Saturday, September 30, 2017

பாசிசம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் - ஓர் அறிமுகம்

அமெரிக்காவில் பாசிசத்தின் தந்தைக்கு சிலை வைத்து கௌரவித்த  முதலாளிய வர்க்கம்.

"பாசிசம் என்பது ஒரு மதம். அது சோஷலிசத்தை எதிர்க்கின்றது. ஏனென்றால் சோஷலிசம் தேசிய ஒற்றுமையை குலைக்கும் வர்க்கப் போராட்டத்தை வலியுறுத்துகின்றது."  

சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர், முசோலினி எழுதிய பாசிச கொள்கை விளக்கத்தில் இருந்து சில பகுதிகள்:

//பாசிசம் என்பது ஒரு மதக் கோட்பாடு. அது ஒரு தனி மனிதனை உன்னதமான ஆன்மீக சமுதாயத்தின் உறுப்பினராக மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது. பாசிசம் என்பது அரசு மட்டுமல்ல, அது ஒரு சிந்தனை முறையும் தான். தேசம் என்பதற்கு அப்பால், எந்தவொரு அரசியல் கட்சிகளோ, குழுக்களோ, வர்க்கங்களோ இருக்க முடியாது.

பாசிசம் சோஷலிசத்தை எதிர்க்கின்றது. ஏனென்றால், சோஷலிசம், வரலாற்றுப் போக்கை வர்க்கப் போராட்டமாக வரையறை செய்கின்றது. வர்க்க ஐக்கியம் மூலம் கட்டப்படும் ஒரே முனைப்பான பொருளாதார, தார்மீக அரசமைப்பதை, அது புறக்கணிக்கின்றது./
- முசோலினி (The Doctrine of Fascism, 1932)

பாசிசக் கொள்கை, "ரோமர்களின் பொற்காலத்திற்கு திரும்பும் இத்தாலிய தேசியவாதம்" ஆக முசோலினியால் அதிகாரத்திற்கு வந்தது. அதனை, "பணக்கார மேல்தட்டு வர்க்கம் (Patricians), பெரும்பான்மை ஏழை மக்களை (Plebs) அடக்கி ஆளும் சர்வாதிகார ஆட்சி" என்றும் சொல்லலாம். (ரோமர்கள் காலத்தில் மேட்டுக் குடியினர் Patricians என அழைக்கப் பட்டனர். ஏழைகள் Plebs என அழைக்கப்பட்டனர்.)

இல்லாவிட்டால் அமெரிக்காவில் ஓஹையோ மாநிலத்தில் உள்ள சிஞ்சினாத்தி (Cincinnati) நகரில் பாசிசத்திற்கு சிலை வைப்பார்களா? அமெரிக்கப் புரட்சியின் போது, இங்கிலாந்து மன்னரிடமிருந்த நிலப்பிரபுத்துவ அரசியல் அதிகாரத்தை, அமெரிக்க முதலாளிய வர்க்கம் கைப்பற்றி இருந்தது. முதலாளிய வர்க்கத்தினர் தமது வெற்றியின் அடையாளமாக பாசிசத்தின் தந்தைக்கு சிலை வைத்தார்கள்.

ரோமர்கள் காலத்தில், அவசர கால நடைமுறையாக மன்னரின் இடத்தில் இருந்து இத்தாலியை ஆண்ட சர்வாதிகாரியின் பெயர் Cincinnatus. (அமெரிக்க Cincinnati என்ற ஊரின் பெயர் அதை நினைவுபடுத்துகிறது.) அவரது கையில் சட்டத்தை நிலைநாட்டும் ஆயுதமாக "பாசெஸ்" (Fasces) என்ற ஒரு வகை கோடரி இருந்தது. (படத்தை பார்க்கவும்)

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இத்தாலியை ஆண்ட சர்வாதிகாரி முசோலினியின் கட்சியின் பெயர் பாசிசக் கட்சி. பண்டைய பாசெஸ் ஆயுதத்தில் இருந்து தான் பாசிசம்(Fascism) என்ற சொல் உருவானது.

முசோலினி அந்த சொல்லை தெரிவு செய்வதற்கு காரணம் இருந்தது. பாசிசம் என்பது மன்னராட்சிக்கு எதிரான மேட்டுக்குடி வர்க்கத்தினரின் ஆட்சி. அது மட்டுமல்ல, "பண்டைய கால பழம் பெருமை பேசும் தேசியவாதம்" பாசிசத்தின் அடிநாதமாக இருந்தது.

"ரோமர்கள் காலத்தில் எம்மவர்கள் (இத்தாலியர்கள்) உலகை ஆண்டார்கள். லத்தீன் மொழியில் இருந்து தான் பிற மொழிகள் வந்த படியால், உலகில் தோன்றிய மூத்தகுடி லத்தீன் பேசினார்கள். அத்தகைய பெருமைக்குரிய இத்தாலி இனம் மீண்டும் தலைநிமிர வேண்டும்....." இவ்வாறான தீவிர தேசியவாதக் கருத்துக்கள், முசோலினியாலும், பாசிசக் கட்சியினராலும் இத்தாலி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப் பட்டன.

பாசிசம் தனது சொந்த இன மக்களின் நலன்களை கூடப் பேணப் போவதில்லை. இன்றுள்ள அதே முதலாளித்துவ சுரண்டல் சமுதாயத்தை தொடர்ந்தும் வைத்திருக்கும். அதற்கு உலகின் முதலாவது பாசிச அரசு அமைந்த இத்தாலியின் உதாரணத்தை பார்ப்போம்.

இத்தாலியில் முசோலினி வாழ்ந்த காலத்திலும், மார்க்சிய, சோஷலிச அமைப்புகள் வளர்ந்து கொண்டிருந்தன. தொழிலாளர்களை அணிதிரட்டி போராட்டங்களை நடத்தி வந்தன. அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த ஒருவர், அதுவும் உழைக்கும் வர்க்க மக்கள் மத்தியில் ஊடாடும் ஒருவர், மார்க்சியத்தை பற்றி அறியாமல் விட்டிருக்க முடியாது.

சோஷலிஸ்டுகள் நடத்திய பத்திரிகை ஒன்றில், ஊடகவியலாளராக பணியாற்றிய முசோலினி, ஆரம்பத்தில் தன்னையும் ஒரு சோஷலிஸ்ட் மாதிரி காட்டிக் கொண்டார். இல்லாவிட்டால் அந்த வேலை கிடைத்திருக்காது. ஆனால், அவரது எழுத்துக்கள் இத்தாலி இனப் பெருமை பேசுவதாகவும், அரசின் போர்வெறியை ஆதரிப்பதாகவும் இருந்தன. அவரது தேசியவெறி நிலைப்பாடு காரணமாக பத்திரிகையில் இருந்து வெளியேற்றப் பட்டார்.

முசோலினி பாசிசக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியொன்றை தொடங்கி, "இத்தாலியர்களின் இழந்த இனப்பெருமையை மீட்டுத் தருவதாக" பிரச்சாரம் செய்தார். இனப்பற்று, மொழிப்பற்று, தேசியம் என்று வலதுசாரியம் பேசிக் கொண்டிருந்தாலும், பெரும்பான்மை உழைக்கும் வர்க்க மக்களை கவர்வதற்காக கொஞ்சம் இடதுசாரியம் பேசினார். அதனால் தான் பொதுத் தேர்தலில் பாசிசக் கட்சி அமோக வெற்றி பெற்றது. இத்தாலி மன்னர் இம்மானுவேல் அழைத்து ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கும் அளவிற்கு முசோலினி ஆளும் வர்க்கத்திற்கு நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார்.

முசோலினியின் பாசிச ஆட்சிக் காலத்தில் ரயில்கள் நேரம் தவறாமல் ஓடியதாக சொல்வார்கள். அது மட்டுமல்ல, ரயில் டிக்கட் விலையும் குறைக்கப் பட்டது. இதனால், பொதுவாக தமது ஊரை விட்டு வெளியே சென்றிராத உழைக்கும் வர்க்க மக்கள், தூர இடத்து நகரங்களுக்கு சுற்றுலா சென்று வர முடிந்தது.

பாசிச காலகட்டத்தில் தான் தொழிலாளர்களுக்கு ஓய்வு நேரம் அதிகமாக கிடைத்து என்பதை மறுக்க முடியாது. அதனால் ஓய்வு நேர பொழுதுபோக்குகளும் அதிகரித்தன. சினிமாத் தியேட்டருக்கு சென்று திரைப்படம் பார்ப்பது, உதைபந்தாட்ட விளையாட்டுகளை கண்டுகளிப்பது என்று, பொது மக்கள் ஒன்று கூடி பொழுது போக்கினார்கள்.

இதிலிருந்து ஓர் உண்மை தெளிவாகும். இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்தின் அடிக்கட்டுமானம் பாசிச ஆட்சியில் போடப் பட்டு விட்டது. நாங்கள் இன்றைக்கும் ஒரு நவ பாசிச கலாச்சாரத்திற்குள் வாழ்கிறோம் என்று சொன்னால் அது மிகையாகாது. நாங்கள் யாரோ ஒரு முதலாளிக்கு கீழ் வேலை செய்து எடுக்கும் சம்பளத்தை, ஓய்வு நேர பொழுதுபோக்கு என்ற பெயரில் இன்னொரு முதலாளிக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

மேம்போக்காக பார்த்தால், பாசிசம் மக்கள் நலத் திட்டங்களை ஆதரித்ததாக தெரியும். ஆனால், உண்மை நிலவரம் அதுவல்ல. 1921 ம் ஆண்டு பாசிசம் ஆட்சிக்கு வந்தது. 1939 ம் ஆண்டு முசோலினியின் வீழ்ச்சி ஆரம்பமானது. இந்த இடைப்பட்ட காலத்தில் சம்பளத் தொகை வீழ்ச்சி கண்டது. ஒன்றில் சம்பளம் குறைந்தது அல்லது வாங்குதிறன் குறைந்தது. சம்பளம் மாறாமல் அப்படியே இருந்தாலும் செலவுகள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு இருந்தன.

உழைக்கும் வர்க்க மக்கள் சோளம் மாவில் செய்த உணவை மட்டுமே உட்கொண்டார்கள். இறைச்சி அரிதாகக் கிடைத்தது. ஒரு நல்ல சைக்கிள் வாங்குவதென்றால் கூட மூன்று வருடங்கள் சேமிக்க வேண்டும். அத்தகைய அவல வாழ்க்கை வாழ்ந்த தொழிலாளர்கள், மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சியை நாடிச் சென்றதில் வியப்பில்லை.

பாசிச ஆட்சிக் காலம் முழுவதும் இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப் பட்டிருந்தது. இருப்பினும், தலைமறைவாக இயங்கி வந்தனர். இரகசிய கெரில்லாக் குழுக்களும் இயங்கின. கம்யூனிச கெரில்லாக்கள் பாசிச அரச நிலைகளை தாக்கிக் கொண்டிருந்தார்கள். மிக முக்கியமாக, தொழிற்சாலைகளில் ஊடுருவி இருந்த கம்யூனிஸ்டுகள், வேலைநிறுத்தப் போராட்டங்களை ஒழுங்கு படுத்தினார்கள்.

இரண்டாம் உலகப் போர் முடிவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே, இத்தாலியில் முசோலினியின் ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது. வடக்கு இத்தாலியில் பல இடங்கள் கம்யூனிஸ்ட் கெரில்லாக்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக வந்து விட்டன. அத்தகைய குழப்பகரமான சூழ்நிலையில், மீண்டும் மன்னர் இமானுவேல் "இத்தாலியை காப்பாற்றும் பொறுப்பை" கையில் எடுத்தார்.

1943 ம் ஆண்டு, மன்னரின் உத்தரவின் பேரில் முசோலினி கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். அப்போதே இத்தாலி பாதுகாப்புப் படைகளில் பிளவு உண்டாகி விட்டது. முசோலினிக்கு விசுவாசமான பாசிசப் படையும், மன்னருக்கு விசுவாசமான படையும் மோதிக் கொண்டன. சந்தர்ப்பத்தை பயன்படுத்தில் ஜெர்மன் நாஸி இராணுவம் படையெடுத்தது. தெற்கு இத்தாலி மட்டும் மன்னரின் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதில் நேச நாட்டுப் படைகளும் வந்திறங்கின.

ஜெர்மன் படைகள் முசோலினியை சிறையில் இருந்து விடுவித்து, தமக்குக் கீழே ஒரு பொம்மை அரசை வைத்திருந்தன. இருப்பினும், பெரிய நகரங்களான மிலான், தூரின் போன்றன கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கின் கீழ் இருந்த படியால், முசோலினியால் அங்கு செல்ல முடியவில்லை. ஒதுக்குப் புறமான அல்ப்ஸ் மலையடிவார சிறிய நகரம் ஒன்றில், புதிய பாசிச அரசு அமைந்தது.

அப்போதே இத்தாலி முதலாளிகள் அமெரிக்காவுடன் தொடர்பு கொள்ள ஆரம்பித்து விட்டனர். கார் தயாரிக்கும் இத்தாலி பன்னாட்டு நிறுவனமான FIAT கம்பனிக்கு தூரின் நகரில் தொழிற்சாலை இருந்தது. FIAT தலைமை நிர்வாகி சுவிட்சர்லாந்து சென்று, அமெரிக்க பிரதிநிதியை சந்தித்தார். "இத்தாலியில் அமெரிக்கா முதலிட வேண்டுமென்றும், அங்கு தொழிலாளர்களின் சம்பளம் மிகக் குறைவு என்றும்" பேச்சுவார்த்தை நடத்தினார்.

அமெரிக்காவுடனான இத்தாலி முதலாளிகளின் இரகசிய உறவு, ஓரளவு பயனைத் தந்தது எனலாம். 1945 ம் ஆண்டு, போர் முடிந்த பின்னர், கம்யூனிஸ்ட் கெரில்லாக்கள் சம்பந்தப் பட்ட FIAT நிர்வாகியை கைது செய்ய தேடி வந்தனர். அங்கே எதிர்பாராத விதமாக அமெரிக்க நிர்வாகி ஒருவரைக் கண்டு ஆச்சரியப் பட்டனர்.

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவும், சோவியத் யூனியனும் நேச நாடுகளின் அணியில் இருந்தன. ஆகையினால், கம்யூனிஸ்டுகள், இத்தாலியை கைப்பற்றிய அமெரிக்கப் படையினருடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

அமெரிக்கா மிகவும் தந்திரமாக சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இத்தாலியை தனது செல்வாக்கு மண்டலத்தின் கீழ் கொண்டு வந்தது. பாசிச ஆட்சிக் காலத்தில் ஒத்துழைத்த இத்தாலி முதலாளிய வர்க்கத்தினர், போர் முடிந்த பின்னர் அமெரிக்கர்களுடன் ஒத்துழைத்தனர். முதலாளித்துவ பொருளாதார அமைப்பு அன்றும் இன்றும் மாறாமல் அப்படியே இருந்து வருகின்றது.
1945 ம் ஆண்டு, இத்தாலியின் தென் பகுதியில் நேச நாடுகளின் படையணிகள் வந்திறங்கி இருந்தன. கிழக்கே யூகோஸ்லேவிய பிரதேசங்களை, மார்ஷல் டிட்டோவின் கெரில்லா இராணுவம் கைப்பற்றி இருந்தது. இத்தாலியின் பெரும்பான்மையான இடங்களை, இத்தாலி கம்யூனிச கெரில்லாக் குழுக்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தன.

தோல்வியின் விளிம்பில் நின்ற முசோலினி, தனக்கு விசுவாசமான பத்துப் படையினரைக் கூட திரட்ட முடியாமல், நாஸி ஜெர்மன் படையினரின் உதவியுடன் சுவிட்சர்லாந்தை நோக்கி தப்பியோடினார். ஜெர்மன் படையினரின் டிரக் வண்டியொன்றில், ஜெர்மன் இராணுவ சீருடையில் மாறுவேடம் பூண்டிருந்த முசோலினி, கம்யூனிச கெரில்லாக்களின் சோதனைச் சாவடி ஒன்றில் அடையாளம் காணப் பட்டார். 

முசோலினியும், அவரது காதலியும், விசுவாசமான நண்பர்களும், பிடிபட்ட ஒரு சில தினங்களிலேயே சுட்டுக் கொல்லப் பட்டனர். அவர்களது இறந்த உடல்கள் மிலானோ நகர மத்தியில் தலை கீழாக கட்டித் தொங்க விடப் பட்டன. 28 ஏப்ரல் 1945 அன்று இந்த மரண தண்டனை விதிக்கப் பட்டது.

¡No pasarán! Fascism shall not pass. பாஸிசம் எம்மைக் கடந்து செல்ல முடியாது.