
சந்தன மரம், யானைத் தந்தங்களை கடத்தி, தசாப்த காலமாக பொலிசுக்கு பிடிபடாமல் தப்பி வந்த வீரப்பனின் கதை, "வன யுத்தம்" என்ற பெயரில் திரைப் படமாக்கப் பட்டுள்ளது. இது ஒரு ஆவணப் படமல்ல. ஆனால், எல்லோருக்கும் தெரிந்த உண்மைக் கதையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப் பட்ட படம். கதா பாத்திரங்கள் பெரும்பாலும் உண்மையாக வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களை பிரதிபலிக்கின்றது. வீரப்பன், ராஜ்குமார், விஜயகுமார், இப்படி பல பாத்திரங்களின் பெயர்களும், ஒரு எழுத்துக் கூட மாறாமல், உள்ள படியே சூட்டப் பட்டுள்ளன. ஆகவே, இது ஒரு கற்பனைக் கதை என்று சொல்லித் தப்ப முடியாது.
வீரப்பன் ஒரு கடத்தல்காரன், கிரிமினல் என்பதற்கு அப்பால், வீரப்பன் சமபந்தப்பட்ட அரசியல் நிகழ்வுகள், இந்தப் படத்தில் பெருமளவு இருட்டடிப்பு செய்யப் பட்டுள்ளன. குறைந்தது இருபது வருடங்களுக்குப் பின்னர் வரப் போகும் அடுத்த தலைமுறை, வன யுத்தம் படத்தை பார்க்கும் பொழுது, அதுவே வீரப்பனின் உண்மையான வரலாறு என்று நம்பக் கூடிய ஆபத்து உண்டு. இன்றும் பலர், இந்த திரைப்படத்தை எதிர்த்து குரல் எழுப்பாததில் இருந்தே இதனை புரிந்து கொள்ளலாம். ஆகவே, வன யுத்தம் திரைப் படம் மீது கடுமையான விமர்சனம் வைப்பது, இங்கே அவசியமானது.
திரைப் படத்தின் முதல் அரைவாசிப் பகுதியில், பொலிஸ் நிலையங்கள் மீது திடீர் தாக்குதல் நடாத்துவதும், கண்ணிவெடி வைத்து பொலிஸ் வாகனங்களை தகர்ப்பதுமாக, வீரப்பன் கோஷ்டியின் சாகசங்களை காட்டுகின்றனர். மிகுதி அரைவாசிப் பகுதியில், வீரப்பனை பிடிப்பதற்காக, பொலிஸ் உளவாளிகளை ஊடுருவ செய்யும் பொலிசின் சாமர்த்தியத்தை காட்டுகின்றனர். வீரப்பன் பிடிபடும் போதும் ஜெயலலிதாவே முதல் அமைச்சராக இருந்ததால், "சட்டம், ஒழுங்கை நிலைநாட்டிய" ஜெயலலிதாவின் ஆட்சிக்கு புகழாரம் சூட்டுவதுடன் படம் நிறைவு பெறுகின்றது.
அண்மையில் வெளியான துப்பாக்கி, விஸ்வரூபம் போன்று, வன யுத்தமும் ஒரு பக்கச் சார்பான அரசியல் பேசுகின்றது. இவை எல்லாம், அரச அடக்குமுறைக்கு பக்கவாத்தியம் வாசிக்கும், பிரச்சாரத் திரைப்படங்கள் ஆகும். இந்தியாவில் இன்னமும், சினிமா எனும் ஊடகத்தை பயன்படுத்தும் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகமானது. அதனால், இவை பரப்பும் அரசியல் கருத்துக்கள், வெகுஜன பார்வையாளர்களால் இலகுவில் மறக்கடிக்கப் பட்டு விடும் என்று வாதாட முடியாது.
இன்று தமிழ் தேசிய அரசியல் உச்சத்தில் இருப்பதாக நம்பப் படும் காலத்தில், வன யுத்தம் என்ற திரைப்படம், தமிழ் தேசிய அரசியலை கொச்சைப் படுத்தும் விதத்தில் வந்துள்ளது. இன்று வரையில், எந்தவொரு தமிழ் தேசியவாதியும், இந்த திரைப்படத்தை கண்டித்து பேசாமல் இருப்பது ஆச்சரியத்திற்குரியது. சில விதிவிலக்குகள் இருக்கின்றன. ஆனால் அந்தக் குரல்கள் பலரை சென்றடையவில்லை. மிகவும் பிரபலமான தமிழ் தேசிய காவலர்கள் யாரும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தவில்லை. அதற்கு காரணம், ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் இருந்த தூய்மையான தமிழ் தேசிய அரசியல் வீரப்பனுடன் செத்து விட்டது. அதற்குப் பிறகு உருவான, இன்றுள்ள தமிழ் தேசிய அரசியல், இந்திய அரசின் நலன்களுக்கு அமைவாகவே நடந்து கொள்கின்றது.
வீரப்பனோடு சேர்த்து, தமிழ் தேசியவாதிகளையும் அழித்தொழித்த முதல்வர் ஜெயலலிதா, ஐந்து வருடங்களுக்குப் பிறகு, "ஈழத் தாய்" என்று போற்றப்பட்ட வரலாற்று முரண் நகையை என்னவென்று சொல்வது? இந்திய மத்திய அரசைப் பொறுத்த வரையில், அதற்கு தமிழ் தேசியம் மட்டுமே பிரச்சினை. ஆனால், ஈழத் தமிழ் தேசியம் இந்தியாவின் பிராந்திய நலன்களுக்குள் அடங்குகின்றது. இந்தியா வழங்கும் கருத்துச் சுதந்திரமும், அதற்கு அமைவானது தான். சுருக்கமாக: "நீங்கள் ஈழத்திற்காக எதையும் பேசலாம். ஆனால், தமிழ் நாடு விடுதலை பற்றி முணுமுணுக்கவும் கூடாது." இதற்குப் பெயர் சோரம் போதல்.
தமிழரை ஒரு தேசிய இனமாகவும், தமிழர்களுக்கான தன்னாட்சி அதிகாரத்தையும் கோரும் தமிழ் தேசியம், முதலில் தமிழ்நாட்டில் தான் ஆரம்பமாகியது. தமிழ் தேசியத்திற்கு தத்துவார்த்த அடிப்படையை கொடுத்த அண்ணாதுரையின் திராவிட முன்னேற்றக் கழகம், தனித் தமிழ்நாடு வேண்டும் என்ற பிரிவினைக் கோரிக்கையை பின்னர் விலக்கிக் கொண்டது. அண்ணாவின் அடிச்சுவட்டில் வந்த தம்பி கருணாநிதியும், தன்னை "உலகத் தமிழினத்தின் தலைவராக" காட்டிக் கொண்ட காலம் ஒன்றிருந்தது. இன்று இளைய தலைமுறையை சேர்ந்த தமிழ் தேசியவாதிகள், அதே கருணாநிதியை துரோகி என்று தூற்றித் திரியும் வரலாற்று முரண்நகையையும் நம் கண் முன்னே காணலாம்.
இரண்டு தலைமுறை இடைவெளிக்குள், தமிழ்நாட்டில் இன்னொரு தமிழ் தேசிய அரசியல் முளை விட்டிருந்தது. ஈழப் போராட்டத்தை பின்பற்றி, தமிழ் நாடு விடுதலைக்காக ஆயுதப் போராட்டம் நடந்தது. இன்றைக்கு அதைப் பற்றி எல்லோரும் மறந்து விட்டார்கள். தமிழக மக்கள் விரோத அரசு, தமிழ் நாடு விடுதலைப் போராட்டத்தை கொன்று, சவப் பெட்டிக்குள் போட்டு விட்டது. வன யுத்தம் என்ற சினிமா, அந்த சவப்பெட்டியை புதைகுழிக்கு அனுப்பி வைத்துள்ளது.
இரண்டு தலைமுறை இடைவெளிக்குள், தமிழ்நாட்டில் இன்னொரு தமிழ் தேசிய அரசியல் முளை விட்டிருந்தது. ஈழப் போராட்டத்தை பின்பற்றி, தமிழ் நாடு விடுதலைக்காக ஆயுதப் போராட்டம் நடந்தது. இன்றைக்கு அதைப் பற்றி எல்லோரும் மறந்து விட்டார்கள். தமிழக மக்கள் விரோத அரசு, தமிழ் நாடு விடுதலைப் போராட்டத்தை கொன்று, சவப் பெட்டிக்குள் போட்டு விட்டது. வன யுத்தம் என்ற சினிமா, அந்த சவப்பெட்டியை புதைகுழிக்கு அனுப்பி வைத்துள்ளது.
வீரப்பனின் குழுவினர், சந்தன மரம், யானைத் தந்தம் போன்றவற்றை கடத்திய கிரிமினல்கள். வீரப்பன், தமிழ் தேசிய அரசியலுக்குள் குதித்தது, ஒரு தற்செயல் நிகழ்வல்ல. பல நாடுகளில், தேசியவாத போராட்டத்தை தொடங்கிய சக்திகள், அப்படியான நபர்களுடன் கூட்டுச் சேர்ந்து தான் தமது இருப்பை நிலைநிறுத்திக் கொண்டன. வல்வெட்டித்துறையில் இருந்து தமிழ்நாட்டுக்கு கடத்தல் தொழில் செய்து வந்த கடத்தல்காரர்களுடனான தொடர்பின் பின்னர் தான், ஈழப் போராளிக் குழுக்களின் ஆயுத பலம் அதிகரித்திருந்தது. கடத்தல்காரர்களின் அரசியல் தொடர்புகள் மூலம் தான், தமிழ்நாட்டை தளமாக பயன்படுத்தும் வசதி கிடைத்தது.
ஈழ தேசிய விடுதலைக்காக போராடிய இயக்கங்கள் சர்வதேச அளவில் கவனிக்கத் தக்க அரசியல் சக்தியாக வளர்ந்திருந்தன. அதே நேரம், தமிழ்நாடு விடுதலைக்காக போராடிய இயக்கங்கள் முளையிலேயே கிள்ளி எறியப் பட்டன. இந்த வேறுபாட்டுக்கு காரணம், இந்தியாவின் இரு வேறுபட்ட அரசியல் கொள்கைகள். இலங்கையில் வாழும் தமிழர்கள் தனிநாடு கோரி ஆயுதப்போராட்டம் நடத்துவது, இந்தியாவின் நலன்களுக்கு சாதகமானது. இந்தியாவில் வாழும் தமிழர்கள், தனிநாடு கோரி ஆயுதப்போராட்டம் நடத்துவது இந்திய நலன்களுக்கு பாதகமானது. தனது அயல்நாட்டில் பிரிவினைப் போராட்டத்தை ஆதரிக்கும் இந்திய அரசு, தனது நாட்டுக்குள் நடக்கும் பிரிவினைப் போராட்டத்தை நசுக்கி வருகின்றது. மேலெழுந்தவாரியாக பார்க்கும் பொழுது, இது ஒரு முரண்பாடான அரசியல் கொள்கையாக தெரியலாம். ஆனால், உண்மை அப்படி அல்ல. தேசியவாத இயக்கங்களும், மதவாத இயக்கங்களும், ஆட்சியாளர்களின் தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்தப் படலாம்.
