Showing posts with label சுற்றுலாப் பயணிகள். Show all posts
Showing posts with label சுற்றுலாப் பயணிகள். Show all posts

Monday, June 01, 2020

வட கொரிய உழைக்கும் மக்களுக்கான அழகான சோஷலிச கட்டுமானங்கள்

  சோஷலிச மாதிரிக் கிராமம்


வட கொரியாவின் நவீன சோஷலிச மாதிரிக் கிராமம் போமன் ரீ. அதன் சிறப்பம்சங்கள்: 
1. உழைக்கும் மக்களுக்காக அரச செலவில் இலவசமாக கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள். 
2. உழைத்துக் களைத்த உடல் புத்துணர்ச்சி பெறவும், பொழுதுபோக்கவும் கட்டப்பட்ட நீச்சல் தடாகம். அனுமதி இலவசம். 
3. குடியிருப்புகளுக்கு அருகாமையில் ஒரு மருத்துவமனை. மருத்துவ வசதிகள் அனைத்தும் இலவசம். 
4. தொழிலாளர்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடம். கணணி வசதி கொண்ட நவீன வகுப்பறைகள். கல்வி முற்றிலும் இலவசம். 

 Poman-ri எனும் இந்த மாதிரிக் கிராமம் Sohung மாவட்டத்தில் உள்ளது. அது தென் கொரிய எல்லையோரம் உள்ள வட Hwanghae மாகாணத்தில் உள்ளது. கடந்த வருடம் திறந்து வைக்கப் பட்ட நவீன சோஷலிச மாதிரிக் கிராமம் பற்றிய மேலதிக தகவல்களை நீங்களாகவே இணையத்தில் தேடிப் பெற்றுக் கொள்ளலாம். 

சிறுவர் மாளிகை


இது வட கொரிய பள்ளிப் பிள்ளைகளுக்காக கட்டப் பட்ட "சிறுவர் மாளிகை". வட கொரிய சிறுவர்கள் பல்வேறு வகையான விளையாட்டுகளில் ஈடுபடவும், இசைக் கருவிகளை பழகவும், புதிய மொழிகளை கற்பதற்கும் வசதிகள் செய்து கொடுக்கப் பட்டுள்ளன. அதற்காக மாணவர்களிடம் எந்தக் கட்டணமும் வசூலிக்கப் படுவதில்லை. முற்றிலும் இலவசம். இந்த சிறுவர் மாளிகையை நடத்தும் நிர்வாகத்தில் உள்ளவர்களும் சிறுவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

வட கொரியா முழுவதும் ஒவ்வொரு மாகாணத்திலும் இது மாதிரி அறுபது சிறுவர் மாளிகைகள் உள்ளன. தலைநகர் பியாங்கியாங்கின் புறநகர் பகுதியான Mangyongdae இல் கட்டப்பட்டுள்ள இந்த மாளிகை எல்லாவற்றிலும் பெரியது. 1989 ம் ஆண்டு பியாங்கியாங் நகரில் நடந்த சர்வதேச மாணவர் இளைஞர் மகாநாட்டை ஒட்டி இந்த பிரமாண்டமான சிறுவர் மாளிகை திறந்து வைக்கப் பட்டது.

Mangyongdae சிறுவர் மாளிகையில் பள்ளிப் பிள்ளைகள் தங்குவதற்கான 120 அறைகள் உள்ளன. ஒரு நீச்சல் தடாகமும், திரையரங்கும் உள்ளன. அத்துடன் விஞ்ஞான பரிசோதனை சாலைகள், நட்சத்திரங்களை காணும் தொலைநோக்கிகள், நவீன தொழில்நுட்ப அறிவியல் போன்ற பல துறைகளிலும் சிறுவர்கள் செயல்முறைப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

வட கொரியாவுக்கு சுற்றுலா செல்லும் வெளிநாட்டுப் பயணிகள் கூட இந்த சிறுவர் மாளிகைக்கு நேரில் சென்று பார்க்கலாம். ஒரு சில மேற்கத்திய சுற்றுலா பயணிகள் இங்கு நடக்கும் சிறுவர்களின் நடன நிகழ்வை மட்டும் படமாக்கி விட்டு, அதை பிரச்சார நோக்கில் தவறாக பயன்படுத்துகிறார்கள். "இதோ பாருங்கள், வட கொரிய சர்வாதிகார மன்னராட்சி சிறுவர்களை கொடுமைப் படுத்துகிறது!" என்று திரித்து பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்கள் ஒருநாளும் அங்கிருக்கும் சிறுவர் மாளிகை பற்றிய தகவலை உங்களுக்கு சொல்லப் போவதில்லை.


தொழிலாளர்களுக்கான சுற்றுலா மையம்

Yangdok Hot Spring Resort in DPRK

இந்த ஆடம்பர சுற்றுலா விடுதி இருப்பது சுவிட்சர்லாந்தில் அல்ல, வட கொரியாவில்! மலைப் பகுதியான Yangdok எனும் இடத்தில் இந்த வெந்நீர் நீச்சல் தடாகங்களும், ஸ்கீ சறுக்கும் விளையாட்டு மைதானமும் அமைக்கப் பட்டுள்ளன. இவை சாதாரணமான தொழிலாளர்கள் தமது ஒய்வு நாட்களை உல்லாசமாக பொழுதுபோக்குவதற்காக கட்டப் பட்டுள்ளன.

ஒவ்வொரு வருடமும் சாதாரணமான வட கொரிய ஆலைத் தொழிலாளர்கள், தமது குளிர்கால விடுமுறைக் காலத்தில் இங்கே வந்து குடும்பத்தோடு தங்குகிறார்கள். மலையில் பனியில் ஸ்கீ சறுக்கி விளையாடி விட்டு வந்து, வெந்நீர் தடாகத்தில் குளித்து இன்பமாக பொழுதைக் கழிக்கிறார்கள். அவர்களது தங்குமிட செலவுகளில் பெரும்பகுதியை வேலை செய்யும் தொழிற்சாலையின் நிர்வாகம் பொறுப்பெடுக்கிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் கட்டிமுடிக்கப் பட்ட இந்த சுற்றுலா விடுதிகள் அதிபர் கிம் யொங் உண்ணால் திறந்து வைக்கப் பட்டது. அப்போது இதனை "உயர்ந்த சோஷலிச நாகரிகம்" என்று வட கொரிய ஊடகங்கள் புகழாரம் சூட்டின. வட கொரியா செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இங்கு சென்று தங்கலாம். Yangdok Hot Spring Resort என்று இணையத்தில் தேடிப் பார்க்கவும்.

Wednesday, August 01, 2018

பாசிக் குடா : காசுள்ளவர்களுக்கு மட்டுமே சொர்க்கம் கிட்டும்



நாங்கள் ஈழம் பற்றிய கனவில் மிதக்கும் நேரத்தில், முதலாளித்துவ பூதம் நமது நிலங்களை அபகரித்து விலை பேசி விற்றுக் கொண்டிருக்கிறது. சர்வதேச மூலதனத்தின் மேலாதிக்கம் காரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் அழகான கடற்கரைப் பிரதேசமான பாசிக்குடா வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியாக மாறியுள்ளது. அங்கு நான் நேரில் சென்று திரட்டிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 


ஈழப்போரின் இறுதியில், சிங்கள இராணுவத்தால் ஆக்கிரமிக்கப் பட்ட, புலிகளின் வாகரை கட்டுப்பாட்டுப் பகுதியின் அருகில் உள்ளது "பாசிக் குடா". குறிப்பாக, வாழைச்சேனை நகருக்கு அண்மையில் அமைந்துள்ளது. இது இன்று இலங்கையின் பிரபலமான சுற்றுலா மையம். சர்வதேச தரத்திற்கு நிகரான ஐந்து நட்சத்திரக் ஹோட்டேல்கள் கட்டப் பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கும் பயணிகள், அங்கிருந்து கடல் விமானம் பிடித்து நேரடியாக பாசிக்குடா கடற்கரையில் வந்திறங்கும் வசதி செய்து கொடுக்கப் பட்டுள்ளது.

தூய்மையான நீல நிறக் கடற்கரை கொண்ட பாசிக் குடா ரிசோர்ட்டில் விடுமுறையை கழிக்க வருமாறு, மேற்கத்திய நாட்டு சுற்றுலாப் பயணிகளை கூவிக் கூவி அழைக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளின் சுற்றுலா நிறுவனங்களும், பாசிக்குடாவை வாடிக்கையாளர்களுக்கு பரிந்துரைக்கின்றன. அதை விட, இலங்கையில் உள்ள பணக்காரர்கள், அரசியல் தலைவர்களின் குடும்பங்களும் அங்கு சென்று விடுமுறையை கழிக்கின்றனர்.

அந்தப் பகுதியில், ஒரு காலத்தில் கடுமையான போர் நடைபெற்றது என்பது, பாசிக்குடாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தெரியாது. தமது விடுமுறையை ஆனந்தமாக கழிக்கும் உல்லாசப் பயணிகளுக்கு, அது பிணம் தின்ற பூமி என்பது தெரியாது. அப்படியே தெரிந்தாலும், "நல்ல வேளை, போர் முடிந்தது" என்று நிம்மதியாக விடுமுறையை கழிப்பார்கள்.

அது மட்டுமல்ல, இன்று ஆடம்பர நட்சத்திர விடுதிகள் கட்டப்பட்ட இடம், தமிழ்/முஸ்லிம் மக்களிடம் இருந்து பலாத்காரமாக பறித்தெடுக்கப் பட்டது என்பதும் பெரும்பாலானோருக்கு தெரியாது. மெக்சிகோ, எகிப்து என்று பெருமளவு சுற்றுலாப்பயணிகள் செல்லும் நாடுகளில் எல்லாம் நில அபகரிப்புகள் நடந்துள்ளன. இலங்கையும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

வெளிநாட்டுப் பயணிகள் மட்டுமல்ல, இன்று பல தமிழர்களுக்கே இந்த விபரங்கள் தெரியாது. தமிழ் தேசியவாதிகள் கூட, யாழ்ப்பாணத்தில் நடக்கும் நில அபகரிப்பில் கவனம் செலுத்துமளவிற்கு, கிழக்கு மாகாண நில அபகரிப்புகள் பற்றி அக்கறை இன்றி இருக்கின்றனர். ஏனென்றால், அது தான் வர்க்க உணர்வு. பாசிக்குடாவில் தமது பாரம்பரிய காணிகளை பறிகொடுத்தவர்கள், இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைத் தமிழர்கள். அவர்களின் உரிமைகளுக்காக வாதாடுவதற்கு, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் யாரும் இல்லை. 

பாசிக்குடாவை சுற்றுலா ஸ்தலமாக்கும் திட்டம், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தொடங்கப் பட்டது. சிலநேரம், இயற்கைப் பேரழிவுகளும் முதலாளிகளுக்கு சாதகமாக அமைந்து விடுகின்றன. 2004 ம் ஆண்டு, இலங்கையின் கிழக்குக் கரையோரப் பகுதி சுனாமி பேரலைகளால் கடுமையாகப் பாதிக்கப் பட்டது. அதில் பாசிக்குடாவும் ஒன்று. சுனாமியில் உயிர்தப்பியவர்கள் மீண்டும் வந்து குடிசைகள் கட்டி வாழ்க்கையை ஆரம்பித்தனர். ஆனால், அரசாங்கம் வேறு திட்டம் வைத்திருந்தது.

பாசிக்குடாவில் வாழ்ந்தவர்கள் பெரும்பாலும் ஏழை மீனவக் குடும்பங்கள். காலங் காலமாக மீன்பிடியை தவிர வேறெந்த தொழிலும் தெரிந்திராதவர்கள். அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு வற்புறுத்திய அரசாங்கம், அவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்பகுதியில் நிலம் ஒதுக்கிக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தது. தேர்ச்சி பெற்ற தொழிலான மீன்பிடியை விட்டு, அனுபவம் இல்லாத தொழிலான விவசாயம் செய்து பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக, ஆரம்பத்தில் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், அரசு அதனை கவனத்தில் எடுக்காமல் மக்களை வெளியேற்றி விட்டது. 

சில குடும்பங்கள், காணி உறுதிப் பத்திரம் வைத்திருந்தன. அவர்களிடம் இருந்து நிலங்களை அடி மாட்டு விலைக்கு வாங்கிக் கொண்டார்கள். உண்மையில், அங்கு ஆடம்பர ஹோட்டேல்கள் வரப் போகின்றன என்ற விடயம் அந்த மக்களுக்கு தெரியாது. தெரிந்திருந்தால் விலையை கூட்டிக் கேட்டிருக்கலாம். தமது காணியை சில இலட்சம் ரூபாய்களுக்கு விற்ற ஒரு தம்பதியினர், கையில் இருந்த காசு முடிந்ததும் ஹோட்டேல் பணியாளர்களாக வேலை செய்யும் அவலமும் நடந்துள்ளது.

ஆடம்பர ஹோட்டேல்கள் கட்டி முடிந்து, வெளிநாட்டு உல்லாசப் பயணிகளும் வரத் தொடங்கிய பின்னர், உள்ளூர் மக்கள் பாசிக்குடா செல்வதற்கு பல விதமான தடைகள் விதிக்கப் பட்டன. ஒவ்வொரு ஹோட்டேலும் தனக்கென தனியான கடற்கரை வைத்துக் கொண்டது. சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் நீராடுவதற்காக தனிதனி கடற்கரைகள் ஒதுக்கப் பட்டன.  உள்ளூர் மக்கள் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நீராடும் கடற்கரைக்கு செல்ல முடியாது. 

உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட கடற்கரை

தென் ஆப்பிரிக்காவில் நிலவிய அப்பார்ட்ஹைட் இன இனப்பாகுபாடு காலத்தில் இருந்தது போன்று, பாசிக்குடா கடற்கரை கயிறு கட்டி பிரிக்கப் பட்டது. இது ஒரு வர்க்க அடிப்படையிலான பிரிவினை. ஏனெனில், வெளிநாட்டவர் மட்டுமல்லாது, பணக்கார இலங்கையர்களும் அங்குள்ள நட்சத்திர விடுதிகளில் தங்குகிறார்கள்.

பிற்காலத்தில் உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த படியால், அந்தக் கயிறு பிரிக்கும் எல்லைக் கோடுகள் அகற்றப் பட்டன. நான் அங்கு சென்றிருந்த நேரம் (ஜூலை 2018), கயிறு எதையும் காணவில்லை. ஹோட்டல்களுக்கு "சொந்தமான" கடற்கரையிலும், காலாற நடந்து சென்று வர முடிந்தது. எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் பாசிக்குடா சுற்றுலாத்துறை இன்னமும் ஆரம்பக் கட்டத்தில் தான் உள்ளது. 

பாசிக்குடா ரிசோட்டின் சிறப்பம்சம், மாலைத்தீவில் உள்ளது போல பாரம்பரிய பாணியில் கட்டப் பட்ட நட்சத்திர ஹோட்டல்கள். அதாவது, இயற்கையோடு இணைந்த ஓலைக் குடிசைகள் மாதிரி அனைத்து வசதிகளும் கொண்ட ஆடம்பர அறைகள். குறிப்பாக ஐரோப்பிய உல்லாசப் பயணிகளை கவரும் வண்ணம் கட்டப் பட்டுள்ளன. இவற்றைக் கட்டுவதற்கு இலங்கையில் உள்ள ஒப்பந்தக் காரர்கள் அதிக காலம் எடுத்ததாகவும், அதனால் சீன நிறுவனம் ஒன்றிடம் பொறுப்புக் கொடுத்து, குறுகிய காலத்தில் கட்டி முடிக்கப் பட்டதாகவும் சொல்லப் படுகின்றது.


தரகு முதலாளித்துவம் என்றால் என்னவென்று கேட்பவர்களுக்கு பாசிக்குடாவை உதாரணம் காட்டலாம். இலங்கையில் எவ்வாறு அரசாங்கமும், முதலாளித்துவமும் கையோடு கைகோர்த்து நடக்கின்றன என்பதை அங்கு சென்றால் நேரில் காணலாம். அரசியலில் எதிரெதிர் துருவங்களாக காட்டிக்கொள்ளும் மகிந்த ராஜபக்சவும், ரணில் விக்கிரமசிங்கவும், சொந்தமாக ஆளுக்கொரு ஹோட்டேல்  வைத்திருக்கிறார்கள். விடுமுறைக்கு பாசிக்குடா கடற்கரைக்கு வந்து ஓய்வெடுக்கிறார்கள். ராஜபக்சே குடும்பத்தில் அண்ணன், தம்பி, மாமன், மச்சான் எல்லோரும் ஹோட்டேல் முதலாளிகள் தான். அதைவிட சில அமைச்சர்களும் அங்கு முதலிட்டுள்ளனர். சுருங்கக் கூறின், அரசியல் தலைவர்கள் சேர்த்த ஊழல் பணத்தை சுற்றுலாத்துறையில் முதலிட்டு பெரும் முதலாளிகளாகி விட்டார்கள். பாசிக்குடா சுற்றுலா வணிகம் சூடு பிடிக்கும் காலத்தில், ஏதாவதொரு பன்னாட்டு நிறுவனத்துடன் கூட்டுச் சேர்வார்கள், அல்லது நல்ல விலைக்கு விற்று விடுவார்கள்.

முதலாளிகளுக்கு சாதகமான திட்டங்கள் தீட்டுவதில், மகிந்த அரசுக்கும்,மைத்திரி அரசுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. மகிந்த ஆட்சிக்காலத்தில், தெற்குக் கடற்கரையோரம், அம்பாந்தோட்டைக்கு அருகில் மத்தள விமான நிலையம் கட்டப் பட்டது. சீன நிதியில் கட்டப்பட்டு, "உலகில் வெறுமையான விமான நிலையம்" என்று எள்ளி நகையாடப் பட்டது. தற்போது மைத்திரி அரசு அதை இந்தியாவிடம் குத்தகைக்கு விட்டுள்ளது.

அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால், மத்தள விமான நிலையம் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது. குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வந்து தங்கும் கடற்கரை ரிசோட்கள், காலியில் இருந்து அம்பாந்தோட்டை வரையிலான கடற்கரை பிரதேசத்தில் உள்ளன. அதே மாதிரி, மட்டக்களப்பு, அம்பாறை கடற்கரைப் பிரதேசத்தையும் சுற்றுலாத்துறையின் கீழ் கொண்டு வரலாம். தற்போதைய நிலையில், கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அங்கு செல்வதற்கு நீண்ட நேரம் எடுக்கும். எதிர்காலத்தில் மத்தள விமான நிலையத்தில் வந்திறங்கும் சுற்றுலாப்பயணிகள் இரண்டு திசைகளிலும் பயணம் செய்து தங்குமிடங்களை அடையலாம்.

Thursday, October 01, 2015

தொழிலாளர்களுக்கான ஆடம்பர சுற்றுலா, கம்யூனிச நாடுகளின் உயர்தர வாழ்க்கை


பிரமாண்டமான உல்லாசப் பிரயாணக் கப்பலில் வெளிநாடுகளுக்கு சுற்றுலாப் பயணம். மலைப் பகுதிகளில் இளைப்பாறுவதற்கு ஆடம்பரமான தங்குவிடுதிகள். சாதாரண அடித்தட்டு தொழிலாளர்கள் கூட விடுமுறையில் பொழுதுபோக்குவதற்கு ஏற்படுத்தப் பட்ட உயர்தரமான வசதிகள். இந்த சுகபோக வாழ்க்கையை எண்ணி, நம் நாட்டு தொழிலாளர்கள் கனவு மட்டுமே காண முடியும். ஆனால், கிழக்கு ஐரோப்பாவிலிருந்த முன்னாள் சோஷலிச நாடுகளில் அது நடைமுறையில் இருந்தது. மிக மிக குறைந்த செலவில், அனைத்து பிரஜைகளும் சுற்றுலா செல்வதற்கான வசதிகளை, கம்யூனிச அரசுக்கள் மக்களுக்கு செய்து கொடுத்திருந்தன.

தமிழ் பேசும் மத்தியதர வர்க்கத்தினர் பலர், எந்தக் காரணமும் இல்லாமல் கம்யூனிசத்தை, அல்லது இடதுசாரியத்தை எதிர்க்கவில்லை. அவர்கள் ஜனநாயகவாதிகளோ அல்லது மனிதநேயவாதிகளோ அல்ல. அவர்களது அச்சம் எல்லாம், தமது சொந்த தமிழ் இனத்தை சேர்ந்த அடித்தட்டு தொழிலாளர்கள், தமது "அந்தஸ்தை" எட்டிப் பிடித்து விடுவார்கள் என்பது பற்றியது தான். 

மேட்டுக்குடி மக்கள், வாழ்க்கையில் தாம் அனுபவிக்கும் சுகபோகத்தில், நூறில் ஒரு பங்கை கூட, அடித்தட்டு வர்க்க மக்கள் அனுபவிப்பதை விரும்பவில்லை. இன்றைக்கும், அவர்களைப் பொருத்தவரையில், வர்க்க சமத்துவம் ஒரு கெட்ட கனவாகவே உள்ளது. இலங்கையிலும், இந்தியாவிலும், வசதியான மத்தியதர வர்க்கத்தினர் மட்டுமே சுற்றுலா செல்கிறார்கள். விடுமுறைக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக் கிட்டியவர்கள் கூட, உல்லாசக் கப்பலில் செல்வது மிகக் குறைவு. 

இப்படி ஒரு நிகழ்வை கற்பனை பண்ணிப் பார்ப்போம். தமிழ் நாட்டில், தொழிற்சாலை ஒன்றில் கடின வேலை செய்யும் தொழிலாளி, ஒரு மாத விடுமுறையில், குடும்பத்தோடு கோவா சென்று, கடற்கரையில் உல்லாசமாக பொழுது போக்குகிறார். யாழ்ப்பாணத்தில் புகையிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் கூலித் தொழிலாளி, ஒரு வார விடுமுறையில், குடும்பத்துடன் உல்லாசக் கப்பலில் பயணம் செய்து, தாய்லாந்து, சிங்கப்பூர் என்று நாடு பார்த்து விட்டு ஊர் திரும்புகிறார்.

"பகல் கனவு காணாதீர்கள். இன்னும் நூறு வருடங்கள் சென்றாலும், எமது  நாட்டில் இப்படி எல்லாம் நடக்காது." என்று பலர் நினைக்கலாம். ஒருவேளை, இந்தியாவும், இலங்கையும், கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஆளப்படும் சோஷலிச நாடுகளாக இருந்திருந்தால்? அது என்றோ ஒரு நாள் நடைமுறைச் சாத்தியமாகி இருக்கும் என்று நம்பிக்கையோடு எதிர்பார்க்கலாம். ஏனென்றால், வளர்ச்சி அடைந்த சோஷலிச நாடுகளில், "தொழிலாளர்களுக்கான உல்லாசப் பிரயாணம்" நடைமுறையில் இருந்துள்ளது.

தொழிலாளர்கள் குடும்பத்துடன் விடுமுறையை களிப்பதற்கான ஆடம்பர ஹோட்டல் 

சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பாவில் இருந்த சோஷலிச நாடுகளிலும், அனைத்துப் பிரஜைகளும் விடுமுறைக்கு உல்லாசமாக பொழுதுபோக்கும் வசதிகள் செய்து கொடுக்கப் பட்டன. சோவியத் யூனியன், உலகிலேயே மிகப் பெரிய நாடாக இருந்தது. பல்வேறு மொழிகளைப் பேசும், பல்வேறு பட்ட கலாச்சாரங்களை பின்பற்றும், பல்லின மக்களின் தேசமாக இருந்தது. அதனால், சோவியத் யூனியனுக்குள் சுற்றுலா சென்றாலே, உலகின் அரைவாசியைப் பார்த்தது போன்ற அனுபவம் ஏற்படும்.

உலகில் எல்லா நாடுகளிலும் இருப்பதைப் போன்று, பெரும்பான்மையான சோவியத் மக்கள் விடுமுறையில் கடற்கரையொன்றில் உல்லாசமாகப் பொழுது போக்குவதற்கு தான் ஆசைப் படுவார்கள். குறிப்பாக மாஸ்கோ போன்ற குளிர்வலையப் பிரதேசத்தில் வாழும் மக்கள், கொளுத்தும் வெயிலில் இளைப்பாற விரும்புவார்கள். அதனால், கருங்கடலில் உள்ள கிரீமியா கடற்கரைகள், விடுமுறைக் காலத்தில் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிந்தன.

அநேகமாக, அன்று ஐரோப்பாவில் இருந்த எல்லா சோஷலிச நாடுகளிலும் சுற்றுலாத் திட்டம் கிட்டத்தட்ட ஒரே மாதிரி நடைமுறையில் இருந்தது. எமக்கு அந்த நாடுகளின் மொழிகள் தெரியாத படியால், அது தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லை. (தெரிந்திருந்தாலும் மத்தியதர வர்க்க வலதுசாரி- அறிவுஜீவிகள் அவற்றை மறைத்திருப்பார்கள்.) இந்தக் கட்டுரைக்கு ஆதாரம் கேட்பார்கள் என்பதற்காக, நானும் எனக்குத் தெரிந்த ஜெர்மன் மொழி பேசும், கிழக்கு ஜெர்மனி பற்றித் தான் எழுத வேண்டியுள்ளது.

பொதுவாக, இன்றைக்கும் அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் இருப்பதைப் போன்று, கோடை காலமான ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் தான், சோஷலிச நாடுகளிலும் விடுமுறைக் காலமாக இருந்தது. கிழக்கு ஜெர்மனியில் இருந்த மிகப் பெரிய தொழிற்சங்கமான FDGB (Freier Deutscer Gewerkschaftbund), சுற்றுலாத் துறையையும் நிர்வகித்தது. அனைத்து தொழிலாளர்களும் விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு தொழிற்சாலைக்கு தனித்தனியாக சுற்றுலா ஒழுங்குபடுத்தப் பட்டது.

இதிலே குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அனைத்துப் பிரஜைகளும், செய்யும் தொழிலில் பேதமின்றி, சுற்றுலா செல்லும் வகையில் வசதி செய்து கொடுக்கப் பட்டது. அதற்காக அவர்கள் மிகச் சிறிய தொகையை கட்டணமாக செலுத்தினார்கள். சுற்றுலா செல்வதற்கான செலவு மிகவும் குறைவாக இருந்தது மட்டுமல்ல, எத்தனை வருடங்கள் சென்றாலும், விலை மாறப் போவதில்லை.

FDGB க்கு சொந்தமான ஹோட்டல்கள், நாடு முழுவதும் இருந்தன. அவை "Ferienheime" (விடுமுறை இல்லம்) என்று அழைக்கப் பட்டன. பெரும்பாலும் கிழக்கு ஜெர்மனியின் வடக்கே இருந்த, கிழக்குக் கடல் தான் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலமாக இருந்தது. பெரும்பான்மையான மக்கள் கடற்கரையை தெரிவு செய்த படியால், அங்கே தான் அதிகமான தங்குவிடுதிகள் காணப் பட்டன.

கோடை காலத்தில், கடற்கரைகள் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும். சுருக்கமாக சொல்வதென்றால், இந்தியாவில் கோவா கடற்கரைகள், அல்லது தென்னிலங்கை கடற்கரைகள் போன்று காட்சி தரும். ஆனால், ஒரு வித்தியாசம் என்னவென்றால், அங்கே வருவோரில் பெரும்பான்மையானோர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள். ஆனால், கிழக்கு ஜெர்மன் கடற்கரையில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆக்கிரமித்திருந்தனர்.

ஒவ்வொரு வருடமும், விடுமுறையை கழிப்பதற்கு கடற்கரைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. குளிர்காலத்தில் பனிச்சறுக்கல் விளையாட்டுகளில் ஆர்வமுள்ளவர்களுக்கு, மலைப் பகுதிகளிலும் விடுமுறைத் ஸ்தலங்கள் இருந்தன. அதுவும் வேண்டாமென்றால், ஓர் ஏரிக்கரையில், அல்லது புல்வெளியில் கூடாரம் அடித்து தங்கிக் கொள்ளலாம்.

கிழக்கு ஜெர்மன் பிரஜைகள் வெளிநாடுகளுக்கு சுற்றுலாப் பயணிகளாக செல்ல முடியுமா? ஆம்! மேற்கத்திய நாடுகளுக்கு பயணம் செய்வது தடுக்கப் பட்டது உண்மை தான். ஆனால், அவை மட்டுமே உலகம் அல்லவே? சகோதர சோஷலிச நாடுகளுக்கு எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யும் சுதந்திரம் இருந்தது. 

சோவியத் யூனியன் மட்டுமல்லாது, ஹங்கேரி, செக்கோஸ்லாவாக்கியா, யூகோஸ்லாவாக்கியா போன்ற பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு, கிழக்கு ஜெர்மன் சுற்றுலாப் பயணிகள் சென்றனர். அது மட்டுமல்ல, சிறந்த நட்புறவு பேணப்பட்ட, அல்ஜீரியா, லிபியா போன்ற வட ஆப்பிரிக்க நாடுகளுக்கும், சுற்றுலா செல்ல முடிந்தது. கியூபாவுக்கு செல்வது மிகுந்த செலவு பிடிக்கும் விடயமாகையால், அரசுத் தலைவர்கள், இராஜதந்திரிகள் தவிர வேறு யாரும் செல்லவில்லை.

தொழிலாளர்கள் பயணம் செய்த உல்லாசப் பயணக் கப்பலின் உள்புறம் 

FDGB, இரண்டு உல்லாசப் பயணக் கப்பல்களை வைத்திருந்தது. Cruise Ship எனப்படும் பிரமாண்டமான ஆடம்பரக் கப்பல்கள், இன்றைக்கும் பணக்காரர்கள் மட்டுமே பயணம் செய்யக் கூடியதாக உள்ளது. ஆனால், கிழக்கு ஜெர்மனியில் இருந்த ஆடம்பரக் கப்பல்களில், சாதாரண தொழிலாளர்களும் பயணம் செய்தனர் என்று சொன்னால் நம்புவீர்களா?

Arkona, Völkerfreundschaft ஆகிய இரண்டு ஆடம்பரக் கப்பல்களில், இடப்பற்றாக்குறை காரணமாக, குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப் பட்டது. திறமையாக வேலை செய்து, அதிகமாக உற்பத்தி செய்து சாதனை செய்த தொழிலாளர்களுக்கு எப்போதுமே முன்னுரிமை உண்டு. அது அவர்களை ஊக்குவிக்கும் பரிசாக வழங்கப் பட்டது. அதற்கு அடுத்த படியாக, நிறைய பிள்ளைகளை கொண்ட, பெரிய குடும்பங்களுக்கு இடம் ஒதுக்கப் பட்டது. சிலநேரம், மக்களுடன் சேர்ந்து, ஆளும் கட்சி அரசியல் தலைவர்களும் பயணம் செய்தனர்.

உல்லாசக் கப்பல் என்றால், உள்நாட்டுக் கடலுக்குள் சுற்றிக் கொண்டிருக்க முடியுமா? வெளிநாடுகளுக்கு போக வேண்டாமா? ஆமாம், அந்தக் கப்பல்கள் வெளிநாடுகளில் இருந்த கடற்கரைப் பட்டினங்களை நோக்கிப் பயணம் செய்தன. கப்பல் பயணிகள் அந்த நாடுகளையும் சுற்றிப் பார்த்து விட்டு ஊர் திரும்புவார்கள். Völkerfreundschaft கப்பல், எந்தெந்த நகரங்களுக்கு செல்கின்றது என்ற விபரம் பொறிக்கப் பட்ட பீங்கான் தட்டு, கப்பல் பயணிகளுக்கு விநியோகிக்கப் பட்டது. அவற்றை இன்றைக்கும் பல கிழக்கு ஜெர்மன் மக்கள், நினைவுப் பரிசாக வீடுகளில் வைத்திருக்கிறார்கள்.

Völkerfreundschaft கப்பல் பயணம் செய்த வெளிநாட்டு நகரங்களின் விபரம்:


Algier (அல்ஜீரியா)
Tripolis (லிபியா)
Dubrovnik (யூகோஸ்லேவியா, தற்போது குரோவாசியா)
Constanta (ருமேனியா)
Batumi (சோவியத் யூனியன், தற்போது ஜோர்ஜியா)
Varna (பல்கேரியா)








மேலதிக தகவல்களுக்கு:
Fascinatie DDR, Friso de Zeeuw 
Völkerfreundschaft
Tourismus in der DDR


வீடியோ: விடுமுறையை உல்லாசமாகக் களிக்கும் கிழக்கு ஜெர்மன் பிரஜைகள்


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
உழைக்கும் தாய்மாரின் உரிமைகளை பாதுகாத்த சோஷலிச கிழக்கு ஜெர்மனி
பெர்லின் சுவரின் மறுபக்கம் : கிழக்கு ஜெர்மனியில் அமெரிக்க அகதிகள்

Monday, June 22, 2015

சீனாவில் சுற்றுலா பயணிகளை கவரும் பாலியல் சுதந்திரம் மிக்க "பெண்களின் ராஜ்ஜியம்"!


புராதன காலத்தில் பெண்களால் தலைமை தாங்கப் பட்ட தாய் வழிச் சமுதாயம் இருந்ததாக கேள்விப் பட்டிருப்போம். ஆனால், அந்த சமுதாயம் எப்படி இருக்கும் என்பதை சீனாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் நேரில் காணலாம். தென் மேற்கு சீனாவில் உள்ள யுன்னான் மாகாணம் பெருமளவு சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாகும்.

சுவிட்சர்லாந்து போன்ற அழகான இடங்களைக் கொண்ட லிஜியான் நகரத்திற்கு முதலில் செல்ல வேண்டும். அங்கிருந்து சில நூறு கிலோ மீட்டர் தூரத்தில் மொசுவோ மக்கள் வாழும் பிரதேசம் உள்ளது. சீனாவின் அங்கீகரிக்கப் பட்ட தேசிய இனங்களில் அதுவும் ஒன்று.

சுமார் நாற்பதாயிரம் மக்கட்தொகை கொண்ட மொசுவா இனத்தவர்கள், தீபெத்தோ- பர்மிய இனக் குடும்பத்தை சேர்ந்தவர்கள். திபெத்திய, பர்மிய மொழிகளுக்கு இடைப்பட்ட தனித்துவமான மொழியைப் பேசுகின்றனர். இன்றைய நவீன காலத்திலும் பாலின சமத்துவம் நிலவுவது அந்த இனத்தின் சிறப்பம்சம் ஆகும். அந்தச் சமுதாயத்தில் பெண்கள் தான் தலைமை வகிக்கின்றனர். வயலில் இறங்கி கடின வேலைகளை செய்வதும் பெண்கள் தான்! ஆண்கள் எந்த வேலையும் செய்யாமல் ஊர் சுற்றிப் பொழுதுபோக்குவார்கள்.

மொசுவோ மக்கள் இன்றைக்கும் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டிற்குள் வாழ்கின்றனர். வயது வந்த பெண்களுக்கு மட்டும் தனியான அறை ஒதுக்கப் பட்டிருக்கும். ஒரு பருவமடைந்த பெண், தனக்கான ஆண் துணையை தானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறார். அவர் விரும்பும் ஆண், அன்றைய இரவு அவருடன் தங்கலாம். விடிந்தவுடன் அந்த உறவு முடிந்து விடுகின்றது. மொசுவா மக்கள் இதனை "நடக்கும் திருமணங்கள்" என்று அழைக்கின்றனர்.

அந்த மக்களின் வாழ்க்கை முறையை வெளியில் உள்ளோர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். மொசுவா பெண்களின் பாலியல் சுதந்திரம் என்பது, தினசரி ஓர் ஆடவனுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வதல்ல. ஓர் உறவானது, ஒரு நாள் மட்டுமல்லாது வருடக் கணக்காகவும் நீடிக்கலாம். அது அந்தப் பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம். எந்தக் கட்டுப்பாடும் இன்றி, தனது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கவும், மாற்றிக் கொள்ளவும் அந்தப் பெண்ணுக்கு உரிமை உண்டு.

ஒரு குழந்தை பிறந்தவுடன், அந்தப் பெண்ணுடன் உறவு கொண்ட எந்த ஆணும், தானே தந்தை என்று சொந்தம் கொண்டாடுவதில்லை. அந்தக் குழந்தையை பெற்று வளர்ப்பது, முழுக்க முழுக்க பெண் வீட்டார் பொறுப்பு. இவர் தான் தந்தை என்று யாராவது இனம் காணப் பட்டாலும், குழந்தைக்கு பரிசுப் பொருட்களை கொடுப்பதுடன் அவரது கடமை முடிந்து விடுகிறது. தொடர்ந்து, தாயான பெண்ணின் சகோதரர்கள் தான் தந்தை ஸ்தானத்தில் இருந்து அந்தக் குழந்தையை வளர்ப்பார்கள். மொசுவா மொழியில் "அப்பா என்ற ஒரு சொல்" கூடக் கிடையாது!

வேலைக்குப் போவதும், குழந்தை பெற்று வளர்ப்பதும் பெண்களாக இருந்தாலும், அது ஒரு பெண்ணாதிக்க சமுதாயமாக இருக்கவில்லை. மாறாக எல்லாக் கட்டத்திலும் பால் சமத்துவம் பேணப் படுகின்றது. சிலநேரம், ஒரு குடும்பத்தில் பெண்களின் எண்ணிக்கை கூடி விட்டால், ஆண்கள் அதிகமாக உள்ள இன்னொரு குடும்பத்துடன் குடும்ப உறுப்பினர்களை பரிமாறிக் கொள்வார்கள்.

மொசுவா சமுதாயத்தில் பாலியல் சுதந்திரம் சர்வ சாதாரணமான விடயம் என்பதால், அங்கு யாரும் புறம் பேசுவதில்லை. ஒருவரது "கள்ள உறவு" பற்றிய கிசு கிசு கதைகளை யாரும் பேசுவதில்லை. அது மட்டுமல்ல, யாரும் யார் மீதும் பொறாமை கொள்வதில்லை. 

அந்தச் சமுதாயமானது, புராதன கால பொதுவுடைமைச் சமூக- பொருளாதார உற்பத்திகளை இன்று வரைக்கும் தொடர்ந்தும் பேணி வருகின்றது.  "இது எனது உடைமை... எனது சொத்து..." என்று யாரும் உரிமை கொண்டாடுவதில்லை. அதனால், சண்டை, சச்சரவு, திருட்டு, பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளை போன்ற எந்த விதமான சமூகவிரோத செயல்களும் அங்கு இல்லை. 

சீனா முழுவதும் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்றியதும், மொசுவா மக்களை தனியான தேசியமாக அங்கீகரித்தனர். கலாச்சாரப் புரட்சிக் காலகட்டத்தில் மாத்திரம், நடக்கும் திருமண முறையை கைவிட்டு விட்டு, ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழுமாறு நிர்ப்பந்திக்கப் பட்டனர். உண்மையில் அன்றிருந்து பலர் நீடித்த திருமண உறவுகளை பின்பற்றத் தொடங்கினார்கள். கலாச்சாரப் புரட்சி முடிந்த பின்னர், மரபு வழித் திருமணங்கள் மீண்டும் அதிகரித்தன.

தொண்ணூறுகளுக்குப் பிறகு ஒட்டு மொத்த சீனாவின் பொருளாதாரம் மாற்றமடைந்தது. சீன ஆட்சியாளர்கள் முதலாளித்துவத்தை ஊக்குவித்தார்கள். அது மொசுவா மக்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை உண்டாக்கியது. பொதுவாக, அழகான மலைப் பிரதேசங்களை கொண்ட யுன்னான் மாகாணத்திற்கு, சீன உல்லாசப் பிரயாணிகள் படையெடுத்தார்கள். சுற்றுலா துறை நிறுவனங்கள், மொசுவா பிரதேசத்தையும் விட்டு வைக்கவில்லை.

"மகளிர் தேசம்" என்ற விளம்பரத்தின் மூலம் சுற்றுலாப் பயணிகள் கவர்ந்திழுக்கப் பட்டனர். பாரம்பரியமாக தந்தை வழி சமுதாயத்தில் வந்த சீனர்களுக்கு, "பெண்களின் தேசம்" பற்றிய தகவல்கள் புதுமையாகத் தோன்றின. பலர் அங்கே சுதந்திரமான பாலியல் தொழில் நடப்பதாக தவறாகப் புரிந்து கொண்டனர். சுற்றுலா நிறுவனங்களும், "நடக்கும் திருமணத்தில் ஒரு நாள் மணமகனாவது எப்படி?" என்று விளம்பரம் செய்து சீன ஆண்களை கவர்ந்தார்கள்.

அனேகமாக, மொசுவோ பற்றிய கற்பனையான கிளுகிளுப்பூட்டும் கதைகளை மட்டுமே கேள்விப் பட்டு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்து திரும்பிச் செல்வார்கள் என்பதில் ஐயமில்லை. சுற்றுலா நிறுவனங்கள் அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்துள்ளன. மொசுவா பிரதேசத்தில் ஒரு சிவப்பு விளக்குப் பகுதியை உருவாக்கி அங்கு சில மொசுவா பெண்களை பாலியல் தொழிலாளர்களாக அமர்த்தினார்கள்.

தமது சமுதாயத்தைப் பற்றிய தவறான கதைகள் பரப்பப் படுவதையிட்டு, மொசுவா மக்கள் பலர் எரிச்சலுற்றுள்ளனர். இருப்பினும், ஒரு சிலர் சுற்றுலாத் துறை கொண்டு வரும் வருமானத்தை இழக்கவும் விரும்பவில்லை. பாரம்பரியமாக பெண்கள் தலைமை தாங்கிய, அனைத்து முடிவுகளையும் எடுத்து வந்த மொசுவோ சமுதாயத்தில் எதிர்பாராத மாற்றம் உண்டானது. புதிதாகத் தோன்றிய முதலாளித்துவ பொருளாதாரம் காரணமாக, மொசுவா ஆண்கள் நன்மை அடைந்தனர்.

சுற்றுலா ஸ்தலங்களில், சேவைத் துறையில் உள்ள பல வேலைகளை பெண்களே செய்தாலும், ஆண்கள் தொடர்பாளர்களாகவும், முகவர்களாகவும் பணம் சம்பாதிக்கத் தொடங்கினார்கள். இருப்பினும் இத்தகைய பொருளாதார மாற்றமானது, அந்தப் பிரதேசத்தின் பின்தங்கிய வறுமையான கிராமங்களை மட்டுமே பாதித்து வருகின்றது. பெரும்பான்மையான மொசுவா பெண்கள், இப்போதும் வயலில் வேலை செய்து கொண்டே, பாரம்பரிய தாய் வழி குடும்ப உறவுகளை கட்டிக் காத்து வருகின்றனர்.


Monday, August 08, 2011

சிங்களச் சுற்றுலாப் பயணிகள் மீதான இனவெறித் தாக்குதல்

தமிழகத்தின் அரசியல் அமைப்பொன்றின் உறுப்பினர்கள் அம் மாநிலத்துக்குச் சுற்றுலாப்பயணமாகச் சென்றிருந்த சிங்களப் பொதுமக்கள் மீது இனவெறித் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி ஆழ்ந்த மனவருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.

சிங்கள மக்களுக்கு தங்குமிடங்களை வழங்க வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்து "நாம் தமிழர்" அமைப்பு நடத்தியுள்ள ஆர்ப்பாட்டமும், தொடர்ச்சியாக சிங்கள மக்கள் மீது அவர்கள் பயன்படுத்திவரும் இனவாதச் சொற் பயன்பாடும் கண்டிக்கத்தக்கத்து.

இலங்கையில் வாழும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் அரசியல் உரிமைகள் தொடர்பாகவும், முழு இலங்கை மக்களதும் நல்வாழ்வுக்கான போராட்டத்திலும் அக்கறை கொண்டுள்ள எமக்கு இச்செய்தி அருவருப்பூட்டுவதுடன் இலங்கையின் அரசியல் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.

இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டம் என்பது, இலங்கை சிங்கள பவுத்த மக்களுக்கே சொந்தமானதென்றும் மற்றைய தேசிய இனங்கள் இரண்டாந்தரக் குடிமக்கள் என்றும் வலியுறுத்திவரும் சிங்கள பவுத்த பேரினவாத சக்திகளுக்கு எதிரானதாக அமைய வேண்டும்.

பேரினவாத சக்திகளோடு உடன்பட்டுக்கொண்டு தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையை அரச இயந்திரத்தின் மூலம் செய்துவரும் ஆளும் வர்க்கத்துக்கு எதிரானதாக அமைய வேண்டும்.

இன்றுவரை தமிழ் மக்களும் ஏனைய சிறுபான்மை தேசிய இனங்களுக்கும் நியாயமான அதிகாரப் பகிர்வையும் அரசியல் தீர்வையும் வழங்க மறுத்து இழுத்தடித்துவரும் அரசாங்கங்களுக்கு எதிரானதாக அமைய வேண்டும்.

தமிழ் -சிங்கள முரண்பாட்டை ஊதிப்பெருக்கி சாதாரண மக்களை வதைத்தபடி தமது நலன்களுக்காக இலங்கையில் தலையிட நினைக்கும் வெளிநாட்டுச் சக்திகளுக்கு எதிரானதாக அமைய வேண்டும்.

தமிழ் மக்களது அரசியற் கோரிக்கைகள் ஒருபோதுமே சிங்களப் பொதுமக்களுக்கு எதிரானதாக இருக்கக்கூடாது.

ஆனால் வருத்தமளிக்கும் விதமாக தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்போராட்டத்தை சிங்கள மக்களுக்கு எதிரானதாகவும் சிங்கள மக்கள் மீதான வன்முறையாகவும் தடம் மாற்றிக்கொண்டுபோகும் குறுகிய இனவாதக் கண்ணோட்டத்தையே பல்வேறு தமிழர் அமைப்புக்கள் கொண்டிருந்தன, கொண்டிருக்கின்றன.

இலங்கைப்பிரச்சினையை சரியாகப் புரிந்துகொள்ளாமல் வெறும் வாய்ப்பேச்சும் உணர்ச்சிவசப்படுதலும் நிரம்பியதாக உரிமைப்போராட்டத்தை மாற்றி அதனைக் கேலிக்குரியதாக மாற்றுகின்றன.

இது இனப்பகையை மேலும் மேலும் தூண்டுவதன் மூலம் . மக்களுக்கு எதிரான சக்திகளுக்கு நன்மை செய்வதாக மாறிப்போகும்.

இத்தகைய அமைப்புக்களை இனம்கண்டு புறக்கணிக்கவும் தோற்கடிக்கவும் தமிழ் மக்கள் அனைவரும் முன்வரவேண்டும்.

சிங்கள பவுத்த பேரினவாத சக்திகளைப் புறக்கணிக்கும் சிங்கள மக்களோடு, இந்த நாட்டின் அனைத்துமக்களும் சமமான அதிகாரங்களோடும் சம வாய்ப்போடும் வாழவேண்டும் என்று நேர்மையாக விரும்புகிற சிங்கள மக்களோடு இணைந்து போராட முயற்சி செய்யவேண்டும்.

இத்தகையை போராட்டமானது இலங்கையில் வாழும் அனைத்து மக்களதும் நல்வாழ்வுக்கானதாக அமையும். கொள்ளைக்கார உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளைத் தோற்கடித்து இலங்கையர்களுக்கு சிறப்பான எதிர்காலம் ஒன்றினை அமைத்துக்கொடுக்கும்.

சிங்கள மக்கள் மீது தமிழகத்தில் இடம்பெற்ற இனவெறி கொண்ட வன்முறைகளுக்காக தமிழர் என்ற அடிப்படையில் சிங்கள மக்களிடம் மன்னிப்பைக் கோருகிறோம்.

தமிழர் மீது நடந்த நடந்துவரும் பேரினவாத வன்முறையை ஒவ்வொரு தருணத்தும் தவறாது கண்டித்து வருகிறவர்கள் என்ற முறையில், அதே நியாயத்தின் அடிப்படையில் தமிழரின் பேரல் நடக்கும் வெறியாட்டைத்தைக் கண்டிக்கும் கடமையும் உரிமையும் நமக்குண்டு என்று நாம் கருதுகிறோம்.