Friday, July 03, 2015

மேற்கு ஐரோப்பாவில் கணக்காளருக்கும், கட்டிடத் தொழிலாளிக்கும் ஒரே சம்பளம்!


மேற்கு ஐரோப்பாவில் கணக்காளருக்கும், கட்டிடத் தொழிலாளிக்கும் ஒரே அளவான சம்பளம் கிடைக்கிறது! சோஷலிசம் என்பது சமநீதி. இந்த உண்மையை அடித்தட்டு மக்களுக்கு மறைப்பது அநீதி. சோஷலிசம் மார்க்சியத்திற்கு மட்டுமே சொந்தமானதல்ல. மேற்கு ஐரோப்பாவில், சமூக ஜனநாயக கட்சிகள் அதற்காக போராடின.

இறுதியில், பல மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளில், "நலன்புரி அரசு" என்ற பெயரில், முதலாளித்துவத்தின் கீழ் மக்களுக்கு  நன்மை பயக்கும்  திட்டங்களை கொண்டு வந்தனர்.அதாவது, முதலாளித்துவமும், அதன் இலாபவெறியும் அப்படியே இருக்கும். சுரண்டலும் இருக்கும். அதே நேரம், மக்களுக்கு தேவையான வசதிகளும் செய்து கொடுக்கப் படும்.

நெதர்லாந்தில் அதை "Polder Model" என்று அழைக்கிறார்கள். அது உண்மையில் வர்க்க சமரசம் ஆகும். அதாவது, முதலாளிகளும், தொழிலாளர்களும் சமரசம் செய்து கொள்வதால், இரண்டு தரப்புக்கும் ஆதாயம் என்று நினைக்கும் சீர்திருத்தவாதக் கொள்கை.

வசதியாக வாழும் மத்திய தர வர்க்கத்தினர், சோஷலிசத்தை வெறுப்பதற்கு முக்கிய காரணம், அவர்களது வர்க்க மேலாண்மை சிந்தனை தான். தமது போலியான சமூக அந்தஸ்துக்கு பங்கம் வந்து விடும் என்று அஞ்சுகிறார்கள். சாதாரண கூலித் தொழிலாளர்களுடன், உணவுவிடுதியில் அருகருகே அமர்ந்து சாப்பிடும் நிலைமையை வெறுக்கிறார்கள். வர்க்க மனப்பான்மை, நவீனமயப் படுத்தப்பட்ட சாதிய மனப்பான்மையாக உள்ளது.

முன்னாள் சோஷலிச நாடுகளில், எல்லோருக்கும் சமமான சம்பளம் என்ற கொள்கையை பரிகசித்தவர்கள் பலர். அதுவே பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்று கண்டுபிடித்த பொருளாதாரப் புலிகளும் இருக்கிறார்கள். சமூகத்தில் ஏற்றத்தாழ்வு நியாயமானது என்றும், முன்னுக்கு வர வேண்டும் என்ற போட்டி மனப்பான்மை உற்பத்தியை அதிகரிக்கும் என்றும் வாதிட்டார்கள்.

மத்தியதர வர்க்கத்தினரின் கனவுலகமான மேற்கு ஐரோப்பாவில் நிலைமை எப்படி இருக்கிறது? இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், சோஷலிச நாடுகளுக்குப் போட்டியாக, தமது மக்களின் வாழ்க்கைத்தரமும் உயர்த்தப் பட வேண்டும் என்று நினைத்து செயற்பட்டார்கள்.

அதில் முக்கியமானது, சம்பள வேறுபாடுகளில் உள்ள ஏற்றத்தாழ்வை முடிந்த அளவிற்கு குறைப்பது. ஏனென்றால், அன்றாட வாழ்க்கைச் செலவுக்கே போதாத சம்பளம் பெறுவதால் தான், ஒரு சாதாரண தொழிலாளியால் வசதியாக வாழமுடியாமல் உள்ளது. ஆகவே, அவர்களது சம்பளம் உயர்த்தப் பட வேண்டும்.

சோஷலிச நாடுகளில் பின்பற்றப் பட்ட அதே நடைமுறை தான், மேற்கு ஐரோப்பாவிலும் பின்பற்றப் பட்டது. குறிப்பாக நெதர்லாந்தில், ஒரு தொழிற்துறையின் சம்பளம் எந்தளவு இருக்க வேண்டும் என்பதை, தொழிற்சங்கங்களும், தொழிலதிபர்களும் கூடி முடிவெடுக்க வேண்டும்.  அது அங்கே "Polder Model"  என்று அழைக்கப் படுகின்றது. (முன்னாள் சோஷலிச நாடுகளில் இருந்த தொழிலதிபர்கள் அரசு ஊழியர்கள். ஆனால், முதலாளித்துவ நாடுகளில் அவர்கள் முதலாளிகள்.)

ஒரு தொழிற்துறையில் கிடைக்கும் சராசரி வருமானம் எந்தளவுக்கு உயர்ந்ததோ, அந்தளவுக்கு தொழிலாளரின் சம்பளமும் உயர்வாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, போர் முடிந்த பின்னர் அபிவிருத்திக்கு அதிக நிதி ஒதுக்கப் பட்டதால், கட்டிடத் தொழில் நிறுவனங்களின் வருமானமும் அதிகமாக இருந்தது. இப்போதும் இருக்கின்றது. அதனால், சாதாரண கூலியாளின் சம்பளமும் அதிகரித்தது. இன்றைக்கும் அவர்கள் எடுக்கும் சம்பளம், ஒரு வங்கி ஊழியரின் சம்பளத்தை விட அதிகமாகும்.

தமிழ்நாட்டில் இருந்து என்னுடன் தொடர்பு கொண்ட நண்பர் ஒருவர், நெதர்லாந்தில் கட்டிடத் தொழிலாளரின் நிலைமை எப்படி இருக்கிறது என்று விசாரித்தார். தமிழ்நாட்டில் அவர்களுக்கு மிகக் குறைந்த சம்பளம் கொடுக்கப்படுவது மட்டுமல்ல, மேலாளர்கள் கூலித் தொழிலாளரை அடிப்பது, கெட்ட வார்த்தைகளினால் திட்டுவது போன்ற கொடுமைகளும் நடக்கின்றன. நெதர்லாந்திலும், பல மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் தொழிலாளர்களை அந்தளவு மோசமாக நடத்துவதில்லை. அடித்தால் அது வன்முறையாக கருதப்பட்டு, பொலிஸ் தலையிட்டு, நீதிமன்றம் வரை சென்று தண்டம் கட்ட வேண்டியிருக்கும். கெட்ட வார்த்தைகளினால் திட்டுவது கூட, ஒரு மனிதரை கண்ணியக் குறைவாக நடத்துவது என்ற கட்டத்திற்கு போகாத அளவிற்குத் தான் இருக்கும்.

மேற்கு ஐரோப்பாவிலும், கட்டிடத் தொழிலாளர்கள் சுரண்டப் படுவதுண்டு. பொதுவாகவே உள்நாட்டு வேலையாட்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டும். நெதர்லாந்து போன்ற நாட்டில் வேலை செய்யும் கட்டிடத் தொழிலாளியின் சம்பளம் அதிகமாகும். சிலநேரம், அலுவலக ஊழியரை விட இரண்டு மடங்கு கிடைக்கும். ஏனென்றால், அது மிகவும் கடினமான வேலை. கட்டிடத் தொழில் நிறுவனங்கள், அதிகப்படியான சம்பளத் தொகையை குறைப்பதற்காக, கிழக்கு ஐரோப்பிய தொழிலாளர்களை முகவர்கள் மூலம் கூட்டிக் கொண்டு வருகிறார்கள். சில இடங்களில் போர்த்துகீசிய தொழிலாளர்களும் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த நாட்டில் தீர்மானிக்கப் பட்ட மிகக் குறைந்த அடிப்படை சம்பளம் மட்டும் கொடுத்து ஏமாற்றுகிறார்கள்.

எது எப்படி இருப்பினும், தொழில்களில் பாகுபாடு காட்டாமல், எல்லோருக்கும் வாழ்க்கையை கொண்டு நடத்தும் அளவிற்கு சம்பளம் கொடுப்பது முக்கியமாகக் கருதப் படுகின்றது. நெதர்லாந்தில், அரசும், முதலாளிகளும், தொழிற்சங்கங்களும் அடிக்கடி இது குறித்து வாக்குவாதப் படுவதுண்டு. ஆனால், இன்று வரையில் ஒரு மூன்றாமுலக நாட்டில் இருப்பதைப் போன்று, சம்பளத்தில் பெரியளவு ஏற்றத்தாழ்வுகளை கொண்டு வரவில்லை. 

இன்றைக்கும், மேற்கு ஐரோப்பாவில் வாழும் சாதாரண கூலித் தொழிலாளி கூட, ஒரு வசதியான வீட்டிற்கு வாடகை கட்டி, வருடத்திற்கு ஒரு தடவை வெளிநாட்டு சுற்றுலா சென்று வர முடிகின்றது. எல்லோருக்கும், தொழில் பாகுபாடு பார்க்காமல், சமமான சம்பளம் கொடுப்பதன் நோக்கமும் அது தான். இந்த பூமியில் பிறந்த மனிதன் வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும். வருடம் முழுவதும் உழைத்தாலும், வறுமையில் வாட வேண்டும் என்றால் அந்த வாழ்க்கையில் ஓர் அர்த்தம் இல்லை. ஏழைகள் வாழ்வதில்லை. உயிரைக் காப்பாற்ற தப்பிப் பிழைக்கிறார்கள்.

நெதர்லாந்து நாட்டில், என்னென்ன வேலைக்கு எந்தளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்ற விபரத்தை இங்கே தருகிறேன். அரசாங்கத்திலும், தனியார் நிறுவனங்களிலும் மிக உயர்ந்த பதவி வகிப்பவர்கள் மட்டுமே பல மடங்கு அதிகமான சம்பளம் பெறுகிறார்கள். முதலாளித்துவ அமைப்பில் என்றும் மாறாமல் தொடர்ந்திருக்கும், அந்த ஏற்றத் தாழ்வு பற்றி இந்தப் பதிவு பேசவில்லை. 

அரசு, தனியார் துறையாக இருந்தாலும், மூளை, உடல் உழைப்பாளியாக இருந்தாலும், யார் என்ன வேலை செய்தாலும், அடிப்படை சம்பளத்தில் வித்தியாசம் இருப்பதில்லை. ஒருவர் என்ன வேலை செய்கிறார் என்பது முக்கியமில்லை. அவர் வாழ்வதற்கு தேவையான அடிப்படை வருமானம் மட்டுமே முக்கியம்.

உதாரணத்திற்கு, தெருவில் குப்பை அள்ளும் தொழிலாளியின் (Vuilnisman) ஒரு வருட ஊதியம் (23.500), ஒரு சாதாரண அலுவலகப் பணியாளரின் (Datatypiste) ஒரு வருட ஊதியத்தை (18.500) விட அதிகமாகும்.

Gemiddeld salaris per beroep 
http://www.gemiddeld-inkomen.nl/gemiddeld-salaris-per-beroep/

Wednesday, July 01, 2015

சென்னை வாசிகளே! வட கொரியாவில் மெட்ரோ ரயில் டிக்கட் விலை 2 ரூபாய் மட்டுமே!


