Showing posts with label தொழிலாளர். Show all posts
Showing posts with label தொழிலாளர். Show all posts

Saturday, July 24, 2021

இலங்கை தொழிற்சங்க போராட்டம் - ஒரு மறைக்கப்படும் வரலாறு

 - ஆசியாவிலேயே முதலாவது தொழிற்சங்கம் இலங்கையில் தான் தொடங்கியது. 1893 ம் ஆண்டு ஐரோப்பிய முதலாளிகளின் அச்சகங்களில் வேலை செய்த தொழிலாளர்கள் ஒரு தொழிற்சங்கமாக ஒன்றிணைந்தனர்.

- இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் கொழும்பு நகரில் பல தொழிற்துறைகளில் வேலை செய்த பெரும்பாலான தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இணைந்து கொண்டனர். சேவைத்துறை தொழிலாளர்கள், ரிக்சா வண்டி ஓட்டுவோர், டிராம், ரயில் ஊழியர்கள், அலுவலக ஊழியர்கள்... இவ்வாறு பலவகையான தொழிற் பிரிவினர் தொழிற்சங்க அமைப்பாகினார்கள்.

- 1931 முதல் 1970 வரை, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) விதிகளுக்கு ஏற்றவாறு அரசு சட்டங்களை மாற்றியமைத்ததில், தொழிற்சங்கங்களின் பங்களிப்பு இருந்தது. இடையறாத போராட்டங்களின் மூலம் தொழிலாளர்கள் தமது உரிமைகளை ஒவ்வொன்றாக வென்றெடுத்தனர்.

- இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், 1945 -1947 ஆகிய மூன்று வருடங்களுக்குள் மாத்திரம் அடுத்தடுத்து பல வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடந்துள்ளன. கொழும்பு துறைமுகத் தொழிலாளர்கள் மட்டுமல்லாது, போக்குவரத்து, நகரசபை, வங்கி ஊழியர்களும் வேலைநிறுத்த போராடங்களில் ஈடுபட்டனர். தேயிலை, ரப்பர் தோட்டங்களில் வேலை செய்த மலையகத் தமிழர்களும் வேலைநிறுத்தம் செய்தனர். இதன் விளைவாக இடதுசாரி கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு பெருகியது. அவை உழைக்கும் வர்க்க மக்களின் தலைமையாக உருவாகின. இடதுசாரிகள் தமக்கான மக்கள் ஆதரவு தளத்தில் நம்பிக்கை வைத்து இலங்கைக்கு முழுமையான சுதந்திரம் கோரினார்கள்.

- எல்லாப் போராட்டமும் வெற்றியளிக்கா விட்டாலும், அரசு பல கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது. வேலைக்கு சேர்ப்பது, மாற்றம் செய்வது, பணி நீக்கம் செய்வது போன்றவற்றில் பிரச்சினைகள் ஏற்பட்டால், தொழிலாளர்கள் நீதிமன்றம் சென்று வழக்காடும் உரிமை கிடைத்தது. அதை விட சம்பளத்துடனான விடுமுறை, நஷ்டஈடு, மற்றும் பல சலுகைகள் கிடைத்தன.

- இலங்கை சுதந்திரமடைந்த ஆரம்ப காலங்களில், தொழிலாளர்கள் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளின் பட்டியல்: 
  • 1) ஒழுங்கமைக்கப் படாத தொழிற்துறைகளிலும் கூட சம்பளம் நிர்ணயிப்பதற்கான குழு உருவாக்கப்பட்டது. 
  • 2) தனியார் நிறுவனங்கள் தொழிற் சங்கங்களுடன் சேர்ந்து இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 
  • 3) தொழிலகங்களில் நடக்கும் பிரச்சனைகளை பேசித் தீர்ப்பதற்கான அமைப்புகள் உருவாக்கப்பட்டன. 
  • 4) வேலை நேர இடைவேளை, வேலை செய்யும் நேரம் ஆகியன தீர்மானிக்கப் பட்டன. 
  • 5) பெண்களுக்கான மகப்பேறு விடுமுறை கிடைத்தது. அதைக் காரணம் காட்டி பணி நீக்கம் செய்வது தடுக்கப்பட்டது. 
  • 6) தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் சமூக நலப் பாதுகாப்பு சலுகைகள் கிடைத்தன. 
  • 7) தனியார் நிறுவன முதலாளிகள் கூட தொழிலாளர் நலத்துறை அதிகாரியை கலந்தாலோசிக்காமல் பணி நீக்கம் செய்ய முடியாது.
இலங்கையில் தொழிலாளர்கள் அனுபவித்து வந்த உரிமைகள் எப்போது, எப்படிப் பறிக்கப்பட்டன?

- 1977 ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், முதலாளிய ஆதரவு வலதுசாரிக் கட்சியான யு.என்.பி. அறுதிப்பெரும்பான்மை பெற்று வென்று ஆட்சிக்கு வந்தது.

- ஆசியாவிலேயே முதல்தடைவையாக, ஜே.ஆர். ஜெயவர்த்தன நியோ- லிபரலிச பொருளாதாரக் கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வந்தார். நாட்டின் பொருளாதாரம் திறந்து விடப்பட்டது.

- 1978 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம் தொழில்நிறுவனங்கள் விரும்பிய படி தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கவும், பணி நீக்கம் செய்யவும் அனுமதித்தது.

- அத்தியாவசிய சேவைகள் துறையில் வேலைநிறுத்தம் செய்வது தடைசெய்யப்பட்டது. ஒரு நிறுவனத்தில் சட்டப்படி வேலைநிறுத்தம் செய்வதற்கான அறிவித்தல் 21 நாட்களுக்கு முன்னர் விடுக்கப்பட வேண்டும். அப்படியே நடந்தாலும், அதற்கு ஆதரவாக, அதனுடன் சம்பந்தப்படாத தொழிலாளர்கள் தோழமை வேலைநிறுத்தம் செய்வது தடுக்கப்பட்டது.

- நிச்சயமாக தொழிலாளர் வர்க்கம் இந்த அடக்குமுறை சட்டத்திற்கு அடிபணியவில்லை. அதை எதிர்த்து போராடி வந்தது.

- 1980 ம் ஆண்டு நடந்த பொது வேலைநிறுத்த போராட்டத்தை முன்நின்று நடத்திய 40,000 தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான தொழிற்சங்கவாதிகள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப் பட்டனர். அதன் மூலம் அவர்களுக்கு நாடு முழுவதும் அனைத்து நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு மறுக்கப் பட்டது. அவர்கள் தமது வாழ்க்கையை கொண்டு செல்ல சுயதொழில் செய்து பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

- அவசரகால சட்டம், ஊடகத் தடை, அரச வன்முறைகள் மூலம் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் ஒடுக்கப்பட்டனர்.

- ஈழப் போராட்டம் வெடித்த பொழுது, அரசு PTA எனும் பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வந்து தமிழ் இளைஞர்கள் கைது செய்யப் பட்டு துன்புறுத்தப்பட்ட வரலாறு அனைவருக்கும் தெரியும். ஆனால், அதே சட்டம் தொழிற்சங்கவாதிகளுக்கும் எதிராக பிரயோகிக்கப் பட்டதென்பது பலருக்குத் தெரியாது.

- 1983 ஜூலை இனக்கலவரத்தை காரணமாகக் காட்டி, அரசு மூன்று இடதுசாரிக் கட்சிகளை தடைசெய்தது. ஜேவிபி, கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜக் கட்சி ஆகியன தடைசெய்யப் பட்டதால், அவை தலைமை தாங்கிய தொழிற்சங்கங்கள் இயங்க முடியாத நிலைமை உருவாகியது.

- வடக்கில் வாழ்ந்த தமிழர்கள் மத்தியில் தொழிற்சங்க நடவடிக்கைகள் மிகக் குறைவாகவே இருந்தன. ஏற்கனவே, அந்தப் பிரதேசத்தில் தொழிற்துறை மிக அரிதாகவே இருந்தது. குறிப்பாக, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை ஊழியர்கள் கம்யூனிச தொழிற்சங்க உறுப்பினர்களாக இருந்தனர். ஆனால், போர் தொடங்கிய பின்னர் அந்தத் தொழிற்சாலை இயங்காமல் நின்று விட்டது.

- விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தென்னிலங்கை தொழிற்சங்கங்கள் இயங்குவது தடுக்கப்பட்டது. தமிழ் தொழிலாளர்கள், தென்னிலங்கை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதும் தடுக்கப்பட்டது. 2002 ம் ஆண்டுக்கு பின்னர், சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் நடந்த யாழ் மருத்துவமனை ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் புலிகளின் நேரடித் தலையீட்டினால் தடுத்து நிறுத்தப்பட்டது.

- தென்னிலங்கையில் 1987 -1989 காலப்பகுதியில் நடந்த ஜேவிபி கிளர்ச்சியின் போதும் தொழிற்சங்கவாதிகள் மூர்க்கத்தனமாக ஒடுக்கப்பட்டனர். பெரும்பாலான தொழிற்சங்கவாதிகள் அரசுக்கும், ஜேவிபிக்கும் இடையில் சிக்கித் தவித்தனர்.

- ஒரு புறம் ஜேவிபி தனது கட்டுப்பாட்டின் கீழான தொழிற்சங்க போராட்டங்களை மட்டும் ஆதரித்தது. பிற கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கவாதிகளை ஆயுதமுனையில் மிரட்டிப் பணிய வைத்தது. மீறுவோர் கொல்லப்பட்டனர்.

- மறு புறம் அரசு இயந்திரம் போரை பயன்படுத்தி தொழிற்சங்கவாதிகளை வேட்டையாடியது. இராணுவம், போலிஸ் மட்டுமல்ல, இரகசிய கொலைப் படையினரும் தொழிற்சங்க உறுப்பினர்களை கண்ட இடத்தில் சுட்டுக் கொன்றனர். தொழிற்சங்க ஆதரவாளர்கள் கூட ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப் பட்டனர்.

- தொண்ணூறுகளுக்கு பிறகு எந்தவொரு தொழிற்சங்கமும் அரசுக்கு சவாலாக இருக்கவில்லை. அந்தளவு தூரம், தொழிற்சங்கவாதிகள் இனி எந்தக் காலத்திலும் தலைதூக்க விடாமல் அரச பயங்கரவாதத்தினால் அழித்தொழிக்க பட்டனர். அதுவும் இனப்படுகொலை தான். ஆனால், அதைப் பற்றி பேசுவதற்கு இங்கே யாரும் இல்லை.

Tuesday, July 20, 2021

ஹிஷாலினி மரணம் - சுரண்டப்படும் சிறார் தொழிலாளர்கள்

 


இலங்கையில் முன்னாள் அமைச்சர் ரிச்சார்ட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்து கொண்டிருந்த பதினாறு வயது சிறுமி ஹிஷாலினி கடும் சித்திரவதைகளுக்கு பின்னர் கொல்லப் பட்டிருக்கிறார். அவரது உடலில் தீக்காயங்களும், வல்லுறவு செய்ததற்கான தடயங்களும் இருந்துள்ளன. இந்த சம்பவம் பற்றிய தகவல்கள் வெளியான நாளில் இருந்து, ஹிஷாலினுக்கு நீதி கோரும் மக்கள் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்துள்ளன.

வறுமை காரணமாக பணக்காரர்களின் வீடுகளில் பணிப்பெண் வேலைக்கு சேரும் மலையகத் தமிழ்ச் சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதும், சிலநேரம் அது கொலையில் முடிவதும் காலங்காலமாக நடந்து கொண்டிருக்கிறது. தற்போதைய சம்பவத்தில் ஓர் அமைச்சர் சம்பந்தப் பட்டிருப்பதால் ஊடகங்களின் கவனத்தை பெற்றுள்ளது. குற்றவாளிகளின் பண பலம், அதிகார பலம் காரணமாக நீதியான விசாரணை நடப்பதற்கு தடைகள் போடப்படுகின்றன. இலங்கையில் இருப்பது வர்க்க நீதி. அது எப்போதும் பணக்காரர்களுக்கு சாதகமாக செயற்படும்.

இதற்கிடையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இனவாத சக்திகள் கொல்லப்பட்ட சிறுமிக்காக நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டே மீண்டும் தமது இனவாத நிகழ்ச்சிநிரலை கொண்டுவரப் பார்க்கின்றன. பலியானவர் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக, தமிழினவாதிகளும் இதைத் தமது அரசியல் இலாபம் கருதி பயன்படுத்தப் பார்க்கிறார்கள். இது ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதை.

பல நூறாண்டுகளாக சமூகத்தில் மாறாமல் இருந்து வரும், ஏழை - பணக்காரர் ஏற்றத்தாழ்வு பற்றி இனவாதிகள் பேச மாட்டார்கள். அவர்களது கண்களுக்கு தெரிவதெல்லாம் இனம், இனம், இனம் மட்டுமே. இதற்கு முன்பு இலங்கையில் நடந்த வர்க்கப் பிரச்சனைகளை எல்லாம் இனவாதப் பிரச்சினைகளாக மடைமாற்றி ஆதாயம் அடைந்தவர்கள் இருக்கிறார்கள். வெறும் வாய் மென்று கொண்டிருந்தவர்களுக்கு அவல் கிடைத்தால் விடுவார்களா?

மலையக நகரங்களில் நடந்த, ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரும் போராட்டங்களில் நியாயமான கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டன: 
  • "பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப் பட வேண்டும்." 
  • "சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது ஒரு சிறுவர் உரிமை மீறல்." 
இந்தப் பிரச்சினை இதற்கு முன்பும் இலங்கையில் இருந்தது. இனிமேலும் இருக்கப் போகிறது. ஆகவே பதினாறு வயதுக்கு குறைவான சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது முற்றாக தடுக்கப் பட வேண்டும். சட்டத்தை மீறி சிறார் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இலங்கையில் இலவசக் கல்வி கொண்டு வந்ததன் நோக்கமே வறுமையில் வாழும் பிள்ளைகளும் படிக்க வேண்டும் என்பது தான். கல்வி இலவசமாகக் கிடைத்தாலும், புத்தகங்கள் வாங்குவது சுமையாக இருக்கிறது என்பதற்காக, பிற்காலத்தில் இலவசப் பாட நூல்கள் வழங்கப் பட்டன. அப்படி இருந்தும் இன்னமும் பல்லாயிரக் கணக்கான ஏழைச் சிறுவர்கள் பள்ளிக்கூடம் செல்லாமல் வேலைக்கு செல்கிறார்கள். அப்படியானால் இந்த அமைப்பில் ஏதோ ஒரு தவறிருக்க வேண்டும்.

மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய அரசாங்கத்தின் பிரதிநிதியே, அதாவது ஒரு முன்னாள் அமைச்சர், ஒரு மக்கள் விரோத செயலில் ஈடுபட்டிருகிறார். பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய சிறுமி, ஒரு அமைச்சரின் வீட்டிலேயே பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தப் பட்டிருக்கிறார். அங்கு அவரது உழைப்பு மட்டுமல்லாது, உடலும் பாலியல்ரீதியாக சுரண்டப் பட்டிருக்கிறது. இதைத்தவிர உடலை சிதைக்கும் சித்திரவதைகள் கூட நடந்துள்ளன.

இலங்கையில் ஓர் ஏழைக்கு அமைச்சர் வீட்டிலும் பாதுகாப்பு கிடைக்காது என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. இது இலங்கை அரசு இயந்திரம் எந்தளவு தூரம் ஊழல்மயமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. அது எப்போதும் பணக்காரர்களின் பக்கம் நின்று ஏழைகளை ஒடுக்கி வந்துள்ளது. ஒரு வர்க்கப் போராட்டத்தின் மூலம் மட்டுமே இதற்கான தீர்வைக் காண முடியும்.

Monday, June 01, 2020

வட கொரிய உழைக்கும் மக்களுக்கான அழகான சோஷலிச கட்டுமானங்கள்

  சோஷலிச மாதிரிக் கிராமம்


வட கொரியாவின் நவீன சோஷலிச மாதிரிக் கிராமம் போமன் ரீ. அதன் சிறப்பம்சங்கள்: 
1. உழைக்கும் மக்களுக்காக அரச செலவில் இலவசமாக கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள். 
2. உழைத்துக் களைத்த உடல் புத்துணர்ச்சி பெறவும், பொழுதுபோக்கவும் கட்டப்பட்ட நீச்சல் தடாகம். அனுமதி இலவசம். 
3. குடியிருப்புகளுக்கு அருகாமையில் ஒரு மருத்துவமனை. மருத்துவ வசதிகள் அனைத்தும் இலவசம். 
4. தொழிலாளர்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடம். கணணி வசதி கொண்ட நவீன வகுப்பறைகள். கல்வி முற்றிலும் இலவசம். 

 Poman-ri எனும் இந்த மாதிரிக் கிராமம் Sohung மாவட்டத்தில் உள்ளது. அது தென் கொரிய எல்லையோரம் உள்ள வட Hwanghae மாகாணத்தில் உள்ளது. கடந்த வருடம் திறந்து வைக்கப் பட்ட நவீன சோஷலிச மாதிரிக் கிராமம் பற்றிய மேலதிக தகவல்களை நீங்களாகவே இணையத்தில் தேடிப் பெற்றுக் கொள்ளலாம். 

சிறுவர் மாளிகை


இது வட கொரிய பள்ளிப் பிள்ளைகளுக்காக கட்டப் பட்ட "சிறுவர் மாளிகை". வட கொரிய சிறுவர்கள் பல்வேறு வகையான விளையாட்டுகளில் ஈடுபடவும், இசைக் கருவிகளை பழகவும், புதிய மொழிகளை கற்பதற்கும் வசதிகள் செய்து கொடுக்கப் பட்டுள்ளன. அதற்காக மாணவர்களிடம் எந்தக் கட்டணமும் வசூலிக்கப் படுவதில்லை. முற்றிலும் இலவசம். இந்த சிறுவர் மாளிகையை நடத்தும் நிர்வாகத்தில் உள்ளவர்களும் சிறுவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

வட கொரியா முழுவதும் ஒவ்வொரு மாகாணத்திலும் இது மாதிரி அறுபது சிறுவர் மாளிகைகள் உள்ளன. தலைநகர் பியாங்கியாங்கின் புறநகர் பகுதியான Mangyongdae இல் கட்டப்பட்டுள்ள இந்த மாளிகை எல்லாவற்றிலும் பெரியது. 1989 ம் ஆண்டு பியாங்கியாங் நகரில் நடந்த சர்வதேச மாணவர் இளைஞர் மகாநாட்டை ஒட்டி இந்த பிரமாண்டமான சிறுவர் மாளிகை திறந்து வைக்கப் பட்டது.

Mangyongdae சிறுவர் மாளிகையில் பள்ளிப் பிள்ளைகள் தங்குவதற்கான 120 அறைகள் உள்ளன. ஒரு நீச்சல் தடாகமும், திரையரங்கும் உள்ளன. அத்துடன் விஞ்ஞான பரிசோதனை சாலைகள், நட்சத்திரங்களை காணும் தொலைநோக்கிகள், நவீன தொழில்நுட்ப அறிவியல் போன்ற பல துறைகளிலும் சிறுவர்கள் செயல்முறைப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

வட கொரியாவுக்கு சுற்றுலா செல்லும் வெளிநாட்டுப் பயணிகள் கூட இந்த சிறுவர் மாளிகைக்கு நேரில் சென்று பார்க்கலாம். ஒரு சில மேற்கத்திய சுற்றுலா பயணிகள் இங்கு நடக்கும் சிறுவர்களின் நடன நிகழ்வை மட்டும் படமாக்கி விட்டு, அதை பிரச்சார நோக்கில் தவறாக பயன்படுத்துகிறார்கள். "இதோ பாருங்கள், வட கொரிய சர்வாதிகார மன்னராட்சி சிறுவர்களை கொடுமைப் படுத்துகிறது!" என்று திரித்து பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்கள் ஒருநாளும் அங்கிருக்கும் சிறுவர் மாளிகை பற்றிய தகவலை உங்களுக்கு சொல்லப் போவதில்லை.


தொழிலாளர்களுக்கான சுற்றுலா மையம்

Yangdok Hot Spring Resort in DPRK

இந்த ஆடம்பர சுற்றுலா விடுதி இருப்பது சுவிட்சர்லாந்தில் அல்ல, வட கொரியாவில்! மலைப் பகுதியான Yangdok எனும் இடத்தில் இந்த வெந்நீர் நீச்சல் தடாகங்களும், ஸ்கீ சறுக்கும் விளையாட்டு மைதானமும் அமைக்கப் பட்டுள்ளன. இவை சாதாரணமான தொழிலாளர்கள் தமது ஒய்வு நாட்களை உல்லாசமாக பொழுதுபோக்குவதற்காக கட்டப் பட்டுள்ளன.

