Tuesday, March 02, 2021

ஜனநாயக வழியிலான சோஷலிசப் புரட்சி குறித்து எங்கெல்ஸ் (கம்யூனிசத்தின் கோட்பாடுகள், பகுதி - 4)

(எங்கெல்ஸ் எழுதிய‌ க‌ம்யூனிச‌த்தின் கோட்பாடுக‌ள் தொட‌ர்ச்சி...) 


கேள்வி 16: த‌னியார் சொத்துடைமை ஒழிப்பு அமைதி வ‌ழியில் ந‌ட‌க்க‌ முடியாதா? 

ப‌தில்: அப்ப‌டி ந‌டந்தால் அதுவே விரும்ப‌த் த‌க்க‌து. க‌ம்யூனிஸ்டுக‌ள் இதை க‌டைசி வ‌ரையும் எதிர்க்க‌ மாட்டார்க‌ள். எல்லா சூழ்ச்சிக‌ளும் ப‌ய‌ன‌ற்ற‌வை, தீங்கு விளைவிப்ப‌வை என்ப‌தை க‌ம்யூனிஸ்டுக‌ள் அறிவார்க‌ள். புர‌ட்சிக‌ள் ஒருபோதும் முன்கூட்டிய‌ திட்ட‌மிட‌லில் த‌ன்னிச்சையாக‌ உருவாக்க‌ப் ப‌டுவ‌தில்லை என்ப‌து க‌ம்யூனிஸ்டுக‌ளுக்கு ந‌ன்றாக‌த் தெரியும். மாறாக‌ புர‌ட்சிக‌ள் எல்லா இட‌ங்க‌ளிலும் எல்லாக் கால‌ங்க‌ளிலும் உள்ள‌ புற‌ச்சூழ‌ல்களின் விளைவாக‌ இருந்துள்ள‌ன‌. அவை த‌னித்த‌னி க‌ட்சிக‌ள் ம‌ற்றும் அனைத்து வ‌ர்க்க‌ங்க‌ளில் இருந்தும் பூர‌ண‌ சுத‌ந்திர‌த்துட‌ன்‌ உள்ள‌ன‌. எல்லா நாக‌ரிக‌மைந்த‌ நாடுக‌ளிலும் பாட்டாளிக‌ளின் வ‌ள‌ர்ச்சி வ‌ன்முறை கொண்டு ஒடுக்க‌ப் ப‌டுவ‌தை அவ‌ர்க‌ள் காண்கிறார்க‌ள். அத‌னால் க‌ம்யூனிச‌ எதிர்ப்பாள‌ர்க‌ள் த‌ம‌து முழுப் ப‌ல‌த்தை பிர‌யோகித்து புர‌ட்சியை நோக்கி வ‌ழிந‌டாத்துவ‌தையும் காண்கிறார்க‌ள். இத‌ன் விளைவாக‌ ஒடுக்க‌ப் ப‌ட்ட‌ பாட்டாளி வ‌ர்க்க‌ம் இறுதியில் புர‌ட்சியை நோக்கி த‌ள்ள‌ப் ப‌ட்டால், க‌ம்யூனிஸ்டுக‌ளாகிய‌ நாங்க‌ள் இப்போது சொல்வ‌தைப் போன்று பாட்டாளிக‌ளின் இல‌ட்சிய‌த்தை பாதுகாப்ப‌தை செய‌லில் காட்டுவோம். 

கேள்வி 17: தனியார் சொத்துடைமையை ஒரேயடியாக ஒழித்து விட முடியுமா? 

பதில்: ஏற்கனவே உள்ள உற்பத்தி சாதனங்களை ஒரேயடியாக பன்மடங்காக சமுதாயம் முழுவதற்கும் தேவைப்படும் அளவிற்கு மாற்றியமைக்க சாத்தியமில்லை.அது போன்று இதுவும் ஒரேயடியில் ஒழிப்பது சாத்தியமில்லை. பெருமளவு சாத்தியமாகி வருகின்ற பாட்டாளிவர்க்கப் புரட்சி சமுதாயத்தை படிப்படியாக மாற்றியமைக்கும். போதுமான அளவு உற்பத்திச் சாதனங்கள் உருவாக்கப்படும் பொழுது தான் தனியார் சொத்துடைமையை ஒழிக்க முடியும். 

