Wednesday, May 06, 2015

யாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்

யாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி 


யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். அந்தப் படத்தை "இளம் கம்யூனிஸ்டுகள்" என்ற தலைப்பில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு இளைஞர் தனது முகநூலில் பகிர்ந்து கொண்டார். அதற்கு ஒரு "அறிவு(?)ஜீவி" பின்வருமாறு எதிர்வினையாற்றி இருந்தார்:

//இளம் கம்யூனிஸ்ட்டுகள்! ஹ... ஹா... நாலாம் ஐந்தாம் வகுப்பு பொடியளுக்கு கம்யூனிசம் விளங்கி அதில பற்று வந்து வீதியில் இறங்கிவிட்டார்கள்! வாவ்// 

அறம் செய்ய விரும்பு, இயல்வது கரவேல், ஐயம் இட்டு உண், மண் பறித்து உண்ணேல், கொள்ளை விரும்பேல், ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, யாதும் ஊரே யாவரும் கேளிர்.... இதெல்லாம் நாலாம் ஐந்தாம் வகுப்பு பொடியளுக்கு, பாடசாலைகளில் படிப்பிக்கிற கம்யூனிச தத்துவங்கள் என்பது, அந்த "அறிவு(?)ஜீவிக்கு" புரியாமல் போனது ஏனோ?


"யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில் இளம் கம்யூனிஸ்டுகள்" என்ற தலைப்பிலான இந்தப் படத்தை பார்த்து விட்டு "சிறுவர் துஷ்பிரயோகம்" என்று அலறித் துடிக்கும் போலி மனிதாபிமானவாதிகளுக்கு:

சிறுவர் துஷ்பிரயோகம் பற்றி இலவசமாக வகுப்பெடுக்கும் ஆசிரியப் பெருந்தகைகள், அதனை முதலில் கோயில்கள், தேவாலயங்களில் இருந்து தொடங்குவது நல்லது. குறைந்த பட்சம் தங்களது குடும்பத்தையாவது சீர்திருத்திக் காட்ட வேண்டும்.

இதிலே எத்தனை சிறுவர்கள், தேநீர்க்கடைகள், உணவகங்களில் முதலாளிகளால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பார்கள்? நெல் வயல்களில், தோட்டங்களில், பண்ணைகளில், நிலவுடமையாளர்களினால் துஷ்பிரயோகம் செய்யப் பட்டிருப்பார்கள்? அப்போதெல்லாம் வாய்மூடி மௌனிகளாக இருந்தவர்கள், இருப்பவர்கள், அந்தசிறுவர்கள் தமது உரிமைகளுக்காக ஒன்றுசேர்ந்து போராடினால் மட்டும் பொங்கி எழுந்து எதிர்ப்பது ஏனோ? சிறுவர்களின் ஜனநாயக உரிமைகளை, அவர்களது அரசியல் கருத்துச் சுதந்திரத்தை மறுப்பது, சர்வாதிகாரம் என்பது அவர்களுக்கு தெரியாதோ?

முதலாளிகள் வீசும் எலும்புத்துண்டுகளுக்காக வாலாட்டும் நாய்கள், குரைப்பதை கொஞ்சம் குறைத்துக் கொண்டால் நல்லது.

******

ஈழத் தமிழ் மேட்டுக்குடியினரை பயமுறுத்தும் கம்யூனிச ஆவி!

ஈழத்திலும், புலம்பெயர்ந்தும் வாழும் தமிழர்கள் பலரை, அண்மைக் காலமாக ஓர் ஆவி மிரட்டி வருவதாக, அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. "கம்யூனிச ஆவி" என்று அழைக்கப்படும் ஓர் அமானுஷ்ய சக்தி, குறிப்பாக படித்த, வசதியான மேட்டுக்குடி வர்க்கத்தினரை மட்டுமே குறி வைத்து தாக்கி வருகின்றதாம். 

கம்யூனிச ஆவியால் பாதிக்கப் பட்டவர்கள், சிவப்பு நிறத்தை எங்கே கண்டாலும் அலறுகின்றனராம். அதனால், அவர்கள் சிவப்பு வர்ண ஆடைகள், சிவப்பு நிறப் உணவுப் பதார்த்தங்கள், ஆகியனவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். போக்குவரத்து நெரிசலில் சிக்னலில் சிவப்பு விழுந்ததும், அலறியடித்துக் கொண்டு வண்டி ஓட்டி விபத்துக்குள்ளான நபர்கள் பலர், வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். 

இதற்கென அமெரிக்காவில் இருந்து விசேடமாக அழைத்து வரப் பட்ட, உலகிலேயே அதிக பீஸ் வாங்கும் மருத்துவர் ஒருவர் நோயாளிகளை பார்வையிட்டுள்ளார். 25 வருடங்களுக்கு முன்னர், இதே கம்யூனிச ஆவி ஐரோப்பிய மக்களை பிடித்தாட்டியதாகவும், அதனை நேட்டோ படையினர் பிடித்து சீசாவில் அடைத்து, அட்லாண்டிக் சமுத்திரத்தில் வீசியதாகவும் தெரிவித்தார். 

25 வருடங்களுக்குப் பின்னர் திரும்பி வந்துள்ள கம்யூனிச ஆவி, முன்தோன்றிய மூத்தகுடி தமிழினத்திற்குள் புகுந்தது எப்படி என்பதை பலரும் ஆராய்ந்து வருகின்றனர். பல அரசியல் கருத்து முரண்பாடு கொண்டவர்களும், கம்யூனிச ஆவியை விரட்டுவதற்காக வர்க்க அடிப்படையில் ஒன்று சேர்ந்துள்ளனர். நேற்று வரையிலும், கீரியும் பாம்புமாக சண்டையிட்டுக் கொண்டிருந்த, தீவிர புலி ஆதரவாளர்களும், தீவிர ராஜபக்சே ஆதரவாளர்களும், தமது தசாப்த கால பகைமையை மறந்து ஒன்று சேர்ந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. 

கம்யூனிச ஒழிப்புப் போரில், சிறிலங்கா பேரினவாத அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக, வலதுசாரி- தமிழ் தேசியவாதிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த, அமெரிக்க தலைமைப் பூசாரி ஜோன் கேரியை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரமுகர்கள், தாம் இந்த விடயத்தில் இணக்க அரசியல் நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தனர். சிங்களவன், தமிழன் என்று இனப் பகை கொண்டு போரிட்டாலும், மேட்டுக்குடி வர்க்கம் என்ற அடிப்படையில் தாம் ஒரே இனம் என்று, சிங்கள- தமிழ் அரசியல் தலைவர்கள் ஒரே குரலில் கூறினார்கள்.

******

டைனோசர் பார்த்த குருடர்கள் 

மெத்தப் படித்த நண்பர் ஒருவர், "கம்யூனிசம் ஒரு டைனோசர் காலத்து சமாச்சாரம்" என்ற பீடிகையுடன் உரையாடலை ஆரம்பித்தார். அவருக்கு நான் "யானை பார்த்த குருடர்கள்" கதை சொல்லி விட்டு, ஒருவேளை அவர் பார்த்த கம்யூனிச யானை டைனோசராக தெரிந்திருக்கும் என்று பதில் கூறினேன்.

அவரது கேள்விகள் எல்லாவற்றிற்கும் பொறுமையாக பதில் கூறி விட்டு, இப்போது நான், நிகழ்காலத்தில் உயிர்ப்புடன் இருக்கும் முதலாளித்துவம் பற்றிய சில கேள்விகளை, உங்களிடம் கேட்க விரும்புகிறேன் என்று சொன்னேன். அதற்குப் பிறகு இன்னமும் ஆளைக் காணோம். 

 ஒரு வேளை, ஜூராசிக் பார்க்கில் டைனோசர் சம்பந்தமான ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார் போலும்.


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
யாழ்ப்பாணத்தில் கம்யூனிச மே தின பேரணி!! தமிழ் ஊடகங்கள் இருட்டடிப்பு!!

No comments: