Monday, June 05, 2023

"சோத்துக்கு திரண்ட கூட்டம்!"- சுகாஷுக்கு ஒரு திறந்த மடல்

சைக்கிள் கட்சி என அழைக்கப்படும் தமிழ்த் தேசிய விடுதலைமுன்னணி (TNPF) தையிட்டி விகாரைக்கு எதிராக நடத்தும் போராட்டம் குறித்த தகவல்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வரும் அந்த கட்சியின் பிரமுகர் சுகாஷ் இவ்வாறான கூற்றை வெளியிட்டிருந்தார்:

//இது சோத்துக்காகவோ போத்தலுக்காகவோ திரண்ட கூட்டமல்ல...// இந்தக் கூற்று ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்க தமிழ் மக்களையும் இழிவுபடுத்தும் விதமாக உள்ளது. அதற்கு எனது கண்டத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 

ஏற்கனவே இதே சுகாஷ் தான் வட்டுகோட்டை சாதிய வன்முறையில், (பார்க்க:யாழ் வட்டுக்கோட்டையில் சாதிவெறித் தாக்குதல்!  ) ஆதிக்க சாதியினர் பக்கம் நின்றார். இவர் ஒரு வழக்கறிஞராக இருந்த போதிலும், பாதிக்கப்பட்ட தலித் மக்கள் இவரது தேர்தல் வெற்றிக்காக உழைத்திருந்த போதிலும், நீதிமன்றத்தில் அந்த மக்களுக்காக வாதாட மறுத்தார். வாளால் வெட்டி வன்முறையாட்டம் போட்ட ஆதிக்க சாதி வெறியர்களுடன் சமரசமாக போகும் படி அறிவுரை கூறினார்.  தற்போது மறுபடியும் தனது "உயர்சாதி", மேட்டுக்குடி மனப்பான்மையை வெளியிட்டிருக்கிறார்.

அடித்தட்டு தமிழ் மக்களை இப்படி கேவலமாக சித்தரிக்கும் மேட்டுக்குடி கனவான்கள் தான் தமிழினத் தலைவர் வேஷம் போடுகிறார்கள். 😡😡😡 

இவர்கள் என்ன அளவுக்கு மிஞ்சி சாப்பிட்டு விட்டதால், உண்ட களை தீர தினவெடுத்து வந்த கூட்டமோ? ஒருவேளை இந்த கூட்டம் சோத்துக்காக திரண்டால் அதில் என்ன பிரச்சினை? "சோத்துக்கு வழியில்லை" என்பதும் எம் மக்களது அடிப்படை வாழ்வுரிமைப் பிரச்சினை தான். அந்த பிரச்சினை உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம். உங்களுக்கு 3 நேரமும் தவறாமல் சோறு கிடைக்கிறது என்பதற்காக, அதற்கும் வழி இல்லாத மக்களை அவமானப் படுத்துவீர்களோ? நாவடக்கம் வேண்டும் கனவானே! 

Shame on you. 

உங்கள் மேட்டுக்குடித் திமிரை வீட்டுக்குள் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். 

யாழ்ப்பாணத்தில் பெரும்பான்மையான தமிழ் மக்கள் ஒரு நேர சோற்றுக்கு கூட வழியில்லாமல் கஷ்டப் படுகிறார்கள். அவர்கள் சோத்துக்காக ஒன்று திரளக் கூடாதா? அது தப்பா? அதென்ன "போத்திலுக்காக"? உங்களிடம் பணமிருக்கிறது. வீட்டில் ஒரு முழுப் போத்தில் வெளிநாட்டு விஸ்கி வாங்கி வைத்து யாருக்கும் தெரியாமல் குடிப்பீர்கள். அவர்களிடம் கால் போத்தில் உள்நாட்டு சாராயம் கூட வாங்க காசில்லாமல் இருக்கலாம். அதற்காக வெட்கத்தை விட்டு "போத்திலுக்காக" வரலாம். இது கிண்டல் அடிக்கும் விடயமா? உங்களுக்கு கிடைக்கும் அளவுக்கு மாதாந்த வருமானம் கிடைத்தால், அவர்கள் ஏன் சோத்துக்கும், போத்திலுக்கும் திரளப் போகிறார்கள்? முதலில் அதற்காக அல்லவா தாங்கள் போராட வேண்டும்?

No comments: