக்கவில்லை. புரட்சியை வழிநடத்தியவர்களுக்குள்ளே, சிலரது சுயநலப் போக்கு காரணமாக பதவி சுகத்தை நாடிச் சென்று சீர்குலைத்தனர். பிற மாநிலங்களுக்கு புரட்சியை கொண்டு செல்லும் திட்டங்களும் அறவே இருக்கவில்லை. (அனார்கிஸ்டுகள், டிராஸ்கிஸ்டுகள் செல்வாக்கு அதிகம்.) மெக்சிகோ மத்திய அரசு இராணுவ அடக்குமுறையை ஏவி விட்டது. வானொலி நிலையத்தில் பணியாற்றிய ஒரு சர்வதேசிய ஆர்வலர் கூட, இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார். இராணுவத்தின் எதிர்ப் புரட்சி நடவடிக்கைகள் சிறிய அளவில், நிதானமாக நடந்து கொண்டிருப்பதால், வெளியுலகத்திற்கு செய்தி போய்ச் சேர்வதில்லை. உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்களும், பொருளாதார நெருக்கடிகளும், மெக்சிகோவில் புதிய புரட்சிகளை தோற்றுவிக்கும். தென்-மேற்கு அமெரிக்க மாநிலங்களில் ஸ்பானிய மொழி பேசும் மெக்சிக்கர்கள் கணிசமான அளவில் வாழ்கின்றமை குறிப்பிடத் தக்கது. காலங்காலமாக நடைமுறையில் உள்ள, ஐரோப்பாவை, இஸ்ரேலை மையப் படுத்திய அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையை மாற்றும் சக்தி அவர்களுக்குண்டு. அமெரிக்காவின் கொல்லையில் அமர்ந்திருக்கும் மெக்சிகோவில் சுழன்று கொண்டிருக்கும் புரட்சிப்புயல், வல்லாதிக்கத்தின் கதவுகளை தட்டிக் கொண்டிருக்கிறது.
(முற்றும்)
தொடரின் முன்னைய பதிவு :
1 மெக்சிகோ: உன்னத நாகரீகங்களின் தாயகம்
2 அமெரிக்காவோ அருகில், ஆண்டவனோ தொலைவில்
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Tuesday, January 17, 2012
அவுஸ்திரேலிய தொலைக்காட்சியில் இந்திய- மாவோயிஸ்ட் போராளிகள்
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Monday, January 16, 2012
எல்லாளன்: இன சமத்துவக் காவலனான சமணத் தமிழ் மன்னன்


[மகாவம்சம் : சிங்கள இனவாதிகளின் கேலிச் சித்திரம்] (பாகம் : 3)
தொடரின் முன்னைய பதிவுகள் :
2.துட்ட கைமுனு: தமிழர்களை வெறுத்த தமிழ் மன்னன்!
1.மகாவம்சம் : சிங்கள இனவாதிகளின் கேலிச் சித்திரம்
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Saturday, January 14, 2012
தைப் பொங்கல்: உலக மக்களின் வர்க்க பேதமற்ற, சமதர்மத் திருநாள்
உலகத்தில் தமிழர்கள் மட்டுமே வாழ்வதாக நினைத்துக் கொண்டிருக்கும் "அறிவுஜீவிகள்", இன்றைக்கும் அவ்வாறு தான் நம்புகின்றனர். சில வருடங்களுக்கு முன்னர், "தைப்பொங்கல் தினத்தை புத்தாண்டாக கொண்டாட வேண்டுமா?" என்று, நமது தமிழ் அறிஞர்கள் எல்லாம் ஒன்று கூடி விவாதம் செய்து கொண்டிருந்தார்கள். உழவர் திருநாளான பொங்கலும், புது வருடப் பிறப்பும் ஒரே காலத்தில் வருகின்றது. இரண்டுமே சரி தான். அதே நேரம், பண்டிகையின் வேறு சில கூறுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை.
சாதி, மத, வர்க்கங்களைக் கடந்த ஒரேயொரு சமத்துவமான பண்டிகை நாள் பொங்கல் மட்டுமே. பொங்கல் கொண்டாடுவது, தமிழர்களுக்கு மட்டுமே உரிய தனிச் சிறப்பு அல்ல. உலகின் பண்டைய நாகரீகங்களுக்குப் பொதுவான தினம் அது. பொங்கல் தமிழர்களுக்கு மட்டுமே விசேஷமான பண்டிகை அல்ல, பல உலக இனங்களுக்குப் பொதுவானது.
பிற்காலத்தில் தோன்றிய மதங்கள், அதன் முக்கியத்துவத்தை மறைத்து விட்டன. மேற்குலகில் கிறிஸ்தவ மதமும், இந்தியாவில் இந்து மதமும் அந்த மாபெரும் இருட்டடிப்பு வேலையை நிறைவேற்றின. தமிழகத்தில் நீண்ட காலமாக "இந்து எதிர்ப்பு போர்" நடந்து வந்ததால், இந்து மதம் மிகவும் தாமதமாகத் தான் அதனது ஆதிக்கத்தை அங்கு நிலை நாட்டியது. அதனால் தான், பண்டைய தமிழர்கள் கொண்டாடிய பொங்கல் திருநாள் இன்றைக்கும் அழியாமல் பாதுகாக்கப் படுகின்றது.
பழந் தமிழர்கள் பொங்கலுக்கு முதல் நாள், வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை எடுத்து வந்து,ஊரில் உள்ள பொது இடத்தில் போட்டு எரித்தார்கள்.(Bonfire) இந்தப் பழக்கம், பாபிலோன், ஈரான், மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும் காணப் பட்டது. அண்மையில் சைப்ரஸ் நாட்டிற்கு பயணம் சென்றிருந்த வேளை, ஈஸ்டர் தினத்தன்று கிராமங்களில் பொது இடங்களில் நெருப்பு மூட்டுவதை நேரில் பார்த்திருக்கிறேன். அங்கேயும், கிராம மக்கள் தங்கள் வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை கொண்டு வந்து போட்டு, ஊர் கூடி எரிப்பார்கள்.
டிசம்பர் 21 - ஜனவரி 21 வரையிலான நாட்கள், வருடத்திலேயே சூரிய ஒளி குறைவாகக் கிடைக்கும் நாட்கள். அந்த நேரத்தில், சூரியனின் வரவுக்காக வேண்டி வழிபாடு நடத்தும் நோக்குடன், பண்டிகை கொண்டாடுவது உசிதமல்லவா? வட ஐரோப்பாவில், கோடை காலத்தில் மட்டுமே விவசாயம் செய்ய முடியும். பனிக் காலத்தில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டியது தான். பனிக்காலம் ஆரம்பமாகும் முன்னர், பயிரிட்ட உணவுப் பொருட்களை வீட்டிற்குள் கொண்டு வந்து களஞ்சியப் படுத்தி வைத்திருப்பார்கள். யூல் பண்டிகையின் போது, அறுவடை செய்த பொருட்களை உண்டு, களித்து அனுபவிப்பார்கள். வீட்டில் வளர்க்கும் கால்நடைகளின் இறைச்சியும் அப்போது நுகரப்படும்.
பண்டைய தமிழர்கள், அதனை தைப்பொங்கல் தினம் என்று அழைத்தனர். பெயர்கள் வேறாக இருந்த போதிலும், பண்டிகை கொண்டாடப் படுவதன் நோக்கம் ஒன்று தான். பொங்கல் பண்டிகையை புது வருடப் பிறப்பாக கருதினால் அதில் தவறெதுவும் இல்லை. இரண்டும் ஒன்று தான். குறிப்பாக, இஸ்லாத்திற்கு முந்திய ஈரானில், டிசம்பர் 25, யால்டா தினம் கொண்டாடப் பட்டது. யால்டாவில் இருந்து மருவியது தான் யூல். அது மித்ரா (மேஹ்ர்) கடவுளின் பிறந்த தினமாகவும் கொண்டாடப் பட்டது. பண்டைய ஈரானில் யால்டா ஒரு அறுவடை நாளாகவும், அதே நேரத்தில் புது வருடம் பிறப்பதாகவும் கருதப் பட்டது. "யால்டா" என்றால், பிறப்பு என்று அர்த்தம் வரும்.
சூரியனின் பருவகால மாற்றம், உலகம் முழுவதும் ஒரே நாளில் கொண்டாடப் படுவதில்லை. ஜப்பானியர்கள், சீனர்கள், யூதர்கள், ஆப்பிரிக்காவில் டோகன் இனத்தவர்கள், என்று பலவிதமான மக்கள் வெவ்வேறு தினங்களில் ஒரே மாதிரியான பண்டிகையை கொண்டாடுகின்றனர். டிசம்பர் 25 அன்று தான் கிறிஸ்துமஸ் என்று, தீர்மானம் நிறைவேற்றியது, ரோமன் கத்தோலிக்க திருச்சபை மட்டுமே. கிரேக்க, ரஷ்ய கிறிஸ்தவர்கள் ஜனவரி 6 ம் தேதி அன்று தான் கிறிஸ்துமஸ் கொண்டாடுகின்றனர். மேலும் ரோமன் கத்தோலிக்க திருச்சபை தான் சூரியக் கலண்டரை அமுல் படுத்தியது. அதற்கு முன்னர், சந்திரக் கலண்டர் உலகின் பெரும்பான்மையான பகுதிகளில் பாவனையில் இருந்தது. அந்தக் கலண்டரின் படி, நாட்கள் மாறி மாறி வரும்.
இன்று பல வலதுசாரி- தமிழ் தேசியவாதிகளுக்கு, அரிவாளும், சுட்டியலும் சின்னத்தைக் கண்டாலே ஒவ்வாமை நோய் வந்து விடுகின்றது. எமது முன்னோர்கள், பொங்கல் தினத்தன்று, நெற் கதிர் அறுக்கும் அரிவாளுக்கும், நிலத்தைப் பண்படுத்தும் கலப்பைக்கும், சந்தனம் பூசி மரியாதை செலுத்துவார்கள். இராணுவ கலாச்சாரத்தை வளர்க்கும் பார்ப்பனீய ஆயுதபூஜையை விட, தமிழ் உழைக்கும் வர்க்கப் பொங்கல் திருநாள் பல மடங்கு சிறந்தது.
மேலதிக தகவல்களுக்கு:
1 Pongal History
2 List of harvest festivals
3 Yule festival
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Thursday, January 12, 2012
துட்ட கைமுனு: தமிழர்களை வெறுத்த தமிழ் மன்னன்!

துட்டகைமுனு என்ற பண்டைய சரித்திர கால மன்னன், இன்று சிங்கள தேசியவாதிகளின் ஒப்பற்ற கதாநாயகன். தமிழர்களுடனான இன முரண்பாட்டுப் போரில், துட்டகைமுனுவின் பெயர் அடிக்கடி உச்சரிக்கப் பட்டது. சிறிலங்கா அரசு கூட, தனது சிறப்புப் படையணிக்கு, "கெமுனு படைப்பிரிவு" என்று பெயரிட்டிருந்தது. "துட்டகைமுனு என்ற சிங்கள மன்னன், எல்லாளன் என்ற தமிழ் மன்னனை போரிட்டு வென்றதாலேயே", அவனுக்கு அவ்வளவு மரியாதை. இந்தக் கதையானது, பாடசாலை மாணவர்களுக்கான, சிங்கள மொழிப் பாட நூலில் கூட எழுதப் பட்டுள்ளது. அப்படியாயின், சரித்திரப் பாட புத்தகத்தில் என்னவெல்லாம் எழுதியிருக்கும் என்பதை இங்கே விளக்கத் தேவையில்லை. சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கான அரச பாடத்திட்டம், ஒரே மாதிரியான சரித்திரத்தை தான் போதிக்கின்றது. இதிலே குறிப்பிட்டளவு பகுதி, மகாவம்சத்தை அடிப்படையாகக் கொண்டது. வேடிக்கை என்னவென்றால், சிங்கள தேசியவாதிகளும், தமிழ்த் தேசியவாதிகளும், ஒரே கதைக்கு வெவ்வேறு விதமான பொழிப்புரைகள் வழங்கி வருகின்றனர்.
எமக்கு சரித்திரம் படிப்பித்த ஆசிரியர் பின்வருமாறு விபரிப்பார். "எமது தமிழ் மன்னர்கள், சிங்களவர்களை ருஹுனு (தென் பகுதி) வரை ஓட ஓட விரட்டி அடித்தார்கள். இன்னும் கொஞ்சம் போனால் கடலுக்குள் குதித்திருப்பார்கள்." வகுப்பறையில் சிரிப்பொலி அடங்க வெகு நேரமாகும். "மகாவம்ச மனோபாவம்", சிங்களவர்களை மட்டுமல்லாது, தமிழர்களையும் ஆட்டிப் படைக்கின்றது. பண்டைய மன்னர்களின் சரித்திரத்தை, சிங்கள, தமிழ் முரண்பாடாக மாற்றுவதில் மகாவம்சம் குறிப்பிடத் தக்க பங்காற்றியுள்ளது. இருப்பினும், அது முழுக்க முழுக்க தமிழின விரோதக் கருத்துக்கள் கொண்டது எனக் கூறி விட முடியாது. மகாவம்சத்தைப் பொறுத்த வரையில், புத்த மதத்தை பாதுகாத்து பேணி வளர்க்கும் மன்னர்கள் எல்லோரும் அதற்கு நாயகர்கள் தான். பௌத்த ஆலயங்களை கட்டிய, அல்லது தானம் வழங்கிய, தமிழ் மன்னர்கள், அமைச்சர்கள், தளபதிகளின் பெயர்களை குறிப்பிடத் தவறவில்லை.
"ஸ்ரீசங்கபோதியின் சேனைத் தலைவனாக விளங்கிய பொத்தசதா என்ற தமிழன், ஜெத்தவன விகாரைக்கு ஒரு பிரிவேனா கட்டிக் கொடுத்தான். மகாகந்தன் என்ற தமிழ் அமைச்சன், தனது பெயரில் ஒரு பிரிவேனா கட்டிக் கொடுத்தான்." ( சூளவம்சம். 22 )
அதே நேரம், புத்த விகாரைகளை நாசப்படுத்தி, மத வழிபாட்டை ஒடுக்கிய மன்னர்களை வில்லன்களாக சித்தரிக்கின்றது. சீதாவாக்க ராஜசிங்க என்ற "பௌத்த-சிங்கள மன்னன்", இந்து மதத்திற்கு மாறி, பல புத்த பிக்குகளை கொன்ற கதை ஒன்று மகாவம்சத்தில் உள்ளது.
"இலங்கையில் முதன்முதலாக பௌத்த சமயத்தை தழுவிய தேவநம்பிய தீசன் என்ற மன்னன் ஒரு தமிழன் தெரியுமா?" என்று கூறி, தமிழ்த் தேசியவாதிகள் நம்மை வியப்பில் ஆழ்த்துவார்கள். ஆனால், அவர்களிடம் "துட்டகைமுனு யார்?", என்று கேட்டால், ஒரு சிங்களவன் என்ற பதில் வரும். தேவநம்பியதீசன் என்ற தமிழ் அரசனின் பரம்பரையில் வந்த துட்டகைமுனு எப்படி சிங்களவன் ஆனான்? துட்டகைமுனுவின் பாட்டன், முப்பாட்டன் பெயர்கள் எல்லாம், "மூத்தசிவன், காக்கவண்ண திஸ்ஸ" என்று தமிழ்ப் பெயராகக் காணப்படுகின்றன. இதனை தமிழ்த் தேசிய இணையத் தளமான Tamil Canadian விரிவாக விளக்குகின்றது.
It may be of interest and value to note that all kings from Muthu Siva (307-247 B.C.) right down to the beginning of the Christian era (a period of 300 years), were Tamils and barring King Muthu Siva, others were Buddhist by faith. The much adored and admired King Duttu Gemunu was a Tamil, both from his father`s side Kavan Tissa, and his mother`s side Vihara Devi, daughter of the Naga King of Kelaniya and a direct descendent of King Uttiya. They were of course, Buddhist by faith. (Source : www.tamilcanadian,com)
அப்படியானால், தமிழ் மன்னர்களான எல்லாளனுக்கும், துட்டகைமுனுவுக்கும் இடையில் எதற்காக போர் மூள வேண்டும்? ஒரே இன மக்களிடையே நிலவும், உறவினரின் கொலைக்காக பழிவாங்கும் பகையுணர்ச்சி தான் காரணம். பரம்பரை பரம்பரையாக பழிவாங்கும் வழக்கம். துட்டகைமுனுவின் பாட்டனான அசெலாவை கொன்று தான், எல்லாளன் ஆட்சியைக் கைப்பற்றினான். தேவநம்பிய தீசன் காலத்தில் இருந்து, இலங்கை முழுவதையும் ஆட்சி செய்து வந்த, புகழ்பெற்ற உள்நாட்டு அரச பரம்பரைக்கு, அது ஒரு பேரிழப்பு. பண்டைய இலங்கையில், எத்தனையோ அரச பரம்பரைகள் இருந்த போதிலும், முதன் முதலாக பௌத்த மதத்தை ஏற்றுக் கொண்ட அரச வம்சம் என்பதால், மகாவம்சத்தினால் போற்றப் பட்டது. தெற்குப் பகுதி குறுநில மன்னர்களை போரில் வென்று, ருஹுனு மாநிலத்தை ஒன்றாக்கிய பெருமை, துட்டகைமுனுவின் தந்தை கவன்திஸ்ஸவை சேரும்.
துட்டகைமுனுவும், அவன் சகோதரனும் சிறுவர்களாக இருந்த காலத்தில், தந்தையான கவன்திஸ்ஸ அவர்களுக்கு தினசரி உணவூட்டுவான். அப்பொழுது "தமிழர்களிடம் யுத்தம் செய்வதில்லை" என்று உறுதிமொழி தருமாறு கேட்டிருக்கிறான். சகோதரர்கள் இருவரும், உறுதிமொழி கொடுக்க மறுத்து சாப்பிடாமல் போயிருக்கிறார்கள். துட்டகைமுனு வாலிபனாக வளர்ந்த காலத்தில், "தமிழர்களுடன் போரிட மறுத்த" தந்தையை சேலை கட்டிக் கொள்ளுமாறு பரிகசித்துள்ளான். ஏதோ ஒரு காரணத்திற்காக, கவன்திஸ்ஸ எல்லாளனுடன் போரிடுவதை விரும்பவில்லை. அந்தக் காரணம் என்ன? அதனை மகாவம்சம் விளக்கவில்லை. ஒரு வேளை, "எல்லாளனுடன் போரிடுவதற்கு இது ஏற்ற தருணம் அல்ல, என்று கவன்திஸ்ஸ நினைத்திருக்கலாம். நீதியும், நேர்மையும் மிக்க மன்னனாக இலங்கை மக்களால் மதிக்கப்பட்ட எல்லாளனை எதிர்ப்பது புத்திசாலித் தனமானதல்ல." என்று நினைத்திருக்கலாம். துட்டகைமுனு இலங்கையை விட்டு புலம்பெயர்ந்து, பல வருடங்கள் மலேயாவில் தங்கியிருந்திருக்கிறான். அவன் தகப்பனின் சொல் கேளாத தனயன் என்பதால் தான், "துஷ்ட காமினி" (துட்ட கைமுனு அல்லது துட்ட கெமுனு) என்று பெயர் வந்தது.
இலங்கை முழுவதும், சிங்களவர், தமிழர் பேதமின்றி, அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் எல்லாளனின் புகழ் பரவியிருந்தது. இந்துக்கள் மட்டுமல்லாது, பௌத்தர்களாலும் மதிக்கப் பட்ட எல்லாளனை, போரிட்டு வெல்வது அரசியல் தற்கொலைக்கு சமமாகும். மலேயாவில் இருந்து திரும்பிய துட்டகைமுனு, எல்லாளன் மீது போர் தொடுக்க தக்க தருணம் பார்த்துக் காத்திருந்தான். எல்லாளன் நீதிநெறி தவறாத அரசனாக ஆட்சி புரிந்த போதிலும், அவனது பிற்கால ஆட்சிக் காலத்தில், சில பௌத்த விரோத நடவடிக்கைகள் இடம்பெற்றன. குறுகிய மதவாத, இனவாதக் கண்ணோட்டத்துடன் செயற்பட்ட, சில குறுநில மன்னர்களும், தளபதிகளுமே அதற்கு காரணம். அவர்களால் துன்புறுத்தப்பட்ட புத்த பிக்குகள் எல்லாளனின் நாட்டை விட்டோடி, துட்டகைமுனுவின் நாட்டில் அடைக்கலம் புகுந்தனர்.
உண்மையில், எல்லாளனின் வீழ்ச்சி அப்போதிருந்தே ஆரம்பமாகி இருக்க வேண்டும். துட்டகைமுனு, "பௌத்த மதத்தை மீட்பதற்கான புனிதப்போரை" அறிவிப்பதற்கு, அது போன்ற சம்பவங்கள் களம் அமைத்துக் கொடுத்தன. எல்லாளனின் பூர்வீகம் சோழ மண்டலம் என்பதால், அன்னியர்கள் மீதான வெறுப்புணர்வும் சேர்ந்து கொள்ளவே, அதிர்ஷ்டக் காற்று துட்டகைமுனு பக்கம் வீசியது. எல்லாளனின் ஆட்சிக் காலத்தில், இந்துக்களும், பௌத்தர்களும் ஒரு தாய் மக்களாக சரிசமமாக நடத்தப் பட்டனர். அதனால் தான், எல்லாளனின் ஆட்சியை நாற்பத்துநான்கு ஆண்டுகள் யாராலும் அசைக்க முடியவில்லை. இந்த உண்மையை, குறுகிய இனவாத மனோபாவம் கொண்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு வேளை, எல்லாளன் இன்று ஆண்டிருந்தால், சிங்களவர்களையும், தமிழர்களையும் சகோதரர்களாக கருதிய காரணத்திற்காக, அவனுக்கு துரோகிப் பட்டம் சூட்டியிருப்பார்கள்.
துட்டகைமுனு ஒரு தமிழன், அவனது படையில் தமிழ் வீரர்களும் இருந்துள்ளனர். அப்படியாயின், மகாவம்சம் எதற்காக தமிழர்களை எதிரிகளாக சித்தரிக்கின்றது? இதற்கான விடையை, கிறிஸ்தவ மத வரலாற்றில் இருந்து புரிந்து கொள்ளலாம். அதாவது, இயேசுவும், அவரது சீடர்களும் யூதர்கள். ஆனால், விவிலிய நூலின் புதிய ஏற்பாட்டில் யூதர்களுக்கு எதிரான வாசகங்கள் காணப் படுகின்றன. மகாவம்சம் தமிழர்களை பகைவர்களாக சித்தரிக்கும் அதேயளவு வன்மத்துடன், பைபிள் யூதர்களை சித்தரிக்கின்றது. அதற்கு காரணம், ஆதிக் கிறிஸ்தவ பரப்புரையாளர்களின் பூர்வீகம் யூத இனமாக இருந்த போதிலும், அவர்கள் கிரேக்க மொழி பேசினார்கள்.
கிரேக்க மொழியை தாய்மொழியாகக் கொண்ட யூதர்கள் தான், பிற்காலத்தில் கிறிஸ்தவ மதத்தை தழுவினார்கள். அவர்கள், யூத சமயத்தை பின்பற்றிய ஒரே இனத்தை சேர்ந்த மக்களிடம் இருந்து, தங்களை "வேறு இனமாக" காட்டிக் கொள்ள விரும்பினார்கள். அதன் விளைவு தான், யூதர்களை கெட்டவர்களாக சித்தரிக்கும் பிரச்சார அணுகுமுறை. மகாவம்சத்தில் காணப்படும் தமிழர் விரோத கருத்துகளின் மூலமும், நோக்கமும் அது தான். அதாவது, பௌத்த மதத்தை பின்பற்றிய தமிழர்கள், தமக்கென சொந்தமாக சிங்கள மொழி ஒன்றை உருவாக்கிக் கொண்டனர். வரலாற்றில் செயற்கையாக உருவாக்கப் படும் இனம் ஒவ்வொன்றும், தனக்கென பிரத்தியேகமான பூர்வீகக் கதைகளையும் கற்பித்துக் கொள்ளும். அதற்கு சிங்கள இனமும் விதி விலக்கல்ல.
மகாவம்சம் பற்றிய பல்வேறு வாதப் பிரதிவாதங்களுக்கு காரணம், அதனது தவறான மொழிபெயர்ப்பு. இந்திய இந்துக்களுக்கு சமஸ்கிருதம் போன்று, இலங்கை (சிங்கள) புத்தர்களுக்கு பாளி புனித நூல்களின் மொழியாகவிருந்தது. சமஸ்கிருதம் போன்றே, பாளி மொழியும் பிற்காலத்தில் யாராலும் பேசப்படாமல் அழிந்து போனது. 19 ம் நூற்றாண்டில், இலங்கையை ஆண்ட ஆங்கிலேயர்கள் மகாவம்சத்தை கண்டெடுத்தார்கள். 1837 ல், George Turnour என்ற ஆங்கிலேய அரச அதிகாரி, மகாவம்சத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
ஆங்கிலேயர்களைப் பொறுத்த வரையில், "இலங்கை சிங்களவர்களின் நாடு. தமிழர்கள் இந்திய படையெடுப்பாளர்களின் பின்னால் ஒட்டிக் கொண்டு வந்தவர்கள்." இன்றைக்கும் பல பிரிட்டிஷ்காரர்களின் மனதில் மறைந்துள்ள தவறான அபிப்பிராயம், மகாவம்சத்தை மொழிபெயர்த்த காலத்திலும் இருந்திருக்கும். இன்றைக்கு நாம் வாசிக்கும் மகாவம்ச மொழிபெயர்ப்புகள் யாவும், ஆங்கில மொழியில் எழுதப் பட்ட மூலப் பிரதியில் இருந்து மொழிபெயர்க்கப் பட்டவை தான். சிங்களவர்களை ஆரியர்கள் என்றும், தமிழர்களை திராவிடர்கள் என்றும் சமூக விஞ்ஞானம் போதித்த ஆங்கிலேய இனவாத கற்பிதத்திற்கு ஏற்றதாக, இந்த மொழிபெயர்ப்புகள் (மொழி திரிப்புகள்) அமைந்துள்ளன.
மகாவம்சத்தின் சிங்கள மொழிபெயர்ப்பும் பிற்காலத்தில் எழுதப் பட்டது தான். இதனால், இந்த மொழிபெயர்ப்புகள் யாவும் மூலப் பிரதியில் இருந்து மாறியிருக்க வாய்ப்புண்டு. துட்டகைமுனுவின் தாயின் வரலாற்றைக் கூறும் கதையில் காணப்படும் முரண்பாடே அதற்கு ஒரு உதாரணம். துட்டகைமுனுவின் தாயான விஹாரமகாதேவி, களனி நாட்டை (இலங்கையின் மேல் மாகாணம்) சேர்ந்த இளவரசி என்று, ஒரு மொழிபெயர்ப்பில் எழுதப் பட்டுள்ளது. அவள் கல்யாணி நாட்டை சேர்ந்த இளவரசி என்று இன்னொரு மொழிபெயர்ப்பு கூறுகின்றது. இவ்விரண்டில் எது சரியானது? இது ஒன்றும் கவனக்குறைவால் ஏற்பட்ட எழுத்துப் பிழையல்ல.
கல்யாணி நாடு, மலேசியா அல்லது இந்தோனேசியாவுக்கு அருகில் இருந்த தீவாகும். அதனை சுனாமி தாக்கி அழித்தாக செவிவழிக் கதை ஒன்றுண்டு. அதன் அடிப்படையில் பார்த்தால், ராணி விஹாரமகாதேவி ஒரு சிங்களத்தியோ, அல்லது தமிழச்சியோ அல்ல என்பது நிரூபணமாகின்றது. ஆனால், ஒரு அந்நிய நாட்டுப் பெண்ணான, வேறொரு இனத்தை சேர்ந்த விகாரமகாதேவி தான், அதிகமான தமிழர் விரோதப் போக்கை கொண்டிருந்தாள் என்பது வியப்புக்குரியது. தனது மகன் துட்டகைமுனு குழந்தையாக இருக்கும் பொழுதே, அவன் மனதில் தமிழர்கள் மீது வெறுப்புணர்வை ஊட்டி வளர்த்திருக்கிறாள். போர்க்களத்திற்கு நேரில் சென்று படை நகர்த்திய பெண்ணாக போற்றப்படும், விகாரமகாதேவி தமிழர்களை வெறுக்க காரணம் என்ன?
(தொடரும்)
தொடரின் முன்னைய பதிவுகள் :
மகாவம்சம் : சிங்கள இனவாதிகளின் கேலிச் சித்திரம்
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Tuesday, January 10, 2012
நூல் அறிமுகம் : காசு ஒரு பிசாசு
நூல் பற்றிய சிறிய அறிமுகம்:

2008 ம் ஆண்டு, உலகை உலுக்கிய வீட்டுக்கடன் நிதி நெருக்கடியின் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. அமெரிக்காவில் மையம் கொண்ட நெருக்கடி, ஐரோப்பா ஆசியா எங்கும் பரவியது. வங்கிகள், தொழில் நிறுவனங்கள் திவாலாகின. லட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்தனர். அந்த நேரத்தில் திறந்த பொருளாதாரக் கொள்கை குறித்த அதிருப்தியும், சந்தை குறித்த விமர்சனங்களும் பரவலாக எழுந்தன. அது வரை காலமும் முதலாளித்துவ பொருளாதாரத்தை சிறப்பானதாக கூறிக் கொண்டிருந்தவர்கள், அதன் குறைகளை பகிரங்கமாக ஏற்றுக் கொண்டார்கள். இந்த தருணத்தில், திடீரென வருமானம் இழந்த சாமானிய மக்கள் மத்தியிலும் பொருளாதாரம் குறித்து அறியும் ஆவல் மேலோங்கியது. அதுவரை காலமும் மிகச் சிக்கலான பொருளாதார அடிப்படைகளை, துறை சார்ந்த நிபுணர்கள் பொது மக்களுக்கு தெளிவு படுத்தவில்லை.
நெருக்கடிக்கு பின்னர் தோன்றிய விழிப்புணர்வு, சாதாரண மக்கள் மத்தியிலும் பொருளாதாரம் என்றால் என்ன என்று அறியும் ஆவலை தூண்டியது. அதன் விளைவாக உருவானதே இந்த நூலில் உள்ள கட்டுரைகள். இவற்றை எழுதிய நான் ஒன்றும் பொருளாதார நிபுணர் அல்ல. எம்மைச் சுற்றியுள்ள பொருளாதாரத்தை புரிந்து கொள்ள, பல்கலைக்கழகத்தில் பொருளியல் படிப்பில் பட்டம் அவசியமில்லை. பொருளாதார நெருக்கடிகளை ஒரு சாதாரண உழைப்பாளியாக எதிர்கொண்டேன். அதனால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான மக்களில் நானும் ஒருவன். ஆகவே எமது தலைவிதியை தீர்மானிக்கும் புரிந்து கொள்ள எமக்கு உரிமை உண்டு என நம்புகிறேன். அந்த தேடல் இங்குள்ள கட்டுரைகள் எங்கும் விரவிக் கிடக்கின்றது. தற்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து முதலாளித்துவம் மீண்டு விட்டதாக கருத்துகள் திணிக்கப்படுகின்றன. இருப்பினும் சந்தைப் பொருளாதாரம் நெருக்கடி எனும் சுழற்சிக்குள் அடிக்கடி சிக்கிக் கொள்வது வழமை. இந்த நூலில் உள்ள கட்டுரைகளை, 2008 ஆண்டு கால பின்புலத்துடன் வாசிக்கவும். நாம் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். அப்படியான தருணத்தில், கடந்த காலத்தை பின்னோக்கிப் பார்க்க, அவற்றில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள எனது கட்டுரைகள் உதவும் என நம்புகின்றேன்.
இந்த நூலில் உள்ள கட்டுரைகள் பெரும்பாலும் தற்கால பொருளாதார அமைப்பை விமர்சிக்கின்றது. இருப்பினும் சில செய்திக் கட்டுரைகள், மேற்குலக நாடுகளில் தன்னெழுச்சியாக தோன்றிய மக்கள் போராட்டங்களையும் பதிவு செய்துள்ளன. ஒரு தேசத்தின் பொருளாதாரக் கட்டமைப்பு பாதிக்கப்படும் பொழுது, வேலை நிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் மட்டுமல்லாது, ஆயுதப் போராட்டங்களும் வெடிக்கின்றன. பொருளாதாரத்திற்கும் அரச அடக்குமுறைக்கும், தீவிரவாதத்திற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. மக்கள் மாற்றங்களுக்காக காத்திருக்கிறார்கள். சிறு பொறியில் இருந்து காட்டுதீ பரவுவது போல, பொருளாதார பிரச்சினைகள் மாபெரும் புரட்சிகளை பிரசவித்துள்ளன.
அன்புடன்,
கலையரசன்
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Monday, January 09, 2012
மகாவம்சம் : சிங்கள இனவாதிகளின் கேலிச் சித்திரம்

கி.பி. 400 ம் நூற்றாண்டளவில் மகாவம்சம் எழுதப் படுவதற்கு முன்னர், தீபவம்சம் என்றொரு நூல் இருந்தது. அந்த நூல் குறித்து, வெளியில் அறிந்தவர்கள் குறைவு. தீபவம்சத்தில் எழுதப் பட்ட சரித்திரக் குறிப்புகள், மகாவம்சத்தில் பிரதி செய்யப்பட்டுள்ளன. மகாவாம்சம் எழுதிய மகாசேன தேரர், அந்தக் காலத்திய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப எழுதியுள்ளார். அவரது அரசியல் நிலைப்பாட்டில் இருந்து, துட்டகைமுனு அரசனை நாயகனாக சித்தரிக்கின்றார். மகாவம்சத்தில் வேறெந்த அரசனுக்கும் கொடுக்கப்படாத முக்கியத்துவம், துட்ட கைமுனுவுக்கு கிடைத்துள்ளது. நூலில் கிட்டத்தட்ட அரைவாசிப் பகுதி, அந்த மன்னனின் சரித்திரத்தைக் கூறுவதற்காக ஒதுக்கப் பட்டுள்ளது.
இலங்கையில் துட்டகைமுனு என்ற மன்னன் வாழ்ந்த காலம் கி.மு. 161 - 137. இதற்கும் மகாவம்சம் எழுதப்பட்ட காலத்திற்கும் இடையிலான இடைவெளியைக் கவனிக்கவும். சுமார் 500 ஆண்டு இடைவெளிக்குள், இலங்கைத் தீவில் பல்வேறு அரசியல்/பொருளாதார/சமுதாய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். நமது காலத்தில் சில சரித்திர நாயகர்களை போற்றி, அவர்களைப் பற்றிய இலக்கியங்களைப் படைப்பது போன்று தான், மகாவம்ச காலத்திலும் நடந்திருக்கும். மகாவம்சம் எழுதப் பட்ட காலத்தில் இடம்பெற்ற, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இலங்கையின் தலைவிதி, அந்தக் காலத்திலும் இந்தியாவில் நடக்கும் மாற்றங்களுடன் பின்னிப் பிணைந்திருந்தது.
அசோக சக்கரவர்த்தி காலத்தில், இந்தியா முழுவதும் பரவியிருந்த பௌத்த மதம் பிற்காலத்தில் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருந்தது. தமிழகத்தில் பக்தி மார்க்கம் என்ற பெயரில், சைவ சமய மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஒரு காலத்தில் கவனிக்கப் படாத குறுநில மன்னர்களாக இருந்த சோழர்கள், வட நாட்டு பார்ப்பனர்கள் உதவியுடன் ஆட்சியை ஸ்திரப் படுத்தினர். சோழ சாம்ராஜ்யம் விஸ்தரிக்கப் பட்ட காலத்தில், பிராமணீயத்தை ஏற்றுக் கொண்ட சைவ சமயம் அரசு மதமாக அங்கீகரிக்கப் பட்டிருந்தது. சைவ சமயம் ஆட்சியாளர்களின் மதமாக ஆதிக்கம் செலுத்திய காலத்தில், பிற மதங்கள் ஒடுக்கப் பட்டன. பௌத்த, சமண மதங்கள் மட்டுமல்ல, இந்து மதத்தின் பிரிவாக கருதப்படும் வைஷ்ணவமும் அடக்குமுறைக்கு உள்ளானது.
சோழர்களின் காலத்திற்கு முன்னரே, தமிழகத்தில் பௌத்த மதம் ஏறக்குறைய அழிந்து விட்டிருந்தது. அந்த இடத்தை சமண மதம் பிடித்திருந்தது. அதனால், சைவ மத ஆதிக்க சக்திகள், சமண மதத்தை அழிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தின. பௌத்த மதத்தை சேர்ந்த தமிழர்கள், ஏற்கனவே இலங்கைக்கு தப்பியோடி புகலிடம் கோரியிருந்தனர். இவர்களில் பல பௌத்த துறவிகளும் அடக்கம். இன்றைக்கு அகதிகளாக புலம்பெயரும் மக்கள், எத்தகைய கோரமான கதைகளை காவிக் கொண்டு வருவார்கள், என்பதை நான் விளக்கத் தேவையில்லை. அது போன்று தான், அந்தக் காலத்தில் இலங்கைக்கு புலம்பெயர்ந்த தமிழக பௌத்த அகதிகள், சோழர்களின் கொடுமைகளை கூறும் கதைகளை காவிச் சென்றிருப்பார்கள்.
பிற்காலத்தில் சோழர்கள் இலங்கையையும் கைப்பற்றி தமது சாம்ராஜ்யத்துடன் இணைப்பதற்கு முயற்சித்தனர். இராஜேந்திர சோழன் காலத்தில் அந்த எண்ணம் நிறைவேறியது. இலங்கையும் சோழ சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகியது. இத்தகைய சரித்திரப் பின்னணியில் தான் மகாவம்சம் எழுதப் பட்டது. அதாவது, சோழ ஏகாதிபத்தியம், பிராமணிய-சைவ மத ஆதிக்கம், இவற்றிற்கு எதிரான, ஒரு வகை "பௌத்த மத தேசியவாதத்தை" உருவாக்குவதே, மகாவம்சம் எழுதியவர்களின் நோக்கமாக இருந்திருக்கும். நமது காலத்திற்கு முந்திய நூல்களையும், நாயகர்களையும் அந்தக் காலத்துடன் பொருத்திப் பார்க்க வேண்டும். இல்லாவிட்டால், வரலாற்றுத் திரிபுகளும், தவறான கருத்துகளும் நமது கால அரசியலை தீர்மானிக்க வைத்து விடும்.
இலங்கை மீதான சோழர்களின் படையெடுப்பு கூட, அவர்களின் தமிழக எதிரியான பாண்டிய மன்னனின், இரத்தினக் கற்கள் பதித்த முடியை அபகரிப்பதற்காகவே நிகழ்ந்துள்ளது. அதாவது, அன்று இலங்கையை ஆண்ட சிங்கள மன்னர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இடையில் நெருங்கிய ராஜதந்திர உறவு காணப்பட்டது. பல சிங்கள மன்னர்களும், பிரபுக்களும், பாண்டிய நாட்டு உயர்குல தமிழ் பெண்களை மணம் முடித்திருந்தனர். இத்தகைய நெருங்கிய உறவின் நிமித்தம் தான், சோழர்களால் ஒடுக்கப்பட்ட பாண்டிய மன்னன், தனது பொன்முடியை பாதுகாப்பாக இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்தான். ஆகவே, அன்றைய போர்களை சிங்கள-தமிழ் முரண்பாடாக கருதுவது அறியாமையின் பாற்பட்டது. சைவ- பௌத்த முரண்பாடு கூட, சில வேளை ஆட்சியாளர்களின் ஆதிக்க வெறிக்கு பயன்படுத்தப் பட்டிருக்கலாம். ஆனால், அது அன்றைய அரசியலில் பெருமளவு தாக்கம் செலுத்தவில்லை. ஏனெனில், இலங்கை முழுவதையும் கைப்பற்றி ஆண்ட சோழர்கள், சைவக் கோயில்களை மட்டும் கட்டவில்லை. உதாரணத்திற்கு, தமிழ் பௌத்தர்கள் வழிபடுவதற்காக, சோழர்கள் கட்டிக் கொடுத்த பௌத்த ஆலயம், இன்றைக்கும் திருகோணமலையில் இடிபாடுகளுடன் காணப் படுகின்றது.
எல்லாளன், துட்டகைமுனு வாழ்ந்த காலம், சோழர்களின் வருகைக்கு முந்தியது. குறைந்தது 500 வருடங்கள் இடைவெளி காணப்படுகின்றது. எல்லாளனின் வருகைக்கு பல வருடங்களுக்கு முன்னர், சேனன், கூத்திகன் என்ற இரு குதிரை வியாபாரிகள் இலங்கையின் ஆட்சியை கைப்பற்றினார்கள். இவர்களும் தமிழர்கள் என்றே, இன்று பலர் கருதிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் குஜராத்திகளாக இருக்கலாம் என்றும் ஒரு அபிப்பிராயம் உண்டு. எல்லாளன் சோழர் வம்சத்தை சேர்ந்ததாக சில வரலாற்று அறிஞர்கள் கூறுவதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. எல்லாளன் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்ததாக, பண்டைய சரித்திர ஆவணங்கள் கூறுகின்றன. எல்லாளன் ஒரு தமிழனா, கன்னடனா, மலையாளியா, என்பது யாருக்கும் தெரியாது. (சேனன், கூத்திகன், எல்லாளன் ஆகியோரை "மலபாரிகள்" என்றே சரித்திர ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.) எல்லாளனின் பூர்வீகம் பற்றி அதிகம் தெரியா விட்டாலும், மகாவம்சத்தில் எழுதியதை வைத்து தான், எல்லாளனை சோழனாகவும், தமிழனாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். மகாவம்சத்தில் எழுதியுள்ளதை எல்லாம் உண்மை என்று நம்பினால், நாம் அதற்கு புனித நூல் அந்தஸ்து கொடுக்கிறோம் என்று தான் அர்த்தம்.
நமது காலத்தில், வரலாற்று உண்மைகளையும், கற்பனையும் கலந்து, சரித்திர நாவல்கள் எழுதுவதைப் போன்று தான், மகாவம்சமும் எழுதப் பட்டிருக்கலாம். இருப்பினும், மகாவம்சம் தனது இனத்தின் எதிரிகள் யார் என்று வரையறை செய்கின்றது. பிராமணீய ஆதிக்கத்தை நிலைநாட்டிய சோழர்களை மட்டுமே, இனவிரோதிகளாக சித்தரிக்கின்றது. மகாவம்சம் தமிழர்களை எதிரிகளாக சித்தரிப்பதாக சில இடங்களில் தோன்றலாம். ஆனால், அதே மகாவம்சம், தமிழர்களான பாண்டியர்களை எதிரிகளாக காட்டவில்லை. "சிங்கள" மன்னர்கள் வசமிருந்த தமிழ்ப் படையினர் பற்றிய குறிப்புகள் ஆங்காங்கே வருகின்றன. அப்படியானால், மகாவம்சம் எதிரியாக சித்தரிக்கும் "அந்தத் தமிழர்கள் யார்?" சந்தேகத்திற்கிடமின்றி, ஒரு இந்து சாம்ராஜ்யத்தை நிறுவிய சோழர்கள் தான். மகாவம்சம் எழுதப்பட்ட காலத்தின் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு, எல்லாளன்- துட்டகைமுனு போர் பல வரலாற்றுத் திரிபுகளுடன் எழுதப் பட்டது.
எது எப்படி இருப்பினும், துட்டகைமுனு ஒரு சிங்கள மன்னன் என்று மகாவம்சம் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. துட்டகைமுனு வாழ்ந்த காலத்தில், சிங்களவர்கள் என்று அடையாளம் காணக் கூடிய இனம், வரலாற்றில் தோன்றியிருக்கவில்லை. கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு பின்னர் தான் சிங்கள மொழி, அரசவை மொழியாகியது. அப்போதும், சிங்கள மன்னர்களினால் ஆளப்பட்ட குடிமக்கள் எல்லோரும் சிங்களவர்களாக இருக்கவில்லை. டச்சு காலனிய ஆட்சி நடந்த 17 ம் நூற்றாண்டில் கூட, அனுராதபுரத்தில் வாழ்ந்த மக்கள் தமிழ் மொழி பேசினார்கள். இதனை, கண்டி மன்னனின் சிறையில் இருந்து தப்பியோடிய ஆங்கிலேய மாலுமியான ரொபேர்ட்ஸ் நொக்ஸ் பதிவு செய்துள்ளார்.
“The people stood amazed as soon as they saw us, being originally Malabars, though subjects of Kandy. Nor could they understand the Sinhalese language in which we spake to them, and we stood looking one upon another until there came one that could speak the Sinhalese tongue who asked us, from whence we came? We told them from Kandy, but they believed us not, supposing that we came up from the Dutch from Mannar. So they brought us before their Governor. He not speaking Sinhalese spake to us by an interpreter.” (Robert Knox in the Kandyan Kingdom, Ed. E.F.C.Ludowyk, p 50).
அனுராதபுரத்தில் வாழ்ந்த தமிழர்கள், காலச் சுழற்சியில் சிங்களவர்களாக மாறியிருக்கிறார்கள். இருப்பினும் அனுராதபுரத் தமிழர்களில் ஒரு பிரிவினர் முஸ்லிம்களாக, இன்றைக்கும் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எல்லாளன் சமாதி இருந்த இடம், இஸ்லாமிய தர்க்காவாக அண்மைக் காலம் வரையில் வழிபடப் பட்டு வந்தமை, அதற்கு சான்றாகும். சில மாதங்களுக்கு முன்னர், பௌத்த மத அடிப்படைவாதிகள் அந்த தர்க்காவை இடித்து தரைமட்டமாக்கினார்கள். அதற்கு அவர்கள் கூறிய காரணம், "அந்த இடத்தில் துட்டகைமுனுவின் சமாதி இருந்தது" என்பது தான். (இந்தியாவில் இடம்பெற்ற பாபர் மசூதி இடிப்பு ஞாபகத்திற்கு வருகின்றதல்லவா?) எல்லாளனை போரில் வென்ற துட்டகைமுனு, எல்லாளனுக்கு சமாதி கட்டினான். அந்த வழியாக பயணம் செய்பவர்கள் சமாதிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டான்.
ஆயிரக் கணக்கான வருடங்கள் உருண்டோடிய பிறகு, எல்லாளன் சமாதியின் முக்கியத்துவம் குறைந்து கொண்டு போனது. இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில், எல்லாளன் சமாதி என்ற ஒன்று இருப்பதையே, மக்கள் மறந்து விட்டார்கள். சிங்கள-பௌத்த பேரினவாதிகள் அந்த இடத்தில் துட்டகைமுனு சமாதி இருந்ததாக உரிமை கோரினார்கள். உண்மையில் துட்டகைமுனுவின் சமாதி எங்காவது கட்டப்பட்டதாக வரலாற்றுக் குறிப்பு எதுவும் இல்லை. இத்தனை காலமாக, ஒரு தமிழ் தேசியவாதி கூட, எல்லாளன் சமாதிக்கு உரிமை கோராதது ஆச்சரியத்திற்குரியது! சிங்கள- பௌத்த பேரினவாதிகள், எல்லாளன் சமாதியை தகர்த்த செய்திக்கு கூட, எந்தவொரு தமிழ்த் தேசிய ஊடகமும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
எல்லாளன் மீது துட்டகைமுனு போர் தொடுக்க காரணம் என்ன? மகாவம்சம் கூற விளைவதைப் போல, துட்டகைமுனுவின் மனதில் தமிழின வெறுப்பு காணப்பட்டதா? மகாவம்சம் தனது அரசியல் நோக்கங்களுக்காக வரலாற்றை திரித்தது என்றால், நமது கால இனவாதிகள் மகாவம்சத்தையே தவறாக மொழிபெயர்த்தார்கள். (மகாவம்சத்தின் மூலம் பாளி மொழியாகும்) "எல்லாளனைப் போன்று, துட்டகைமுனுவும் ஒரு தமிழன். எல்லாளன் ஒரு இந்து மத நம்பிக்கையாளன். துட்டகைமுனு ஒரு பௌத்த மத நம்பிக்கையாளன். அது மட்டுமே வேறுபாடாக இருந்திருக்க வேண்டும். ஒரு பௌத்தனான துட்டகைமுனு, இந்து மத வழிபாட்டையும் கடைப்பிடித்தமை குறிப்பிடத் தக்கது. எல்லாளனை போரில் தோற்கடிக்க கதிர்காமக் கந்தனை வழிபட்டுள்ளான்." தமிழ்த் தேசிய இணையத்தளமான, Tamil Canadian இல், Dr. S. K. வடிவேல் எழுதிய கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடப் பட்டுள்ளது.
The wars fought by Gemunu and Elara were not Sinhala-Tamil wars as maliciously projected by Mahanama. A careful examination of Gemunu’s pedigree will reveal that he was as much a Tamil as Elara, with the difference being that Gemunu was a Buddhist, while Elara was a Hindu. Elara was no enemy of the Buddhists. He was in fact, loved by the Buddhists. The strong hereditary Hindu element in Gemunu (present even today in all Sri Lankan Buddhists) made him a devotee of the Dravidian God Murukan at Kathirkamam. It is said in the Mahawamsa that Gemunu invoked the blessings of the Lord Murukan to endow him with strength to defeat King Elara in battle.
அது சரி, இந்த உண்மைகளை எல்லாம் எதற்காக ஆங்கிலத்தில் மட்டும் எழுத வேண்டும்? தமிழர்கள் தெரிந்து கொள்வதற்காக தமிழில் எழுதக் கூடாதா?
(தொடரும்)
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Friday, January 06, 2012
ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் புதிய பனிப்போர்

நவம்பர் 2011, பராக் ஒபாமா, அவுஸ்திரேலியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்திருந்தார். அமெரிக்க ஜனாதிபதியின் விஜயத்தின் விளைவாக சில முடிவுகள் எட்டப் பட்டன. அவுஸ்திரேலியாவின் வட பகுதியில் உள்ள டார்வின் நகரில் 250 அமெரிக்க மரைன் படையினர் நிறுத்தப் படுவார்கள். மேலதிகமாக 2500 படையினரை அனுப்பும் திட்டம் குறித்து ஆலோசிக்கப் படுகின்றது. இந்தோனேசியாவுக்கு 24 'F - 16' ரக விமானங்கள் விற்கப்படும். அதே காலகட்டத்தில் இடம்பெற்ற அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டனின் பயணங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. மியான்மர் நாட்டு விஜயம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. 54 வருடங்களுக்குப் பின்னர், முதல் தடவையாக ஒரு அமெரிக்க உயர் அதிகாரி அந்த நாட்டிற்கு விஜயம் செய்துள்ளார்.
ஹிலாரி அடுத்ததாக பிலிப்பைன்ஸ் சென்ற செய்தியை அறிவிப்பதில் ஊடகங்கள் அதிக அக்கறை காட்டவில்லை. ஆயினும், அமெரிக்கர்களின் உள்நோக்கத்தை அந்த விஜயம் வெளிப்படுத்துகின்றது. "மேற்கு பிலிப்பைன்ஸ் கடல் பிரச்சினை தீர்க்கப் பட வேண்டும்." என்று கிளிண்டன் கூறியமை சர்ச்சையை உண்டாக்கியது. அதற்கு காரணம், சீனாவுக்கும், பிலிப்பைன்ஸ் நாட்டுக்கும் இடையிலான கடற்பகுதி, "தென் சீனக் கடல்" என்று தான் இவ்வளவு காலமும் அறியப் பட்டு வந்துள்ளது. உலகம் முழுவதும், பூகோள வரைபடங்களில் அவ்வாறு தான் குறிப்பிடப் படுகின்றது. பிலிப்பைன்ஸ் நாட்டில் மட்டும் புழங்கும் "மேற்கு பிலிப்பைன்ஸ் கடல்" என்ற பெயரை, அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம், அவர்கள் கொடுக்க விரும்பும் செய்தி என்ன என்பது வெட்ட வெளிச்சமானது.
சீனா, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இடையிலான கடற்பரப்பில் மீன்பிடி உரிமை பற்றி, இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்கனவே இழுபறி நிலைமை காணப்படுகின்றது. குறிப்பிட்ட கடற்பிரதேசத்தில் சீனப் படகுகள் மீன் பிடிக்கக் கூடாது என்று, பிலிப்பைன்ஸ் தடையுத்தரவு போட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எண்ணை ஏற்றி வரும் கப்பல்கள் அந்த வழியாகத் தான் பயணம் செய்கின்றன. இதனால், அந்தக் கடற்பகுதி சீனாவைப் பொறுத்தவரையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும், பிலிப்பைன்ஸ் சீனாவுடன் மட்டும் கடல் எல்லைக்காக சண்டை பிடிக்கவில்லை. மலேசியா, இந்தோனேசியா போன்ற அயல்நாடுகளுடனும் மீன்பிடி உரிமை, கடல் எல்லை குறித்த சர்ச்சைகள் தீர்க்கப் படவில்லை. அமெரிக்க வெளிவிவகார அமைச்சருக்கு அவை எதுவும் கண்ணில் படவில்லை என்பது ஆச்சரியம்.
அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் ஹிலாரி கிளிண்டன் ஆற்றிய உரையில், சீனாவுடன் நல்லுறவைப் பேண விரும்புவதாகக் கூறினார். இருப்பினும், திரைமறைவில் புதிதொரு பனிப்போருக்கான ஆயத்தங்கள் முன்னெடுக்க படுகின்றன. கடந்த பத்து வருடங்களாக, ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் மட்டுமே அமெரிக்கா கவனம் செலுத்தி இருந்தது. அந்தக் காலகட்டத்தில், சீனா ஆசிய நாடுகளுடன் வர்த்தக உறவுகளை நெருக்கமாக்கிக் கொண்டது. இதன் மூலம், ஆசியக் கண்டத்தில் சீனா தன்னிகரற்ற பொருளாதார வல்லரசாக திகழ்ந்தது. அமெரிக்க உயர் மட்ட விஜயமானது, அவுஸ்திரேலியா என்ற நெருங்கிய உறவினனை, அமெரிக்கா கைவிடவில்லை என்பதைக் காட்டுவதற்காக. ஏற்கனவே ஆப்கானிஸ்தான் போரில் அவுஸ்திரேலிய துருப்புகள் வகித்த பாத்திரமும் குறிப்பிடத் தக்கது. அவுஸ்திரேலியா என்ற தீவு நாடு (அவர்கள் தங்களை ஒருகண்டம் என்று அழைத்துக் கொள்கின்றனர்.) ஆசியக் கண்டத்தை சேர்ந்தது. தமக்கு அயலில் உள்ள சீனாவுடன் மோதுவதற்கு தயாராக, தூரத்தில் இருக்கும் அமெரிக்கர்களை துணைக்கு அழைக்கின்றனர்.
வேறு பல ஆசிய நாடுகளுடனும், அமெரிக்கா இராணுவ உடன்படிக்கைகளை செய்து வருகின்றது. சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளுடன் 1945 ம் ஆண்டிலிருந்து போடப்பட்டு வரும் ஒப்பந்தங்கள், புதிப்பிக்கப் படுகின்றன. ஏற்கனவே, அரசியல் ரீதியாக ஒற்றுமையைக் கொண்டுள்ள, நாடுகளுடனான அமெரிக்க உறவு குறித்து யாரும் அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டார்கள். இருப்பினும், வியட்னாமும், அமெரிக்காவும் கூட்டு இராணுவ ஒத்திகையில் ஈடுபடும் செய்தி நம்ப முடியாத அளவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். நீண்ட காலமாக, அமெரிக்கா வியட்னாமின் பகைவனாக திகழ்ந்தது. இரண்டு நாடுகளும் பல்லாயிரம் மக்களை பலி கொண்ட யுத்தத்தில் ஈடுபட்டிருந்தன.
யுத்தம் நடந்த காலங்களில், ரஷ்யாவும், சீனாவும் வியட்னாமின் கூட்டாளிகள் என்று அமெரிக்கா பரப்புரை செய்து வந்தது. நேற்று வரை, ஜென்மப் பகைவர்களாக ஒருவரை ஒருவர் கொன்று குவித்த அமெரிக்க, வியட்நாமியப் படைகள், இன்று கூட்டாளிகளாக இராணுவ ஒத்திகையில் ஈடுபடப் போகின்றனர். உலகம் எவ்வளவு விரைவாக மாறுகின்றது? கடந்த கால வரலாற்றை எடுத்துப் பார்த்தால், வியட்னாம் அமெரிக்காவுடன் மட்டும் மோதவில்லை. சீனாவுடனும் தீர்க்கப் படாத எல்லைப்போரில் ஈடுபட்டது. வியட்நாம் சோஷலிச நாடாவதற்கு முன்னமே, பல நூறாண்டுகளாக, வியட்நாமியருக்கு சீனா மீதான வெறுப்பு இருந்து வந்துள்ளது. சீனா- வியட்நாம் முரண்பாடுகள் குறித்து அன்று வெளியில் யாரும் அக்கறைப் படவில்லை. இனிமேல் அந்த நிலைமை மாறலாம். இனி வருங்காலங்களில், "சீனாவை ஆக்கிரமிப்பாளன் என்றும், வியட்நாமை பாதுகாக்க வேண்டியது சர்வதேசத்தின் கடமை என்றும்," ஊடகங்கள் புலம்பலாம்.
சுமார் பத்து வருடங்களுக்கு முன்பிருந்தே, சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகின்றது. பத்து வருடங்களுக்கு முன்னர், சீனா மூன்று மில்லியன் பீப்பாய் எண்ணை நாளொன்றுக்கு செலவழித்தது. அதில் மூன்றில் இரண்டு பங்கு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகின்றது. 2008 ம் ஆண்டு, சீனா நாளொன்றுக்கு எட்டு மில்லியன் பீப்பாய் எண்ணை பயன்படுத்தியது. அடுத்து வரும் இருபது வருடங்களில், இந்த அளவு இரு மடங்காகலாம். சீனாவை சூழவுள்ள நாடுகளுடன், அமெரிக்கா இராணுவ ஒப்பந்தங்களை போட்டு வருகின்றது. அதனால், சீனாவும் கடற்பலத்தை பெருக்குவதற்கு முனையலாம். சீனாவிடம் அணுவாயுதங்கள், உலகிற் பெரிய இராணுவம் எல்லாம் இருக்கலாம். ஆனால், வலுவான கடற்படை கிடையாது. அந்த விஷயத்தில் அமெரிக்கா இன்னமும் பலமாகவே உள்ளது. உண்மையில், ஆசிய நாடுகளில் சீனாவின் தலையீடு, இராணுவ பிரசன்னம் பற்றிய செய்திகள் அதிகளவு மிகைப் படுத்தப் பட்டவை. ஆசிய நாடுகளுடன் பொருளாதார நலன்களை விருத்தி செய்வதற்கப்பால், சீனாவின் நடவடிக்கைகள் மட்டுப் படுத்தப் பட்டுள்ளன. ஆனால், அமெரிக்காவோ, ஆசிய நாடுகளுடனான பொருளாதார உறவை விட, இராணுவ உறவிலே அதிக நாட்டம் கொண்டுள்ளது.
---------------------------------------------
அமெரிக்க - சீன பனிப்போர் தொடர்பான முன்னைய பதிவு:
திரையில் கலாச்சார மோதல், மறைவில் வல்லரசு மோதல்
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.