Showing posts with label தீவிரவாதம். Show all posts
Showing posts with label தீவிரவாதம். Show all posts

Friday, November 26, 2010

நீங்கள் அறியாத இன்னொரு அல்கைதா

கடந்த மாதம் டென்மார்க் தலைநகர் கொபென்ஹெகனில் பயங்கரவாத செயலில் ஈடுபட திட்டமிட்டதாக ஒருவரை கைது செய்தார்கள். "முகமது கேலிச்சித்திரம்" வெளியிட்ட பத்திரிகை காரியாலயத்திற்கு குண்டு வைக்க திட்டமிட்டதாக தெரிவிக்கப் பட்டது. சர்வதேச ஊடகங்கங்களில் ஒரு நாள் மட்டுமே அந்த செய்தி தெரிவிக்கப்பட்டது. இரண்டொரு தினங்களுக்கு முன்னர், பெல்ஜியம் அன்த்வேர்பன் நகரில் பயங்கரவாத சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். போலிஸ் கூட்டு நடவடிக்கையில் ஆம்ஸ்டர்டாம் (நெதர்லாந்து), ஆகென் (ஜெர்மனி) ஆகிய நகரங்களிலும் மேலதிகமாக சிலர் கைதானார்கள். ஜெர்மனி தனது நாட்டிற்கு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக அறிவித்த சில தினங்களில் இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இருப்பினும் அந்த "அச்சுறுத்தலுக்கும்", இந்த கைதுகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிய வருகின்றது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குறிப்பிட்ட ஏதோ ஒரு இடத்தில் குண்டு வைக்க திட்டமிட்டார்கள் என்று எம்மை எல்லாம் அதிர்ச்சியில் உறைய வைக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், ஊடகங்கள் அதனை மிகைப் படுத்தி செய்தி வாசிக்கவில்லை. கொஞ்சம் அடக்கி வாசித்தார்கள்.

"அல்கைதா அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளை மட்டுமே குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் மட்டுமே அல்கைதா இயங்கி வருகின்றது." இதுவரை காலமும் ஊடகங்கள் எமக்கு போதித்து வந்த பாடங்கள் இவை. எங்காவது மேலைத்தேய நாட்டை சேர்ந்தவர்களை பலி கொண்ட குண்டு வெடிப்பு நடந்தால், அது அல்கைதா வேளை என்று நாமும் பேசப் பழகினோம். உண்மையில் அல்கைதா என்ற இயக்கம் உலகில் இல்லை. பல நாடுகளை உள்ளடக்கிய இஸ்லாமிய தாயகம் அமைக்கும் நோக்கம் கொண்ட பல அமைப்புகளுக்கு ஊடகங்கள் சூட்டிய பொதுப் பெயர் அது. ஆனால் இந்த "தேசங்கடந்த தீவிரவாத அமைப்புகள்" (இஸ்லாமிய வழியில் உலகமயமாக்கல்?) தமது தாயகப் பிரதேசம் என்று உரிமை கோரும் வரை படம் ஒன்றை வைத்திருக்கிறார்கள். சீனாவின் மேற்குப் பகுதியும், ரஷ்யாவின் தெற்குப் பகுதியும் அந்த இஸ்லாமியத் தாயகத்தில் அடங்குகின்றன.

ரஷ்யாவின் தெற்குப் பகுதியில் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட செச்னியாவில் நடந்த யுத்தம் அனைவரும் அறிந்ததே. அப்போதெல்லாம் அதனை "செச்னிய விடுதலைப் போர்" என்று மேற்குலக நாடுகள் கூறி வந்தன. செச்னிய கிளர்ச்சி ரஷ்ய இராணுவத்தால் நசுக்கப்பட்டு விட்டது. தற்போது செச்னியா ரஷ்யாவுக்குள் மேலதிக அதிகாரங்கள் வழங்கப்பட்ட தன்னாட்சிப் பிரதேசம். அதனை ஆளுவது முன்னாள் கிளர்ச்சி இயக்க தலைவர்களில் ஒருவரான கடிரோவ். மாஸ்கோவின் சொற்கேட்டு நடக்கும் நல்ல பிள்ளையான கடிரோவ், தனது அதிகாரத்திற்கு போட்டியான கிளர்ச்சிக் குழுக்களை அடக்கி வருகிறார். அவர்கள் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் ஆட்களை அனுப்பி கொலை செய்கிறார். வியனாவிலும் (ஆஸ்திரியா), துபாயிலும் கடிரோவின் எதிராளிகள் கொலை செய்யப்பட்டனர். இத்தனை அடக்குமுறைகளுக்கு மத்தியிலும், இன்னமும் செச்னியாவில் சில ஆயுதபாணி இயக்கங்கள் தலைமறைவாக இயங்கி வருகின்றன. அவர்கள் வெளிநாடுகளிலும் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.

செச்னிய யுத்தம் நடைபெற்ற காலங்களில், லட்சக் கணக்கான ரஷ்ய (செச்னிய) அகதிகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அகதியாக தஞ்சம் கோரினார்கள். அவர்களில் பெரும்பான்மையானோர் அகதிகளாக அங்கீகரிக்கப் பட்டு, வளமாக வாழ்கின்றனர். தலைமறைவான செச்னிய இயக்கம், மேற்கு ஐரோப்பாவில் வாழும் செச்னிய அகதிகள் மத்தியில் நிதி சேகரித்து வருகின்றது. இதிலே குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இன்னமும் ஆயுதங்களை கைவிடாத அமைப்பினர், இஸ்லாமிய மத அடிப்படைவாத கொள்கைகளை பின்பற்றுகின்றவர்கள். அதனால் அவர்களுக்கு பிற நாடுகளை சேர்ந்த முஸ்லிம்களும் நிதி திரட்டி அனுப்புகின்றனர். நிதி கொடுப்பது மட்டுமல்ல, போராளிகளையும் சேர்த்து அனுப்புகின்றனர். செச்னிய மலைப் பகுதிகளில் அரபுக்களைப் போல தோன்றும் போராளிகள் காணப்படுவது ஒன்றும் இரகசியமல்ல. (செச்னியர்கள் தோற்றத்தில் ரஷ்யர்கள் போன்றிருப்பார்கள்.)

தற்போது பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மொரோக்கோ நாட்டினை பூர்வீகமாக கொண்டவர்கள். பெல்ஜியம் அல்லது நெதர்லாந்து பிரஜைகள். செச்னியாவுக்கு நிதி சேகரித்து அனுப்பியமை, அங்கு ஆயுதப் போராட்டத்திற்கு ஆட்களை சேர்த்தமை, போன்ற குற்றச் சாட்டிலேயே அவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். கைதான நபர்களில் ஒருவர் ரஷ்ய-செச்னிய இனத்தவர். முன்னர் குறிப்பிட்ட, கொபென்ஹெகனில் குண்டு வைக்க திட்டமிட்டதாக கைதான நபரும் ஒரு செச்னிய இனத்தவர். செச்னியாவில் Dokka Umarov என்பவரின் தலைமையில் இயங்கும் இயக்கத்துடன் அவர்கள் தொடர்பு வைத்திருந்தனர். செச்னியாவையும், அதனை அண்டிய முஸ்லிம்கள் வாழும் மாநிலங்களையும் சேர்த்து Imarat Kavkaz (Emirate Caucasus) அமைப்பதே அந்த இயக்கத்தின் இலட்சியம்.

Saturday, February 14, 2009

உங்களது பெயர் "பயங்கரவாதிகள் பட்டியலில்" இடம்பெற்றுள்ளதா?


ஐக்கிய நாடுகள் சபையும், ஐரோப்பிய ஒன்றியமும் தயாரித்துள்ள "பயங்கரவாதிகள் பட்டியலில்" இடம்பெற்றவர்களை காப்பாற்றுவதற்கு எந்த சட்டமும், வக்கீலும் உதவப்போவதில்லை. சட்டங்களால் ஆளப்படும் மேற்கத்திய நாடுகளில் கூட, "பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை" என்ற பெயரில் மெல்ல மெல்ல சர்வாதிகாரம் பரவிவருகின்றது.

"அல் கைதாவுடன் கூட்டுச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்தக்கதி, எனக்கில்லை" என்று அப்பாவித்தனமாக இன்றைக்கும் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நிஜமாகவே அவ்வாறு சந்தேகிக்கப்பட்ட நபர்களோ, அல்லது நிறுவனங்களோ கூட, பின்னர் குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம் தடை செய்யப்பட்ட பல்வேறு அமைப்புகளுக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் கூட கைது செய்யப்படுகின்றனர். இருப்பினும் அவர்கள் மீது அரச உளவுத்துறை தயாரித்த குற்றப்பத்திரிகைகளை, கைது செய்யப்பட்டவரோ, அல்லது அவரது வக்கீலோ பார்க்க முடியாது. அதெல்லாம் "தேச நலனை முன்னிட்டு இரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டியவை."

ஒரு நாள், நீங்கள் வங்கியில் தானியங்கி இயந்திரத்தில் இருந்து பணம் எடுக்க எத்தனிக்கின்றீர்கள், என்று வைத்துக் கொள்வோம். பணம் வரவில்லை, அதற்குப் பதிலாக "ஐ.நா.சபை, ஐரோப்பிய ஒன்றிய உத்தரவின் பேரில்" உங்களது வங்கி அட்டை தடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வருகின்றது. நீங்கள் சம்பந்தப் பட்ட வங்கியுடன் தொடர்பு கொண்டு விசாரிக்கின்றீர்கள்.

"எந்தக் குற்றமும் செய்யாத உங்களை, சந்தேகத்திற்குரிய வேறொரு நபர் என்று தவறுதலாக கணித்து விட்டிருக்கலாம்", என முறையிடுகின்றீர்கள். வங்கியிலிருந்து உறுதியான பதில் வருகிறது: "மன்னிக்கவும், எமக்கு கிடைத்த தகவல்கள் சரியானவை. நிச்சயமாக அது நீங்கள் தான்." உளவுத்துறை தயாரித்துள்ள, பயங்கரவாதிகளுக்கு காசு அனுப்பும் சந்தேகநபர்களின் பட்டியலில், உங்களது பெயர் இடம்பெற்றுள்ள விஷயம் அப்போது தான் தெரிய வரும்.

பணம் அனுப்புவது மட்டுமல்ல, தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவாக பேசுவது, அது பற்றிய நூலை வாங்குவது, நூலகத்தில் இரவல் பெறுவது, கூட உங்கள் பெயரை பயங்கரவாத சந்தேகநபர்கள் பட்டியலில் வரவைக்கும். இதுவரை எந்த ஒரு தமிழ் ஊடகமும் வெளியிடாத செய்தி என்னவெனில், இந்தப் பட்டியலில் (பல நாடுகளில் வதியும்) தமிழர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன என்பதையும், இதுவரை பலர் அந்தக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதையும் தான். அதுமட்டுமல்ல, சில மேற்குலக நாடுகளில் அரச உயர்பதவிகளில், அல்லது உயர் தொழில்நுட்ப படிப்புகளில், அனுமதி மறுக்கப்பட்டவர்களில் தமிழர்களும் அடங்குவர்.

வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களை கண்காணிக்கும் வழக்கம் தொன்று தொட்டு நிலவி வருவது தான். உதாரணத்திற்கு ஒருவரது மாதாந்த வருமானம் 1500 டாலர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதிலே ஒருவர் மாதம் 1000 டாலர் சேமிக்க முடியுமாகில், வருட முடிவில் அதிக பட்சம் 12000 டாலர்கள் கணக்கில் இருக்கலாம். இதற்கு மீறிய தொகையை வைத்திருப்பவர்கள், சந்தேகக்கண்ணுடன் பார்க்கப்பட்டனர்.

திடீரென இரண்டு பொலிஸ்காரர்கள் உங்கள் வீட்டுக்கதவைத் தட்டி, நீங்கள் ஏதாவது கிரிமினல் வேலைகளில் ஈடுபடுகிறீர்களா என விசாரிப்பது, வழக்கமாக நடந்து வருவது தான். ஆனால் இப்போது அதுவே பயங்கரவாத குற்றமாக நோக்கப்படும் என்பது தான் வித்தியாசம். இதனை விட இன்னொரு பாரம்பரிய வேவு பார்க்கும் முறையும் மேற்குலக நாடுகளில் உள்ளன. கிராமங்களில், நகர வட்டாரங்களில் நியமிக்கப்பட்டுள்ள, உளவுத்துறையுடன் தொடர்புடைய ஆட்காட்டிகள், அந்த இடத்திற்கு புதிதாக குடி வருபவர்களை பற்றிய தகவல்களை கொடுத்து வருகின்றனர். இந்த நடைமுறை இன்றைய காலத்தில் இன்னும் விரிவுபடுத்தப் படலாம்.

"பயங்கரவாதிகளின் பட்டியலை" யார் தயாரிக்கிறார்கள்? ஒவ்வொரு நாட்டிலும் உள்ள புலனாய்வுத்துறை தீவிரவாத அரசியலில் ஈடுபடுபவர்களின் விபரங்களை சேர்த்து வருகின்றது. ஒரு சில ஆயிரம் பேர்களே சேவையில் உள்ள தேசிய புலனாய்வுத் துறை, காவல்துறையை விட சக்தி வாய்ந்தது. ஒரு சாதாரண திருட்டுக்குற்றத்திற்கே சாட்சியம் உண்டா எனக்கேட்டு வெளியே வந்து விடலாம். ஆனால் புலனாய்வுத்துறை எவ்வாறு அந்த தகவல்களைப் பெற்றது? அதைப்பார்க்க முடியுமா? இந்தக் கேள்விகளை உயர்நீதிமன்ற நீதிபதி கூட கேட்க முடியாது.

புலனாய்வுத்துறையை எதிர்த்து வழக்கு போட முடியாது. பயங்கரவாத சந்தேக நபர்களின் பட்டியல், சம்பந்தப்பட்ட அரசாங்கங்களால் அமெரிக்காவுக்கு, (அல்லது ஐ.நா.சபைக்கு) அனுப்பப்படுகின்றன. மறுபக்கத்தில் விரிவான தகவல் மையத்தை (Data Base) கொண்டிருக்கும் அமெரிக்கா, தனது பட்டியலில் உள்ளவரை தடுத்து வைக்குமாறு சம்பந்தப்பட்ட நாட்டிற்கு ஓலை அனுப்பும். மேற்கு ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்ல, இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகள் கூட இந்த விடயத்தில் அமெரிக்காவுடன் ஒன்றாக செயற்படுகின்றன.

சாதாரண காவல்துறை, ஒரு குற்றம் நடந்த பிறகு தான் துப்பறிந்து, குற்றவாளியை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும். ஆனால் புதிதாக வந்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் படி, குற்றம் புரிய எண்ணியிருந்ததாக ஒருவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படலாம். அதாவது "ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவரை தான் வெறுப்பதாகவும், அவரை கொலை செய்ய வேண்டும் என்றும்" ஒருவர் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்துகிறார் என வைத்துக் கொள்வோம்.

இதனை பக்கத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கும் இன்னொரு நபர் (நெருங்கிய நண்பராக கூட இருக்கலாம்) உளவுத்துறைக்கு தகவல் தருமிடத்து, அந்த "வீர வசனம்" பேசிய நபர் கைது செய்யப்படலாம். இந்த நடைமுறை "பயங்கரவாத சம்பவம் ஒன்று இடம்பெறுவதை முன்கூட்டியே தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை" என அழைக்கப்படுகின்றது. இதுவரை பல "வாய்ச்சொல் வீரர்கள்" பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் மேற்கத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றிற்கு சார்பானவர்களை கண்டுபிடிப்பது, உளவுத்துறைக்கு கைவந்த கலை. சில நேரம் உளவுத்துறையால் பணியில் அமர்த்தப்படும் நபர்களே, பெருமளவு பலியாடுகளை கவர்ந்திழுத்து பொறியில் மாட்டி விடுகின்றனர். குறிப்பிட்ட இயக்கத்தின் கொள்கைப் பிடிப்பாளராக காட்டிக் கொள்ளும் "போலி தீவிரவாதிக்கும்", "நிஜ தீவிரவாதிக்கும்" இடையில் வித்தியாசம் கண்டுபிடிப்பது கடினம். இந்த போலி தீவிரவாதிகளின் நிஜ முகம் அம்பலமாகும் போது தான், சில பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னணியில் உளவுத்துறை சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகின்றன.

-- தொடரும் --


Part 2:நிலவுக்கு ஒளித்தாலும் பரதேசத்திலும் பயங்கரவாதி

Thursday, December 04, 2008

மும்பையில் அரங்கேறிய சதி நாடகம்


இந்தியாவின் 9/11 என்று வர்ணிக்கப்படும் மும்பை தாக்குதல்கள் நாடளாவிய அதிர்வலைகளை தோற்றுவித்த போதும், பல கேள்விகளுக்கான பதில்கள் இன்னமும் மர்மமாக உள்ளன. இந்தப் பதில்கள் இனிமேலும் கிடைக்காமல் போகலாம். உணர்ச்சிவசப்பட்ட நாட்டுப்பற்று என்னும் பேரலை, எந்த சந்தேகத்தையும் தன்னுள் அடக்கி வைக்கலாம். இந்நேரத்தில், இந்திய அரசு மட்டுமல்ல, யாரும் ஆதாரங்களற்ற கருத்தமைவுகளை முன்வைப்பது சரியல்ல என்பதால், அதிகம் பேசப்படாத பொருள்கள் பற்றி மட்டுமே இங்கே அலசவிருக்கிறேன்.

நவம்பர் 26 ம் திகதி மும்பை நகருக்குள் தீவிரவாதிகள் நுழைந்து பத்துக்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியதில் 200 பேரளவில் மரணமடைந்துள்ளனர். இவர்களது தாக்குதலுக்கு இலக்கான ஐந்து நட்சத்திர ஹோட்டேல்களில் பலர் பணையக்கைதிகளாக அகப்பட்டனர். உயர்வர்க்கத்தினர் கூடும் இடங்களை மட்டுமே குறிவைத்தமை, மும்பையின் சர்வதேச வணிகத்தை குழப்புவதை நோக்காக கொண்டுள்ளது. தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து கடல்மார்க்கமாக வந்துள்ளனர். ஆகவே இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பொறுப்பு. அதற்கு பழி தீர்க்க பாகிஸ்தான் மீது படையெடுக்க வேண்டும். இதுவே இந்திய அரசும், ஊடகங்களும் தெரிவித்த, அந்த மூன்று நாட்களுக்குள் நடந்த சம்பவங்களின் சுருக்கம். ஆனால் கள நிலைமை நாம் நினைப்பது போல அவ்வளவு இலகுவானது அல்ல.

உடனுக்குடன் செய்தி அளிக்கக் கூடிய ஊடக வளர்ச்சி கண்ட இந்தக் காலத்தில், பல முன்னுக்குப் பின் முரணான செய்திகள் வருவது கூட தவிர்க்கவியலாது. தீவிரவாதிகள் பணயக்கைதிகளை வைத்திருந்த ஹோட்டேல்களை கைப்பற்றுவதில் பாதுகாப்புப் படையினர் காட்டிய குழப்பகரமான நடவடிக்கை போன்றே, செய்திகளை வழங்குவதிலும் ஒரே குழப்பம். ஊடகங்களை கேட்டால், தாம் அரச அதிகாரிகள் கொடுப்பதை அப்படியே திருப்பி சொல்கிறோம் என்கின்றனர். அரச மட்ட தகவல்கள் பல உத்தியோகபூர்வமாக விடுக்கப்படவில்லை. "ஒரு அனாமதேய அதிகாரி இப்படி கூறினார்..." என்ற அளவில் தான் பல செய்திகளின் அடிப்படை அமைந்துள்ளது. இந்திய அரசின் உத்தியோகபூர்வ அறிக்கையில் உள்ள குளறுபடி பற்றிய உதாரணம் ஒன்று: "உயிரோடு பிடிபட்ட ஒரேயொரு தீவிரவாதி, தாங்கள் பத்து பேர் வந்ததாக விசாரணையின் போது கூறியுள்ளான்." ஆனால் பிந்திக் கிடைத்த செய்திகளின் படி, தீவிரவாதிகள் வந்ததாக கருதப்படும் மீன்பிடி வள்ளத்தில், 15 குளிர் மேலங்கிகளும், 15 பாவனைப்பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆகவே மும்பை தாக்குதலை மொத்தம் 15 பேர் நடத்தியிருக்கலாம் என்றும், அரசாங்கம் சொல்வது போல ஒன்பது பேர் கொல்லப்பட்டு, ஒருவர் பிடிபட்டால், மிகுதி ஐந்து பேர் தப்பியோடி இருக்க வேண்டும்.
"A British expert on CNN stated that it was not likely that 10 men, could carry out attacks at 9 locations, within a period of 30 minutes.–November 30, 2008"

செய்திகளை வழங்குவதில் ஏற்படும் குழப்பம் காரணமாக, பாகிஸ்தான் மீதான குற்றச்சாட்டு பொதுவாக இந்தியாவில் மட்டும் தான் எடுபடுகின்றது. சர்வதேச நாடுகளை அதிகளவில் நம்பவைக்க முடியவில்லை. பாகிஸ்தான் அரசும், மக்களும் ஆரம்பத்தில் இருந்தே மும்பை பயங்கரவாத தாக்குதலுடன் தம்மை இனம் காணாது கண்டித்து வந்தனர். ஆனால் இந்திய அரசின் குற்றச் சாட்டுகள் நேரடியாக பாகிஸ்தான் அரசை நோக்கி வீசப்பட்ட போது, பிரச்சினை வேறு மட்டத்திற்கு தாவியது. கடந்த காலங்களில் இந்தியாவில் எந்த தாக்குதல் நடந்தாலும், அதற்கு பாகிஸ்தான் தான் காரணம் என்ற குற்றச் சாட்டு எழுவது வழமை. அதேபோல பாகிஸ்தானில் எந்த தாக்குதல் நடந்தாலும், இந்தியா மீது குற்றம் சாட்டப்படும். பொதுவாக நமது தமிழ் வெகுஜன ஊடகங்கள் இந்தியாவை மையமாக கொண்டு இயங்குவதால், சமநிலைப்படுத்தப் பட்ட செய்திகள் வருவதில்லை.