சென்னை மெட்ரோ ரயில் டிக்கட் விலை அதிகமாக இருப்பதாகவும், சாதாரண உழைக்கும் வர்க்க மக்களுக்கு பயணம் செய்ய முடியாமல் இருப்பதாகவும் பலர் குறைப் படுகின்றனர். பொதுப் போக்குவரத்து சேவை அனைத்து மக்களுக்குமானது. அது மிகவும் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யும் வகையில் வசதி செய்து தரப் பட வேண்டும்.

சென்னை மெட்ரோ பயணச் சீட்டின் விலை 40 இந்திய ரூபாய்கள். (0.62 USD) வட கொரியாவில், பியாங்கியாங் நகர மெட்ரோ பயணச் சீட்டின் விலை 2 இந்திய ரூபாய்கள் மட்டுமே! (5 WON = 0.03 USD). சென்னையில் வாழும் அடித்தட்டு மக்கள் நாற்பது ரூபாய் கொடுத்து மெட்ரோவில் பயணம் செய்ய முடியாது.

வட கொரியாவில் அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில், மெட்ரோ டிக்கட் விலையை வேண்டுமென்றே குறைத்து வைத்திருக்கிறார்கள். அதுவும், முதலாளித்துவ பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்ட, கடந்த பத்தாண்டுகளில் இருந்து தான் இந்த விலை அதிகரிப்பு. அதற்கு முன்னர் இருந்த பயணச்சீட்டின் விலை 0.25 இந்திய ரூபாய்கள் மட்டுமே!

ஆகவே, அடித்தட்டு மக்களும் மெட்ரோவில் பயணம் செய்ய வேண்டுமானால், இந்தியாவிலும் சோஷலிசம் கொண்டு வரப் பட வேண்டும்.

(பிற்குறிப்பு: நாற்பது ரூபாய் கொடுத்து பயணம் செய்யும் வசதி படைத்த மத்தியதர வர்க்கத்தினர் இதற்கு எந்தவிதமான வியாக்கியானமும் கொடுக்கத் தேவையில்லை. அடித்தட்டு மக்களை முதலில் பேச விடுங்கள். நன்றி.)

*******

மேற்கு ஐரோப்பாவில் தேனும், பாலும் ஆறாக ஓடுவதாக நினைத்துக் கொண்டிருக்கும் அப்பாவிகளின் கவனத்திற்கு:

பொருளாதார ஏற்றத் தாழ்வு, இன்றளவும் மேற்கைரோப்பிய சமுதாயத்தை ஏழை - பணக்காரன் என்று பிரித்து வைத்துள்ளது. அந்த இடைவெளி வர வர அதிகரித்துச் செல்கின்றதே தவிர குறையவில்லை.

மருத்துவ வசதிகளில் காட்டப்படும் பாரபட்சம் அதற்கு ஓர் உதாரணம். நெதர்லாந்தில், மருத்துவ வசதி முழுவதும் தனியார் நிறுவனங்களிடம் உள்ளது. இங்கே அரசு மருத்துவமனை எதுவும் கிடையாது. மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையிலும் நோயாளிகளுக்கு விசேட சலுகை எதுவும் கிடையாது.

இந்த நாட்டில் அனைத்துப் பிரஜையும் மருத்துவக் காப்புறுதி எடுத்திருக்க வேண்டும். அதற்காக மாதாமாதம் குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும். பொதுவாக, ஆரோக்கியமான ஒரு நபர், குறைந்த பட்ச கட்டணமாக 100 யூரோ செலுத்த வேண்டும். ஆனால், கடுமையான நோயாளி அதை விட இரண்டு மடங்கு தொகை கட்ட வேண்டி இருக்கும்.

அப்படியே அதிகத் தொகை கட்டினாலும், தரமான மருத்துவ வசதியை எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், அதிலும் ஏழை, பணக்காரன் வித்தியாசம் பார்ப்பார்கள். குறிப்பாக, புற்றுநோயால் அவதிப்படும் நோயாளிகள் பாரபட்சமாக நடத்தப் படுகிறார்கள்.

பணக்கார புற்றுநோய் நோயாளிகளுக்கு மட்டும், உடனடியாக தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்கிறது. ஏழைகள் ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறி இறங்க வைக்கப் படுகிறார்கள். காரணம்? புற்றுநோய் மருந்துகளின் விலை அதிகம் என்பதால், பண வசதி இல்லாதவர்களுக்கு சிகிச்சை அளிக்காமல் இழுத்தடிக்கிறார்கள்.

இந்தத் தகவல், இன்று நெதர்லாந்து ஊடகங்களில் முக்கிய செய்தியாக இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களும், புற்றுநோயாளிகளுக்கு காட்டப் படும் பாரபட்சம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.(ஆதாரம் : NOS நெதர்லாந்து வானொலி - தொலைக்காட்சி செய்தி நிறுவனம்.)

வட கொரியாவில், மருத்துவ வசதிகள் அனைத்துப் பிரஜைகளுக்கும் இலவசமாகக் கிடைக்கிறது என்பது தெரிந்ததே. உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) 2008 ம் வருடத்திய அறிக்கையின் படி, வட கொரியாவில் சிசு மரணவீதம் 1000 க்கு 45 என்ற விகிதத்தில் உள்ளது. உலகின் பிற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில், இது மிகக் குறைவாகும்.

உதாரணத்திற்கு, ஆப்பிரிக்காவில் உள்ள சாட் நாட்டில், 1000 க்கு 120 என்ற விகிதத்தில் உள்ளது. உலக நாடுகள் பற்றிய சி.ஐ.ஏ. அறிக்கையின் படி, வட கொரியா, சாட் இரண்டும் ஏறக்குறைய ஒரேயளவு மொத்த பொருளாதார உற்பத்தியைக் கொண்டுள்ளன.

