Showing posts with label ஐரோப்பிய ஒன்றியம். Show all posts
Showing posts with label ஐரோப்பிய ஒன்றியம். Show all posts

Saturday, June 25, 2016

பிரிந்தது பிரித்தானியா! தெரிந்தது வர்க்க எதிரிகளின் கோர முகம்!


அன்று உலகையே காலனிப் படுத்திய பிரித்தானியா, இன்று தனது நாட்டை ஐரோப்பிய ஒன்றியம் காலனிப் படுத்தி விட்டதாக குமுறியதன் விளைவு தான் ‪#‎Brexit‬!

தேசங்கடந்த பெரும் வணிக நிறுவனங்களும், லிபரல் அரசியல்வாதிகளும் சேர்ந்து உருவாக்கிய ஐரோப்பிய ஒன்றியம் என்ற அமைப்பு ஒரு பேரரசு (Super State) ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் நாடுகள், தமது இறைமையில் ஒரு பகுதியை அடகு வைக்க வேண்டும். தேசிய சட்டங்களை விட ஐரோப்பிய (ஒன்றிய) சட்டங்கள் மேலானவை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதனால் உறுப்புரிமை பெற்ற ஒரு தேசத்தின் உள்ளே நடக்கும் எல்லா விஷயங்களிலும் ஐரோப்பிய ஒன்றியம் மூக்கை நுழைக்க முடியும்.

பல தசாப்த காலமாகவே, ஐரோப்பிய நாடுகளில் உள்ள தீவிர வலதுசாரிகளும், தீவிர இடதுசாரிகளும் தத்தமது அரசியல் நிலைப்பாட்டில் இருந்து கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்த்து வருகின்றனர். தேசிய முதலாளிகளின் நலன்கள் பாதிக்கப்படுதல், குடியேறிகளின் வருகையினால் வேலை வாய்ப்புகள் பறிபோதல் போன்ற பல குற்றச்சாட்டுகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான பொது மக்களின் அதிருப்திக்கு முக்கிய காரணிகளாக உள்ளன.

பிரிட்டனில் குடியேறிகளுக்கு எதிரான புதிய இனவாதக் கட்சியான UKIP, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தனியா பிரிய வேண்டும் என்ற கோஷத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்து வந்தது. அது தேர்தலில் பெரிய வெற்றி எதையும் பெற்றிருக்கா விட்டாலும், ஊடகங்களின் கவனத்தை கவர்ந்தது. அதன் தலைவர் நைஜல் பராஜ் என்ன பேசினாலும், ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. அவர் கூறியவை பெரும்பாலும் வெளிநாட்டவருக்கு எதிரான இனவாதக் கருத்துக்கள் என்பதை இங்கே குறிப்பிடத் தேவையில்லை.

அதே நேரம், ஆளும் கட்சியான வலதுசாரி கென்சர்வேட்டிவ் கட்சிக்குள்ளும் பலர் அந்தக் கொள்கையை ஆதரிக்கத் தொடங்கினார்கள். சிலர் கட்சி மாறினார்கள். அதன் மூலம் பிரதமர் டேவிட் கமேரூனுக்கு அழுத்தம் அதிகரித்தது. போதாக்குறைக்கு லண்டன் மாநகரின் முன்னாள் மேயர் போரிஸ் ஜோன்சனும், பிரித்தானியா பிரிய வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். அவரது குறி பிரதமர் பதவியாக இருந்தது.

தற்போது பதவி விலகியுள்ள பிரதமர் டேவிட் கமெரூன் இதை வைத்து அரசியல் லாபம் தேடலாம் எனத் தப்புக் கணக்குப் போட்டார். அதாவது, வலதுசாரிகளின் கொள்கைகளை ஆதரிப்பது போலக் காட்டிக் கொள்ள வேண்டும். அதே நேரம் ஐரோப்பிய ஒன்றியத்தையும் ஆதரிக்க வேண்டும். இந்த இரட்டை வேடம், இறுதியில் அவரது பிரதமர் பதவிக்கு ஆப்பு வைத்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் பிரிந்து சென்றுள்ளதை, "ஒரு மாநிலம் சுதந்திர நாடாகி விட்டது" என்பது போல சிலர் பேசி வருகின்றனர். பிரித்தானியாவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான உறவு என்றைக்குமே சீரானதாக இருக்கவில்லை. தனது தனித்துவத்தை பேணுவதற்காக யூரோவை ஏற்றுக் கொள்ளாமல், ஸ்டேர்லிங் பவுன் நாணயத்தையே தொடர்ந்தும் வைத்திருக்கப் போவதாக அடம் பிடித்தது. அதே நேரம், குடியேறிகள், அகதிகளின் வருகையை கட்டுப்படுத்துவதற்காக, செங்கண் ஒப்பந்தம் செய்ய மறுத்து வந்தது.

பிரித்தானியா ஒரு உலக அணுவாயுத வல்லரசு. ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர். இரண்டாம் உலகப்போரில், அமெரிக்காவுடன் சேர்ந்து, ஐரோப்பாக் கண்டத்தை ஆக்கிரமித்திருந்தது. இது போன்ற காரணங்களினால், ஐரோப்பிய ஒன்றியத்தினுள் அடங்கிப் போக முடியாமல், பிரித்தானியாவுக்கு தாழ்வுச் சிக்கல் இருந்து வந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் லிஸ்பன் ஒப்பந்தப் படி, உறுப்புரிமை பெற்ற எந்த நாடும் பிரிந்து செல்ல முடியும். ஆனால், வரலாற்றில் இதுவே முதல் தடவை. முன்பு கிரீஸ் பிரிந்து செல்ல விரும்பிய நேரம், கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. அதற்குக் காரணம், கிரேக்கம் ஒரு கடன்பட்ட நாடு. அது மட்டுமல்ல, யூரோ பொது நாணயத்தை கொண்டுள்ளது. அது கடுமையான பொருளாதார விளைவுகளை உண்டாக்கி இருக்கும்.

பிரிட்டன் உலகிலேயே பெரிய மூலதனத்தை கொண்டுள்ள நாடுகளில் ஒன்று. அத்துடன், இராணுவ வல்லரசு. அது மட்டுமல்லாது, யூரோ நாணயத்தை ஏற்றுக் கொள்ளாமல், தொடர்ந்தும் பவுன் வைத்திருந்தது. மேலும், ஜெர்மன், பிரான்சுடன், பிரிட்டனும் சேர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தை கட்டுப்படுத்தக் கூடிய நிலையில் இருந்தன. இத்தாலி தவிர்ந்த பிற சிறிய நாடுகளிடம் அந்தளவு பலம் கிடையாது. பிரிட்டன் பிரிவதை இலகுவாக்கிய காரணங்கள் இவை தாம்.

இருப்பினும், பிரிட்டனின் உதாரணத்தை பின்பற்றி பிற ஐரோப்பிய நாடுகளும் பிரிந்து செல்லும் என்று எதிர்பார்க்க முடியாது. பிரித்தானியா கூட, அடுத்து வரும் இரண்டு வருடங்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடாக தொடர்ந்தும் இருக்கும். அதற்குப் பிறகு, நோர்வே, சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து மாதிரி, வேறொரு வர்த்தக உடன்படிக்கை (European Economic Area (EEA)) செய்து கொள்ளலாம்.

மேற்படி ஒப்பந்தத்தின் அடிப்படையில், நோர்வே முக்கால்வாசி ஐரோப்பிய ஒன்றிய சட்டங்களை ஏற்றுக் கொண்டுள்ளது. அனேகமாக பெரிய வித்தியாசம் எதையும் கண்டுபிடிக்க முடியாது. சுவிட்சர்லாந்து குடியேறிகள் விடயத்தில் தான் விரும்பிய நிலைப்பாட்டை எடுக்கும் சுதந்திரத்தை கொண்டுள்ளது. அதே போன்ற ஒப்பத்தங்களை, எதிர்காலத்தில் பிரித்தானியாவும் செய்து கொள்ளலாம்.

பிரித்தானியா பிரிய வேண்டும் என்று ஓட்டுப் போட்டவர்களின் முக்கிய நோக்கம், குடியேறிகளின் வருகையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது. அது எவ்வளவு தூரம் நடைமுறைச் சாத்தியமானது? போலந்து, ருமேனியா, பல்கேரியா போன்ற கிழக்கைரோப்பிய நாடுகளை சேர்ந்த குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை பிரிட்டனில் அதிகம். அவர்களை வெளியேற்ற முடியுமா? அது அவ்வளவு இலகுவான விடயமல்ல.

பல்கேரியா, ஸ்பெயின், சைப்பிரஸ் போன்ற நாடுகளில், பிரிட்டிஷ் ஓய்வூதியக்காரர்கள் வீடுகளை வாங்கி, அங்கேயே வசித்து வருகின்றனர். அது மட்டுமல்ல, இலட்சக் கணக்கான பிரிட்டிஷ் குடியேறிகள், பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் வேலை செய்து வருகின்றனர். பிரிட்டன் ஐரோப்பிய குடியேறிகளை திருப்பி அனுப்பினால், பதிலடியாக ஐரோப்பிய நாடுகள் பிரிட்டிஷ் குடியேறிகளை திருப்பி அனுப்பலாம்.

அப்படியானால் என்ன செய்யப் போகிறார்கள்? அனேகமாக, புதிய குடியேறிகளை அனுமதிப்பதற்கு புதிய நடைமுறை அமுலுக்கு வரலாம். பிரித்தானியாவில் குறிப்பிட்ட வேலைக்கு ஆள் பற்றாக்குறை இருந்தால் ஒப்பந்தத் தொழிலாளர்களை தருவிக்கலாம். 

உதாரணத்திற்கு, மருத்துவமனைகளில் தாதியர் (நர்ஸ்) வேலைக்கு பற்றாக்குறை நிலவுகின்றது. போலந்துக்காரர்கள், பாகிஸ்தான்காரர்களுடன் அந்த வேலைக்கு போட்டி போட வேண்டி இருக்கும். சுருக்கமாக, பிரித்தானியாவில் குடியேறிகளின் தேவை எப்போதும் இருந்து கொண்டிருக்கும்.

பிரித்தானியா பிரிவதை பல (வலதுசாரி) தமிழர்களும் ஆதரித்தார்கள். கிழக்கைரோப்பிய குடியேறிகளின் பிரச்சினையை அதற்குக் காரணமாகக் கூறினார்கள். இதிலே வேடிக்கை என்னவென்றால், பிரிந்த பிரித்தானியாவில் அவர்களின் இருப்புக்குத் தான் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 

ஐரோப்பிய குடியேறிகளின் வருகையை தடுக்க முடியாது. ஆனால், தமிழர்கள் போன்ற மூன்றாமுலக நாடுகளின் குடியேறிகளை வர விடாமல் தடுக்க முடியும். புதிய சட்டங்கள் போட்டு அவர்களை கட்டுப்படுத்தலாம். என்ன இருந்தாலும், "தமிழர்கள் கருப்பர்கள். கிழக்கைரோப்பியர்கள் வெள்ளையர்கள்."

UKIP என்ற தீவிர வலதுசாரிக் கட்சி தான், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என்ற பிரச்சாரத்தை தொடங்கியது. அந்தக் கட்சியின் பெயரே (UK Independence Party) அதை உறுதிப் படுத்துகின்றது.

NHS எனப்படும் அரசு மருத்துவமனைகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கும் நிதியை அதற்கு செலவிடலாம் என்று சொல்லித் தான் UKIP கட்சியினர் பிரச்சாரம் செய்தனர்.

பொது வாக்கெடுப்பில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது உறுதியாகி விட்டது. தற்போது, UKIP தலைவர் நைஜல் பராஜ் தனது முன்னைய கொள்கையை மாற்றிப் பேசி வருகின்றார். "EU நிதியை NHS க்கு பயன்படுத்துவது சாத்தியமில்லை." என்கிறார்.

அத்துடன், பத்து வருடங்களுக்குள் அரசு மருத்துவமனைகளை தனியார்மயமாக்க வேண்டும். ஐரோப்பாவில் இருப்பது மாதிரி எல்லோருக்கும் பொதுவான காப்புறுதித் திட்டம் வேண்டும் என்பதும் UKIP கொண்டுவரவிருக்கும் மாற்றங்கள் ஆகும்.

"சுதந்திரம், இறைமை" பற்றிப் பேசும், UKIP போன்ற தீவிர வலதுசாரிகள், தங்களது சொந்த இன மக்களையே அடக்கி ஆளும் சுதந்திரத்தையும், தேசிய முதலாளிகளின் இறைமையையும் பற்றித் தான் கவலைப் பட்டுள்ளனர்.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகியதும், மக்களுக்கு ஒரு வகையில் படிப்பினை தான். ஏகாதிபத்திய கூட்டமைப்பில் ஒரு விரிசலை உண்டாக்க முடிந்துள்ளது. அதே நேரம், சொந்த இனத்திற்குள் இருக்கும் வர்க்க எதிரிகளையும் அடையாளம் காண உதவியுள்ளது.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Thursday, June 23, 2016

பிரித்தானியாவின் Brexit ஆதரவு "தீக்கோழி" தமிழர்கள்


பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதை (Brexit), தமிழ் வலதுசாரிகள் ஆதரிப்பது ஏற்கனவே தெரிந்த விடயம். ஆனால், லண்டனில் வாழும் "தமிழ் இடதுசாரியான" சேனன் என்ற ட்ராஸ்கிஸ்ட் கூட அதை ஆதரித்து வருகின்றார். இது தொடர்பாக எதிர் இணையத்தளத்தில் கட்டுரைகள் எழுதி உள்ளார்.

சேனனின் வழிகாட்டலில் உருவான, "இடதுசாரி- தமிழ் தேசிய இளையோர்" அமைப்பான தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினரான  பாரதி என்ற பெண், லண்டன் தமிழ் வானொலி ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். (ஒன்றியத்திலிருந்து ஏன் பிரித்தானியா வெளியேற வேண்டும்? -பாரதி)

அதில் அவர் தெரிவித்த Brexit ஆதரவுக் கருத்துக்கள் சிறுபிள்ளைத்தனமாக உள்ளன.

முதலில் அந்தப் பெண், "வட்டுகோட்டை தீர்மானம்... தமிழ் தேசியப் போராட்டம்..." போன்றவற்றை சொல்லி தனது உரையை தொடங்கினார். ஐயர் சம்ஸ்கிருத மந்திரம் ஓதுவது போன்று, இப்போதெல்லாம் ஆரம்பத்தில் கொஞ்சம் தமிழ் தேசியம் பேசி விட்டு தொடர்வது ஒரு பேஷனாகி விட்டது. அது போகட்டும். விடயத்திற்கு வருவோம்.

பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறினால், அது அகதித் தஞ்சம் கோருவோருக்கு பாதிப்பாக அமையும் என்ற வாதம் ஒரு "கற்பனை" என்று வாதிடுகிறார். அனேகமாக, ஒரு ஈழத் தமிழ் அகதிக் குடும்பத்தில் இருந்து வந்தவர் இப்படிப் பேசுவது அதிர்ச்சி அளித்தது.

பிரிட்டனில் அகதி தஞ்சம் நிராகரிக்கப் பட்ட பலருக்கு, ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தினால் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதாவது, பிரிட்டனின் சட்டம் எதுவாக இருந்தாலும், ஐரோப்பிய சட்டம் தான் மேலானது. அது ஏதாவதொரு காரணத்தால், ஒருவரின் தஞ்சக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தினால், பிரிட்டிஷ் நீதிபதி மறுப்புக் கூற முடியாது. பிரிட்டன் ஐரோப்பாவில் இருந்து விலகினால் அந்த சட்டப் பாதுகாப்பு கிடைக்குமா?

ஐரோப்பிய ஒன்றியத்தில், பிரிட்டிஷ் முதலாளிகள் (பெரும் நிறுவனங்கள்) ஐரோப்பிய முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து பலமாக இருப்பார்களாம். அவர்களை எதிர்த்துப் போரிடுவது கஷ்டமான காரியமாம். பிரிட்டன் பிரிந்தால், தனிமைப் படுத்தப் பட்ட முதலாளிகளை இலகுவாக எதிர்க்கலாமாம்!

பிரிட்டிஷ், அமெரிக்க பெரு நிறுவனங்களுக்கு இடையிலான உறவுக்கும் ஐரோப்பிய ஒன்றியமா காரணம்? நேட்டோ ஒரு இராணுவக் கூட்டமைப்பு. வர்த்தகக் கூட்டமைப்பு அல்ல. மேலும் பிரிட்டிஷ் - ஐரோப்பிய முதலாளிகள் ஒன்று சேர்ந்தால், தொழிலாளர்களும் ஒன்று சேர வேண்டியது தானே? பிறகெதற்கு சேனனின் இடதுசாரி ட்ராஸ்கிசக் கட்சி இயங்குகின்றது? இன்னமும் "நிரந்தரப் புரட்சி" பற்றிப் பேசுகின்றது?

"பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதால் தான், போலந்து, ருமேனியாவில் இருந்து குடியேறிகள் வருகிறார்கள். பிரிட்டிஷ் மக்களின் வேலை வாய்ப்புகளை, வீட்டு வசதிகளை பறிக்கிறார்கள்..." இவையெல்லாம் பிரிட்டிஷ் வலதுசாரிகள், ஆங்கிலேய தேசியவாதிகள்/இனவாதிகள் முன்வைக்கும் வாதங்கள். பிரிட்டனில் வாழும் Brexit ஆதரவு தமிழர்களும் (வலதுசாரிகள்) அதை வழிமொழிகிறார்கள். பிரிட்டன் ஐரோப்பாவில் இருந்து பிரிந்தால் தமிழர்களின் குடியேற்றத்தையும் தடுப்பார்கள். இந்த உண்மை தெரிந்தாலும் தெரியாத மாதிரி நடிப்பார்கள்.

தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினர் பாரதி, குடியேறிகளின் பிரச்சினைக்கு இடதுசாரி சாயம் பூசுகின்றார்: "ஐயோ பாவம்! போலந்து, ருமேனிய தொழிலாளர்கள் குறைந்த கூலிக்கு சுரண்டப் படுகிறார்கள்....வாடகை கட்ட முடியாமல் ஒரே வீட்டுக்குள் பலர் இருந்து கஷ்டப் படுகிறார்கள்..." ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுததாம். பிரிட்டன் ஐரோப்பாவில் இருந்து பிரிந்தால், தொழில் வாய்ப்புகள் உருவாகும் என்று சேனன் தனது எதிர் இணையத் தளத்தில் விளம்பரம் செய்கிறார். இது அவர் சார்ந்த ட்ராஸ்கிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்று நினைக்கிறேன்.

போலந்து, ருமேனியாவில் இருந்து வந்து குடியேறும் மலிவு விலைத் தொழிலாளர்கள், பிரிட்டனில் நிறைய வேலைத் ஸ்தலங்களில் இருப்பது உண்மை தான். அவர்கள் குறைந்த கூலிக்கு சுரண்டப் படுவதால், உள்ளூர் தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போவதும் உண்மை தான். ஆனால், எல்லோரும் ஒரு பொருளாதார உண்மையை மறந்து விட்டுப் பேசுகிறார்கள்.

குறிப்பிட்ட சில வேலைகளுக்கு வழங்கப் படும் சம்பளத்தின் அளவு குறைவு. அந்த சம்பளத்திற்கு வேலை செய்வதற்கு உள்ளூர் தொழிலாளர்கள் வர மாட்டார்கள். ஏனென்றால் பிரிட்டனில் வாழ்க்கைச் செலவும் அதிகம். ஒரு பிரிட்டிஷ் தொழிலாளி தனது குடும்பத்தை பராமரிக்கும் அளவு சம்பளத்தை எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஆனால், அதைக் கொடுப்பதற்கு பிரிட்டிஷ் முதலாளிகள் தயாராக இல்லை.

பிரிட்டிஷ் பிரஜைகள் பலர் "வேலையில்லாமல் சும்மா வீட்டில் இருந்தாலும்" அரசு அவர்களுக்கு மாதாந்தம் பணம் கொடுக்கிறது. (அது வாழ்க்கைச் செலவுக்கு போதாது என்பது வேறு விடயம்.) அந்தப் பணம் எங்கிருந்து வருகின்றது? புதிய குடியேறிகளான போலந்து, ருமேனிய தொழிலாளர்களிடம் இருந்து சுரண்டப் படும் பணத்தில் ஒரு சிறிய பகுதி தான் அது.

இப்படி யோசித்துப் பார்ப்போம். பிரிட்டன் ஐரோப்பாவில் இருந்து வெளியேறிய பிறகு, பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் குடியேறிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்து விடும். ஒரேயடியாக நின்று விட்டது என்றே வைத்துக் கொள்வோம். அப்போது வேலையில்லா பிரிட்டிஷ் பிரஜைகளுக்கு வேலை கிடைத்து விடுமா? 

இல்லை, பிரிட்டனின் முன்னாள் காலனி நாடுகளில் இருந்து புதிய மலிவு விலைத் தொழிலாளர்களை வருவிப்பார்கள். ஆனால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து வந்த தொழிலாளர்கள் அனுவித்த சலுகைகள் அவர்களுக்கு கிடைக்காது. அனேகமாக ஒப்பந்தம் முடிந்தவுடன் திருப்பி அனுப்பும் நிலையில் வைத்திருப்பார்கள்.

அது போகட்டும். போலந்து, ருமேனிய குடியேறிகள் வருவது நின்று போனால், பிரிட்டனில் வாழும் தமிழர்களுக்கு, அல்லது இலங்கையர், இந்தியருக்கு நல்ல காலம் பிறந்து விடுமா? எப்போதும் இல்லை. பிரிட்டிஷ் வலதுசாரிகள், ஆங்கிலேய இனவாதிகளின் அடுத்த குறி அவர்களாகத் தானிருக்கும். பிரிட்டனில் பல தசாப்த காலம் வாழ்ந்தாலும், அவர்களது உரிமைகளை படிப்படியாகப் பறிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்வார்கள். பிரிட்டிஷ் அரசும் அதை ஆமோதிக்கும். அப்போது அவர்களை பாதுகாப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் வரப் போவதில்லை.

தீக்கோழி மண்ணுக்குள் தலையை புதைத்துக் கொண்டு, தான் ஆபத்தில் இருந்து தப்பி விட்டதாக நினைக்குமாம். பிரிட்டனில் வாழும் Brexit ஆதரவு தமிழர்களும் அப்படித் தான்.

Part - 1
 

Part - 2
 

Part - 3
 

Thursday, May 22, 2014

"தெற்காசிய ஒன்றியம்" : மோடியின் எதிர்காலக் கனவு?



ஐரோப்பிய ஒன்றியம் மாதிரி, மோடி தலைமையில் ஒரு தெற்காசிய ஒன்றியம் உருவாகுமா? இன்று (21-05-2014), ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறுகின்றது. நூறு வருடங்களுக்கு முன்னர், "ஐரோப்பிய ஒன்றியம் என்ற ஒரு பொது அரசு" உருவாகும் என்று சொன்னால், யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். அப்படிச் சொன்னவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று நினைப்பார்கள். ஏனென்றால், ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில், அந்தளவு தூரம் பகைமை நிலவியது.

மொழியால், கலாச்சாரத்தால் மாறுபட்ட ஐரோப்பிய இனங்கள், சதா சர்வ காலமும், ஒருவருடன் ஒருவர் சண்டை போடுவதிலேயே காலம் கழித்து வந்தன. ஜெர்மனிக்கும், பிரான்சுக்கும் இடையிலான வெறுப்புணர்வு, இன்றுள்ள இந்திய, பாகிஸ்தான் பிரச்சினையை விட மிகத் தீவிரமாக இருந்தது. சிங்களவர்களும், தமிழர்களும் மோதிக் கொண்டதை விட மிகவும் மோசமாக, ஐரோப்பிய இனங்கள் தமக்குள் மோதிக் கொண்டன. ஈழப் போரில் இறந்ததை விட, பல மடங்கு அதிகமான ஐரோப்பிய மக்கள் இனப் பகையால் மாண்டனர். இன்று அவை எல்லாம் பழங் கதைகள்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உதாரணத்தை, இன்று பல ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் பின்பற்ற விரும்புகின்றன. ஆப்பிரிக்க ஒன்றியம், சார்க் நாடுகள் போன்ற அமைப்புகள், அந்த நோக்கத்திற்காக இயங்கிக் கொண்டிருக்கின்றன. அண்மையில் இந்தியப் பிரதமராக தெரிந்தெடுக்கப் பட்ட நரேந்திர மோடி, சார்க் நாடுகளின் தலைவர்களை தனது பதவிப் பிரமாணத்திற்கு அழைத்ததின் பின்னணிக் காரணமும் அதுவாக இருக்கலாம். சார்க் நாடுகள், ஐரோப்பிய நாடுகள் மாதிரி, தமக்கு இடையிலான பகையை மறந்து, பொதுவான வர்த்தக அமைப்பு ஒன்றை உருவாக்கும் திட்டம் ஏற்கனவே ஆலோசிக்கப் பட்டுள்ளது.

நீண்ட காலமாகவே, உள்நாட்டு தீவிரவாதத்தை ஒழிப்பது சார்க் நாடுகளின் தலையாய கடமையாக இருந்து வந்தது. அதனால் தான், இலங்கையில் விடுதலைப் புலிகளை அழிக்கும் போரில், இந்தியாவும், பாகிஸ்தானும் கை கோர்த்துக் கொண்டு, இலங்கை அரசுக்கு உதவின. உண்மையில், ஈழப் போரின் முடிவானது, தெற்காசிய நாடுகளில் முன்னெப்போதும் நடந்திராத முன்னுதாரணமாக திகழ்ந்தது. அந்த உதாரணம், இனி வருங்காலத்தில், இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் பின்பற்றப் படலாம்.

"மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் அரசு தான் தமிழர்களை அழித்தது. மோடியின் பாஜக அரசு அமைந்தால், தமிழர்களுக்கு சாதகமாக அமையும்." என்றெல்லாம் பரப்பப் படும் கதைகள், பூகோள அரசியல் குறித்த அறியாமையில் இருந்து எழுகின்றது. இந்திய அரசின் வெளிவிவகார கொள்கை, எந்தக் கட்சி ஆட்சி வந்தாலும் மாறப் போவதில்லை. மன்மோகன் சிங் தொடக்கி வைத்ததை, நரேந்திர மோடி முடித்து வைப்பார் என்று எதிர்பார்க்கலாம். 

ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகப் பெரிய பொருளாதார பலம் மிக்க நாடான ஜெர்மனி தான் ஆதிக்கம் செலுத்துகின்றது. அதே போன்று, தெற்காசிய ஒன்றியம் உருவானால், அங்கே இந்தியாவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இங்கே பாகிஸ்தானின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. பல நூறு வருடங்களாக, ஜெர்மனியுடன் யுத்தம் செய்து கொண்டிருந்த பிரான்ஸ், இறுதியில் இணங்கிப் போன மாதிரி, இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்று சேரலாம்.

தெற்காசிய நாடுகள் ஒன்று சேர்வதற்கு அடிப்படையாக உள்ள பொதுவான குணாம்சம் என்ன இருக்கிறது? அந்தக் கேள்வி ஐரோப்பாவிலும் எழலாம். ஐரோப்பியர்கள், இனத்தால், மொழியால், கலாச்சாரத்தால் வேறுபட்டவர்கள் மட்டுமல்ல. பொதுவானதாக கருதப்படும் கிறிஸ்தவ மதம் கூட அவர்களை ஒன்று சேர்க்காமல், பிரித்து வைத்திருந்தது. கத்தோலிக்க கிறிஸ்தவர்களும், புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்களும் ஒருவரை ஒருவர் கண்டால் இரத்தம் குடிக்கும் அளவிற்கு வெறுப்புக் கொண்டிருந்தார்கள். கிரேக்க (ஒர்தொடக்ஸ்) கிறிஸ்தவ மரபை பின்பற்றுவோருடனும் அப்படித் தான்.

உண்மையில், இருபதாம் நூற்றாண்டில் பரவிய முதலாளித்துவ லிபரல் கலாச்சாரம் தான், அனைத்து ஐரோப்பிய நாடுகளையும் ஒன்று சேர்த்தது. 2 ம் உலகப் போருக்குப் பிந்திய ஐரோப்பாவில், மத-இனப் பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப் பட்டு, பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டன. புதிய தலைமுறை ஐரோப்பியர்கள், வாழ்க்கைக்கு பொருளாதாரமே முக்கியம் என்று உணர ஆரம்பித்தனர். 

இதே மாதிரியான முதலாளித்துவ லிபரல் கலாச்சாரம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளிலும் மிக வேகமாக பரவி வருகின்றது. ஆகவே மோடி தலைமையில், ஒரு தெற்காசிய ஒன்றியம் உருவானால், அது குறித்து யாரும் ஆச்சரியப் படத் தேவையில்லை. பல்லின, மத வேறுபாடுகளைக் கொண்ட மக்களை ஒன்று சேர்க்கும் வல்லமை முதலாளித்துவத்திற்கு உண்டு.


ஐரோப்பிய ஒன்றியம் குறித்த முன்னைய பதிவுகள்:
ஐக்கிய ஐரோப்பிய குடியரசு, முடிவல்ல ஆரம்பம்

மோடி குறித்த முன்னைய பதிவுகள்:
மோடியால் எதையும் சாதிக்க முடியாது
நரேந்திர மோடி: ஒரு இனப்படுகொலையாளி இந்தியாவின் பிரதமராகிறார்

Tuesday, March 26, 2013

வங்கிகளை கொள்ளையடிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதிகள்



ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடான சைப்ரசில், வரலாறு காணாத வங்கிக் கொள்ளை ஒன்று நடந்துள்ளது.  ஐரோப்பிய ஒன்றியத்தினுள் ஆதிக்கம் செலுத்தும் ஜெர்மனியை சேர்ந்த முதலாளித்துவ பயங்கரவாதிகள், சைப்ரஸ் நாட்டு வங்கிகளை கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள்.  அந்த நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக, மக்களின் சேமிப்புப் பணத்தில் இருந்து ஒரு தொகை, வெளிநாட்டு கடனை அடைக்க பயன்படுத்தப் படப் போகின்றது. ஒரு சேமிப்பாளர் ஒரு இலட்சம் யூரோக்களுக்கு அதிகமாக பணம் வைப்பிலிட்டு இருந்தால், அந்த தொகையில் பத்து சத வீதம் கழிக்கப் பட வேண்டும். 

சைப்ரஸ் நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான Laiki Bank, முதலாளித்துவ பயங்கரவாதிகளால் முற்றாகத் தகர்க்கப் பட்டுள்ளது. இந்த "பயங்கரவாத தாக்குதல்" காரணமாக, ஆயிரக் கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான உதவி என்ற பெயரில், ஐரோப்பிய ஒன்றிய வழங்கிய கடனை அடைப்பதற்காக, இன்னும் பல்லாயிரம் வேலைகள் பறிக்கப் படவுள்ளன. இதனால், சைப்ரஸ் மென்மேலும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப் படுவதுடன், வேலையில்லாப் பிரச்சினையும் அதிகரிக்கும். 

மேற்கு ஐரோப்பாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பலர், தமது சேமிப்புப் பணத்தை அங்குள்ள வங்கிகளில் வைப்பிலிட விரும்புவதில்லை. ஆனால், இலங்கைக்கோ, இந்தியாவுக்கோ விடுமுறையை கழிப்பதற்கு செல்லும் நேரம், அங்குள்ள வங்கி ஒன்றில் வைப்பிலிட்டு விட்டு வருவார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம்: "ஐரோப்பிய வங்கிகளில் சேமிப்பு பணத்திற்கு கொடுக்கும் வட்டி வீதம் குறைவு. நமது நாட்டு வங்கிகளில், பல மடங்கு அதிகமான வட்டி கொடுக்கிறார்கள்."  குறைந்த வட்டி கொடுக்கும் மேற்கத்திய நாடுகளின் வங்கிகளுக்கும், அதிகளவு வட்டி கொடுக்கும் கீழைத்தேய நாடுகளின் வங்கிகளுக்கும் என்ன வித்தியாசம்? 

மேற்கத்திய நாடுகளில் உள்ள வங்கிகளில், ஏற்கனவே வட்டி வீதம் குறைவாக இருப்பது மட்டுமல்ல, அது பண வீக்கத்திற்கு ஏற்ப அதிகரிப்பதில்லை என்பது ஒரு தீமை தான். அதே நேரத்தில், குறைந்தளவு வட்டி கொடுத்தாலும், வங்கித் துறையும், அரசுகளும் நிலையானவை. பெரும் மூலதனத்தின் நேரடிப் பயன்களை அனுபவிப்பவை. அதனால் எமது பணத்திற்கு ஒரு பாதுகாப்புக் கிடைக்கின்றது. அதற்கு மாறாக, கீழைத்தேய வங்கிகளிடம் என்ன குறைகள் உள்ளன? அண்மையில் சைப்ரசில் ஏற்பட்ட  பொருளாதார நெருக்கடியில் இருந்து அந்தக் குறைபாட்டை புரிந்து கொள்வோம். 

ஒரு ஐரோப்பிய நாடான சைப்ரஸ் தீவு, எழுபதுகளில் நடந்த போர் காரணமாக இரண்டாகப் பிரிந்தது. மூன்றில் ஒரு பங்கு வடக்கு சைப்ரசை, துருக்கிப் படைகள் ஆக்கிரமித்தன. துருக்கி மொழி பேசும் சைப்ரஸ் மக்களுக்கான பாதுகாப்பு பிரதேசமாக, "வடக்கு சைப்ரஸ் குடியரசு" என்ற பெயரில் தனிநாடு போன்று இயங்கி வருகின்றது. ஆனால், அதனை எந்தவொரு உலக நாடும் அங்கீகரிக்கவில்லை. கிரேக்க மொழி பேசும் மக்கள் வாழும் தெற்கு பகுதி மட்டுமே, ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட சைப்ரஸ் குடியரசு ஆகும். நாங்கள் சைப்ரஸ் என்று சொன்னால், அந்தப் பகுதியைத் தான் நினைத்துக் கொள்கிறோம். 

ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காலனியாக இருந்த சைப்ரஸ், மூன்றாமுலக நாடுகள் போன்று வறிய நாடாக இருந்தது. பலர் பிரிட்டனுக்கு சென்று வேலை செய்து சம்பாதித்து, ஊருக்கு பணம் அனுப்ப வேண்டிய நிலைமை இருந்தது. ஆனால், துருக்கியுடனான போர் முடிந்த பின்னர், பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்தது. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

1. சூரிய வெப்பத்தை தேடி வரும், குளிர் வலைய மேற்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த, உல்லாசப் பிரயாணிகளின் வருகை.  
2. வங்கித் துறையின் அபார வளர்ச்சி. கறுப்புப் பண முதலைகள், தமது பணத்தை பாதுகாப்பாக பதுக்கி வைக்க சைப்ரஸ் உதவியது. சாதாரணமாக, சைப்ரஸ் வங்கி ஒன்றில் சேமிப்புக் கணக்கை தொடங்கி, அதில் பணத்தை போட்டாலே போதும். அந்த தொகைக்கு, வேறெந்த நாட்டிலும் இல்லாதவாறு, பல மடங்கு அதிகமான வட்டி கிடைப்பது மட்டுமல்ல, அரச கண்காணிப்பும் மிகக் குறைவு. அது மட்டுமல்ல, ஒரு நாடு கடந்த கம்பனி அமைப்பதற்கான சட்டங்களும் இலகுவானவை. மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது, பெரும் வணிக நிறுவனம் ஒன்று அரசுக்கு செலுத்த வேண்டிய வரி மிகக் குறைவு. (மேற்கு ஐரோப்பாவில் 30% - 40% கார்ப்பரேட் வரி கட்ட வேண்டும். சைப்ரசில் வெறும் 10% மட்டுமே!) 

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் பின்னர், வர்த்தகம் செய்வது என்ற போர்வையின் கீழ், ஊர் மக்களின் பணத்தை சுரண்டி கொழுத்த பணக்கார மாபியா கும்பல், சைப்ரஸ் நாட்டை புகலிடமாக கருதியதில் வியப்பில்லை. அங்கே பெயருக்கு ஒரு கம்பனியை பதிவு செய்து விட்டு, ரஷ்யாவில் கிடைத்த இலாபம் என்ற பெயரில் கொள்ளையடித்த பணத்தை, சைப்ரஸ் கணக்கிலத்திற்கு மாற்றி விட்டார்கள். அப்படி மாற்றுவதன் மூலம், வரி ஏய்ப்புச் செய்து இன்னும் நிறைய சம்பாதித்தார்கள். ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்ய பணக்காரர்கள், ரஷ்ய உழைக்கும் மக்களிடம் சுரண்டிய பணத்தை, தனது காலடியில் கொண்டு வந்து கொட்டுவதை கண்டு உள்ளுக்குள் மகிழ்ந்திருக்கும். 

ஐரோப்பிய ஒன்றியம், சைப்ரஸ் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக மீட்பு நிதி அளித்து விட்டு, அந்தக் கடனை அறவிடுவதற்காக, சைப்ரஸ் மக்களின்  பணத்தில் ஒரு பகுதியை, மறைமுகமாக கொள்ளையடித்து விட்டது. ஏற்கனவே இது போன்ற நெருக்கடி வரப் போகின்றது என்று, சைப்ரஸ் ஜனாதிபதி தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு எச்சரித்திருக்கிறார். அவர்கள் தமது பணத்துடன், வெளி நாடுகளுக்கு தப்பி ஓடி விட்டார்கள். இவ்வாறு கோடிக் கணக்கான பணம், திருட்டுத் தனமாக  சைப்ரஸ் நாட்டை விட்டு வெளியேறியுள்ளது. இறுதியில் பாதிக்கப் பட்டது, மத்தியதர வர்க்க சைப்ரஸ் மக்கள் தான். (குவைத் போன்ற வளைகுடா நாடுகளைப் போன்று, சைப்பிரஸ் உழைக்கும் மக்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. ஒப்பந்த அடிப்படையில் வந்து வேலை செய்யும் அந்நிய தொழிலாளர்கள் தான் பொருளாதாரத்தின் தூண்களாக விளங்குகிறார்கள்.)

இப்போது எமது அடிப்படைக் கேள்விக்கு வருவோம். சைப்ரஸ் நாட்டின் பொருளாதார பிரச்சினை எங்கே, எப்படி ஆரம்பமாகியது ? நான்கு வருடங்களுக்கு முன்னர், கிரேக்க நாட்டு பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது, அனைவருக்கும் நினைவிருக்கலாம். கிரேக்க பெரும்பான்மையினரைக் கொண்ட சைப்ரஸ் நாட்டவர்கள், தீவிரமான கிரேக்க தேசியவாதிகள். நீண்ட காலமாக "தாய் நாடான" கிரேக்கத்துடன் சேர்ந்திருக்க விரும்பி வந்தனர். இன்றைக்கும், சைப்ரஸ் தேசியக் கொடியுடன், கிரேக்க கொடியும் பறப்பதை, அந்த நாட்டிற்கு சென்று வந்தவர்கள் அவதானித்திருக்கலாம். சைப்ரஸ் நாட்டு வங்கிகளும், கோடீஸ்வரர்களும், தமது "தாய் நாடான" கிரேக்கத்தில் முதலிட்டு வந்தனர். 

கிரேக்க நாட்டில் பொருளாதார நெருக்கடி வந்த பின்னர், "தொப்புள்கொடி உறவுகளை" காப்பாற்றும் நோக்கில், பல கோடி பெறுமதியான அரச கடன் பத்திரங்களை சைப்ரஸ் வங்கிகள் வாங்கின. ஆனால், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாத கிரேக்க அரசு, அந்நிய கடன்களை திருப்பிக் கொடுக்க முடியாத அளவுக்கு வங்குரோத்தான நிலையை அடைந்தது. "ஐயா, உங்கள் கடன் முழுவதையும் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருக்கிறோம். அதனால் கடனில் ஒரு பகுதியை இரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம் ..." என்று தொப்புள் கொடி உறவுகளிடம் கையை விரித்தது. அதனால் வந்தது கேடு. பெருமளவு சைப்ரஸ் நிதி, கிரேக்கத்தில் முடங்கி விட்டதால், சைப்ரஸ் வங்கித் துறை நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது. ஆனால், அந்த உண்மையை  தமது வாடிக்கையாளர்களுக்கு சொல்ல முடியுமா? 

வங்கியில் நாம்  போட்டிருக்கும் சேமிப்புப் பணத்திற்கு, "வட்டி எங்கிருந்து வருகின்றது?" என்று எப்போதாவது சிந்தித்து இருக்கிறோமா ?  ஆகாயத்தில் இருந்து கடவுள் அள்ளிக் கொட்டுகிறாரா ? "பக்தர்களே, உங்கள் வீடுகளில் லட்சுமி படத்தை வைத்து, தினந் தோறும் பூஜித்து வந்தால், லட்சுமி கையில் இருந்து பணம் கொட்டுவது போல, வீட்டிலும் பணம் கொட்டும்..." என்று ஆன்மீகவாதிகள் மக்களை ஏமாற்றுவது போல, வங்கிகள் சொல்ல முடியுமா? முடியாது. ஏனென்றால், எமது முதலீட்டுக்கு கிடைக்கும் இலாபப் பங்கும், கடனாக கொடுத்த தொகைக்கு கிடைக்கும் வட்டியும், யாரோ ஒருவரது உழைப்பில் இருந்து சுரண்டப் பட்ட பணம் தான். அந்த பொன் முட்டையிடும் வாத்தை அறுத்து விட்டால், வாத்தும் செத்து விடும், பொன் முட்டையும்  கிடைக்காது. 

வங்கிகள் நமது சேமிப்புப் பணத்தை, அப்படியே பத்திரமாக பூட்டி வைப்பதில்லை. நமது பணத்தை எடுத்து, இன்னொருவருக்கு கடனாக கொடுக்கின்றன. அந்தக் கடனாளி, வங்கி நிர்ணயிக்கும் வட்டியை கட்டி வருகிறார். கடனாளியிடம் வங்கி அறவிடும் வட்டியானது, நமது சேமிப்பு பணத்திற்கு வங்கி கொடுக்கும் வட்டியை விட அதிகமாகும். நமது சேமிப்புக்கு கொடுக்கும் வட்டியை விட, பல மடங்கு வருமானம் வங்கிக்கு கிடைக்கிறது. தற்போது கடனாளியான கிரேக்கம் கையை விரித்து விட்டதால், சைப்ரஸ் வங்கிகளுக்கு வருமானம் கிடைக்கவில்லை. ஆனால், மறுபக்கத்தில் சேமிப்பாளர்களுக்கு மாதாமாதம் வட்டி கட்டியாக வேண்டிய நிலைமை. அதாவது வங்கியின் கணக்குப் புத்தகத்தில், ஒரு பக்கம் "மைனஸ்", இன்னொரு பக்கமும் "மைனஸ்" என்று இழப்பு ஏற்படுகின்றது. அதுவே சைப்ரஸ் நாட்டில் பொருளாதார நெருக்கடியை உருவாக்கியது. 

ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி பற்றிய அறிவிப்பு வெளியானவுடனே,  சைப்ரஸ் நாட்டு வங்கிகள், குறைந்தது ஒரு வாரத்திற்கு மூடி இருக்கும் என்று அறிவிக்கப் பட்டது. அதன் அர்த்தம், வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியாது என்பது மட்டுமல்ல, வங்கி அட்டையை பயன்படுத்தி கடையில் எதையும் வாங்க முடியாது. நாணயத் தாள்களை மட்டுமே ஏற்றுக் கொண்டார்கள். இன்டர்நெட் மூலமான பணப்பரிமாற்றமும் தடுக்கப் பட்டது. "வளர்ச்சி அடைந்த" மேற்கத்திய நாடுகளில், பெரும்பாலான மக்கள் எந்நேரமும் பணத்தை சட்டைப் பையில் வைத்துக் கொண்டு திரிவதில்லை. எல்லா இடங்களிலும், ATM மெஷின்களும், வங்கி அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதியும் இருப்பதால், பணம் வைத்திருக்க வேண்டிய தேவையும் இல்லை. 

"பணத்தையே கண்ணால் காணாத அளவுக்கு நாகரிக வளர்ச்சி கண்ட சமூகத்தில்", ஒரு வாரத்திற்கு வங்கிகள் எதுவும் இயங்காமல் ஸ்தம்பிதமடைந்து விட்டால், அன்றாட உணவிற்கே பணமின்றி கஷ்டப் பட வேண்டியிருக்கும். அந்த திகில் காட்சிகளை சைப்ரஸ் மக்கள் நேரடியாக அனுபவித்தார்கள். நல்ல வேளையாக, தினசரி குறிப்பிட்டளவு பணம் மட்டும் எடுக்கலாம் என்று மட்டுப் படுத்தப் பட்டது. அதுவும் இல்லையென்றால்? "நான் இத்தனை காலமும் முதலாளித்துவத்தை, ஐரோப்பிய ஒன்றியத்தை குறை சொல்பவர்களை எதிர்த்து திட்டிக் கொண்டிருந்தேன். இப்போது நானும் அவர்களைப் போல குறை கூறத் தொடங்கி விட்டேன்..." என்று பல சைப்ரஸ் பிரஜைகள் தமது உள்ளக் குமுறலை கொட்டித் தீர்க்கின்றனர்.  

வங்கிகள் திறக்கப் பட்டால், பொதுமக்கள் வங்கியில் போட்டிருக்கும் பணம் முழுவதையும் எடுத்துச் சென்று விடுவார்கள் என்ற அச்சம் நிலவியது. அது உண்மை தான். வங்கிகள் மீது நம்பிக்கையிழந்த பொதுமக்கள், தமது கணக்கில் இருக்கும் பணம் முழுவதையும் வழித்து துடைத்து எடுத்துக் கொண்டு, தப்பினோம், பிழைத்தோம் என்று தலை தெறிக்க ஓடிப்போகத் தான் நினைப்பார்கள். பொது மக்கள் தமது பணத்தை மீளப்பெற்றுக் கொண்டால், தவிர்க்கவியலாது வங்கிகள் திவாலாகும். பொது மக்களின் சேமிப்புத் தொகையில் பத்து வீதத்தை கழித்து, வெளிநாட்டு கடன்களை அடைக்கும் திட்டத்திற்கு, சைப்ரஸ் மக்கள் எதிர்த்து வந்தார்கள். இவ்வளவு காலமும் சொகுசாக வாழ்ந்த மக்கள், தாமாகவே வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.  மக்களின் எதிர்ப்பலையை கண்டு அஞ்சிய பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்த பொருளாதார சீர்திருத்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. IMF, ஐரோப்பிய வங்கிகளின் திட்டத்தினை, ஒரு ஐரோப்பிய நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மனதாக எதிர்த்துள்ளமை இதுவே முதல் தடவை. 

துபாய் போன்று, சைப்ரசும் வீட்டுமனைகள் கட்டி விற்று வந்தது. அதுவும் சைப்ரசின் தேசியப் பொருளாதார வளர்ச்சியில் பெருமளவு பங்களிப்பை செய்துள்ளது. சைப்பிரசில் வீடு வாங்கும் வெளிநாட்டவர்களுக்கு, நிரந்தர வதிவிட அனுமதிப் பத்திரம் வழங்கியது. அதன் மூலம், சில வருடங்களின் பின்னர், ஐரோப்பிய ஒன்றிய பிரஜாவுரிமை பெற்றுக் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பில், குறைந்தது முப்பதாயிரம் பணக்கார ரஷ்யர்கள் சைப்பிரசில் வீடுகளை வாங்கியுள்ளனர். சைப்ரசில் ஏராளமான ரஷ்ய பணக்காரர்கள் வசிப்பதால், ஆட்சியாளர்கள் ரஷ்யாவின் நிதியுதவியை எதிர்பார்த்தார்கள். ஆனால், ரஷ்யாவோ ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு உடன்பாட்டுக்கு வருமாறு தட்டிக் கழித்து விட்டது.

கிரேக்கம், ஸ்பெயின், போர்த்துக்கல், சைப்ரஸ் என்று அடுத்தடுத்து பல ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை நாடுகள் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப் பட்டுள்ளன. அது போன்று, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து போன்ற "பணக்கார" ஐரோப்பிய நாடுகளும், எதிர்காலத்தில் பாதிக்கப் படுமா?  இன்றைய நிலையில், அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஏன் அப்படி? ஏனென்றால், இவற்றை  "Triple - A நாடுகள்" என்று பொருளாதார நிபுணர்கள் வகைப் படுத்தி உள்ளனர். அதன் அர்த்தம், இந்த நாடுகள் எந்த நிபந்தனையுமின்றி கடனுதவி பெறலாம். அதாவது, முதலீட்டாளர்கள் இந்த நாட்டு பொருளாதாரம் பாதுகாப்பானது என்று இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால், ஸ்பெயின், கிரேக்கம் போன்ற நெருக்கடியினால் பாதிக்கப் பட்ட நாடுகள் மீது அந்த நம்பிக்கை கிடையாது. அதனால், அவை கடன் கேட்டாலும் பல கடுமையான நிபந்தனைகளுக்கு பிறகு தான் பெற்றுக் கொள்கின்றன. 

"மன்னிக்கவும், எல்லாமே ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை பெற்ற நாடுகள் அல்லவா? இப்படி எல்லாம் பாகுபாடு காட்டுவது நியாயமாகுமா?" ஆம், முதலாளித்துவ பொருளாதார விதிகளின் படி அது நியாயமானது. இதனை புரிந்து கொள்ள கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் என்ற நூலை படிக்க வேண்டும். உலகில் சில நாடுகளில் மட்டுமே, மூலதனம் குவிந்துள்ளது. சர்வதேச மூலதனம் எந்த நாடுகளில் உள்ளதோ, அந்த நாடுகள் மட்டுமே உலகில் பலமானவை. "அதிக பலசாலியே வெல்வான்" என்பது அனைத்து முதலாளித்துவ ஆதரவாளர்களும் ஏற்றுக் கொண்ட தத்துவம் ஆகும். இதையே ஜோர்ஜ் ஆர்வெல், விலங்குப் பண்ணை என்ற நாவலில் அழகாக எழுதி இருந்தார். "அடிப்படையில் எல்லா விலங்குகளும் சமமானவை. ஆனால், சில விலங்குகள்  பிற விலங்குகளை விட அதிகம் சமமானவை." ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் அனைத்து நாடுகளும் சமமானவை என்று கடதாசியில் எழுதி உள்ளது. ஆனால், நடைமுறையில் ஜெர்மனி போன்ற பெருமளவு மூலதனத்தை திரட்டியுள்ள நாடுகள் மட்டுமே எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றன."

Monday, February 27, 2012

ஐக்கிய ஐரோப்பிய குடியரசு, முடிவல்ல ஆரம்பம்

இன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடி, பொது நாணயமான யூரோவின் மதிப்பிறக்கம் என்பன, ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளன. யூரோ நாணயத்தின் வீழ்ச்சியானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் வீழ்ச்சியாக கருதிக் கொள்கின்றனர். அது போன்ற செய்திகளும் வெளி வருகின்றன. இந்த நெருக்கடியான சூழலில், ஐரோப்பாவின் அரசியல் வரலாற்றுப் பின்னணியை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம். ஏனெனில், ஐரோப்பிய ஒன்றியமானது வெறும் பொருளாதாரக் கூட்டமைப்பு என்ற விம்பமே இது வரை காலமும் பரப்பப் பட்டு வந்துள்ளது. இதனால் எல்லோரும், ஐரோப்பாவின் நெருக்கடியை, பொருளாதார நெருக்கடியாக மட்டுமே கருதிக் கொள்கின்றனர். பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு, ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதை ஒரு புறம் வைத்து விட்டு, ஐரோப்பியக் கூட்டமைப்பின் தோற்றம், அமைப்பு, இலக்கு என்பனவற்றை ஆராய்ந்த பின்னர் தான், அதன் பொருளாதாரம் குறித்த முடிவுகள் எடுக்கப் பட வேண்டும். ஏனெனில், பொருளாதாரம் என்றுமே தனியாக இயங்கவில்லை. அதற்கென்று ஒரு அரசியல் கட்டமைப்பு இருந்து வருகின்றது.

முதலாம் உலகப்போரின் முடிவில், ஜெர்மனியின் கடன்களை அறவிடுவதற்காக, BIS எனப்படும் தனியார் வர்த்தக வங்கி ஸ்தாபிக்கப் பட்டது. ஐரோப்பிய, அமெரிக்க வங்கியாளர்கள் அதில் தலைமை வகித்தனர். இன்றைய IMF வங்கியின் முன்னோடி என்று கருதப்படும், BIS சுவிட்சர்லாந்து, பாசல் நகரில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கியது. பிற்காலத்தில், ஹிட்லரின் நாஜி அரசுக்கு ஆதரவாக செயற்பட்டது. நாஜி ஜெர்மனியர்களும் வங்கியின் தலைமைப் பதவியில் நியமிக்கப் பட்டனர். Bank of England , பெருமளவு பங்குகளை வைத்திருந்தது. BIS தலைவராக ஒரு அமெரிக்கர் நியமிக்கப் பட்டார். நாஜி அரசின் பொருளாதாரத் திட்டங்களுக்கு, BIS நிதியுதவி வழங்கியது. அது மட்டுமல்லாது, தவறான வழியில் பெறப்பட்ட கறுப்புப் பணத்தை சலவை செய்யப் பயன்பட்டது. நாஜிகள் கைப்பற்றிய ஐரோப்பிய நாடுகளிடம் இருந்த தங்கக் கட்டிகள் எல்லாம், BIS சிடம் ஒப்படைக்கப் பட்டன.

இரண்டாம் உலகப்போரின் முடிவில், ஹிட்லரின் நாசிஸ அரசு மட்டுமே தோற்கடிக்கப் பட்டது. ஜெர்மனியின் பொருளாதார பலத்திற்கு எந்தப் பங்கமும் ஏற்படவில்லை. வெகு விரைவிலேயே, மேற்கு ஜெர்மனியின் தொழிற்துறை இழந்த பெருமையை மீளப் பெற்றுக் கொண்டது. ஐரோப்பாக் கண்டத்திலேயே மிகப் பெரும் பொருளாதாரப் பலசாலியாக மேற்கு ஜெர்மனி (தொண்ணூறுகளுக்கு பிறகு, ஐக்கிய ஜெர்மனி) திகழ்ந்தது. உண்மையில், ஜெர்மனியின் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்காவும் உதவியாகவிருந்துள்ளது. மார்ஷல் திட்டம் என்ற பெயரில் பெருமளவு பணம் பாய்ந்தது. முதலாம் உலக யுத்தத்தின் பின்னர் நடைபெற்றது போல, போருக்கு காரணமான ஜெர்மனியை தண்டித்து இருக்கலாம். அதே நேரம், தனக்குப் போட்டியாக, ஐரோப்பிய பொருளாதார வல்லரசு உருவாவதை அமெரிக்காவும் விரும்பப் போவதில்லை. இருப்பினும், (மேற்கு) ஜெர்மனியின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது, அன்றைய பனிப்போர் கால கட்டத்தில் இன்றியமையாததாக இருந்தது.

போருக்குப் பின்னர் ஞானம் வந்தது போன்று, முந்திய ஐரோப்பிய வல்லரசுகள் நடந்து கொண்டன. ஜென்மப் பகைவர்களாக காணப்பட்ட, ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் தமக்குள் ஒற்றுமையை வளர்த்துக் கொண்டன. 1945 வரையில், ஐரோப்பியர்கள் தமக்குள் சண்டையிட்ட காலம் மாறியது. அதற்குப் பதிலாக, முன்னாள் காலனிய நாடுகளில் இனங்களுக்கு இடையிலான யுத்தங்களை தூண்டி விட்டார்கள். குறிப்பாக, ஜெர்மனி, பிரான்சுக்கு இடையிலான பகைமை உணர்வு குறிப்பிடத் தக்க உச்சத்தில் இருந்தது. இரண்டு நாடுகளும் நூறாண்டுகளாக யுத்தத்தில் ஈடுபட்டன. ஒரு காலத்தில் ஜெர்மனியின் அல்சாஸ் மாநிலத்தை பிரான்ஸ் கைப்பற்றியது. ஹிட்லரின் அரசு, மீண்டும் அல்சாசை கைப்பற்றி ஜெர்மனியுடன் இணைத்தது. போரின் முடிவில் அது திரும்பவும், பிரான்சுக்கு சொந்தமானது. நாஜிப் படைகள், பிரான்சை அடிபணிய வைத்தன. அதற்குப் பதிலடியாக, நேச நாடுகளின் அணியுடன் சேர்ந்த பிரெஞ்சுப் படைகள், ஜெர்மனியில் பேரழிவை ஏற்படுத்தின. சாதாரண ஜெர்மானியர்களையும் தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்து வதைத்தன. இத்தனை வன்மம் கொண்ட எதிரிகளான, ஜெர்மனியும், பிரான்சும் ஒன்று சேர்ந்து செயற்படுவது அதிசயமல்லவா? ஐரோப்பிய ஒன்றியம் அந்த அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியது.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை பிரான்சும், ஜெர்மனியும் உணர்ந்து கொண்டு செயற்படுகின்றன. அதனால் தான், தற்போது எழுந்துள்ள பொருளாதார நெருக்கடி குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மன் அதிபர் அங்கெலா மார்கல், "பொருளாதார பிரச்சினைக்கு தீர்வாக, ஐரோப்பிய ஒன்றியத்தை இன்னும் வலுப் படுத்த வேண்டும்." எனத் தெரிவித்தார். உலக சந்தையை ஆக்கிரமித்துள்ள அமெரிக்காவின் பொருளாதார பலம், ஐரோப்பிய வல்லரசுகளின் கண்களில் முள்ளாக குத்திக் கொண்டிருக்கிறது. வல்லரசுகளுக்கு இடையிலான பொருளாதார ஆதிக்கத்திற்கான போட்டியே, உலகப் போர்களுக்கு காரணமாக அமைந்தது. ஒரு காலத்தில், தனித் தனி நாடுகளாக போட்டியிட்ட ஐரோப்பிய நாடுகள், இன்று ஒரு கூட்டமைப்பாக செயற்படுகின்றன. தம்மை விட வளர்ச்சி அடைந்துள்ள அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் பொருளாதாரத்துடன் போட்டியிட ஐரோப்பிய ஒன்றியம் என்ற கட்டமைப்பு உதவும்.

ஒரு காலத்தில், நாஜி ஜெர்மனிக்கு உறுதுணையாக இருந்த BIS என்ற வங்கியைப் போன்று, இன்றைய ஐரோப்பிய மத்திய வங்கியின் செயற்பாடு அமைந்துள்ளது. அது மட்டுமல்லாது, பொதுவான ஐரோப்பிய சட்டம், உறுப்பு நாடுகளின் சட்டங்களின் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றது. அதாவது, உறுப்பு நாடு ஒன்றைச் சேர்ந்த சட்டப் பிரிவு, ஐரோப்பிய சட்டத்துடன் முரண்பட முடியாது. அத்தகைய தருணத்தில், ஐரோப்பிய சட்டமே செல்லுபடியாகும். இது முன்னர் சோவியத் ஒன்றியத்தில் நிலவிய சட்டவாக்கத்தை நினைவு படுத்துகின்றது. அன்று, ஒவ்வொரு சோவியத் குடியரசும் தனக்கென தனியான சட்டங்களை கொண்டிருந்தன. ஆனால், பொதுவான சோவியத் சட்டம் அனைத்திற்கும் மேற்பட்டது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் நோக்கமும், எதிர்காலத்தில் அமெரிக்க மாநிலங்கள் போன்று ஐரோப்பிய நாடுகளை மாற்றுவது தான். ஆனால், ஹிட்லரின் காலத்தில் இராணுவ பலத்தை பிரயோகித்து, அடாவடித் தனமாக நாடுகளை பிடித்து இணைத்தது போல நடந்து கொள்ள விரும்பவில்லை. அது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை வரலாறு அவர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியமானது பல எதிர்பார்ப்புகளுடனே உருவானது. ஆரம்பத்தில், பொருளாதாரத்தில் முன்னேறியிருந்த நாடுகள் மட்டுமே இணைத்துக் கொள்ளப் பட்டன. பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த நாடுகளுக்கு தாராளமான நிதி உதவி வழங்கப் பட்டது. குறிப்பாக அபிவிருத்தி இன்றி வறுமையில் வாடிய, கிறீஸ், மற்றும் இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் தெற்குப் பகுதிகளில் இடம்பெற்ற மாற்றம் குறிப்பிடத் தக்கது. அங்கெல்லாம் உல்லாசப் பிரயாணத்துறை வளர்ச்சி அடைந்து, வேலை வாய்ப்புகளை உருவாக்கியது. ஆனால், அந்தப் பகுதிகள் பணக்கார ஐரோப்பிய நாடுகளையே தங்கியிருந்தன. அதே போன்று, அயர்லாந்து பொருளாதாரமும் வரிச்சலுகை காரணமாக பிற நாட்டு நிறுவனங்களை கவர்ந்திழுத்தது. இவை எல்லாம் போலியான பொருளாதார வளர்ச்சி என்பதை அன்று யாரும் உணரவில்லை. பணக்கார ஐரோப்பிய நாடுகளில் நெருக்கடி தோன்றினால், தாமே முதலில் பாதிக்க்கப் படுவோம் என்பதையும் அறிந்திருக்கவில்லை. இன்னொரு பக்கத்தில், மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட "பொருளாதார அதிசயத்தை" கண்டு வியந்த, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர போட்டி போட்டன. ஆனால், ஒன்றியத்தில் உறுப்புரிமை பெற்றுக் கொண்ட பிற்பாடு, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், மேற்கு ஐரோப்பாவின் காலனியாக மாறி விட்டன. குறிப்பாக, ஜேர்மனிய பன்னாட்டு நிறுவனங்கள் கிழக்கு ஐரோப்பிய தொழிலாளரின் உழைப்பை சுரண்டி அதிக இலாபம் அடைந்தன.

சமீபத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது, பணக்கார ஐரோப்பிய நாடுகளிற்கு உள்ளேயும் உணரப் படுகின்றது. குறிப்பாக தீவிர வலதுசாரிக் கட்சிகள், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராகவும், பொது நாணயமான யூரோவுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்து வருகின்றன. தேசியவாதம் பேசும் இத்தகைய கட்சிகளின் நோக்கம் வேறு. உண்மையில், அவை ஜனநாயக ஐரோப்பிய ஒன்றியத்தை மட்டுமே எதிர்க்கின்றன. பாஸிச ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்க்கவில்லை. நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்ட கிரேக்க நாட்டில், இராணுவ சர்வாதிகார ஆட்சி ஏற்பட வேண்டும் என்று விரும்புவதில் இருந்தே இவர்களின் நோக்கம் புலனாகும். வெளிப்படையாக காட்டிக் கொள்ளா விட்டாலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையின் குறிக்கோளும் அதுவாக உள்ளது. தற்போது எழுந்துள்ள பொருளாதார பிரச்சினைக்காக, அவர்களது "இலட்சியத்தை" பலி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

Saturday, January 09, 2010

ஜெர்மனி மீண்டும் உலக வல்லரசாகின்றது

[ ஒன்றிணைந்த ஜெர்மனி: மறைந்திருக்கும் ஆபத்து கட்டுரையின் இரண்டாம் பகுதி ]

ஹிட்லர் சோவியத் யூனியன் மீது படையெடுத்து சென்ற காலத்தில், மேற்கில் பலர் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தனர். போல்ஷெவிக் புரட்சியினால் தமது செல்வங்களை இழந்த மேற்கத்திய முதலீட்டாளர்களே அவர்கள். சோவியத் செஞ்சேனையின் வெற்றிகரமான முன்னோக்கிப் பாயும் தாக்குதலின் பின்பு, நாசி படைகள் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து பின்வாங்கின. செஞ்சேனை முழு ஐரோப்பாவையும் விடுவித்து விடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அப்போது தான், அமெரிக்க, பிரிட்டிஷ் படையணிகள் மேற்கு-ஐரோப்பாவில் தரையிறங்கின.

ஏற்கனவே பல கிழக்கைரோப்பிய நாடுகளை விடுவித்த சோவியத் படைகள், கிரீசிற்கும் செல்லலாம் என பிரிட்டன் எதிர்பார்த்தது. கிரீசின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகத்தையும், மத்தியதரைக் கடல் மீதான கட்டுப்பாடையும் கருத்தில் கொண்டு, பிரிட்டன் முந்தி விடத் துடித்தது. பிரிட்டிஷ் படைகள் கிரீசில் தரையிறங்கின. கிரீசில் கம்யூனிச கெரில்லாக்கள் ஏற்கனவே பல பகுதிகளை விடுதலை செய்திருந்தனர். அங்கே பின்வாங்கி ஓடிக் கொண்டிருந்த கிரேக்க பாசிஸ்ட்கள் பிரிட்டிஷ் படைகளுடன் கூட்டுச் சேர்ந்தனர். இதனால் இரண்டாம் உலகப்போரின் பின்னரும், கிரீசில் மீண்டும் உள்நாட்டு யுத்தம் சில வருடங்கள் இழுத்தது.

ஐரோப்பாவில் யுத்தம் முடிவடைந்த பின்னர், பாசிஸ்ட்கள் புகலிடம் தேடி வெளிநாடுகளுக்கு தப்பி ஓடினார்கள். ஜெர்மன் நாஸிக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், முதலில் சுவிட்சர்லாந்து சென்றனர். சுவிட்சர்லாந்து அந்நேரம் "நடுநிலை" வகித்தது குறிப்பிடத்தக்கது. அங்கிருந்து பலர் வத்திக்கான் உதவியுடன் அர்ஜென்தீனா சென்றனர். ஹிட்லரின் இனவெறிப் பரிசோதனைகளுக்கு உதவிய ஜெர்மன் விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் அமெரிக்கா, அவுஸ்த்ரேலியா போன்ற நாடுகளில் சென்று குடியேறினார்கள். அமெரிக்க, பிரிட்டிஷ் அரசுகள் அவர்களின் வெளியேற்றத்திற்கு உதவின.

ஜெர்மன் சமஷ்டிக் குடியரசு (மேற்கு ஜெர்மனி) உருவான போது, முன்னாள் நாசி அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் கிடைத்தன. நாஸிச படை அதிகாரிகள் பலர் பின்னர் 'நேட்டோ' விலும் உயர் பதவிகளை வகித்தனர். இன்று கூட ஜெர்மன் இராணுவத்தினுள், நாஸிச பரப்புரை அமோகமாக நடக்கிறது. ஜெர்மனியில் அகதி முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய நவ-நாசிகள் பலர் முன்னர் படைவீரர்களாக இருந்தவர்கள். முன்னாள் கம்யூனிச கிழக்கு ஜெர்மனியில் "நாஸிகள் களையெடுப்பு" பகிரங்கமாக நடந்தது. நாஸிக் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் சிறையிலடைக்கப்பட்டனர். முன்னாள் நாஸி ஆதரவாளர்களுக்கு கல்வி, தொழில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இது போன்ற நடவடிக்கை எதுவும் மேற்கு ஜெர்மனியில் காணப்படவில்லை. கண்துடைப்புக்காக சில நாஸிச தலைவர்கள் நியூரன்பெர்க் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர்.

1989 ம் ஆண்டு, பெர்லின் மதில் வீழ்ந்ததுடன், கிழக்கு-மேற்கு ஜெர்மனிகள் ஒன்றாக இணைந்தன. கிழக்கு ஜெர்மன் அரசில் அங்கம் வகித்த பலர் கைது செய்யப்பட்டனர். பெர்லின் மதிலை கடக்க முயன்ற அகதிகளை சுட்டுக் கொன்ற குற்றங்களுக்காக தண்டனை வழங்கப்பட்டது. 1989 ல் வீழ்ந்தது ஒரு சிறிய மதில். இன்று ஒன்றிணைந்த ஜெர்மனியின் எல்லையில் நீளமான கண்ணுக்குப் புலப்படாத மதில் கட்டப்பட்டுள்ளது. ஆசியா, மற்றும் பல மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் அகதிகளை தடுக்க கட்டப்பட்ட மதில் அது. செல்வந்த ஜெர்மனிக்குள் நுழைய முனையும் அகதிகள் எல்லையில் வைத்து தடுக்கப்படுகின்றனர். சில நேரம் சுடப்பட்டு மரணமடைகின்றனர். இந்தக் கொலைகளுக்காக யாரையும் நாம் குற்றம் சுமத்த முடியாது. ஏனெனில் அவர்கள் ஆட்சியில் இருப்பவர்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய உறுப்பினரான ஜெர்மனி, புதிய ஐரோப்பிய இராணுவத்தை உருவாக்கும் திட்டத்தை முன்மொழிந்தது. ஏற்கனவே ஐரோப்பாவில் பொருளாதார பலம் மிக்க நாடான ஜெர்மனி, இராணுவரீதியாக பலவீனமாக இருப்பதாக கருதுகின்றது. (இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஜெர்மனி இராணுவம் வைத்திருக்க தடை போடப்பட்டது.) இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் இராணுவம் என்ற பெயரில் ஆதிக்கம் செலுத்தப் பார்க்கின்றது. 19 ம் நூற்றாண்டில், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய இரண்டு வல்லரசுகள் உலகை பங்குபோட்டன. 20 ம் நூற்றாண்டில் ஹிட்லரின் ஜெர்மனி தனது பங்கை கேட்டு போரிட்டது.

"அன்றொரு நாள் ஹிட்லர் உலகை ஆள ஆசைப்பட்டான்" என பிரிட்டிஷார் பிரச்சாரம் செய்தனர். ஆனால் உண்மையில், தமக்கு போட்டியாக ஜெர்மனி வந்து விட்டதே என்ற காழ்ப்புணர்ச்சி அப்படி சொல்ல வைத்தது. முன்யோசனையற்ற ஹிட்லரின் வியூகங்களால், அன்று ஜெர்மனி மண் கவ்வியது. சாம்பலில் இருந்து எழுந்த பீனிக்ஸ் பறவை போல மீண்டும் ஜெர்மனி தலைநிமிர்கிறது. வன்முறையைக் கைவிட்டு விட்டு, ராஜதந்திரங்களை பயன்படுத்தி முன்னுக்கு வரத் துடிக்கிறது. மிக நுணுக்கமாக, ஐரோப்பிய ஒன்றியம் என்ற போர்வையின் கீழ் தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கின்றது. "ஒரே தேசம், ஒரே குடிமக்கள், ஒரே நாணயம்." போன்ற கோஷங்கள் மீண்டும் ஒலிக்கின்றன. ஆனால் பெயர்கள் மட்டும் தான் மாறியுள்ளன.

(முற்றும்)

Part 1: ஒன்றிணைந்த ஜெர்மனி: மறைந்திருக்கும் ஆபத்து

Wednesday, December 16, 2009

இருண்ட ஐரோப்பாவை நோக்கி...

(16 ,17 ஜூன் 1997 ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற Eurotop மாநாடு ஐரோப்பாவின் தலைவிதியை மாற்றியமைத்தது. மாநாட்டுக்கு எதிரான மக்கள் எழுச்சியை மையமாக கொண்டு எழுதப்பட்ட எனது கட்டுரை. "சரிநிகர்" பத்திரிகையில் பிரசுரமானது.)

சிறந்த ஜனநாயக மரபுகளை பேணிப் பாதுகாப்பதாகவும், மனித உரிமைகளை மதிப்பதாகவும் மார் தட்டிக் கொள்வதில் நெதர்லாந்தும் சளைத்ததல்ல. உலகத்தில் சிறந்த பல ஜனநாயக நாடுகளில் ஒன்றாக உலக மக்களாலும், தனது சொந்த நாட்டு மக்களாலும், மதிக்கப்பட்ட நெதர்லாந்தின் ஜனநாயக முகமூடி அண்மையில் கிழிபட்டது. தனக்கு எதிராக கிளம்பும் எந்தவொரு தீவிரவாத எதிர்க்கட்சியையும் நெதர்லாந்து அரசு பொறுத்துக் கொள்ளாது என்பதை அது தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் குறிப்பால் உணர்த்தியது.

ஜூன் 16 ம், 17 ம், திகதிகளில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களது உச்சிமகாநாடு கூட்டப்பட்டது. Eurotop என அழைக்கப்பட்ட இம் மகாநாட்டில் ஒன்றிணைந்த ஐரோப்பாவிற்கான பொது நாணயமான EMU (European Monetary Union ) ஐ 20 ம் நூற்றாண்டின் இறுதியில் புழக்கத்திற்கு கொண்டு வருவது சம்பந்தமாக இறுதி முடிவுகள் இம் மகாநாட்டில் எடுக்கப்பட்டன.

மேலும் Fort Europe ஒன்றை உருவாக்கி புதிய அகதிகள் வருகையை தடை செய்வது பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில், இம்மகாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகளை, தத்தமது நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற எந்த அக்கறையுமின்றி; அதாவது மக்களின் விருப்பை அறியாமலே, ஐரோப்பிய ஒன்றிய கட்டமைப்பில் அந்நாட்டு தலைவர்கள் முழுமூச்சாய் இறங்கினர். யூரோ (EMU ) நாணயத்தின் வருகை, அதனால் வருங்காலத்தில் ஏற்படப் போகும் விளைவுகள், என்பன பெரும் முதலாளிகளுக்கு சாதகமாகவும், சாதாரண மக்களுக்கு பாதகமாகவும் அமையப் போகின்றது. இதனை முன்கூட்டியே ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 331 பொருளாதார நிபுணர்கள் எடுத்துக் கூறியும், அவர்களது வேண்டுகோள் உதாசீனம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வாழும் 20 மில்லியன் வேலையற்றோரினதும், 50 மில்லியன் வறிய மக்களினதும் நலன் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அக்கறைப் படவில்லை. சுருங்கக் கூறின் "முதலாளிகளின் ஐரோப்பா" உருவாகப் போகின்றது.

விவாதத்திற்குரிய Eurotop உச்சிமகாநாடு ஐரோப்பாவில் இதுவரை நலிந்து போயிருந்த இடதுசாரிக் கட்சிகளை ஒன்று சேர வைத்துள்ளது. ஜூன் 14 அன்று, ஆம்ஸ்டர்டாமில் இடம்பெற்ற மாபெரும் பேரணியில் சுமார் ஐம்பதாயிரம் பேர் கலந்துகொண்டுள்ளனர். நெதர்லாந்தின் அண்மைக்கால வரலாற்றில் இடம்பெற்ற மாபெரும் மக்கள் எழுச்சியாக கருதப்பட்ட இப் பேரணியில் ஐரோப்பாவின் பல பாகங்களில் இருந்தும் வந்து சேர்ந்த, வறிய, வேலை வாய்ப்பற்ற மக்கள் கலந்து கொண்டனர். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், பல்வேறுபட்ட பொதுவுடமைக் கட்சிகள் புதிய உத்வேகத்துடன் கலந்து கொண்டதையும், புரட்சிக்கான அறைகூவல் விடுத்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

இவற்றை விட தீவிர இடதுசாரி இளைஞர் குழுக்களால் ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலம், நெதர்லாந்து பொலிசாரினால் தடுத்து நிறுத்தப்பட்டதோடல்லாமல், நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். மேலும் 200 பேர் அடுத்த நாள் இடம்பெற்ற ஒன்றுகூடலின் பொது கைதுசெய்யப்பட்டனர். இதுவரை மொத்தம் 300 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைதுகளின் போது பொலிசாரினால் வன்முறை பிரயோகிக்கப்பட்டதாக நேரில் கண்ட பத்திரிகையாளர் கூறியுள்ளார். கைது செய்ததற்கு காரணங்களாக சில கட்டுக்கதைகளை பொலிசார் சோடித்தனர். பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாகவும், சட்டவிரோதமாக ஒன்றுகூடியதாகவும், பொலிசார் தெரிவித்தனர். ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள், எந்தவொரு பொதுச்சொத்தையும் சேதப்படுத்தாது அமைதியாக நடந்து கொண்டனர், என நேரில் கண்ட சாட்சிகள் கூறினர். மேலும் எந்த ஊர்வலத்திற்கும் தடையில்லை என நகரபிதா ஏற்கனவே அறிவித்திருந்த போதும், இதை சட்டவிரோத ஒன்றுகூடலாக பொலிஸ் கருதியது வேடிக்கையானது. மேலும் இது கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரத்தை தடைசெய்யும் ஒரு நடவடிக்கையுமாகும். இந்த ஆர்ப்பாட்டக்காரரின் வழக்கை விசாரித்த நீதிபதி, பொலிசாரின் இந்தக் கைது நடவடிக்கை சட்டத்திற்கு மாறானது எனவும், அரசு சட்டத்தை தவறாக கையாண்டிருப்பதாகவும் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

எது எப்படியிருப்பினும், நெதர்லாந்து பொலிசாரின் இந்த மனித உரிமைமீறல்கள் கண்டிக்கப்பட வேண்டியவை. மேலும், கைது செய்யப்பட்ட யுவதிகளின் மீது பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதாகவும் போலிஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தம்மை துன்புறுத்தியதாக விடுதலையான கைதிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான சம்பவங்கள், இனிவரும் ஐரோப்பிய முதலாளித்துவ சர்வாதிகாரம், தனக்கெதிரான தீவிர இடதுசாரி சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க விரும்புகிறது என்பதை உணர்த்துகின்றன.
(சரிநிகர், 2-16 ஜூலை 1997)