Wednesday, March 12, 2008

மொரோக்கோ, முரண்பாடுகளின் தாயகம்


சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு மொரோக்கொவை சேர்ந்த யாத்ரீகர் இபுன் படுதா தரை வழியாக பயணம் செய்து இந்தியா, இலங்கை, மாலை தீவுகள் போன்ற தெற்காசிய நாடுகளுக்கும் வந்து பார்த்து குறிப்புகள் எழுதி வைத்திருந்திருக்கிறார். நம்பகத்தன்மை வாய்ந்த அந்த குறிப்புகள் இன்றும் பண்டைகால உலகம் எப்படி இருந்தது என்பதை காட்டுகின்றது. அந்த மாபெரும் யாத்ரீகரின் சொந்த நாட்டிற்கு சென்று வந்ததை, இந்த அடியேனுக்கு கிடைத்த பாக்கியமாக கருதி, எனது குறிப்புகளை எழுதி வைக்கிறேன்.

மொரோக்கோவில் மரகேஷ் என்ற நகரம் சரித்திர பிரசித்தி பெற்றது. ஒரு களத்தில் வடமேற்கு ஆப்ரிகவையும், ஸ்பெய்னையும் ஆட்சி செய்த மூர்களின் பேரரசு, மரக்கேஷ் தலைநகராக கொண்டு தான் தன் தனது படையெடுப்புகளை நகர்த்தியது. இன்று உல்லாச பிரயாணிகளை கவர்ந்திளுக்கும் மொரோக்கோ, fes என்ற நகருக்கு அடுத்தாக சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மரகேஷ் உல்லாச பிரயாணிகளின் சொர்க்கபுரியக்கி வருகின்றது. இதனால் வருடம் தோறும் வந்திறங்கும் உல்லாச பிரயனிகளுக்காக இன்றைக்கும் நட்சத்திர ஹோட்டல்கள் கட்டப் பட்டு வருகின்றன. மரகேஷ் நகரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட, அரச மாளிகை, பள்ளி வாசல்கள், குடியிருப்புகள், அதை சுற்றி கட்டப்பட்ட பாதுகாப்பு மதில் என்பன; பழைய நகரம் எப்படியிருந்திருக்கும் என்று நாம் இப்போதும் நேரே பார்க்கலாம். பழைய நகரத்தின் மதில் சுவருக்கு வெளியே புதிய நகரம் கட்டப்பட்டுள்ளது. அனைத்து பாவனை பொருட்கள் வாங்க கூடிய கடைகள் , அதை மொய்க்கும் இளைஞர் பட்டாளம் என்று இந்த புதிய நகரம் ஒரு சராசரி நவீன நகரமாக காட்சி தருகின்றது. வசதி படைத்தவர்கள் புதியநகரதிலும், வறிய மக்கள் பழைய நகரதிலுமாக மரகேஷ் இரண்டாக பிரிந்துள்ளது.

மொரோக்கோ பல முரண்பாடுகளின் தாயகம். மரகேஷ் நகரில் இருந்து கிழக்கு நோக்கி நூறு கி.மி. சென்றால் பனி படர்ந்த மலைதொடர்கள், மேற்கு நோக்கி நூறு கி.மி. பயணித்தல் அழகிய கடற்கரைகள். தெற்கு நோக்கி இன்னும் சில நூறு கி.மி. பயணம் செய்தல் சஹாரா பாலைவனம். இப்படி நில அமைப்பு மட்டும் மாறவில்லை. மரகேஷ் மொரோக்கோ நாட்டின் மத்தியில் இருப்பதால், அதில் இருந்து மேற்கு, கிழக்கு என்று இரண்டு பிரதேசமாக பிரித்து பார்த்தல் இன,மொழி, பொருளாதார வேற்றுமைகளை கவனிக்கலாம். அட்லாண்டிக் கடலோரம் உள்ள மேற்கு பிரதேசம் அதிவேகமாக நகரமயமாக்க பட்டுள்ளது. தலைநகர் ராபர்ட், வர்த்தக மையம் காசபிலங்கா போன்ற மக்கள் பெருக்கம் கூடிய நவீன நகரங்கள் யாவும் மேற்கு மொரோக்கோவில் உள்ளன. எதிர்பார்த்து போலே பணக்காரர்களும், வசதி படைதோருமான மத்தியதர வர்க்கம் நகரமயமகியுள்ள மேற்குபுறம் தான் காணலாம். இவர்களில் பெரும்பான்மையானோர் அரபு மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள். படித்தவர்கள் பிரென்ச் காலனி கால பாதிப்பினால், இன்றும் தமக்குள் பிரென்ச் மொழியில் பேசிக்கொள்வது சர்வ சாதாரணம்.

இனி மரகேஷின் கிழக்கு பிரதேசத்தை பார்ப்போம். பெரும்பாலான வறிய மக்கள் அட்லஸ் மலை தொடரை சேர்ந்த கிராமங்களில் வாழ்கின்றனர். இவர்கள் பெர்பர்கள் என்று அழைக்க படுகின்றனர். அவர்களில் பெரும்பன்மயனோருக்கு இன்றும் அரபு மொழி தெரியாது. (ஆனால் அரபு மொழி ஆதிக்கம் காரணமாக, அவர்களது மொழி அடக்கப் பட்டு வந்தது) அரபியர்கள் அவர்களை பெர்பர்கள்(காட்டுமிராண்டி என பொருள்படும் கிரேக்க சொல்) என்று அழைத்தாலும், அவர்கள் தங்களை தமஷிக் என்றும், தங்கள் மொழியை அமஜிக் என்றும் அழைக்கின்றனர். அந்த மொழிக்கென்று வேறுபட்ட எழுது வடிவமும் உண்டு. அந்த மொழியும் தரப்படுத்த படாமல், பிரதேச வேறுபாடுகளை கொண்ட பேச்சு மொழியாக மட்டுமே இன்றுள்ளது. மொரோக்கோ அரசாங்கம் பெர்பர் மக்களை புறக்கணிப்பதால், பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ளனர். பலர் வேலை தேடி நகரங்களுக்கு சென்று அங்கேயே குடியேறி அரபியரக மாறி விடுகின்றனர். இதனால் மொரோக்கோவில் தூய அரபியர்கள் மிக குறைந்த வீதத்திலும், அரபியரக மாறிய பெர்பர்கள் குறைந்தது ஐன்பது வீதமகிலும் காணப்டுகின்றனர். மொத்த சனத்தொகையில் பெர்பர்கள் நாற்பது வீதமகிலும் இருக்கலாம்.

பெர்பர்களின் கிராமங்களை அடுத்து "ஹரடீம்" என்ற இன மக்களின் குடியிருப்புக்கள் கானபடுகின்றன. இவர்கள் பெர்பர் மொழி பேசினாலும், கருப்பு நிற தோல் வேற்றினதவர்களாக வித்தியாசம் காட்டுகின்றது. இவர்களும் அரசாங்கத்தால் புறக்கணிக்க பட்டு பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ளனர். இந்த கருபினதவரின் முன்னோர்கள் பற்றி பல்வேறு கதைகள் நிலவுகின்றன. ஹரடீம் மக்களின் கர்ணபரம்பரை கதைகளில் ஒன்று, அவர்கள் தான் மொரோக்கோவின் பூர்வீக குடிகள் என்றும், மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு வந்து குடியேறிய வெள்ளை நிற பெர்பர்கள், தம்மை அடிமைப் படுத்தி விட்டனர் என்றும் கூறுகின்றனர். பிரெஞ்சு காலனி காலம் வரை ஹரடீம் மக்கள், பெர்பர்களுக்கு சேவை செய்யும் சாதி அடிமைகளாக இருந்தனர். பின்னர் மாற்றமடைந்த நவீன மொரோக்கோவில், படித்து விட்டு உத்தியோகம் பார்த்தும், வர்த்தகம் செய்தும், அல்லது வெளிநாடு போய் உழைத்தோ தமது குடும்பங்களை முன்னேற்றினர். ஹரடீம் மக்கள் மூர் சக்கரவர்த்தியினால் பிற ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து இராணுவதிற்காக சேர்க்கப்பட்ட வீரர்களின் வழித்தோன்றல்கள் என்று சரித்திரம் கூறுகின்றது. நீண்ட காலமாக இந்த கறுப்பின படை சக்கரவர்த்தியின் நம்பிக்கைக்கு பாத்திரமான சிறப்பு படையணியாக இருந்தது.

மேற்குறிப்பிட்ட இன மக்கள் அனைவரையும் இஸ்லாம் என்ற மதம் மட்டுமே ஒன்று சேர்கின்றது. இதை விட கணிசமான அளவு யூதர்களும் மொரோக்கோவில் வாழ்கின்றனர். இவர்கள் இன்றும் கூட பல்வேறு வர்த்தக துறைகளில் ஈடுபட்டும், பெரிய பதவிகளில் இருந்தும் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் உள்ளனர். காலங்காலமாக அரபு மக்களுடன் அன்னியோன்யமாக வாழ்ந்து வந்தாலும், இஸ்ரேலின் தோற்றம் மொரோக்கோ யூதர்களையும் புலம்பெயர வைத்தது.

