Sunday, February 04, 2018

சோழர்கள் என்றால் கொள்ளையர்கள் என்றும் பொருள் உண்டு!

சோழர்கள் கொள்ளையடித்த நாடுகளைக் காட்டும் வரைபடம். 

சோழர்களின் சர்ச்சைக்குரிய வரலாற்றை, ஐரோப்பாவில் வைக்கிங்(Viking) வரலாற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஸ்கண்டிநேவிய வைக்கிங் படைகள், கடல் கடந்து கப்பல்களில் சென்று, பிற ஐரோப்பிய நாடுகள் மீது படையெடுத்து, பெருமளவு செல்வத்தை கொள்ளையடித்து வந்தனர். அவர்கள் சென்ற இடமெல்லாம் பெண்கள், குழந்தைகள் என்றும் பாராது படுகொலை செய்தனர். இருப்பினும், அதே வைக்கிங் கொள்ளையர்கள் பிற்காலத்தில் நிலையான அரசமைத்து சிறப்பாக ஆண்டு வந்தனர். சோழர்களை "ஆசியாவின் வைக்கிங்" என்றும் குறிப்பிடலாம்.

சோழர்களின் பூர்வீகம் என்ன, அந்தப் பெயர் வர என்ன காரணம் என்பது யாருக்கும் தெரியாது. சோழர்கள் காலத்தில் தமிழகத்திற்கு பயணம் செய்த கிரேக்க நாட்டு தாலமி, தனது பயணக் குறிப்புகளில் "சோரை"(சோரர்) என்று எழுதியுள்ளார். பண்டைய கால தமிழ்க் கல்வெட்டுகளில் கூட "சோரர்கள்" என்று தான் குறிப்பிடப் பட்டிருக்கிறது. தமிழ் மொழியில் சோரர் என்ற சொல்லுக்கு திருடர், கொள்ளையர் என்ற பொருள் உண்டு. தற்காலத் தமிழில் "சோரம் போதல்" என்று பயன்படுத்தப் படுகின்றது. ஆகவே, ஆதி கால சோழர்கள் தமிழராக இருந்திருக்க முடியாது.

சோழர்களை தெலுங்கு மொழியில் சோடர்கள் என்று அழைத்து வந்தனர். தெலுங்கில் "ர", "ட" ஆகி, அது பின்னர் சோழர்கள் என்று திரிபடைந்திருக்கலாம். மேலும், சோழர்களின் ஆட்சிப் பிரதேசம் இன்றைய வட தமிழ்நாட்டையும், தென் ஆந்திராவையும் கொண்டிருந்தது. தமிழ்நாடு, ஆந்திரா என்ற மாநில எல்லைகள் இருபதாம் நூற்றாண்டில் தான் பிரிக்கப் பட்டன. அதற்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் ஒரே பிரதேசமாக இருந்துள்ளது.

"தமிழ்ச் சோழர்கள்", "தெலுங்குச் சோழர்கள்" என்று இரண்டு சோழ அரச வம்சத்தினர் இருந்ததாக சிலர் இதற்கு விளக்கம் கொடுக்கின்றனர். இது ஒரு நகைப்புக்குரிய விளக்கம். இந்தக் குளறுபடிக்கு காரணம், இன்று நாங்கள் மொழி வழி தேசியத்தின் ஊடாகத் தான் உலகைப் பார்க்கிறோம். ஒரே பிரதேசத்தில் இரண்டு மொழிகளைப் பேசும், இரண்டு வெவ்வேறு அரச வம்சங்கள் அருகருகே இருந்திருக்க சாத்தியமே இல்லை. இது உலகில் வேறெந்த நாட்டிலும் இருந்திராத விசித்திரமான வரலாறு. மொழி மாறுபட்டாலும் அரச வம்சம் மாறுவதில்லை. உதாரணத்திற்கு, ஸ்பானிஷ் அரச வம்சத்தினர் பூர்வீகத்தில் ஜெர்மன் அரச வம்சமாக இருந்தனர். அதாவது இரத்த உறவினர்கள். ஆனால், வெவ்வேறு மொழிகளை (ஜெர்மன், ஸ்பானிஷ்) பேசினார்கள்.

பண்டைய காலங்களில் வாழ்ந்த யாருக்கும் இன/மொழி உணர்வு இருக்கவில்லை. மன்னர் குடும்பம் முதல், சாதாரண குடிமக்கள் வரையில், குறிப்பிட்ட பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்திய மொழியை பயன்படுத்தி வந்தனர். ஆதனால் தான், சோழர்களின் கல்வெட்டுகள் ஒரு இடத்தில் தமிழிலும், இன்னொரு இடத்தில் தெலுங்கிலும் எழுதப் பட்டுள்ளன. அது மட்டுமல்லாது, சோழர்கள் பற்றிய வரலாறு தெலுங்கிலும் எழுதப் பட்டுள்ளது. அதே பெயர்கள், அதே சம்பவங்கள்... மொழி வேறு படுவதால் மனிதர்கள் மாறுவதில்லை.

ஆகவே சோழர்கள் தமிழராக மட்டுமல்லாது, தெலுங்கராகவும் இருந்திருக்கலாம்.சில நேரம், இரண்டும் இல்லாத வேறொரு மொழியை பூர்வீகமாக கொண்டிருக்கலாம். உதாரணத்திற்கு, நடிகர் ரஜனிகாந்தை குறிப்பிடலாம். மராட்டிய பூர்வீகத்தை கொண்டவர், கர்நாடகாவில் கன்னடராக வாழ்ந்து, பிற்காலத்தில் தமிழ்நாட்டில் நடிகரானதும் தமிழராகி விட்டார். இந்தக் காலத்திலும் மனிதர்கள் தாய்மொழியை மாற்றிக் கொள்வது சர்வ சாதாரணமான விடயம். மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்திராத பண்டைய காலம் பற்றி சொல்லத் தேவையில்லை.

பெயர் பற்றிய ஆராய்ச்சி ஒரு பக்கம் இருக்கட்டும். அதை விட, சோழர்கள் என்ன செய்தார்கள் என்பது தான் முக்கியம். ஆச்சரியப் படத் தக்கவாறு, ஐநூறு வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பிய காலனியாதிக்க வாதிகள் உலகம் முழுவதும் கொள்ளையடித்து செல்வம் சேர்த்த மாதிரி தான், ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் சோழர்களும் நடந்து கொண்டுள்ளனர்! பண்டைய காலத்து தெற்காசிய ஏகாதிபத்தியவாதிகள் சோழர்களே என்றால் அது மிகையாகாது.

உண்மையிலேயே, சோழர்கள் அயலில் இருந்த நாடுகள் மீது படையெடுத்து கொள்ளையடிப்பதை தமது பிரதானமான தொழிலாகக் கொண்டிருந்தனர். முதலில் தமக்கு அயலில் இருந்த எதிரி நாடுகளை அடக்கி கொள்ளையடித்தனர். தெற்கில் இருந்த பாண்டிய நாட்டையும், வட- மேற்கில் இருந்த சாளுக்கிய நாட்டையும் ஆக்கிரமித்து சூறையாடினார்கள்.

அத்தோடு நின்று விடவில்லை. "கங்கை கொண்டான்", "கடாரம் கொண்டான்" என்று பட்டம் சூட்டிக் கொள்ளும் அளவிற்கு கண்ட இடமெல்லாம் சென்று கொள்ளையடித்து பொருள் திரட்டி வந்தார்கள். அந்த அருமை பெருமைகளை தஞ்சாவூர் கல்வெட்டுகளில் எழுதி வைத்தனர். வடக்கே ஒட்ட தேசம் (ஒடிசா), வங்கதேசம் என்று கங்கையாறு வரை சென்று இந்தியா முழுவதையும் கொள்ளையடித்து முடிந்ததும், கடல் கடந்து ஈழ மண்டலத்தின் (இலங்கை) மீது படையெடுத்தனர்.

இலங்கை, கடாரம் மீதான சோழப் படையெடுப்புகளை, "கொள்ளையடிக்கும் கொள்கை" என்றும், "திரவியங்களை அபகரித்து அள்ளிக் குவித்தல்" என்றும் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

//"G.W Spencer (1976) interprets the eleventh century Chola invasion of Sri Lanka as “Politics of Plunder”. The prasasti that speaks about the Kadaram expedition, mentions large “heaps of treasure” accumulated by Rajendra in his war with Kadaram.// - Nagapattinam to Suvarnadwipa: Reflections on the Chola Naval Expeditions

//The most spectacular Chola military campaigns in southern and eastern India during the late 10th century and early 11th centuries were, in fact, plundering raids. In 1025 Rajendra Chola launched naval attacks on the ports of Srivijaya in maritime Southeast Asia and conquered Kadaram (modern Kedah) and occupied it for some time. Historian George Spencer states that the Chola expedition into Ceylon and the Straits of Malacca -the attack upon Srivijaya -must be viewed not as a military campaign to expand the kingdom but as a continuation of the sustained plundering activity in India. The Chola-Chalukya wars -a series of battles fought from 992 CE to 1120 CE -resulted in the winning Cholas looting the Chalukaya kingdom. Spencer argues that the Cholas needed to engage in these plundering campaigns to let them maintain the flow of resources into their states and strengthen their hold over their local chieftains.// - M D Muthukumaraswamy


சோழர்கள் அயலில் இருந்த நாடுகளை மட்டும் சூறையாடவில்லை. பெரிய கப்பல்கள் கட்டி, இந்து சமுத்திரத்தை கடந்து தூர கிழக்காசிய நாடுகளுக்கு கடற் கொள்ளையராக சென்று வந்தனர். அந்தமான் தீவுகள், பர்மா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா வரை சென்று, நாடு நாடாக கொள்ளையடித்து திரவியம் சேர்த்தனர்.

சுமாத்ரா தீவில் இருந்த ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத் தலைநகர் பலம்பங் சோழர்களால் தாக்கி அழிக்கப் பட்டது. அங்கு அரச மாளிகையில் இருந்த நவரத்தினக் கற்கள் பொறிக்கப் பட்ட கதவுகளை பெயர்த்து எடுத்துச் சென்றார்கள். சுமாத்ரா அந்தக் காலத்தில் "சுவர்ண துவீபம்"(தங்கத் தீவு) என்று அழைக்கப் பட்டது. மலாயா, சுமாத்ரா இரண்டும் வெளிநாடுகளுக்கு தங்கம் ஏற்றுமதி செய்யும் வர்த்தம் மூலம் வருமானத்தை ஈட்டிக் கொண்டிருந்தன. அதற்காகவே, தங்கம் கொள்ளையடிப்பதற்காகவே சோழர்கள் படையெடுப்பு நடந்திருக்கலாம்.

இதனை நிரூபிக்க ஒரு வரலாற்று ஆதாரம் காட்டலாம். (இந்தோனேசிய) ஸ்ரீ விஜய சாம்ராஜ்யம், சோழர்களுடன் நட்புறவைப் பேணி வந்தது. சோழ நாட்டிற்குள், நாகபட்டினத்தில் இருந்த பௌத்த ஆலயம் ஸ்ரீவிஜய மன்னர் வழங்கிய நிதியில் தான் பராமரிக்கப் பட்டு வந்தது. ஸ்ரீவிஜய நாட்டின் தலைநகரான பலம்பங்கில் இருந்து நாகபட்டினத்திற்கு கப்பல் போக்குவரத்து நடந்து கொண்டிருந்தது. பலம்பங்கில் இருந்து வந்த பௌத்த துறவிகள், முதலில் நாகபட்டினத்தில் வந்திறங்கித் தான் வட இந்தியாவில் இருந்த நாலந்தா பல்கலைக்கழகத்திற்கு சென்றனர்.

ஆகவே, ஸ்ரீ விஜயமும், சோழ தேசமும் சிறந்த இராஜதந்திர உறவைப் பேணிக் கொண்டிருந்த காலத்தில், சோழர்கள் ஸ்ரீவிஜயம் மீது படையெடுப்பதற்கு எந்தவொரு அரசியல் காரணமும் இருந்திருக்க முடியாது. அனேகமாக, வணிகம் தொடர்பாக எழுந்த பிரச்சினை இராணுவ நடவடிக்கையில் முடிந்திருக்கலாம்.

பதினாறாம் நூற்றாண்டில் தென் அமெரிக்காவை காலனிப் படுத்திய ஸ்பானிஷ் ஆக்கிரமிப்பாளர்கள் அங்கிருந்து தங்கம் தங்கமாக அள்ளிச் சென்றனர். அதே மாதிரித் தான் மலேயா, சுமாத்ரா மீது படையெடுத்த சோழர்களும் கப்பல் கப்பலாக தங்கத்தை அள்ளிச் சென்றுள்ளனர். ஒரேயொரு வித்தியாசம், சோழர்கள் கொள்ளையடிப்பதுடன் நின்று விட்டனர். அயலில் இருந்த ஈழ மண்டலம் தவிர வேறெங்கும் காலனி அமைக்கவில்லை.

இதிலே முக்கியமாகக் குறிப்பிடப் பட வேண்டிய விடயம் ஒன்றுள்ளது. சோழர்கள் படையெடுத்து சென்று வென்று வந்த நாடுகளை ஆக்கிரமித்து ஆட்சி செய்திருக்கவில்லை. அவர்கள் அங்கே நிரந்தரமாக தங்கியிருக்கவில்லை. அவற்றை தமது காலனிகள் ஆக்கவில்லை. உண்மையில், அதற்கான தேவை இருக்கவில்லை என்றே கூற வேண்டும்.

தங்கம், வெள்ளி, நவரத்தினக் கற்கள் என்று, அந்த நாடுகளில் கிடைத்த திரவியங்களை எல்லாம் கொள்ளையடித்து முடிந்ததும் தாயகத்திற்கு திரும்பி வந்தனர். சோழ நாட்டு தலைநகரமான தஞ்சாவூரும் அதை அண்டிய பகுதிகளும் காவிரி ஆற்றின் கொடைகளால் வளம் மிக்க விவசாய பூமியாக இருந்தது. ஆகையினால், ஆக்கிரமிக்கப் பட்ட நாடுகளில் பொருளாதாரக் காலனி அமைக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கவில்லை.

இதனை ஐரோப்பிய காலனியாதிக்கத்துடன் ஒப்பிட்டுப் புரிந்து கொள்ள முடியும். பதினாறாம் நூற்றாண்டிலும் ஐரோப்பிய நாடுகள் எந்த வித இயற்கை வளமும் இல்லாத வறிய நாடுகளாக இருந்தன. உலகம் முழுவதும் பொருளாதாரக் காலனிகளை உருவாக்கி சுரண்டாமல் விட்டிருந்தால், மேற்கு ஐரோப்பிய நாடுகள் பணக்கார நாடுகளாக வந்திருக்க முடியாது.

சோழர்கள் எதற்காக கொள்ளையடிப்பதை தமது பிரதானமான தொழிலாகக் கொண்டிருந்தனர்? அதற்குக் காரணம், சோழ நாட்டுப் பொருளாதாரம் வரி அறவிடுவதில் தங்கியிருக்கவில்லை. சைவக் கோயில்கள் அரசியல் அதிகாரம் பெற்ற நிறுவனங்களாக இருந்தன. அவற்றிற்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும், பல கிராமங்களும் சொந்தமாக இருந்தன. அவற்றில் இருந்து கிடைக்கும் வருமானம் முழுவதும் கோயிலுக்கே சொந்தமாகும்.

அந்தக் காலத்தில் சக்தி வாய்ந்த வணிகர் சங்கங்கள் இருந்தன. அந்த வணிகர்களும் தமக்கென நிலங்களை சொந்தமாக வைத்திருந்தனர். சோழ மன்னர்களுக்கு தேவைப் படும் போதெல்லாம் கடன் கொடுத்து வந்த வணிகர் சங்கங்கள், தேசத்திற்குள் இன்னொரு தேசமாக சுயாதீனமாக இயங்கினார்கள். நாணயக் குற்றிகளை புழக்கத்தில் விடுவதுடன், அந்நிய நாணயங்களை மாற்றிக் கொடுப்பதும் வணிகர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.

அதனால், சோழ அரசர்கள் வேறு இடங்களில் வருமானம் தேட வேண்டி இருந்தது. பாண்டிய நாடு, ஈழ மண்டலம் என்று சோழநாட்டிற்கு அருகில் நிறைய "பணக்கார நாடுகள்" இருந்தன. அங்கெல்லாம் படையெடுத்து சென்று கொள்ளையடித்த செல்வங்களை கொண்டு வந்து கோயில்களுக்கு தானம் செய்தனர்.

ஒரு தடவை, கோயிலுக்கு முன்னூறு கிலோ தங்கம் கொடுத்ததாகவும் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. கோயில்களுக்கே அந்தளவு அள்ளிக் கொடுத்தனர் என்றால், சோழ மன்னர்கள் எந்தளவு செல்வம் சேர்த்திருப்பார்கள் என்பதை சொல்லத் தேவையில்லை.

ராஜராஜ சோழனும் அவனது வாரிசுகளும் இந்தியா முதல் இந்தோனேசியா வரையில் கொள்ளையடித்து செல்வம் சேர்த்தனர். அத்துடன், செல்லுமிடமெங்கும் பெண்களையும், குழந்தைகளையும் ஈவிரக்கமின்றி படுகொலை செய்து, அந்நாட்டு மக்களிடம் கெட்ட பெயரையும் சம்பாதித்திருந்தனர். இந்தத் தகவல்கள், சோழப் படையெடுப்புகளால் பாதிக்கப் பட்ட நாடுகளின் வரலாற்றுக் குறிப்புகளில் எழுதப் பட்டுள்ளன.
(ஆதாரம்: Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula, Paul Michel Munoz)

"இந்தியா முதல் இந்தோனேசியா வரை விரிந்திருந்த சோழ சாம்ராஜ்யம்" பற்றிய கதைகள் உண்மைக்கு புறம்பானவை. அது இருபதாம் நூற்றாண்டில் தமிழ்த் தேசியர்களின் அரசியல் நோக்கங்களுக்காக திரிபுபடுத்தப் பட்ட, ஒரு பக்கச் சார்பான வரலாறு. சோழர்கள் படையெடுத்து சென்ற நாடுகளில் எல்லாம், "கொள்ளையர்கள், படுகொலையாளர்கள்..." என்று உள்நாட்டு மக்களால் தூற்றப் பட்ட போதிலும், எதற்காக தமிழ்த் தேசியவாதிகள் சோழர்களை தூக்கிப் பிடிக்கிறார்கள்?

உலகம் முழுவதும் தேசியவாதக் கோட்பாடு ஒரே மாதிரித் தான் செயற்படுகின்றது. செங்கிஸ்கான் என்றால் பல ஆசிய நாடுகளில் வில்லன் என்று அர்த்தம். செங்கிஸ்கான் படையெடுத்து சென்ற நாடுகளை சேர்ந்த மக்கள், தமது அழகான நகரங்களை தரைமட்டமாக்கி, பெண்களையும், குழந்தைகளையும் விட்டு வைக்காமல் இனப்படுகொலை செய்த கொடியவன் என்று சொல்வார்கள். ஆனால், மொங்கோலியாவில் அதே செங்கிஸ்கான் ஒரு பெருமைக்குரிய சரித்திர நாயகன்!

மொங்கோலியா நாட்டில் எங்கு பார்த்தாலும் செங்கிஸ்கான் பெருமை கூறும் பெயர்ப் பலகைகளை காணலாம். தலைநகர் உலான் பட்டாரில் பெரியதொரு செங்கிஸ்கான் சிலை உள்ளது. அதற்குக் காரணம் மொங்கோலிய தேசியவாதம். உலகம் முழுக்க வில்லனாக தென்படும் ஒருவன், தேசியவாதிகளின் கண்களுக்கு நாயகனாகத் தெரிகிறான். இதே தான் தமிழ்த் தேசியவாதிகள் விடயத்திலும் நடக்கிறது. உலகம் முழுவதும் சோழர்களை கொள்ளையர்களாக கருதினாலும், அவர்களைப் பொறுத்தவரையில் சோழர்கள் நாயகர்கள் தான். அதற்குப் பெயர் தேசியவாதம். அது குறுகிய மனப்பான்மை கொண்டது.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
சோழர்கள் தமிழர்களா? அல்லது தெலுங்கர்களா?

7 comments:

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

படித்தது, அதிர்ந்து விட்டேன்..இவை உண்மையாக இருக்க கூடாது என்று என் மனம் வேண்டுகிறது....இது வரை சோழர்கள் என்றால் எப்படிபட்டவர்கள் என்று நினைத்து இருந்தேனோ அதற்கு எதிரா இந்த கட்டுரை இருக்கு....மிகவும் குழப்பமா இருக்கு...எதை நம்புவது என்று தெரியவில்லை...கல்கியின் பொன்னியின் செல்வனில் கூட இதைப்பற்றி கல்கி எதுவும் கூற வில்லை என நினைக்கும் போது...வருத்தமாக இருக்கிறது.

Unknown said...

kaarthikeyan sago, en udane mudivukku varukireergal. Ponniyin selvan padithirukireerkal. Innum konjam varalatrai mudindhal aaraindhu idhu unmaiya illai anumaanama enbadhai iyandravarai veli kondu varungal.
nandri.
Rajiv

Kalaiyarasan said...

(மன்னிக்கவும் kurinjivenden, உங்களுடைய இந்தப் பின்னூட்டம் தவறுதலாக அழிக்கப் பட்டு விட்டது.)

kurinjivenden:
//அன்பார்ந்த தோழருக்கு, வணக்கம். தொடர்ந்து தங்களின் ஆழமான கட்டுரைகளை வாசித்து வருகிறேன். அதில் சோழர்களின் அயலகப்படையெடுப்பு பற்றிய கட்டுரை சற்று உண்மைக்கு மாறான தகவல்களைக் கொண்டுள்ளதாகவே படுகின்றது. முதலாவதாக, ஆதிச்சோழர்கள் தெலுங்கர்களாக இருக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கின்றீர்கள். ஆதிச்சோழர்களின் காலம், சங்ககாலம். அதாவது 2000 ஆண்டுகளுக்கு முன்னால் ஆகும். அப்போது தெலுங்கு என்ற மொழியே உருவாகவில்லை என்பதே உண்மை. தெலுங்கின் தோற்றம் 1200 ஆண்டுகளுக்கு முன்புதான். வடுக நாடு என்றழைக்கப்பட்ட ஆந்திரப்பகுதியில் தமிழே வழக்கில் இருந்தது என்பதற்குச் சித்தூர், வேங்கி முதலிய இடங்களில் கிடைக்கும் கல்வெட்டுக்களே சான்று. அடுத்ததாக, ஸ்ரீவிஜயப்பேரரசு நாகைப்பட்டினத்தில் புத்தவிகாரையைப் பராமரித்ததாகச் சொல்லப்படுவது. அந்த விகாரையைத் தோற்றுவித்து, அதற்கு நிவந்தங்கள் மற்றும் இறையிலி நிலங்களை அளித்தவன், இராசராசன் என்பதற்கான கல்வெட்டாதாரங்களைக் குடவாயில் பாலசுப்ரமணியம், நொபுரு கரோஷிமா ஆகியோரின் ஆய்வுகள் சான்றுகளுடன் குறிப்பிடுகின்றன. ஸ்ரீவிஜயப்பேரரசின் சீனவுறவும் அதன் வாயிலாக ஏற்பட்ட பகைமையும் இப்படையெடுப்பிற்கு மூலக்காரணம் என்றே வரலாற்றாய்வுகள் கூறுகின்றன. அயல்நாட்டுப் படையெடுப்பில் ஈடுபட்ட எந்தப் படை தான் பெண்ணையும் பொன்னையும் தொடாமல் வந்திருக்கின்றது. பேரரசு என்பதே பல பேரின் கண்ணீர்த்துளிகளால் கட்டப்பட்டது தானே... (பெண்ணைச் சீரழிப்பது போர் அறம் என்று நான் சொல்லவில்லை... ஆனால் வரலாறு அப்படித்தானே இருக்கிறது. புலிகளின் போர்முறை மட்டும் தான் விதிவிலக்கு) பிற்காலச்சோழரின் வம்சத்தில் ஆண்வாரிசு அற்றுப் போகவே, தங்களால் ஆந்திரப்பகுதியில் சோழப்பேரரசின் இளவரசியைக் கொடுத்த வகையில் பிறந்த குலோத்துங்கச்சோழனைக் கொண்டு வந்து, தஞ்சையில் ஆட்சியில் அமர்த்தி, அதன்வழி தெலுங்குச்சோழ ரத்தம் கலந்ததே வரலாறு.

தொடர்ந்து கட்டுரைகளை எதிர்நோக்குகிறேன் //

Unknown said...

திராவிட ஏமாற்று நம்பாதீர்

Unknown said...

இந்தக் கூற்று தவறான கூற்றாகும். இந்தப் பதிவின் துவக்கத்திலேயே பிழை உள்ளது. அது என்னவென்றால் சோழ நாட்டின் பெயர் எப்படி வந்தது என்ற ஒரு வரலாறு இல்லை என்று கூறப்பட்டுள்ளது அது முழுக்க முழுக்க தவறான ஒரு கூற்று. ஏனென்றால் பண்டைய காலத்தில் திருச்சி தஞ்சை திருவாரூர் போன்ற காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் நெல் அதிகமாக விளையக்கூடிய பகுதிகளாகும். ஆதலால் இதை சோறுடைத்த நாடு சோறநாடு என்பார்கள். பிற்காலத்தில் நெல்லின் மற்றொரு பொருளான சொல் என்பதே லகரம்-ழகரம் என திரிந்து சோழ நாடு என்றானது என்பதை தேவநேயப் பாவாணர் அவர்கள் பதிவேட்டில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி உங்களுடைய இந்த பதிவேட்டில் தெலுங்கு மொழியை முன் மொழியாக குறிப்பிடப்பட்டுள்ளது தெலுங்கு என்னுடைய காலம் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளாக மட்டுமே வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருப்பதற்கான சான்றுகள் ஆதாரப்பூர்வமாக உள்ளது. அதுமட்டுமின்றி சோழர்கள் என்னுடைய கடைசி காலத்தில் தங்களுக்கு ஆண் வாரிசு இல்லாத காரணத்தினால் இளவரசி தெலுங்கு தேசத்திற்கு மணம்முடித்து பின்பு அவருடைய குழந்தையான குலோத்துங்க சோழனை தமிழகத்திற்கு கொண்டு வந்து ஆட்சி செய்யும் படி தான் வரலாற்றில் உள்ளது. அதன் பின்னரே தெலுங்கர் என்பது சோழ ராஜ்யத்தில் வந்ததாக கூறப்படுகிறது. வரலாற்றின் சுற்று சரியாக படித்துவிட்டு பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

Unknown said...

இந்தக் கூற்று தவறான கூற்றாகும். இந்தப் பதிவின் துவக்கத்திலேயே பிழை உள்ளது. அது என்னவென்றால் சோழ நாட்டின் பெயர் எப்படி வந்தது என்ற ஒரு வரலாறு இல்லை என்று கூறப்பட்டுள்ளது அது முழுக்க முழுக்க தவறான ஒரு கூற்று. ஏனென்றால் பண்டைய காலத்தில் திருச்சி தஞ்சை திருவாரூர் போன்ற காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் நெல் அதிகமாக விளையக்கூடிய பகுதிகளாகும். ஆதலால் இதை சோறுடைத்த நாடு சோறநாடு என்பார்கள். நெல் என்பதன் பொருள் சொல் ஆகும்.

Anonymous said...

https://m.facebook.com/story.php?story_fbid=423962782734452&id=100053622019118