வட கொரியாவின் பொருளியல் உற்பத்தி குறித்த சரியான தகவல்கள் இல்லாத குறைபாட்டையும், மருத்துவ வசதிகள் ஐம்பதுகளின் தரத்தில் இருப்பதையும் சேர்த்துப் பார்த்தால், அந்த நாட்டின் சிசு மரணவீதம் வளர்ந்த நாடுகளை எட்டிப் பிடிப்பதாக அமைந்துள்ளது.

மருத்துவ பணியாளர்களைப் பொருத்தவரையில், வட கொரியா போன்ற "சர்வாதிகார நாடுகள்" ஒரு வரப்பிரசாதம் என்று, பஞ்ச நிவாரணப் பணிகளின் போது , அங்கு சென்று வந்த வெளிநாட்டு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

"அனர்த்த நிவாரண உதவி வழங்கலின் போது, அனைவருக்கும் உடனடியாக சுகாதார வசதிகள் கிடைக்கும் அளவிற்கு, அரசு அங்குள்ள மக்களை தீவிரமாக கண்காணித்து வந்ததுள்ளது. இதுவே வளர்ந்த நாடாக இருந்தால் கூட, அங்கு அனைவரையும் ஒரே இடத்தில் கூட வைப்பது சிரமமாக இருந்திருக்கும்" என்றனர்.

வட கொரியாவின் சுகாதார வசதிகள் உலகத்தரத்தை விடக் குறைவானது தான். ஆனால், மனிதர்களுக்கு ஏற்படும் பல நோய்கள் வயோதிப காலத்திலேயே முற்றுவதால், சிகிச்சையளிப்பதும் கடினமாகின்றது. அதற்குப் பதிலாக, தொட்டதற்கெல்லாம் மருத்துவ பரிசோதனை செய்யப் படுவதால், பல நோய்களை முன்கூட்டியே தடுக்க முடிகின்றது. இதனால் வைத்திய செலவும் மிச்சம்.

வட கொரியாவில் பணியாற்றும் மருத்துவர்களின் சம்பளமும் குறைவு தான். அவர்கள் சாதாரண அரசு ஊழியரை விட பெரிதாக சம்பாதிப்பதில்லை. ஆயினும், மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அவர்கள் சிலநேரம், பிற நாடுகளில் தாதியர் செய்யும் வேலைகளையும் தம் பொறுப்பில் எடுக்கின்றனர்.

வட கொரியாவில் 10000 பேருக்கு 32.9 மருத்துவர்கள் வீதம் இருக்கின்றனர். அந்தத் தொகை அமெரிக்காவை விட அதிகமாகும். அங்கு 10000 பேருக்கு 26.7 மருத்துவர்கள். (ஆதாரம்: World Health Statistics 2011, World Health Organization)


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
சன் தொலைக்காட்சியில் வட கொரியா பற்றிய நிகழ்ச்சி : "நிஜம்" என்ற "பொய்"!
வட கொரியா புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி உதவியது!

Monday, June 29, 2015

வட கொரியா புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி உதவியது!


வலதுசாரிகளும், அரச அடிவருடிகளும், போலித் தமிழ் தேசியவாதிகளும், புலி எதிர்ப்பு அறிவுஜீவிகளும், வரிந்து கட்டிக் கொண்டு வட கொரியாவை எதிர்ப்பதன் காரணம் மிகவும் தெளிவானது. வட கொரியா நீண்ட காலமாக புலிகளுக்கு ஆயுதங்களும், பயிற்சியும் கொடுத்து உதவி வந்தது. 

உலகில் பல விடுதலை இயக்கங்களுக்கு, வட கொரியா உதவியுள்ளது, தற்போதும் உதவிக் கொண்டிருக்கிறது. இலங்கை அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு வட கொரியா உதவுவது இதுவே முதல் தடவை அல்ல. ஏற்கனவே, 1971 ல் நடந்த ஜேவிபி கிளர்ச்சிக்கு வட கொரியா ஆயுதங்கள் அனுப்பிய குற்றச்சாட்டில், கொழும்பில் இருந்த அதன் தூதுவராலயம் மூடப் பட்டது. 

வட கொரியா, புலிகளுக்கு ஆயுதங்களை கொடுத்து உதவியதாக, அமெரிக்க அரசு பகிரங்கமாக குற்றஞ் சாட்டியிருந்தது. அது தொடர்பான விபரமான அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, வட கொரியாவையும், "பயங்கரவாத இயக்கங்களுக்கு உதவி செய்யும் நாடுகளின் பட்டியலில்" சேர்த்திருந்தமை அனைவரும் அறிந்ததே.

வட கொரியா பற்றிய தகவல்கள், பெரும்பாலும் தென் கொரியா மூலமே கிடைக்கின்றன. அந்த வகையில், புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்தப்பட்ட தகவலும், 2006 அல்லது 2007 ம் ஆண்டில், தென் கொரிய ஊடகங்களில் வெளியானது. வட கொரியாவில் இருந்து தானியங்கி துப்பாக்கிகள், ராக்கட் லோஞ்சர்கள், ஆர்ட்டிலெறி ஷெல்கள் போன்றன கப்பல் மூலம் கொண்டு செல்லப் பட்டன. 

வட கொரிய ஆயுதங்கள், இலங்கை கடற் பிராந்தியத்திற்கு அண்மையாக கொண்டு செல்லப் பட்டு, பின்னர் புலிகளின் சிறு படகுகள் மூலம், அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த முல்லைத்தீவு பகுதிக்கு கடத்தப் பட்டுள்ளன. தென் கொரிய அரசின் உளவுத் தகவலைத் தொடர்ந்து, ஒரு வட கொரிய கப்பலை சிறிலங்கா கடற்படை தடுத்து திருப்பி அனுப்பியது. (இந்தத் தகவலை, ஒரு தென் கொரிய பத்திரிகை வெளியிட்டிருந்தது.)

இறுதிப்போர் தொடங்குவதற்கு முன்னரே, அமெரிக்கா வழங்கிய உளவுத் தகவல்கள் உதவியுடன், சிறிலங்கா கடற்படை புலிகளின் ஆயுதக் கப்பல்களை ஆழ்கடலில் வைத்து தாக்கி அழித்திருந்தது. ஆகவே, வட கொரிய ஆயுதக் கப்பல் வந்தமைக்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. (வட கொரியா, அமெரிக்காவின் எதிரி நாடென்பதை இங்கே சுட்டிக் காட்ட வேண்டிய அவசியமில்லை.)

அமெரிக்க எஜமான விசுவாசம் காரணமாக, புலி எதிர்ப்பு போலித் தமிழ் தேசியவாதிகள், இந்த உண்மையை தமிழ் மக்களிடம் இருந்து மறைப்பதற்காக, அடிக்கடி "வட கொரியா எதிர்ப்பு நாடகம்" போட்டு வருகின்றனர். அமெரிக்காவுக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் புத்திசாலிகள் (அல்லது தந்திரசாலிகள்). 


மேலதிக தகவல்களுக்கு:
North Korea may have aided Hezbollah, LTTE - U.S. report 
http://in.reuters.com/article/2007/12/13/idINIndia-30964520071213 
North Korea: Illegal Exporting of Weapons to Sri Lanka Guerilla Groups
http://www.dailynk.com/english/read.php?cataId=nk00100&num=2709
Defiant Failed State: The North Korean Threat to International Security
http://www.amazon.com/Defiant-Failed-State-International-Security/dp/1597975311


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
1.ஜேவிபி கிளர்ச்சிக்கு வட கொரியா ஆயுத உதவி செய்திருந்ததா?
2.சன் தொலைக்காட்சியில் வட கொரியா பற்றிய நிகழ்ச்சி : "நிஜம்" என்ற "பொய்"!
3.இடதுசாரி புலிகள் உருவாக்கிய முதலாளிகள் எனும் வலதுசாரி அழிவு சக்திகள்!



Saturday, June 27, 2015

இடதுசாரி புலிகள் உருவாக்கிய முதலாளிகள் எனும் வலதுசாரி அழிவு சக்திகள்!

இடதுசாரி என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாதவர்களும், அதே நேரம் தாம் தீவிர வலதுசாரிகள் என்பதை மறைத்துக் கொள்ளும் பலர் இன்றும் உள்ளனர். உலகில் உள்ள எல்லா அரசியல் அமைப்புகளிலும் இடதுசாரியம், வலதுசாரியம் இருக்கும். வலதுசாரிக் கட்சிகளுக்குள் இடதுசாரியம் இருக்கும். இடதுசாரிக் கட்சிகளுக்குள் வலதுசாரியம் இருக்கும். (அரசியல்) விஞ்ஞானமும் அப்படித்தான் வரையறுக்கிறது.

"வியாபாரிகளால் வீழ்ந்த என் தலைவனுக்கு வீர வணக்கம்..." என்று, புலிகளின் தீவிர விசுவாசி ஒருவர் தனது தலைவர் பிரபாகரனின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தி வந்தார். அதில் உண்மையும் இருக்கிறது. ஆரம்பத்தில் தன்னை ஒரு இடதுசாரி இயக்கமாகக் காட்டிக் கொண்ட புலிகள், பிற்காலத்தில் வலதுசாரிகளாகி, சிறு முதலாளிகளையும் வளர்த்து விட்டதன் விளைவு அவர்களது அழிவுக்கு வித்திட்டது.

ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடும் இயக்கம் ஒன்றை கட்டி வளர்ப்பது அதிகச் செலவு பிடிக்கும் விடயம். உலகத் தீவிரவாத இயக்கங்கள் பற்றிய சி.ஐ.ஏ. அறிக்கைகளை படித்தால் ஓர் உண்மை புலனாகும். அந்த இயக்கங்கள் எவ்வாறு தமது நிதித் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றன என்று விபரமாக ஆராய்ந்திருப்பார்கள்.

புலிகளுக்கு எங்கிருந்து நிதி கிடைக்கிறது, அது எந்த வகையில் பரிமாற்றம் செய்யப்படுகின்றது என்பன போன்ற முழு விபரங்களையும் சி.ஐ.ஏ. போன்ற மேற்கத்திய உளவு நிறுவனங்கள் கணித்து வைத்திருந்தன. அது அவ்வளவு கடினமான விடயமாக இருக்கவில்லை. பெருமளவு நிதி வழங்கிய புலம்பெயர்ந்த தமிழர்கள் மேற்கத்திய நாடுகளில் வாழ்ந்தனர். வர்த்தக முயற்சிகளில் ஈடுபட்ட புலிகளின் முகவர்கள், சர்வதேச முதலாளித்துவ பொருளாதார வலைப்பின்னலை பயன்படுத்திக் கொண்டார்கள்.

கொழும்பிலும் புலிகளின் நிதியில் உருவாக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்கள் இயங்கின. சில தனியார் நிறுவனங்களிலும், கொழும்பு பங்குச் சந்தையிலும் புலிகளின் முதலீடு இருந்ததாக சந்தேகிக்கப் பட்டது. இதிலே முக்கியமான விடயம், சர்வதேச மூலதனத்திற்குள் அகப்பட்ட பணத்தின் மூலத்தை கண்டுபிடிப்பதும் தடை செய்வதும் மிகவும் இலகு.

அது மட்டுமல்ல, புலிகள் உருவாக்கிய முதலாளிகள், என்ன தான் தீவிர புலி விசுவாசிகளாக வேஷம் போட்டாலும், பணத்தின் மந்திர சக்திக்கு கட்டுப்பட்டிருந்தனர். இறுதியில், சந்தர்ப்பம் பார்த்து, தம்மை வளர்த்து விட்ட புலிகளை காட்டிக் கொடுக்கவும், கைவிடவும் தயங்கவில்லை. என்ன இருந்தாலும், முதலாளிகளின் பிறவிக் குணம் மாறுமா?

எது எப்படி இருந்த போதிலும், புலிகளால் இடதுசாரியத்தை முற்றாக கழற்றி விட முடியவில்லை. "துப்பாக்கி முனையில் இருந்து அதிகாரம் பிறக்கிறது....", "மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று அதை விடுவதில்லை..." போன்ற மாவோவின் மேற்கோள்கள், தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரைகளில் எதிரொலித்தன.

"முதலில் கிராமப் புறங்களை விடுதலை செய்து, நகரங்களை சுற்றி வளைக்கும்" மாவோயிச போர்த்தந்திரம் புலிகள் நடத்திய போர்களின் அடிநாதமாக இருந்தது. சர்வதேச கம்யூனிசப் புரட்சியாளர்களினால் குறிவைக்கப் படும், பெற்றோலிய குதங்கள், மின் உற்பத்தி நிலையம், துறைமுகம், விமான நிலையம் போன்ற பல பொருளாதார இலக்குகளும் புலிகளின் தாக்குதல்களுக்கு இலக்காகின.

வன்னியில் இரண்டு தசாப்த காலமாக இருந்த, புலிகளின் "de facto தமிழீழம்" சர்வதேச மூலதனம் ஊடுருவ முடியாத பகுதியாக இருந்தது. நிச்சயமாக, தமது இடதுசாரி அரசியல் நிலைப்பாட்டில் இருந்து புலிகள் அதை தடுக்கவில்லை. வர்த்தக நிறுவனங்கள் மீது செயற்கையான வரி விதிப்பதன் மூலம் தான் பெருமளவு வருமானத்தைப் பெற்றுக் கொண்டனர். ஆயினும், இரகசியங்கள் தெரிந்து விடும், பொருளாதாரம் தமது கைகளை விட்டு சென்று விடும் என்ற எச்சரிக்கை உணர்வும் காரணமாக இருந்தது. அந்நிய மூலதனத்தை நிர்வகித்த முதலாளிகள், புலிகள் அளவுக்கு அதிகமான வரி அறவிடுவதாக குற்றஞ் சாட்டினார்கள்.

கொக்கோ கோலா(அல்லது பெப்சி கோலா) நிறுவனம் மட்டும், சில வருட காலம் புலிகள் கேட்ட வரியை கொடுத்து விட்டு வன்னிக்குள் கடை விரித்திருந்தது. ஆயினும், இறுதிப்போர் தொடங்குவதற்குள் அவர்களும் பின்வாங்கி விட்டிருந்தனர். கொக்கோ/பெப்சி கோலாக்களின் தாயகமான, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேற்பார்வையின் கீழ், பேரழிவை ஏற்படுத்திய யுத்தம் நடந்தது.

போர் முடிந்த பின்னர், சிறிலங்கா இராணுவத்துடன் ஒப்பந்தம் செய்து விட்டு, பெப்சி கோலா மீண்டும் அதே பிரதேசத்தில் விற்பனையை தொடர்ந்து செய்கிறது. புலிகளுக்கு கொடுத்த பணத்தை விட, இராணுவத்திற்கு கொடுக்கும் பணம் பல மடங்கு குறைவானது. இதனால் சந்தைப் படுத்தும் செலவினமும் குறைகிறது. எந்த முதலாளியும் எப்படி செலவைக் குறைக்கலாம் என்று தான் யோசிப்பான். அதற்குப் பெயர் தான் முதலாளித்துவம்.

புலிகள் ஒரு தடவை, தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் "தமிழீழ நாணயம்" அறிமுகப் படுத்தவிருப்பதாக கூறி வந்தனர். சிலநேரம், தமிழீழ ரூபாய் நோட்டுகள் அச்சிடப் பட்டிருந்தாலும், எந்தத் தருணத்திலும் புழக்கத்திற்கு விடப் படவில்லை. அதற்குக் காரணம், தமிழ் மேட்டுக்குடி மற்றும் முதலாளிகளின் எதிர்ப்பு என்று நம்பப் படுகின்றது. தமது சொத்துக்கள் ஒரே நாளில் காணாமல் போய்விடும் என்று அவர்கள் அஞ்சி இருக்கலாம். "100 தமிழீழ ரூபாய் = 120 சிறிலங்கா ரூபாய்" என்று செயற்கையான பெறுமதி நிர்ணயித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.

முதலாளித்துவ பொருளாதாரத்தில், நாணயத்தின் பெறுமதியையும் சந்தை தான் தீர்மானிக்கிறது. வட கொரியா போன்ற, "ஸ்டாலினிச - சர்வாதிகார நாடுகள்" தான், நாணயப் பரிமாற்றத்தை தாம் நினைத்தவாறு தீர்மானிக்கின்றன. (அமெரிக்க டாலருடனான, வட கொரிய வொன்னின் பெறுமதி, செயற்கையாக கூட்டி வைக்கப் பட்டுள்ளது. சந்தையில் அது பல மடங்கு குறைவானது. கருப்புச் சந்தையில் மட்டும் உண்மையான பெறுமதி தெரிய வரும்.) ஆகவே, தீவிர வலதுசாரிகளான போலித் தமிழ் தேசியவாதிகள் சிலர், வட கொரியாவை வரிந்து கட்டிக் கொண்டு எதிர்ப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

இடதுசாரிகளின் கனவான "தமிழீழ வைப்பகம்" என்ற தனியான வங்கித் துறை, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிறப்பாக இயங்கி வந்தது. இருப்பினும், சிறிலங்கா அரசுக்கு சொந்தமான இலங்கை வங்கி, மக்கள் வங்கிக் கிளைகளும் அப்படியே இருந்தன. மக்கள் தமது பணத்தை தமிழீழ வங்கிகளில் வைப்புச் செய்ய வேண்டும் என்று பிரச்சாரம் செய்யப் பட்டது. ஈழத்திற்கு வெளியே "தமிழ் தேசிய இன மான உணர்வு" உறுதியாக இருப்பது போன்று தெரிந்தாலும், தமிழீழ வங்கிகளில் தமது பணத்தை இட்டவர்களின் எண்ணிக்கை குறைவு. தவிர்க்க முடியாத காரணங்களினால் "சிங்கள வங்கிகளின்" சேவைகளை தான் அதிகமாக பயன்படுத்தினார்கள்.

ஏன் என்ற கேள்விக்கான விடை மிகவும் எளிது. வெளிநாட்டில் வாழும் உறவினர் அனுப்பும் பணத்தை எந்த வங்கியில் பெற்றுக் கொள்வது? உலகில் எந்த நாட்டிலும் அங்கீகரிக்கப் படாத தமிழீழ வங்கிக்கு, யாரும் பணம் அனுப்ப முடியாது. இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களின் உறவினர்கள், மேற்கத்திய நாடுகளில் வாழ்கிறார்கள் என்பதை இங்கே குறிப்பிடத் தேவையில்லை. போர் நடந்த காலங்களில், வெளிநாட்டுப் பணம் தான் உள்ளூர் மக்கள் பலரின் வயிற்றை நிரப்பப் பயன்பட்டது.

அந்நிய செலாவணி தான், உள்ளூர் பொருளாதாரத்தின் உந்துசக்தியாகவும் இருந்தது. தமிழ் மக்களுக்கு வந்த வெளிநாட்டுப் பணத்தை மாற்றிக் கொடுத்த சிறிலங்கா வங்கிகள் தான், மறுபக்கத்தில் அரசின் போர்ச் செலவினங்களுக்கு கடன் வழங்கின. மூலதனத்தின் தன்மைகளில் அதுவும் ஒன்று. நாய் விற்ற காசு குரைக்காது.

இலங்கையில் இருக்கும் அமெரிக்க தூதுவராலயம் அனுப்பிய இரகசிய கேபிள்களில் தமிழீழ வைப்பகம் பற்றியும் குறிப்பிடப் பட்டிருந்தது. (பார்க்க: விக்கிலீக்ஸ்) அமெரிக்கா, வெளிப்படையாக சிறிலங்காவின் வங்கிகளை ஆதரித்ததை கேபிளில் வாசிக்கக் கூடியதாக உள்ளது. 

அதற்கு, "ஊடுருவும் தன்மை கொண்ட பொருளாதாரம்" (Transparency) என்று, மேற்கத்திய நாடுகளால் அடிக்கடி சொல்லப் படும் காரணத்தை தான் அமெரிக்காவும் சுட்டிக் காட்டியது. அதாவது, சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப் பட்ட, சிறிலங்கா வங்கிகளை, சர்வதேச மூலதனம் நினைத்த நேரத்தில் கட்டுப்படுத்த முடியும். தமிழீழ வங்கிக்குள் என்ன நடக்கிறது என்று பார்க்க முடியாது. இதனை அமெரிக்க தூதுவராலயம் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளது.

ஆரம்ப காலங்களில், தமது இயக்கத்தை மார்க்சியம் வழிநடத்துவதாகவும், சோஷலிசத் தமிழீழத்திற்காக போராடுவதாகவும் சொல்லிக் கொண்ட புலிகள், தமது இடதுசாரி பாரம்பரியத்தை தொடர்ந்தும் பேணி வந்திருந்தால், இன்று வரைக்கும் நிலைத்து நின்றிருக்கலாம். ஆனால், கொள்கையை விட நிதி மூலதனம் முக்கியம் என்று கருதி, "தமிழ் தேசிய" முதலாளிகளை உருவாக்கி விட்ட பலனை உணர்ந்து கொள்வதற்குள் காலம் கடந்து விட்டது. 

தமிழீழக் கட்டுமானத்தில் முக்கிய பங்காற்றுவார்கள் என்று நம்பப் பட்ட தமிழ் தேசிய முதலாளிகள், இறுதிப் போரில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடந்தார்கள். அதன் விளைவு, இன்று எல்லோருக்கும் தெரிந்த வரலாறாகி விட்டது. சர்வதேச மூலதனத்தின் பாதையில் தடைக்கல்லாக நின்ற "இடதுசாரி புலிகள்" அழிக்கப் பட்டனர். "வலதுசாரி தமிழ் தேசிய முதலாளிகள்", சிங்கள அரசுடன் கூட்டுச் சேர்ந்து, சர்வதேச மூலதனத்தில் ஐக்கியமாகி விட்டனர்.

*****


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Friday, June 26, 2015

சன் தொலைக்காட்சியில் வட கொரியா பற்றிய நிகழ்ச்சி : "நிஜம்" என்ற "பொய்"!


சன் தொலைக்காட்சியில், "நிஜம்"(?) என்ற நிகழ்ச்சியில், "மர்ம தேசம்" என்ற பெயரில், வட கொரியா பற்றிய பல பொய்யான, கற்பனையான தகவல்களை தொகுத்து வழங்கி இருக்கிறார்கள். உதாரணத்திற்கு ஒரு சில பொய்களை இங்கே எடுத்துக் காட்டுகிறேன்.

வட கொரிய மக்கள் வாரத்திற்கு ஏழு நாட்கள், தினசரி 12 மணிநேரம் வேலை செய்கிறார்கள் என்று சொல்கிறார்கள். கடந்த தசாப்த காலமாகவே, தென் கொரிய நிறுவனங்கள், வட கொரியாவினுள் முதலீடு செய்து, அங்குள்ள ஆயிரக் கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்துள்ளன. அவர்களும் 7 நாட்கள்/ 12 மணிநேரம் வேலை செய்கிறார்களா? சுதந்திர வர்த்தக வலையங்கள் பற்றி, சன் தொலைக்காட்சி ஒரு வார்த்தை கூட பேசாத மர்மம் என்ன?

கொரிய யுத்தம் ஐ.நா. தலையீட்டால் முடிவுக்கு வந்ததாக, வரலாற்றுப் புனைவு ஒன்றை திணிக்கிறார்கள். அன்றைய யுத்தத்தில், வட கொரிய இராணுவத்தை எதிர்த்துப் போரிட்டதே "ஐ.நா. படைகள்" தான்! அமெரிக்கா மேலாதிக்கம் செலுத்திய "ஐ.நா. படைகள்". இந்தியா கூட பெயருக்கு ஒரு சிறு படையணியை அனுப்பி இருந்தது. போர்க்காலத்தில் நடந்த படுகொலைகளில் ஈடுபட்ட, ஐ.நா. படையினரும் போர்க் குற்றவாளிகள் தான்.

ஓர் "இந்திய" தொலைக்காட்சிக்கு, இந்த உண்மை தெரியாமல் போனதெப்படி? அது மட்டுமல்ல, கொரியப் போர் இன்னும் முடியவில்லை. அன்று ஒரு போர் நிறுத்தம் தான் கைச் சாத்திடப் பட்டது. அதன் அர்த்தம், இன்று வரைக்கும் வட கொரியாவும், அமெரிக்காவும் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. அதுவும் தெரியாதா?

"நிஜம்" என்று நிகழ்ச்சிக்கு பெயர் வைத்து விட்டு, பொய்களை பரப்புவது தான் சன் தொலைக்காட்சியின் நோக்கமா? நிகழ்ச்சி தயாரிப்பதற்கு முன்னர், வட கொரியாவுக்கு நேரில் சென்ற சிலரின் ஆவணப் படங்களை பார்த்திருக்க வேண்டும். தமிழ் மக்களை எப்படியும் ஏமாற்றலாம் என்ற எண்ணத்தில், கற்பனைக் கதைகளை சோடிப்பது சிலருக்கு வாடிக்கையாகப் போய் விட்டது.

வட கொரிய சிறைகளில் இருக்கும் கைதிகளை விட, பத்து மடங்கு அதிகமானோர் அமெரிக்க சிறைகளில் அடைக்கப் பட்டுள்ளனர். ஏழைகள், அல்லது இனப்பாகுபாடு காரணமாகப் பல இலட்சம் பேர் கைது செய்யப் படுகின்றனர். சட்டவிரோதமாக எல்லை தாண்டி வந்தவர்கள் அகதிகள் என்றாலும் சிறைகளில் தடுத்து வைக்கப் படுகின்றனர். இவர்களில் ஈழத் தமிழ் அகதிகளும் அடக்கம்.

வட கொரியா ஓர் ஏழை நாடாக இருந்தாலும், அனைத்துப் பிரஜைகளுக்கும் இலவசக் கல்வி, இலவச மருத்துவ வசதி செய்து கொடுத்து வருகின்றது. அமெரிக்காவில், பணம் இல்லாவிட்டால் படிக்க முடியாது. காசில்லா விட்டால் நோய் வாய்ப்பட்டு சாக வேண்டியது தான்.

வட கொரிய அரசு, தனது மக்களுக்கு வீடுகளும் இலவசமாக கட்டிக் கொடுக்கிறது. அமெரிக்காவில் இலட்சக் கணக்கானோர் கடன் கட்ட முடியாமல், வருடக் கணக்காக வாழ்ந்த வீடுகளில் இருந்து வெளியேற்றப் பட்டுள்ளனர்.

அமெரிக்காவும், வட கொரியாவும் இன்று வரையில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள எதிரி நாடுகள். வட கொரியா, கொரிய தேசிய இனத்தை ஒன்றிணைப்பதற்கான மண் மீட்புப் போர் மட்டுமே நடத்தியது. ஆனால், அமெரிக்கா இன்று வரையில், சிறிதும் பெரிதுமான ஒரு டசின் உலக நாடுகள் மீது படையெடுத்துள்ளது.

அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டு போட்டு இலட்சக் கணக்கானோரை கொன்றது. கொரிய யுத்தத்தின் போது, கொரியாவிலும், சீனாவிலும் அணுகுண்டு போடப் போவதாக மிரட்டியது. 21 ம் நூற்றாண்டிலும், ஆப்கானிஸ்தான், ஈராக், ஆகிய நாடுகள் மீது படையெடுத்த அமெரிக்கப் படையினர், அங்கு இலட்சக் கணக்கான அப்பாவி மக்களை இனப்படுகொலை செய்தனர்.

வட கொரியாவை விட, அமெரிக்கா தான், உலக சமாதானத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக, பெரும்பான்மையான உலக மக்கள் நம்புகின்றனர். இதனை சில மேலைத்தேய புள்ளிவிபரங்களே உறுதிப் படுத்தி உள்ளன. அப்படி இருந்தும், இன்றும் சிலர், "வட கொரியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்காக" முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

அமெரிக்க டாலர்களுக்காக கையேந்திப் பிழைக்கும் போலி மனிதநேயவாதிகளும், போலித் தமிழ் தேசியவாதிகளும், அமெரிக்காவின் இனப்படுகொலைகளை கண்டுகொள்ள மறுக்கும் மர்மம் என்னவோ? ஈழப்போரின் இறுதியில், வன்னிக்குள் அகப்பட்ட புலிகளையும், பொது மக்களையும், சாட்டலைட் படங்கள் மூலம் காட்டிக் கொடுத்து, குண்டு போட்டு அழிக்க உதவியதும் அமெரிக்கா தான் என்பதை அதற்குள் மறந்து விட்டார்களா?

வடகொரியா-மர்ம தேசம்