இஸ்லாம் கூட இரு வேறு போக்குகளை கொண்டுள்ளது. அரசாங்கத்தால் முன்மொழியபடும் "லிபரல் இஸ்லாம்" மக்களுக்கு அதிக சுதந்திரம் வழங்குகின்றது. இதனால் மத்திய தர வர்க்கத்தை சேர்ந்தோர் ஐரோப்பிய பாணி உடை உடுத்துவதையும், மேலைத்தேய கலாச்சாரத்தை பின்பற்றுவத்தையும் காணலாம். நகரங்களில் முக்காடு போட்ட பெண்களை பார்ப்பது அரிது. இதற்கு மாறாக கிராமங்களில் வாழும் பெண்கள் மத நம்பிக்கை காரணமாகவோ, சம்பிரதாயம் காரணமாகவோ கலாச்சார ரீதியாக வித்தியாச படுகின்றனர். கிராமங்களில் மத அடிப்படை வாத சக்திகள் மக்களை வென்றெடுக்க பார்கின்றன. இந்த சக்திகள் அரசாங்கத்தால் தடை செய்ய பட்டு, கடுமையாக அடக்கப் பட்டாலும் இவர்களின் செல்வாக்கு கிராம மக்கள் மத்தியில் பெருகி வருகின்றது. இதற்கு அவர்களின் வறுமை, பின்தங்கிய நிலை என்பன முக்கிய காரணிகள். இதனை என்னோடு கதைத்த சில மத்தியதர வர்க்க மொரோகொகாரர்கள் ஏற்று கொள்கின்றனர்.

மொரோக்கோவில் இப்போதும் மன்னர் தலைமையில் சர்வாதிகாரம் கோலோச்சுகின்றது. மக்கள் தமக்கு முன்னால் நடக்கும் போலிஸ் அத்துமீறல்களை, அதிகாரிகளின் ஊழல்களை கண்டும் காணாதது போல் இருக்கின்றனர். "நாம் இன்னும் பத்து வருடங்களில் அனைத்து மக்களுக்கும், மருத்துவ வசதி, கல்வி, வேலைவாய்ப்பு வழங்கி தன்னிறைவு காண்போம்." இந்த வாசகங்களை மாறி மாறி பதவிக்கு வரும் அரசாங்கங்கள் கூறி வருகின்றன. ஆனால் அவர்கள் கூறும் தன்னிறைவு ஒரு நாளும் வரப்போவதில்லை என்று மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். எங்கும் எதற்கும் லஞ்சம் கொடுத்தால் தான் காரியமாகும் என்ற நிலைமையால், வறிய மக்கள் தான் அதிகம் பாதிக்கப் படுகின்றனர். மொரோக்கோ பற்றிய கலாச்சார, அரசியல் குறிப்புகளை இத்துடன் நிறுத்தி கொண்டு, நான் சென்று வந்த இடங்களை அறிமுகப் படுத்துகிறேன்.

மரகேஷில் இருந்து அட்லஸ் மலைபிரதேசங்களுக்கு போய் வரும் சுற்றுலக்களே அதிகம். உவாஸர்ஸட் என்ற பண்டைய பெர்பர் நகரம் unesco கலாச்சார பொக்கிஷமாக அறிவிக்கப்பட்டுள்ளது. களிமண்ணும், வைகோலும் கலந்து கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட அழகிய நகரம் அது. சிறுவர்களின் மாயஜால கதைகளில் வரும் நகரங்களை போலே காட்சியளிக்கிறது. ஆயிரமாயிரம் வருடங்களாக இயற்கை, மனித அழிவுகளுக்கு உட்படாமல் கம்பிரமாக நிமிர்ந்து நிற்கின்றன அந்த செந்நிற கட்டிடங்கள். உலகில் கட்டாயம் பார்க்க வேண்டிய அழகான இடங்களில் உவஸர்ஸட் ஒன்றென்றால் அது மிகையாகாது. அந்த நகரின் அருகில் மிகப்பெரிய சினிமா studio ஒன்று உள்ளது. உவசர்சட் வாசிகள் அநேகர் அந்த ஸ்டூடியோவில் தான் வேலை செய்கின்றனர். Ben Hur போன்ற காவியம் படைத்த ஹோலிவூட் திரைப்படங்கள் பல அங்கே தான் தயாரிக்கப் பட்டன. தற்போதும் அமெரிக்கா, ஐரோப்பிய சினிமா தயாரிப்பாளர்களை கவர்ந்திளுகிறது. மலை, பாலைவனம், எகிப்தில் இருப்பது போன்ற செட் போன்ற இன்னோரன்ன விஷயங்களால், அது உலகில் தனித்தன்மை வாய்ந்த ஸ்டூடியோ என்று சொல்லலாம்.