இந்திய-பாகிஸ்தான் பனிப்போருக்கு இரு நாட்டு ஊடகங்களும், கலைஞர்களும் தமது பங்கை வழங்கி வருகின்றனர். இந்திய திரைப்படங்களில் பாகிஸ்தானியர்கள் வில்லன்களாக காட்டப்படுவது போல, பாகிஸ்தானிய திரைப்படங்களில் இந்தியர்கள் வில்லன்களாக காட்டப்படுகின்றனர். இதனால் இரு நாட்டு மக்களும் எந்த அளவிற்கு தேசியவெறி ஊட்டப்பட்டுள்ளனர் என்பதை நான் இங்கே கூறத்தேவையில்லை. மும்பை தாக்குதல், கடந்த 5 ஆண்டு காலமாக இரு நாடுகளுக்கிடையே நிலவிய சுமுகமான உறவை பாதித்து, மீண்டும் எதிரிகளாக்கியுள்ளது. இங்கே தான் தாக்குதலை நடத்தியவர்களின் நோக்கம் குறித்த சந்தேகம் எழுகின்றது. அணுவாயுத வல்லரசுகளான, இந்தியாவையும், பாகிஸ்தானையும் போருக்குள் இழுத்து விட்டு, ஆதாயமடைய நினைத்தவர்களின் செயலா இது?

முதலில் யார் செய்திருக்கலாம்? என்ற கேள்விக்கு விடை கண்டுபிடித்தால், அவர்களது நோக்கத்தையும் புரிந்து கொள்ளலாம். மும்பை தாக்குதலை நடாத்தியவர்கள் "டெக்கான் முஜாகிதீன்" என்ற பெயரில் உரிமை கோரியுள்ளனர். வட இந்தியாவையும், தென் இந்தியாவையும் பிரிக்கும் மலைத்தொடர் தான் டெக்கான். மும்பையும் அந்தப் பிரதேசத்தினுள் அடங்குகின்றது. மேலும் இந்திய தொலைக்காட்சி சேவை ஒன்றை தொடர்பு கொண்ட தீவிரவாதி கூறிய கருத்துகள் இவை: " காஷ்மீரில் எத்தனை ஆயிரம் மக்கள் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டனர் என்று உங்களுக்கு தெரியுமா?" பேசியவர் காஷ்மீர் உச்சரிப்புடன் உருது பேசியதால், ஆயுதபாணிகளுக்கு பாகிஸ்தான் தொடர்பு இருந்ததாக கூறப்பட்டது. உருது பேசுவோர் அனைவரும் பாகிஸ்தானியர்கள் என்பது சிறுபிள்ளைத்தனமானது. அதே நேரம் கொல்லப்பட்ட இரண்டு தீவிரவாதிகளும், உயிரோடு பிடிக்கப்பட்ட இருவருமாக, மொத்தம் நான்கு பேர் (பாகிஸ்தானிய)பிரிட்டிஷ் பிரசைகள் என்று அறிவிக்கப்பட்டது. உடனே பிரிட்டிஷ் ஊடகங்கள் இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. பின்னர் இந்திய மற்றும் பிரிட்டிஷ் அரசுகள் அந்த தகவல் தவறானது என்று சொல்லி, அப்படியே அமுக்கி விட்டன.
"They did not look Indian, they looked foreign. One of them, I thought, had blonde hair. The other had a punkish hairstyle. They were neatly dressed,"(BBC, 27 Nov.)

ஒபரோய் ஹோட்டலில் புகுந்த ஆயுததாரிகள் பிரிட்டிஷ், அமெரிக்க கடவுச் சீட்டு உள்ளவர்களை தேடியதாக பி.பி.சி. நிருபர் திரும்ப திரும்ப கூறினார். அதனை வைத்தே இது அல் கைதாவின் வேலை என்று அடித்துச் சொன்னார்கள். அப்படியா? எமக்குத் தெரிந்து இது தான் முதல் தடவையாக, அல் கைதா தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தாமல், அமெரிக்க பாடசாலைகளில் நடப்பதைப் போல கண்ணை மூடிக் கொண்டு சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள். மேலும் ஒருவர் கைது செய்யப்படும் அளவிற்கு, தீவிரவாதிகள் தம்மை தாமே காட்டிக் கொடுத்திருக்கிறார்கள். இந்த செயல்முறை அல் கைதாவின் வழக்கமான பாணியான "எதிரியிடம் அகப்படாமல் தற்கொலை செய்யும்" கோட்பாட்டுக்கு மாறாக நடந்துள்ளது. மேலும் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் இந்தியர்கள்(இந்துக்கள், முஸ்லீம்கள்) என்பது குறிப்பிடத்தக்கது.

சில வருடங்களுக்கு முன்பு, அகில இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பான "சிமி", அரச எதிர்ப்பு பிரச்சாரத்தை காரணமாக காட்டி தடை செய்யப்பட்டது. அப்போது தலைமறைவான சிமி உறுப்பினர்கள், தீவிரவாத வன்முறையை நாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீவிரவாதத்தின் குழந்தைப் பருவத்தில் இருக்கும் சிமி, கடந்த காலத்தில் நடந்த சிறு சிறு குண்டுவெடிப்புகளை நடத்தி இருக்கும் என்றால் நம்பலாம். தற்போது மும்பையில் நடைபெற்ற தாக்குதல், நன்கு திட்டமிட்டு, சிறந்த தயாரிப்புடன், பெருமளவு பணச் செலவில், வேண்டிய அளவு ஆயுதங்களுடன் நடந்துள்ளது. அதனால் இதிலே வெளிநாட்டு சக்திகள் ஈடுபட்டிருக்கலாம் என பலரும் நம்புகின்றனர்.

இந்திய அரசைப் பொறுத்த வரை இது பாகிஸ்தானை தளமாக கொண்ட "லக்ஸர்-இ-தொய்பா" வின் வேலை. அதற்கு பாகிஸ்தானிய அரசு உடந்தை. வேறு கருத்திற்கு இடமில்லை. சரி, அப்படியே இருந்தாலும், இதிலே பாகிஸ்தான் அரசை சம்பந்தப்படுத்தக் கூடிய ஆதாரங்கள் குறைவு. லக்ஸர்-இ-தொய்பா ஒரு காஷ்மீர் சார்ந்த இயக்கம் என்ற போதிலும், ஏற்கனவே அது அங்கே தடை செய்யப்பட்டுள்ளது. சில பாகிஸ்தானிய ISI அதிகாரிகளின் ஆதரவுடன், அல் கைதாவும், தாலிபானும் அந்த இயக்கத்துடன் கூட்டு நடவடிக்கையில் இறங்க சாத்தியம் இருப்பதை மறுக்கவில்லை. லக்சர்-இ-தொய்பா ஏற்கனவே காஷ்மீர் விடுதலை என்ற கோட்பாட்டை கடந்து, சர்வதேச இஸ்லாமிய சகோதரத்துவத்துடன் ஐக்கியமானதை, அதன் அறிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.

அவ்வாறு ஒரு கூட்டு நடவடிக்கை இந்த மும்பை தாக்குதலை நடத்தி இருந்தால், அதாவது லக்சர்-இ-தொய்பா, தாலிபான், அல் கைதா ஆகியன சம்பந்தப்பட்டிருந்தால், இந்தியாவையும், பாகிஸ்தானையும் போர் முனைப்புக்குள் தள்ளிவிடும் நோக்கம் இருந்திருக்கும். அவர்களது நோக்கம் நிறைவேறும் காலம் கனிந்து வருகின்றது. இந்தியா ஏற்கனவே தேசிய வெறியை தூண்டி விட்டு, பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என மக்களை அணிதிரட்டி வருகின்றது. இதனால் இந்தியாவுடனான தனது எல்லையை பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகிய பாகிஸ்தான், அங்கே தனது படைகளை குவித்து வருகின்றது. நிலைமை இன்னும் மோசமாகி போர் தவிர்க்கவியலாது என்று வரும் வேளை, வட-மேற்கு மாகாணங்களில் தாலிபானை எதிர்த்து போராடும் படைகளை விலத்திக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்தி வரும், "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" இப்போது பாகிஸ்தானின் வட-மேற்கு மாகாணங்கள் வரை பரவியுள்ளது. பாகிஸ்தானின் இறைமை காரணமாக, அமெரிக்க தலையீட்டை தவிர்ப்பதற்காக ஒரு லட்சம் பாகிஸ்தான் இராணுவம் அந்த மாகாணங்களில் நிலை கொண்டுள்ளது. அல் கைதா, தாலிபான் இயக்கங்களுக்கு எதிராக கடுமையான போரை நடத்தி வரும் பாகிஸ்தான் இராணுவம், ஒரு வீரர் மிச்சமின்றி வாபஸ் வாங்கப்படும் என்று, பாகிஸ்தான் அரசு அமெரிக்காவிற்கு தெரிவித்துள்ளது. அத்தகைய நிலைமை அல் கைதாவிற்கும், தாலிபானுக்கும் ஒரே கொண்டாட்டமாக இருக்கும். ஆப்கானிஸ்தான் மீதான தாலிபான் தாக்குதல்கள் பன்மடங்கு அதிகரிக்கும் வாய்ப்புண்டு. ஆகவே இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையில் போர் மூளுவதை அமெரிக்கா தலையிட்டு தடுக்கப் பார்க்கும். போர் மூண்டால் அமெரிக்கா தனது பக்கம் நிற்க வேண்டுமென்று இந்தியாவும், பாகிஸ்தானும் எதிர்பார்க்கின்றன. இதற்கிடையே பாகிஸ்தான் சீனாவின் உதவியையும் கோரியுள்ளது.

மும்பை பயங்கரவாத தாக்குதலை யாரும் எதிர்பார்க்காத வேறொரு சக்தி நடத்தி இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. 200 பேரளவில் கொல்லப்பட்ட இந்த தாக்குதலில், ஒரு முக்கியமான நபரும் அடங்குகின்றார். மும்பை மத்திய ரயில் நிலையத்தில் நுழைந்த ஆயுதபாணி "கண்மூடித்தனமாக" சுட்டதில், சாதாரண பொது மக்கள் மட்டும் பலியாகவில்லை. மும்பை நகரின் "பயங்கரவாத தடுப்பு பிரிவின்" உயர் போலிஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரேயும், அவரது கூட்டாளிகளும் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களுக்கு அந்த அதிகாரியின் நடமாட்டம் பற்றி முன்கூட்டியே தெரிந்திருந்ததா? அல்லது ஒரு தற்செயல் நிகழ்ச்சியா? ஹேமந்த் கர்கரே இறப்பதற்கு முதல் நாள் தான், தொலைபேசி ஊடாக அவருக்கு கொலைப் பயமுறுத்தல் விடுக்கப்பட்டது. மேலும் சம்பவம் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், அவர் தனது நெருங்கிய நண்பர் இளைப்பாறிய கேணல் ராகுல் கோவர்த்தனை தொடர்பு கொண்டிருக்கிறார். முக்கிய தகவல்கள் அடங்கிய கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். "டைம்ஸ் ஒப் இந்தியா" நாளிதழ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.Close friend received secret letter from Hemant Karkare அந்த கடிதத்தில் என்ன எழுதியிருந்தது என்பதை கூற கோவர்த்தன் மறுத்து விட்டார். ஆகவே ஹேமந்த் கொலை ஒரு தற்செயல் நிகழ்ச்சியா?Karkare's wife declines 'Modi's compensation' offer


யார் இந்த ஹேமந்த்? அவரைக் கொல்வதால் யாருக்கு லாபம் அதிகம்? சில வருடங்களுக்கு முன்னர் மும்பை நகரிலிருந்து சிறு தொலைவில் உள்ள மலேகான் என்ற சிறு நகரில் ஒரு பள்ளிவாசலில் நடந்த குண்டுவெடிப்பில் சில முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். போலிசும், ஊடகங்களும் வழக்கம் போல இது இஸ்லாமிய பயங்கரவாதிகளின் வேலை என்று சொல்லி விட்டன. ஆனால் ஹேமந்த் கர்கரே தலைமையிலான பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர் துப்புத்துலக்கி உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்தனர். பி.ஜெ.பி.,பஜ்ரங்தள் போன்ற இந்து மதவாத அமைப்புகளுடன் சம்பந்தப்பட்ட ஒரு இளம் பெண் சாமியார், ஒரு பதவியில் இருக்கும் இராணுவ அதிகாரி உட்பட பல இந்து பயங்கரவாதிகளின் வேலை இது என்பது தெரிய வந்தது. "இந்து பயங்கரவாதிகள்" கைது செய்யப்பட்ட செய்தி, இந்தியா முழுவதும் அதிர்வலைகளை தோற்றுவித்தது. நேர்மையான அதிகாரியான ஹேமந்தின் விசாரணையில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என ஊகிக்கப்பட்டது. விசாரணையை முடக்கவும், கைதிகளை விடுவிக்கவும் பி.ஜெ.பி. எடுத்த முயற்சிகள் எதுவும் அதிக பலனளிக்கவில்லை.

The first police official who uncovered the soft coup in New Delhi by the Hindu right-wingers was Hemant Karkare, the anti-terrorism chief of the Mumbai police. Karkare was the first target when the attacks in Mumbai began, but it is certain that his knowledge of ties between Hindu terrorists and Indian RAW intelligence in carrying out “false flag” attacks later blamed on Muslims likely earned Karkare a death sentence from the Hindus and their RAW friends. One of the terrorists caught on CCTV at the Mumbai train station was seen wearing an orange wristband, which is commonly worn by Hindu fundamentalists.Mumbai attacks more complicated than corporate press reports

இதுவரை எந்த தாக்குதல்களும் ஏற்படுத்தாத விளைவுகளை மும்பை தாக்குதல் ஏற்படுத்தியுள்ளது. என்றுமில்லாதவாறு இந்திய மத்திய அரசின் உள்துறை அமைச்சர் உட்பட பல பெரிய தலைகள் இராஜினாமா செய்துள்ளன. மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. தாக்குதலுக்கு ஒரு வெளிநாட்டு சக்தியை(பாகிஸ்தான்) சுட்டிக் காட்டியதன் மூலம், பிரச்சினையின் மூலவேர்கள் உள்நாட்டில் இல்லை என்று சொல்ல வருகின்றது, அல்லது புறக்கணிக்கின்றது. அப்படியானால் பாகிஸ்தான் மீது போர் தொடுக்க ஆயத்தமாக இருக்கிறதா? அப்படி செய்யாவிட்டால் அல்லது இது போன்று இன்னொரு தாக்குதல் நடக்குமாக இருந்தால், காங்கிரஸ் ஆட்சி நிலைத்து நிற்க முடியாது. விரைவில் வரப்போகும் அடுத்த பொதுத் தேர்தலில் இந்து-தேசியவாத பி.ஜெ.பி. தேர்ந்தெடுக்கப்படலாம். அந்த அரசு பாகிஸ்தானுடன் மட்டுமல்ல சீனாவுடன் கூட போருக்கு செல்ல தயங்காது. எது எப்படி இருப்பினும் எதிர்கால இந்தியா வலது-தீவிரவாத அரசியலை முன்னெடுக்க தயங்காது. இதனை ஒரு அமைதியான சதிப்புரட்சி என்றும் கூறலாம்.


உசாத்துணை தொடுப்புகள்:
- Search for Mumbai gunman's roots only deepens mystery
- This is India's 9/11? Think again
- China official daily says don’t rule out Hindu radicals
- Video: MOSSAD Behind Mumbai Terror Attacks?
- Mumbai attack: Was Nariman House the terror hub?
- Mumbai Terror Attacks: The Mossad Angle
இந்திய பயங்கரவாதத்தின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தும் நூல்





There are some questions being raised about Qasab and his claims. The so-called security camera shot of Qasab, who is being billed by the media as the “lone surviving gunman,” at Chatrapathi Sivaji train terminal in Mumbai, appears fake. The angle is too narrow for a train station which would have a wider angle and be shot from higher up than the photo being shopped by the Indian police. However, according to Asian intelligence sources, Qasab may have been trained by Hindu militants and was rushed to the scene of the attack for a photo opportunity hastily arranged by the Hindu right-wing Bharatiya Janata Party (BJP) propaganda team. Mumbai attacks more complicated than corporate press reports


_______________________________________

Wednesday, December 03, 2008

ஜெர்மனியின் நகர்ப்புற கெரில்லாக்களின் கதை



எழுபதுகளில் மேற்கு-ஜெர்மனி அரசுடன் போரில் ஈடுபட்டிருந்த, “செம்படைப் பிரிவு”(Red Army Faction,ஜெர்மன் மொழியில் Rotte Armee Fraktion, அல்லது சுருக்கமாக RAF) என்ற மார்க்சிய புரட்சிவாத அமைப்பைப் பற்றிய திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அந்த இயக்க வரலாற்றை, ஒரேயடியாக பயங்கரவாதம் என்று நிராகரிக்காமல், சம்பத்தப்பட்ட தீவிரவாத இளைஞர்களின் பார்வையில் இருந்தே சொல்வது போல படக்கதை அமைந்துள்ளது. இதைவிட சில வருடங்களுக்கு முன்பு வந்த,புரூஸ் வில்லீஸ் நடித்த, “Die Hard” ஹோலிவூட் படம் RAF தீவிரவாதிகளை வில்லன்களாக, கிரிமினல்களாக சித்தரித்து எடுக்கப்பட்டிருந்தது. அது ஒரு கற்பனைக்கதை. ஆனால் தற்போது வந்திருக்கும் “Der Baader Meinhof Komplex” என்ற ஜெர்மன் மொழி திரைப்படம், உண்மையில் நடந்த சம்பவங்களை மட்டுமே திரைக்கதையாக அமைத்துள்ளது. அமைதியான ஜெர்மனியை மட்டுமே காணும் இன்றைய இளம்தலைமுறைக்கு, கடந்த காலம் இதற்கு முற்றிலும் மாறாக வன்முறைக் கலாச்சாரத்தை கொண்டிருந்ததை நம்பமுடியாது. ஜெர்மனியில் இடதுசாரி தீவிரவாதத்தின் எழுச்சியும், அதற்கு எதிர்வினையாக ஜெர்மன் அரசின் ஈவிரக்கமற்ற அடக்குமுறை காரணமாக அழித்தொழிக்கப்பட்ட வரலாற்றின் சுருக்கம் இது. ஜனநாயக ஜெர்மனியின் இருண்ட மறுபக்கம் பற்றிய அறிமுகமும் இதுதான்.

சர்வதேச மார்க்சிய புரட்சி இராணுவமான செம்படையின் பிரிவு என்ற அர்த்தத்தில், தமது அமைப்புக்கு “Rotte Armee Fraktion” (Red Army Faction) என்று பெயர் இட்டிருந்தாலும், பொதுமக்கள் அவர்களை “பாடர்-மைன்ஹொப் குழு” என்றே அழைத்தனர். குழுவுக்கு தலைமை வகித்த அன்ட்றெயாஸ் பாடர், மற்றும் இரண்டாவது தலைவராக கருதப்பட்ட, ஆனால் ஏற்கனவே பிரபலமான ஜெர்மன் ஊடகவியலாளர் உல்ரிகெ மைன்ஹொப் ஆகியோரின் பெயரால் அப்படி அழைக்கப்பட்டு வந்தது. அதுவே இந்தப் படத்தின் தலைப்பாக உள்ளது. ஏற்கனவே திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகளுக்கு தாயான உல்ரிகெ, குடும்பத்துடன் நிர்வாணிகள் கடற்கரையில் தமது விடுமுறையை கழிப்பதில் இருந்து படம் ஆரம்பமாகின்றது. முதல் காட்சியே, பயங்கரவாதிகள் எனப்படுவோர்,ஒரு காலத்தில் எவ்வாறு அமைதியான,சாதாரண வாழ்க்கை வாழ்ந்தனர், என்பதை இரசிகர்கள் மனதில் பதிய வைக்கின்றது.

அன்றைய ஈரானிய மன்னர் ஷாவும், பட்டத்து அரசியும் மேற்கு பெர்லினுக்கு இராஜாங்க விஜயத்தை மேற்கொள்வதே, படத்தில் வரும் முதலாவது அரசியல் நிகழ்வு. வியட்நாம் யுத்தம் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக ஏற்கனவே மார்க்சிய, மாவோயிச சிந்தனைகளால் கவரப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள், ஏகாதிபத்திய எடுபிடியான ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அப்போது ஷா ஆதரவாளர்களுடன் கைகலப்பு ஏற்படும் நேரம், வேடிக்கை பார்க்கும் ஜெர்மன் போலிஸ், இடதுசாரி மாணவர்களை மட்டும் துரத்தி, துரத்தி வேட்டையாடுகின்றது. (மேற்கு) ஜேர்மனி ஒரு ஜனநாயக நாடல்ல, மாறாக ஒரு “பொலிஸ் தேசம்” என்ற உண்மையை மாணவர்கள் அன்று அனுபவபூர்வமாக உணர்ந்து கொள்கின்றனர்.

1967 ம் ஆண்டு, பெர்லின் பல்கலைக்கழக மாணவர்கள் பெருமளவில் “ரூடி டூச்கே” என்ற பேச்சாற்றல் மிக்க மாணவர் தலைவன் பின்னால் அணிதிரண்டிருந்தனர். அப்போது டூச்கே தலைமையிலான மாணவர்கள் வன்முறைப் போராட்டத்தில் இறங்கியிருக்கவில்லை. ஆனால் பட்டப்பகலில் நடுத்தெருவில் டூச்கே வலதுசாரி தீவிரவாத இளைஞன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் தான், பாடர்-மைன்ஹொப் குழு உருவாகின்றது. திருட்டுக் கார் வைத்திருந்த குற்றத்தில் போக்குவரத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டு, சிறைத்தண்டனை அனுபவிக்கும், அன்ட்றெயாஸ் பாடரை விடுதலை செய்வதற்காக, அவரது காதலி என்சிலின் உல்ரிகேவின் உதவியை நாடுகின்றார். அவர்களது திட்டம் நிறைவேறியதும், அனைவரும் தலைமறைவாகி விடுகின்றனர்.

வக்கீல் நண்பர் ஒருவரின் உதவியுடன் இந்த தீவிரவாத ஜெர்மன் இளைஞர்கள் லிபியா சென்று இராணுவப் பயிற்சி எடுக்கின்றனர். ஆனால் நகர்ப்புற கெரில்லாப் போராட்டத்தை தேர்ந்தெடுத்த பாடர் தலைமையிலான குழுவினருக்கு இந்த போர்ப் பயிற்சிகள் அதிக பயனைக் கொடுக்கவில்லை. ஜெர்மனி திரும்பும் குழு, மூன்று வங்கிகளைக் கொள்ளையடித்து தமது ஆயுதபாணி இயக்கத்தை ஆரம்பிக்கின்றனர். ஊடகவியலாளர் உல்ரிகெ பத்திரிகைகளுக்கான அறிக்கைகளை தயாரிக்கும் பணியை அப்போதிருந்தே பொறுப்பேற்கிறார். “வங்கிக் கொள்ளை பொதுமக்களிற்கு எதிரானதல்ல. அது ஆளும்வர்க்கத்தின் சொத்துகளை அபகரிக்கும் புரட்சிகர செயல்” என்று தொடங்கும் நியாயப்படுத்தல், RAF போராட்ட வரலாறு முழுக்க எதிரொலிக்கின்றது.

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போரை அந்த மிருகத்தின் வயிற்றுக்குள்ளே நடத்துவதாக கருதிக் கொள்ளும் RAF, பிராங்க்பெர்ட்டில் இருக்கும் அமெரிக்க இராணுவத் தளத்திற்கு குண்டு வைக்கின்றது. தொடர்ந்து ஜேர்மனிய அரச நிறுவனங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கின்றன. பாடர்-மைன்ஹொப் குழுவினரை “பயங்கரவாதிகள்” என்று அறிவிக்கும் ஜெர்மன் அரசாங்கம், பாதுகாப்பு கெடுபிடிகளை அதிகரிக்கின்றது. அந்த இயக்க உறுப்பினர்களை நேரே கண்டால் சுட்டுக் கொல்லவும் பொலிசிற்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. அப்படியே சாதாரண வீதிச் சோதனையின் போது மாட்டிக் கொள்ளும் இரு RAF உறுப்பினர்களை, போலீசார் நிதானிக்காமல் சுட்டுக் கொல்கின்றனர்.

RAF இயக்க உறுப்பினர்கள் தாம் இப்போது ஜேர்மனிய அரசுடன் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதை உணர்கின்றனர். எதிரி கொலை பாதகச் செயலை செய்யவும் அஞ்சாத வேளை, தாமும் இரக்கம் பாராமல் திருப்பித் தாக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிறது. அரச எந்திரத்தை வழிநடத்தும் அதிகாரிகள், குண்டுவைத்தோ, அல்லது திடீர் தாக்குதலிலோ குறிவைக்கப்படுகின்றனர். RAF வழங்கிய கொள்கை விளக்கத்தில் மேற்கு ஜெர்மன் அரச அதிகாரிகளைப் பற்றியும் குறிப்பிடப்படுகின்றது. இரண்டாம் உலகப்போர் காலத்தில், ஹிட்லரின் நாசிக் கட்சியுடன் சேர்ந்து வேலை செய்த பலர் தற்போதும் ஜனநாயக மேற்கு ஜெர்மன் அரசில் உயர்பதவிகளில் இருப்பதை சுட்டிக்காட்டப்பட்டது. RAF தலைமுறையினர் “ஹிட்லரின் குழந்தைகள்” என்றும் அழைக்கப்பட்டனர். ஏனென்றால் அவர்களின் பெற்றோர் ஹிட்லரின் அரசில் கடமையில் இருந்த போதும், இந்த புதிய தலைமுறை நாசிசத்தை நிராகரித்து கம்யூனிச சார்பு சித்தாந்தங்களை பின்பற்றினர். கடந்த காலத்துடன் கணக்குத் தீர்க்க வேண்டிய கடமை தமக்கு இருப்பதாக கருதினர்.

பாடர்-மைன்ஹொப் குழுவினர் சில ஆண்டு காலமே(1970-1972) தலைமறைவாக இருந்து கொண்டு தாக்குதல்களை நடத்த முடிந்தது. பொலிஸ் வேட்டையில் அனைத்து உறுப்பினர்களும் சிக்கிக் கொள்ள, மிகுதிக் காலத்தை தனிமைச் சிறைகளில் கழிக்க வேண்டியிருந்தது. (தற்போது மனித உரிமைகளை மதிப்பதாக காட்டிக் கொள்ளும்) ஜெர்மன் பொலிஸ் அரசியல் கைதிகளை சித்திரவதை செய்தது. அவர்களை விசாரணை செய்த நீதிபதிகள், கைதிகளுக்கான பல அடிப்படை உரிமைகளைக் கூட மறுத்ததுடன், கிரிமினல்களுக்கு வழங்குவதை விட மோசமான தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார். இதனால் RAF கைதிகள் நீதிமன்றத்தை பாசிச நிறுவனமாக கருதி புறக்கணித்தனர். தமது உரிமைகளுக்காக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர். ஆனால் சிறைக் காவலர்கள் உணவை வற்புறுத்தி திணித்தனர். RAF கைதிகளுக்கு சிறைச் சாலையில் நடக்கும் கொடுமைகள் பற்றிய தகவல்கள் வெளி உலகத்தை அடைந்த போது, பல ஜெர்மன் இளைஞர்கள் சாவீக போராட்டத்தில் ஈடுபட்டனர். RAF கைதிகளை விடுதலை செய்யுமாறு கோஷம் வலுத்து. ஜெர்மன் அரசு இந்த போராட்டத்திற்கெல்லாம் அசைந்து கொடுக்காததால், அது இரண்டாவது தலைமுறை RAF உருவாக வழிவகுத்தது.

இரண்டாவது தலைமுறை RAF அமைப்பின் உறுப்பினர் தொகை, பணபலம், தாக்குதல் திறன் என்பன முதலாம் தலைமுறையை விட அதிகரித்து காணப்பட்டது. ஜேர்மனிய அரசை எதிர்த்து சவால் விட்ட, ஒரு சிறு குழுவினரான RAF வீர சாகசங்கள் பல இளைஞர்களை கவர்ந்ததில் வியப்பில்லை. ஆனால் இரண்டாம்தலைமுறை RAF இன் போராட்டம் சர்வதேச மயப்பட்டது. அவர்களுக்கு வேண்டிய நிதி மற்றும் ஆயுத உதவி வழங்க பல நாடுகள் முன்வந்தன. லிபியா, (கம்யூனிச) கிழக்கு ஜெர்மனி என்பன குறிப்பிடத்தக்க ஆதரவு சக்திகள். அதே நேரம் பாலஸ்தீன மார்க்சிய புரட்சி அமைப்பான PLFP, கூட்டு நடவடிக்கைக்கு முன்வந்தது. அதன்படி அப்போது ஜெர்மன் நகர் மியூனிச்சில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை பிணைக்கைதிகளாக வைத்திருந்த சம்பவத்தில், சிறையில் இருக்கும் RAF தலைவர்களை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அந்த நடவடிக்கை தோல்வியுற்ற சில நாட்களுக்கு பின்னர், RAF தலைவர்கள் சிறைக் கூண்டுகளுக்குள் பிணமாக காணப்பட்டனர். ஜெர்மன் அரசு அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றது, ஆனால் பிற RAF கைதிகள் அது அரசு நடத்திய படுகொலை என்றனர்.

வெளியே RAF ஆதரவாளர்களும் அது கொலை என்றே நம்பினர். அன்று ஜெர்மன் அரச கணிப்பின் படி, சனத்தொகையில் 30% , பெரும்பாலும் இளைஞர்கள் RAF கொள்கைகளுக்கு ஆதரவாக இருந்தனர். இரண்டாவது தலைமுறை RAF, தமது ஆதர்ச நாயகர்களான சிறையில் இருக்கும் RAF உறுப்பினர்களை விடுதலை செய்ய, பல்வேறு திட்டங்களை தீட்டியது. இந்த இரண்டாம் தலைமுறையை சேர்ந்த இளைஞர்கள் பலர், தமது ஆதர்ச நாயகர்களை பார்த்தே இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விதிவிலக்காக அதுவரை அகப்படாதிருந்த, அல்லது விடுதலையான முன்னாள் RAF உறுப்பினர்களும் இருந்தனர்.