ஒவ்வொரு வருடமும் சாதாரணமான வட கொரிய ஆலைத் தொழிலாளர்கள், தமது குளிர்கால விடுமுறைக் காலத்தில் இங்கே வந்து குடும்பத்தோடு தங்குகிறார்கள். மலையில் பனியில் ஸ்கீ சறுக்கி விளையாடி விட்டு வந்து, வெந்நீர் தடாகத்தில் குளித்து இன்பமாக பொழுதைக் கழிக்கிறார்கள். அவர்களது தங்குமிட செலவுகளில் பெரும்பகுதியை வேலை செய்யும் தொழிற்சாலையின் நிர்வாகம் பொறுப்பெடுக்கிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் கட்டிமுடிக்கப் பட்ட இந்த சுற்றுலா விடுதிகள் அதிபர் கிம் யொங் உண்ணால் திறந்து வைக்கப் பட்டது. அப்போது இதனை "உயர்ந்த சோஷலிச நாகரிகம்" என்று வட கொரிய ஊடகங்கள் புகழாரம் சூட்டின. வட கொரியா செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இங்கு சென்று தங்கலாம். Yangdok Hot Spring Resort என்று இணையத்தில் தேடிப் பார்க்கவும்.

Thursday, May 11, 2017

முதலாளிகளை அகற்றி விட்டு தொழிலாளர்களே நிர்வகிக்க முடியமா?


தொழிலாளர்களே நிறுவனங்களை நிர்வகிக்க முடியமா? இந்தக் கேள்வியை பிரபல வலதுசாரி  எழுத்தாளர் ஜெயமோகனும் எழுப்பி இருக்கிறார். அரசிடம் வாங்கிய கோடிக்கணக்கான கடனைக் கட்ட மறுத்து, நாட்டை விட்டோடிய கிரிமினல் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு வக்காலத்து வாங்கும் கட்டுரையில் இதைக் கேட்டுள்ளார்.

அவரது கூற்றின் படி, அவர்கள் முதலாளிகள் அல்ல, தொழில்முனைவோர். அதுவும் ஒரு கலை தான். அதற்கென்று தனித் திறமை வேண்டும் என்று சொல்லிக் கொண்டு போகிறார். இடதுசாரிகள், அல்லது மார்க்சிஸ்டுகள் எதிர்பார்ப்பது போல தொழிலாளர்கள் நிர்வாகத்தை பொறுப்பெடுப்பது சாத்தியமில்லை என்று வாதாடுகிறார்.

ஜெயமோகனின் கட்டுரையில் இருந்து ஒரு பகுதி:
//மார்க்சியச் செவ்வியல் பார்வையில் மூலப்பொருட்கள், உழைப்பு, மூலதனம், நிர்வாகம் என்பதில் நிர்வாகத்திற்கான இடம் எவ்வகையிலும் முக்கியமானதல்ல. அதை உழைப்பாளிகள் தாங்களே செய்து கொள்ள முடியும் என்ற எண்ணத்திலிருந்துதான் மார்க்சியம் தொடங்குகிறது. நிர்வாகிகளான முதலாளிகளை முழுமையாக அகற்றி மூலப்பொருட்களையும் முதலீட்டையும் கைப்பற்றி தொழிலாளர்சமூகம் தாங்களே நிர்வாகத்தை நடத்தி உற்பத்தி வினியோகம் அரசமைப்பு ஆகியவற்றை ஆற்றுவவதற்குப்பெயர்தான் மார்க்ஸியப்பொருளியல்.
ஆனால் நடைமுறை அப்படி அல்ல. எப்படி அறிவியலாளர்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள், அரசியல் நிபுணர்கள் தன்னியல்பான திறமைகளால் உருவாகி எழுந்து வருகிறார்களோ அதே போல உருவாகிவருபவர்கள்தான் முதலாளிகள். அவர்கள் குன்றாத தன்னம்பிக்கையும் புதுப்புது வாய்ப்புகளாகத் தேடும் கற்பனைவளமும் ஆளுமைத் திறனும் கொண்டவர்கள். அவர்களுடைய ஆளுமைத்திறன்தான் மூலப்பொருட்களையும் உழைப்பையும் மூலதனத்தையும் ஒருங்கிணைத்து உற்பத்தி சக்தியாக மாற்றுகிறது. ஓர் அறிவியலாளரும் சிந்தனையாளரும் எப்படி மாற்றீடு செய்யப்பட முடியாதவர்களோ அப்படித்தான் முதலாளிகளும். அவர்களைத் தொழில்முனைவோர், பெருநிர்வாகிகள் என்ற சொற்களால் குறிப்பிட விரும்புகிறேன்.//

மார்க்சியம் நடைமுறைச் சாத்தியமா என்று சந்தேகம் எழுப்புவோர் முதலில் முதலாளித்துவம் பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும். வருங்கால சோஷலிச சமுதாயத்திற்கான மையக்கரு இன்றைய முதலாளித்துவ சமுதாயத்தில் இருந்து தான் தோன்றுகிறது.

முதலாளிகளைப் பற்றிப் பேசினால், சினிமாவில் வருவது போன்று, தனி ஒரு நபர் முதல் போட்டு கம்பனி நடத்துவதாக நினைத்துக் கொள்கிறார்கள். அந்த எண்ணத்தில் தான், ஜெயமோகனும் விஜய் மல்லையாவை "தொழில் முனைவோர்" என்று எழுதி இருக்கிறார். சுமார் நூறாண்டுகளுக்கு முன்பே, பெரிய நிறுவனங்களின் கட்டமைப்பு மாறி விட்டது. ஒரு தொழிலதிபர் நிர்வாகியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.  

குறிப்பாக, கார்பரேட் நிறுவனங்களில், பெரிய வரையறுக்கப் பட்ட வர்த்தக நிறுவனத்தில் கூட, தனி ஒருவரை முதலாளியாகக் காண முடியாது. அதை ஒரு நிர்வாகிகள் குழு தான் நடத்துகின்றது. அந்த நிறுவனங்களில் பெருமளவு பங்குகளை வைத்திருப்போர் ஒரு குழுவாக ஒன்று கூடி நிர்வகிப்பார்கள்.

அது பெரும்பாலும் முக்கிய முடிவுகளை எடுக்கும் பங்குதாரர் கூட்டமாக இருக்கும். அவர்களில் பலர் முதல் போட்டு விட்டு, இலாபத்தை எதிர்பார்க்கும் உரிமையாளர்களாக மட்டுமே இருப்பார்கள். சிலர் தமக்கு இலாபத்தில் பங்கான டிவிடன்ட் பணம் கிடைத்தால் போதும் என்று வீட்டில் இருப்பதுமுண்டு.

அதே நேரம், சில முதலாளித்துவ ஆதரவாளர்கள் கற்பனை செய்வது போன்று, பங்கு வைத்திருக்கும் எல்லோருக்கும் முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். அதாவது, ஒரு சில பங்குகளை வாங்குவதால் மட்டும் ஒரு சாமானியன் முதலாளியாக முடியாது. ஒரு பங்கு வாங்கி வைத்திருப்பவரை விட, ஆயிரம் பங்குகள் வைத்திருப்பவருக்கு மட்டுமே பங்குதாரர் கூட்டத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் இருக்கும். சுருக்கமாக சொன்னால், பெருமளவு பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு மட்டுமே கம்பனியில் உரிமை உண்டு. அவர்களைத் தான் முதலாளிகள் என்று அழைக்கிறோம். 

உண்மையில் பெரும் மூலதனத்தை செலுத்தியோர், அதாவது முதலாளிகள், கம்பனியை நிர்வகிக்கும் வேலை செய்கிறார்கள் என்று சொல்ல முடியாது. பொதுவாக அவர்கள் எந்த வேலையும் செய்வதில்லை.  சிலநேரம், தலைமை நிர்வாகிக்கு பங்குகளில் ஒரு பகுதியை கொடுத்து, அவரையும் பங்குதாரர் ஆக்கி இருப்பார்கள். (அதை விட போனஸ் தனியாகக் கிடைக்கும்.) ஏனையோர் சம்பளம் வாங்கிக் கொண்டு நிர்வாக வேலை செய்கிறார்கள். அதாவது, அதிகம் சம்பாதிக்கும் மூளை உழைப்பாளிகள். அவர்கள் வணிக முகாமைத்துவம், அல்லது அது போன்ற ஏதாவதொரு துறையில் பாண்டித்தியம் பெற்ற அறிவுஜீவிக் குழுவாக இருப்பார்கள்.

ஆகவே, வணிகம் பற்றியோ, நிர்வாகம் பற்றியோ எந்த அறிவுமற்ற, சிலநேரம் கல்வியறிவு எதுவுமற்றவர்கள் கூட, பங்குதாரர் என்ற பெயரில் கம்பனியின் நிர்வாகக் குழுவில் இருக்கலாம். இருந்தாலும், அவர்கள் முக்கியமான முடிவுகளை எடுக்கும் அளவிற்கு சக்தி படைத்தவர்களாக இருப்பார்கள்.

அப்படியானால், ஏன் தொழிலாளர்கள் ஒரு நிறுவனத்தை நிர்வகிக்க முடியாது? அதாவது, பணம் படைத்த முதலாளிகளை மட்டுமே கொண்ட, பங்குதாரர்களின் நிர்வாகக் குழுவிற்குப் பதிலாக, தொழிலாளர்களின் பிரதிநிதிகளை கொண்ட நிர்வாகக் குழு அமைக்க முடியாதா? எது எப்படியோ, அவர்களுக்கு கீழே நிர்வாகப் பொறுப்புகளை ஏற்றவர்கள் சம்பளத்திற்கு தானே வேலை செய்கிறார்கள்?

முதலாளித்துவ நிறுவனங்களில், தலைமை நிர்வாகிக்கு சில பங்குகள் கொடுப்பதன் மூலம், அவரையும் பங்குதாரர் குழுவில் உறுப்பினர் ஆக்குகிறார்கள். அது ஏன் ஒரு சோஷலிச பொருளாதார நிர்வாகத்தில் சாத்தியப் படாது? அதாவது, ஒரு முதலாளித்துவ நிறுவனத்தில் ஒரு நிர்வாகி முதலாளிகளில் ஒருவர் ஆகிறார். ஆனால், சோஷலிச நிறுவனத்தில் ஒரு நிர்வாகி தொழிலாளிகளில் ஒருவர் ஆகிறார். அது மட்டும் தானே வித்தியாசம்? அவரது கடமையும், வேலையும் ஒன்று தானே?

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதை, பலர் தவறாக நினைத்துக் கொள்வதுண்டு. உண்மை நிலவரம் வேறு. இன்றைய முதலாளித்துவ கட்டமைப்பில், முதலாளித்துவ வர்க்க சர்வாதிகாரம் நிலவுகின்றது. அதாவது, இங்கே ஒரு நிறுவனத்தை கட்டுப்படுத்தும் சர்வாதிகாரம் பங்குதாரர் எனப்படும் முதலாளிகள் குழுவிடம் உள்ளது. அதற்கு மாறாக, அதே நிறுவனத்தை கட்டுப்படுத்தும் சர்வாதிகாரம் தொழிலாளர் குழுவிடம் இருந்தால் அது தவறா?

மேலும், பங்குதாரர்களான முதலாளிகளுக்கு, அந்தத் தொழில்துறை சார்ந்த அடிப்படை அறிவிருக்குமா என்பது சந்தேகமே. அதற்குப் பதிலாக, தொழிற்சாலையும், அதன் உற்பத்தி பற்றியும் அனுபவ அறிவு கைவரப் பெற்ற தொழிலாளர்கள் நிறுவனத்தை மேற்பார்வை செய்கிறார்கள்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அடிப்படையில் ஜனநாயகத் தன்மை கொண்டது. ஏனென்றால், ஒரு தொழிலகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களால், ஒரு பொதுத் தேர்தலில் வாக்களித்து தெரிவான பிரதிநிதிகள் தான் தொழிலாளர் நிர்வாகத்தில் இடம்பெறுகிறார்கள்.  இன்றைய நிறுவனங்களின் முதலாளிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களா? இல்லையே! நாம் அன்றாடம் சந்திக்கும் சர்வாதிகாரத்தை, சாதாரணமாக எடுத்துக் கொள்வது எப்படி?  

இன்றைய காலத்தில், "ஜனநாயகம்" இருப்பதாக சொல்லப்படும் நாடுகளில், தனியார் நிறுவனங்கள் வளர்ந்து, பொருளாதாரத்தில் பெரும் பகுதியை கட்டுப்படுத்துகின்றன. அது எப்படி ஜனநாயகம் ஆகும்? அதிகாரமற்ற அரசியல்வாதிகளை பாராளுமன்றத்திற்கு தெரிந்தெடுப்பதால் மட்டுமே, அந்த நாட்டில் ஜனநாயகம் இருப்பதாக சொல்ல முடியுமா?

மேலதிக விபரங்களுக்கு,
இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:


Friday, July 03, 2015

மேற்கு ஐரோப்பாவில் கணக்காளருக்கும், கட்டிடத் தொழிலாளிக்கும் ஒரே சம்பளம்!


மேற்கு ஐரோப்பாவில் கணக்காளருக்கும், கட்டிடத் தொழிலாளிக்கும் ஒரே அளவான சம்பளம் கிடைக்கிறது! சோஷலிசம் என்பது சமநீதி. இந்த உண்மையை அடித்தட்டு மக்களுக்கு மறைப்பது அநீதி. சோஷலிசம் மார்க்சியத்திற்கு மட்டுமே சொந்தமானதல்ல. மேற்கு ஐரோப்பாவில், சமூக ஜனநாயக கட்சிகள் அதற்காக போராடின.

இறுதியில், பல மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளில், "நலன்புரி அரசு" என்ற பெயரில், முதலாளித்துவத்தின் கீழ் மக்களுக்கு  நன்மை பயக்கும்  திட்டங்களை கொண்டு வந்தனர்.அதாவது, முதலாளித்துவமும், அதன் இலாபவெறியும் அப்படியே இருக்கும். சுரண்டலும் இருக்கும். அதே நேரம், மக்களுக்கு தேவையான வசதிகளும் செய்து கொடுக்கப் படும்.

நெதர்லாந்தில் அதை "Polder Model" என்று அழைக்கிறார்கள். அது உண்மையில் வர்க்க சமரசம் ஆகும். அதாவது, முதலாளிகளும், தொழிலாளர்களும் சமரசம் செய்து கொள்வதால், இரண்டு தரப்புக்கும் ஆதாயம் என்று நினைக்கும் சீர்திருத்தவாதக் கொள்கை.

வசதியாக வாழும் மத்திய தர வர்க்கத்தினர், சோஷலிசத்தை வெறுப்பதற்கு முக்கிய காரணம், அவர்களது வர்க்க மேலாண்மை சிந்தனை தான். தமது போலியான சமூக அந்தஸ்துக்கு பங்கம் வந்து விடும் என்று அஞ்சுகிறார்கள். சாதாரண கூலித் தொழிலாளர்களுடன், உணவுவிடுதியில் அருகருகே அமர்ந்து சாப்பிடும் நிலைமையை வெறுக்கிறார்கள். வர்க்க மனப்பான்மை, நவீனமயப் படுத்தப்பட்ட சாதிய மனப்பான்மையாக உள்ளது.

முன்னாள் சோஷலிச நாடுகளில், எல்லோருக்கும் சமமான சம்பளம் என்ற கொள்கையை பரிகசித்தவர்கள் பலர். அதுவே பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்று கண்டுபிடித்த பொருளாதாரப் புலிகளும் இருக்கிறார்கள். சமூகத்தில் ஏற்றத்தாழ்வு நியாயமானது என்றும், முன்னுக்கு வர வேண்டும் என்ற போட்டி மனப்பான்மை உற்பத்தியை அதிகரிக்கும் என்றும் வாதிட்டார்கள்.

மத்தியதர வர்க்கத்தினரின் கனவுலகமான மேற்கு ஐரோப்பாவில் நிலைமை எப்படி இருக்கிறது? இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், சோஷலிச நாடுகளுக்குப் போட்டியாக, தமது மக்களின் வாழ்க்கைத்தரமும் உயர்த்தப் பட வேண்டும் என்று நினைத்து செயற்பட்டார்கள்.

அதில் முக்கியமானது, சம்பள வேறுபாடுகளில் உள்ள ஏற்றத்தாழ்வை முடிந்த அளவிற்கு குறைப்பது. ஏனென்றால், அன்றாட வாழ்க்கைச் செலவுக்கே போதாத சம்பளம் பெறுவதால் தான், ஒரு சாதாரண தொழிலாளியால் வசதியாக வாழமுடியாமல் உள்ளது. ஆகவே, அவர்களது சம்பளம் உயர்த்தப் பட வேண்டும்.

சோஷலிச நாடுகளில் பின்பற்றப் பட்ட அதே நடைமுறை தான், மேற்கு ஐரோப்பாவிலும் பின்பற்றப் பட்டது. குறிப்பாக நெதர்லாந்தில், ஒரு தொழிற்துறையின் சம்பளம் எந்தளவு இருக்க வேண்டும் என்பதை, தொழிற்சங்கங்களும், தொழிலதிபர்களும் கூடி முடிவெடுக்க வேண்டும்.  அது அங்கே "Polder Model"  என்று அழைக்கப் படுகின்றது. (முன்னாள் சோஷலிச நாடுகளில் இருந்த தொழிலதிபர்கள் அரசு ஊழியர்கள். ஆனால், முதலாளித்துவ நாடுகளில் அவர்கள் முதலாளிகள்.)

ஒரு தொழிற்துறையில் கிடைக்கும் சராசரி வருமானம் எந்தளவுக்கு உயர்ந்ததோ, அந்தளவுக்கு தொழிலாளரின் சம்பளமும் உயர்வாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, போர் முடிந்த பின்னர் அபிவிருத்திக்கு அதிக நிதி ஒதுக்கப் பட்டதால், கட்டிடத் தொழில் நிறுவனங்களின் வருமானமும் அதிகமாக இருந்தது. இப்போதும் இருக்கின்றது. அதனால், சாதாரண கூலியாளின் சம்பளமும் அதிகரித்தது. இன்றைக்கும் அவர்கள் எடுக்கும் சம்பளம், ஒரு வங்கி ஊழியரின் சம்பளத்தை விட அதிகமாகும்.

தமிழ்நாட்டில் இருந்து என்னுடன் தொடர்பு கொண்ட நண்பர் ஒருவர், நெதர்லாந்தில் கட்டிடத் தொழிலாளரின் நிலைமை எப்படி இருக்கிறது என்று விசாரித்தார். தமிழ்நாட்டில் அவர்களுக்கு மிகக் குறைந்த சம்பளம் கொடுக்கப்படுவது மட்டுமல்ல, மேலாளர்கள் கூலித் தொழிலாளரை அடிப்பது, கெட்ட வார்த்தைகளினால் திட்டுவது போன்ற கொடுமைகளும் நடக்கின்றன. நெதர்லாந்திலும், பல மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் தொழிலாளர்களை அந்தளவு மோசமாக நடத்துவதில்லை. அடித்தால் அது வன்முறையாக கருதப்பட்டு, பொலிஸ் தலையிட்டு, நீதிமன்றம் வரை சென்று தண்டம் கட்ட வேண்டியிருக்கும். கெட்ட வார்த்தைகளினால் திட்டுவது கூட, ஒரு மனிதரை கண்ணியக் குறைவாக நடத்துவது என்ற கட்டத்திற்கு போகாத அளவிற்குத் தான் இருக்கும்.

மேற்கு ஐரோப்பாவிலும், கட்டிடத் தொழிலாளர்கள் சுரண்டப் படுவதுண்டு. பொதுவாகவே உள்நாட்டு வேலையாட்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டும். நெதர்லாந்து போன்ற நாட்டில் வேலை செய்யும் கட்டிடத் தொழிலாளியின் சம்பளம் அதிகமாகும். சிலநேரம், அலுவலக ஊழியரை விட இரண்டு மடங்கு கிடைக்கும். ஏனென்றால், அது மிகவும் கடினமான வேலை. கட்டிடத் தொழில் நிறுவனங்கள், அதிகப்படியான சம்பளத் தொகையை குறைப்பதற்காக, கிழக்கு ஐரோப்பிய தொழிலாளர்களை முகவர்கள் மூலம் கூட்டிக் கொண்டு வருகிறார்கள். சில இடங்களில் போர்த்துகீசிய தொழிலாளர்களும் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த நாட்டில் தீர்மானிக்கப் பட்ட மிகக் குறைந்த அடிப்படை சம்பளம் மட்டும் கொடுத்து ஏமாற்றுகிறார்கள்.

எது எப்படி இருப்பினும், தொழில்களில் பாகுபாடு காட்டாமல், எல்லோருக்கும் வாழ்க்கையை கொண்டு நடத்தும் அளவிற்கு சம்பளம் கொடுப்பது முக்கியமாகக் கருதப் படுகின்றது. நெதர்லாந்தில், அரசும், முதலாளிகளும், தொழிற்சங்கங்களும் அடிக்கடி இது குறித்து வாக்குவாதப் படுவதுண்டு. ஆனால், இன்று வரையில் ஒரு மூன்றாமுலக நாட்டில் இருப்பதைப் போன்று, சம்பளத்தில் பெரியளவு ஏற்றத்தாழ்வுகளை கொண்டு வரவில்லை. 

இன்றைக்கும், மேற்கு ஐரோப்பாவில் வாழும் சாதாரண கூலித் தொழிலாளி கூட, ஒரு வசதியான வீட்டிற்கு வாடகை கட்டி, வருடத்திற்கு ஒரு தடவை வெளிநாட்டு சுற்றுலா சென்று வர முடிகின்றது. எல்லோருக்கும், தொழில் பாகுபாடு பார்க்காமல், சமமான சம்பளம் கொடுப்பதன் நோக்கமும் அது தான். இந்த பூமியில் பிறந்த மனிதன் வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும். வருடம் முழுவதும் உழைத்தாலும், வறுமையில் வாட வேண்டும் என்றால் அந்த வாழ்க்கையில் ஓர் அர்த்தம் இல்லை. ஏழைகள் வாழ்வதில்லை. உயிரைக் காப்பாற்ற தப்பிப் பிழைக்கிறார்கள்.

நெதர்லாந்து நாட்டில், என்னென்ன வேலைக்கு எந்தளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்ற விபரத்தை இங்கே தருகிறேன். அரசாங்கத்திலும், தனியார் நிறுவனங்களிலும் மிக உயர்ந்த பதவி வகிப்பவர்கள் மட்டுமே பல மடங்கு அதிகமான சம்பளம் பெறுகிறார்கள். முதலாளித்துவ அமைப்பில் என்றும் மாறாமல் தொடர்ந்திருக்கும், அந்த ஏற்றத் தாழ்வு பற்றி இந்தப் பதிவு பேசவில்லை. 

அரசு, தனியார் துறையாக இருந்தாலும், மூளை, உடல் உழைப்பாளியாக இருந்தாலும், யார் என்ன வேலை செய்தாலும், அடிப்படை சம்பளத்தில் வித்தியாசம் இருப்பதில்லை. ஒருவர் என்ன வேலை செய்கிறார் என்பது முக்கியமில்லை. அவர் வாழ்வதற்கு தேவையான அடிப்படை வருமானம் மட்டுமே முக்கியம்.

உதாரணத்திற்கு, தெருவில் குப்பை அள்ளும் தொழிலாளியின் (Vuilnisman) ஒரு வருட ஊதியம் (23.500), ஒரு சாதாரண அலுவலகப் பணியாளரின் (Datatypiste) ஒரு வருட ஊதியத்தை (18.500) விட அதிகமாகும்.

Gemiddeld salaris per beroep 
http://www.gemiddeld-inkomen.nl/gemiddeld-salaris-per-beroep/

Saturday, July 05, 2014

விரும்பிய நேரத்தில் வேலை! இப்படியும் ஒரு நிறுவனம் இருக்கிறது!!

நீங்கள் வேலைக்குச் செல்லும் நிறுவனத்தின் விதி முறைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? 

1. எத்தனை மணிக்கு வேலை தொடங்க வேண்டும்? எத்தனை மணிக்கு    முடிக்க வேண்டும்? எவ்வளவு நேரம் வேலை செய்ய வேண்டும்?
  - அதை நீங்களாகவே தீர்மானித்துக் கொள்ளலாம். வேலைக்கு நடுவில் சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம். மன நிலை சரியில்லை என்றால் வீட்டில் நிற்கலாம்.

2. என்ன வேலை செய்ய வேண்டும்?
  - உங்களது தகுதி, திறமைக்கு ஏற்ற வேலையை தெரிந்தெடுத்துக் கொள்ளலாம்.

3. எவ்வளவு சம்பளம் வேண்டும்?
- சம்பளத்தின் அளவையும் நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.

4. எந்த நேரமும் கண்காணிக்கும் மேற்பார்வையாளர்கள் இருப்பார்களா?
- நீங்கள் வேலை செய்கிறீர்களா என்று பார்ப்பதற்கு யாரும் வரப் போவதில்லை. உங்களிடம் ஒப்படைத்த வேலையை பொறுப்புடன் செய்து முடித்துக் கொடுத்தால் போதும்.

5. முகாமையாளர் உங்களுக்கு மேலே அதிகாரம் செலுத்தும் ஒருவராக இருப்பாரா?
- இல்லை. முகாமையாளரை தொழிலாளர்கள் தான் தேர்ந்தெடுக்கிறார்கள். பிடிக்காத முகாமையாளரை வேலையை விட்டு தூக்கும் அதிகாரம் தொழிலாளர்களிடம் உண்டு.

இதை வாசிக்கும் சிலர், ஒரு நகைச்சுவையாகக் கருதி வாய் விட்டுச் சிரிக்கலாம். அப்படி ஒரு நிறுவனம் கனவில் கூட சாத்தியமில்லை என்று நினைக்கலாம். "தொழிலாளர்களுக்கு இந்த அளவு சுதந்திரம் கொடுத்தால், அந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி திவாலாகும்" என்று, பொருளாதார மேதைகள் கூட பரிகசிக்கலாம்.

நம்பினால் நம்புங்கள். நான் இங்கே எழுதியது எதுவும் கற்பனை அல்ல. மேற்குறிப்பிட்ட விதிகளை கடைப்பிடிக்கும் ஒரு நிறுவனம் (Semco SA) பிரேசில் நாட்டில் இருக்கிறது. அது ஒரு சிறிய நிறுவனம் அல்ல. 250 பேருக்கு மேற்பட்ட பணியாட்களைக் கொண்ட மிகப் பெரிய நிறுவனம். அதன் நிகர இலாபம் வருடாந்தம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அதன் உரிமையாளர் பிரேசிலில் அதிக செல்வம் படைத்த கோடீஸ்வரர்களில் ஒருவர். அவர் பெயர் : ரிக்கார்டோ செம்லர் (Ricardo Semler)

சுமார் 25 வருடங்களுக்கு முன்னர், ரிக்கார்டோ Semco SA  நிறுவனத்தை, அவரது தந்தையிடம் இருந்து பொறுப்பெடுத்தார். அப்போது அந்த நிறுவனம், நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. தந்தையிடம் இருந்து நிர்வாகத்தை பொறுப்பெடுத்த ரிக்கார்டோ செய்த முதல் வேலை, மூன்றில் இரண்டு பங்கு முகாமையாளர்களை வீட்டிற்கு அனுப்பியது தான். அதில் பல உறவினர்களும் அடங்குவார்கள். 

செம்கோ நிறுவனம் முழுமையாக மறு சீரமைக்கப் பட்டது. அங்கு வேலை செய்து வந்த தொழிலாளர்கள், மகிழ்ச்சியின்றி கட்டாயத்தின் பேரில் வேலை செய்வதைக் கண்டார். ரிக்கார்டோ, தனது மனதில் தோன்றிய புதிய சிந்தனைகளை நடைமுறைப் படுத்தினார். தொழிலாளர்கள் என்ன வேலை செய்ய வேண்டும் என்று யாரும் வற்புறுத்தப் போவதில்லை. அவர்களுக்கு பூரண சுதந்திரம் வழங்கப் படும். தொழிலகத்தின் நிர்வாகத்தில் பங்கு வகிப்பார்கள். 

தொழிலாளர்கள் அனைவரும் செம்கோ தமது சொந்த நிறுவனம் என்று உணரத் தொடங்கினார்கள். ஒவ்வொரு நாளும் என்ன வேலை செய்ய வேண்டும் என்பதை அவர்களே தீர்மானித்தார்கள். யாரும் அவர்களுக்கு உத்தரவிடவில்லை. யாரும் அவர்களை கண்காணிக்கவில்லை. அவர்களுக்கு விரும்பிய நேரத்தில் வேலை செய்தார்கள். களைத்து விட்டால் சிறிது ஓய்வெடுத்தார்கள். 

தொழிலாளர்கள் தாம் விரும்பிய நேரத்தில் வேலை செய்த போதிலும், அந்த தொழிலகத்தின் உற்பத்தி எந்த விதத்திலும் பாதிக்கப் படவில்லை. மாறாக, அது பல மடங்கு அதிகரித்தது. ஒரு காலத்தில் நஷ்டத்தில் இயங்கிய நிறுவனம், இலாபம் சம்பாதிக்கத் தொடங்கியது. அதனால், நிறுவனத்தில் வேலை செய்யும் அத்தனை பேருக்கும் இலாபத்தில் பங்கு கிடைத்தது. தொழிலாளர்கள் மத்தியில் அது அவர்களது சொந்த நிறுவனம் என்ற உணர்வு ஏற்பட்டது. அவர்கள் மகிழ்ச்சியுடன் மனம் விரும்பி வேலை செய்தார்கள். 

தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் மனம் விரும்பி வேலை செய்தால், அவர்களுக்கும் நன்மை, அதே நேரம் முதலாளிக்கும் நன்மை. ஒரு நிறுவனத்தின் வெற்றியின் இரகசியம் அது தான். இந்த உண்மையை உலகின் பிற பாகங்களில் உள்ள முதலாளிகள் என்றைக்கு உணர்ந்து கொள்ளப் போகிறார்கள்? 

மேலதிக விபரங்களுக்கு:
De kapitale kracht van geluk;
http://tegenlicht.vpro.nl/afleveringen/2012-2013/Semler.html

வீடியோ: 
பிரேசில் நாட்டு தொழிலதிபர் ரிக்கார்டோ செம்லர்  டச்சு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு (ஆங்கிலத்தில்) வழங்கிய பேட்டி :



Thursday, March 01, 2012

உங்கள் ஐ-போனில் மரண ஓலம் கேட்கிறதா?

iPhone, iPad பயன்படுத்தும் நண்பர்களுக்கு! உங்களது அபிமான மின் சாதனங்களை தயாரிக்கும் தொழிற்சாலையில், எத்தனை தொழிலாளர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்று தெரியுமா?(Foxconn Suicides) ஓய்வில்லாத வேலை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான தொழிலாளர்கள் மாடியில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்கிறார்கள் என்பதற்காக, கட்டிடத்தை சுற்றி வலை கட்டி இருக்கிறார்கள். ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களை தயாரிக்கும், சீன நிறுவனமான Foxconn தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்து வேலை வாங்குகின்றது. iPhone, iPod விற்பனை காரணமாக ஆப்பிள் நிறுவனம் பல கோடி டாலர்கள் இலாபம் சம்பாதிக்கின்றது. கடந்த வருட காலாண்டுக் கணக்கின் படி, அந்த நிறுவனம் 41 % இலாபம் சம்பாதித்துள்ளது ($100 billion in cash). ஆனால், ஆப்பிள் நிறுவனத்தின் இமாலய சாதனைக்குப் பின்னால், பல இலட்சம் தொழிலாளர்களின் அவலம் மறைந்துள்ளது.

Foxconn, சீனாவில் முதலிட்டுள்ள தைவான் முதலாளியின் நிறுவனம். ஆப்பிள் கம்பனியின் மிகப் பெரிய விநியோகஸ்தர். ஒரு மில்லியன் தொழிலாளர்கள் அங்கே வேலை செய்கின்றனர். அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் எல்லோரும், தொழிற்சாலை கட்டியுள்ள முகாம் போன்ற மண்டபங்களில் தங்க வேண்டும். அதிகாலையில் எழும் தொழிலாளி, ஒரு நாளைக்கு 12 மணித்தியாலங்கள் வேலை செய்ய வேண்டும். வாரத்திற்கு ஆறு நாட்களும் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் படுவர். தொழிலகத்தில் காற்றோட்ட வசதி இல்லாத காரணத்தால், வெடி விபத்துகள் நேர்ந்துள்ளன. ஒரே வேலையை நாள் முழுவதும் செய்வதால், தொழிலாளர்களின் உடல் பாகங்கள் செயலிழந்து விடுகின்றன. ஆபத்தான மின்னணுக் கருவிகளை பயன்படுத்துவதால் ஏற்படும் வெடி விபத்து காரணமாக, அல்லது ஓய்வில்லாத உழைப்பினால் சோர்வுற்ற தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுதே மரணமடைந்துள்ளனர். சீனத் தொழிலாளர்களின் அவலம், அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்திற்கு தெரியாத விடயமல்ல. மிகக் குறைந்த உற்பத்திச் செலவு, மிகக் கூடிய விற்பனை விலை, இவற்றிற்கு இடையில் ஆப்பிளின் இலாபம் மறைந்துள்ளது. இன்னொரு விதமாக சொன்னால், ஆப்பிள் ஒரே நேரத்தில், சீனத் தொழிலாளர்களின் உழைப்பையும், உலகப் பாவனையாளர்களின் உழைப்பையும் சுரண்டி இலாபம் சம்பாதித்து வருகின்றது.

Foxconn Suicides
Foxconn Worker Dies in the Bath After Working 60 Hours a Week
முதன் முதலாக, அவுஸ்திரேலியா தொலைக்காட்சியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர், Foxconn நிறுவனத்தின் உள்ளே சென்று நிலைமைகளை பார்வையிட்டுள்ளார். பல தொழிலாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் தயாரித்த ஆவணப்படம் கீழே: