Tuesday, June 06, 2023

டிஸ்கோ நடனத்தை தடைசெய்த புலிகள் & தாலிபான்!

யாழ் குடாநாட்டில், எண்பதுகளின் தொடக்கத்தில், இளைஞர்கள் மத்தியில் டிஸ்கோ நடனக் கலாச்சாரம் பரவி இருந்தது. சிறிய கிராமங்களில் கூட இரவில் மின் விளக்கொளியில் நடனப் போட்டிகள் நடக்கும். 

பெரும்பாலும் தென்னிந்திய திரையிசைப் பாடலுக்கு தான் அபிநயம் பிடிப்பார்கள். தனியாகவும் குழுவாகவும் ஆடுவார்கள். போட்டியில் வெல்லும் இளைஞருக்கு அல்லது குழுவுக்கு பரிசில்கள் வழங்கப் படும். பேபி ஷாலினி என்ற ஒரு 8-9 வயது சிறுமி மிகப் பிரபலமான நடனத் தாரகையாக இருந்தார். அவரது நடனத்தை பார்ப்பதற்கு பெருந்திரளான மக்கள் கூடினார்கள். அதை விட தனிப்பட்ட முறையில் சில இடங்களில் திருமண, பிறந்தநாள் கொண்டாட்டங்களிலும் டிஸ்கோ நடன நிகழ்வுகள் நடக்கும். அந்தளவுக்கு இந்த டிஸ்கோ நடனம் ஈழத்தமிழ் மக்களது கலாச்சாரமாகவே மாறிவிட்டது. 

அப்போது யாழ் குடாநாடு முழுவதும் இயக்கங்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. எல்லா இயக்கங்களும் சமமான அதிகாரத்துடன் இருக்கையில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. யாரும் மக்களின் கலாச்சார நிகழ்வுகளில் தலையிடவில்லை. ஒரு கட்டத்தில், 1986 ம் ஆண்டு, புலிகள் ஏனைய இயக்கங்களை அழித்து விட்டு தமது ஆதிக்கத்தை நிலைநாட்டினார்கள். அதற்குப் பிறகு தான் கலாச்சாரக் காவலர் வேலையில் இறங்கினார்கள். "இந்திய சினிமாக்களால் ஈழத்தமிழ் மக்களின் கலாச்சாரம் சீரழிவதாகவும்", குறிப்பாக டிஸ்கோ நடன நிகழ்வுகள் "சமூகத்திற்கு கேடு விளைவிக்கும்" என அறிவித்து விட்டு டிஸ்கோ நடன நிகழ்வுகளுக்கு தடையுத்தரவு விதித்தனர். அதற்குப் பிறகு, யுத்தம் முடியும் வரையில் அங்கே எந்தவொரு நடன நிகழ்வும் நடக்கவில்லை. பிரபல நடனத் தாரகை பேபி ஷாலினியும் அகதியாக வெளியேறி படகு மூலம் இந்தியாவுக்கு சென்று விட்டார். 

இது நடந்து ஒரு தசாப்த காலத்திற்கு பின்னர், ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சிக்கு வந்தனர். அவர்களும் தமது கட்டுப்பாட்டு பிரதேசங்களில் டிஸ்கோ நடன நிகழ்வுகளை தடைசெய்தனர். அதற்கும் அவர்கள் "இந்திய சினிமாக்களால் ஆப்கான் கலாச்சாரம் சீரழிவதாக" ஒரு காரணம் சொல்லித் தான் தடையுத்தரவு போட்டார்கள். தாலிபான் மதத்தின் பெயரால் செய்ததை, புலிகள் இனத்தின் பெயரால் செய்தனர். அவ்வளவு தான் வித்தியாசம். ஆனால் தமிழர்களோ, இஸ்லாமியர்களோ, பொதுவாக மக்கள் யாரும் நடனத்திற்கு எதிரானவர்கள் அல்ல. இனத்தினதும், மதத்தினதும் பெயரால் நடக்கும் அரசியல் தான் மக்களின் கலாச்சாரத்திற்கு கட்டுப்பாடு விதிக்கிறது.

No comments: