Saturday, February 13, 2010

ஆயிரம் பொய் சொல்லி ஆப்கான் போரை நடத்து !

"முன்னொரு காலத்திலேயே, ஆப்கானிஸ்தான் என்ற நாட்டில் கண்டஹார் என்ற ஊரில் பின் லாடன் என்ற உலக மகாப் பயங்கரவாதி இருந்தானாம். அவன் தனது சாட்டலைட் தொலைபேசியின் உதவியுடன் அமெரிக்க மீதான பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஆணையிடுவானாம். 11 செப்டம்பர் 2001 அன்று, பின் லாடன் அனுப்பிய பயங்கரவாதிகளின் குழு விமானங்களைக் கடத்தி நியூ யோர்க்கில் உள்ள இரட்டைக் கோபுரங்களைத் தகர்த்தார்களாம். தானுண்டு தன் வேலையுண்டு என்று அமைதியாக இருந்த அமெரிக்கா தாக்கப்பட்டதால், மக்கள் வெகுண்டு எழுந்தனர். குடிமக்களின் கோபத்தை தணிப்பதற்காக ஜனாதிபதியானவர் ஆப்கானிஸ்தான் மீது படையெடுக்க உத்தரவிட்டார். நவீன ஆயுதங்கள் சகிதம் இறங்கிய அமெரிக்க படைகள், உலக மகாப் பயங்கரவாதி பின் லாடனையும், அவனுக்கு அடைக்கலம் கொடுத்த தாலிபான் கும்பலையும் அடித்து விரட்டினார்கள். ஜனநாயகம் மீட்கப்பட்டது. உலகை ஆட்டிப்படைத்த பயங்கரவாதிகள் ஒழிந்தார்கள் என்று மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். சுபம்."

21 ம் நூற்றாண்டின் மீட்பராக அவதரித்த ஜோர்ஜ் புஷ் ஆப்கானிஸ்தான் மீது படையெடுக்க கூறிய காரணம் தான் மேலே உள்ளது. அன்று அந்தக் காரணத்தை உண்மை என்றே எல்லோரும் நம்பினார்கள். சர்வதேச ஊடகங்கள் எல்லாம் சேர்ந்து மக்களை மாயைக்குள் வைத்திருந்தன. அமெரிக்கா முதல் ஆவுஸ்திரேலியா வரை, படித்தவர் முதல் பாமரர் வரை, அமெரிக்க அரசு சொன்ன பொய்களை ஏற்றுக் கொண்டார்கள். அமெரிக்கா அறிவித்த பயங்கரவாத எதிர்ப்பு போரை ஆதரித்தார்கள். நவீன உலக வரலாற்றில் கூறப்பட்ட "மிகப் பெரிய பொய்", உலகம் முழுவதும் விலை போனது.

இன்று ஒன்பது வருடங்கள் கடந்த பின்னர், "சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற" ஒபாமாவும் பழைய பல்லவியை பாடுகின்றார். ஆப்கானிஸ்தானுக்கு மேலதிக படைகளை அனுப்புவதற்கு நாள் குறிக்கிறார். "ஆயிரம் அமெரிக்கர்களின் இரத்தக்கறை படிந்த தலிபானுடன் பேசமாட்டோம்." பாதுகாப்பு அமைச்சர் ரொபேர்ட் கேட்சின் பேச்சாளர் கர்ஜிக்கிறார். அன்றிலிருந்து இன்று வரை, ஆப்கான் படையெடுப்புக்கு நியாயமான காரணம் என்று ஒன்றை திரும்ப திரும்ப சொல்கிறார்கள். சர்வதேச பயங்கரவாதி பின்லாடனை ஒப்படைக்க தாலிபான் மறுத்து விட்டது. இந்தக் குற்றச்சாட்டு உணமையல்ல. ஆதாரம்? அமெரிக்க வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஆவணங்கள்!!

அண்மையில் பகிரங்கப் படுத்தப் பட்ட அமெரிக்க வெளிவிவகார அமைச்சு ஆவணங்கள், தாலிபானுக்கும், பின்லாடனுக்கும் இடையிலான முரண்பாடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன. ஆப்கானிஸ்தானில் 1998 ம் ஆண்டில் இருந்தே, தாலிபான் அரசினால் பின்லாடன் ஏறக்குறைய வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். சர்வதேச ஜிகாத்தில் எல்லாம் தாலிபானுக்கு ஆர்வம் இருக்கவில்லை. அமெரிக்காவுடன் நல்லுறவைப் பேணவே தாலிபான் அரசு விரும்பியது. பின் லாடனுக்கு நெருக்கமாக இருந்த முன்னாள் அல் கைதா உறுப்பினர் ஒருவரும், அந்தக் கூற்றுகளை ஒப்புக் கொள்கிறார்.

எகிப்தை சேர்ந்த ஜிகாத் போராளி அபு அல் வாலித் அல் மஸ்ரி, தாலிபான் தலைவர் முல்லா ஒமாருடனும், அல் கைதா தலைவர் பின் லாடனுடனும் நெருங்கிய உறவைப் பேணியுள்ளார். 1998 ல் இருந்து, 2001 ம் ஆண்டு வரையில் ஆப்கானிஸ்தானில் வாழ்ந்துள்ளார். இவரது வாக்குமூலங்கள் ஜனவரி மாத "CTC Sentinal " இதழில் வெளியிடப்பட்டுள்ளன. CTC Sentinal அமெரிக்க அரசின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினால் ( Combating Terrorism Center) வெளியிடப்படுகின்றது. அல் மஸ்ரியின் வாக்குமூலத்தின் படி: "பின் லாடன் அமெரிக்க இலக்குகளை தாக்குவதில்லை என்றும், ஊடகங்களுடன் தொடர்பு வைப்பதில்லை என்றும் வாக்குக் கொடுத்தாதேலேயே ஆப்கானிஸ்தானில் தங்க அனுமதிக்கப்பட்டார். முன்னர் ஒரு தடவை தாலிபான் அரசின் வெளிவிவகார அமைச்சர் முத்தாவாகில்: "கண்காணிப்பதற்கு வசதியாக பின் லாடன் கண்டஹார் நகரில் இருக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார்..." என்று தெரிவித்தார்.

1998 ம் ஆண்டு, ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலே, தாலிபானின் கொள்கை மாற்றத்திற்கு முக்கிய காரணமாகும். கிழக்கு ஆப்பிரிக்காவில் நடந்த அமெரிக்க தூதுவராலய குண்டுவெடிப்புக்கு பதிலடியாகவே அந்த தாக்குதல் நடத்தப் பட்டது. ஏவுகணைத் தாக்குதல் நடைபெற்று இரு நாட்களுக்கு பிறகு தாலிபான் தலைவர் ஒமார், அமெரிக்க வெளிவிவகார அமைச்சுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். பதிவு செய்யப்பட்டு அமைச்சக ஆவணக்காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள உரையாடலில், "பின் லாடன் ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதற்கான ஆதாரங்களை கொடுக்குமாறும், அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும்..." தெரிவித்தார். அந்த சம்பவத்திற்கு பின்னர் தாலிபான் விதித்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்ட பின் லாடன்: "மத நம்பிக்கையாளர்களின் தலைமைக் கமாண்டர் ஓமாரின் உத்தரவுக்கு கட்டுப்படுவதாக..." அல் ஜசீரா பேட்டியில் தெரிவித்தார்.

1998 செப்டம்பர், ஒக்டோபர் மாதங்களில் பின் லாடனை உச்ச நீதிமன்றத்தில் விசாரித்து விட்டு, சவூதி அரேபியாவிடம் ஒப்படைக்க தாலிபான் அரசு முன்வந்தது. ஆனால் அதற்கு முன்னர், அமெரிக்காவிடம் கேட்ட ஆதாரங்களுக்காக காத்திருந்திருக்கிறார்கள். வெளிநாட்டு அமைச்சர் முத்தாவாகில் இது குறித்து மீண்டும் ஒரு தடவை நினைவுபடுத்தி இருக்கிறார். ஏற்கனவே அமெரிக்கா வழங்கிய ஆவணங்கள், வீடியோக்கள் யாவும் பழையவை. அவை எதுவும் பின் லாடனை நேரடியாக தொடர்பு படுத்தவில்லை, என்றும் தெரிவித்துள்ளார். (ஆதாரம்: இஸ்லாமாபாத்தில் கடமையாற்றிய அமெரிக்க பிரதிநிதியுடனான உரையாடல். அமெரிக்க வெளிவிவகார அமைச்சு அறிக்கை.) போதுமான சாட்சியங்கள் இல்லாததால், பின் லாடன் சொந்த விருப்பின் பேரில் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறலாம், என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

1999 ம் ஆண்டு, தாலிபான், பின்லாடன் உறவில் பாரிய விரிசல் தோன்றியது. பின்லாடனுக்கு பாதுகாப்பாக இருந்த அரபு (அல் கைதா) மெய்ப்பாதுகாவலர்களின் ஆயுதங்களைக் களைய எத்தனிக்கப்பட்டது. தாலிபான் அனுப்பிய ஆப்கான் மெய்ப்பாதுகாவலர்கள் பின்லாடனின் பாதுகாப்பை பொறுப்பு எடுக்க சென்றனர். 10 பெப்ருவரி 1999 ல், பின்லாடனின் இல்லத்தை முற்றுகையிட்ட ஆப்கான் வீரர்கள், அல் கைதா உறுப்பினர்களுடன் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டனர். மூன்று நாட்களாக நீடித்த சண்டையின் முடிவில், பின்லாடனின் இல்லம் ஆப்கான் தாலிபான் பாதுகாவலர்களால் பொறுப்பு எடுக்கப்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கையின் போது, பின்லாடன் பாவித்த செய்மதித் தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டது. (ஆதாரம்: New York Times , 4 மார்ச் 1999 )

ஆப்கானிஸ்தானில் இருந்த அல்கைதா பயிற்சி முகாம்கள் யாவும் தாலிபான் உத்தரவின் பேரில் மூடப்பட்டன. ஆயுதங்கள் களையப்பட்ட வெளிநாட்டு ஜிகாத் போராளிகள், ஆப்கானிஸ்தானை விட்டு நாடுகடத்தப் படுவோம் என அஞ்சினார்கள். 2001 ம் ஆண்டு, வடக்கு ஆப்கானிஸ்தானில் யுத்தம் மூண்ட காலத்தில், வெளிநாட்டு ஜிகாதிகளுக்கும் போர்க்களத்தில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அப்போது கூட பின்லாடன் மீது முல்லா ஒமாருக்கு கடுமையான விமர்சனங்கள் இருந்தன. அல்கைதாவுக்கு போட்டி இயக்கமான உஸ்பெகிஸ்தான் இஸ்லாமிய முன்னணிக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. வெளிநாட்டு ஜிகாத் போராளிகள், உஸ்பெகிஸ்தான் இஸ்லாமிய முன்னணி தலைவர் தாகிர் யுல்டாஷின் நேரடிப் பொறுப்பின் கீழ் விடப்பட்டனர்.

மேலதிக விபரங்களுக்கு:
Taliban Did Not Refuse to Hand Over Bin Laden
New offer on Bin Laden
CTC Sentinel’s January Edition
US Air Strike: Isolated in Taliban bastion capital

3 comments:

Anonymous said...

i seen your 3 different articles,sorry to say,
you are a half boiled, (arai vekkadu)

Unknown said...

I welcome, your efforts to bring out the hidden news & thus the hidden agenda. Would like to go through the proofs that you have enlisted and then come back to you.
-Natarajan

Kalaiyarasan said...

Thank you Natarajan.