ஜெர்மன் அரசு சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை விடுவிக்க வைக்கும் பொருட்டு, சில ஆயுதபாணிகள் சுவீடனில் இருந்த ஜெர்மன் தூதுவராலாயத்தை கைப்பற்றி ஊழியர்களை பிணைக்கைதிகளாக வைத்திருந்தனர். ஆனால் சுவீடன் அதிரடிப்படை தூதுவராலயத்தை முற்றுகையிட்டு தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து விட்டதால் அந்த நடவடிக்கையும் தோல்வியில் முடிந்தது. சிறிது காலத்தின் பின் ஜெர்மனி “லூப்தான்சா” விமானம் ஒன்று கடத்தப்பட்டது. இந்த விமானக் கடத்தலில் PLFP சம்பந்தப்பட்டிருந்தது. ஆனால் சோமாலியாவில் தரையிறங்க நிர்ப்பந்திக்கப்பட்ட விமானத்தை, ஜெர்மன் கொமாண்டோ படையினர் கைப்பற்றி பயணிகளை விடுவித்து விட்டனர். இந்த சம்பவம் நடந்து சில நாட்களின் பின்னர், எஞ்சியிருந்த RAF கைதிகளும் சிறையில் வைத்து கொல்லப்பட்டனர்.

1977 ம் ஆண்டு RAF, ஜெர்மன் அரச நிறுவனம் மீது பல வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியது. டிரெஸ்னெர் வங்கி தலைமை அதிகாரி கொல்லப்பட்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்ட ஆயுததாரிகளில் ஒருவர் அவரது பெறாமகள் என்ற செய்தி, நாடு முழுவதும் அதிர்வலைகளை தோற்றுவித்தது. தொடர்ந்து RAF கைதிகளுக்கு தண்டனை வழங்கிய தலைமை நீதிபதி நடுத்தெருவில், அவரது வாகனத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். திரைப்படத்தின் இறுதிக் காட்சியாக வரும் ஜெர்மன் முக்கியபுள்ளியான ஷேய்லரின் துணிகர கடத்தல் நாடகம், அரசாங்க மட்டத்தில் நடுக்கத்தை ஏற்படுத்தினாலும், அரசு கடைசிவரை விட்டுக் கொடுக்கவில்லை. “அனைத்து ஜெர்மனி முதலாளிகளின் சங்க” தலைவரான ஷேய்ளர், முன்பு ஹிட்லரின் நாசிக் கட்சியில் முக்கிய பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜெர்மன் அரசு, தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை கிடையாது என்று பிடிவாதமாக இருந்து விட்டதால், கொலை செய்யப்பட்ட ஷேய்லரின் பிணம் பிரெஞ்சு எல்லையில் கண்டெடுக்கப்பட்டது.

1998 ம் ஆண்டு ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தொலைநகல் ஒன்று வந்தது. “சிவப்பு நட்சத்திரத்தின் மீது AK47 துப்பாக்கி சின்னம்”, அது RAF உத்தியோகபூர்வ அறிக்கை என்று பறைசாற்றியது. 28 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு தமது இயக்கத்தை கலைத்து விட்டதாக அந்த அறிக்கை தெரிவித்தது. இந்த 28 ஆண்டு கால போராட்டத்தில் இரண்டு பக்கத்திலும் 50 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். கிழக்கு-மேற்கு ஜெர்மனிகளின் இணைப்பின் பின்னர், கிழக்கு ஜெர்மனியில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த சில RAF உறுப்பினர்கள் பிடிபட்டனர். ஆயினும் ஒரு சிலர் இன்று வரை பிடிபாமல் தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர். தற்போது RAF போன்ற அமைப்பு இயங்குவதற்கு ஏதுவான ஆதரவு தளம் இல்லை என்பதாலும், சர்வதேச அரசியல் வெகுவாக மாறிவிட்டதாலும், ஜெர்மன் அரசு RAF இயக்கத்தை பின்தொடர்வதை நிறுத்தி விட்டது.

ஜெர்மன் அரசு, RAF எதிர்ப்பு நடவடிக்கையில் இருந்து நிறைய கற்றுக் கொண்டு விட்டது. “பொலிஸ் தேசம்” மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, அனைத்து வங்கி ஊழியர்களும் தற்போது கண்ணாடி தடுப்புச் சுவருக்கு பின்னால் தான் பணி புரிகின்றனர். காசாளரிடம் இருக்கும் பெருமளவு பணம் கூட உடனுக்குடன் இரகசிய இடத்திற்கு அனுப்பபடுகின்றது. இதனால் பழைய பாணி வங்கிக் கொள்ளை எல்லாம் இனி படங்களில் தான் பார்க்கலாம். அன்று RAF உறுப்பினர்கள் தலைமறைவாயிருந்த காலத்தில், எல்லாவற்றுக்கும் காசுத்தாள்களை பயன்படுத்தியதால், புலனாய்வு செய்வது கடினமாக இருந்தது. ஆனால் இப்போது அட்டைப்பணம் புழக்கத்தில் இருக்கும் காலம் இது. மேலும் வீட்டு உரிமையாளர்கள் தண்ணீர், எரிவாயு, மின்சார கொடுப்பனவுகளை வங்கி மூலம் செலுத்துமாறு பணிக்கப் படுகின்றனர். நாட்டு மக்கள் எந்த அளவிற்கு அரச கண்காணிப்பின் கீழே வருகின்றனரோ, அந்த அளவிற்கு RAF போன்ற தலைமறைவு ஆயுதபாணி இயக்கத்தின் இருத்தல் மட்டுப்படுத்தப்படுகின்றது.

ஜேர்மனியின் இன்றைய எதிரி இடதுசாரி தீவிரவாதம் அல்ல, அந்த இடத்தை தற்போது இஸ்லாமிய அடிப்படைவாதம் பிடித்து விட்டது. ஆமாம், காலம் மாறிவிட்டது, எதிரிகளும் மாறிவிட்டார்கள். ஆனால் அரச எதிரிகளை உருவாக்கும் கள நிலைமை மட்டும், இப்போதும் அன்று போல தான் உள்ளது. அன்று வியட்நாம் மீது அமெரிக்கா தொடுத்த யுத்தத்தின் கொடூரங்கள் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகிய போது, அது ஜேர்மனிய இளைஞர்களை ஆத்திரப்படுத்தியது. ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்கள், ஜெர்மன் அரசின் அமெரிக்க சார்புத் தன்மை என்பன, ஒரு சிலரை தீவிரவாதத்தை நோக்கி தள்ளியது. சரித்திரம் மீண்டும் திரும்புகின்றது. இன்று ஆப்கானிஸ்தான், ஈராக் மீதான அமெரிக்காவின் யுத்தம், மேற்குலகில் வாழும் முஸ்லீம் இளைஞர்களை ஆத்திரப்படுத்தி, சிலரை தீவிரவாதிகளாக்குகிறது. இரண்டு வகை தீவிரவாதங்களையும் உருவாக்கிய மூலம் ஒன்று தான். ஆயினும் அன்று முழு ஜேர்மனிய சமூகமும் வலது-இடது என்று இரண்டாக பிரிந்து நின்றது. இன்று “ஜேர்மனிய பூர்வகுடிகள்”, “இஸ்லாமிய அந்நியர்கள்” என்ற இனரீதியான பிரிவினை காணப்படுகின்றது.


THE RED ARMY FACTION




The Baader Meinhof Complex (movie trailer)



LINKS
Red Army Faction (Wikipedia)
Baader-Meinhof.com
_____________________________________
Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy