Thursday, April 30, 2015

மயூரனின் மரண தண்டனையும் மனிதாபிமான வேடதாரிகளும்


"மனிதாபிமான உணர்வு இனம் பார்த்துத் தான் வரும்" என்பதை, மீண்டும் பல "தமிழர்கள்" நிரூபித்து வருகின்றனர். போதைவஸ்து கடத்திய குற்றத்திற்காக மயூரன் என்ற, அவுஸ்திரேலிய பிரஜையான தமிழ் இளைஞனுக்கு மரண தண்டனை வழங்கியதை நியாயப் படுத்த முடியாது. ஆனால், இந்த விடயத்தில் நிறையப் பேர் இரட்டை வேடம் போடுகின்றனர்.

பல தசாப்த காலமாகவே மரண தண்டனை ஒழிப்பிற்காக குரல் கொடுத்து வரும் மனிதநேய ஆர்வலர்கள் இந்தோனேசிய அரசை விமர்சிப்பது நியாயமானது. ஆனால், அமெரிக்கா முதல் இந்தோனேசியா வரையில் போதைவஸ்து கடத்தும் கிரிமினல்களுக்கு மரண தண்டனை வழங்குவதை, நேற்று வரையில் வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்த பலர், இன்று திடீர் மனிதாபிமானவாதிகளாக மாறியுள்ளனர்.

ஒரு தமிழரும், சீனரும், தனது நாட்டு பிரஜைகள் என்பதால், மரண தண்டனையை தடுப்பதற்காக அவுஸ்திரேலிய அரசு பாடுபட்டுள்ளது. தனது வேண்டுகோள் புறக்கணிக்கப் பட்ட படியால், தூதுவரை திரும்பப் பெற்றுள்ளது. இதற்குப் பின்னால் உள்ள இராஜதந்திர பிரச்சினைகளையும் மறைக்க முடியாது.

ஏற்கனவே மலேசியா, சிங்கப்பூரில் இதே போதைவஸ்து கடத்தல் குற்றத்திற்காக அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு மரணதண்டனை விதிக்கப் பட்டது. அப்போது இந்தளவு கண்டனங்களும், ஊடக கவனமும் அவற்றிக்கு கிடைக்கவில்லை.

மரண தண்டனையை வைத்து அரசியல் இலாபம் பெற நினைக்கும், தமிழ் தேசியவாதிகள் உதிர்க்கும் கருத்துக்கள் அரைவேக்காட்டுத் தனமானவை. "தமிழனுக்கு என்றொரு நாடு இருந்திருந்தால் பிரச்சினை இந்தளவு தூரம் வந்திருக்காது" என்று காமெடி பண்ணுகின்றனர்.

உலகில் மிகவும் செல்வாக்குள்ள, ஒரு பணக்கார மேற்கத்திய நாடான அவுஸ்திரேலியா, தனது பிரஜைகளை காப்பாற்ற முயற்சித்தும், மரண தண்டனையை தடுக்க முடியவில்லை. இந்த இலட்சணத்தில், தமிழ் தேசியவாதிகள் தனி நாடு கண்டிருந்தால் கிழித்திருப்பார்கள்.

முன்பு ஈழப்போர் நடந்த காலங்களில், வட மாகாணத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில், அல்லது கெரில்லாப் போர் நடத்திய பிரதேசங்களில், பல சமூகவிரோதிகளுக்கு மரண தண்டனை வழங்கினார்கள். தந்திக் கம்பங்களில் கட்டப்பட்டிருந்த சடலங்களுக்கு அருகில், அவர்கள் செய்த குற்றமும் எழுதப் பட்டிருக்கும். சில பத்துப் பேருக்காவது, போதைவஸ்து கடத்திய குற்றச்சாட்டில் மரண தண்டனை விதித்திருப்பார்கள்.

அப்போதெல்லாம், மரண தண்டனை விதிக்கப்பட்ட போதைவஸ்து கடத்தல்காரர்களுக்காக, "தமிழர்கள்" யாரும் இரக்கப் படவில்லை. இன மான உணர்வு பீறிட்டுக் கிளம்பவில்லை. இத்தனைக்கும் கொல்லப் பட்டவர்களும் தமிழர்கள் தான். ஆனால், "வித்தியாசமான" தமிழர்கள். அவர்கள் ஒரு பின்தங்கிய மாவட்டத்தை சேர்ந்த ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்திருப்பார்கள். அல்லது சமூகத்தில் ஒதுக்கப்பட்டு வறுமையில் வாழும், தாழ்த்தப் பட்ட சாதியினராக இருந்திருப்பார்கள். அதனால், அன்று அவர்களுக்காக யாரும் அழவில்லை.

ஓர் அவுஸ்திரேலிய பிரஜையான மயூரன், தனது வயிற்றுப் பசியை, அல்லது குடும்பக் கஷ்டத்தை போக்குவதற்காக போதைவஸ்து கடத்தியதாக தெரியவில்லை. அப்படி அவரும் வாக்குமூலம் கொடுக்கவில்லை. அவுஸ்திரேலியா "ஒரு வறிய நாடு, வேலையில்லாப் பிரச்சினை அதிகம், அதனால் மயூரன் வேறு வழியின்றி போதைவஸ்து கடத்தினான்..." என்று திடீர் மனிதநேயவாதிகள் யாரும் சொல்லவும் மாட்டார்கள். இங்கே பல "தமிழர்களுக்கு" மனிதாபிமான உணர்வு இனம் பார்த்து மட்டும் வருவதில்லை. அது வர்க்கம் பார்த்தும் வரும்.


மயூரன் சுகுமாரனின் மரண தண்டனையை கடுமையான வார்த்தைகளில் கண்டித்த, அவுஸ்திரேலிய அரசையும், ஊடகங்களையும் பற்றி, இன்று வரையில் பல தமிழர்கள் சிலாகித்துப் பேசியுள்ளனர். உண்மையில் அவர்களுக்கு அவுஸ்திரேலிய அரசு, மற்றும் ஊடகங்களின் இரட்டை வேடம் பற்றி எதுவும் தெரியாதா? அல்லது தெரிந்து கொள்ள விருப்பமில்லையா? 

இதே அவுஸ்திரேலிய அரசு தான், தமிழ் அகதிகளை நாட்டுக்குள் நுளைய விடாமல், தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்திருந்தது. அப்போது எங்கே போனது மனிதாபிமானம்? அவுஸ்திரேலிய விபச்சார ஊடகங்கள் என்ன குறைந்தவையா? 

போதைப்பொருள் கடத்தி பிடிபட்ட, மயூரனின், ஷான் ஆகிய இரண்டு அவுஸ்திரேலிய பிரஜைகளின் மரண தண்டனை காரணமாக, இந்தோனேசியா அரசின் கரங்களில் இரத்தக்கறை படிந்துள்ளது என்று தலையங்கம் தீட்டிய Daily Telegraph பத்திரிகை, சில வருடங்களுக்கு முன்பு என்ன எழுதியது? 

அதே Daily Telegraph பத்திரிகை, மரண தண்டனைக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கியது. ஆயிரக் கணக்கான உயிர்களை பலி கொண்ட போதைப்பொருளை கடத்தியவர்களின் உயிரைப் பறிப்பதற்கு கருணை காட்டக் கூடாது என்று தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தது. இவங்களை இன்னுமா இந்த உலகம் நம்புது? 

அவுஸ்திரேலிய ஊடகங்களின் இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டும் கட்டுரை: A tale of two headlines


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Wednesday, April 29, 2015

அமெரிக்க இனக் கலவரங்கள் : வர்க்கப் புரட்சிக்கான ஒத்திகை


இது தாண்டா அமெரிக்க பொலிஸ்! பால்டிமோர் நகரில், போலீஸ்காரர்களே முதலில் மக்கள் மேல் கல்லெறிந்து தாக்கினார்கள். பதிலுக்கு மக்களும் கற்களால் தாக்கத்தொடங்கியதும், புறமுதுகிட்டு ஓடுகின்றனர்.
(கீழேயுள்ள வீடியோவை பார்க்கவும்)


இது தான் அமெரிக்கா! இந்தப் படங்களை உங்களுக்கு எந்த ஊடகமும் காட்டப் போவதில்லை! அமெரிக்காவில் பால்டிமோர் நகரில், மீண்டும் ஒரு கருப்பின இளைஞன் பொலிசாரால் சுடப்பட்டு மரணமடைந்தான். கொடுமை கண்டு பொங்கி எழுந்த ஆயிரக்கணக்கான மக்கள், இனவெறிப் பொலிஸின் அட்டூழியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். அமைதியாக ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் பெரும் கலவரத்தில் முடிந்துள்ளது. பொலிஸ் வாகனங்கள் தாக்கப் பட்டன.

25 வயதான Freddie Gray என்ற கருப்பின இளைஞனை கைது செய்ய முயன்ற பொலிசார், அவனை சுட்டுக் காயப் படுத்தி இருந்தனர். சம்பவம் நடந்த அன்று முதலுதவி சிகிச்சை அளிக்காத படியால், மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சில நாட்களின் பின்னர் மரணமடைந்தான். முதலுதவி சிகிச்சை அளிக்காதது தங்களது தவறு தான் என்று, பால்டிமோர் பொலிஸ் அதிகாரி தெரிவித்திருந்தார்.

August 9, 2014 பெர்குசன் நகரில் நடந்த கலவரத்தின் தொடர்ச்சியாகவே, பால்டிமோர் கலவரமும் நடந்துள்ளது. இரண்டிலும் இன அடிப்படையிலான பாகுபாடு மாத்திரமல்லாது, வர்க்க வேறுபாடும் கலவரங்களுக்கு காரணமாக இருந்துள்ளது. பெர்குசன் கலவரம் நடந்த போது, நான் எழுதிய குறிப்புக்கள் இவை. அமெரிக்காவில் ஒடுக்கப்பட்ட கருப்பின மக்களின் எழுச்சிக்கான காரணங்களை புரிந்து கொள்ள அவை உதவும்.


பெர்குசன் நகர கலவரம்

அமெரிக்காவில் பெர்குசன் நகரில், காவல்துறையினர் ஒரு கருப்பினச் சிறுவனை சுட்டுக் கொன்றதன் பின்னர் ஏற்பட்ட மக்கள் எழுச்சி ஒரு புரட்சிக்கான ஆரம்பம் ஆகும். பெர்குசன் நகரில் வடக்குப் பகுதியில் கருப்பின மக்கள் செறிவாக வாழ்கின்றனர். அங்கே தான் ஏழைகள் அதிகம்.

தெற்குப் பகுதியில் வெள்ளையின மக்கள் செறிவாக வாழ்கின்றனர். அங்கே தான் பணக்காரர்கள் அதிகம். ஏழைகளின் பகுதியில் மருத்துவ வசதி இல்லை, கல்வி கற்பதற்கு பல மைல் தூரம் செல்ல வேண்டும். பணக்கார குடியிருப்புகளில் எல்லாம் கைக்கு எட்டிய தூரத்தில் உள்ளன. கருப்பு - வெள்ளை எனும் இனப் பாகுபாடு மட்டுமல்லாது, வர்க்க வேறுபாடும் அண்மைய கலவரங்களுக்கு வித்திட்டுள்ளன.

பெர்குசன் நகரில் பலர் வெளி மாநிலங்களில் இருந்து வந்து கலவரத்தில் ஈடுபடுவதாக பொலிஸ் குற்றஞ் சாட்டியது. அதற்குக் காரணம், அங்கு நடந்த சம்பவங்களை, வெறும் கலவரம் என்று சொல்ல முடியாது. எகிப்தில், துனீசியாவில் நடந்தது போன்ற மக்கள் எழுச்சி. இரவு நேரங்களில், பொலிசாருடன் மோதல்கள் நடந்தன. அதே இடங்கள், பகல் நேரங்களில் அரசியல் விவாதங்கள் நடக்கும்.

எகிப்து, துனீசியாவில் நடந்ததைப் போன்று, சமூக வலையமைப்புகள் மக்களை ஒன்று திரட்ட பயன்பட்டன. எல்லோரும் கைத் தொலைபேசி கொண்டு திரிந்து, படம் எடுத்து தகவல்களை இணையம் ஊடாக பரப்பிக் கொண்டிருந்தார்கள். காப்பரேட் ஊடகங்கள், அங்கு நடந்த கடைகளை சூறையாடிய சம்பவங்களை பற்றி மட்டும் சொல்லிக் கொண்டிருந்தன. மக்கள் எழுச்சி பற்றி அவை எதுவும் கூறாமல் மௌனம் சாதித்தன.

பெர்குசன் நகரின் மத்தியில் உள்ள மக்டொனால்ட்ஸ் உணவகத்தில் ஆர்வலர்கள் ஒன்று கூடுவார்கள். எந்த வகையான போராட்டம் நடத்துவது என்பது குறித்து விவாதிப்பார்கள். போராட்டத் தலைவர்கள் யாரும் அரசியல்வாதிகள் அல்ல. சாமானியர்களின் பிரதிநிதிகள். மக்கள் மத்தியில் இருந்து தெரிவு செய்யப் பட்ட குழுவினர் முடிவுகளை எடுக்கின்றது.

பெர்குசன் நகரில் இன்னொரு அதிசயத்தையும் பார்க்கலாம். கிறிஸ்தவ மதகுருக்களும், தீவிர இடதுசாரிகளும் தோளோடு தோள் சேர்ந்து, போராடும் மக்களை வழிநடத்தினார்கள். சில திபெத்திய பௌத்த பிக்குகளும் சேர்ந்து கொண்டார்கள். புதிதாக நிறுவன மயப் பட்ட கருப்பின மக்களின் விடுதலைக்கான கருஞ் சிறுத்தைகள் இயக்க உறுப்பினர்கள் முன்னரங்கில் நின்றார்கள்.

பெர்குசன் கருப்பின சமூகத்தை சேர்ந்த பிரபலமான ராப் பாடகர் ஒருவர், பணம் நிறைய வந்ததும், வெள்ளையின மக்கள் வாழும் பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்று வசித்து வந்தார். அவர் தனது சமூக மக்களை கண்டு பேசுவதற்கு வந்த நேரம், மக்கள் அவரை கூச்சலிட்டு விரட்டி விட்டார்கள்.

கலவரத்திற்கு முன்பு, கருப்பின மக்களின் பிரதேசத்திற்கு சாதாரண வெள்ளையின மக்கள் செல்ல மாட்டார்கள். "குற்றச் செயல்கள் அதிகமாக நடப்பதாக" ஒரு காரணம் சொல்வார்கள். அண்மைய மக்கள் எழுச்சியில் நிறைய வெள்ளையின ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். கம்யூனிஸ்டுகள், அனார்க்கிஸ்டுகளுக்கு பெரும் வரவேற்புக் கிடைத்தது.

பெர்குசன் நகரில் குவிந்திருந்த கலவரத் தடுப்பு பொலிஸ் படையினர், ஓர் இராணுவம் போன்று நடந்து கொண்டனர். அந்தப் பிரதேசம் ஒரு போர்க்களம் போன்று காட்சியளித்தது. எகிப்தில் நடந்தது போல, அமெரிக்கப் பொலிஸ் படையும் அளவுக்கு அதிகமான கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியது.

பெர்குசனில் பொலிசை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த மக்களுக்கு, பல உலக நாடுகளில் இருந்தும் ஆதரவாளர்கள் சமூக வலையமைப்புகள் மூலமாக ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக சில பாலஸ்தீன ஆர்வலர்கள், கண்ணீர்ப் புகைக் குண்டுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று சொல்லிக் கொடுத்தார்கள்.

பெர்குசனில் நடந்தது ஒரு முழுமையான அமெரிக்கப் புரட்சி அல்ல. ஆனால், அதற்கான முன்னோட்டம். வருங்காலப் புரட்சியாளர்களின் பயிற்சிக் களம்.



இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Tuesday, April 28, 2015

சோஷலிசத்தால் மட்டுமே எழுத்தறிவின்மையை ஒழிக்க முடியும் தம்பி!




கியூபாவின் குழந்தைகள். பாடசாலையில் மதிய இடைவேளையின் போது, சிறிது நேரம் தூங்கி ஓய்வெடுக்கிறார்கள்.
கியூபா ஒரு மூன்றாமுலக வறிய நாடாக இருந்த போதிலும், அங்குள்ள குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப் படவில்லை. எந்தக் குழந்தையும் தெருவில் பிச்சை எடுக்கவில்லை அல்லது கிரிமினல் கும்பல்களுடன் சேரவில்லை. நில அபகரிப்பால், அல்லது வாடகை கட்ட முடியாததால், எந்தக் குழந்தையும் அது வசித்து வந்த வீட்டில் இருந்து வெளியேற்றப் படவில்லை. 
தரமான மருத்துவமும், அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு சோஷலிச கட்டமைப்பின் கீழ் உறுதிப் படுத்தப் பட்டுள்ளன.


"உன்னால் முடியும் தம்பி!"

 ஒரு நாட்டில், சோஷலிசத்தால் மட்டுமே, எழுத்தறிவின்மையை ஒழிக்க முடியும் என்பது, மீண்டும் ஒரு தடவை நிரூபிக்கப் பட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சோஷலிச கொள்கைகளை பின்பற்றி வரும் ஏவோ மொராலேஸ்சின் பொலிவியாவில் எழுத்தறிவின்மை ஒழிக்கப் பட்டு விட்டதாக UNESCO அறிவித்துள்ளது. UNESCO அளவுகோலின் படி, ஒரு நாட்டில் எழுத்தறிவற்றவர்கள் விகிதாசாரம் 4% க்கும் கீழே இருக்க வேண்டும்.

எழுத்தறிவின்மையை ஒழிப்பதற்காக கியூபா தயாரித்த விசேட கல்வித் திட்டமான "Yo, sí puedo" (என்னால் முடியும்) இதற்கு பெரிதும் உதவியுள்ளதாக UNESCO புகழாரம் சூட்டியுள்ளது. கியூபா ஒவ்வொரு வருடமும் கல்விக்க்காக பட்ஜெட்டில் கணிசமான அளவு நிதியை ஒதுக்கி வருவது தெரிந்ததே.

லத்தீன் அமெரிக்க நாடுகளில், சோஷலிச கொள்கையை பின்பற்றும், கியூபா, வெனிசுவேலாவை, பொலிவியா ஆகிய நாடுகளில் மட்டுமே எழுத்தறிவின்மை ஒழிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

சோஷலிசத்தை ஆதரிக்கும் ஆட்சியாளர்களைக் கொண்ட எக்குவடோர், உருகுவே, ஆர்ஜெந்தீனா ஆகிய நாடுகளிலும் கியூபாவின் "Yo, sí puedo" கல்வித்திட்டம் ஏற்கனவே நடைமுறைப் படுத்தப் பட்டு வருகின்றது. வெகுவிரைவில் அந்த நாடுகளும் UNESCO பட்டியலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

Sunday, April 26, 2015

25 ஏப்ரல், பாசிஸ எதிர்ப்பு போராட்ட வரலாற்றில் குறிப்பிடத் தக்க தினம்


ஒரு மேற்கு ஐரோப்பிய நாடான போர்த்துக்கல்லில், 1974 ம் ஆண்டு, ஒரு துளி இரத்தம் சிந்தாமல், ஒரு வெற்றிகரமான சோஷலிசப் புரட்சி நடந்த விடயம் எத்தனை பேருக்குத் தெரியும்?

அதற்கு முன்னர் போர்த்துக்கல் நாட்டில் ஜனநாயகம் இருக்கவில்லை. பல தசாப்த காலமாக, பாசிஸ சர்வாதிகாரி சலசாரின் கொடுங்கோல் ஆட்சி நடந்து கொண்டிருந்தது என்ற விடயமாவது தெரியுமா?

கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகளின் புரட்சிக்குப் பின்னர், சுமார் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு, போர்த்துக்கல்லில் ஜனநாயக பாராளுமன்ற தேர்தல்கள் நடத்தப் பட்டன என்ற உண்மை தெரியுமா? இன்றைக்கும் மறைக்கப் பட்டு வரும் ஐரோப்பாவின் வரலாற்று உண்மைகளில் செவ்வரத்தம் பூ புரட்சியும் ஒன்று.

போர்த்துக்கல் இராணுவத்திற்குள் இருந்த கம்யூனிச, சோஷலிச அல்லது ஜனநாயக ஆதரவு சக்திகள், இரகசியமான சதிப்புரட்சி ஒன்றின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றினார்கள். வெறும் நான்கு உயிரிழப்புகள் மட்டுமே ஏற்பட்டன. சலசாரின் கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வந்தது.

படையினர் தமது துப்பாக்கி முனைகளில், செவ்வரத்தம்பூ செருகி வைத்திருந்த படியால், அது இன்றைக்கும் செவ்வரத்தம் பூ புரட்சி என்றே அழைக்கப் படுகின்றது. அதற்கு பெருமளவு மக்கள் ஆதரவு இருந்தது.

புரட்சிக்குப் பின்னர், அரசமைப்பு, பொருளாதாரம் தொடர்பாக, வலதுசாரிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சியின் கை ஓங்கியிருந்த சில இடங்களில் நிலச் சீர்திருத்தங்கள் கொண்டு வரப் பட்டன.

அதே நேரம், போர்த்துக்கல் அரசாங்கத்தில் கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகரித்து விட்டதாக குற்றஞ் சாட்டி, நேட்டோ படையெடுக்கப் போவதாக மிரட்டியது. அட்லாண்டிக் கடலில் நேட்டோ கடற்படைக் கப்பல்கள் நிறுத்தப் பட்டிருந்தன.

இறுதியில், 1976 ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடந்து, சமூக ஜனநாயகக் கட்சியும், கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியும் கூட்டரசாங்கம் அமைத்த பின்னர், நேட்டோ அழுத்தம் விலக்கிக் கொள்ளப் பட்டது.


******


25 ஏப்ரல், பாசிஸ எதிர்ப்பு போராட்டத்தில் குறிப்பிடத் தக்க சரித்திர தினம். இன்று அது இத்தாலியின் சுதந்திர தினமாக கொண்டாடப் பட்டு வருகின்றது. முசோலினியின் இருபதாண்டு கால பாசிஸ கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக, இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி ஆயுதப் போராட்டம் நடத்தி வந்தது. இறுதிக்காலத்தில், ஜெர்மன் நாஸிப் படைகள் உதவிக்கு வந்த போதிலும், முசோலினியின் வீழ்ச்சியை தடுக்க முடியவில்லை.

இத்தாலியின் வட பகுதி மாகாணங்களை, தமது சொந்தப் பலத்தில் விடுதலை செய்த கம்யூனிசப் போராளிகள், 25 ஏப்ரல் சுதந்திர தினமாக பிரகடனப் படுத்தினார்கள். இரண்டாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக வந்திறங்கிய அமெரிக்க-பிரிட்டிஷ் படைகள், தென் இத்தாலி பகுதிகளை மட்டுமே கைப்பற்றி இருந்தன என்பது குறிப்பிடத் தக்கது.

2ம் உலகப் போர் முடிந்த பின்னர் நடந்த பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி அமோக வெற்றி பெற்றது. அமெரிக்காவால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வத்திக்கானுடன் சேர்ந்து சதி செய்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓட்டுப் போடுவோர், கத்தோலிக்க மதத்தில் இருந்து விலத்தி வைக்கப் படுவார்கள் என்று அறிவித்தார்கள். திரும்பவும் தேர்தல் நடத்தினார்கள். அதில் வத்திக்கான் ஆதரித்த கிறிஸ்தவ ஜனநாயக்கட்சி வென்றது. அதற்குப் பிறகு இத்தாலியில் கம்யூனிஸ்ட் கட்சியை தலையெடுக்க விடவில்லை.

மேலும், மேற்குலகின் கடுமையான ஸ்டாலின்/ஸ்டாலினிச எதிர்ப்பு பிரச்சாரம் காரணமாக, கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. தற்போது இருப்பது சீர்திருத்தப்பட்ட, சமூக- ஜனநாயக கம்யூனிஸ்ட் கட்சி.

Saturday, April 25, 2015

கெனோசீடே (Genocide) : இனப்படுகொலையா? அல்லது மக்கட்படுகொலையா?

Genocide (கெனோசீடே) என்ற சொற்பதத்தினை தமிழில் இனப்படுகொலை என்று மொழிபெயர்த்தவர் யாரென்று தெரியவில்லை. ஆனால், அது பல தடவைகள் சரியான அர்த்ததுடன் பயன்படுத்தப் படுவதில்லை.

Genos (கெனோஸ்) என்ற கிரேக்க சொல்லுக்கு நிகரான சமஸ்கிருத சொல் "கணம்". அதையொத்த தமிழ்ச் சொல் ஜனம் (மக்கள்) ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது.

Genocide என்பது பெரும்பான்மையான உலகமொழிகளில் அவ்வாறே பயன்படுத்தப் பட்டாலும், தமிழ் போன்று பிற மொழிகளிலும் மொழிபெயர்த்து பாவிக்கிறார்கள். ஜெர்மன் மொழியில் Völkermord. டச்சு மொழியில் Volkerenmoord, சுவீடிஷ் மொழியில் Folkmord. டேனிஷ் மொழியில் Folkemord / Folkedrabet.

ஜெர்மன் சொல்லான völk ஆங்கிலத்தில் folk, அதாவது மக்கள் என்ற அர்த்தத்தில் பாவிக்கப் படுகின்றது. சிங்கள மொழியில் கூட, "மக்கள் அழிப்பு" (ජන සංහාරය - ஜன சங்காரம்) என்று தான் மொழிபெயர்த்துள்ளனர்.

ஆகவே, இதனை தமிழில் "மக்கட்படுகொலை" என்று மொழிபெயர்ப்பது தான் சரியானதாக இருக்கும்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து:

//இனப்படுகொலை (Genocide) ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது.

இது குறித்து 1948 இல் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சபை இதை தடைசெய்யப்பட்ட, தண்டணைக்குரிய மற்றும் குற்றமுறை செயலாக ஐ நா சட்ட விதி 2 இன்படி அறிவித்துள்ளது. இதன்படி ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால், உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தைப் பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது, வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறை செயல்களாக, இனப்படுகொலைக் குற்றங்களாக சர்வதேச தடைச்சட்டத்தின்படிக் குற்றச்செயலாகும். இனப்படுகொலை (Genocide) என்ற வார்த்தை முதன் முதலில் ரபேல் லேம்கின் 1944ல் வெளிவந்த "Axis Rule in Occupied Europe" என்ற புத்தகத்தில் பயன்படுத்தியுள்ளார்.//
அது தொடர்பான என்னுடைய கருத்துக்கள்:
ரஃபேல் லெம்கின் பெருந்திரளான மக்கள் படுகொலையை குறிப்பதற்கு தான் அதைப் பயன்படுத்தினார். ஏற்கனவே யூதப் படுகொலையானது, pogrom (ரஷ்யா), holocaust (ஜெர்மனி) போன்ற ஹீபுரு மொழிச் சொற்களால் அழைக்கப் பட்டு வந்துள்ளன. அதை யூதர்கள் தமக்குரிய சொல்லாக மட்டும் வைத்திருக்க விரும்புகிறார்கள்.

ஜேர்மனியர்களும், யூதர்களும் தனிதனி இனமாக இருக்கவில்லை. ஒரே மொழி பேசும் ஓரின மக்கள் தான். சியோனிஸ்டுகளும், நாஸிகளும் யூதர்களை தனியான இனமாகக் உருவகித்துக் காட்ட முனைந்தனர். ஆயினும், இன்றைய நாகரிக உலகில் அந்தக் கருத்துக்கள் இனவாதமாக கருதப் படுகின்றன.
பொஸ்னியாவில் சேர்பியர்களினால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களும் தனியான இனம் அல்ல. நிறத்தால், இனத்தால், மொழியால், கலாச்சாரத்தால், செர்பியர்களுக்கு நெருக்கமானவர்கள். மதம் மட்டுமே வேறு வேறு.

மேலும், இந்தோனேசியாவில், குவாத்தமாலாவில், அரசியல் கொள்கை வேறுபாடு காரணமாக நடந்த genocide பற்றி பெரும்பாலான தமிழர்கள் பேசுவதில்லை. கம்போடியாவில் நடந்த genocide பற்றி விசாரிப்பதற்கு ஐ.நா. நீதிமன்றம் அமைக்கப் பட்டது. ஆனால், அது கூட கம்போடியர்களை கொலை செய்த கம்போடியர்களுக்கு எதிரான நீதிமன்றம் தான். ஒரே மொழி பேசும், ஓரின மக்களுக்கு இடையில் நடந்த படுகொலைகளை விசாரிப்பதற்காக அமைக்கப் பட்டது.

"ஒரே மொழி பேசும் மக்களுக்குள் படுகொலை நடந்திருந்தால், அது இனப்படுகொலை ஆகாது" என்று சில தமிழ் அறிவுஜீவிகள் வாதாடுகிறார்கள். அது தவறு. யூதர்களும், ஜெர்மனியர்களும் ஒரே மொழி பேசினார்கள். சேர்பியர்களும், பொஸ்னியர்களும் ஒரே மொழி பேசினார்கள். ஆனால், அவை எல்லாம் genocide என்று தான் அழைக்கப்பட்டன.

Genocide என்பது பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட அரசியல் கலைச்சொல். genos என்ற கிரேக்கச் சொல்லையும், cide என்ற லத்தீன் சொல்லையும் சேர்த்து உருவாக்கப் பட்டது. அப்போது எந்த ஐரோப்பிய மொழியிலும் அப்படி ஒரு சொல் இருக்கவில்லை. genocide என்பது பெருந்தொகையான அளவில் மக்களை படுகொலை செய்வதைக் குறிக்கும். ஐ.நா. வில் அதற்கான வரைவிலக்கணம் கொடுக்க வேண்டிய தேவை எழுந்த பொழுது கூட பல நாடுகளுக்கு இடையில் ஒருமித்த கருத்து இருக்கவில்லை.

குறிப்பாக தமிழில் " இனப்படுகொலை" என்று சொல்லும் அர்த்தத்தில்பயன்படுத்துவதை, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், அவை ஏற்கனவே காலனிகளில் இருந்த பூர்வகுடி இனங்களை அழித்தொழித்து விட்டிருந்தன. 

அதனால், தமிழில் புரிந்து கொள்ளப்படும் "இனப்படுகொலை" என்ற அர்த்தத்தில், மேற்குலகில் பயன்படுத்தப் படுவதில்லை. Genocide என்ற சொல்லின் வரைவிலக்கணத்திற்குள் இனம் என்ற அர்த்தம் வரக்கூடாது என்று அமெரிக்கர்கள் பிடிவாதமாக மறுத்து வந்தனர். ஏனென்றால் செவ்விந்தியர்களை படுகொலை செய்த குற்றச்சாட்டு தம்மீது சுமத்தப்படும் என்ற அச்சம் காரணம்.

நாகரிக உலகின் போக்கிற்கு ஏற்றவாறு தமிழ்மொழியில் திருத்தங்கள் கொண்டு வருவது புதுமை அல்ல. வன்புணர்ச்சி, பாலியல் தொழிலாளி, திருநங்கையர், மாற்றுத் திறனாளி போன்ற பல புதிய சொற்கள், ஏற்கனவே இருந்த விரும்பத்தகாத அர்த்தம் தரும் சொற்களுக்கு மாற்றாக வந்துள்ளன. அதே மாதிரி, இனப்படுகொலை என்பதை மக்கட்படுகொலை என்று திருத்திக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். 


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

இனப் படுகொலை விசாரணை: தோற்றவர்களுக்கு எதிரான வென்றவர்களின் நீதி!
http://kalaiy.blogspot.nl/2014/04/blog-post.html
மேலைத்தேய நிதியில் நடந்த தமிழ் இனப்படுகொலை http://kalaiy.blogspot.nl/2010/10/blog-post_30.html
இந்தோனேசியாவின் இரகசியமான இனப்படுகொலை http://kalaiy.blogspot.nl/2013/03/blog-post_8.html
அமெரிக்க அங்கீகாரம் பெற்ற கம்யூனிச இனவழிப்பு : ஊடகங்களில் இருட்டடிப்பு
http://kalaiy.blogspot.nl/2013/04/blog-post_17.html
கனடா வரலாற்றில் மறைக்கப் பட்ட இனவழிப்பு குற்றங்கள் http://kalaiy.blogspot.nl/2014/06/blog-post_4.html
இனவழிப்பு சாதனையாளன் கொலம்பஸை கௌரவிக்கும் அமெரிக்கர்கள் http://kalaiy.blogspot.nl/2010/10/blog-post_13.html 
உலகம் மறந்து விட்ட உக்ரைனிய- யூத இனவழிப்பு காட்சிகள் http://kalaiy.blogspot.nl/2014/03/blog-post_11.html 
ஐரோப்பியர்கள் இனவழிப்பு செய்த, ஆப்பிரிக்க வெள்ளையினம்! http://kalaiy.blogspot.nl/2012/05/blog-post_21.html 
இனவழிப்பு குற்றவாளிக்கு நோபல் பரிசளிக்கும் அமெரிக்க நீதி
http://kalaiy.blogspot.nl/2012/08/blog-post_6.html