Showing posts with label கம்யூனிஸ்டுகள். Show all posts
Showing posts with label கம்யூனிஸ்டுகள். Show all posts

Saturday, February 03, 2018

மொங்கோலியா: எழுத்தறிவித்தவன் கம்யூனிஸ்ட் ஆவான்!


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த மொங்கோலியா, பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய நாடாக இருந்தது. பெருமளவில் நாடோடி இடையர்களை கொண்ட மக்கள் சமூகத்தில் இருந்து சோஷலிசப் புரட்சி வெடிக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 

முதலில், மொங்கோலிய சோஷலிசப் புரட்சிக்கு காரணமாக இருந்த, டம்டின் சுக்பதார் பற்றி சில குறிப்புகள். டம்டின் சுக்பதார் ஒரு சாதாரண ஏழை இடையர் குடும்பத்தில் பிறந்தவர். இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிய காலத்தில், முகாமில் நிலவிய ஊழல், வசதிக் குறைபாடுகளுக்கு எதிரான சிப்பாய்க் கலகத்தில் பங்கெடுத்தவர். பிற்காலத்தில் பௌத்த மத நூல்களை அச்சிடும் அரசு அச்சகத்தில் வேலை செய்த பொழுது மார்க்சியத்தை அறிந்து கொண்டார். 

அப்போது தலைநகர் உலான் பட்டாரில் தங்கியிருந்த ரஷ்ய மார்க்சிஸ்டுகள் மூலம் மார்க்ஸிய நூல்கள் படிக்கக் கிடைத்திருக்கலாம். டம்டின் சுக்பதார் பிற மார்க்ஸிய புரட்சியாளர்களுடன் சேர்ந்து, மக்கள் புரட்சிகர கட்சியை உருவாக்கினார். மொங்கோலிய நாடோடி இன மக்களை அணிதிரட்டி, கெரில்லாப் படை ஒன்றை அமைத்தார். 

இதே நேரம், ரஷ்யப் புரட்சியின் தாக்கம் மொங்கோலியாவில் எதிரொலித்தது. போல்ஷெவிக் செம்படைகளால் தோற்கடிக்கப் பட்ட ஸார் மன்னனுக்கு விசுவாசமான வெண் படைகள், மொங்கோலியாவுக்குள் நுழைந்து பாசிச சர்வாதிகார ஆட்சி நடத்தினர். அதற்கெதிராக மொங்கோலிய மக்கள் கிளர்ச்சி செய்தனர். டம்டின் சுக்பதார் தலைமை தாங்கிய மொங்கோலிய நாடோடிகளின் கெரில்லா இராணுவம், ரஷ்ய செம்படை உதவியுடன் போராடி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

மொங்கோலியாவில், 1924 ம் ஆண்டு நடந்த புரட்சியின் விளைவாக, அந்த நாடு கம்யூனிசப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. உலகில் சோவியத் யூனியனுக்கு அடுத்ததாக தோன்றிய, இரண்டாவது சோஷலிசக் குடியரசு அதுவாகும்.

அதுவரை காலமும், திபெத்திய பௌத்த மதத்தை பின்பற்றும் மதத் தலைவர்களாலும், சீன மன்னர்களாலும் ஆளப்பட்டு வந்த மொங்கோலியா நாட்டில், எழுத்தறிவு பெற்ற மக்கள் தொகை மிகக் குறைவாக இருந்தது. பெரும்பாலான மொங்கோலிய மக்கள், நாடோடி கூட்டங்களாக வாழ்ந்ததால், பாடசாலைகளும் கட்டப் படவில்லை. பௌத்த துறவிகளும், மேட்டுக்குடியினரும் மட்டுமே கல்வி கற்கும் வாய்ப்பை பெற்றிருந்தனர்.

மொங்கோலியா ஒரு சோஷலிச நாடாக இருந்த காலத்தில், மாலை நேர பாடசாலைகள் அமைக்கப் பட்டன. பகலில் வேலை செய்து விட்டு வரும், தொழிலாளர்கள், விவசாயிகள், இடையர்கள் அந்த மாலை நேரப் பாடசாலைகளில் சேர்ந்து கல்வி கற்றனர். உழைக்கும் மக்களுக்கு கல்வியளிக்கும் திட்டம் அமோக வெற்றி பெற்றதால், தலைநகர் உலான் பட்டாரில் "மார்க்சிய-லெனினிய பல்கலைக்கழகம்" அமைக்கப் பட்டது.

இது பிற பல்கலைக்கழகங்களில் இருந்து வேறுபட்டது. கல்வி கற்கும் வயதில் உள்ள சாதாரண மாணவர்களுக்காக அமைக்கப் படவில்லை. வறுமை காரணமாக இளம் வயதில் வேலைக்கு போக வேண்டியிருந்த இளம் வயதினர் முதல், முதுமையிலும் அறிவைத் தேடுபவர்கள் வரையிலான பலதரப் பட்டோர் அங்கே கல்வி கற்றனர். மாலை நேர பாடசாலைகளில் சித்தி பெற்ற தொழிலாளர்களும் மேற்படிப்புக்காக வந்தனர்.

மார்க்சிய - லெனினிய பல்கலைக்கழகத்தில், வெறும் கம்யூனிச சித்தாந்தம் மட்டுமே போதிப்பார்கள் என்று, தவறாக நினைத்து விடக் கூடாது. சாதாரண பல்கலைக் கழகத்தில் போதிக்கப் படும் அனைத்து பாடங்களையும் அங்கே பயில முடியும். அந்தப் பல்கலைக்கழகத்தில் பயின்ற பலர், பொறியியலாளர்களாக, பொருளியல் நிபுணர்களாக, விவசாய நிபுணர்களாக, பல துறைகளிலும் தேர்ச்சி பெற்றனர். 1953 ம் ஆண்டு, உலான் பட்டார் நகரில் தொடங்கப்பட்ட நாளில் இருந்து, பத்து வருடங்களுக்குள் 900 பேர் பட்டதாரிகளாக வெளியேறினார்கள்.

(மேலேயுள்ள படத்தில் : மார்க்சிய - லெனினிய பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்கள். தகவல்: Mongolia Today, January 1963)

Friday, February 19, 2016

தன்மானமில்லாத "தமிழன்டா"! அமெரிக்காவின் அடிமைடா!!



இலங்கைத் தமிழ் பத்திரிகைகளில், இடதுசாரிகளை, கம்யூனிஸ்டுகளை சீண்டுவதும், கிண்டல் அடிப்பதும் தற்போது ஃபேஷனாகி விட்டது. வீரகேசரி, தினக்குரல், உதயன் என்று, பெரும் முதலாளிகளால் தமிழில் வெளியிடப் படும் இந்தப் பத்திரிகைகளின் வர்க்க சார்புத் தன்மை ஏற்கனவே தெரிந்த விடயம். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை.

ஒரு காலத்தில், முதலாளித்துவ பத்திரிகைகள் யாவும், "தமிழர்கள் மத்தியில் இடதுசாரிகள், கம்யூனிஸ்டுகள் எவரும் இல்லை" என்பது போல காட்டிக் கொண்டன. வலதுசாரி தமிழ்த் தேசியவாதிகளின் நிலைப்பாடும் அதுவாக இருந்தது. இது ஒரு வகையில், "சிறுபான்மையினத்தின் இருப்பை மறைக்கும் பேரினவாத உத்தி" போன்றது. ஒரு சமூகம் பன்முகத் தன்மை கொண்டது என்பதை மறுப்பதும், ஜனநாயகப் பண்புகளை நசுக்குவதும் பாசிஸத்தின் கூறுகள் தாம். 

அந்த அடிப்படையில், "கம்யூனிஸ்டுகள் என்றால், ரஷ்யா, சீனாவில் இருப்பார்கள்..." என்று அம்புலிமாமாக் கதைகளை பரப்பி வந்தனர். ஈழப் போரின் இறுதிக் காலத்திலும், அதற்குப் பிறகும், எடுத்ததற்கு எல்லாம் "கம்யூனிச நாடுகளான ரஷ்யா, சீனா, வியட்நாம், கியூபா...." என்று போட்டுத் தாக்குவது வழமையாக இருந்தது. தனக்குத் தானே "அரசியல் ஆய்வாளர்" பட்டம் சூட்டிக் கொண்ட யாராவது, வார இதழில் கட்டுரை எழுதி இருப்பார்கள். 

அறுந்த அரசியல் ஆய்வாளர்கள், தமது கட்டுரையில் என்ன எழுதி இருந்தாலும் பரவாயில்லை. தலைப்பு மட்டும் "கம்யூனிச" சீனாவை, ரஷ்யாவை திட்டுவதாக இருக்கும். இந்த நாடுகள் எல்லாம், கடந்த முப்பது வருட காலமாகவே, முதலாளித்துவ நாடுகளாக இருந்து வருகின்றன என்ற உண்மை, அறுந்த ஆய்வாளர்களுக்கு தெரிவதில்லை. முப்பது வருடமாக கோமாவில் படுத்திருந்து விட்டு எழுந்தவன் போல, "ஏய்... ரஷ்யாவே! ஏய்... சீனாவே! இதுவா உன் கம்யூனிசம்!" என்று திட்டி திட்டி எழுதுவார்கள்.

இப்போதெல்லாம் இந்த அலப்பறைகளை யாரும் கண்டுகொள்வதில்லை. அது மட்டுமல்ல, தமிழ் இளையோர் மத்தியில் இடதுசாரிக் கருத்துக்கள், மற்றும் கம்யூனிசம் குறித்த தேடுதல் அதிகரித்து வருகின்றது. அம்புலிமாமா ஆய்வாளர்கள் எதிர்பார்த்த மாதிரி, அது ஒன்றும் ரஷ்யா, சீனாவில் இருந்து இறக்குமதியாகவில்லை. இன்றைய உலகமயமாக்கல் தான் இளைஞர்கள் மத்தியில் மாற்று சிந்தனை குறித்த தேடலை உருவாக்கியது. உலகமயமாக்கல் என்றால் அமெரிக்கா இல்லாமலா?

சமாதான பேச்சுவார்த்தை காலத்தில், அமெரிக்கா அனுப்பி வைத்த நோர்வே அனுசரணையாளர் எரிக் சொல்ஹைம் ஒரு விடயத்தை தெளிவாக சொல்லி இருந்தார். "ஈழத் தமிழர்களின் இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு இதுவே இறுதி சந்தர்ப்பம். தற்போது சர்வதேச சமூகத்தின் கவனம் இலங்கை மீது குவிந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை தவற விட்டால், அது திரும்பி வராது."

2006 ம் ஆண்டு, புலிகளை கடுமையான தொனியில் எச்சரித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் Jeffrey Lunstead, "இனப்படுகொலை" நடத்தவும் தயங்க மாட்டோம் என்பதை சூசகமாக குறிப்பிட்டார். "புலிகள் சமாதானத்தை கைவிட்டு விட்டு போருக்கு திரும்பினால், பெரியதொரு விலையைக் கொடுக்க வேண்டி இருக்கும். மிகவும் பலமான, தீர்க்கமான சிறிலங்கா இராணுவத்தை சந்திக்க வேண்டி இருக்கும்...." என்று தெரிவித்தார். 
  US Ambassador Jeffrey Lunstead made it clear that Washington wanted the “cost of return to war to be high” to the Liberation Tigers of Tamil Eelam (LTTE). If the LTTE “abandon peace”, they would face a “stronger, more capable and more determined” Sri Lankan military, TamilNet quoted Lunstead as saying. 

அமெரிக்க தூதுவரின் எச்சரிக்கை, வாய்ச் சொல்லில் மாத்திரம் இருக்கவில்லை. இறுதி யுத்தத்திற்கு தேவையான ஆயுதங்களை கொண்டு வந்த புலிகளின் ஆயுதக் கப்பல்களை, அமெரிக்க செய்மதிகள் காட்டிக் கொடுத்தன. அதனால், சிறிலங்கா கடற்படை அவற்றை சர்வதேச கடற்பரப்பிலேயே தாக்கி அழித்தன. அது மட்டுமல்லாது, அமெரிக்காவில் புலிகளுக்கு ஆயுதங்களை வாங்கச் சென்றவர்கள் பிடிபட்டனர். ஆயுதத் தரகர்களாக நடித்த FBI உளவாளிகள், அவர்களை பொறிக்குள் மாட்டி விட்டனர்.

இலங்கையில் நடந்த இறுதிப்போரின் உண்மையான நிலவரம் இப்படி இருக்கையில், அமெரிக்காவை நோக்கி சுண்டுவிரலை கூட நீட்ட முடியாத நிலையில் தமிழ் வலதுசாரிகள் உள்ளனர். அவர்களால் மேற்படி உண்மைகளை ஜீரணிக்க முடியவில்லை. அதே நேரம் தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ளவும் இல்லை.

அதற்கு மாறாக, நடந்த பிரச்சினைகளுடன் எந்தவிதமான சம்பந்தமும் இல்லாத கம்யூனிஸ்டுகளை வம்புக்கிழுக்கும் பணியை, தமிழ் முதலாளித்துவ பத்திரிகைகள் செவ்வனே செய்து கொண்டிருக்கின்றன. பலசாலியான எதிராளியுடன் மோத முடியாத ஒருவன், வீட்டில் இருக்கும் அப்பாவி மனைவிக்கு அடித்து, தனது  ஆத்திரத்தை தீர்த்த கதை தான் இதுவும். (தமிழன்டா!)

லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் தீபம் தொலைக்காட்சி முதலாளி, தற்போது யாழ் குடாநாட்டில் "தீபம்" என்ற பெயரில் பத்திரிகை ஒன்றை வெளியிட்டு வருகின்றார். இதுவும் வழமையான முதலாளித்துவ ஆதரவு பத்திரிகை தான். அதிலே நாடியா என்பவர் "தமிழன்டா" என்ற பெயரில் கட்டுரை எழுதி இருக்கிறார். தமிழ் சமூகத்தை கிண்டலடித்து நகைச்சுவையாக எழுதப்பட்ட கட்டுரை தான். ஆனால், நகைச்சுவை என்ற பெயரில் அது திணிக்கும் அரசியல் ஆபத்தானது. வலதுசாரிகள் கம்யூனிஸ்டுகள் பற்றி பரப்பி வரும் அவதூறான நச்சுக் கருத்துகளை, நகைச்சுவை என்ற தேன் தடவி உண்ணக் கொடுக்கிறது.

13.12.2015 தீபம் பத்திரிகையில் பிரசுரமான தமிழன்டா கட்டுரையின் கடைசிப் பந்தி இது:

//கோக்குமாக்கு கொம்மியூனிஸ்ற்

கொஞ்சம் வயது போனவர்கள் இருப்பார்கள். எப்போதும் முகத்தை உர் என்று வைத்துக்கொண்டு, ஆளையாள் அடித்துவிடுபவர்களை போல விவாதித்துக் கொண்டிருப்பார்கள்.

இலங்கையில் போர்க்குற்றம் நடந்ததென ஒரு தரப்பு சொல்லும். சர்வதேச விசாரணையா, கூடவே கூடாதென இன்னொரு தரப்பு அடம்பிடிக்கும். இவர்களை விட இன்னொரு குறூப் கிளம்பும். போர்க்குற்ற விசாரணையின் மூலம் அமெரிக்கா அடைய நினைக்கும் ஏகாதிபத்திய நலன்கள் என்றொரு மீற்றிங் போடுவார்கள். நாலுபேர் கூடி நாள் முழுக்க அடிபடுவார்கள். அவர்கள் தான் கொம்யூனிஸ்ற் தோழர்கள்.

இலங்கையில் போர்க்குற்றம் நடந்ததா இல்லையா? சர்வதேச விசாரணையா, உள்ளக விசாரணையா என உள்நாட்டுக்குள் எல்லோரும் தலையை பிய்த்துக் கொண்டிருக்க, அதற்குள் அமெரிக்காவை கொண்டு வந்து கோக்குமாக்கு பண்ணுவது அவர்களின் இயல்பு.// 
(எழுதியவரின் மின்னஞ்சல் முகவரி: nadiyanice@yahoo.com)

"தமிழன்டா", "சிங்கலே" போன்ற இனவாதக் கோஷங்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீட்டை மறைப்பதற்கு நன்றாகவே உதவுகின்றன. இதனை கட்டுரை எழுதியவரின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். 


சிங்கள - பௌத்த பேரினவாத இயந்திரம், எவ்வாறு தமிழினவாதிகளையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றது என்பதற்கு இது ஓர் உதாரணம். தற்போது இலங்கையில், சிங்கள இனவாத சக்திகள், "சின்ஹலே" என்ற பெயரில் ஸ்டிக்கர் பரப்புரை செய்து வருகின்றன.

"சின்ஹலே" என்பது ஒரு வெற்றுக் கோஷம் அல்ல. அது "சிங்கள இரத்தம்" என்ற இனவாதத் தொனி கொண்டது. இனவாதத்தை வெறுக்கும் முற்போக்கான சிங்களவர்கள், இதற்கெதிராக தமது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். அதனால், "சின்ஹலே" பிரச்சாரத்தை நடத்தும் அதே அமைப்பு, தற்போது "தமிழன்டா" என்றும் சொல்ல ஆரம்பித்துள்ளது.

எமது நினைவுக்கு எட்டிய வரையில், தமிழகத்தில் இயங்கும் தமிழினவாத அமைப்புகளான நாம்தமிழர் வகையறாக்கள் தான், "தமிழன்டா" பரப்புரை செய்து வந்தன. சிங்கள இனவாதிகளும், தமிழ் இனவாதிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதற்கு இதை விட வேறென்ன சான்று வேண்டும்?

"ஏகாதிபத்தியமா? அது எங்கே இருக்கிறது?" என்று பாமரத் தனமாகக் கேட்கும் அப்பாவியா நீங்கள்? 

ஈழப்போரின் முடிவுக்குப் பின்னர், இலங்கையில் எவ்வாறு ஏகாதிபத்தியம் கால் பதித்துள்ளது என்பதற்கான ஆதாரங்களை கீழே தந்திருக்கிறேன். அதற்குப் பிறகும் "அமெரிக்காவுக்கும், ஈழத்துக்கும் என்ன சம்பந்தம்?" என்று சிறுபிள்ளைத்தனமாக கேள்வி கேட்பீர்கள் என்றால்.... தமிழர்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சுயரூபம் பற்றி எத்தனை தடவை எடுத்துக் கூறினாலும், அதையெல்லாம் புறக்கணித்து விட்டு, "அமெரிக்கா ஈழத் தமிழர்களின் நண்பன் (?)" என்று கூறி மக்களை ஏமாற்றுவோர் பலருண்டு. வடக்கு மாகாண சபையில் இனப்படுகொலை தீர்மானம் நிறைவேற்றியதைக் காட்டி, "இப்போது உலக நாடுகள் எல்லாம் எம்மை திரும்பிப் பார்க்கப் போகின்றன" என்றார்கள்.

அமெரிக்க அடிவருடிகளான போலித் தமிழ் தேசியவாதிகள், முதலமைச்சர் விக்னேஸ்வரனை அமெரிக்காவுக்கு அனுப்பி, தமது எஜமான்களை சந்தித்துப் பேச வைத்தனர். ஆனால், அவர்கள் நினைத்ததற்கு மாறாகவே அமெரிக்க எஜமானின் நடத்தை அமைந்திருந்தது.

"இனப்படுகொலை பற்றிய பேச்சுக்களை குறைத்துக் கொண்டு, மைத்திரி- ரணில் அரசுடன் கூட்டுச் சேர்ந்து வேலை செய்யுமாறு" விக்னேஸ்வரன் அறிவுறுத்தப் பட்டார்.

ஈழப் போரில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீட்டை மூடி மறைப்பதற்காக, "ஏகாதிபத்தியம் என்ற ஒன்று இல்லவே இல்லை..." என்று, எமக்கு அரசியல் போதிக்கும் தமிழ் வலதுசாரிகள், இது குறித்து என்ன சொல்லப் போகிறார்கள். வழமை போல இதைக் கண்டும் காணாதது போல, தமது கண்களை இறுக்க மூடிக் கொண்டு கள்ள மௌனம் சாதிப்பார்கள்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்த மண்ணில், அமெரிக்க அரசு ஒரு மில்லியன் டாலர் செலவில், இரண்டு நவீன மருத்துவமனைகளை கட்டிக் கொடுத்தது. கிளிநொச்சியிலும், ஓட்டிசுட்டானிலும், அவை அமெரிக்க நிதியுதவியில் கட்டப் பட்டுள்ளன. 

2009 ம் ஆண்டு, வன்னியில் நடந்த போருக்குள் அகப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள், ஷெல் வீச்சுகளாலும், துப்பாக்கிக் குண்டுகளாலும் காயமடைந்து, மருத்துவ வசதி இன்றி மரணமடைந்தனர். அப்போது அந்த மக்களை ஏறெடுத்தும் பார்க்காத, உயிர் காக்கும் மருந்துகளை கூட அனுப்ப மறுத்த அமெரிக்கா, நாற்பதாயிரம் தமிழ் மக்களின் பிணங்களின் மேல் இரண்டு மருத்துவமனைகளை கட்டிக் கொடுத்துள்ளது. அதனை அமெரிக்க தூதரக அதிகாரி William Weinstein, நாமல் ராஜபக்சவுடன் சேர்ந்து  திற‌ந்து வைத்தார். (தகவலுக்கு நன்றி: அமெரிக்க தூதுவராலயம்; http://srilanka.usembassy.gov/pr-13feb2013.html)

தமிழ் மக்கள் மனதில் அமெரிக்க விசுவாசத்தை பரப்பி வரும், தமிழ் (முதலாளித்துவ) தேசிய ஊடகங்கள், இந்த செய்தியை பிரசுரிக்காது இருட்டடிப்பு செய்துள்ளன. ஒருவேளை, இந்த மருத்துவமனைகளை சீனா கட்டிக் கொடுத்திருந்தால், "தமிழருக்கு துரோகமிழைத்த கம்யூனிச சீனா ஒழிக!" என்ற கோஷம், அனைத்து ஊடகங்களிலும் முதன்மைச் செய்தியாக வந்திருக்கும். 

சிங்களப் பகுதிகள் சீனாவுக்கும், வட-கிழக்கு தமிழ்ப் பகுதிகள் அமெரிக்காவுக்கும் தாரை வார்த்துக் கொடுக்கப் பட்டுள்ளன. யாரை எப்படி ஏமாற்ற வேண்டும் என்பதை, வல்லரசு நாடுகள் தெரிந்து வைத்துள்ளன. ஆனால், அந்த உண்மையை தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள விடாமல் தடுப்பது தான், தமிழ்-முதலாளித்துவ தேசிய ஊடகங்களின் பணியாக உள்ளது. 

"எதிரி எமக்குள்ளே இருக்கிறான்." என்று ஜெர்மன் கம்யூனிஸ்ட் தலைவர் லீப்னெக்ட் கூறியது, ஒவ்வொரு தடவையும் நிரூபிக்கப் பட்டு வருகின்றது.  முழுப்பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் முதலாளித்துவ தமிழ் ஊடகங்களும் தமிழ் மக்களின் எதிரிகள் தான்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆசிய பிரதிநிதியான அவுஸ்திரேலியா, ஈழப் போரின் முடிவுக்குப் பின்னர், சிறிலங்கா அரசுடன் நெருங்கி உறவாடி வருகின்றது. ஏகாதிபத்தியம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளாமல், தமிழீழம் அமைக்கலாம் என்பது ஒரு பகற்கனவாகவே இருக்கும்.

ராஜபக்சேக்களுடன் Scott Morrison 
அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் தமிழ் அகதிகளை, சிறிலங்கா கடற்படையினரிடம் ஒப்படைத்து வரும், அவுஸ்திரேலியா குடிவரவுத் துறை அமைச்சர் Scott Morrison இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். தனது உற்ற நண்பர்களான ராஜபக்சேக்களை சந்தித்துப் பேசியதுடன், சிறிலங்கா கடற்படைக்கு இரண்டு ரோந்துப் படகுகளை பரிசளித்திருந்தார். 

அதே நேரம், யாழ்ப்பாணத்திற்கு சென்று ஆளுநர் சந்திரஸ்ரீ யையும் சந்தித்துப் பேசியுள்ளார். ஆனால், யாழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதல்வர் விக்னேஸ்வரனை சந்திக்கவில்லை. (http://www.theaustralian.com.au/news/scott-morrison-visits-jaffna-snubs-chief-minister-cv-wigneswaran/news-story/0424779b74b2016b070fdbb2a85c44d2?sv=adb7efb136baa3a8541420dd6bc106d3

பில்கேட்சின் Microsoft நிறுவனம், ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையில் முதலீடு செய்துள்ளது. அதிலும், மகிந்த ராஜபக்சவுக்கு மிகவும் பிரியமான அம்பாந்தோட்டையில், தெற்காசியாவுக்கான புதிய தொழிற்சாலை ஒன்றை கட்டியுள்ளது. 

இலங்கையில் கட்டப்பட்டுள்ள முதலாவது கணணி உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இதுவாகும். தமிழினப் படுகொலையாளிகளுடன் கூட்டுச் சேர்ந்ததன் மூலம், பில் கேட்சும், மைக்ரோசொப்ட் நிறுவனமும் தமிழர்களுக்கு மாபெரும் துரோகம் இழைத்துள்ளனர்.

அம்பாந்தோட்ட தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் கணனிகள், Laptop, Tablet ஆகியன, இலங்கையில் மட்டுமல்லாது, பிற ஆசிய நாடுகளிலும் விற்பனை செய்யப் படவுள்ளன. பில் கேட்சின் மைக்ரோசொப்ட் நிறுவனம், EWIS என்ற இன்னொரு நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து உற்பத்தியை ஆரம்பித்துள்ளது. (Microsoft, EWIS set up country’s first PC manufacturing plant at H’tota; http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=84917)

தமிழ் இன உணர்வாளர்கள், மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கு எதிராகப் போராட முன்வருவார்களா? மைக்ரோசொப்ட் நிறுவனம், இலங்கையில் போட்டுள்ள முதலீட்டை வாபஸ் வாங்கி, அம்பாந்தோட்ட தொழிற்சாலையை மூடும் வரையில், மைக்ரோசொப்ட் தயாரிப்புப் பொருட்களை பகிஷ்கரிக்கும் இயக்கம் ஆரம்பிக்கப் படுமா?

தென் தமிழீழக் (கிழக்கிலங்கை) கடற்கரையோரத்தில், எண்ணை, எரிவாயு வளங்களை ஆய்வு செய்யும் உரிமையை, பிரெஞ்சு பன்னாட்டு நிறுவனமான Total S.A. பெற்றுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில், இலங்கை பெற்றோலியத் துறை அமைச்சர் சந்திமா வீரக்கொடியும், இலங்கைக்கான பிரெஞ்சு தூதுவர் Jean-Marin Schuh வும் கைச்சாத்திட்டுள்ளனர். (Govt. inks agreement with France's Total for oil exploration in East Coast; http://www.news.lk/news/business/item/12289-govt-inks-agreement-with-france-s-total-for-oil-exploration-in-east-coast)

தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசுடன் கைகோர்த்த, பிரெஞ்சு அரசுக்கு எதிராக, தமிழ் இன உணர்வாளர்கள் கிளர்ந்து எழுவார்களா? சார்லி ஹெப்டோ படுகொலைகள் நடந்தநேரம் "Je suis Charlie" என்று சொல்லி அழுதவர்கள், தற்போது பிரெஞ்சு அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வார்களா?

அரச அடிவருடிகளான போலித் தமிழ் தேசியவாதிகளிடம் தன்மானத்தை எதிர்பார்க்க முடியுமா? இல்லை, தமிழ் இன உணர்வை விட, யூரோ பண உணர்வு முக்கியம் என்று வாயை மூடிக் கொள்வார்களா? இவர்கள் தான், மேற்கத்திய அரசுக்களின் ஆதரவுடன், தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு, தமிழீழமும் வாங்கித் தருவார்களாம். நம்புங்க மக்களே!

ஏகாதிபத்தியத்தின் நிழலின் கீழ் இருந்து கொண்டு தமிழீழம் பற்றிப் பேசலாம். ஆனால், தமிழர்கள் தன்மானத்துடன் வாழ முடியாது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமின்றி, ஈழம் விடுதலை அடைய முடியாது.

Wednesday, May 06, 2015

யாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்

யாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி 


யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். அந்தப் படத்தை "இளம் கம்யூனிஸ்டுகள்" என்ற தலைப்பில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு இளைஞர் தனது முகநூலில் பகிர்ந்து கொண்டார். அதற்கு ஒரு "அறிவு(?)ஜீவி" பின்வருமாறு எதிர்வினையாற்றி இருந்தார்:

//இளம் கம்யூனிஸ்ட்டுகள்! ஹ... ஹா... நாலாம் ஐந்தாம் வகுப்பு பொடியளுக்கு கம்யூனிசம் விளங்கி அதில பற்று வந்து வீதியில் இறங்கிவிட்டார்கள்! வாவ்// 

அறம் செய்ய விரும்பு, இயல்வது கரவேல், ஐயம் இட்டு உண், மண் பறித்து உண்ணேல், கொள்ளை விரும்பேல், ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, யாதும் ஊரே யாவரும் கேளிர்.... இதெல்லாம் நாலாம் ஐந்தாம் வகுப்பு பொடியளுக்கு, பாடசாலைகளில் படிப்பிக்கிற கம்யூனிச தத்துவங்கள் என்பது, அந்த "அறிவு(?)ஜீவிக்கு" புரியாமல் போனது ஏனோ?


"யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில் இளம் கம்யூனிஸ்டுகள்" என்ற தலைப்பிலான இந்தப் படத்தை பார்த்து விட்டு "சிறுவர் துஷ்பிரயோகம்" என்று அலறித் துடிக்கும் போலி மனிதாபிமானவாதிகளுக்கு:

சிறுவர் துஷ்பிரயோகம் பற்றி இலவசமாக வகுப்பெடுக்கும் ஆசிரியப் பெருந்தகைகள், அதனை முதலில் கோயில்கள், தேவாலயங்களில் இருந்து தொடங்குவது நல்லது. குறைந்த பட்சம் தங்களது குடும்பத்தையாவது சீர்திருத்திக் காட்ட வேண்டும்.

இதிலே எத்தனை சிறுவர்கள், தேநீர்க்கடைகள், உணவகங்களில் முதலாளிகளால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பார்கள்? நெல் வயல்களில், தோட்டங்களில், பண்ணைகளில், நிலவுடமையாளர்களினால் துஷ்பிரயோகம் செய்யப் பட்டிருப்பார்கள்? அப்போதெல்லாம் வாய்மூடி மௌனிகளாக இருந்தவர்கள், இருப்பவர்கள், அந்தசிறுவர்கள் தமது உரிமைகளுக்காக ஒன்றுசேர்ந்து போராடினால் மட்டும் பொங்கி எழுந்து எதிர்ப்பது ஏனோ? சிறுவர்களின் ஜனநாயக உரிமைகளை, அவர்களது அரசியல் கருத்துச் சுதந்திரத்தை மறுப்பது, சர்வாதிகாரம் என்பது அவர்களுக்கு தெரியாதோ?

முதலாளிகள் வீசும் எலும்புத்துண்டுகளுக்காக வாலாட்டும் நாய்கள், குரைப்பதை கொஞ்சம் குறைத்துக் கொண்டால் நல்லது.

******

ஈழத் தமிழ் மேட்டுக்குடியினரை பயமுறுத்தும் கம்யூனிச ஆவி!

ஈழத்திலும், புலம்பெயர்ந்தும் வாழும் தமிழர்கள் பலரை, அண்மைக் காலமாக ஓர் ஆவி மிரட்டி வருவதாக, அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. "கம்யூனிச ஆவி" என்று அழைக்கப்படும் ஓர் அமானுஷ்ய சக்தி, குறிப்பாக படித்த, வசதியான மேட்டுக்குடி வர்க்கத்தினரை மட்டுமே குறி வைத்து தாக்கி வருகின்றதாம். 

கம்யூனிச ஆவியால் பாதிக்கப் பட்டவர்கள், சிவப்பு நிறத்தை எங்கே கண்டாலும் அலறுகின்றனராம். அதனால், அவர்கள் சிவப்பு வர்ண ஆடைகள், சிவப்பு நிறப் உணவுப் பதார்த்தங்கள், ஆகியனவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். போக்குவரத்து நெரிசலில் சிக்னலில் சிவப்பு விழுந்ததும், அலறியடித்துக் கொண்டு வண்டி ஓட்டி விபத்துக்குள்ளான நபர்கள் பலர், வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். 

இதற்கென அமெரிக்காவில் இருந்து விசேடமாக அழைத்து வரப் பட்ட, உலகிலேயே அதிக பீஸ் வாங்கும் மருத்துவர் ஒருவர் நோயாளிகளை பார்வையிட்டுள்ளார். 25 வருடங்களுக்கு முன்னர், இதே கம்யூனிச ஆவி ஐரோப்பிய மக்களை பிடித்தாட்டியதாகவும், அதனை நேட்டோ படையினர் பிடித்து சீசாவில் அடைத்து, அட்லாண்டிக் சமுத்திரத்தில் வீசியதாகவும் தெரிவித்தார். 

25 வருடங்களுக்குப் பின்னர் திரும்பி வந்துள்ள கம்யூனிச ஆவி, முன்தோன்றிய மூத்தகுடி தமிழினத்திற்குள் புகுந்தது எப்படி என்பதை பலரும் ஆராய்ந்து வருகின்றனர். பல அரசியல் கருத்து முரண்பாடு கொண்டவர்களும், கம்யூனிச ஆவியை விரட்டுவதற்காக வர்க்க அடிப்படையில் ஒன்று சேர்ந்துள்ளனர். நேற்று வரையிலும், கீரியும் பாம்புமாக சண்டையிட்டுக் கொண்டிருந்த, தீவிர புலி ஆதரவாளர்களும், தீவிர ராஜபக்சே ஆதரவாளர்களும், தமது தசாப்த கால பகைமையை மறந்து ஒன்று சேர்ந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. 

கம்யூனிச ஒழிப்புப் போரில், சிறிலங்கா பேரினவாத அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக, வலதுசாரி- தமிழ் தேசியவாதிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த, அமெரிக்க தலைமைப் பூசாரி ஜோன் கேரியை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரமுகர்கள், தாம் இந்த விடயத்தில் இணக்க அரசியல் நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தனர். சிங்களவன், தமிழன் என்று இனப் பகை கொண்டு போரிட்டாலும், மேட்டுக்குடி வர்க்கம் என்ற அடிப்படையில் தாம் ஒரே இனம் என்று, சிங்கள- தமிழ் அரசியல் தலைவர்கள் ஒரே குரலில் கூறினார்கள்.

******

டைனோசர் பார்த்த குருடர்கள் 

மெத்தப் படித்த நண்பர் ஒருவர், "கம்யூனிசம் ஒரு டைனோசர் காலத்து சமாச்சாரம்" என்ற பீடிகையுடன் உரையாடலை ஆரம்பித்தார். அவருக்கு நான் "யானை பார்த்த குருடர்கள்" கதை சொல்லி விட்டு, ஒருவேளை அவர் பார்த்த கம்யூனிச யானை டைனோசராக தெரிந்திருக்கும் என்று பதில் கூறினேன்.

அவரது கேள்விகள் எல்லாவற்றிற்கும் பொறுமையாக பதில் கூறி விட்டு, இப்போது நான், நிகழ்காலத்தில் உயிர்ப்புடன் இருக்கும் முதலாளித்துவம் பற்றிய சில கேள்விகளை, உங்களிடம் கேட்க விரும்புகிறேன் என்று சொன்னேன். அதற்குப் பிறகு இன்னமும் ஆளைக் காணோம். 

 ஒரு வேளை, ஜூராசிக் பார்க்கில் டைனோசர் சம்பந்தமான ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார் போலும்.


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
யாழ்ப்பாணத்தில் கம்யூனிச மே தின பேரணி!! தமிழ் ஊடகங்கள் இருட்டடிப்பு!!

Monday, May 04, 2015

நோர்வீஜிய இளம் கம்யூனிஸ்டுகளுடன் சில நாட்கள்


வட ஐரோப்பிய நாடான நோர்வேயில், அரசியல் கட்சிகள் பாடசாலைகளுக்கு சென்று மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய முடியும். எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் அப்படி அனுமதிப்பதில்லை. அங்குள்ள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியான Tjen folket (மக்கள் சேவையாளர்கள்) அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றது. அதனால், இன்று அந்தக் கட்சியின் எழுபது சதவீத உறுப்பினர்கள் முப்பது வயதிற்கும் குறைவான இளையோர் என்பது குறிப்பிடத் தக்கது.

நோர்வேயில் ஒரு பாரம்பரிய கம்யூனிஸ்ட் கட்சி (Norges Kommunistiske Parti) இருக்கிறது. அது இப்போதும் இயங்கி வருகின்றது.  ஸ்டாலினின் மறைவுக்குப் பின்னர் குருஷேவ் ஆதரவு நிலைப்பாடு எடுத்தமையினால், அந்த நாட்டில் புதியதொரு கம்யூனிஸ்ட் கட்சி தோன்றியது.

எழுபதுகளில், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் நடந்த மாணவர் எழுச்சிக்குப் பின்னர், மாவோ சிந்தனைகளை ஏற்றுக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் தோன்றின. நோர்வேயில் அது Arbeidernes Kommunistparti (AKP) என்ற பெயரில் கட்சியாக இயங்கியது. ஆயிரக் கணக்கான உறுப்பினர்களுடன் வளர்ந்து வந்தாலும், தொண்ணூறுகளுக்கு பின்னர் பின்னடவை எதிர்நோக்கியது.

முன்னாள் மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து உருவான Rødt (சிவப்பு), தற்போது ஒரு தீவிர இடதுசாரிக் கட்சியாக மட்டும் இருக்கிறது. கோட்பாடுகளை கைவிட்டு விட்டு, இடதுசாரி அரசியல் பிரச்சாரங்கள் மூலம் மக்களை கவர்ந்து வருகின்றது. அதனால், அவர்களுடன் முரண்பட்ட கொள்கைப் பற்றுக் கொண்ட பிரிவினர், Tjen folket கட்சியை ஸ்தாபித்தார்கள். Tjen folket தேர்தல் அரசியலில் ஆர்வம் காட்டுவதில்லை. இனவெறிக்கு எதிரான வெகுஜன அமைப்பு போன்றவற்றின் ஊடாக, மக்கள் மத்தியில் வேலை செய்து வருகின்றது.

ஒரு மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாக தன்னை அடையாள படுத்தும் Tjen folket, இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு அரசியல் சித்தாந்தம் போதித்து வருகின்றது. ஒவ்வொரு வருடமும் நடக்கும் அரசியல் வகுப்புகளில் ஆயிரக் கணக்கான இளையோர் பங்குபற்றுகின்றனர். கார்ல் மார்க்சின் மூலதனம் முதல், மாவோவின் மேற்கோள்கள் வரை அனைத்து மார்க்சிய நூலகளையும் கற்று விவாதித்து வருகின்றனர். தாம் கற்றறிந்த விடயங்களை புதிதாக சேரும் இளைஞர்களுக்கும், மக்களுக்கும் எடுத்துக் கூறி வருகின்றனர். இதன் மூலம் கட்டுக்கோப்பான, கொள்கைப் பிடிப்பு கொண்ட கட்சியாக இருந்து வருகின்றது.

2011 - 2012 காலப் பகுதியில், நான் நோர்வேயில் உள்ள Tromsø எனும் நகரில் வசித்து வந்தேன். அங்கு வேலை செய்த காலத்தில், Tjen folket கட்சியுடன் தொடர்பேற்பட்டது. அரசியல் பிரச்சார நடவடிக்கையின் ஒரு பகுதியாக, Tromsø வில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு விஜயம் செய்த நேரம் எடுத்த படம் மேலே உள்ளது.

அந்தப் பாடசாலையில் உள்ள உணவுச்சாலைக்கு அருகில், Tjen folket கட்சியின் துண்டுப்பிரசுரங்கள், சஞ்சிகைகள், மற்றும் மார்க்சிய- லெனினிச தத்துவார்த்த நூல்கள் காட்சிக்கு வைத்திருந்தோம். பெருமளவு மாணவர்கள் வந்து பார்த்து, அவற்றை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். அரச பாடத் திட்டத்தில், கம்யூனிசம் பற்றிய எதிர்மறையான கருத்துக்கள் பரப்பப் பட்ட போதிலும், மாணவர்களுக்கு அதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற தூண்டுதல் இருந்துள்ளது. அதனால், பல வகையான கேள்விகளை கேட்டு, தமது சந்தேகங்களை தீர்த்துக் கொண்டனர்.

இங்கேயுள்ள படத்தில் எனக்கு அருகில் நிற்கும் இரண்டு இளைஞர்களுக்கும், வயது 17 க்கு மேலே இருக்காது. இருவரும் மிக இளம் வயதிலேயே புரட்சிகர அரசியலுக்கு வந்தவர்கள். மிகத் தீவிரமான கம்யூனிச ஆர்வலர்கள். பிரச்சாரம் மட்டுமல்லாது, சுவரொட்டிகள் ஓட்டுவது, துண்டுப்பிரசுரங்கள் விநியோகிப்பது போன்ற வெளி வேலைகளிலும் ஈடுபடுவதுண்டு.

அநேகமாக, நோர்வே அரசு எம் மீது எந்த அடக்குமுறையும் பிரயோகிப்பதில்லை. ஆனால், தீவிர வலதுசாரி இளைஞர்கள் தெருவில் சண்டைக்கு வருவார்கள். பல சமயங்களில், நாஸிகளுடன் கைகலப்புக்கு செல்லாமல் தவிர்ப்பதே பெரிய பாடாக இருக்கும். கட்சியில் புதிதாக சேரும், 14, 15 வயதும் ஆகாத இளைஞர்கள் கூட, பாசிஸ்டுகளுக்கு எதிரான  போராட்ட உணர்வு கொண்டவர்களாக இருக்கின்றனர். 

இந்தப் படத்தில், எனக்கு இடதுபுறத்தில் நிற்கும் இளந் தோழர், நோர்வேயின் உச்சியில் உள்ள பின்மார்க் என்ற மாகாணத்தை சேர்ந்தவர். அவரது பெற்றோர் நோர்வீஜிய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள். 2 ம் உலகப்போர் நடந்த காலத்தில், நோர்வே முழுவதும் ஜெர்மன் நாஸி படைகளினால் ஆக்கிரமிக்கப் பட்டது. அவர்களை எதிர்த்து போரிட்ட சோவியத் படைகள், அமெரிக்க- பிரிட்டிஷ் படைகள் வருவதற்கு முன்னரே, பின்மார்க் பகுதியை விடுதலை செய்திருந்தன. அதனால், பொதுவாகவே பின்மார்க் மக்கள் சோவியத் யூனியனுக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக உள்ளனர். இதனை அந்த இளந் தோழருடனான உரையாடலின் போது அறிந்து கொள்ள முடிந்தது. 



இது தொடர்பாக Tjen folket கட்சியின் இணையத் தளத்தில் வந்த தகவலின் இணைப்பு: 


Wednesday, April 17, 2013

அமெரிக்க அங்கீகாரம் பெற்ற கம்யூனிச இனவழிப்பு : ஊடகங்களில் இருட்டடிப்பு

[இந்தோனேசியாவின் இரகசியமான இனப்படுகொலை] 
(இரண்டாம் பாகம்)



இந்தோனேசியா ஒரு டச்சுக் காலனியாக இருந்தது. இரண்டாம் உலகப்போர் காலத்தில், ஜப்பானால் ஆக்கிரமிக்கப் பட்டது. ஆனால், சுகார்னோ தலைமையிலான இந்தோனேசிய தேசியவாதிகள், ஜப்பானுடன் ஒத்துழைத்தார்கள். ஜப்பானிய ஏகாதிபத்திய படைகளின் பாதுகாப்பு நிழலின் கீழே ஒரு தனி நாட்டை அமைத்துக் கொண்டார்கள். அந்தக் காலத்தில், இந்தியாவின் விடுதலைக்காக போராடிய தேசியவாதியான நேதாஜியும், அதே மாதிரியான திட்டத்தை மனதில் வைத்திருந்தார். அதாவது, இந்தியாவை ஜப்பானிய படைகள் கைப்பற்றிய பின்னர், அங்கே நேதாஜி தலைமையில் "இந்தியர்களின் நாடு" உருவாகி இருக்கும்.

இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், பழைய ஐரோப்பிய காலனிய எஜமானர்கள், ஆசியாவில் தாம் இழந்த காலனிகளுக்கு உரிமை கோரினார்கள். நெதர்லாந்து, இந்தோனேசியாவை மீண்டும் தனது அதிகாரத்தின் கீழே கொண்டு வர விரும்பியது. ஆனால், போருக்கு பின்னர் புதிய உலக வல்லரசாகி இருந்த அமெரிக்கா அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இந்தோனேசியாவுக்கு சுதந்திரம் கொடுக்குமாறு அழுத்தம் கொடுத்தது. அமெரிக்க அழுத்தம் காரணமாகத் தான், பிரிட்டனும் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்தது. ஆசியக் கண்டத்தின், இரண்டு மிகப்பெரிய நாடுகளான இந்தியாவும், இந்தோனேசியாவும், சில ஒற்றுமைகளை கொண்டுள்ளன. இந்தியாவில் நேரு எந்த வகையான கொள்கைகளை கொண்டிருந்தாரோ, அதே மாதிரியான கொள்கைகளை, இந்தோனேசியாவில் சுகார்னோ கொண்டிருந்தார்.

நேருவும், சுகார்னோவும் சேர்ந்து, காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலையடைந்த, ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க விரும்பினார்கள். அதற்காக, இந்தோனேசியாவில் பாண்டுங் என்ற இடத்தில் ஒரு மகாநாடு நடந்தது. இலங்கையில் இருந்து பண்டாரநாயக்கவும் கலந்து கொண்டார். உண்மையில், அமெரிக்கா இந்தக் கூட்டமைப்பை விரும்பவில்லை என்று தெரிகின்றது. அதனால் தான், CIA பண்டாரநாயக்கவை கொலை செய்தது என்றும் ஒரு கதை உலாவுகின்றது. நேருவை விமான விபத்தொன்றில் கொல்வதற்கு CIA சதி செய்ததாகவும் ஒரு தகவல். (De CIA Moorden in de Derde Wereld, Kunhanandan Nair & Michael Opperskalski ) இதன் தொடர்ச்சியாக, சுகார்னோவை அகற்றிய 1965 சதிப்புரட்சி அமைந்தது. அந்த சதிப்புரட்சியில், CIA யின் பங்களிப்பு எந்தளவுக்கு இருந்தது என்பதை, பின்னர் விரிவாகப் பார்ப்போம்.

பாண்டுங் மகாநாட்டுக்கு போட்டியாக, இன்னொரு கூட்டமைப்பு உருவானது. யூகோஸ்லேவியாவில் டிட்டோ, எகிப்தில் நாசர் ஆகியோரின் முயற்சியில் "அணிசேரா நாடுகளின் உச்சி மகாநாடு" நடந்தது. சுகார்னோ தனது பாண்டுங் மகாநாட்டு திட்டங்களை மேற்கொண்டு எடுத்துச் செல்ல முடியாமல் இருந்தது மட்டுமல்ல, அவரும் அணிசேரா மகாநாட்டில் கலந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உண்டானது. இந்தப் போட்டியின் காரணமாக, இறுதி வரைக்கும் சுகார்னோவுக்கு உறுதுணையாக இருந்தது சீனா மட்டுமே. அதனால், இந்தோனேசியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் நெருக்கம் அதிகரித்தது.

ஸ்டாலினின் மரணத்தின் பின்னர், சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பிளவு தோன்றியது. சில கட்சிகள் குருஷேவின் சோவியத் யூனியனையும், சில கட்சிகள் மாவோவின் சீனாவையும் ஆதரித்தன. இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி (PKI)  சீன சார்பு நிலைப்பாடு எடுத்து. இதனால், சுகார்னோ, சீனா, இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு (PKI) இடையில் ஒரு முக்கோண உறவு உருவானது. இந்தோனேசிய அரசில், PKI யின் செல்வாக்கு அதிகரித்தது. அது "கத்தியின்றி, இரத்தமின்றி ஒரு புரட்சியை வெல்லலாம்..." என்ற மாயையை தோற்றுவித்திருக்கலாம். அன்றிருந்த PKI தலைவர் அய்டீத், அது போன்ற ஒரு திரிபுவாத பாதையை தேர்ந்தெடுத்ததாக, புலம்பெயர்ந்து வாழும் PKI உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். அது உண்மையாயின், "கத்தியின்றி, இரத்தமின்றி" புரட்சி நடத்தும் கோட்பாடு, இறுதியில் கட்சியின் அழிவுக்கே வழிவகுத்தது.

இதற்கிடையே, இந்தோனேசியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய இன்னொரு சர்வதேச அரசியல் நிலைமை பற்றியும் குறிப்பிட வேண்டும். இந்தோனேசிய மொழி பேசும் மக்களும், மலே மொழி பேசும் மக்களும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள். இரண்டு மொழிகளுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை. தமிழும், மலையாளமும் மாதிரி என்ற அளவுக்கு கூட வித்தியாசம் கிடையாது. ஈழத் தமிழும், இந்தியத் தமிழும் மாதிரி நெருக்கமானவை.  ஆனால், இரண்டு வேறு மொழிகளாக வளர்க்கப் பட்டன.  இந்தோனேசியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையிலான மிகப்பெரிய பிரிவினை, காலனியாதிக்க காலத்தில் ஏற்பட்டது. அதாவது ஆங்கிலேயர்கள் காலனிப் படுத்திய பகுதி தான், இன்றைய மலேசியா. இந்தோனேசியா நெதர்லாந்திடம் இருந்து சுதந்திரமடைந்த பின்னரும், மலேசியா பிரிட்டிஷ் காலனியாக தொடர்ந்தது.

1963 ம் ஆண்டு, மலேசியாவுக்கு சுதந்திரம் கொடுக்கும் நேரம், அந்த நாடு இந்தோனேசியாவுக்கு சொந்தமானது என்று சுகார்னோ உரிமை கோரினார். இந்தோனேசியப் படைகள், மலேசியப் பகுதிகளினுள் ஊடுருவி மட்டுப்படுத்தப் பட்ட இராணுவ நடவடிக்கையிலும் இறங்கியது. இறுதியில், மலேசியா கையை விட்டுப் போனதால் ஏற்பட்ட விரக்தி, இந்தோனேசிய அரசின் மீது நம்பிக்கையின்மையை உருவாக்கியது. இராணுவத்திற்குள் தேசிய உணர்வு மேலோங்கியது. PKI அதை சாட்டாக வைத்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உணர்வலைகளை தூண்டி விட்டது. உண்மையில், மலேசிய பிரச்சினையின் எதிர்வினையாக, அரசுக்கு ஆதரவளித்த கம்யூனிஸ்ட் கட்சி பலம்பெற்று வந்தது.

கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அணி (Pemuda Rakjat) யும், மகளிர் அணி (Gerwani) யும் தீவிரமாக இயங்கத் தொடங்கின. கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பு, கல்லூரிகளில் இயங்கிக் கொண்டிருந்த இஸ்லாமிய மாணவர் அமைப்பை தடை செய்ய வேண்டுமென கோரியது. பொதுவாக, நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் இளைஞர்களின் பிரசன்னம் அதிகரித்துக் காணப்பட்டது. இது பலருக்கு எரிச்சலைக் கொடுத்தது. ஒரு பக்கம், நிலப்பிரபுக்கள் கம்யூனிஸ்டுகளை வெறுத்தார்கள். ஏனென்றால், நிலமற்ற விவசாயிகள், தமக்கு வேண்டிய நிலங்களை ஆக்கிரமிக்குமாறு, கம்யூனிஸ்ட் கட்சி ஊக்குவித்தது. மறுபக்கத்தில், இஸ்லாமிய மதகுருக்களின் வெறுப்பை சம்பாதித்தார்கள்.

இஸ்லாமிய மதகுருக்கள், வெளிப்படையாகவே நிலப்பிரபுக்களின் பக்கம் சேர்ந்து கொண்டார்கள்.  "கடவுள் மறுப்பாளர்களான கம்யூனிஸ்டுகளை அழிப்பதற்கு, அமெரிக்காவுடன் மட்டுமல்ல, எந்தப் பிசாசுடனும் கூட்டுச் சேரலாம்." இஸ்லாமிய மதவாதிகளின் நாஸ்திக எதிர்ப்பு பிரச்சாரம், கடவுள்  நம்பிக்கையுள்ள ஏழை விவசாயிகளை மனம் திரும்ப வைத்தது. இது பின்னர் நடந்த இனப்படுகொலையில் திருப்புமுனையாக அமைந்தது. கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த, ஏழை விவசாயிகளான கீழ் மட்ட உறுப்பினர்கள் கூட, கம்யூனிச அழிப்பு படுகொலைகளில் பங்கெடுத்தனர். அதற்கு காரணம், குறிப்பிட்ட அளவு நிலத்தை அவர்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்ற உத்தரவாதத்தை, இஸ்லாமிய மதகுருக்கள் நிலப்பிரபுக்களிடம் இருந்து பெற்றுக் கொடுத்தனர்.

30 செப்டம்பர் 1965, அன்றைய தினம் இந்தோனேசியாவின் தலைவிதியை தீர்மானித்தது. அன்றிரவு ஏழு இராணுவ உயர் அதிகாரிகள் கடத்திச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு கீழே வேலை செய்த, கீழ் நிலை அதிகாரிகள், அவர்களுக்கு விசுவாசமான இராணுவத்தினர், திடீர் சதிப்புரட்சியை நடத்தி இருந்தனர். சதிப்புரட்சியை அடக்கி, சர்வாதிகார ஆட்சியை கொண்டு வந்த சுகார்ட்டோவும், சில மேற்கத்திய ஊடகங்களும் அறிவித்தது போன்று, அது ஒரு கம்யூனிச சதிப்புரட்சி அல்ல. இராணுவ உயர் அதிகாரிகளின் ஊழல், ஆடம்பரமான வாழ்க்கை, அதிகார துஷ்பிரயோகம், இவற்றினால் வெறுப்புற்ற படையினரில் ஒரு பிரிவினரின் வேலை அது.

வான்படையில் சில  முற்போக்கான அதிகாரிகள், அந்த சதிப்புரட்சிக்கு ஆதரவளித்தனர். அவர்களுக்கு, இரகசியமாக சீன ஆயுதங்கள் வந்திறங்கி இருந்தன. PKI தலைவர் அய்டீத் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, கம்யூனிச இளைஞர் அணி உறுப்பினர்களுக்கு, வான்படைத் தளத்தில் இராணுவப் பயிற்சி வழங்கப் பட்டது. இருப்பினும், வான்படை கம்யூனிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்ததாக, தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. வான்படை தளபதிகள், எந்தளவு முற்போக்காக இருந்த போதிலும், ஒரு கம்யூனிசப் புரட்சிக்கு ஆதரவளிக்கவில்லை. காலம் தனக்கு சார்பாக கனிந்து வருவதாக,  PKI தப்புக் கணக்குப் போட்டது. (ஆதாரம்: De Stille Genocide, Lambert J.Giebels)

சதிப்புரட்சியில் ஈடுபட்டவர்களுக்கு, PKI அரசியல் ஆதரவு மட்டுமே வழங்கியது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் செக்கோஸ்லேவியாவில் நடந்தது போன்று, ஒரு இடைக்கால அரசாங்கம் அமைக்கப் பட்டால், அது சில வருடங்களின் பின்னர், உழவர், தொழிலாளரின் புரட்சிக்கு வழிவகுக்கும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சி கனவு கண்டது. ஆனால், அது வெறும் கனவாகவே இருந்து விட்டது. சதிப்புரட்சியில் ஈடுபட்டவர்களின் நிர்வாக சீர்கேடுகள், திட்டமிடல் குறைபாடுகள், பிற படைப்பிரிவுகளுடன் தொடர்பின்மை, இவை போன்ற காரணங்களினால், சதிப்புரட்சி அதிக பட்சம் 24 மணிநேரம் கூட நீடிக்கவில்லை. அந்நாட்களில் அதிகம் கவனிக்கப்படாத இராணுவ அதிகாரியான சுகார்ட்டோ, தனக்கு விசுவாசமான படையினருடன் தலைநகரை முற்றுகையிட்டார். வெளியுதவி எதுவும் கிடைக்காததால், சதிப்புரட்சியில் ஈடுபட்ட படையினர், எதிர்ப்பு காட்டாமல் சரணடைந்தனர்.

உண்மையில், அதற்குப் பிறகு தான் படுகொலைகள் தொடங்கின. விமானப்படை முகாமுக்கு அருகில் கொன்று புதைக்கப்பட்ட ஆறு இராணுவ அதிகாரிகளின் உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டன. சில உடல்கள் சிதைவடைந்து காணப்பட்டதால், அதை வைத்து வதந்திகள் பரப்பப் பட்டன. கம்யூனிசக் கட்சி இளைஞர் அணியை சேர்ந்த பெண்கள், அந்த அதிகாரிகளை சித்திரவதை செய்ததாகவும், கண்களை தோண்டியெடுத்து, பிறப்புறுப்புகளை அறுத்ததாகவும் கதைகள் புனையப்பட்டன. அந்தக் கதையில் எந்தவித உண்மையும் இல்லாத போதிலும், பெருமளவு அப்பாவி மக்கள் அதனை நம்பினார்கள். இப்போதும் நம்புகின்றார்கள். ஏனென்றால், இராணுவ அதிகாரிகளின் கொலைகளை பிரச்சாரம் செய்யும் நோக்கில் தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் ஒன்று, நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் காண்பிக்கப் பட்டது. ஒவ்வொரு வருடமும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டது.

சதிப்புரட்சிக்கு முன்னர், கல்லூரிகளில் மத அடிப்படைவாதம் பேசிய, இஸ்லாமிய மாணவர் அமைப்புகளை தடை செய்ய வேண்டுமென, கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்து வந்தது.  கல்லூரிகளுக்குள் இரண்டு பிரிவினரும் எதிரிகள் போல நடந்து கொண்டாலும், அப்போது எந்த கைகலப்பும்  நடைபெறவில்லை. சுஹார்ட்டோவின் இராணுவ சதிப்புரட்சிக்குப் பின்னர், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கை ஓங்கியது. கம்யூனிச எதிரிகளுடன் கணக்குத் தீர்த்துக் கொள்ளுமாறு, இஸ்லாமிய மாணவர் அமைப்புகளை தூண்டி விட்டது. இந்தோனேசியாவின் இனப்படுகொலை கல்லூரி மாணவர் விடுதிகளில் ஆரம்பமாகியது.

ஒவ்வொரு நகரத்திலும், கிராமத்திலும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், படையினரும் கூட்டுச் சேர்ந்து இனப்படுகொலை செய்யக் கிளம்பினார்கள். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், அவ்வாறு சந்தேகிக்கப் பட்டவர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும், ஆயுதமேந்திய காடையரினால் படுகொலை செய்யப் பட்டனர். சில சமயம், அயல் வீட்டுக்காரனுடன் காணித் தகராறு காரணமாக பகை இருந்தாலும், கம்யூனிஸ்ட் என்று பிடித்துக் கொடுத்தார்கள். இவ்வாறு கம்யூனிஸ்ட் அழிப்பு என்ற பெயரில், பலர் தமக்குப் பிடிக்காதவர்களையும் கொலை செய்தனர். மொத்தம் எத்தனை பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்ற விபரம் யாருக்கும்  தெரியாது. குறைந்தது பத்து இலட்சம் அல்லது இருபது இலட்சம் பேர் படுகொலை செய்யப் பட்டிருக்கலாம் என கணக்கிடப் பட்டுள்ளது.

உண்மையில், இந்தோனேசியாவில் ஒரு இனப்படுகொலை நடத்தப்பட வேண்டுமென,  சிலர் முன்கூட்டியே இரகசியமாக திட்டம் தீட்டி இருக்க வேண்டும். அந்தக் காலகட்டத்தில், அடுத்தடுத்து நடந்த பல சம்பவங்களை வைத்துப் பார்க்கும் பொழுது, அந்த சந்தேகம் ஏற்படுவது இயல்பு. இனப்படுகொலை திட்டத்தை நிறைவேற்றுவதற்கு, 30 செப்டம்பர் நடந்த சதிப்புரட்சி ஒரு சாட்டாக பயன்படுத்தப் பட்டுள்ளது. ஏனெனில், சதிப்புரட்சிக்கு காரணம், பாதுகாப்புப் படைகளின் உள்ளே நிகழ்ந்த அதிகார மோதல் என்பதை நிரூபிக்க பல சான்றுகள் இருந்தன. அதே நேரம், கம்யூனிஸ்ட் கட்சியை தொடர்பு படுத்துவதற்கான ஆதாரங்கள் மிகவும் பலவீனமாக உள்ளன. இருந்த போதிலும், "கம்யூனிஸ்ட் அழித்தொழிப்பு" என்ற அளவுக்கு செல்ல வேண்டிய காரணம் என்ன?

ஏற்கனவே, CIA க்கும், சுஹார்ட்டோவுக்கும் இடையில் இரகசிய தொடர்பிருந்திருக்கலாம்.  கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் 5000 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியலினை, அமெரிக்க தூதரகம் சுஹார்ட்டோவுக்கு விசுவாசமான படைகளிடம் கொடுத்திருந்தது. இந்த தகவலை ஜகார்த்தாவில் பணியாற்றிய CIA அதிகாரியான Clyde McAvoy  உறுதிப் படுத்தி உள்ளார். அவரின் வாக்குமூலத்தின் படி, தீர்த்துக் கட்ட வேண்டிய கம்யூனிஸ்டுகளின் பட்டியலையும், வாக்கிடோக்கி கருவிகளையும், CIA  வழங்கி இருந்தது. அதற்கு முன்னரே, கம்யூனிச எதிர்ப்பு அரசியல்வாதிகளையும், படையினரையும் விலைக்கு வாங்கும் பொறுப்பு, அன்றைய வெளிவிவகார அமைச்சர், ஆதம் மாலிக்கிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது.  (ஆதாரம்: Legacy of Ashes: The History of the CIA, by Tim Weiner) ஆகவே, இந்தோனேசிய இனப்படுகொலையில், அமெரிக்க அரசும் சம்பந்தப் பட்டிருந்தமை, இத்தால் உறுதிப் படுத்தப் படுகின்றது.

"கொள்கை வேறுபாடு காரணமாக, பெருந்தொகையான மக்களை படுகொலை செய்தால், அதனை இனப்படுகொலை என்று அழைக்கலாமா?"  என்று சிலர் கேள்வி கேட்கலாம். இன்னொரு இனத்தை, அல்லது மதத்தை சேர்ந்தவர்களை கொன்று குவிப்பது மட்டுமே இனப்படுகொலை ஆகும், என்று சிலர் கறாராக வரையறுக்கலாம்.  அதற்கும் ஆதாரங்கள் உள்ளன. இந்தோனேசியாவில், எல்லா இடங்களிலும் பரவலாக வாழும், சீன சிறுபான்மை இனத்தவர்கள் நிறையப்பேர், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களாக இருந்தனர். வேற்று மொழி பேசும் சீனர்கள், கம்யூனிஸ்டுகளாகவும் இருந்ததால், ஈவிரக்கமின்றி  படுகொலை செய்யப்பட்டனர். கல்லூரிகளில் நடந்த படுகொலைகளில், சீன மாணவர்கள் தங்கியிருந்த விடுதிகளை குறிவைத்து தாக்கினார்கள். (அந்தக் காலத்திலும், பிற்காலத்தில் சுஹார்ட்டோவின் இறுதிக் காலத்தில், தொன்னூறுகளில் நடந்த சீன விரோத இனக்கலவரங்களிலும், சீன பெரு முதலாளிகள் பாதுகாக்கப் பட்டனர்.)

அதே போல, இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் பாலித் தீவிலும், பெருமளவு மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். அந்த தீவின் சனத்தொகையில் பத்தில் ஒருவராவது கொல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. கிழக்கு இந்தோனேசிய தீவுகளான, புலோரெஸ், அம்பொன் ஆகிய இடங்களில் பெருமளவு கிறிஸ்தவர்கள், வேறு மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கின்றனர். அங்கேயும் படுகொலைகள் நடந்துள்ளன. கிறிஸ்தவ பாதிரியார்களும், இனப்படுகொலையாளிகளுடன் ஒத்துழைத்தனர். கொலைப் பட்டியலில் தமது பெயர்களும் இருப்பதாக நினைத்தவர்கள், தேவாலய உறுப்பினர் அத்தாட்சிப் பத்திரம் கேட்ட பொழுது, அதைக் கொடுக்க பாதிரிகள் மறுத்துள்ளனர். சில சமயம், பாவமன்னிப்பு கேட்க வரும் நபர், தான் ஒரு PKI உறுப்பினர்/ஆதரவாளர் என்ற உண்மையை ஒப்புக் கொண்டு விட்டால், அவரை பாதிரியாரே கொலைகாரர்களிடம் பிடித்துக் கொடுத்தார். (ஆதாரம்: De Stille Genocide, Lambert J.Giebels)

இன்று வரையில், இனப்படுகொலை என்றால் என்னவென்பதற்கு, சரியான வரைவிலக்கணம் கிடையாது. நாஜிகளின் யூத இன அழிப்பை குறிப்பதற்கு உருவாக்கப்பட்ட சொல், இன்று பல நாடுகளிலும் பயன்படுத்தப் படுகின்றது. இந்தோனேசியாவில், "கம்யூனிஸ்டுகளை கொன்றது இனப்படுகொலை ஆகாது" என்று வாதாடுபவர்கள், எதனை  அடிப்படையாக கொண்டு கம்போடியாவில் இனப்படுகொலை நடந்ததாக கூறுகின்றார்கள்? பொல்பொட் ஆட்சிக் காலத்தில் நடந்த, "கம்போடிய இனப்படுகொலையை" விசாரிப்பதற்கு ஐ.நா. சிறப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. ஏன் இந்தோனேசியாவில் அத்தகைய நீதிமன்றம் ஒன்று செயற்படவில்லை? ஏன் சர்வதேச சமூகம் அது குறித்து பாராமுகமாக இருக்கிறது?

(முற்றும்)

முதலாம் பாகத்தை வாசிப்பதற்கு:
இந்தோனேசியாவின் இரகசியமான இனப்படுகொலை


உசாத்துணை:
1. De Stille Genocide, Lambert J.Giebels
2. De Groene Amsterdammer 28.02.2013
3. De Indonesische coup van 1965 (Historisch Nieuwsblad)
4. De CIA Moorden in de Derde Wereld, Kunhanandan Nair & Michael Opperskalski
5. Legacy of Ashes: The History of the CIA, Tim Weiner

1965 ம் ஆண்டு, ஜகார்த்தா நகரில் நடந்த, இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் வருடாந்த மகாநாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ:

Friday, March 08, 2013

இந்தோனேசியாவின் இரகசியமான இனப்படுகொலை



"மேற்குலகிற்கு கிடைத்த நற்செய்தி!"
- இந்தோனேசிய இனப்படுகொலையை மகிழ்வுடன் வரவேற்று தலையங்கம் தீட்டிய டைம்ஸ் வார இதழ் (ஜூலை 1966).

"கம்யூனிஸ்டுகளை கொலை செய்வது ஒரு சுகமான அனுபவம்! அவர்களை  (இனப்) படுகொலை செய்ததற்காக பெருமைப் படுகிறேன். போர்க்குற்றம் என்றால் என்னவென்று வென்றவர்களே தீர்மானிக்கின்றனர். கம்யூனிசத்திற்கு எதிரான போரில் நாங்கள் வென்று விட்டோம்."
- 1965 ம் ஆண்டு, இந்தோனேசிய இனப்படுகொலையில் ஈடுபட்ட ஒரு கொலைகாரனின் சாட்சியம்.

உலகம் முழுவதும் நடக்கும் இனப்படுகொலைகளை பற்றிய தகவல்களை சேகரிக்கவும், மக்களுக்கு நினைவு படுத்தவும் தயங்காத மனித உரிமை நிறுவனங்களும், ஊடகங்களும், இந்தோனேசியாவில் நடந்த இனப்படுகொலை பற்றி வாயைத் திறப்பதில்லை. எங்காவது ஒரு நாட்டில், இனப்படுகொலை நடந்த பிறகாவது, ஐ.நா. மன்றத்தை கூட்டி விசாரணை நாடகமாடும் சர்வதேச சமூகம், இந்தோனேசிய இனப்படுகொலை நடந்து ஐம்பது வருடங்கள் கடந்த பின்னரும், ஒரு கண்டனத் தீர்மானம் கூட நிறைவேற்றவில்லை. ஏனிந்த இருட்டடிப்பு? ஏனிந்த பாரபட்சம்? ஏனிந்த புறக்கணிப்பு? காரணம்: இந்தோனேசிய இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்கள், கம்யூனிஸ்டுகள். எந்த நாட்டிலாவது, கம்யூனிஸ்டுகள் படுகொலை செய்யப்பட்டால், சர்வதேச நீதிமன்றமோ அல்லது ஐ.நா. மன்றமோ தலையிட்டு விசாரிக்க மாட்டாது. இந்தோனேசியா மட்டுமல்ல, சிலி, குவாத்தமாலா போன்ற நாடுகளில் நடந்த "கம்யூனிஸ எதிர்ப்பு இனப்படுகொலைகள்", இன்று வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசப் பட்டு விட்டன.



அண்மையில் இந்தோனேசியாவுக்கு ஆவணப்படம் ஒன்றை தயாரிக்க சென்ற இயக்குனர்  Joshua Oppenheimer, ஐம்பது வருடங்களுக்கு முன்னர், அந்த நாட்டில் நடந்த இனப்படுகொலை பற்றி அறிந்து கொண்டார்.  இனப்படுகொலையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களும், கொலைகாரர்களும் அருகருகே வாழ்ந்து வருவதைக் கண்டார். பாதிக்கப்பட்ட மக்கள் குற்ற உணர்ச்சியுடன் வாழ்வதையும், இனபடுகொலை செய்தவர்கள் அதனை பெருமையுடன் சொல்லிக் கொண்டு திரிவதையும் நேரில் பார்த்தார். அப்படியானவர்கள் சிலரை தெரிந்தெடுத்து, ஒரு ஆவணப்படம் தயாரித்தார். அதிலே இனப்படுகொலை செய்தவர்கள், தாமாகவே முன்வந்து நடித்திருந்தனர். "கம்யூனிஸ்டுகளை கொல்வது எந்தளவு சுகமான அனுபவம். எத்தனை கம்யூனிஸ்டுகளை, எத்தனை விதமாக கொலை செய்தோம்..."  என்று கமெராவுக்கு முன்னால் தைரியமாகக் கூறுகின்றனர். சொல்வதோடு நின்று விடாமல், கொலை செய்த முறையை மீண்டும் ஒரு தடவை நடித்துக் காட்டுகின்றனர். முன்னாள் இனப்படுகொலையாளர்கள் நடித்த, The Act of Killing என்ற ஆவணப்படம், இந்த மாதம் உலகத் திரையரங்குகளில் காண்பிக்கப் படவுள்ளது.   

இனப்படுகொலை செய்தவர்கள், எவ்வாறு இந்தளவு தைரியமாக, சுதந்திரமாக நடமாட முடிகின்றது? "இனப்படுகொலையில் ஈடுபட்டதற்காக பெருமைப் படுகின்றோம்." என்று, எவ்வாறு பகிரங்கமாக கூற முடிகின்றது? எல்லாம் அமெரிக்கா கொடுக்கும் தைரியம் தான். ஒரு நாட்டில், கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்ற விடாமல் தடுக்க வேண்டுமானால், எத்தனை இலட்சம் போரையும் இனப்படுகொலை செய்யலாம். அது தவறென்று சர்வதேச சமூகம் கூறாது. அது பாவம் என்று மத நம்பிக்கையாளர்கள் கூற மாட்டார்கள். எந்த ஊடகமும் அதைப் பற்றி ஆராய மாட்டாது. எந்தக் கல்லூரியும் அதைப் பற்றி மாணவர்களுக்கு போதிக்க மாட்டாது.

 இந்தோனேசியாவில் இனப்படுகொலை செய்த ஒரு கொலைகாரன் சொன்னதைப் போல, "போர்க்குற்றம் என்றால் என்னவென்று, வென்றவர்களே தீர்மானிக்கிறார்கள்."  கடந்த மூவாயிரம் வருட உலக வரலாறு முழுவதும், அவ்வாறு தான் நடந்து கொண்டிருக்கிறது. இன்றைய உலகம் மாறி விட்டதாகவும், நியாயத் தீர்ப்பு வழங்குவதற்கென இயங்கும், ஐ.நா. போன்ற சர்வதேச ஸ்தாபனங்கள் கடமையைச் செய்து வருவதாகவும், எம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.

இந்தோனேசியா ஒரு டச்சுக் காலனியாக இருந்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரும், அதற்கு டச்சுக்காரர்கள் உரிமை கோரியதால், அங்கே ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் நடந்தது. இடையில் சில வருடங்கள், ஆக்கிரமித்த ஜப்பானியர்களுடன், இந்தோனேசிய தேசியவாதிகள் ஒத்துழைத்தனர். இந்தோனேசிய கம்யூனிஸ்டுகள் மட்டுமே, டச்சுக்காரரையும், ஜப்பானியரையும் எதிர்த்து போராடினார்கள்.  இறுதியில்,  தேசியவாதிகளிடம் சுதந்திரத்தை கையளிக்குமாறு அமெரிக்கா வற்புறுத்தியதால், டச்சு காலனிய படைகள் வெளியேறின. 

அன்று இந்தோனேசியாவை ஆண்ட சுகார்னோவும், அவரது ஆதரவாளர்களும் கம்யூனிஸ்டுகளோ, சோஷலிஸ்டுகளோ அல்லர். அவர்கள் தேசியவாதிகள். உண்மையில் இங்கே தான் பிரச்சினை ஆரம்பமாகியது. உண்மையான, நேர்மையான தேசியவாதிகள், சிலநேரம் மேற்குலக நலன்களுக்கு எதிரானவர்களாக மாறலாம். சுகார்னோ, காலனிய முதலாளிகளின் நிறுவனங்களை தேசியமயமாக்கினார். அமெரிக்காவையோ, ரஷ்யாவையோ ஆதரிக்காத, அணிசேரா  நாடுகளின் கூட்டமைப்பை ஸ்தாபித்ததில் சுகார்னாவுக்கு பெரும் பங்குண்டு. மேலும், சீனாவுடனும் நெருங்கிய தொடர்பை பேணி வந்தார். "இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி, ஜனாதிபதி சுகார்னோவை பொம்மை போல ஆட்டி வைத்ததாக," சில சரித்திர ஆசிரியர்களும் எழுதியுள்ளனர். ஆனால், அது எந்தளவு தூரம் உண்மை என்பது கேள்விக்குறி. இனப்படுகொலைக்கு நியாயம் கற்பிப்பதற்காக, அவ்வாறு வரலாற்றை திரித்திருக்கலாம். 

1913 ம் ஆண்டு, ஹென்க் ஸ்னேவ்லீட் (Henk Sneevliet) என்ற டச்சு கம்யூனிஸ்ட், "இந்தோனேசிய சமூக ஜனநாயக கூட்டமைப்பு" என்ற, கம்யூனிஸ்டுகளுக்கு முன்னோடியான சோஷலிசக் கட்சியை உருவாக்கினார். இவர் நெதர்லாந்து நாட்டின் தேசிய நாயகன். அதற்கான காரணம் வேறு. கம்யூனிசத்தின் பெயரால், இந்தோனேசிய மக்களையும் ஒன்று திரட்டி வந்ததை விரும்பாத டச்சு காலனிய அரசு, அவரை வெளியேற்றியது.  ஹென்க் தாயகம் திரும்பி வந்த காலத்தில், நெதர்லாந்து ஜெர்மன் நாஜிப் படைகளினால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. நாஜிகளின் யூத மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்த்து வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தியதால், ஜெர்மன் படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டார்.

1924 ம் ஆண்டு,   "இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி" (Partai Komunis Indonesia) உருவாகியது. (சுருக்கமாக PKI). 1926 ம் ஆண்டு, டச்சு காலனிய அரசுக்கு எதிராக மாபெரும் மக்கள் எழுச்சி ஒன்று இடம்பெற்றது. அது தோல்வியடைந்ததும், கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப் பட்டது. 13000 கம்யூனிஸ்டுகள் கைது செய்யப் பட்டனர். டச்சு காலனிய அரசு, ஆயிரக் கணக்கான கம்யூனிஸ்டுகளை நியூ கினியா தீவுக்கு நாடு கடத்தியது. (இந்தியாவை ஆண்ட  ஆங்கிலேயருக்கு அந்தமான் தீவுகள் போன்று, இந்தோனேசியாவை ஆண்ட டச்சுக் காரருக்கு நியூ கினியா). இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் உருவான, சுகார்னோவின் தேசிய அரசுக்கு எதிராகவும், கம்யூனிஸ்டுகள் மக்கள் போராட்டங்களை நடத்தினார்கள். 

அந்தக் காலத்தில், இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த மூசோ, ஸ்டாலினுடன் நெருக்கமாக இருந்தவர். இரண்டாம் உலகப்போரில், ஜப்பானிய ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக போரிட்ட கம்யூனிச கெரில்லாப் படைகளுக்கு சோவியத் யூனியன் உதவி வந்தது. ஆனால், இந்தோனேசியா குடியரசானதும், தேசியவாதிகளுடன் இணைந்து ஒரு தேசிய அரசமைக்குமாறு சோவியத் யூனியன் அறிவுறுத்தியது. ஆனால், மூசொவின் தலைமை அந்த அறிவுரையை ஏற்றுக் கொள்ளவில்லை. 1948 ம் ஆண்டு, டச்சு காலனியாதிக்க படைகளின் வெளியேற்றத்தை பயன்படுத்திக் கொண்ட கம்யூனிஸ்ட் கெரில்லாக்கள், கிழக்கு ஜாவா பகுதியில் ஒரு விவசாயிகளின் எழுச்சிக்கு தலைமை தாங்கினார்கள். 

கிழக்கு ஜாவா விவசாயிகளின் புரட்சி வெற்றி பெற்றதால், அங்கு ஒரு "இந்தோனேசிய சோவியத் குடியரசு" உருவானது. அன்றைய சுகார்னோ அரசு பிரச்சாரம் செய்ததற்கு மாறாக, சோவியத் ஒன்றியம் அந்த கம்யூனிஸ்ட் எழுச்சியை அங்கீகரிக்கவில்லை. ஜாவா விவசாயிகளின் புரட்சிக்கு, வெளியுலக ஆதரவு கிடைக்காத நிலையில், சுகார்னோவின் படைகளால் கடுமையாக அடக்கப் பட்டது. கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் மூசொவும், அந்த யுத்தத்தில் கொல்லப்பட்டார். ஆகவே, "சுகார்னோ கம்யூனிஸ்ட் கட்சியின் பொம்மை போல ஆட்சி நடத்தியதாக" கூறுவது, பின்னாளில் நடந்த இனப்படுகொலைக்கு ஒரு காரணத்தை கண்டு பிடிப்பதற்காக என்பது இங்கே தெளிவாகும்.

1955 ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சி பதினாறு சதவீத வாக்குகளைப் பெற்று, நாட்டில் நான்காவது பெரிய கட்சியாக உருவானது, சிலர் கண்களை உறுத்தி இருக்கலாம். 1965 ம் ஆண்டு, கட்சி அழிக்கப்பட்ட காலம் வரையில், மூன்று மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. அன்றிருந்த சோஷலிச நாடுகளுக்கு வெளியே இருந்த எந்த நாட்டிலும், இவ்வளவு பெருந்தொகையிலான உறுப்பினர்களைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி இருந்ததில்லை. மேலும், கட்சியோடு சேர்ந்தியங்கிய விவசாயிகள் முன்னணியில் எட்டு மில்லியன் உறுப்பினர்கள் இருந்தனர். இந்த விபரங்கள் யாவும், சிலருக்கு எதிர்காலம் குறித்த அச்சத்தை தோற்றுவித்திருக்கலாம். அன்று அடுத்தடுத்து பல ஆசிய நாடுகளில், கம்யூனிஸ்டுகள் அதிகாரத்திற்கு வந்ததால், இந்தோனேசியாவிலும் ஒரு கம்யூனிசப் புரட்சி உருவாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று பலர் நம்பினார்கள்.   

இந்தோனேசியாவில் மிக முக்கியமாக, நான்கு அரசியல் சக்திகள், கம்யூனிஸ்ட் கட்சியை கருவறுக்க கங்கணம் கட்டின. அவையாவன: 
1. இராணுவத்திற்குள் ஒரு பிரிவினர். வலதுசாரி முதலாளித்துவ நலன் சார்ந்த இராணுவ அதிகாரிகளுக்கு, சுகார்ட்டோ தலைமை தாங்கினார்.
2. நிலவுடமையாளர்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டம் காரணமாக, நிலமற்ற விவசாயிகள் பெருமளவு நிலங்களை ஆக்கிரமித்து வந்தனர். அதனால் நாடு முழுவதும் இருந்த நிலவுடமையாளர்கள், தமது எதிர்காலம் சூனியமாகி விடும் என்று அஞ்சினார்கள்.
3. கடும்போக்கு இஸ்லாமிய மதவாதிகள். இந்தோனேசியா, உலகிலேயே அதிகளவு முஸ்லிம் சனத்தொகையை கொண்ட நாடு. இஸ்லாமிய மதவாதிகள், "நாஸ்திக கம்யூனிஸ்டுகளை" வெறுத்தார்கள். பிற்காலத்தில் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களாக கருதப்பட்ட மத அடிப்படைவாத அமைப்புகள், அன்றைய கம்யூனிஸ்ட் எதிர்ப்பு இனப்படுகொலையின் ஊடாக வளர்ந்தவை. 
4. அமெரிக்கா. அமெரிக்க தூதரகமும், சி.ஐ.ஏ. யும் மிகத் தீவிரமாக இந்தோனேசிய அரசியல் விவகாரங்களில் தலையிட்டு வந்தன. அவர்கள் மேலே குறிப்பிட்ட மூன்று பிரிவினருடனும், மிகவும் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்தனர். சுகார்ட்டோ என்ற கொடுங்கோல் சர்வாதிகாரியையும், இஸ்லாமிய மத அடிப்படைவாத தீவிரவாதிகளையும், அமெரிக்கர்களே உருவாக்கினார்கள். 

30 செப்டம்பர் 1965, ஜகார்த்தா நகரில் இராணுவ தளபதிகளின் வீடுகளின் முன்னால் ஒரு டிரக் வண்டி வந்து நின்றது. மிகவும் முக்கியமான ஏழு படைத்தளபதிகளை பிடித்துச் செல்வதே, டிரக் வண்டிகளில் வந்தவர்களின் நோக்கம். கைது செய்ய வந்தவர்களுடன் எதிர்த்துப் போராடியதால், மூன்று பேர் ஸ்தலத்திலே கொல்லப் பட்டனர். மூன்று பேர் அழைத்துச் செல்லப் பட்டு, அடுத்த நாள் கொல்லப் பட்டனர். ஒருவர் பிடிபடாமல் தப்பி ஓடி விட்டார். அடுத்தநாள், 1 ஒக்டோபர் 1965, ஆறு இராணுவ தளபதிகள் கொலை செய்யப் பட்ட செய்தி நாடு முழுவதும் பரவியது.  "30 செப்டம்பர் குழு" என்று தம்மை அழைத்துக் கொண்டவர்கள், ஒரு சதிப்புரட்சி நடந்துள்ளதாக வானொலியில் அறிவித்தனர். ஆனால், யார் இந்த சதிப்புரட்சியாளர்கள்? உலகில் இன்று வரை துலக்கப் படாத மர்மங்களில் அதுவும் ஒன்று. அந்த சதிப்புரட்சி, CIA தயாரிப்பில் உருவான நாடகம் என்று சிலர் சந்தேகப் படுகின்றனர். அது உண்மையா? இந்தோனேசியாவில் நடந்த இனப்படுகொலையில், அமெரிக்காவுக்கும் பங்கு உண்டா?