கேள்வி 18: எந்தவொரு வளர்ச்சிப் பாதையின் ஊடாக இந்தப் புரட்சி சென்று கொண்டிருக்கும்? 

பதில்: அது முதலாவதாக ஜனநாயக அரசமைப்பாக இருக்கும். அதனால் அது நேரடியாகவோ மறைமுகமாகவோ பாட்டாளிவர்க்கத்தின் அரசியல் அதிகாரத்தைக் கொண்டு வரும். பாட்டாளிவர்க்கத்தினர் சனத்தொகையில் பெரும்பான்மையாக உள்ள இங்கிலாந்தில் அது நேரடியாக நடக்கும். சனத்தொகையில் பெரும்பான்மை பாட்டாளிகளை மட்டுமல்லாது, விவசாயிகளையும், மத்தியதர வர்க்கத்தினரையும் கொண்டுள்ள பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் அது மறைமுகமாக நடக்கும். அந்நாடுகளில் உள்ள விவசாயிகளும், மத்தியதர வர்க்கத்தினரும் பாட்டாளிகளாக மாறும் கட்டத்தில் உள்ளனர். அவர்கள் தமது அரசியல் நலன்களுக்காக மென்மேலும் பாட்டாளிகளில் தங்கியிருக்கும் நிலையில் உள்ள படியால் விரைவில் பாட்டாளிகளின் அரசியல் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கும். இது சில நேரம் இரண்டாம் கட்ட போராட்டத்தை உருவாக்குவதுடன். கடைசியில் பாட்டளிவர்க்க வெற்றியில் சென்று முடியும். 

ஜனநாயகத்தை ஒரு அழுத்தம் கொடுக்கும் கருவியாக பயன்படுத்தா விட்டால் அது பாட்டாளிவர்க்கத்தினருக்கு பிரயோசனமாக இருக்காது. அந்த அழுத்தம் தனியார் சொத்துடைமையை தாக்குவதாகவும், பாட்டாளிவர்க்கத்தின் இருப்பை உறுதிப் படுத்துவதாகவும் இருக்க வேண்டும். இப்போதுள்ள உறவுகளில் ஏற்கனவே பின்விளைவுகளை உண்டாக்கி வருகின்ற முக்கியமான நடவடிக்கைகள் பின்வருமாறு: 

1. தனியார் சொத்துடைமையை முற்போக்கான வரிகளின் மூலம் கட்டுப்படுத்துவது. மரபுவழிச் சொத்துக்களை பெற்றுத் கொள்ளும் வாரிசுகளுக்கு கடுமையான வரி விதிப்பு. சகோதரர்கள், மருமக்கள் என்ற வழிகளிலான வாரிசுரிமையை இரத்து செய்வது. கட்டாயக் கடன்கள் ஆகியன. 

2. பெரும் நிலவுடைமையாளர்கள், தொழிலதிபர்கள், ரயில் மற்றும் கப்பல் கம்பனிகளின் உரிமையாளர்கள், ஆகியோரை படிப்படியாக சொத்துரிமை இல்லாதாக்குவது. இதனை ஒரு பக்கம் அரசு நிறுவனங்களின் போட்டி மூலமும், மறு பக்கம் பணப் பத்திரங்களாக (காசோலை போன்றது) நஷ்டஈடு கொடுப்பதன் மூலமும் செய்ய வேண்டும். 

3. பெரும்பான்மை மக்களுக்கு எதிரான கலகக்காரர்கள், நாட்டை விட்டு வெளியேறியவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வது. 

4. உழைப்பை ஒழுங்கமைப்பது. அதாவது அரசுக்கு சொந்தமான நிலங்கள், தொழிற்சாலைகள், பணியிடங்கள் போன்ற தேசிய நிறுவனங்களில் பாட்டாளிகளை வேலைக்கு அமர்த்துவது. இதன் மூலம் தொழிலாளர்களுக்கு இடையிலான போட்டியை ஒழிக்க முடியும். தனியார் தொழிலதிபர்கள் அப்போதும் இருந்தால், அரசு கொடுக்குமளவு அதிக ஊதியம் கொடுக்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப் பட வேண்டும். 

5. தனியார் சொத்துடைமை ஒழிக்கப்படும் வரையில் சமூக உறுப்பினர்கள் அனைவரும் சமமாக வேலை செய்யும் கடமையை உருவாக்குதல். தொழிற்துறை ஊழியர் படைகள், குறிப்பாக விவசாயத்திலும் நிறுவப்பட வேண்டும். 

6. பண வணிகத்தையும், கடன் கட்டமைப்பையும் அரசின் கீழ் மையப் படுத்த வேண்டும். தேசிய வங்கி, அரசு முதலீடுகள் மூலம் தனியார் வங்கிகளையும், வங்கியாளர்களையும் ஒடுக்க வேண்டும். 

7. தேசிய தொழிற்சாலைகள், பணியிடங்கள், ரயில்பாதைகள், கப்பல்கள் என்பனவற்றை அதிகரிப்பது. அனைத்து விவசாய நிலங்களிலும் பயிர் செய்தல். மூலதனத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான உறவின் அடிப்படையில், ஏற்கனவே பயிரிடப்பட்ட அரசு நிலங்களை அதிகரிப்பது. 

8. தாயின் பராமரிப்பில் இருந்து விடுபடும் எல்லாப் பிள்ளைகளும் அரசு செலவில் அரசு நிறுவனங்களில் பராமரிக்கப் பட வேண்டும். கல்வி பொருள் உற்பத்தியுடன் இணைக்கப் பட வேண்டும். 

9. தொழிற்துறையிலும், விவசாயத்திலும் ஈடுபடும் குடியுரிமைச் சமூகங்களுக்கு பொதுவான குடியிருப்புகளாக தேசிய காணிகளில் பெரிய மாளிகைகள் கட்டப்பட வேண்டும். அவை நகர்ப்புற, நாட்டுப்புற வாழ்வியலின் நன்மைகளை கொண்டதாகவும், அவற்றின் எந்தவொரு சார்புத்தன்மையை, அல்லது பாதகத்தன்மையை கொண்டிராததாகவும் இருக்க வேண்டும். 

10. சுகாதாரமற்ற, மோசமாக கட்டப்பட்ட வீடுகளையும், நகரக் குடியிருப்புகளையும் இடித்துத் தகர்க்க வேண்டும். 

11. திருமண உறவுகளுக்கு வெளியே பிறந்த பிள்ளைகளுக்கும், முறையான மண உறவில் பிறந்த பிள்ளைகளுக்கு இருப்பதைப் போன்று ஒரே மாதிரியான வாரிசுரிமை வேண்டும். 

12. போக்குவரத்து துறை முழுவதும் அரசின் கைகளுக்கு வர வேண்டும். 

நிச்சயமாக இதையெல்லாம் ஒரே நாளில் நடைமுறைக்கு கொண்டு வர முடியாது. எப்படியோ ஒரு நடவடிக்கை மற்றதை பின்பற்றும். ஒரு தடவை, தனியார் சொத்துடைமை மீது தீவிரமான தாக்குதல் நடத்தினால், பாட்டாளி வர்க்கம் தொடர்ந்து செல்ல நிர்ப்பந்திக்கப் படும். அது மேலதிக மூலதனத்தை, விவசாயம் நிலம், தொழிற்துறை, போக்குவரத்து முழுவதையும் அரசின் கரங்களில் குவிக்க வைக்கும். எல்லா நடவடிக்கையும் அதை நோக்கியே இருக்கும். அத்துடன் நிறைவேற்றக் கூடியதாக இருக்கும். இந்த வகையில் ஒரு மையப் படுத்தப் பட்ட விளைவுகள் வளர்ச்சி அடையும். அதனால் நாடளாவிய உற்பத்திச் சக்திகள், பாட்டாளிவர்க்கத்தினரின் உழைப்பின் மூலம் பல்கிப் பெருகும். இறுதியில் மூலதனம், உற்பத்தி முழுவதையும், பரிவர்த்தனைகளையும் அரசிடம் ஒருமுனைப் படுத்தும். அதனால், தனியார் சொத்துடைமை தானாகவே மறைந்து விடும். பணம் தேவையற்றதாகி விடும். உற்பத்தி பன்மடங்கு பெரும். பழைய சமுதாயத்தின் கடைசி செயற்பாடும் இல்லாதொழிக்கப் படும் அளவிற்கு மனிதர்கள் மாறிவிட்டிருப்பார்கள். 



இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

No comments: