Friday, June 07, 2013

இஸ்லாமிய - முதலாளியத்திற்கு எதிரான துருக்கி மக்களின் எழுச்சி





துருக்கியில் ஒரு அமைதியான புரட்சி நடக்கிறது. ஆயிரமாயிரம் மக்கள் அதில் கலந்து கொள்கிறார்கள். இறுதியில் அவர்கள் எதிர்பார்க்கும் புரட்சி நடக்காமலே போகலாம். இன்னும் சில நாட்களில், இந்தப் போராட்டம் தனது இலக்கை அடையாமலே ஓய்ந்து விடலாம். ஆனால், தமது வாழ்நாளில் ஒரு வரலாற்றுக் கடமை ஆற்றிய உணர்வு அவர்களின் முகங்களில் பளிச்சிடுகின்றது.

இதனை ஒரு வகையில், "தமிழீழத்திற்கு ஆதரவான தமிழ்நாட்டு மாணவர்களின்" போராட்டத்துடன் ஒப்பிடலாம். இரண்டுமே தன்னெழுச்சியாக நடைபெற்றன. எந்தவொரு அரசியல் கட்சியும் தலைமை தாங்கி வழிநடத்தவில்லை. ஆனால், துருக்கி மக்களின் போராட்டம் அதிலிருந்து மாறுபட்டு தெரிகின்றது. நேரடியாக அந்த நாட்டு அரசாங்கத்துடன் மோதுகின்றது. மாணவர்கள் மட்டுமல்லாது, வைத்தியர்கள், கலைஞர்கள், தொழிலாளர்கள் என்று சமூகத்தின் பல பிரிவினரும் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

இஸ்தான்புல், துருக்கியின் மிகப்பெரிய தொழில்துறை நகரம். இஸ்தான்புல் நகரப் பூங்காவான Gezi யில், நூறுக்கும் குறைவான சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடி, கூடாரமடித்து தங்கினார்கள். நகர மத்தியில் உள்ள பூங்காவில், நிழல்தரு மரங்களை தறித்து வீழ்த்தி விட்டு, அந்த இடத்தில் நவீன கடைத் தொகுதி (Shopping Complex) ஒன்றை உருவாக்க இருந்த முதலாளியத்திற்கு எதிரான எழுச்சி அது. உண்மையில் அது பிரதமர் எர்டோகன் முன்மொழிந்த "இஸ்லாமிய - முதலாளியத்தின்" ஒரு திட்டம் ஆகும். அது என்ன இஸ்லாமிய முதலாளியம்?

கடந்த பத்தாண்டுகளாக பதவியில் உள்ள, துருக்கியின் ஆளும் கட்சியான AKP, ஒரு இஸ்லாமிய மதவாதக் கட்சி. ஒரு பூரணமான ஜனநாயக தேர்தலில், பெரும்பான்மை வாக்காளர்களால் தெரிவு செய்யப் பட்டது. குறிப்பாக, "அனத்தோலியா" என்று அழைக்கப்படும், துருக்கி நாட்டுப்புற ஏழை மக்கள், ஆழமான இஸ்லாமிய மத நம்பிக்கை காரணமாக அந்தக் கட்சிக்கு வாக்களித்திருந்தனர். அந்த நாட்டுப்புற ஏழைகள், முக்காடு போட்ட மத நம்பிக்கை கொண்ட முஸ்லிம் பெண்கள், அரசாங்கத்திற்கு எதிராக இன்னும் கிளர்ந்தெழவில்லை. அப்படி நடந்தால், துருக்கி மக்கள் புரட்சி வெற்றிப் பாதையில் பயணிக்கும். அல்லாவிட்டால், AKP அரசு தனது ஆதரவு தளத்தை, புரட்சிக்கு எதிராக திசை திருப்பி விடும்.

AKP ஆட்சியை கைப்பற்றிய ஆரம்ப நாட்களில், தேசியவாத - பாசிச இராணுவ ஆட்சியாளர்களிடம் இருந்து அதிகாரத்தை கைப்பற்றுவதே பெரும்பாடாக இருந்தது. பல தசாப்த காலமாக, "துருக்கி தேசப் பிதா" அட்டா துர்க் கொள்கையில் இருந்து வழுவாமல், துருக்கியை ஒரு மேற்கு ஐரோப்பிய நாடு போன்று தோன்றுமளவிற்கு ஆட்சி செய்ததில், இராணுவத்தின் பங்களிப்பு பெரிதும் குறிப்பிடத் தக்கது. இராணுவ ஆட்சியாளர்களுடன் தொடர்புடைய மாபியா குழுக்கள், நேட்டோ அங்கத்துவ நாடுகளின் நட்புறவு தனியாக ஆராயப் பட வேண்டியது.

இஸ்லாமியவாத AKP யும், அதன் பிரதமர் எர்டோகனும் ஜனநாயக வழியில் தெரிவு செய்யப் பட்டிருக்கலாம். ஆனால், அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டதும், மெல்ல மெல்ல தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆரம்பித்தனர். அவர்களும் தமக்கென சில மாபியா குழுக்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டார்கள். முந்திய பாசிச ஆட்சியாளர்களைப் போல, மாற்றுக் கருத்தாளர்களை சிறையில் அடைத்தார்கள். குறிப்பாக ஆர்மேனிய இனப்படுகொலையை ஆராய்ந்த எழுத்தாளர், அரசை விமர்சித்த ஊடகவியலாளர்கள், இடதுசாரி ஆர்வலர்கள் போன்றோர் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப் பட்டனர்.

தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரிந்த, துருக்கி ஊடகவியலாளர் ஒருவரும், பல வருடங்களாக சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். அவர் நெதர்லாந்து குடியுரிமை வைத்திருந்த போதிலும் விடுதலையாகவில்லை. அவர் செய்த ஒரே குற்றம், இஸ்தான்புல் நகரில் ஒரு புரட்சிகர வானொலி நிலையத்தை நடத்தி வந்தது தான். 2006 ம் ஆண்டு, நான் துருக்கி சென்றிருந்த சமயம், அந்த வானொலிக்காக என்னைப் பேட்டி கண்டார்கள். அவ்வாறு தான், துருக்கி ஊடகவியலாளர்களுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

எர்டோகன் இஸ்லாமியவாதம் பேசினாலும், நேட்டோ, மேற்குலக நாடுகளுடனான நட்புறவை துண்டிக்கவில்லை. குறிப்பாக, சிரியா உள்நாட்டு யுத்தத்தில், மேற்குலக நலன்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டார். சிரியா கிளர்ச்சிக் குழுக்கள், துருக்கியில் தளம் அமைக்க இடம் கொடுத்தார். அரசாங்கத்தின் அபிலாஷைகள், பெரும்பான்மை துருக்கி மக்களின் விருப்பத்துடன் ஒன்று சேரவில்லை. தேசியவாதிகள், இடதுசாரிகள் மட்டுமல்ல, கணிசமான அளவு சாமானியர்களும் துருக்கி சிரியா உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை விரும்பவில்லை. எர்டோகன் இன்னொரு ஓட்டோமான் சக்கரவர்த்தியாக வருவதற்கு ஆசைப் படுவதாக விமர்சகர்கள் குறை கூறினார்கள். (நூறு வருடங்களுக்கு முன்னர்,  ஓட்டோமான் சக்கரவர்த்தியின் ஆட்சிக் காலத்தில், சிரியா துருக்கியுடன் இணைந்திருந்தது.)

ஆளும் கட்சியான AKP யின் அரசாங்கம், காவல்துறையை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தது. கடந்த பத்து வருட ஆட்சியில், AKP கட்சி ஆதரவாளர்கள், காவல்துறையில் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் அமர்த்தப் பட்டனர். அதுவே இன்றைய மக்கள் எழுச்சிக்கும் வழிவகுத்தது எனலாம். இந்த வருடம், துருக்கி இடதுசாரி தொழிற்சங்கங்கள், கட்சிகள், மே தின ஆர்ப்பாட்டங்களை, இஸ்தான்புல் நகரின் மையப் பகுதியில் நடத்த விரும்பினார்கள். கடந்த கால இராணுவ அடக்குமுறை காரணமாக, பல தசாப்தங்களாக அந்த இடத்தில் மே தின ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப் பட்டிருந்தன. இந்த வருடம், மே தின ஊரவலத்தில் புகுந்த பொலிஸ் படைகள், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி மக்களை கலைத்தனர். வரலாறு காணாத அளவு அபரிதமான கண்ணீர்ப் புகைக் குண்டுவெடிப்பு காரணமாக, அந்த இடம் ரணகளமாக காட்சி அளித்தது. இந்த சம்பவம் காரணமாக, இடதுசாரி கட்சிகளுக்கும், எர்டோகன் அரசுக்கும் இடையிலான விரிசல் அதிகரித்தது.

இந்த வருடம் மே மாதம், இன்னொரு முக்கியமான சம்பவம் நடந்தது. Reyhanli என்ற நகரத்தில், இரண்டு கார்க் குண்டுகள் வெடித்தன. 54 பேர் பலியானதாக அறிவிக்கப் பட்டது. Reyhanli நகரம், சிரியா எல்லையோரம் அமைந்துள்ளது. அண்மைய சிரியா யுத்தம் காரணமாக, ஆயிரக் கணக்கான சிரிய அகதிகளின் வரவால், நகர சனத்தொகை இரட்டிப்பாகியது. FSA போன்ற சிரியா அரசுக்கு எதிரான ஆயுதக் குழுக்கள் அங்கே முகாமிட்டு உள்ளன. சிரியர்களுக்காக சிரியர்கள் நடத்தும் வணிக ஸ்தாபனங்களும் உருவாகி விட்டிருந்தன. சிரியர்கள் மட்டுமல்ல, சிஐஏ, மொசாட் போன்ற வெளிநாட்டு உளவு ஸ்தாபனங்களும் அந்த நகரத்தில் அலுவலகங்களை திறந்திருந்தன. இதெல்லாம், அங்கு வாழும் துருக்கி மக்களின் விருப்பத்தோடு நடக்கவில்லை.

குண்டு வெடிப்பு நடந்து ஒரு மணி நேரத்திற்குள், அது "சிரியா அரசின் சதி வேலை" என்று துருக்கி அரசு குற்றஞ் சாட்டியது. சிரியா மீது படையெடுக்கப் போவதாக பயமுறுத்தியது. சிரியாவின் ஆசாத் அரசு மீதான குற்றச்சாட்டை உறுதிப் படுத்துவதற்காக, உள்ளூரில் இயங்கிய மார்க்சிய கட்சி ஒன்றின் ஒன்பது உறுப்பினர்களை கைது செய்தது. அந்த மார்க்சிய கட்சி, ஆசாத் அரசிடம் நிதி பெறுவதாக குற்றம் சாட்டியது. ஆனால், இந்தக் கதைகள் எல்லாம் மேற்கத்திய நாடுகளில் மட்டுமே ஈடுபட்டது. துருக்கி மக்கள் இதெல்லாம் கட்டுக்கதைகள் என்றனர். "அந்தக் குண்டுவெடிப்பில் 54 பேர் மட்டும் சாகவில்லை, குறைந்தது நூறு பேர் மாண்டிருப்பார்கள், அரசு உண்மையை மறைக்கிறது..." என்றார்கள்.

துருக்கி அரசு, சிரியாவின் ஆசாத் அரசின் மீது பழி போட்ட அதே நேரத்தில், Reyhanli நகர மக்களின் கோபம்,  சிரியா அகதிகளுக்கு எதிராக திரும்பியிருந்தது. அவர்கள் மத்தியில் இயங்கும் FSA அந்தக் குண்டுகளை வெடிக்க வைத்தது என்று நம்பினார்கள். சிரியர்களின் வர்த்தக ஸ்தாபனங்கள், வாகனங்கள் தாக்கப் பட்டன.  துருக்கி ஊடகங்கள் மட்டுமல்ல, மேற்கத்திய ஊடகங்களும் அந்த செய்திகளை அறிவிக்கவில்லை. அது கூட பரவாயில்லை. அந்த நகர மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியில், துருக்கி அரசின் சிரியா கொள்கை கடுமையாக விமர்சிக்கப் பட்டது. துருக்கி அரசு, சிரிய கிளர்ச்சிக் குழுக்களுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப் பட்டன. மேற்கத்திய ஊடகங்கள், அதனை "சிரியாவின் ஆசாத் அரசுக்கு எதிரான பேரணியாக" திரித்துக் கூறியன.

சில நாட்களில் உண்மை வெளியானது. துருக்கியில் இயங்கும் இடதுசாரி ஹேக்கர்ஸ் (Hackers), இணையத்தை ஊடறுத்து, துருக்கி அரசின் இரகசிய ஆவணங்களை கைப்பற்றினார்கள். அதிலே Reyhanli குண்டுவெடிப்பு சம்பவம் பற்றிய தகவல் முக்கியமானது. அதாவது, Reyhanli நகரத்தில் குண்டுவெடிப்பு நடக்கவிருக்கிறது என்ற விபரம், துருக்கி அரசுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது. இந்த தகவல், துருக்கி முழுவதும் காட்டுத்தீ போன்று பரவியது. மக்கள் மத்தியில், அரசுக்கு எதிரான எதிர்ப்பலைகளை உண்டாக்கியது. இதிலே குறிப்பிடத் தக்க விடயம் என்னவென்றால், ரெய்ஹன்லி குண்டுவெடிப்புக்கு சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்த அளவிற்கு, ஹேக்கர்ஸ் வெளியிட்ட தகவலுக்கு கவனம் செலுத்தவில்லை. மேற்கத்திய ஊடகங்கள் அந்த செய்தியை முழுமையாக இருட்டடிப்பு செய்தன. 

(தொடரும்)


துருக்கி மக்கள் எழுச்சி தொடர்பான முன்னைய பதிவுகள்:


"துருக்கி வசந்தம்" : முதலாளியத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி

No comments: