Wednesday, October 08, 2014

பிரான்ஸ் : உலகின் முதலாவது பேரினவாத அரசு தோன்றிய நாடு

இந்தப் படத்தில் இருப்பது ISIS போன்றதொரு இஸ்லாமிய தீவிரவாதக் குழு அல்ல. "நாகரிகத்தில் சிறந்த" பிரெஞ்சுப் படையினர். முன்னாள் பிரெஞ்சுக் காலனியான அல்ஜீரியாவில் நடந்த போரின் பொழுது, எதிராளிகளின் தலைகளை வெட்டி மகிழும் காட்சி. பிரான்சில் இதற்குப் பெயர்: "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்."


ஒரு மேற்குலக, முதலாளிய விசுவாசியின் கேள்வி: 

//விவாதிப்பது எனது நோக்கமல்ல... மார்க்சியம் தெரியாதவனுமில்லை... என் வாழ்நாளில் நான் பொய்யனாக வாழ்ந்த காலம், புரட்சி பேசி திரிந்த காலமே. மேற்குலக நாடுகளைப் போல், அதிலும் பிரான்சை போல், "சுதந்திரம், சமத்துவம்,சகோதரத்துவம்" என அரசியல் சாசனத்துடன் கூடிய ஒருநாட்டை ஒப்பீட்டு அடிப்படையில் (பிரான்சில் முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் இருக்கிறது) ஏன் மற்ற நாடுகளில் இல்லையா? இவற்றை விட, தலைசிறந்த முன்னுதாரணமான முதலாளித்துவ கொள்கை இல்லாத ஒரு நாடடின் பேர் உங்களால் தர முடியுமா? மனச்சாட்சியுடன் பதிலளியுங்கள்.// 

விவாதிப்பதற்கு முன்னர், ஒரு விடயத்தை பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும் அல்லவா? "மார்க்சியம் தெரியாதவனல்ல..." என்று கூறும் ஒருவர், பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாகத் தான், மார்க்சியத்தின் தேவை உருவானது என்ற உண்மையை உணராதது ஏனோ? 

உலக வரலாற்றுப் பாதையில் பிரெஞ்சுப் புரட்சி முற்போக்கான பாத்திரம் வகித்துள்ளது என்று மார்க்சியம் கூறுவது தெரியாமல் போனது எப்படி? நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களுக்கு எதிராக நடந்த பிரெஞ்சுப் புரட்சிக்கு பின்னர், லிபரல்வாதிகளும், முதலாளிகளும் அதிகாரத்தை கைப்பற்றினர்.

நீங்கள் கூறும் "சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம்" என்பது லிபரல்வாதிகளின் அரசியல் கோட்பாடு. இன்று உலகில் உள்ள பெரும்பான்மையான அரசுகள், லிபரல் கொள்கை அடிப்படையில் தான் ஆட்சி அமைத்துள்ளன. இலங்கை, இந்தியா, மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும், பிரான்சில் தோன்றிய அதே லிபரல் கொள்கை தான் பின்பற்றப் பட்டு வருகின்றது. 

ஆனால், "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" என்று முழங்கிய அதே லிபரல் பிரெஞ்சு அரசு, கரீபியன் தீவுகளில் கிளர்ச்சி செய்த கருப்பின அடிமைகளின் சுதந்திரத்தை அங்கீகரிக்க மறுத்தது! கருப்பின அடிமைகளை சகோதரர்களாக அங்கீகரிக்கவில்லை. அவர்களை சமத்துவமாக நடத்தவில்லை. பிரான்சில், பிரெஞ்சு மொழியின் பேரினவாதம் நிலைநாட்டப் பட்ட வரலாறு தெரியாதா? உலகின் முதலாவது பேரினவாத அரசு பிரான்சில் தான் உருவானது. 

பிரான்சில் உள்ள சிறுபான்மை இனங்களான பாஸ்க், ஒக்கிட்டான், பிறேய்ட்டன், கொர்சிக்கன், பிளாம்ஸ்(டச்சு), அல்சாசியன் (ஜெர்மன்) மொழிகளை பேசிய சிறுபான்மை இனங்கள் அடக்கப்பட்ட வரலாறு தெரியாதா? பிரான்சில் வாழ்ந்த சிறுபான்மை இன மக்கள், தமது தாய்மொழியை பேசும் உரிமை இருக்கவில்லை. வீடுகளில், பொது இடங்களில் தாய்மொழி பேசினால் கடுமையாக தண்டிக்கப் பட்டார்கள். அவர்கள் மேல் பிரெஞ்சு மொழி பலவந்தமாக திணிக்கப் பட்டது. அதை எல்லாம் மறந்து விட்டீர்களா? 

தமிழர்களின் உரிமைகளை நசுக்கும் சிங்களப் பேரினவாத அரசும், பிரான்சின் வழியை பின்பற்றி வருகின்றது. அப்படியானால், சிங்களப் பேரினவாத அரசு உங்கள் கண்களுக்கு "சிறந்த முன்னுதாரணமாக" தெரிகின்றதா? 

"சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" பேசிய பிரெஞ்சு காலனியாதிக்கவாதிகள், எதற்காக அல்ஜீரியாவுக்கு சுதந்திரம் கொடுக்க மறுத்தார்கள்? அல்ஜீரியாவில் பிரெஞ்சுப் படைகள் புரிந்த இனப்படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள் உங்களுக்கு "தலைசிறந்த முன்னுராதணமாக" தெரிகின்றதா? முன்னாள் காலனிகளான வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளில், பிரெஞ்சுக்காரர்கள் நடத்திய பயங்கரவாத ஆட்சி காரணமாகத் தானே, அங்கே விடுதலைப் போராட்டங்கள் நடந்தன? 

அது தான் போகட்டும். பதினெட்டாம் நூற்றாண்டுப் பிரான்சில், "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" என்ற கொள்கையின் கீழ் புரட்சி நடந்தது. அதற்குப் பிறகு அங்கே என்ன நடந்தது? கொடூரமான பயங்கரவாத ஆட்சி நடந்தது. ரொபெஸ்பியர் என்ற சர்வாதிகாரியின் கொடுங்கோன்மைக்கு பலர் பலியானார்கள். ஒரே கொள்கையை பின்பற்றியவர்கள் கூட ஒழித்துக் கட்டப் பட்டார்கள். 

நீங்கள் அந்தக் கால பிரான்சில் வாழ்ந்திருந்தால், பொதுத் தேர்தல், ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் பற்றி மூச்சுக் கூட விட்டிருக்க முடியாது. அடுத்த கணமே தலையை வெட்டி விடுவார்கள். ஈராக், சிரியாவில், ISIS தலை வெட்டும் வீடியோ பார்த்தீர்கள் தானே? அதே தான் அன்றைய பிரான்சில் நடந்தது. "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" பேசிய பிரான்சில், ஆயிரக் கணக்கான அப்பாவிகளின் தலைகள் வெட்டப் பட்டன. இது தான் நீங்கள் காட்டும் "சிறந்த முன்னுதாரணம்!"

முதலாளித்துவ ஜனநாயகத்தை, சோஷலிச ஜனநாயகத்துடன் ஒப்பிட முடியாது. முதலாளித்துவ நாடுகளில் முதலாளிகளின் சர்வாதிகாரம் இருக்கும். ஒரு சோச‌லிச புரட்சியின் பின்னர் அது ஒழிக்கப் படும். அங்கே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஏற்படும். அது பின்னர் உழைக்கும் மக்களின் ஜன நாயகத்தை கொண்டு வரும்.

Monday, October 06, 2014

ஓநாய் அம்மா நனைகிறதென்று அப்பாவித் தமிழ் ஆடுகள் அழுகின்றன

அம்மா நெருப்பில் குளிர் காயும் இந்து பாஸிசம்

"ஒரு தமிழன் முதலமைச்சர் ஆக வந்தால், தமிழ் நாட்டில் பாலும் தேனும் ஆறாக ஓடுமென்று" சொன்னார்கள். இப்போது ஒரு தமிழர் முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார். அதற்காக மகிழ்ச்சி அடைய வேண்டிய தமிழ் தேசியவாதிகள், எதற்காக சிறையில் இருக்கும் கன்னட அம்மாவுக்காக அழுகிறார்கள்? அதனால் தான் தமிழ் மக்கள் அவர்களை "போலித் தமிழ் தேசியவாதிகள்" என்று அழைக்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்த நேரம், ஈழத் தமிழர்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விடாத, ஒரு வார்த்தை கண்டனம் தெரிவிக்காத ஜெயலலிதா, தேர்தல் வெற்றிக்காக "ஈழத் தாய்" வேடமிட்டார். ஒரு காலத்தில் புலிகளால் தீவிரமாக வெறுக்கப் பட்ட முன்னாள் முதல்வரை, பிந்திய புலி ஆதரவாளர்கள் தமது மீட்பராக நம்பியது ஒரு வரலாற்று முரண்நகை.

இலங்கையில் சிங்கள இனவாதிகளின் கோஷங்களை தனதாக்கிக் கொண்ட ராஜபக்சவின் பாணியை பின்பற்றி, தமிழகத்தில் ஜெயலலிதா தமிழினவாதிகளின் கோஷங்களை தனதாக்கிக் கொண்டார். 

ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், சிங்கள தேசத்திற்கு உள்ளூர மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும். இருப்பினும், அதைக் காட்டிக் கொள்ளாமல், ஜெயலலிதாவின் தமிழீழ ஆதரவு வாய்ச் சவடால்களை, சிங்கள மக்களுக்கு எதிரான ஆபத்தாக பரப்புரை செய்து வந்தது.

ஜெயலலிதா, சிங்கள அரசியல்வாதிகளின் பரஸ்பர அரசியல் சித்து விளையாட்டுகளை உண்மை என்று நம்பும் போலித் தமிழ் உணர்வாளர்கள், இன்றைக்கும் ஜெயலலிதாவை ஆதரிக்கின்றனர். போலித் தமிழ் தேசியவாதிகளை நலமடித்து, அவர்களை அரசியல் அரங்கில் இருந்து ஓரங் கட்டிய ஒருவரை, குற்றவாளியாக இருந்தாலும் "ஈழத் தாய்" என்று பாசம் காட்டுகின்றனர். அவரது குற்றங்களுக்காக விழுந்து விழுந்து வக்காலத்து வாங்குகின்றனர்.

ஈழத்தை சேர்ந்த தமிழ் தேசிய அரசியல் ஆர்வலர்களும், ஜெயலலிதா வைத்த பொறிக்குள் மாட்டிக் கொண்டு தவிப்பதைக் காணும் பொழுது, அவர்கள் மேல் பரிதாபமே உண்டாகின்றது.

Saturday, October 04, 2014

3 அக்டோபர் 1993: சோஷலிச - சோவியத் மீட்சிக்கான மொஸ்கோ மக்கள் எழுச்சி

3 அக்டோபர் 1993, இந்தத் தினத்தில் என்ன நடந்தது என்ற தகவலை, உங்களுக்கு எந்த ஊடகமும் சொல்லப் போவதில்லை. "சோவியத் யூனியன் "வீழ்ந்து" விட்டது. ரஷ்ய மக்களே கம்யூனிசத்தை வெறுத்து, முதலாளித்துவத்தை தேர்ந்தெடுத்தார்கள்..." என்று பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் சதிகாரக் கும்பல், உண்மை பேசுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியுமா?

உண்மையில், சோவியத் யூனியன் "விழவில்லை" அல்லது "உடைந்து நொறுங்கவில்லை." எல்சின் எனும் அமெரிக்க கைக்கூலியின் சதித் திட்டத்தினால் கலைக்கப் பட்டது. அதைப் பற்றி அங்கிருந்த மக்களுக்கு எதுவுமே தெரியாது. இரண்டு வருடங்களுக்குப் பின்னர், எல்சினின் சர்வாதிகாரத்திற்கு எதிராக, முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக, மொஸ்கோ நகரில் மாபெரும் மக்கள் எழுச்சி ஏற்பட்டது.

மீண்டும் சோவியத் யூனியன் வேண்டுமென்றும், சோஷலிசம் தேவை என்றும் போராடினார்கள். ரஷ்ய பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் எழுச்சிக்கு ஆதரவாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார்கள். இறுதியில், எல்சினின் கூலிப் படைகள், ஆயிரக் கணக்கானோரை படுகொலை செய்து, மக்கள் எழுச்சியை நசுக்கின. ரஷ்யாவில் நடந்த ஜனநாயகப் படுகொலைக்கு எதிராக, ஜனநாயகக் காவலர்களான மேற்கத்திய நாடுகள் முணுமுணுக்கக் கூட இல்லை.

  "சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன், கம்யூனிசம் செத்து விட்டது. முன்னாள் கம்யூனிச நாடுகளில் வாழ்ந்த மக்கள், முதலாளித்துவத்தை விரும்பி ஏற்றுக் கொண்டார்கள்..." என்று அரைவேக்காட்டுத்தனமாக உளறிக் கொண்டிருக்கும் பலர் இன்றைக்கும் உள்ளனர். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த மேற்குலக ஊடகங்கள் செய்யும் பிரச்சாரங்களை, உண்மை என்று நம்பும் தற்குறிகள் அப்படித் தான் பிதற்றிக் கொண்டிருப்பார்கள்.


26 டிசம்பர் 1991 ஆம் ஆண்டு, சோவியத் யூனியன் கலைக்கப் பட்டது. அதற்கு முன்னர், கிரெம்ளினில் கோர்பசேவுக்கு எதிரான கடும்போக்காளர்கள் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி எடுத்திருந்தனர். அந்த சதி முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களின் சதிப்புரட்சி முறியடிக்கப் பட்ட பின்னர், மேற்கத்திய ஆதரவு லிபரல் தலைவர்களின் சதிப்புரட்சி மிகவும் கவனமாக முன்னெடுக்கப் பட்டது.

"ரஷ்யாவும், உக்ரைனும் சேர்ந்திருந்தால் அது ஐரோப்பிய - ஆசிய கண்டங்களில் மிகவும் பலமான வல்லரசாக இருக்கும்..." என்று, அமெரிக்க வெளிநாட்டு கொள்கை வகுப்பாளர் பிரெசென்ஸ்கி ஒரு தடவை தெரிவித்திருந்தார். அதனால், முதலில் உக்ரைனை பிரிக்கும் சதித்திட்டம் திரைமறைவில் அரங்கேறியது. உக்ரைனில் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப் பட்டது. 1 டிசம்பர் 1991, உக்ரைன் தனி நாடாக பிரிவதற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப் பட்டது.

உக்ரைன் சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பு, சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான சதி நடவடிக்கைகளை துரிதப் படுத்தியது. அதே ஆண்டு டிசம்பர் மாதம், வெள்ளை ரஷ்யாவின் Brest நகருக்கு அருகில் உள்ள காட்டுப் பங்களா ஒன்றில், மூன்று சோவியத் குடியரசுத் தலைவர்களின் இரகசிய சந்திப்பு இடம்பெற்றது. ரஷ்ய பிரதமர் எல்சின், உக்ரைனிய பிரதமர் கிராவ்ஷுக், வெள்ளை ரஷ்யா பிரதமர் ஸ்டானிஸ்லாவ் சுஸ்கேவிச் ஆகியோர் கலந்துரையாடிய பின்னர் அந்த முடிவு எடுக்கப் பட்டது. கவனிக்கவும்: சோவியத் யூனியனை "வீழ்த்த" வேண்டுமென்று, சோவியத் மக்கள் நினைக்கவில்லை. மூன்று தலைவர்களின் இரகசியமான சதித் திட்டம் அது.


எல்சின் தனது சதித் திட்டத்தை நிறைவேற்றிய உடனேயே, தனது அமெரிக்க எஜமான் ஜோர்ஜ் புஷ்ஷிடம், அந்த முடிவை அறிவித்தார். மேற்கத்திய ஊடகங்களில் தகவல் வெளியான பின்னர் தான், சோவியத் யூனியன் கலைக்கப் பட்ட விடயம், அங்கு வாழ்ந்த மக்களுக்கு தெரிய வந்தது.


ரஷ்யாவின் அதிகாரத்தை எல்சின் கைப்பற்றியிருந்த போதிலும், ரஷ்ய பாராளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் அதிகமாக இருந்தனர். அவர்கள் ஜனநாயக வழியில், எல்சினுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள். கிளர்ச்சியில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, வெளியில் மக்கள் ஆதரவும் இருந்தது. மக்கள் எழுச்சி ஒன்றின் மூலம், மீண்டும் சோவியத் யூனியனை கட்டமைப்பதும், சோஷலிசத்தை மீட்பதும் அவர்களின் தொலை தூர இலக்காக இருந்தது.


 3 அக்டோபர் 1993, மொஸ்கோ நகரில் ஒரு மக்கள் எழுச்சி ஏற்பட்டது. பலர் செங்கொடிகள், சோவியத் கொடிகள் ஏந்திய வண்ணம், வீதிகளில் இறங்கினார்கள். மொஸ்கோவாசிகள் நகர மத்தியில் தடையரண்கள்  போட்டு, பாதுகாப்பு வலையங்களை  உருவாக்கினார்கள். அவர்களுக்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர்கள், ரஷ்யப் பாராளுமன்றத்தினுள்  உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார்கள்.


கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பாராளுமன்றத்தை சுற்றிவளைத்த எல்சினின் கூலிப்படைகள், மின்சாரத்தையும், தண்ணீரையும் துண்டித்தன. முற்றுகைக்குள், பல இன்னல்களுக்கு மத்தியிலும் போராட்டம் தொடர்ந்தது. இறுதியில், எல்சினின் உத்தரவின் பேரில், பாராளுமன்ற கட்டிடத்தின் மீது ஷெல் தாக்குதல்கள் நடத்தப் பட்டன.

அன்றைய தாக்குதலில் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிய விபரங்கள் மூடி மறைக்கப் பட்டன. நூற்றுக் கணக்கான உயிரிழப்புகள் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப் பட்டது. ஆனால், ஆயிரக் கணக்கானோர் கொல்லப் பட்டதாக, ரஷ்ய மக்கள் பேசிக் கொண்டனர். உலகம் முழுவதும் ஜனநாயக பஜனை பாடும் அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளும், ரஷ்ய பாராளுமன்றத்தின் மீதான தாக்குதலை கண்டிக்கவில்லை.

நடுநிலை தவறாத மேற்கத்திய ஊடகங்களும், அந்த செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதை ஒரு ஜனநாயகப் படுகொலையாக சித்தரித்து, உலக மக்களின் மனச்சாட்சியை தட்டி எழுப்பவில்லை. அதே  நேரம், அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு அருகில் யாராவது பட்டாசு கொளுத்திப் போட்டிருந்தால், இதே ஊடகங்கள் பயங்கரவாதம் என்று அலறித் துடித்திருக்கும். உலக நாடுகள் எல்லாம் கண்டனம் தெரிவித்திருக்கும்.

3 அக்டோபர் 1993 மக்கள் எழுச்சியை நினைவு கூரும் படங்களையும், வீடியோவையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்:


1993 October uprising in Moscow. 






Friday, October 03, 2014

சொந்த இனத்தின் சுய நிர்ணய உரிமைக்கு எதிரான போலித் தேசியவாதிகள்




மகிந்த ராஜபக்ச, "காஸ்ட்ரோவுடன் கை கோர்த்தார், அப்பாஸுடன் கட்டிப் பிடித்தார்" என்று, ஆயிரம் தடவை வேண்டுமானாலும் சொன்னதையே திரும்பச் சொல்வார்கள்.
ஆனால்.... 
"ராஜபக்ச ஒபாமாவின் காலில் விழுந்தார்" என்பதைப் பற்றி மட்டும் வாயே திறக்க மாட்டார்கள். ஏனென்றால், போலி சிங்களத் தேசியவாதிகளான ராஜபக்ச கும்பலும், போலித் தமிழ் தேசியவாதிகளும், அமெரிக்க எஜமானுக்கு விசுவாசமான அடிமைகள் தான்.


உக்ரைன், கார்கிவ் நகரில் இருந்த மிகப் பெரிய லெனின் சிலை, பாசிஸ குண்டர்களினால் இடித்து விழுத்தப் பட்டது. சோவியத் யூனியன் மறைந்த பின்னரும், இருபதாண்டுகளாக, லெனின் சிலை அங்கே தான் இருந்தது. கார்கிவ் நகர மக்கள் அதை உடைக்க நினைக்கவில்லை. ஆனால், உக்ரைனில் நடந்த பாசிஸ சதிப்புரட்சிக்கு பின்னர் தான், நாடு முழுவதும் இது போன்ற சிலை உடைப்புகள் நடந்து வருகின்றன. 

தமிழர்களில் யாராவது, லெனின் சிலை உடைப்பை ஆதரித்து பேசினால், அவரை "சாமானிய மக்களில்" ஒருவராக கருத முடியாது. நிச்சயமாக, அவரும் ஒரு பாசிஸ்டாக அல்லது நவ நாஸியாகத் தான் இருப்பார். பெரியாரின் சிலை உடைப்பவர்களும் பாஸிஸ்டுகள் தான். தமிழ் தேசிய இனம் உருவாக பெரியாரும் காரணமாக இருந்தார்.

தனது சொந்த இனத்தின் சுய நிர்ணய உரிமையை மதிக்காமல், அதற்கு இனவாத விளக்கம் கொடுப்பவர்கள், தம்மைத் தாமே "தேசியவாதிகள்" என்று அழைத்துக் கொள்வது, அந்த இனத்தின் சாபக்கேடு. உக்ரைனில் லெனின் சிலைகளை இடித்து விழுத்தும் பாசிஸ காடையர்களை, "உக்ரைனிய தேசியவாதிகள்" என்று கூறுகின்றன, CNN மற்றும் பல மேற்கத்திய ஊடகங்கள். 

லெனின் தலைமையிலான போல்ஷெவிக் புரட்சிக்குப் பின்னர் தான், வரலாற்றில் முதல் தடவையாக உக்ரைனிய தேசிய இனம் அங்கீகரிக்கப் பட்டது. அதற்கு முன்பிருந்த சார் மன்னனின் ஆட்சிக் காலத்தில், உக்ரைனிய மொழி, ரஷ்ய மொழியின் கிளை மொழியாக கருதப் பட்டது. உக்ரைனிய மொழி மட்டுமல்லாது, தனியான உக்ரைனிய கலாச்சார அடையாளங்களும் நசுக்கப் பட்டன. 

போல்ஷெவிக் கம்யூனிஸ்டுகளின் ஆட்சிக் காலத்தில், உக்ரைன் என்ற தனியான சோவியத் குடியரசு உருவாக்கப் பட்டது. அதுவே, முதலாவது உக்ரைனிய தேசமாக இருந்தது. பாடசாலைகளில் உக்ரைனிய மொழி கற்பிக்கப் பட்டது. உக்ரைனிய மொழியில் இலக்கியங்கள் எழுதப் பட்டன. பத்திரிகைகள் வெளியாகின. 

ஸ்டாலின் காலத்தில் தான், இன்றுள்ள உக்ரைனிய தேசிய எல்லைகள் வரையறுக்கப் பட்டன. 2 ம் உலகப் போருக்கு முன்னர், போலந்தின் ஒரு பகுதியாக இருந்த, உக்ரைனிய சிறுபான்மையினரின் மாகாணம், உக்ரைன் சோவியத் குடியரசுடன் இணைக்கப் பட்டது. அது மட்டுமல்ல, உக்ரைன் ஐ.நா. மன்றத்தில் அங்கத்துவம் கோரி விண்ணப்பிக்கவும், ஸ்டாலின் ஊக்குவித்திருந்தார். 

உக்ரைனிய தேசிய இனத்தை அங்கீகரித்து, அதன் சுய நிர்ணய உரிமையினை வளர்த்து விட்ட தலைவர்களின் சிலைகளை உடைப்பவர்கள், எப்படி "தேசியவாதிகளாக" இருக்க முடியும்? பாசிஸ்டுகளும், நவ நாஸிகளும், தேசியவாத முகமூடி அணிந்து கொண்டு, தமது சொந்த மக்களை ஏமாற்றி வருகின்றனர். 

 ******* 

கம்யூனிச/இடதுசாரி எதிர்ப்புப் பிரச்சாரம் செய்வது அவரவர் கருத்துச் சுதந்திரம். ஆனால், ஈழத்தில் "என்னவோ முதலாளிகளும், வலதுசாரிகளும் மட்டுமே ஆயுதப் போராட்டம் நடத்தினார்கள்" என்பது போல, சிலர் அபத்தமான கட்டுக்கதைகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். உலகில் எந்தவொரு முதலாளியும் போராளியாக விரும்ப மாட்டான். தனது பிள்ளைகளையும் விட மாட்டான். தமிழீழப் போராட்டத்திலும் அது தான் நடந்தது. 

ஈழப் போராட்டம் நடந்த காலங்களில், தமிழ் முதலாளிகள், போரினால் கஷ்டப்படும் மக்களை ஈவிரக்கமின்றி சுரண்டிக் கொண்டிருந்தார்கள். பாரம்பரிய முதலாளிகள் மட்டுமல்லாது, திடீர் முதலாளிகளும் ஈழத் தமிழ் மக்களை வருத்தி பணம் சேர்த்து வந்தனர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு, சிறிலங்கா படையினர் விதித்த பொருளாதாரத் தடையை பயன்படுத்தி, நிறையப் பேர் கோடீஸ்வரர் ஆனார்கள். தடை செய்யப் பட்ட பொருட்களை கடத்திச் சென்று, பத்து அல்லது இருபது மடங்கு விலைக்கு விற்று கொள்ளை அடித்தவர்கள் பலர் உண்டு. இவை ஈழத்தில் வாழ்ந்த அனைவருக்கும் தெரிந்த உண்மைகள். 

எரிபொருள் தட்டுப்பாட்டை பயன்படுத்தி, மண்ணெண்ணெய் விற்று கோடீஸ்வரனான மகேஸ்வரனின் கதை, ஈழத் தமிழ் மக்கள் அத்தனை பேருக்கும் தெரியும். இராணுவத்துடனும், புலிகளுடனும் சினேகபூர்வமாக நடந்து கொண்டு, தமிழ் மக்களின் பணத்தை கொள்ளையடித்த மகேஸ்வரன், தன்னை ஒரு தீவிர சைவ மத பக்தராக வெளியில் காட்டிக் கொண்டார். வலதுசாரி சிங்கள இனவாதக் கட்சியான UNP சார்பில் போட்டியிட்டு, பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். 

வலதுசாரி முதலாளிய ஆதரவாளர்கள் பலர், தமது சொந்த நலன்களை மட்டுமே குறிக்கோளாக கொண்டவர்கள். தூரத்தில் துப்பாக்கி வெடிச் சத்தம் கேட்டவுடனே, அலறித் துடித்து வெளிநாடுகளுக்கு தப்பியோடியவர்கள். சமூகம் எக்கேடு கெட்டாலும், தனது படிப்பு முக்கியம் என்று பல்கலைக்கழகம் வரை சென்றவர்கள். இப்படியான சுயநலவாதிகள், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கம்யூனிஸ்டுகளையும், இடதுசாரிகளையும் திட்டுவதற்கு நேரத்தை செலவிடுகின்றனர். 

 ********

இலங்கையில் நடந்த பாசிஸ பொதுபல சேனாவின் உச்சி மகாநாட்டிற்கு, மியான்மர் பௌத்த பாசிஸ்ட் விராத்து வருகை தந்திருந்தார். மகாநாட்டின் முடிவில், இரண்டு பாசிஸ அமைப்புகளுக்கு இடையில் ஓர் ஒப்பந்தம் கைச் சாத்திடப் பட்டுள்ளது. "பயங்கரவாதத்தையும், மத மாற்றத்தையும் எதிர்த்து, பௌத்த கலாச்சாரத்தை பாதுகாக்கும் நோக்கில்" ஒன்றிணைவதாக அந்த ஒப்பந்தம் குறிப்பிடுகின்றது. மதச் சார்பின்மை, கலாச்சார பன்முகத் தன்மை என்பனவற்றை மேற்கத்திய லிபரல் கலாச்சார திணிப்பு என்று சாடியுள்ளனர்.

தெற்காசியாவில் கிறிஸ்தவ, இஸ்லாமிய சக்திகள் பௌத்தர்களை மதமாற்றம் செய்வதாகவும், அதை எதிர்த்துப் போரிடுவது தமது தலையாய கடமை என்றும் தெரிவித்துள்ளனர். இதற்காக பௌத்த மத சக்திகளை ஒன்று திரட்டுவதுடன், ஒரே கொள்கை கொண்ட இந்து மத அமைப்புகளுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதையும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இலங்கையில் இயங்கும் பௌத்த-சிங்கள பாசிஸ இயக்கமான பொதுபல சேனா, மியான்மரின் பௌத்த - பர்மிய பாசிஸ இயக்கமான 969 ஆகியவற்றை ஒன்றிணைக்கும் பணியில் இஸ்ரேல் ஈடுபட்டு வருவதாக, சில மாதங்களுக்கு முன்னர் ராவய எனும் சிங்கள சஞ்சிகை குறிப்பிட்டு எழுதி இருந்தது.

2 ம் உலகப்போருக்கு முன்னர், ஐரோப்பாவில் ஏற்பட்ட, ஹிட்லர் - முசோலினி ஒப்பந்தம் போன்று, பொதுபல சேனா - 969 ஒப்பந்தமும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் மூலம், எதிர்காலத்தில் இலங்கையிலும், மியான்மரிலும் பாசிஸ சர்வாதிகார ஆட்சியை கட்டமைப்பதற்கான அத்திவாரம் இடப் பட்டுள்ளது.

பாசிஸ்டுகளின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முழுமையாக வாசிப்பதற்கு: 

Full Text: Wirathu And Gnanasara Sign Agreement  https://www.colombotelegraph.com/…/full-text-wirathu-and-g…/


சிங்கள - பௌத்த பேரினவாத பிக்குகள், தமிழர், முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேஷத்தை வெளிப்படுத்தும் நேரம், அந்தக் கருத்துக்களுக்கு ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஆனால், அதே பேரினவாத பிக்குகள், சிங்கள உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராகத் திரும்பும் நேரம், யாருடைய கவனத்தையும் பெறுவதில்லை. 