உவசர்சட் நகரம் ஒருகாலத்தில் சஹாரா வாணிபம் காரணமாக செல்வ செழிப்புடன் இருந்தது. இப்போது உள்ளது போல நவீன போக்குவரத்து வசதிகள் இல்லாத காலம் அது. சஹாரா பாலைவனத்திற்கு மறுபக்கம் இருக்கும் நாடோடி மக்கள் அல்லது வணிகர்கள், உற்பத்தி பொருட்களையும், தங்கம் போன்ற பெறுமதி மிக்க பொருட்களையும் ஒட்டகங்கள் மீதேற்றி ஊர்வலமாக மொரோக்கோ நோக்கி போய் விற்று விட்டு, வேறு பாவனை பொருட்களை ஏற்றிக்கொண்டு திரும்பி வருவார்கள். இந்த வர்த்தக போக்குவரத்திற்கு பாதுகாப்பு கொடுக்கவும், இடையிலே இருக்கும் நகரங்களில் தங்கி செல்லவுமென, குறுநில மன்னர்களுக்கு கப்பம் செலுத்துவது வழமை. உவசர்சட் பிரதேசத்தை ஆண்ட மன்னன் மட்டுமல்ல, முழு நகரமும், அவ்வாறு இந்த வர்த்தக போக்குவரத்தால் லாபமடைந்தனர். இன்று அதெல்லாம் பழைய கதை.

அட்லஸ் மலை பிரதேச சுற்றுலவிற்குள், அழகிய நீர் வீழ்ச்சியோன்றிற்கு கூட்டி போகின்றனர். ஆபத்தான மலை உச்சிக்கு, ஒடுக்கமான பாதையூடாக போய் வருவது ஒரு த்ரிலான அனுபவம். அதே சுற்றுலவிற்குள் பெர்பர் குடியிருபொன்றை கூட்டிப்போய் காட்டுகின்றனர். அவர்களது வீடு மட்டுமல்ல சில கைப்பணி பொருட்களை செய்யும் இடங்களையும் பார்க்கலாம். இப்படியான சுற்றுலாக்களில் சிலர் வர்த்தக ரீதியாக, உள்ளூரில் உற்பத்தி செய்த எண்ணை, வாசனை திரவியங்கள், கம்பளம் போன்ற பொருட்களை வாங்க சொல்லி எதிர்பார்ப்பதும் நடக்கின்றது. மேலும் உல்லாச பிரயாணிகள் என்றால் அதிக விலை கேட்பார்கள். இப்படி வெளிநாட்டு பயணிகளை ஏமாற்றுவதில் நகரங்களில், டாக்ஸி ஓட்டுனர்களை யாரும் மிஞ்ச முடியாது. இரண்டு கி.மி. போகும் தூரத்திகும் மூன்று மடங்கு விலை கேட்பார்கள். மீட்டர் போட்டால் உள்ள விலை தெரிந்து விடும் என்று போட மறுப்பார்கள். இந்த டாக்ஸி காரர்கள் தங்களை ஏற்றுவதை விட, வெளிநாட்டு பயணிகளை ஏற்றுவதில் ஆர்வம் காட்டுவதாக மரகேஷ் உள்ளூர் வாசிகள் தெரிவித்தனர்.

எனது விடுமுறை முடிவதற்கு சிறிது நாட்களே இருந்த போது, எசயூரா என்ற கடற்கரை பட்டணம் போய் வந்தேன். மொரோக்கோ மக்கள் கூட தமது விதிமுறையை கழிக்க எசயூரா போவது வழக்கம். கருங்கட் பாறைகளை கொண்ட கடற்கரை, அதனருகே கைவிடப் பட்ட போர்த்துகீசிய கோட்டை, கடலுக்குள் போக காத்திருக்கும் மீன்பிடி வள்ளங்கள், வெப்பமான நாட்களிலும் வீசும் தென்றல் காற்று என்று மனோரம்மியமான இடமானதல், வெளிநாட்டு பயணிகளை மட்டுமல்ல, உள்நாட்டு பயணிகளையும் கவர்வதில் வியப்பில்லை.

மரகேஷில் இருந்து கடுகதி ரயில் சேவை காசபிலங்க நகரை இணைகின்றது. காசபிலங்காவிற்கு வர்த்தக நோக்கத்தோடு வருபவர்கள் தான் அதிகம். இருப்பினும் ஹசன் மசூதி மூர்களின் கட்டிடகலையின் நவீன வடிவத்திற்கு சான்று. பிரமாண்டமாக கடற்கரையோரமாக கட்டப்பட்டுள்ள இந்த மசூதியை பார்க்க வெளிநாட்டு உல்லாச பிரயாணிகளும் வருகின்றனர். உலகிலேயே (அல்லது வட-ஆப்பிரிக்காவில்) மிகப் பெரிய பள்ளி வாசல் என்று, அரசாங்கத்தால் விளம்பரம் செய்ய படுகின்றது. காலம்சென்ற முன்னால் மன்னன் ஹசன் பெயரில் கட்டப் பட்டுள்ள இந்த பள்ளி வாசல் மில்லியன் டாலர் பணத்தை விரயமாக்கியிருக்கிறது. இதற்கு அனைத்து மொரோக்கோ மக்களிடமும், ஏழை பணக்காரன் வித்தியாசமின்றி, பணம் வசூலிக்கப் பட்டது. வர்த்தக நிலையங்கள் நிதியுதவி செய்து பெற்றுக்கொண்ட மசூதியின் படத்தை வைதிருக்கா விட்டால், அவர்களது லைசென்ஸ் மறுக்கப்பட்டது. மன்னர் குடும்பம், என்னதான் இந்த மசூதியினால் பேர் எடுக்க விரும்பினாலும், சாதரண மொரோக்கோ மக்கள் இது தேவையா என்று கேட்கின்றனர். மொத்த சனத்தொகையில் அரைவாசி மக்கள் அன்றாடம் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் ஒரு நாட்டில், இப்படி கோடிக்கணக்கில் பணத்தை வாரியிறைத்து மசூதி கட்டவில்லை என்று யார் அழுதார்கள்? உலகமெங்கும் ஆளும் வர்க்கம் ஒரே மாதிரி தான் நடந்து கொள்கின்றனர். மக்களிடம் சுரண்டி சேர்க்கும் பணத்தில், தங்களுக்கு மாளிகைகளும், இறைவனுக்கு ஆலயங்களும் (கடவுளுக்கே லஞ்சம்?) கட்டிக் கொண்டிருக்கிறார்கள். என்னோடு தொழில் புரியும் மொரோக்கோ நண்பர் கூறிய வாசகங்கள், அந்நாட்டு அரசியல், பொருளாதார நிலைமையை ஒரு வரியில் சொல்ல போதும். "எமது நாட்டிலும் ஜன நாயக முறையில் தேர்தல்கள் நடக்கும். நான்கு வருடத்திற்கு ஆட்சி செய்ய ஒரு அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படும். ஆயியம் கட்சியில் இருப்போர் முடிந்த அளவுக்கு திருடிக் கொண்டு செல்வார்கள். பிறகு அடுத்த தேர்தலில் அடுத்த கட்சி தங்கள் பங்குக்கு திருடுவார்கள். இன்றைக்கும் எமது நாட்டில் ஒரே ஒருவர் மட்டும் நிரந்தரமாக திருடிக் கொண்டே இருக்கிறார். அது தான் மன்னர்! "

வெளிநாடுகளில் இருந்து மொரோக்கோ போகும் உல்லாச பிரயாணிகள், இவை எதை பற்றியும் கவலைப்படாமல் தமது பொழுதை உல்லாசமாக கழித்து விட்டு வருவார்கள். எது எப்படியிருந்தாலும் மொரோக்கோ மேற்குலக நட்பு நாடல்லவா? அதனால் அலம் இருண்ட மறுபக்கத்தை கண்டு கொள்வதில்லை. ஒரு விவசாய நாடான மொரோகோ, அதனை அபிவிருத்தி செய்யாமல், உல்லாச பிரயான ஹோட்டல்கள் கட்டுவதில் மட்டும் ஆர்வம் காட்டுகின்றது. இதனால் உள்ளூர் தொழில்கள் நலிந்து போக, வேலை தேடி இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு போகின்றனர். உலகமயமாதலின் எதிர்வினை என்றும் அழைக்கப்படும் இந்த காட்சியை மொரோகோவிலும் பார்க்கலாம்.

Travel Blogs - Blog Catalog Blog Directory

_____________________________________________

கலையகம்

1 comment:

Anonymous said...

நண்பரே நான் இன்னும் சில நாட்களில் எனது அலுவலக விஷயமாக மொராக்கோ செல்கிறேன், கென்ரத் என்ற நகருக்கு, அங்கே நமது நாட்டு உணவுக்கான வாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பு விஷயங்கள் மற்றும் ஏதும் எச்சரிக்கைகள் இருந்தால் தெரிவித்து உதவவும்

rmslv123@gmail.com