Tuesday, September 08, 2015

சிரிய அகதிகள் பற்றி வலதுசாரி அறிவிலிகளுக்கு இலகுவான விளக்கம்

மேற்கு ஐரோப்பாவில் என்ன நடந்தாலும், அது உலகச் செய்தியாகி விடும். அந்த வகையில், தற்போது சிரியாவில் இருந்து பெருந்தொகையில் வந்து கொண்டிருக்கும் அகதிகள் பிரச்சினையும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஐரோப்பாவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் விவாதிக்கப் படும் பேசு பொருளாகி உள்ளது.

இதற்கிடையே, அகதிகள் மீது காழ்ப்புணர்வை வெளிப்படுத்தும் தீவிர வலதுசாரிகளின் பதிவுகளையும் ஆங்காங்கே காணக் கூடியதாக உள்ளது. வலதுசாரிகளான சில தமிழர்களும், ஐரோப்பிய நிறவெறியர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை உள்வாங்கி எதிரொலித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகையினால், அவற்றிற்கு பதிலளிக்கும் வகையில், இந்த விளக்கக் குறிப்புகளை எழுத வேண்டியுள்ளது. 


  • சிரிய அகதிகள் எதற்காக முஸ்லிம் நாடுகளுக்கு செல்லவில்லை?


அகதிகள் தாமாகவே ஒரு நாட்டிற்கு சென்று அடைக்கலம் கோருவதற்கும், குறிப்பிட்ட ஒரு நாடு தானாகவே முன்வந்து அகதிகளை ஏற்றுக் கொள்வதற்கும் இடையிலான வித்தியாசத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அகதிகளை தமக்குள் பங்கிட்டுக் கொள்வதற்கு, செல்வந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் விவாதிப்பது போன்று, சவூதி அரேபியா போன்ற செல்வந்த வளைகுடா நாடுகளும் முன்வர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. அதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அது உலக நாடுகளின் அரசுக்கள், தமக்குள் தீர்மானத்துக் கொள்ள வேண்டிய விடயம். அதை அகதிகள் தீர்மானிப்பதில்லை. அவர்கள் தாம் விரும்பிய நாட்டிற்குத் தான் செல்வார்கள். 

சவூதி அரேபியா அகதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதை ஓர் இராஜதந்திர பிரச்சினையாக பார்க்காமல், "சிரிய அகதிகள் ஏன் அந்த நாட்டிற்கு செல்லவில்லை?" என்று அகதிகளை நோக்கிக் கேட்பது முட்டாள்தனமானது. சிரிய அகதிகள், ஐரோப்பாவுக்கு செல்லாமல், முஸ்லிம் நாடுகளில் தஞ்சம் கோர வேண்டும் என்று யாரும் உத்தரவிட முடியாது. ஐரோப்பிய தீவிர வலதுசாரிக் கட்சிகள், நவ நாஸி குழுக்கள் பிரச்சாரம் செய்யும் கருத்துக்களை, சில தமிழ் வலதுசாரிகளும் வாந்தியெடுப்பது அருவருக்கத் தக்கது.

சிரிய உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் எழுந்த அகதிகள் நெருக்கடி முஸ்லிம் நாடுகளைத் தான் முதலில் பாதித்திருந்தது. துருக்கி, லெபனான், ஜோர்டான் ஆகிய மூன்று அயல்நாடுகளும், இன்றைக்கும் இலட்சக் கணக்கான சிரிய அகதிகளை வைத்திருக்கின்றன. அநேகமாக, துருக்கி அகதி முகாம்களில் தங்கி இருந்த அகதிகள் தான், கிரீஸ், மாசிடோனியா, செர்பியா, ஹங்கேரி வழியாக மேற்கு ஐரோப்பாவுக்கு சென்றனர். 

அதுவும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான அகதிகளே அவ்வாறு சென்றனர். ஏனென்றால், சட்டவிரோதமாக கிரீஸ் நாட்டிற்கு செல்லும் வரையில், பயண முகவர்கள் அல்லது கடத்தல்காரர்களின் உதவி தேவைப் பட்டது. அதற்கு ஆயிரக் கணக்கான அமெரிக்க டாலர்கள் தேவைப்பட்டது. ஓரளவு வசதியானவர்கள் மட்டுமே அந்தளவு செலவளிக்கும் தகுதியை கொண்டிருந்தனர்.


  • சிரிய அகதிகள் எதற்காக முஸ்லிம்களின் புனித பூமியான சவூதி அரேபியாவுக்கு செல்லவில்லை?


ஐரோப்பிய தீவிர வலதுசாரிகளின்
இனவாதப் பிரச்சாரம் 
அகதிகள் என்ன காரணத்திற்காக தாயகத்தை விட்டு வெளியேறினார்கள் என்பது பற்றி எதுவும் தெரியாத அறிவிலிகளால் தான், இது போன்ற மடத் தனமான கேள்விகளை கேட்க முடியும். முதலில் சிரிய உள்நாட்டுப் போர் பற்றி ஓரளவேனும் அறிந்து கொண்டு பேச வேண்டும். 

ஐந்து வருடங்களுக்கு முன்னர், போர் நடப்பதற்கான அறிகுறியே இல்லாமல் இருந்த சிரியாவின் நிலைமை என்ன? பெண்கள் கூட மிகவும் சுதந்திரமாக திரிந்த, மேலைத்தேய கலாச்சாரத்தை பின்பற்றிய நாடாக இருந்தது. அனைத்து பிரஜைகளும் அரபு மொழி பேசினாலும், பல்வேறு பட்ட சமூகங்களாக பிரிந்திருந்தனர். பல்வேறுபட்ட மதங்களை, அல்லது மதப் பிரிவுகளை பின்பற்றினார்கள். சிரியா ஒரு சர்வாதிகாரியால் ஆளப்பட்ட மதச்சார்பற்ற நாடாக இருந்தது.

உள்நாட்டுப் போரின் பின்னர், கிளர்ச்சிக் குழுக்கள் மத்தியில் கடும்போக்கு வஹாபிஸ்டுகளின் கை ஓங்கியது. அவர்கள் சவூதி அரேபியாவில் மேலாதிக்கம் செலுத்தும் வஹாபிச- இஸ்லாம் என்ற பிரிவை சேர்ந்தவர்கள். இஸ்லாமியவாத கிளர்ச்சிக் குழுக்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள், பெண்கள் அடக்கப் பட்டனர். 

மேற்கத்திய பாணியில் நவ நாகரிக உடை உடுத்திப் பழகிய பெண்களை, முகத்தில் இருந்து கால் வரை மூடும் கருநிற அங்கி அணிய வைத்தார்கள். கல்வியில் சிறந்த, விமானிகளாக கூட பணியாற்றிய பெண்களை, பாடசாலைக்கு செல்ல விடாமல், வீட்டுக்குள் முடங்க வைத்தார்கள்.

வஹாபிச மத அடிப்படைவாதிகள் ஆண்களையும் அடக்கி வைத்தார்கள். மதுபானம் தாராளமாக கிடைத்து வந்த நாட்டில், அதைத் தடை செய்தார்கள். மீறுவோர் கடுமையாக தண்டிக்கப் பட்டார்கள். சினிமா அல்லது காதல் பாட்டுக்கள் கேட்க முடியாது. தாடி வளர்க்க வேண்டும், இப்படிப் பல கட்டுப்பாடுகள். 

மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெரும்பாலான ஆண்கள், வாழ்க்கையில் ஒரு நாளேனும் பள்ளிவாசலுக்கு சென்றிருக்க மாட்டார்கள். அவர்கள் ஐந்து வேளையும் தொழுகைக்கு வர வேண்டுமென கட்டாயப் படுத்தப் பட்டனர்.

இதிலே கவனத்தில் எடுக்கப் பட வேண்டிய முக்கியமான விடயம் உள்ளது. சிரியாவில் பெரும்பான்மை சமூகமாக உள்ள சன்னி முஸ்லிம்களுக்கு மட்டும் தான் அத்தகைய கட்டுப்பாடுகள். வேறுவிதமாக சொன்னால், அவர்கள் மட்டும் தான் இஸ்லாமிய தேசத்தில் வாழும் தகைமை கொண்டவர்கள்.

வஹாபிச மத அடிப்படைவாதிகள், தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இருந்த சிறுபான்மை சமூகங்களை ஒடுக்கி, இனச் சுத்திகரிப்பு செய்தனர். ஷியா இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், அலாவித்துகள் ஒன்றில் படுகொலை செய்யப் பட்டனர், அல்லது வெளியேற்றப் பட்டனர்.

அன்பான வலதுசாரிகளே! இப்போது சொல்லுங்கள். மேற்குறிப்பிட்ட அடக்குமுறைகளை கண்டு அனுபவித்த பின்னரும், எந்த மடையனாவது சவூதி அரேபியாவுக்கு சென்று அகதித் தஞ்சம் கோருவானா? அடுப்பில் இருந்து நெருப்புக்குள் விழுந்தது போல இருக்காதா? சிரியாவில் உருவான இஸ்லாமிய தேசத்தில், சவூதி அரேபியாவில் உள்ளதைப் போன்ற, சிலநேரம் அதைவிட மோசமான, அடக்குமுறை ஆட்சி தான் நடக்கிறது என்பது இப்போது தெரிந்திருக்கும். 

அது மட்டுமல்ல, இயற்கை வளம் நிறைந்த, சிரியா நாட்டின் மேற்குப் பகுதியில் தான் மக்கள் செறிவாக வாழ்கிறார்கள். கிழக்குப் பகுதியில் யாரும் வசிப்பதில்லை. ஏனென்றால், அது வெறும் பாலைவனம். எப்படியாவது "முஸ்லிம்களின் புனித பூமியான" சவூதி அரேபியாவுக்கு செல்ல வேண்டுமென்ற குறிக்கோளுடன், அகதிகள் பாலைவன சுடுமணலில் பயணம் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். 

அவர்கள் முதலில் ஈராக்கிற்கு சென்று, அங்கிருந்து தான் சவூதி அரேபிய செல்ல முடியும். ஆனால், இந்த இடத்தில் அன்பிற்குரிய முட்டாள் வலதுசாரிகள் ஓர் உண்மையை மறந்து விடுகிறார்கள். அந்தப் பிரதேசம் முழுவதும், ISIS என்ற இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள "இஸ்லாமிய தேசம்" ஆகும்.

யார் இந்த ISIS? சவூதி அரேபியாவில் உள்ளதைப் போன்ற வஹாபிச சர்வாதிகார ஆட்சியை சிரியாவில் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. காரணத்தை புரிந்து கொள்வது மிகவும் எளிது. அதன் தலைமையில் உள்ள பெரும்பாலான உறுப்பினர் சவூதி அரேபியர்கள்! குறிப்பிட்ட அளவு ஈராக்கியர்களும் தலைமைப் பொறுப்பில் உள்ளனர். அந்த ஈராக்கியர்கள் ஏற்கனவே ஈராக்கில் சவூதி அரேபிய நிதியுதவி பெற்று அல்கைதா என்ற பெயரில் இயங்கியவர்கள். 

சவூதி அரேபியர்களையும், ஈராக்கியர்களையும் தலைவர்களாக கொண்ட ISIS இயக்கம், சிரியர்களை அகதிகளாக சவூதி அரேபியா செல்ல விட்டு விடுமா? "நீங்கள் எதற்கு சவூதி அரேபியாவுக்கு செல்ல வேண்டும்? நாங்கள் உங்களுக்காக ஒரு குட்டி சவூதி அரேபியாவை இங்கே உருவாக்கி வைத்திருக்கிறோம்?" என்று கேட்பார்கள்.
ISIS கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், அகதிகளின் வெளியேற்றத்தை தடுப்பதற்கான பிரச்சார சுவரொட்டிகள். குறிப்பாக, மருத்துவர்கள் போன்ற மத்தியதர வர்க்கத்தினரை நோக்கி எழுதப் பட்டுள்ளது. 

"குட்டி சவூதி அரேபியாவில்" இருந்து வெளியேறும் சன்னி முஸ்லிம் பிரிவினர், ஆசாத் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு செல்ல மாட்டார்கள். ஏனென்றால், சிரிய அரசு அவர்களை எதிரிகளாகக் கருதுகின்றது. 

ஈழப்போர் நடந்த காலங்களில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து செல்லும் தமிழர்கள், சிறிலங்கா அரசினால் எந்தளவு துன்புறுத்தப் பட்டார்கள் என்பதை நான் இங்கே சொல்லத் தேவையில்லை. அதே பிரச்சினை தான், சன்னி முஸ்லிம்களுக்கும் ஏற்படும்.

முஸ்லிம் அகதிகள், "குட்டி சவூதி அரேபியாவான" இஸ்லாமிய தேசத்தில் இருந்து வெளியேற விரும்பினால், அதற்கு வசதியான வழி, லெபனானும், துருக்கியும் தான். குறைந்தது ஐம்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நாட்டிற்கு செல்லாமல், ஆயிரம் கிலோமீட்டர் பாலைவனத்திற்குள் பயணம் செய்து, எந்த மடையனும் சவூதி அரேபியாவுக்கு போக மாட்டான். 

"துரதிர்ஷ்ட வசமாக", லெபனான், துருக்கி ஆகிய "முஸ்லிம்" நாடுகள், ஐரோப்பாக் கண்டத்திற்கு அருகாமையில் உள்ளன. அகதிகள் ஐரோப்பா செல்வது வலதுசாரிகளுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக, புவியியல் அமைப்பை மாற்றியமைக்க முடியுமா? டியர் வலதுசாரீஸ்! துருக்கி இருக்குமிடத்தில் சவூதி அரேபியாவை வைக்கச் சொல்லி, கடவுளிடம் மனுக் கொடுத்துப் பாருங்கள்!

அது சரி, வலதுசாரிகளே! உங்களிடமும் ஒரு கேள்வியை கேட்க வேண்டியுள்ளது. சிரியாவில் வாழும் முஸ்லிம்கள் அல்லாத பிற மதச் சிறுபான்மையினரான, கிறிஸ்தவர்கள், அலாவித்துகள், டுரூசியர்கள், யூதர்கள், இவர்களும் முஸ்லிம் நாடுகளுக்குத் தான் அகதிகளாக செல்ல வேண்டுமா? 

என்னது? சிரியாவில் வேற்று மதங்களை சேர்ந்த மக்களும் வாழ்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? முதலில் ஓர் உண்மையை அறிந்து கொள்ளுங்கள். விவிலிய கதைகள் நடந்த நாடுகளில் சிரியாவும் ஒன்று. அங்கே இப்போதும் பண்டைய கால கிறிஸ்தவ மதப் பிரிவுகள் உள்ளன. அது மட்டுமல்ல, ஏசு கிறிஸ்துவின் தாய்மொழி என கருதப்படும் அரமைக் மொழி பேசும் மக்களும் சிரியாவில் தான் வாழ்கின்றனர்.

கிறிஸ்தவ மதம் பல பிரிவுகளாக பிரிந்துள்ளது மாதிரி, இஸ்லாமிய மதமும் பிரிந்துள்ளது. கிறிஸ்தவத்தில் கத்தோலிக்கம் மாதிரி இஸ்லாத்தில் சன்னி மார்க்கம் உள்ளது. அதிலிருந்து பிரிந்தது ஷியா மார்க்கம். 

கத்தோலிக்கத்தில் இருந்து புரடஸ்தாந்துகாரர்கள் பிரிந்து சென்றதும், பின்னர் அதிலிருந்து பெந்தெகொஸ்தே, யெகோவா என்றேல்லாம் பிரிவுகள் உண்டானதும் தெரிந்திருக்கும். அதே மாதிரி, ஷியாவில் இருந்து பிரிந்து, அலாவி, டுரூசி போன்ற பல பிரிவுகள் உண்டாகின. அந்தப் பிரிவுகள் எல்லாம் சிரியாவில் உள்ளன.

அமெரிக்காவில் சில பெந்தெகொஸ்தே - புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்கள், தம்மை தனியான மதமாக ஸ்தாபித்துக் கொண்டனர். குறிப்பாக, யெகோவா, மொர்மன் சபைகளை சொல்லலாம். அதே மாதிரி, சிரியாவில் அலாவிகள், டுரூசியர்கள் பெரும்பான்மை மதங்களினால் வேற்று மதத்தவராக நடத்தப் பட்டனர். 