பாசிஸ பொதுபல சேனா இயக்கம், தொழிற் சங்கங்களுக்குள் ஊடுருவப் போவதாக அறிவித்துள்ளது. இலங்கையில் உள்ள தொழிற்சங்கங்களை "புத்தரின் போதனைகளுக்கு" அமைய வழிநடத்தப் போகிறார்களாம். முதலில் சுகாதார, மருத்துவத்துறை ஊழியர்களின் தொழிற்சங்கங்களை கட்டுப்பாட்டில் கொண்டுவர திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம், இலங்கையில் இன்று வரையில், மருத்துவ வசதி அனைவருக்கும் இலவசமாக வழங்கப் படுகின்றது. சாதாரண வைத்திய ஆலோசனை முதல், அதிக செலவு பிடிக்கும் அறுவைச் சிகிச்சை வரையில் அனைத்தும் இலவசம். 

ராஜபக்ச அரசு, மருத்துவத் துறையை தனியார்மயப் படுத்துவதற்கு பல தடவைகள் முயற்சி எடுத்தது. ஆனால், மருத்துவ ஊழியர்களின் உறுதியான தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக பின்போடப் பட்டு வந்ததுள்ளது. அது என்ன "புத்தரின் போதனைகள்"? - வேலை நிறுத்தம் செய்யாதீர்கள். - சம்பள உயர்வு கோராதீர்கள். - தனியார்மயத்தை எதிர்க்காதீர்கள். இதை எல்லாம் புத்தர் எப்போது சொன்னார் என்று கேட்டு விடாதீர்கள். 

கடவுளும், மதமும் என்றைக்கும் முதலாளித்துவத்திற்கு சேவை செய்யும். அதற்கான வழி சமைத்துக் கொடுப்பது தான் பாசிஸ சக்திகளின் நோக்கம். அன்று இத்தாலியில் முசோலினியும், ஜெர்மனியில் ஹிட்லரும் நடைமுறைப் படுத்திய கொள்கைகளை, இலங்கையில் ஞானசார தேரோ அறிமுகப் படுத்துகிறார்.

********


ஏகாதிபத்திய கைக்கூலி நிறுவனமான ஐ.நா. மன்றம், இனப்படுகொலையாளி ராஜபக்சவை அழைத்துக் கௌரவித்துள்ளது. "ராஜபக்ச தலைமையில், இலங்கையில் போருக்கு பின்னர் வளர்ச்சிப் பணிகள் சிறப்பாக நடத்திருப்பதாக," ஐ.நா. செயலதிபர் பான் கி மூன் பாராட்டி உள்ளார்.

"போருக்குப் பின்னர் வடக்கில் நடந்துள்ள நிவாரணப் பணிகளின் விளைவாக, அந்தப் பகுதி மாணவர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளதாக" ராஜபக்ச தெரிவித்தாராம். தமிழரின் பிரச்சினை பற்றி எதுவும் பேசாத பான் கி மூன், அண்மைக் கால மத வன்முறைகளைப் பற்றி மட்டும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஏகாதிபத்தியம், ஐ.நா. வின் கைக்கூலித்தனம், ராஜபக்ச கும்பலின் அமெரிக்க விசுவாசம், இலங்கையில் அமெரிக்கத் தலையீடு குறித்து எந்த வித அறிவும் இல்லாத வலதுசாரிகள், தமிழ் தேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். "ஐ.நா. வில் முறையிட்டால் தமிழீழம் கிடைக்கும்..." என்று நம்புமாறு, அப்பாவித் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர். அவர்கள் தான், அமெரிக்க அடிவருடிகளான "போலித் தமிழ் தேசியவாதிகள்" அல்லது "போலி தமிழ் உணர்வாளர்கள்."

Monday, September 29, 2014

ஜெர்மன் அகதி முகாம்கள் : தனியாரின் சித்திரவதைக் கூடங்கள்


ஜெர்மனியில், அகதி முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ள அகதிகள், பாதுகாவலர்களினால் அடித்து, உதைத்து, சித்திரவதை செய்யப் படுகின்றனர். கெல்ன் (Köln, ஆங்கிலத்தில்: Cologne) நகருக்கு அருகில் உள்ள, பூர்பாஹ் (Burbach) எனும் கிராமத்தில் உள்ள அகதி முகாமில் நடந்த சித்திரவதைகள் தொடர்பான படங்கள் வெளியாகியுள்ளன. 

ஓர் அல்ஜீரிய அகதியின் தலையை, இரண்டு பாதுகாவலர்கள் காலில் போட்டு மிதிக்கும் காட்சிகள், ஊடகங்களில் காட்டப் பட்டன. அதன் பின்னர், ஜெர்மன் அகதி முகாம்களில் வாழும் அகதிகள் சித்திரவதை செய்யப் படுவது பற்றிய தகவல்கள், நாடு முழுவதும் பரபரப்பாக பேசப் பட்டு வருகின்றன. இது வரையில், கைத்தொலைபேசியால் எடுத்த வீடியோவும், நிழற்படமும் வெளியாகி உள்ளன. இந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதாக கூறிய பொலிஸ் தரப்பு பேச்சாளர், "ஜெர்மனியின் குவாந்தனமோ பே" என்று வர்ணித்தார். 

கெல்ன் நகரம் அமைந்துள்ள, நோர்ட்ரைன்-வெஸ்ட்பாலின் மாநிலத்தில், உள்ளூர் தொலைக்காட்சி சேவையான WDR, இது தொடர்பாக அதிக கவனம் செலுத்தி வருகின்றது. அகதிகள் துன்புறுத்தப் படுவதாக படுவதாக, வேறு இடங்களில் இருந்தும் தகவல்கள் கிடைத்ததாக அறிவித்துள்ளது. எஸ்சென்  (Essen) நகரில் உள்ள அகதி முகாமில் வசிக்கும் அகதிகள், வன்முறைக்கு உள்ளான ஆதாரங்கள், மருத்துவ அறிக்கைகளில் பதிவு செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது.

ஜெர்மனியில், அகதிகளாக வருவோர், முகாம்களில் தங்க வைக்கப் படுகின்றனர். குறைந்தது ஒரு வருடத்திற்கு, அகதிகள் வேலை செய்ய அனுமதி கிடையாது. அது மட்டுமல்லாது, குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் பிரயாணம் செய்ய முடியாது. 

முந்திய காலங்களில், அகதிகளின் பராமரிப்பை அரசு பொறுப்பேற்று நடத்தி வந்தது. தற்போது, அந்தப் பொறுப்பை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து விட்டார்கள். முழுப் பொருளாதாரமும் தனியார்மயத்தை நோக்கி நகரும் பொழுது, அகதிகளை மட்டும் விட்டு வைப்பார்களா?

நோர்ட்ரைன்-வெஸ்ட்பாலின் மாநிலத்தில், "European Homecare" எனும் தனியார் நிறுவனம் பல அகதி முகாம்களை நிர்வகித்து வருகின்றது. அந்த நிறுவனம், முகாம் தொடர்பான பல்வேறு வேலைகளுக்கு, பிற தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. 

முகாமில் பணி புரியும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள், SKI எனும் தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள். அந்த நிறுவனத்தின் இரண்டு பாதுகாவலர்கள் தான், சித்திரவதை குற்றச்சாட்டில் சம்பந்தப் பட்டிருந்தனர். அவர்கள் தற்போது பணியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப் பட்டுள்ளனர். 

பூர்பார்க் முகாமில் சுமார் 700 அகதிகள் வசிக்கின்றனர். சித்திரவதை குற்றச்சாட்டு சம்பந்தமாக அவர்களில் பலர் வாக்குமூலம் அளித்துள்ளனர். இருந்தாலும், சம்பந்தப் பட்ட பாதுகாவலர்கள் இனவெறியர்கள் என்பதை அரசாங்கம் மறுத்து வருகின்றது. 

சித்திரவதை குற்றச்சாட்டு சுமத்தப் பட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள், "கடந்த காலங்களில் போதைவஸ்து பாவனை, வன்முறையில் ஈடுபட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப் பட்டுள்ளதாக," பொலிஸ் தெரிவிக்கின்றது. "கிரிமினல்களை கடமையில் ஈடுபடுத்தும் பாதுகாப்பு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும்" என்று மாநில அரசின் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். 

சாதாரணமாக, ஒருவர் விமான நிலையத்தில் கழுவித் துடைக்கும் வேலை செய்வதற்கு விண்ணப்பித்தாலே, பொலிஸ் சான்றிதழ் இல்லாமல் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். பாதுகாப்பு நிறுவனங்களில், ஒருவரின் கடந்த காலத்தைப் பற்றி, பொலிஸ் பதிவுகளில் ஆராயாமல் சேர்த்துக் கொள்வார்களா? 

அகதி முகாம்களில் நடக்கும் சித்திரவதை தொடர்பாக, ஜெர்மன் பாராளுமன்றத்தில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன. குறிப்பாக, இடதுசாரிக் கட்சிகளான die Linke மற்றும் பசுமைக் கட்சி உறுப்பினர்கள், அரசாங்க கொள்கைகளை விமர்சித்துப் பேசினார்கள். 

"அகதிகளை முகாம்களில் தங்க வைப்பதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அது மனிதாபிமானமற்றது. அதிகார துஸ்பிரயோகத்தை உருவாக்குகின்றது. முகாம்களுக்குப் பதிலாக, அகதிகள் தாம் விரும்பிய இடத்தில் வசிக்கும் உரிமையை வழங்க வேண்டும்." என்று die Linke பாராளுமன்ற உறுப்பினர் Bernd Riexinger தனது கருத்தைத் தெரிவித்தார்.


மேலதிக தகவல்களுக்கு:
Bezirksregierung kündigt Sicherheitsdienst
NRW-Innenminister fordert nach Gewaltvorfall in Asylbewerberheim Härte
Misshandlungen in Burbach: Die Fakten über Sicherheitsdienste in Flüchtlingsheimen

அகதிகள் சித்திரவதை செய்யப் படுவது தொடர்பான தொலைக்காட்சி செய்தி அறிக்கை (ஜெர்மன் மொழியில்):