எழுபதுகளில், இந்தியா முழுவதும் ஆயுதப் போராட்டம் நடத்திய நக்சல்பாரி இயக்கத்தினர், தமிழ்நாட்டிலும் இருந்தனர். எண்பதுகளில் தமிழகம் முழுவதும் பேசப்பட்ட ஈழப் போராட்டம், தமிழ்நாடு நக்சலைட் இயக்கத்தின் உள்ளேயும் தாக்கத்தினை உண்டுபண்ணியது. இயக்கத்தினுள் நடந்த வாதப் பிரதிவாதங்களுக்கு பின்னர், "வர்க்கப் போராட்டத்திற்கு முன்னர், தேசிய இன விடுதலைப் போராட்டம் நடத்தப் பட வேண்டும்" என்று நம்பிய பிரிவினர், தமிழரசன் தலைமையில் பிரிந்து சென்றனர். தமிழ் நாடு விடுதலைக்கு போராடுவதற்காக, "தமிழ்நாடு விடுதலைப் படை" (TNLA) என்ற இராணுவப் பிரிவை அமைத்தார்கள். கிராமப் புறங்களில், கூலி விவசாயிகளை சுரண்டிய பண்ணையாளர்கள், அல்லது நிலப்பிரபுக்கள் சிலரை வெட்டிக் கொன்றது மட்டுமே, TNLA யின் குறிப்பிடத் தக்க புரட்சிகர தாக்குதல்கள் ஆகும்.
நேரு சிலைக்கு குண்டு வைத்தது போன்ற, சில தமிழ் நாடு தேசியம் சார்ந்த தாக்குதல்களும் இடம்பெற்றன. ஆனால், தமிழ்நாட்டு ஆயுதப் போராட்ட வரலாற்றில், மிகப் பெருமளவு சேதத்தை உண்டாக்கிய அரியலூர் ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பல பொது மக்கள் கொல்லப் பட்டனர். அரசு இந்த தாக்குதலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, தமிழ் தேசிய தீவிரவாதத்திற்கு எதிராக, தமிழ் பொது மக்களை திசை திருப்பி விட்டது. பொன்பரப்பி கிராமத்தில், தமிழரசன் தலைமையிலான குழுவினர் வங்கி ஒன்றை கொள்ளையடிக்க சென்ற சமயம், பொலிஸ் புலனாய்வாளர்களால் தூண்டப்பட்ட கிராம மக்களால், சுற்றிவளைத்து தாக்கப் பட்டு கொல்லப் பட்டனர். அதற்குப் பின்னர் TNLA இரண்டாக, மூன்றாக உடைந்து பலவீனப் பட்டது. பொலிஸ் தேடுதல் வேட்டையில் பலர் கைது செய்யப்பட்ட நிலையில், மாறன் தலைமையிலான சிறு குழுவினர், வீரப்பன் இருந்த காட்டுப் பகுதிக்குள் சென்று மறைந்து கொண்டனர்.
வீரப்பனும், அவனது கூட்டாளிகளும் வன்னிய சாதியை சேர்ந்தவர்களாக இருந்ததால், மாறன் குழுவினருடன் நம்பகத் தன்மை வாய்ந்த கூட்டணி உருவாவதற்கு ஒரு காரணமாக இருந்தது. தமிழரசன், மாறன் போன்ற TNLA யின் தலைவர்கள் பலரும், வன்னிய சாதியினர் தான். ஆனால், சாதி மட்டுமே, வீரப்பன் கோஷ்டிக்கும், மாறன் கோஷ்டிக்கும் இடையில் கூட்டணி ஏற்படுவதற்கான ஒரேயொரு காரணி அல்ல. ஒரு முக்கியமான அரசியல் அடித்தளமும் இரண்டு குழுக்களையும் ஒன்று சேர்த்தது. வீரப்பன் குழுவினர், கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையிலான காட்டுப் பகுதியில் இயங்கிக் கொண்டிருந்தனர்.
காவிரி நதி நீரை திறந்து விடுவது சம்பந்தமான பிரச்சினையில், தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்கள் மோதிக் கொண்டிருந்தன. காவிரி நதிநீர் பிரச்சினை, தமிழ்நாட்டில் தமிழ் தேசிய எழுச்சி உண்டாவதற்கு உந்துசக்தியாக அமைந்திருந்தது. எவ்வாறு, இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரத்தை ஈழ விடுதலை இயக்கங்கள் தமக்கு சாதகமான அரசியலாக மாற்றிக் கொண்டனவோ, அதே தந்திரோபாயத்தை TNLA பின்பற்றியது. கர்நாடகாவின் பிரபல நட்சத்திர நடிகர் ராஜ்குமார் கடத்தப் பட்டதன் பின்னணியில், இவ்விரண்டு குழுக்களின் கூட்டு நடவடிக்கை இருந்துள்ளது. வன யுத்தம் திரைப்படத்தில், இந்த அரசியல் பின்புலம் இருட்டடிப்பு செய்யப் பட்டுள்ளது.
ராஜ்குமார் கடத்தப் பட்ட பின்னர், ஒரு அரசியல் கோரிக்கை விடுக்கப் பட்டது. சிறையில் இருக்கும் வீரப்பன் கூட்டாளிகளையும், TNLA உறுப்பினர்களையும் விடுதலை செய்யப் பட வேண்டும். எந்த வித நிபந்தனையுமற்று, காவிரி நதிநீர் திறந்து விடப்பட வேண்டும் என்பன முக்கிய கோரிக்கைகள். திரைப்படத்தில் காட்டப்படுவதைப் போல, பணம் மட்டுமே ஒரேயொரு கோரிக்கை என்றால், செல்வந்தர்களான ராஜ்குமார் குடும்பத்தினர் எப்போதோ பணத்தைக் கொடுத்து மீட்டிருப்பார்கள். ஆனால், ராஜ்குமார் கடத்தல் விவகாரம் மாதக் கணக்காக இழுத்தடிக்கப் பட்டதற்கு, அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்ற விரும்பாத, அரசின் மெத்தனப் போக்கு முக்கிய காரணம் ஆகும்.
உண்மையிலேயே, காவிரி நதிநீர் திறந்து விடுவதற்கு கர்நாடகா அரசு சம்மதித்து இருந்தால், அது தமிழ்நாட்டில் ஒரு பெரிய தமிழ் தேசிய அலையை உருவாக்கி விட்டிருக்கும். TNLA க்கு பெருமளவு தமிழ் மக்களின் ஆதரவு கிடைத்திருக்கும். அரசு இதையெல்லாம் உணராமல் இல்லை. ஆனால், வன யுத்தம் திரைப்படத்தை பார்த்து இரசித்த தமிழ் உணர்வாளர்களும் உணராமல் விட்டது துரதிர்ஷ்டமானது.
இந்தப் பிரச்சினைகள் நடந்து கொண்டிருந்த காலத்தில், ஜூனியர் விகடன் வார இதழில் ஒரு தொடர் பிரசுரமாகிக் கொண்டிருந்தது. "முந்திரிக்காடு முதல் சந்தனக் காடு வரை" என்ற தலைப்பிலான தொடரில், TNLA யின் போராட்ட வரலாறு பதிவு செய்யப் பட்டது. அந்த தருணத்தில் தான், வீரப்பன் TNLA யின் தலைவராக பொறுப்பெடுத்து உள்ளதாக அறிவிக்கப் பட்டது. நக்சல்பாரி இயக்கத்தின் மூத்த உறுப்பினரும், பின்னாளில் இடது- தேசியவாதியாகவும் மாறியிருந்த புலவர் கலியபெருமாள், "வீரப்பனை தமிழ் தேசியத் தலைவராக ஏற்றுக் கொள்வதாக," ஜூனியர் விகடன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். புலவர் கலியபெருமாள் தலைமறைவாக வாழ்ந்தவர் அல்ல. TNLA யின் அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்கு பிரச்சாரம் செய்யும், வெகுஜன அரசியலில் ஈடுபட்ட ஒருவர்.
புலவர் கலியபெருமாளுக்கும் வீரப்பனுக்கும் இடையில் நேரடி தொடர்புகள் குறைவாக இருந்திருக்கலாம். வன யுத்தம் திரைப்படத்தில், புலவர் கலியபெருமாளை மனதில் வைத்துக் கொண்டு ஒரு கற்பனைப் பாத்திரத்தை படைத்திருக்கிறார்கள். அதில் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் நடித்திருக்கிறார். திரைப்படத்தில் வரும் முதியவரின் பாத்திரம், பொலிசுக்கு காட்டிக் கொடுக்கும் நக்சலைட் தொடர்பாளர் போன்று சித்தரிக்கப் பட்டுள்ளது. வீரப்பனை காட்டுக்குள் இருந்து வெளியே கொண்டு வருவதற்கும், பொலிஸ் உளவாளிகளான நக்சலைட்கள் உதவுகிறார்கள். உண்மையில், நடந்த கதை வேறு. வீரப்பன் மறைந்திருந்த காட்டில் இருந்து, வெளியே சென்று வந்த TNLA உறுப்பினர்கள் பொலிசிடம் மாட்டிக் கொண்டனர். அவர்களின் தொலைபேசி அழைப்பை நம்பி வெளியில் வந்த வீரப்பனை, பொலிஸ் கைது செய்யாமல் சுட்டுக் கொன்றது.
வன யுத்தம் திரைப்படத்தில், அரசின் சூழ்ச்சிக்கு அமைவாக, தமிழ் தேசிய தீவிரவாதிகளை, இஸ்லாமிய தீவிரவாதிகளாக திரிக்கும் அரசியல் அரங்கேறுகின்றது. வீரப்பன் கதைக்கு எந்த வித சம்பந்தமும் இல்லாத, "இஸ்லாமிய தீவிரவாதிகளை" படத்தில் காட்டுகின்றனர். இது துப்பாக்கி, விஸ்வரூபம் போன்ற முஸ்லிம் விரோத திரைப்படங்களினால் ஏற்பட்ட தாக்கமாகும். இஸ்லாமிய பாணி குல்லாய் அணிந்த நான்கு இளைஞர்கள், "குண்டு வைப்பதில் நிபுணர்கள்" ஆக காட்டப் படுகின்றனர். இது இந்தக் காலகட்ட அரசியலுக்கு ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால், வீரப்பனின் கதையில் தேவையற்ற இடைச் செருகல் ஆகும். ஆனால், இங்கே தான் டைரக்டரின் குள்ள நரித்தனம் அம்பலமாகின்றது. வீரப்பனின் கிரிமினல் கோஷ்டி, தமிழ் தேசிய தீவிரவாதிகள், இஸ்லாமிய தீவிரவாதிகள், இவர்களுடன் இலங்கையில் இருக்கும் புலிகளையும் முடிச்சுப் போட்டு, ஆளும் வர்க்கத்தின் சதிக்கு உடந்தையாக நடந்து கொள்கிறார்.
![]() |
| இந்தியா டுடே வெளியிட்ட, RAW வின் "அகண்ட தமிழ் நாடு/தமிழீழம்" பற்றிய வரைபடம் |
வீரப்பன், "கண் அறுவைச் சிகிச்சை செய்வதற்காக, ஸ்ரீலங்கா செல்வதாக" பின்னப்பட்ட கதை, விடுதலைப் புலிகளையும் சிக்க வைக்கும் உள்நோக்கோடு புனையப் பட்டுள்ளது. ஏற்கனவே, இந்தப் பிரச்சினைகள் நடந்து கொண்டிருந்த காலத்தில், பார்ப்பனீய - முதலாளித்துவ வார இதழான "இந்தியா டுடே" ஒரு வதந்தியைக் கிளப்பி விட்டிருந்தது. ஈழம் கோரும் புலிகளும், தமிழ்நாடு கோரும் TNLA யும் ஒன்று சேர்ந்திருப்பதாகவும், அவர்கள் அகண்ட தமிழ்நாடு, அல்லது அகண்ட தமிழீழம் ஒன்றை உருவாக்க எத்தனித்து வருவதாகவும்...." ஒரு கட்டுரையை பிரசுரித்திருந்தது. இந்தக் கட்டுரைக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது மட்டுமல்ல, இந்த வதந்தியை கிளப்பி விடுவதன் பின்னணியில் RAW செயற்பட்டதும் குறிப்பிடத் தக்கது. "அகண்ட தமிழ்நாடு/தமிழீழம் கோட்பாடு", இந்திய, இலங்கை ஆட்சியாளர்களை ஒரு பொதுப் புள்ளியில் ஒன்றிணைக்க பயன்பட்டது.
விஸ்வரூபம் திரைப்படத்தில் ஆப்கான் மக்களின் அவலம் பதிவு செய்யப் படவில்லை. அதே போன்று, வன யுத்தம் திரைப்படத்தில், பொலிஸ் அதிரடிப் படையினரால் பாதிக்கப்பட்ட தமிழ் பழங்குடியினரின் அவலம் பதிவு செய்யப் படவில்லை. வீரப்பன் குழுவினர் நடமாடிய வனப்பகுதி மக்கள், அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்ட, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் ஆவர். வீரப்பன், சந்தன மரம், யானைத் தந்தம் கடத்தி பணம் சேர்த்திருந்தாலும், அந்தப் பணத்தில் ஒரு பகுதியை வனப்பகுதி மக்களின் நல்வாழ்வுக்காக செலவு செய்தான். அந்த நன்றியுணர்ச்சி காரணமாகத் தான், வீரப்பனை பற்றி யாரும் தகவல் கொடுக்கவில்லை. திரைப்படத்தில் டிஜிபி விஜயகுமாராக நடிக்கும் அர்ஜுன், "பொது மக்கள் வீரப்பனை காட்டிக் கொடுக்க தயங்குகிறார்கள்." என்று வசனம் பேசுகின்றார். ஆனால், ஏன் என்ற காரணத்தை மட்டும் திரித்துக் கூறுகின்றார். வீரப்பன் கொன்று விடுவான் என்ற பயத்தினால் தான், அந்த மக்கள் காட்டிக் கொடுக்கவில்லையாம்.
அது உண்மையானால், எதற்காக நூற்றுக் கணக்கான அப்பாவி மக்கள் பொலிஸ் முகாம்களில் வைத்து சித்திரவதை செய்யப் பட்டார்கள்? எதற்காக நூற்றுக் கணக்கான பெண்கள், பொலிஸ் சீருடையில் இருந்த காம வெறியர்களால் வன்புணர்ச்சி செய்யப் பட்டார்கள்? வீரப்பனை தேடுவதாக சொல்லிக் கொண்டு, பொலிஸ் அதிரடிப் படையினர் புரிந்த அக்கிரமங்கள், கொலைகள், சித்திரவதைகள், பாலியல் வல்லுறவுகள், இவை எல்லாம் மனித உரிமை நிறுவனங்களால் பதிவு செய்யப் பட்டுள்ளன. வன யுத்தம் திரைப்படம், அதைப் பற்றி ஒரு வார்த்தையேனும் பேசாத காரணம் என்ன?
அன்று வனத்தில் நடந்தது ஒரு யுத்தம் என்றால், பொலிஸ் அதிரடிப் படையின் அக்கிரமங்கள் போர்க் குற்றங்களாக கருதப்பட வேண்டும். ஆனால், போர்க்குற்றவாளிகளை கதாநாயகர்களாக காட்டுவது தான், எங்கள் தமிழ் சினிமாக்களின் பண்பாடாக இருந்து வருகின்றது. விஸ்வரூபம், வன யுத்தம், இவை எல்லாம் ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளை நியாயப்படுத்துவதற்காக எடுக்கப் பட்ட அரசியல் பிரச்சார படங்கள் தான்.
**********************************
1.விஸ்வரூபம்: அபத்தங்களின் விசால ரூபம்
2.போதி தர்மரை அவமதிக்கும் ஏழாம் அறிவு!
3.தமிழ்ப் போதிதர்மர் பற்றி, சீனர்கள் தயாரித்த திரைப்படம்
4.ஸ்பெயின் பாட்டாளி வர்க்க புரட்சி பற்றிய சினிமா
5.ஈராக் சினிமாவில் அமெரிக்கா வில்லன்! - திரையிடத் தடை