குறிப்பாக அலாவி பிரிவினர், இந்தியாவில் இருப்பது மாதிரி தாழ்த்தப் பட்ட சாதியினரின் நிலையில் இருந்தனர். அவர்கள் பல நூறாண்டுகளாக தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கப் பட்டனர். இன்றைய அதிபர் பஷாரின் தந்தை ஆசாத்தின் ஆட்சிக் காலத்தில், அலாவித்துக்கள் ஷியா மதப் பிரிவினராக உயர்த்தப் பட்டனர். ஈரானுடன் ஏற்பட்ட நெருக்கமான அரசியல் - இராஜதந்திர உறவுகள் அதற்கு உதவின.

சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான கோலான் குன்றுப் பகுதியில் டுரூசியர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் தம்மை தனியான மதமாக கருதிக் கொள்கிறார்கள். அவர்களுக்கென தனியான மதச் சடங்குகள், வழிபாட்டு முறைகள் உள்ளதால், பெரும்பான்மை இஸ்லாமியர்கள் அவர்களை முஸ்லிம்களாக ஏற்றுக் கொள்வதில்லை. கோலான் குன்றுகளில் ஒரு பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது. அதனால், கணிசமான அளவு டுரூசியர்கள் இஸ்ரேலுக்குள் வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகியது. அவர்கள் இஸ்ரேலிய பிரஜாவுரிமை பெற்று, இஸ்ரேலிய இராணுவத்திலும் பணியாற்றுகிறார்கள். 

ஸோ... வலதுசாரீஸ்... சிரிய டுரூசிய அகதிகளை, இஸ்ரேலுக்கு செல்லுமாறு அறிவுரை வழங்கலாமே? இஸ்லாத்துடன் எந்த சம்பந்தமுமில்லாத சிரிய கிறிஸ்தவர்கள், சிரிய டுரூசியர்கள் கூட முஸ்லிம் நாடுகளுக்கு, குறிப்பாக சவூதி அரேபியாவுக்கு அகதிகளாக செல்ல வேண்டுமா? திஸ் இஸ் டூ மச். வாட்ஸ் த ப்ராப்ளம் வலதுசாரீஸ்?



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

3 comments:

யாஸிர் அசனப்பா. said...

சிரியா அகதிகள் சவுதி, எமிரேட்ஸ், கத்தார்..... சென்றாலும் அந்த நாடு ஏற்றுக்கொள்ளுமா என்பது சந்தேகமே?. காரணம் அகதிகளின் கூட்டத்தில் ஆசாத்தின் ஆதரவாளர்கள் நுழைந்து தங்கள் நாட்டிற்கு பிரட்சனை உண்டுசெய்துவிடுவார்களோ என்ற பயம் வளைகுடா நாடுகளுக்கு உள்ளது உண்மை. மேலும் பொருளாதார அடிப்படையில் வளைகுடா நாடுகள் பல உதவிகளை சிரியா நாட்டிற்கு செய்துகொண்டுதான் இருக்கின்றன. அபுதாபியில் கூட சில தொண்டு நிருவனங்கள் நிதி திரட்டுவதை பார்த்ததாக நினைவு.
எது எப்படியோ சொந்த நாடுவிட்டு செல்வது என்பது யாருக்கும் நேரக்கூடாத ஒரு துயரம்.

elamurugan said...

Thank u sir,I am reading your articles continuously. Informative write up.

Mohamed Hijaz said...

Saudi's reply to the latest outcry on social media regarding refugees crisis is very clearly says as follows.
Saudi Arabia has received around 2.5 million Syrians since the start of the conflict in their country, an official source in the Saudi Ministry of Foreign Affairs (MoFA) has revealed, elaborating that the Kingdom has adopted a policy not to treat these Syrians as refugees, or place them in refugee camps “in order to ensure their dignity and safety.”
Saudi Arabia initially did not “intend to speak about its efforts to support Syrian brothers and sisters, during their distress, as it has, since the beginning of the problem,” adding that “Saudi Arabia dealt with the situation from a religious and humane perspective, and did not wish to boast about its efforts or attempt to gain media coverage.”
https://english.alarabiya.net/en/News/middle-e